[முகநூலில் இருவருடங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நுழைந்து பார்த்தேன். முகநூலை இயலுமானவரையில் நண்பர்களுக்கிடையிலான நல்லதொரு கலந்துரையாடலுக்கான களமாகக் கொள்ளவே விரும்பினேன். முகநூலில் நண்பர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த சுவையான கலந்துரையாடல்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பன. பேய்கள் தொடக்கம், சினிமா, இலக்கணம், இலக்கியமென்று பல்வேறு பட்ட விடயங்களைத் தொட்டுச் சென்ற கருத்துப் பரிமாறல்களவை. இவ்விதமான முகநூல் கலந்துரையாடல்களை அவ்வப்போது 'பதிவுகளி'ல் பதிவு செய்வது 'பதிவுகள்' வாசகர்களும் அவற்றை அறிந்து, சுவைக்க முடியுமென்பதால் , அவை அவ்வப்போது 'பதிவுகளில்' மீள்பிரசுரமாகும். எழுத்தாள நண்பர் தாஜ், ஆபிதீன் போன்றவர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி; முகநூலுக்கு நன்றி. நண்பர் சீர்காழி தாஜ் அவர்களை நான் முதன் முதலில் அறிந்து கொண்ட விடயத்தினை தற்பொழுது நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகமும் , மங்கை பதிப்பகமும் (கனடா) இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட 'அமெரிக்கா (சிறு நாவலும், சிறு கதைகளும்), 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு எனக்கு அவை பற்றி விரிவான இரு கடிதங்களை அனுப்பியிருந்தார் தாஜ். அதன் பினனர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது' நாவலையும் அனுப்பி உதவியிருந்தார். இதற்காக அவருக்கு என் நன்றி. -ஆசிரியர் -]

திரெளபதியா? திரவுபதியா? படாத பாடுபடும் 'ஒள'

வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் : படாத பாடுபடும் “ஒள”

திருப்பூர் கிருஷ்ணன், தினமலர் ஆன்மிக மலரில் “கண்ணன் கதைகள்” எழுதி வருகிறார். ஒரு அத்தியாயத்தில், “திரெளபதி”யாக வரவேண்டியவர், “திரவுபதி”யாகவே வந்தார். கிருஷ்ணன் சாரைக் கூப்பிட்டுக் கேட்டபோது, தினமலரில், ஒள பயன்படுத்தமாட்டார்கள் என்று தெரிந்திருந்தால், அந்தம்மாவைப் “பாஞ்சாலி”யாகவே எழுதியிருப்பேன் என்று வருத்தப்பட்டார். திரவுபதி என்றெல்லாம் எழுதினால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது! ஒள என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. தினமலரில், மொழிச் செம்மையை மேம்படுத்த ஒரு குழு பணியாற்றுவதாக கேள்விப்பட்டேனோ / படித்தேனோ. இந்த ’ஒள’க்குவும் கொஞ்சம் கருணை காட்டுங்க சார்!

Caricaturist Sugumarje: தமிழ் படிச்சவங்க, ஔ க்கும் ஒ ள க்கும் வித்தியாசம் தெரியாதவங்க குறைவுன்னு நினைச்சிட்டாங்க போல!20 hours ago · LikeUnlike · 1.Ravi Prakash இது பரவாயில்லையே...! தூ என்பதை துர் (அதாவது து போட்டு ‘கால்’) என்று எழுதுவார்கள். இது எந்த வகை சீர்திருத்தமோ தெரியவில்லை!

அரவிந் சாமிநாதன்:  அவ்வியம் பேசாதீங்க குருவே

வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்: ஒளவியம் என்பதற்கு மாற்றாக அவ்வியம் என்ற சொல் முன்பே உண்டு, அதனால் தவறு இல்லை என்கிறீர்களா சுவாமிநாதன்?

அரவிந் சாமிநாதன்: ‎வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் சார் . எப்படி தவறு இல்லை என்று சொல்ல முடியும். தவறுதான். ”ஔவியம்” என்று சொல் ஒலிப்பதற்கு “அவ்வியம்” என்று வகரம் அழுத்தி உச்சரிக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளதே! அதுபோல திரௌபதி என்பதற்கும் தி ர வு ப தி என்று உச்சரிப்ப...தற்கும் வேறுபாடு நிறையவே உள்ளது. சொற் சிதைவாக உள்ளது. How are you என ஆங்கிலத்தில் உள்ளதை ஹௌ ஆர் யூ என்றுதான் எழுதுகின்றனர், ”ஹவ் ஆர் யூ” என்று எழுதுவதில்லை. ஆனால் தமிழில் மட்டும் இஷ்டத்திற்கு எழுதுகின்றனர். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் “நீங்கள் தமிழை மிகவும் பிழையாக எழுதுகிறீர்கள்” என்றார். “என்ன பிழை, சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்” என்றால் நீங்கள் ”கௌதமர்” ”கௌசிகன்” என்று எழுதுகிறீர்கள். அப்படி எழுதக் கூடாது. கவுதமர், கவுசிகன் என்றுதான் எழுத வேண்டும். அதுதான் நடைமுறைத் தமிழ். அரசுத் தமிழ் என்றார். இது எப்படி இருக்கு?

கிரிதரன்: உண்மையில் தினமலர்க் குழுவினர் திரெளபதியைத் தமிழ் இலக்கண முறைப்படித்தான் எழுத முயன்றுள்ளனர். தி+ர்+ஒள+ப+தி = திரெளபதி.  இதனைப் பின்வருமாறு எழுதலாம்: தி+ர்+அவ்+ப+தி   [அவ் இங்கு இடைப் போலியாக வருகிறது]. தினமலர்க் குழுவினர் ர்+அ [அவ்விலுள்ள அ] எழுத்துகளைச் சேர்த்து ர ஆக்கிவிட்டு 'வ்' ஐயும் 'ப'வையும் சேர்த்திருக்கின்றார்கள். அவ்விதம் சேர்க்கும்போது , 'வ்'வில் முடியும்  'தெவ்' போன்ற சொற்களை 'ய' கரம் தவிர்ந்த ஏனைய எழுத்துகளுடன் சேர்க்கும்போது 'உ' எழுத்தைச் சேர்த்தெழுதுவது வழக்கம். அதன்படி வ் + ப வை வ்+உ+ப ஆக்கி வுப என்று எழுதியிருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் திரெளபதி என்பதை தி+ர்+அ+வ்+உ+ப+தி என மாற்றி திரவுபதி என்று மாற்றியிருக்கின்றார்கள். இது உண்மையில் தவறென்றே படுகிறது. ஏனெனில் திரெளபதி திரெள+உ+பதி ஆகியிருக்கிறது. இதற்குப் பதிலாக தி+ர்+அவ்+ப+தி என எழுதியிருந்தால் திரவ்பதி என்றிருக்கும். திரவ்பதியும் திரெளபதியும் ஒன்றே. இலக்கணத்தைக் காப்பதற்காகப் பெயரை மாற்றுவதற்குப் பதில், இலக்கணத்தை மீறிப் பெயரை மாற்றாமல் வைத்திருக்கலாமே. இலக்கணத்தை மீறுவதொன்றும் புதிதானதொன்றல்லவே.

கெளசிக்ராஜா ராஜா:  ‎"ஔ" என்கின்ற எழுத்தையே தமிழிலிருந்து எடுத்துவிடலாமா? உயிர் எழுத்துக்கள் 11 என்று ஆக்கிவிடலாம்.

***********************************

தாஜ் டீன்:

எந்தவொரு மனிதனும்
நான்...
இந்த மதத்தில்தான் பிறப்பேன் என்று
தவமிருந்தோ, வேண்டி விரும்பியோ
பிறந்தவர்களாக
இருக்க முடியாத போது....

ஒவ்வொரு மனிதனுமிங்கே
...தனது மதத்தை குறித்து
புலகாயிதமும் / பெருமையும் /
புகழ்ச்சியும் / இறுமாப்பும் / தீவிரமும்...
கொள்வதென்பது எப்படி?

