கவிதை: குப்பைகள் குறித்து...

குப்பை:1

இதுவரை அப்படியொன்றும் செய்ததில்லை
எல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று
தங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில
பழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ?
ஆனால் அது உண்மைதான்.
கடற்கரையருகே நடக்கவேண்டியவன்
அலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்
அலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த
ஒரு குப்பையைப் போல.
அவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன?
ஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன?
என்று தெரியுமே.

குப்பை:2

ஒரு குப்பையை அவ்வளவு எளிதில் அழித்துவிடுவது நல்லதல்ல.
டார்வினின் பரிணாமம் குறித்த புதிய கோட்பாடு கிடைக்கலாம்,
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட
ஹிட்லரின் போர் தந்திரங்கள் கிடைக்கலாம்,
துஸிடிடைஸின் முடிவுறாச் சொற்பொழிவுகள் கிடைக்கலாம்,
அழிந்து போன ஏதோ ஒன்றின் மரபுகள் கிடைக்கலாம்.
குப்பையில் புதிய வகைமையில் கவிதைகள் கிடைக்கலாம்
மைக்கேல் ஏஞ்சலோவின் புதிர்த் தன்மையிலான ஓவியம் கிடைக்கலாம்
கிரேக்கத் துன்பியல் நாடகம் கிடைக்கலாம்,
பாரோ மன்னர்களின் ரகசிய உலகத்திற்கான வழிப்பாதைகள் கிடைக்கலாம்,
பாப்பிரஸ் செடியின் காகிதம் குறித்த
எகிப்திய கற்பனைக் கதைகள் கிடைக்கலாம்,
காந்தியைக் கொன்ற குண்டுகளின் வகையில்
மீதி குண்டுகள் குறித்த தகவல் கிடைக்கலாம்,
அல்லது
நேற்று என் கைக்கு வந்திருக்க வேண்டிய தகவல் ஏதேனும்
அதில் இருக்கலாம்..
ஆனாலும்,
குப்பையை யாரும் அவ்வளவு எளிதில் மதிப்பதில்லை.
அது கசக்கியெறியப்பட்டோ அல்லது
கிழித்து பன்னூறு துண்டுகளாகவோ  அல்லது
தீக்கிரையாகக் கூடியதான ஒரு குப்பையாகத்தானே மதிக்கப்படுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.