மனக்குறள் 9 & 10

11-தொல்நூல் மரபு

என்மனார் என்று எழுதித்தொல் காப்பியர்
முன்னிருப் பிட்டதே எண்!

எழுத்துசொல் இன்பொருள் யாப்பணி ஐந்தும்
எழுத்தொடும் நூற்பா இயல்

இரண்டரைநூற் றாண்டு இலக்கணப் பல்நூல்
இருந்தன முற்சங்கம் முன் !

தீயாலும் நீராலும் தூர்ந்தன போகவும்
எண்கீழும் மேலென் றிலங்க !

நீதிநூல்  ஐம்பொரும் காப்பியம் மேல்கீழ்உம்
மீதியாம் சங்கம் மொழி !

மதுரைத் தமிழார் மலர்ந்தநற் சங்கம்
நிலந்தரு திருவாம் திடல்!

நாற்பத்து ஒன்பது நற்றாம் புலவரின்;
நோற்பின் உதயமே சங்கம் !

வயலும் வரம்பாய் வளரிலக் கியத்தும்
முயலும் இலக்கண மென்ப !

மரபா லுயர்ந்த மகவுகளைக் கூறும்
தெரிசொல் தமிழின் சிறப்பு !

வடவேங்க டத்தும் குமரிவரை யாகி
அடங்கும் தமிழர்நிலம் அன்று!

12-தொல்காப்பியம் சொல்லும் அறிவு

மரமெலாம் ஓரறிவாம்! மீனொடும் நத்தை
இரண்டே யறிவாம் இயம்பு !

உடம்புநா மூக்கும் அறிவது மூன்றே
கறையான் எறும்புமே காண் !

அவற்றொடு கண்ணும் அறியுமாம் நான்காய்ச்
சுணமெனும் பாம்புதான் சொல்லும்!

உடம்பொடு நாமூக்கு காதுகண்ணும் ஐந்தாய்;
அறிவதே ஆடுமா டாம்!

மனிதரை மட்டும் அறிவொடும் ஆறாய்
இனிதெனக் கண்டார் இயல்!

மனிதன் அறிவொடும் வாழ்வதை விட்டுப்
புனிதம் இழந்தான் பிசகி !

காலமும் கொல்லுங் கயமை அடிப்படைக்
கோலமுங் கண்டார் குறை !

அனலாய் மனமற்ற அற்பர் வதம்செய்து
சனத்தைச் சிதறடித்தார் சாக!

தமிழரின் சாவில் சகாப்தம் கண்டோர்
அமிழ்த்திட நின்றார் அடுக்கு!

அறுபதென் றான அரசியல் நீட்சி
இறுக்கமென் றானது இன்னும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.