கிரிதரன்:  நண்பர் தாஜின் கேள்வி நியாயமானது. மொழி, இனம், மதம், தேசம், ஆண், பெண்.. என்று பல்வேறு பிரிவினைகளெல்லாம் மனிதரைப் பிரித்து வைப்பதற்குத்தான் உதவும். அனைவரும் பல்வேறு முரண்பாடுகளுடன், வேறுபாடுகளுடன், அம்முரண்பாடுகளை, வேறுபாடுகளைப் பகை முரண்பாடுகளாக்காமல், நட்புரீதியில் பேணுவார்களென்றால் எவ்வளவு நன்றாகவிருக்கும். இந்தக் கிரகத்தில் பெரும்பாலான உயிர்கள் மாமிச பட்சணிகள். ஒன்றையொன்று கொன்று, தின்று வாழும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதருக்குச் சிந்திக்கும் வல்லமையிருக்கிறது. ஏன் ஒற்றுமையாக, இணக்கமாக வாழ் முடியாமலிருக்கிறது? மனிதருக்கிடையில் நிலவும் பொருளியல்ரீதியிலான வேறுபாடுகளிருக்கும்வரையில் இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லையென்று மார்க்சியம் வலியுறுத்தும். இந்தக் கேள்வி எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமியின் மிகவும் புகழ்பெற்ற கவிதையான 'எதிர்காலச் சித்தன்' கவிதையினை ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது. அதனைத் தழுவி ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். நீண்ட கருத்துகளை இங்குப் பதிவு செய்ய முகநூல் விடாத காரணத்தால் அவற்றைத தனியாக முகநூலில் பிரசுரித்திருக்கிறேன்.

தாஜ் டீன்:  அன்பு கிரிதரன், அந்தக் கதையையும், அ.ந.கந்தசாமியின் கவிதையினையும் அனுப்பித் தாருங்கள். இது ஒரு முக்கியமான கேள்வி எனக்கு. நண்பர்கள் இக் கேள்வியின் ஆழத்தை அறியவில்லை என்றே தோன்றுகிறது. சரியான கோணத்தில் உணர்ந்திருக்கக் கூடுமெனில் நிறைய நண்பர்கள் முன்வந்து கருத்துகளை வைத்து கலந்து கொண்டிருப்பார்கள். நன்றி.. கிரிதரன்.

கவிதை கூறும் சிறுகதை:

எதிர்காலச் சித்தன்!

- வ.ந.கிரிதரன்

[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவ்தை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"

அறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ? அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: " திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே!"

இவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.

அதற்கவன் பின்வருமாறு கூறினான்: "எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா! நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன். நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா. இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்."

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:

" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக் இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள். தேசங்கள் துண்டுபட்டிருத்தல், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்று அன்றுதொட்டு இங்கு இன்றுவரை இருக்கும் எல்லா அர்த்தமில்லாப் பிரிவினைகள் யாவும் சாகும். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும். விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற

அத்த்னை பேதங்களும் எதிர்கால உலகில் ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே."

இவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: "உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே! இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின் பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள். இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம். அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ? அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா? இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும்? பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்?"

எதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒலிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்: " எதிர்காலச் சித்தா! உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்."

இவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே

மென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: "காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக் காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச் சோதரர்களன்றோ? ஆதலினால் நிகழ்கால மானுடனே! அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால் எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது."

அச்சமயம் .... என்ன ஆச்சரியம்! காலத்திரை நீங்கிற்று.

பாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்தேன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து, வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே!

என்றிவர்கள் உணமை காண்பாரோ?

நன்றி: பதிவுகள், திண்ணை


சுப்ரமணியம் குணேஸ்வரன்: ஒளிப்படம் - துவாரகன் "தொலைந்து போகாத அழகு"— பொலிகண்டி கடற்கரை.

சுப்ரமணியம் குணேஸ்வரன்: ஒளிப்படம் - துவாரகன் "தொலைந்து போகாத அழகு"— பொலிகண்டி கடற்கரை.

Dr.முத்தையா கதிரவேற்பிள்ளை முருகானந்தன்:  மங்கும் ஒளியில் பளிச்சிடும் அழகு.

கிரிதரன்:  அந்த நாளை ஞாபகப்படுத்தும் அற்புதமான காட்சி. அப்போது மாலை நேரங்களில் பொம்மைவெளி முஸ்லீம் குடியிருப்புகளைத் தாண்டி, சைக்கிளில் கல்லுண்டாய் வீதிவழியாக அராலி நோக்கிச் செல்லும்போது , கடற்தொழிலாளர்கள் கடலட்டைகளைப் பெரிய அண்டாக்களில் வேகவைத்துக்கொ...ண்டிருப்பார்கள்; வெந்தவற்றைக் காயப்போட்டிருப்பார்கள். தொலைவில் அந்திச் சூரியன் காக்கைதீவுக் கடலுக்குள் மூழ்குவதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருப்பான். மறுபுறத்தில் படர்ந்துகொண்டிருக்கும் மெல்லிருளில் நவாலி மண் கும்பான்கள் தவமியற்றும் யோகிகளைப் போல் அமைதியிலாழ்ந்திருக்கும் காட்சி தெரியும். பச்சைப்பசிய வயற்புறமும், பைங்கிளிகளின் படையெடுப்பும், விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களின் வரிசைகளும், கட்டுமரங்கள், படகுகளில் தொழிலுக்காகப் புறப்படும் மீனவர்களின் நிழலாகத் தெரியும் உருவங்களும், உடலை வருடிச்செல்லும் மெல்லிளந்தென்றலும்.. எல்லாவற்றையும் இந்தக் காட்சி மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அதே சமயம் யுத்தச் சூழல் எவ்விதம் எல்லாவற்றையும் நாசப்படுத்திவிட்டதென்ற உண்மையும் நெஞ்சில் படமாக விரிகின்றது. சுற்றிவரக் கவிந்து கொண்டிருக்கும் இருளையும் மீறி சுடர்ந்துகொண்டிருக்கும் அந்த அந்திச் சூரியனின் அந்த ஒளி மட்டும் இன்னும் இருப்பு மீதான நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றது.
வரலாறென்பது எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும் கொண்டதுதானே. இனிவரவிருக்கும் எழுச்சியினையும் அந்தக் கதிரொளி எதிர்வு கூறுகின்றது.

சந்திரா ரவீந்திரன்: அற்புதமாக இருக்கிறது! கூடவே பழைய ஞாபகங்களும் ததும்புகிறது!

இடுகாட்டான் இதயமுள்ளவன்:  வெறுக்கிறது வாழ்க்கை .இப்படியான அழகியல் எதனையும் ரசிக்காமல் இங்கே வாழும் வாழ்க்கை

சுப்ரமணியம் குணேஸ்வரன்: நண்பர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. கிரிதரனின் வர்ணனை மிகச் சிறப்பு.


பேய்? பயப்படாமல் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள், அதாவது.... நீங்களே...  நேரடியாக பேயை பார்த்ததுண்டா? அதான்... என் மனைவியை அல்லது என் கணவனைப் பார்க்கிறேனே... என்கிற மாதிரியான தமாஸெல்லாம் கூடாது. நிஜத்தை சொல்லணும்.

தாஜ் டீன்: பேய்? பயப்படாமல் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள், அதாவது.... நீங்களே...  நேரடியாக பேயை பார்த்ததுண்டா? அதான்... என் மனைவியை அல்லது என் கணவனைப் பார்க்கிறேனே... என்கிற மாதிரியான தமாஸெல்லாம் கூடாது. நிஜத்தை சொல்லணும்.

அருமைநாயகம்: NO

அப்துல் மஜீத்: ‎3 தடவை பாத்துருக்கேன். கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் கதையே வேறுமாதிரி ஆயிருக்கும்.

தாஜ் டீன்: பேயை பார்த்திருக்கியான்னா? பேயோட குகையை சொல்றீயாக்கும்? அடப் போய்யா.

அப்துல் மஜீத்: சரி, ஒரு பதிவு போட்றவேண்டியதுதான்....

ரியாஷ் அகமத்: நான் இன்னும் பார்க்கவில்லை....

