Farewell you legend! Rest in Peace. You'll live on forever in our collective memories

ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது
பாலுவே நீயும் பாட  வருவாயா
தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே  !

மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது    !

சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று
இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்
வந்தமைந்த உன்னிசையால் வாரியே வழங்கினையே
பாலுவே உன்னிசையை  நிறுத்திவிட்ட  தேனையா    !

பாலுநீ பாடவேண்டும் பலபேரும் கேட்கவேண்டும்
வாழவைக்கும் இசைவழங்க வரவேண்டும் எனநினைத்தோம்
ஆழநிறை காதலுடன் பார்த்திருந்தோம் பாலுவே
அழவிட்டு போனதேனோ அலமந்து நிற்கின்றோம்  !

உன்னிசையைக் கேட்பதற்கு உலகமே காத்திருக்க
உன்பிரிவைக் கேட்டவுடன் உணர்விழந்தே நிற்கின்றோம்
மண்ணகத்தில் இசைகொடுக்க வந்துநின்றாய் வரமாக
எண்ணமெலாம் உன்நினைப்பே நிறைந்திருக்கே பாலுவையா  !

பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே
பாடல்தர விரைவாக வந்திடுவாய் எனநினைத்தோம்
ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கும்
ஆடலின்றி பாடலின்றி ஐயாநீ போனதேனோ  !

கற்பனையும் அழுகிறது கவிதைகளும் அழுகிறது
காந்தக் குரலோனோ காலனுனைக் கவர்ந்தானே
கலையுலகம் அழுகிறது கலைஞரெலாம் கதறுகிறார்
கண்ணீரை உந்தனுக்கு காணிக்கை ஆக்குகிறோம்  !

அரங்கமெலாம் வெறுமையாய் ஆகிருக்கு பாலுவே
அரங்கதிரும் உந்தனிசை அடங்கியதே பாலுவே
அழவைக்கப் பாடினாய் ஆடிவைக்கப் பாடினாய்
அனைவருமே ஆடிநிற்க அழவிட்டு போனதேனோ  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.