அஞ்சலி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தீங்காற்றுப் பொன்வண்டே சிறகு எங்கே
தென்னாட்டுப் பூந்தமிழின் தெப்பம் எங்கே
பூங்காட்டுக் குயிலதுதான் பெயர்ந்து போச்சோ
புறமுதுகு பாடாதான் பிரிந்து போச்சோ
ரீங்காரத் தேன்வண்டு திரும்பிற் றாமோ
தென்றல்வான் வருங்கீதம் தீர்ந்த தாமோ
தாங்காது துடிக்கின்றோம் தமிழின் ஆறே
தங்கமகன் போனதெங்கே தவிக்கின் றோமே!

நாற்பதுவாம் ஆயிரங்கள் நறிய பாடல்
நகர்ந்துவரும் நாளெல்லாம் நலுங்குத் தேடல்
பாற்பசுபோல் பைந்தமிழும் பாகும் சேர்த்துப்
பயிர்தந்து வயலளைந்த பயிர்ப்;புங் கோர்த்து
நேற்றையநாள் என்றில்லா நிசங்கள் பூட்டி
நிலையான மணிமகுடம் வைத்த நேயா
போற்றிவரும் தென்பொதிகைத் திருப்பம்  பூத்த
போன்மலையை விட்டெந்தப் புறவு போச்சோ?

பாலாநீ முத்துப்பல் லாக்கு ஏறிப்
பைந்தமிழின் சிந்துவனம் சந்தம் பாடிக்
கோலாக மணிமுடிகள் கொற்றம் வைத்துக்
கோபுரமாய் இருந்துலகைக் கூட்டி வைத்துக்
காலாகத் தமிழ்நாட்டுக் கணிதம் மீட்டிக்
கற்பனைக்கும் அற்புதத்தும் கலங்கள் ஓட்டிச்
சாலாக இருந்தவனே சரிதம் என்றும்
சரித்திரமே என்றென்றும் சரியா தையா!

தேயாத வான்நிலவு தேய்ந்து போச்சோ
திரும்பாத ஓர்குரலும் தீய்ந்து போச்சோ
காயாத சூரியரும் காய்ந்து போச்சோ
கற்பனையும் சிற்பனையும் கரைந்து போச்சோ
தாயாக ஒலித்தகுரல் சரிந்து போச்சோ
தண்தமிழின் மலைச்சிகரம் தகர்ந்து போச்சோ
பாயாத ஆறென்கப் பாலா நீதான்
பசுந்தமிழை விட்டெங்கே பறந்தாய் ஐயா !

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.