கிரிதரன்: பேயைப் பற்றிக் கதைப்பதற்கு முன் கலிங்கத்துப் பரணியை ஒருமுறை படித்துப் பாருங்கள். பல்வகையான பேய்களை அங்கு நீங்கள் பார்க்கலாம். பேய்களின் தலைவியாகக் காளி குறிப்பிடப்படுவாள். நிணக்கூழ் குடிக்கும் பேய்கள் பற்றி, பேய்களின் உறுப்புகள் பற்றி, அவற்...றின் உறுப்புக் குறைபாடுகள் பற்றி, கலிங்கத்துப் போர் நிகழ்வதற்கான முன்னறிகுறிகளைப் பேய்கள் தீர்க்கதரிசனமாகக் கூறுவது பற்றி, பேய்களின் பசிக்கொடுமை பற்றி, கணிதப்பேய் பற்றி, மாய வித்தைகளைக் கற்ற முதுபேயொன்று அவற்றை வேடிக்கையாக விபரிப்பது பற்றி .. இவ்விதமாகப் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறும் அளவுக்குப் பேய்களைப் பற்றிய தகவல்களைக் கலிங்கத்துப் பரணி அள்ளி வழங்குகிறது. புலியூர்க் கேசிகனின் 'கலிங்கத்துப் பரணி'யை நீண்ட நாட்களின் முன் வாசித்தபொழுது பேய்கள் பற்றிய விபரிப்பால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிய அனுபவம் இன்னும் பசுமையாக நெஞ்சிலுள்ளது. இணையத்தில் எங்காவது 'கலிங்கத்துப் பரணி'யைக் கண்டால் வாசித்துப் பாருங்கள். [கலிங்கத்துப் பரணி குலோத்துங்க சோழனின் புகழ்பெற்ற படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமானின் கலிங்கத்துப் போர் வெற்றியைப் பற்றிப் பாடும் பரணி. போரில் குறைந்தது 700-1000 வரையிலான யானைகளைக் கொன்றிருக்க வேண்டுமென்பது பரணி பாடுவதற்குரிய அடிப்படை நிபந்தனைகளிலொன்று. சாண்டியல்யனும் கருணாகரத்தொண்டைமானைக் கதாநாயகனாக் கொண்டு (இளையபல்லவன் கருணாகரத்தொண்டைமான்) 'கடல்புறா' வைப் படைத்திருக்கின்றார். இலங்கையில் வடபகுதியிலுள்ள 'தொண்டைமானாறு' கூட கருணாகரத்தொண்டைமான் வெட்டியதாக வரலாறு கூறும். சரி இனி நண்பர் தாஜின் பேய்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம்.

நள்ளிரவில் , பன்னிரண்டு மணியென்றால், மயானத்துக்குப் போவதற்கே மனிதர் பயப்படுவர். பேய் , இரத்தக் காட்டேரி, அல்லது புளியமரத்து முனி அடித்துவிடுமென்ற அச்சம். ஆனால் மிகக்குறைந்த அறிவேயுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், மிருகங்களெல்லாம் மிகவும் இலகுவாக எவ்வித அச்சமுமின்றி மயானங்களை நள்ளிரவுப்பொழுதுகளில் உலா வருகின்றனவே! வாசம் செய்கின்றனவே! ஏன் அவைற்றைப் பேய்கள் ஒன்றும் செய்வதில்லை?

ஏனென்றால் மானுடராகிய நாம் சிந்திக்கின்றோம். அவற்றால் அவ்விதம் சிந்திக்க முடிவதில்லை. சிந்திப்பதால் இருப்பு பற்றிய அச்சம், மரணம் பற்றிய அச்சம் எம்மைக் கற்பனை செய்ய வைக்கின்றது. விளைவு: ஆலமரத்து முனி, இரத்தக்காட்டேரி போன்ற பல்வகைப் பேய்கள்.

இவ்விதமெல்லாம் கூறுகின்றேனேயென்று என்னை நள் யாமத்தில் மயானத்துக்குச் செல்லும்படி மட்டும் சவாலுக்கு அழைத்து விடாதீர்கள் :-)

பால பாரதி: பேய் பத்தின என் அனுபவத்தை கதையாக்கி இருக்கிறேன். http://blog.balabharathi.net/?p=108 அதனால படிச்சுட்டு என் அனுபவத்தைக்கொண்டு பதிலை கண்டுபிடிங்க பார்க்கலாம்.

தாஜ் டீன்: அன்பு கிரிதரன், உங்களது பொறுப்பான விளக்கம் என்னை நெகிழ்வூட்டுகிறது. ஃபேஸ்புக் பக்கம் வரும் நண்பர்களின் மனோநிலையை அறியும் பொருட்டுத்தான் இப்படியானப் பதிவுகளை போட்டு அவர்களோடு கதைக்கிறேன். என் கிரிதரன் பதில்களும் எனக்கு என்கிற போது... மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவில்லைதான். இந்த உங்களின் விளக்கத்தை இன்றைக்கு பதிவேற்றி வாசகர்களின் பார்வைக்கு வைப்பேன். நன்றி.

தாஜ் டீன்: தம்பி பாலபாரதிக்கு நன்றி. கதையை நான் உபயோகிக்க இருக்கிறேன்.

அப்துல் மஜீத்: ‎//மிகக்குறைந்த அறிவேயுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், மிருகங்களெல்லாம் மிகவும் இலகுவாக எவ்வித அச்சமுமின்றி மயானங்களை நள்ளிரவுப்பொழுதுகளில் உலா வருகின்றனவே! வாசம் செய்கின்றனவே! ஏன் அவைற்றைப் பேய்கள் ஒன்றும் செய்வதில்லை? // கிரிதரன், அங்கேயே...வசிக்கும் மனிதர்களும் உண்டு. வெட்டியானுக்கெல்லாம் வீடு இருக்கும். ஆனால் தம்மை ஆதரவற்றவராக மாற்றிக்கொண்ட மற்ற சிலபேருக்கு ஜாகையே அங்குதான் (பல வசதி கருதி). அய்யா கி.ரா. தனது பேய்கள்னு ஒரு சிறுகதையில் நிஜப் பேய்களில் ஒன்றைக் காட்டியிருப்பார்.

அரவிந்த் சாமிநாதன்: பேயைப் பார்த்ததில்லை. ஆனால் இறந்து போன ஒரு மனிதர் அவரது சிறுவயது மகனின் (6 வயது) உடலில் புகுந்து தன்னுடைய குரலில் பேசியதைக் கேட்டதுண்டு. (பையனுக்கு மிமிக்ரி எல்லாம் தெரியாது. அப்பாவி ) அந்த மனிதர் கேட்டது : “சோடா கொண்டா”

அரவிந்த் சாமிநாதன்: “சோடா கொண்டா” என்பதன் விளக்கம். கடையில்இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அந்த மனிதருக்கு திடீரென நெஞ்சு வலி. பெரிய மகன் சோடா வாங்கி வந்து கொடுப்பதற்குள் உயிர் பிரிந்து விட்டது. அதான் சோடா கொண்டா... :-)))

