- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -


மொன்ரியால் மைக்கல்காலாற நடந்துகொண்டிருந்தேன்.
எடைகூடிவிட்டது. வயிறும் பெருத்துவிட்டது.
இலையுதிர்காலமும் நெருங்கிவிட்டது...
இலை பழுக்கும் மரங்களைப் பார்ப்பது, என் வயோதிகத்தை எதிர்கொள்ளும் சவால்.
கியூபெக்கில் யாருக்குமே கொரானா வைரஸ் பற்றிய பயம் இல்லை என்று தெரிந்தது.
வீதியில் உலவும் அத்தனைபேரிடமும் முகமூடி இருந்தது.
முழங்கையிலும், மூக்குக்குக்குக் கீழேயும் அது பாதுகாப்பாக இருந்தது.

ஒரு கிழவரை வழிமறித்தேன்.
“பெரியவரே! முகமூடியை ஒழுங்காக அணியுங்கள்” என்றேன்.
அவரிடம் பழைய காலங்களின் தூசஷணங்கள் சில இருந்தன..
அதையெனக்குக் கற்பித்தார்!
நாங்களிருவரும் கொந்தளிப்புக் குறைந்து பேச முற்பட்டபோது,
“எனக்கு மாதம் 2800டொலர்கள் ஓய்வூதியம் வருகிறது...கனவானே! எனக்கு வாழ்வைப்பற்றி அறிவுரை கூறவேண்டாம்” என்றார்.

“ஐயா! உங்களது வாழ்வைப்பற்றியல்ல, என்னுடைய வாழ்க்கையைப்பற்றியே எனக்குக் கவலை” என விளக்க முயன்றேன்.
திரும்பவும், பழைய கியூபெக் மக்கள் பேசும் அன்பான தூஷணத்தைப்பேசிவிட்டு நகர்ந்து கொண்டார்....
கோபத்தோடு அவரைக்கடந்து சென்றபோது, என் கால் தடக்கித் தடுமாறியது...
என்னுடைய பழைய தூஷணத்தைப் பொழிந்து தள்ளினேன்..

அது, உங்களெல்லோருக்கும் தெரிந்த பொன்வார்த்தைகள்தாம்.

முதிர் காதல்

இன்று, ஒரு முழுநிலவைக்கண்டேன்.
இன்று, உங்கள் அப்பனுக்கு பைத்தியம் முற்றிவிடும் என்றும் சொன்னாள்.
“அந்த அழகான நிலவை ஏன் நீங்கள் புகைப்படம் எடுக்கவில்லை” எனவும் கேட்டாள்.

புகைப்படத்திற்குள் அடங்காத அழகுநிலா அதுவென்றேன்.

நிலவு காய்ந்த இன்னிரவில், நான் ஒரு பைத்தியம்தான் என அவளுக்குச் சொல்லத்தேவையேயில்லை....

ஜன்னலுக்கு வெளியே அவளும் அந்த நிலவைப் பார்த்தபடி இருப்பதைக் கண்டேன்.

 


வாதை

குளிர்காலத்தின் காலடிகள் கேட்கின்றன..
காற்றில் குளிரேறிவிட்டது.
இயற்கையின் அசுர ஒழுங்கமைதி பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன்.
இந்தமுறை எனது அடுக்ககத்தின் இரண்டு பக்கமும், பல்கணியில் காய்கறி மரங்கள் பயிரிட்டிருந்தேன்.
நான்கு காய்களோடு தக்காளி தலைசாய்த்துவிட்டது.
கத்தரி பூத்துக்கொண்டே இருந்து,
இரண்டு மூன்று காய்களோடு இளைப்பாறிவிட்டது.
மிளகாய், என்னைப்போலவே சற்றுக்காரமான உயிர்.
இலைகளைவிட அதிகமாகக் காய்த்தது.

அடுத்த வாரம், எல்லாச் செடிகளையும் பிடுங்கி எறியவேண்டும்.
தினமும் நீர்வார்த்த பொழுதுகள் கவித்துவமானது.

மனிதர்களைவிட, செடிகளோடு பேசக்கூடியவன் என்பதால்,
அடுத்த வாரம் ஒவ்வொரு செடியாக பிடுங்கி எறியும்போது,
மனிதர்களோடு நெருங்க முயற்சிப்பேன்.
இல்லை.....
அடுத்தவருடம், எனது பல்கணியில் மீண்டும் எனக்கு நண்பர்கள் துளிர்ப்பார்கள்