கிரிதரன்: அரவிந் சுவாமிநாதனுக்கு, இந்த இருப்பு பற்றிய புரிதலே எமக்குப் போதுமானதாகவில்லை. பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் முப்பரிமாணத்து அடிமைகள் நாம். நாம் எல்லாரும். மனோசக்தி பற்றி அறிய வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது. ஒரு தர்க்கத்துக்குப் பார்த்தோமென்றால் .. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருளையும் (நம்மையும் சேர்த்துத்தான்) பிரித்துக்கொண்டே போவோமென்றால் அணுக்கள், அவற்றை ஆக்கிய அடிப்படைத்துணிக்கைக்களென்று பிரிபட்டுக்கொண்டே செல்கையில் அங்கு நாம் பொருளையே காண முடியாது. எல்லாமே வெறும் சக்தி வடிவமாகவே இருப்பதைக் காணலாம். திட்டவட்டமாகத் தெரியுமிந்தப் பொருளுலகு, அடிப்படைத்துணிக்கைகளின் நிச்சயமற்ற நாட்டியத்தின் விளைவாகவே இருப்பதைக் காணமுடியும். இந்நிலையில் இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருளுமே எமது அன்றாடப் பார்வையில் தனித்தனியாகத் தெரிந்தாலும், குவாண்டம் நிலையில் ஒன்றுடனொன்று கலந்துதானிருக்கின்றது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே' என்று திருவிளையாடலில் சிவனாக வரும் சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் பாடுவார். அது ஒருவிதத்தில் குவாணடம் நிலையில் ஒன்று கலந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் சாத்தியமாகவேபடுகிறது. மிகமிகச் சக்திவாயந்த நுணுக்குக்காட்டியொன்றினை வைத்து இவ்வுலகினைப் பார்ப்பீர்களென்றால் உயர்திணை, அஃறிணைகளுக்கிடையில் பெரிதாக வித்தியாசமேதும் தெரியப்போவதில்லை. மேலும் இங்கு நடைபெற்ற அனைத்துமே, எண்ணங்கள், செயல்கள், உரையாடல்கள் அனைத்துமே மிக மிக பலமிழந்த நிலையிலென்றாலும் பரவிக் கலந்துதானிருக்கின்றன. எண்ணங்களின் சக்தி, நனவு மனம், நனவிலி மனமென்றெல்லாம் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன. ஒருவரை ஆழ்துயிலில் ஆழ்த்தி மருத்துவர்கள் அவரின் கடந்த காலத்தையெல்லாம் அறிவதாக அறிந்திருக்கின்றோம். இது போல் இறந்த தந்தையின் குரலில் அந்தச் சிறுவன் பேசியதற்கும் ஏதாவது உளவியல்ரீதியிலான காரணமிருக்கக் கூடும். எப்பொழுதாவது தந்தை சோடா கொண்டா என்று மூத்த மகனை அழைத்திருக்கக்கூடும். அது கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் ஆழ்மனதில் பதிந்திருந்து வெளிப்பட்டிருக்கக் கூடும். உடன்டியாக பேய்தான் காரணமென்று முடிவுக்கு வந்துவிட முடியாது.

மேலும் வாசித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இலத்தீன் பண்டிதர் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்த எந்தவித அறிவுமற்ற வேலைக்காரியொருத்தியை அவளது இறுதிக்காலத்தில் ஆழ்துயிலில் ஆழ்த்தி பரிசோதித்தபொழுது அவள் சரளமாக இலத்தீன் பேசினாளாம். காரணம்: அவள் இலத்தீன் பண்டிதர் படிப்பித்துக்கொண்டிருக்கும்போது அருகிலுள்ள கூடத்தினைக் கூட்டிக் கொண்டிருப்பாளாம். அச்சமயத்தில் பண்டிதரின் இலத்தீன் உரைகள் அவளது ஆழ்மனதினுள் சென்று படிந்துவிட்டிருந்ததாம். அவைதாம் மருத்துவரின் ஆழ்துயில் பரிசோதனையின்போது அவள் வாயிலிருந்து வெளிப்பட்டனவாம். அதுபோல் இந்தச் சிறுவனின் நிலையும் இருக்கக் கூடும்.

அரவிந் சாமிநாதன்:  ‎//அரவிந் சுவாமிநாதனுக்கு, இந்த இருப்பு பற்றிய புரிதலே எமக்குப் போதுமானதாகவில்லை. // நான் என்ன சொல்ல்ணும்னு நினைக்குறீங்க கிரிதரன். பேயை நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்ததாகச் சொன்னவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பொய் சொல்லக் கூடியவர்கள் அல்ல. நான் பார்த்ததில்லையே தவிர அவற்றை நான் நம்புகிறேன். உங்களுக்கு என்ன விளக்கம் தேவை?

கிரிதரன்: பேயை நம்பும் முகநூல் நண்பர்களுக்கு, பேய் பற்றிய என்னுடைய கருத்துகள் உங்கள் நம்பிக்கையினைக் கிண்டலடிப்பதற்காகவோ அல்லது உங்கள் நம்பிக்கையை மாற்றுவதற்காகவோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவும். பேய் பற்றிய என் கருத்துகள் என் கருத்துகள் மட்டுமே. நண்பர் அரவிந் அவர்களுக்கு, உங்களது நம்பிக்கையையும், கருத்துகளையும் நான் மதிக்கிறேன். அது உங்களுடைய அடிப்படை உரிமை.

அரவிந் சாமிநாதன்: கிரிதரன், பேய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அதுவா இப்போது பிரச்சனை? தாஜ் டீன் கேட்டதற்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான். பேய் இருக்கிறது என்பதற்காக அதை ஆராதிக்க முடியுமா என்ன? இந்தப் பிரபஞ்சத்தில் நம்மை மீறிய பல ஆற்றல் தொகு...திகள் உண்டு. அவற்றுள் ”பேய்” எனப்படுபவை “கீழ்நிலை சக்திகள்” ஆக இருக்கக் கூடும். கீழானவற்றை நம்புவதோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோ ஏற்புக்குரியதல்ல. “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” அல்லவா? :-)))


தாஜ் டீன்:  ‎//அரபு நாடுகளில் கூட ‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை. இஸ்லாமிய தாக்கமும் முசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட ...பாகிஸ்தானிலேயே கூட உருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை.  ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம்கள் இப்படி ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில் மலேசியாவிலும்/ தமிழகத்திலும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை ஒருங்கிணைப்பதில் உள்ளார்ந்ததோர் அரசியல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. // http://abedheen.wordpress.com/2011/07/26/taj-islam-ilakkyam-maanadu/

கிரிதரன்: எனது இப்பதிவு சிறிது நீண்டு விட்டதனால் (முகநூல் அனுமதிக்காத காரணத்தால்) இரு பகுதிகளாகப் பதிவு செய்கின்றேன்.

நண்பர் தாஜுக்கு, மதரீதியாக இலக்கியத்தைக் கூறுபோடக்கூடாதென்ற உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன். அவ்விதம் கூறுபோடுவதை ஏற்றுக்கொண்ட...ால் இந்து இலக்கியம், பெளத்த இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், யூத இலக்கியமென்றெல்லாம் பிரிக்கப்பட வேண்டும். மொழி ரீதியாக இலக்கியத்தை வகைப்படுத்துவதே சரியான அணுகுமுறை. இஸ்லாமிய எழுத்தாளர்கள் ஹிந்தியில் எழுதலாம்; தமிழில் எழுதலாம்; சிங்கள மொழியில் எழுதலாம்; ஆங்கிலத்தில் எழுதலாம். இவ்விதம் பல்வேறு மொழிகளில் எழுதப்படும் படைப்புகளை எழுதப்படும் மொழிகளை மையமாக வைத்தே அணுக வேண்டும்; திறனாய்வு செய்ய வேண்டும்.

தமிழ் இலக்கியத்திற்கு எத்தனையோ இஸ்லாமியப் படைப்பாளிகள் வளம் சேர்த்திருக்கின்றார்கள். உலகின் பல்வேறு மொழிகளிலும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். துருக்கிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் Orhan Pamuk துருக்கிய எழுத்தாளராகத்தான் கணிக்கப்படுகின்றாரே தவிர துருக்கிய இஸ்லாமிய எழுத்தாளராகக் கணிக்கப்படுவதில்லை. இந்த வகையில் நண்பர் தாஜின் கூற்று வரவேற்கத்தக்கது.

வைக்கம் முகம்மது பசீர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். அவரது புகழ் பெற்ற நாவல்களான பாத்துமாவின் ஆடு, எங்கள் தாத்தாவுக்கொரு ஆனை இருந்தது ஆகிய நாவல்கள் அளவைப்பொறுத்த அளவில் சிறியவை; ஆனால் அற்புதமானவை. வாழ்க்கையை, இப்பிரபஞ்சத்தின் பின்னணியில் வைத்து இனங்கண்டு கற்பனையை விரிக்கும் அவரது எழுத்தின் நயத்தை , நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் அருகில் கூட நெருங்க முடியாது.

பசீரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு முக்கியமான விடயம்: அவரது ஜீவராசிகள் மீதான கருணை. அவரது 'பூமியின் வாரிசுகள்' என்பது போன்ற சிறுகதைகளிலாகட்டும், நாவல்களிலாகட்டும் அதனைக் கண்டுகொண்டிட முடியும். மேலும் இஸ்லாமிய மதம் பற்றிய தகவல்களைக்க்கூட பாத்திரங்களின் இயல்புகளுக்கேற்ப அவ்வப்போது தந்திருப்பார்.

மானுடரின் உளவியலை எவ்விதம் அவர் அவதானித்திருக்கின்றார் என்பதை 'பாத்துமாவின் ஆடு' போன்ற படைப்புகளில் காணப்படும் அவரது எழுத்தின் செழுமை புலப்படுத்தும். ஊருக்குத் திரும்பி வந்திருக்கும் நாயகனிடம் தாய், தங்கைமாரெல்லாம் பணம் , நகையென்று இரகசியமாகக் கேட்கும் நிகழ்வுகளை எவ்வளவு வேடிக்கையாக, அதே சமயம் யதார்த்தமாக அவர் விபரித்திருப்பார்?

பசீரின் எழுத்தை ஓர் இஸ்லாமிய எழுத்தாக வைத்து யாரும் பார்ப்பதில்லை. அவரைச் சிறந்த மலையாள மொழிப் படைப்பாளியாகத்தான், உலக இலக்கியப் படைப்பாளியாகத்தான் அவரை நாம் இனங்காண்கின்றோம்.

எனது அபிமான நடிகர்களில் முக்கியமானவர்களிலொருவர் மம்முட்டி. பசீரின் 'மதில்கள்' படம் இன்னும் சிந்தையில் படம் விரிக்கின்றது. மதிலுக்குப் பின்னாலிருக்கும் முகம் தெரியாத பெண் கைதியுடன் அவர் கதைக்கும் காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன. மம்முட்டியைக் கூட நாம் முகம்மது குட்டி என்று இஸ்லாமிய நடிகராக அணுகுவதில்லை. இது போல் அமீர்கான் போன்றவர்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாகக் கலை. இலக்கியப் படைப்புகள் அவை படைக்கப்படும் மொழியின் அடிப்படையில் வைத்தே அணுகப்பட வேண்டும்; திறனாய்வு செய்யப்பட வேண்டும். மதரீதியாகவல்ல.

நண்பர் தாஜின் கருத்துகளை வரவேற்கின்றேன். நண்பர் தாஜுக்குத் தனிப்பட்டரீதியிலும் இந்தச் சமயத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். பல வருடங்களுக்கு முன்னர் , சீர்காழியிலிருந்து, 'அமெரிக்கா', மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடுகள்) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு அனுப்பிய கடிதங்கள் இன்னும் என்னிடம் பத்திரமாகவுள்ளன. அத்துடன் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு ஆனையிருந்தது' அனுப்பி உதவியிருந்தீர்கள். அதற்காகவும் நன்றி.

அப்துல் மஜீத்: கிரிதரன் சார், KPAC லலிதாம்மாவின் குரல் ‘நடித்ததை’ விட்டுவிட்டீர்களே! ??//பசீரின் 'மதில்கள்' படம் இன்னும் சிந்தையில் படம் விரிக்கின்றது.// எனக்கும்தான் (கூடவே ரியாத் அறையும் - பக்கத்து இருக்கையில் தாஜும்)June 18 at 3:23am · LikeUnlike.

தாஜ் டீன்: காலையிலேயே எழுதியிருக்க வேண்டும். தவறவிட்டேன். பணியின் அலைச்சலாலும், மின்கட்டின் இடைஞ்சலினாலும் இடைப் பொழுதிலும் எழுத இயலவில்லை. வலுவான முகாந்திரங்களுடன், சிரத்தையான உங்களது கருத்து முன்வைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அன்பு கிரிதரனுக்கு என் நன்றிகள். ஒன்று குறித்து நாம் என்னத்தான் அபிப்ராயத்தை முன்வைத்தாலும், சமூகம் அத்தனைச் சீக்கிரம் காதுக் கொடுத்து கேட்பதில்லை. என்ன செய்ய?

தாஜ் டீன்: என் மஜீதுக்கு... நீ பங்கெடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அதிகம். நீ மதில்களை குறித்து பேசியிருப்பதில் என்னை மாதிரியே கிரிதரனுக்கும் சந்தோஷமே மிகுந்திருக்கும். நன்றி மஜீத்.

கிரிதரன்: நண்பர் மஜீத், உண்மையில் அந்த 'சுந்தரமான' குரலை நான் மறக்கவில்லை. அந்தக் குரலுக்குரியவர் யாரென்பது இதுவரை தெரியாமலிருந்தது. அதனை அறியத் தந்துள்ளதன் மூலம் என் அறிதலை/ புரிதலை இன்னும் கொஞ்சம் அதிகரித்துள்ளீர்கள்; நன்றி. நண்பர் தாஜுக்கு, " நாம்...என்னத்தான் அபிப்ராயத்தை முன்வைத்தாலும், சமூகம் அத்தனைச் சீக்கிரம் காதுக் கொடுத்து கேட்பதில்லை" என்று கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் கருத்து உங்கள் அறிவுக்கெட்டிவரையில் சரியானதாகவிருக்கும் பட்சத்தில், உண்மையாகவிருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் கருத்தை எந்தவித முன் எதிர்பார்ப்புகளுமின்றி முன் வைக்கலாம். சில சமயங்களில் சமூகத்தோடு ஒத்து நில் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நின்றிருந்தால் பாரதியால் தன் படைப்புகளைப் படைத்திருக்க முடியாது. கார்ல மார்க்சால் தனது மூலதனத்தை வாட்டிய வறுமைக்கும் மத்தியிலும் படைத்திருக்க முடியாது. அவரது குழந்தையொன்றின் மறைவுக்குக் கூட அவரால் முறைப்படி அஞ்சலி செய்ய முடியாத அளவுக்கு வறுமை அவரை வாட்டியது. அப்போது அவர் காலத்து சமூகம் என்ன செய்தது? முகமது நபிகளைக் கூட நகர் விட்டு நகருக்குத் துரத்தியது அவர் கால கட்டத்து சமூகமென்பது வரலாறு. ஆனால் அவர் அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் கருத்துகளை முன் வைத்தார். அதே சமூகம் பின்னர் அவரைத் தூக்கிக் கொண்டாடியது. மார்சையும் பின்னர் உலக சமூகம் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பாரதியின் நிலையும் இதேதான். நாம் வாழும் காலகட்டம் தொடர்ந்து செல்லும் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது அற்பத்திலும் அற்பமானதொரு சிறு துளி. அந்தத் துளிக்குள் நின்றுகொண்டு எதற்கு தேவையற்ற எதிர்பார்ப்புகள்? எது சரியென்று படுகிறதோ அதனை துணிந்து செய்வோம் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று. ஆனால் அதே சமயம் அது பின்னொரு சமயம் அறிவின் வளர்ச்சியில் பிழையென்று பட்டால், அதனையும் துணிந்து ஏற்கும் பக்குவமும் இருக்க வேண்டும். இது என் நிலைப்பாடு.


கிரிதரன்: வ.ந.கிரிதரனின் அறிவியற் சிறுகதைகள் மூன்று: ' நான் அவனில்லை', 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!' & தேவதரிசனம்

Firthouse Rajakumaaren  நல்ல அறிவியல் சிறுகதைகளை எல்லோருக்கும் படிக்க தந்தமைக்கு நன்றி .கிரிதரன் 

கிரிதரன்: நண்பருக்கு, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

தாஜ் டீன்: எங்கள் கிரிதரனின் அழகான எழுத்தை மீண்டும் வாசித்ததில்/ அது ப்[அரிசுக்கு தேர்வில் வென்று வந்து இருப்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

கிரிதரன்: நண்பர் தாஜ்ஜின் பரந்த மனமும், அதிலிருந்து வெளிவந்த இனிய வார்த்தைகளும் மகிழ்ச்சி தருவன.·


பழைய சிற்றிதழான 'கிரணத்திற்கு' நான் டிசைன் செய்த எழுத்தமைப்பு இது. பிளாக் செய்வதற்காக நண்பர் கேட்டுக்கொண்டபடி - இந்த முறை திருத்தமாக - வரைந்து அனுப்பினேன் - Staedtler Stencil உதவியோடு. பத்திரிக்கை நின்றுவிட்டது...

ஆபிதீன் ஹுசைன்: ம்ஆ முபாரக்! பழைய சிற்றிதழான 'கிரணத்திற்கு' நான் டிசைன் செய்த எழுத்தமைப்பு இது. பிளாக் செய்வதற்காக நண்பர் கேட்டுக்கொண்டபடி - இந்த முறை திருத்தமாக - வரைந்து அனுப்பினேன் - Staedtler Stencil உதவியோடு. பத்திரிக்கை நின்றுவிட்டது...

Firthouse Rajakumaaren, Abdul Majeed and 7 others like this..

தாஜ் டீன்: அதான் கிரணம்.

தாஜ் டீன்: அதுல வந்தக் கவிதைகளுக்காக இந்த உலகமே அழிஞ்சிருக்கணும்..., என்ன கிரணம் தெரியல... தப்பிச்சிடுச்சு!

சுரேஷ் கண்ணன்: கிரணம் -ன்றதால பாதி மறைஞ்சிருக்கோ?

முகமட் இஸ்மாயில்: ‎// பழைய சிற்றிதழான 'கிரணத்திற்கு' நான் டிசைன் செய்த எழுத்தமைப்பு இது. பிளாக் செய்வதற்காக நண்பர் கேட்டுக்கொண்டபடி - இந்த முறை திருத்தமாக - வரைந்து அனுப்பினேன் - Staedtler Stencil உதவியோடு. பத்திரிக்கை நின்றுவிட்டது//
அப்படியா ? அப்ப நான் முன்பு சொன்னது போல அல் குர் ஆனில் பேசப்படாத தாஜ்ஜால் மூஞ்சிய வ்ரைங்க. அவன் வ்ராமல் போகட்டும்

கிரிதரன்: கிரணம் கிரகணமல்ல. உண்மையில் கிரகணத்திற்கு ஒருவகையில் எதிரானது கிரணம். கிரகணம் ஒளியை மறைத்தால் கிரணம் அதாவது ஒளிக்கதிர்கள் வெளிச்சத்தைத் தருவன். காலையில் சூரிய கிரணங்கள் எவ்விதம் ஒளியை இவ்வுலகுக்கு வாரி இறைக்கின்றன. ஆபீதினின் இந்த வடிவமைப்பு உண்மையில் கிரணத்திற்கேற்ப அற்புதமாக வடிவமைப்பக்கப்பட்டுள்ளது. கீழுள்ள இருளை விலக்கி எவ்விதம் கிரணம் மேலே ஒளிபரப்புகின்றது. வாழ்த்துகள் நண்பருக்கு.

ஆபிதீன் ஹுசைன்: விளக்கத்திற்கு நன்றி கிரிதரன். உண்மையில், அவ்வளவு யோசித்து வரையவில்லை நான். அப்ப.. ஓவியன்தான் போலும்!

***************************

தாஜ் டீன்:

உண்மையென்பதெல்லாம்
உண்மையல்ல.
பொய்யென்பதெல்லாம்
பொய்யுமல்ல.
சாஸ்வதமும் புனிதமும் கூட
அப்படிதான்!
காந்திவழி, நேருவழி எல்லாமும்
மாசும் தூசும் படிந்ததுதான்.
ஆண்டவனுமிங்கே கேள்விக்குறிதான்.

ஷேக் முகமட்: கடைசி வரி நீங்கலாக மற்றவை எல்லாத்துக்கும் உடன்படுகிறேன் தாஜ்பாய்.. ஆண்டவன் ஆச்சரியக்குறியாகவும் கமாவாகவும் இருக்கலாமே தவிர கேள்விக்குறியாக இருக்க வாய்ப்பேயில்லை.

கிரிதரன்: ஒரு காலத்தில் பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதப்பட்டது. அதனைச் சுற்றியே எல்லாக் கோள்களும், சுடர்களும் (சூரியனுட்பட) சுற்றுவதாகக் கருதப்பட்ட உண்மையது. அன்று பூமி சூரியனைச் சுற்றுவதைப் பற்றியே நினைத்துப் பார்க்க முடியாது. அது பொய் மட்டுமல்ல தெய்வ நிந்தையும் கூட. அவ்விதம் கருதியவர்கள் மதவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாட்டில் கூட ஆயிரக்கணக்கில் சமணத்துறவிகளைக் கழுவேற்றினார்கள். அது அன்று புனிதமான செயலாகக் கருதப்பட்டது. சாசுவதமற்ற மனித வாழ்வினைச் சாசுவதமாகக் கருதிய மானிடர் அன்றும், இன்றும் போடும் ஆட்டம்தாம் எத்தனை? எத்தனை?

இன்னுமொரு கோணத்தில் பார்த்தால்... ஒருவர் 'நாம் பார்க்கும் இந்தப் பிரபஞ்சம், இதன் காட்சிகள், உயிர்கள் அனைத்துமே எம் மூளையின் மின் துடிப்புகளின் விளைவே. ஆக, நாம் பார்க்கும் , உணரும், அறியும் எவையுமே எமக்குள்ளிருந்து உருவாகும் காட்சிகளே. எமக்கு வெளியில் இந்தப் பொருளுலகு விரிந்திருக்கிறது என்று ஒருபோதுமே அறுதி உறுதியாகக் கூறமுடியாது. அதற்கு நாம் எம் மூளைக்கு வெளியிலிருந்து இவற்றைப் பார்க்க வேண்டும்; உணரவேண்டும். ஆனால் அது சாத்தியமற்றதொரு செயல்' என்று தர்க்கம் செய்யலாம். அதற்கு உறுதியான எதிர்த்தர்க்கம் செய்ய முடியாத வகையிலிருக்கிறது எம் இருப்பு.

இந்தத் தர்க்கத்தின்படி உண்மையெல்லாம், பொய்யெல்லாம் எல்லாமே வெறும் கனவுதானா? இந்தச் சமயத்தில் பாரதியின் 'நிற்பதுவே' கவிதையினைச் சிறிது நினைவு கூர்வதும் பொருத்தமானதே.

தாஜ் டீன்: பாரதியையும் காட்டி கருத்து பகர்ந்திருக்கும் கிரிதரனுக்கு நன்றி. மாயைக்குள் மாயையாகத்தான் நம் காலமும் கழிகிறது.

அப்துல் மஜீத்: ‎//சாசுவதமற்ற மனித வாழ்வினைச் சாசுவதமாகக் கருதிய மானிடர் அன்றும், இன்றும் போடும் ஆட்டம்தாம் எத்தனை? எத்தனை?// மாயைகள் மானுடத்துக்கு மரணித்தலில் முடிவுரும் என்று மனதிற்குத் தோன்றுகிறது. அல்ல என்கின்றன மதங்கள்.


தாஜ் டீன்:

கவிதை: உயிர்மெய்/ தாஜ்

பசுமையின் அந்தி
இலையுதிர் கோலம்.
சிதிலம் காண்
யௌவனத்தின் கூறு.
நொருங்கிக் கிடக்கும்
கரிக்கட்டைகளும்
நின்ற மரத்தின் சாட்சி.
இருள் வழியில் இடறும்
ஏதோ அது நான்.

அகமொழி மறந்த
வண்ணத்துப் பூச்சி
இடம்விட்ட மலர்களது
பக்கங்களில் வாசித்து
காற்று சுழித்த
திசையெங்கும் மிதக்க
வட்டமடித்ததெல்லாம்
ஏகமாய் உயிர்த்திருந்தபோது.

உள்முக
இரைச்சலின்
பிடிப்படும் ராகமின்று
விரையத் திரும்பும்
அந்திப் பறவைகளின் ஆனந்தம்.


கிருஷ்ணா கோபிகா: கூடு திரும்புதல் தானோ ஆனந்தம்?

தாஜ் டீன்: அந்த ஆனந்தத்தின் கூச்சல்தான் இது. கோபிகாவின் வருகைக்கு நன்றி.

கிரிதரன்:

யெளவனத்தின் சிதிலத்தில்
இருள் வழியில் இடறும்
கவிஞனுக்கு
வண்ணத்துப் பூச்சியாய்
வட்டமடித்த நினைவுகள்தாம்
...இன்னும் ஏகமாய்
மிஞ்சி இருக்கிறது.
அந்தி(ம) காலத்தில்
மீண்டுமொரு பயணத்திற்காய்
திரும்பவும் விரைய வேண்டிய
யதார்த்தம் உறைக்கிறது.
இருந்தும்
அந்திப் பறவைகள்
அப்பயணத்தை
ஆனந்தத்துடன் எதிர்கொள்வதாக
நம்பிக்கையுடன்
இருப்பினை எதிர்நோக்குகின்றான்
யெளவனத்தின் சிதிலத்தில்
இருள் வழியில் தடுமாறும்
அந்தக் கவிஞன்.

சிந்தைக்கு வேலை கொடுக்கும்
சிறப்பானதொரு கவிதை!

தாஜ் டீன்: கிரிதரன் சரிதான் நீங்கள்.

கிரிதரன்: மேலும் சில வார்த்தைகள் .... ஒரு கவிதையோ அல்லது எந்தப் படைப்போ ஒரு கோணத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. அதனை வாசிக்கும் வாசகர் ஒருவர் அதனைப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளலாம். அதில் ஆசிரியர் தலையிட வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர்...எதை எண்ணி எழுதினாரென்பது முக்கியமில்லை. அது எவ்விதம் புரிந்து கொள்ளப்படுகின்றதென்பதே முக்கியமானது. இதனால்தான் படைப்பொன்றுக்குப் பல்வேறு உரைகள் பல்வேறு காலகட்டத்தில் உருவாகின்றன. அவ்விதமான படைப்பே காலத்தை வென்று, நின்று வாழும் தன்மையது. புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளரான 'உம்பர்த்தே எகோ' தனது 'Author, Text And Interpreters' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: 'தங்களைப் படைப்பாளிகள் என்று கூறிக்கொள்ளும் எவருமே ஒருபோதுமே தங்களது சொந்தப் படைப்பு பற்றிய விளக்கத்தை அளிக்கக் கூடாது. எழுத்தானது ஒரு சோம்பல் எந்திரம். அது தனது வாசகர்கள் தனது வேலையினொரு பகுதியைச் செய்ய விரும்புகிறது. அதாவது அது விளக்கங்களை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கருவி.' ['Those who all creative writers should never provide interpretations of their own work. A text is a lazy machine that wants its readers to do part of its job - that is, it's a device conceived in order to elicit interpretations.'] மேற்படி கட்டுரை 'Confessions of a young Novelist' (Published by Harvard University Press) என்னும் நூலில் உள்ளது. 'வாசகரொருவர் தன் கற்பனைக்கேற்ப ஒரு படைப்பொன்றினைப் புரிந்துகொள்ளலாம் என்பதற்காக , அதனைத் தான்தோன்றித்தனமாக எப்படியும் புரிந்துகொள்ளலாமென்று கூற வரவில்லை' என்றும் இன்னுமோரிடத்தில் 'உம்பர்த்தோ எகோ' கூறியிருப்பார். 'உம்பர்த்தோ எகோ'வின் நவீன இலக்கியம் பற்றி 'எமோரி பல்கலைக்கழக'த்தில் (Emory University) ஆற்றிய விரிவுரைகள் உள்ளடங்கிய , சிந்தைக்கு விருந்தான நூலிது. நண்பர் தாஜுக்கொரு வேண்டுகோள். நாமெல்லாரும் இங்கு நண்பர்கள். 'சார்' போன்ற பதங்களைத் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. 'உங்களில் ஒருவன் நான் நண்பரே!'.

தாஜ் டீன்: அன்புடன் கிரிதரன், நீங்கள் எழுதி தெரிவித்து இருக்கும் கருத்தை வாசித்தேன். சரி அது. நன்றி.

 

கெளதம சித்தார்த்தன்: கிரிதரனின் கவிதைப்பார்வை சரியானதுதான்.......


கிரிதரன்:  என் வாசிப்பு பற்றி.....

மீண்டுமொருமுறை தி.ஜா.வின் 'மோகமுள்' வாசித்தேன். இம்முறை மிகவும் ஆறுதலாக வாசித்தேன். முதல் முறை வாசித்தபொழுது மிகவும் பாதித்தது. அதற்கு அதனை வாசித்தபோதிருந்த சூழல், வயது, அறிவு போன்றன காரணமாயிருந்திருக்கலாம். பின்னர் மீண்டுமொருமுறை வாசித்தபொழுது தி.ஜா. வெறும் உரையாடல்களால் பக்கங்களை நிரப்புகிறாரோ என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் பிறகு நீண்ட நாட்களின் பின் அண்மையில் வாசித்தபொழுது அனுபவித்து மனமொன்றிப் போயிருந்தேன். தி.ஜா.வின் நாவலைப் பலவேறு அம்சங்களுக்காக வாசிக்கலாம். நாவல் விபரிக்கும் மண்ணின் இயற்கைச் செழிப்பு, உரையாடல்களினூடு பெறப்படும் இசை பற்றிய தகவல்கள், அவ்வுரையாடல்கள் புலப்படுத்தும் கொந்தளிக்கும் உணர்வுகள், .. இவற்றினூடு இந்தப் பிரபஞ்சம் பற்றி, ஆண்-பெண் உறவு பற்றி, சமூகத்தில் நிலவும் சீர்கேடு பற்றியெல்லாம் நாவல் வெளிப்படுத்தும் உணர்வுகள், சீற்றங்கள்...  தமிழ் இலக்கியத்தில் தி.ஜா.வின் 'மோகமுள்', 'செம்பருத்தி' இரண்டுமெ என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானவை.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு புனைகதை (அது நாவலோ அல்லது சிறுகதையோ) படைப்பு வாசிக்கும் வாசகர் ஒருவரின் சிந்தையினைப் பாதிப்பதாகவிருக்க வேண்டும். கலை என்னும் ரீதியில் வாசிப்பு இன்பத்தை அளிக்க வேண்டும்; பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும். அவ்வப்போது தேவையானபோது போது , மனம் சலித்திருக்கும்போது அல்லது தளர்ந்திருக்கும்போது எடுத்து அந்தப் படைப்பினோரிரு பக்கங்களைப் புரட்டுகையில் புத்துணைர்ச்சியினை, களிப்பினைத் தரவேண்டும்.

ஜெயமோகனின்  'அறம்' சிறுகதைத் தொகுதியையும் அண்மையில் வாசித்தேன். அதிலுள்ள சிறுகதைகளான 'பெருவலி', 'வணங்கான்' மற்றும் 'சோற்றுக்கடன்' ஆகியவை ஒரு வாசிப்புடன் நீண்ட நாள்கள் நினைவில் நிற்கும் வகையிலான சிறுகதைகள். பல தகவல்களையும் தரும் கதைகளை உள்ளடக்கியுள்ளது 'அறம்'. உண்மையான ஆளுமைகளுடன், தன் அனுபவங்களையும் உள்ளடக்கிப் புனைந்த கதைகள் அவை. வித்தியாசமான முயற்சி.

இதுவரையில் நான் படித்த நாவல்களில் அல்லது குறுநாவல்களில் அல்லது சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் சில:

எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்'
அதீன் பந்தோபபாத்யாயின் 'நீல கண்டப் பறவையைத் தேடி'
தி.ஜா.வின் 'மோகமுள்', 'செம்பருத்தி'
ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்'
ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'
Yann Martelலின்  Life Of Pi
Ernest Hemingwayயின் The Old Man And The Sea'
Albert Camusசின் The Oustsider
Jersy Kosinskyயின் Being There & Painted Bird
'டால்ஸ்டாயின்' புத்துயிர்ப்பு
எமிலி ஷோலாவின் 'நிலம்'
ஸ்டின்பெக்கின் 'முத்து'
மார்க்சிக் கோர்க்கியின் 'தாய்'

தஸ்தாயெவ்ஸ்கியின்  'குற்றமும் தண்டனையும்', 'அசடன்' (இப்புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்திருக்கின்றேன். 'அசடன்' தமிழ் மொழிபெயப்பினை (எம்.ஏ.சுசீலாவின்) அண்மையில் வாங்கியிருக்கின்றேன். இன்னும் வாசிக்கவில்லை. நாவல் கைக்கடக்கமான அளவில் அச்சிடாதது என்னைப் பொறுத்தவரை ஒரு குறை. அதன் அளவு காரணமாக எடுத்து வைத்து வாசிப்பதில் இடைஞ்சல். செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாதநிலை. மேலும் ஓவியங்களுக்குப் பதில் ருஷிய நடிகர்களின் புகைப்படங்களைப் போட்டிருப்பதும் வாசிப்பதற்கொரு இடைஞ்சலாக எனக்கிருக்கிறது.

பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'
ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம்'
தகழியின் 'தோட்டியின் மகன்', 'ஏணிப்படிகள்'
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'
மெல்விலின் 'மோபி டிக்'
'டானியல் டிபோ'வின் ரொபின்சன் குருஷோ
Ivan Turgnevவின் Fathers And Sons
காப்காவின் 'உருமாற்றம்'
ஜேர்சி கொசின்ஸ்கியின் 'Being There'
Orhan Pamuk' இன் My Name is Red

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய புனைவுகள்/அபுனைவுகள் வகை நூல்களை வாங்கியிருக்கின்றேன். காவல்கோட்டம், கொற்றவை, கொற்கை, பின் தொடரும் நிழல், யாமம், பைரப்பாவின் பருவம், கு. அழகிரிசாமி கதைகள், ஜெயகாந்தன் குறுநாவல்கள், தகழியின் கயிறு, துயில் .. இவ்விதம் ஒரு பெரும் பட்டியலுண்டு. திலீப்குமாருக்கும், காந்தளகத்திற்கும்தான் நன்றி கூறவேண்டும்.

இவை தவிர சிறுவயதில் என்னைப் பாதித்த வெகுசன ஊடகங்களில் வெளியான கல்கி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், ர.சு.நல்லபெருமாள், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் நூல்களையும் வாங்கினேன். இவை என் இளம்பருவத்தின் பாதிப்புகளை நனவிடைதோய வைக்கும் நூல்கள். இவற்றை இப்பொழுது வாசிக்கும்பொழுது ஓரிரு பக்கங்களுக்குமேல் தொடர்ந்து வாசிக்க முடியாது. ஆனால் ஒருகாலத்தில் என் வாசிப்பின் வளர்ச்சியில் அரும்பெரும் பங்காற்றியவை இவையென்பதால் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது. ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியென்பது இவர்களின் எழுத்துகளினூடுதான் நடைபெற வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்துமென்றாலும், மூன்று வயதிலேயே உமையம்மையின் ஞானப்பாலினை உண்ட ஞானசம்பந்தர்கள் விதி விலக்கானவர்கள். :-)

வாசிப்பு பற்றிய பதிவு மேலும் தொடரும். 

Noel Nadesan:  "என்னைப் பொறுத்தவரை பெண்களின் அக உணர்வை பற்றி எழுதிய ஒரே தமிழ் நாவலசிரியர் தி.ஜ மட்டுமே. மற்றவர்களால், ஏன் பெண் எழுத்தாளர்களால் கூட அந்த அளவு போக முடியவில்வை. இதற்கு தென் இந்திய கலாசார சூழல் காரணம் என நினைக்கிறேன். செம்பருத்தி இந்த விடயத்தில் மிக மோகமுள்ளை விட உயர்ந்து. மோகமுள்ளின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் பல மில்லியன் பெறுமதியானது."
கிரிதரன்: ‎//ஏன் பெண் எழுத்தாளர்களால் கூட அந்த அளவு போக முடியவில்வை.// இதனை ஆணான நீங்கள் எவ்விதம் உறுதியாகக் கூற முடியும்? பல பெண் கவிஞர்கள், அம்பை போன்ற படைப்பாளிகள், பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண் படைப்பாளிகள் .. இவ்விதம் பலர் இருக்கிறார்களே?
கிரிதரன்: எனக்கு மிகவும் பிடித்த புனைவுகள் / அபுனைவுகளில் மேலும் சிலவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அவை கீழே:
வைக்கம் முகம்மது பசீர்: 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது', பாத்துமாவின் ஆடு'.
இந்திரா பார்த்தசாரதி: ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன.
ப.சிங்காரம்: புயலில் ஒரு தோணி
வ.அ.இராசரத்தினம் (சிறுகதை): தோணி
செங்கை ஆழியான் (சிறுகதை): கங்குமட்டை
அ.ந.கந்தசாமி (சிறுகதைகள்): இரத்த உறவு, நள்ளிரவு, வழிகாட்டி, உதவி வந்தது
நாடகம்: அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'
கவிதைகள்: பாரதியார் கவிதைகள் பல. அ,ந,க.வின் 'சிந்தனையும், மின்னொளியும்', 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'துறவியும், குஷ்ட்டரோகியும்)
உளவியல் நூல்: அ.ந.க.வின் 'வெற்றியின் இரகசியங்கள்'
புதுமைப்பித்தன் (சிறுகதை): பொன்னகரம்
செங்கை ஆழியான்: ஆச்சி பயணம் போகின்றாள் (நகைச்சுவை நாவல்)
அ.முத்துலிங்கம் (சிறுகதை): புதுப்பெண்டாட்டி
செ.கணேசலிங்கன் (சிறுகதை): நல்லவன், 'ஆண்மையில்லாதவன்'
எஸ்பொ (அபுனைவு): நனவிடை தோய்தல்
சிவராம் காரந் (நாவல்): மண்ணும், மனிதரும்
'வானியற்பியல்' (Astro-Physics) துறையில் என்னைக் கவர்ந்த நூல்கள் (இவை அனைத்தும் என் சேகரிப்பிலுள்ளவற்றில் சில):
Brian Greene: 'The Fabric OfThe Cosmos', The Elegant Universe', 'The Hidden Reality'
Michio Kaku: 'Hyperspace', 'Parallel Worlds'
Lillian R. Lieber: The Einstein Theory Of Relativity'
Richard P.Feynman: Six Not- So Easy Pieces'
Eric Chaisson: Relativley Speaking
[Brian Greene , Michio Kaku ஆகிய இருவரும் என்னை மிகவும் கவர்ந்த அறிவியல் எழுத்தாளர்கள்.]
சிறுவர் இலக்கியம்:
அழ.வள்ளியப்பா கவிதைகள்
தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள்.
சித்திரக் கதைகள்: வாண்டுமாமா சித்திரக்கதை: ஓநாய்க்கோட்டை [சிறுவயதில் விரும்பி வாசித்த சித்திரக் கதை. கல்கியில் தொடராக வெளிவந்தது. 'சங்கரனும், கிங்கரனும் - விகடனில், நாடோடி எழுதி வெளிவந்த சித்திரக்கதை.]
சரித்திர நாவல்கள் (அன்றைய காலகட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை: சாண்டில்யன்: ஜீவபூமி; ஜெகசிற்பியன்: நந்திவர்மன் காதலி, பத்தினிக் கோட்டம்; மீ.ப.சோமு: கடல் கண்ட கனவு]
ஜெயகாந்தன் (சிறுகதை): ஒரு பிடி சோறு, டிரெடில், ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
பானுமதி ராமகிருஷ்ணா (நகைச்சுவை): மாமியார் கதைகள்.
காமிக்ஸ்: இந்திரஜால் காமிக்ஸ் - வேதாள மயாத்மா காமிக்ஸ் (அன்றைய காலகட்டத்தில் , சிறுவனாக விரும்பி வாசித்த சித்திரக்கதைகள்].
சமூக நாவல்கள்: 'முழு நிலா' - உமாசந்திரன்; 'முள்ளும் மலரும்' - உமாசந்திரன்; பொன் விலங்கு - நா.பார்த்தசாரதி; கிளிஞ்சல் கோபுரம் - ஜெகசிற்பியன்; ஜீவகீதம் - ஜெகசிற்பியன். இவையெல்லாம் அன்று என் வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் எனைக் கவர்ந்த  படைப்புகளில் சில]
மார்க்சிய நூல்கள்: கம்யூனிஸ் கட்சியின் அறிக்கை; எங்கல்சின் டூரிங்கிற்கு மறுப்பு; எங்கெல்சின் நூல்கள்; 'இயக்கவியல் 'பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்'; லெனினின் நூல்கள். (இவையெல்லாம் மாஸ்கோ பதிப்பக வெளியீடுகள். தமிழ் மொழிபெயர்ப்புகள்.] 'கொழும்பு கொம்பனித்தெரு'விலிருந்த இடதுசாரி நூல்களை விற்கும் புத்தகசாலையில் வாங்கியவை.
மேலும் பட்டியல் தொடரும்.