வீரகேசரி  முன்னாள்  ஆசிரியர் க. சிவப்பிரகாசம் எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம்  வீரகேசரி,   எத்தனையோ காலமாற்றங்களை   சந்தித்தவாறு  தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது.  வீரகேசரி  துளிர்விட்ட  வருடம் 1930.  விருட்சமாக  வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள்,  எத்தனைபேர்  அதற்கு  நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர்  அந்த  நிழலின்  குளிர்மையை  நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள்  என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே  நிற்கிறது. பின்னாளில்  அதன்வழிகாட்டுதலில்   வந்தவர்களில்  ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு  தற்பொழுது 82 வயதும்  கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள்  வீரகேசரியில் அவருடன்  இணைந்து பணியாற்றியவருமான  வீரகேசரியின்  முன்னாள் விநியோக - விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம்  நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில்  சொன்னார்.  அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு  வந்து  எனது  கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை  மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன்  மின்னஞ்சலில்  அனுப்பியிருந்தார்.

அமெரிக்காவில்   ஒரு மாநிலத்தில்  மூத்தபிரஜைகளை  பராமரிக்கும் இல்லமொன்றில்  எங்கள்  முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் தங்கியிருப்பதாகவும்   தற்பொழுது  கவலைக்கிடமாக இருப்பதாகவும்  அடுத்தடுத்து  தகவல்  வந்தததையடுத்து,  அவரைப்பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. ஆசிரியர்  சிவப்பிரகாசம்,  இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக  ‘சிவப்பி ’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில்  இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர்.  ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது  முன்னாள் ஆசிரியர். மற்றவர்  து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின்  முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர். இவர்கள்  இருவரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்,  2007  ஆம் ஆண்டு  இறுதியில்,  கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா  இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக  சந்திக்கநேர்ந்தது.  அந்தப்பயணத்தில்  இணைந்திருந்த அவுஸ்திரேலியா  நண்பர் நடேசனும் நானும்  அந்த விருந்தில்  அவர்களுடன்  ஒன்றாக  அமர்ந்திருந்தோம்.

அச்சமயம்  அவர்கள்   இருவரிடமும்  வயதைக்கேட்டேன். விரைவில் பவளவிழா   காணப்போகிறவர்   ஆசிரியர் சிவப்பிரகாசம் என்பதை அறிந்ததும், குறிப்பிட்ட    விழா மேடையில் நான் உரையாற்றும்போது, " தென்கிழக்கு  ஆசியாவிலேயே  மிகத்தரமான  தமிழ்த்தேசிய  ஏடாக  மிளிர்ந்த  வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு  இன்னும்  சிலவருடங்களில் 75 வயதாகப்போகிறது. எனவே  கனடாவிலிருக்கும்  வீரகேசரி குடும்பத்தினர் அவருடைய பவளவிழாவை  கோலாகலமாக  கொண்டாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். இப்படி நான் உரையாற்றுவேன் என்று அச்சந்தர்ப்பத்தில்  எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

நீண்ட காலத்தின் பின்னர் இவர்கள் இருவரையும்  மற்றும் கனக. அரசரட்ணம், வர்ணன், மூர்த்தி, கமலா தம்பிராஜா ஆகியோரையும்  கண்டுவிட்ட  குதூகலத்தில்  ஏதோ பரவச உணர்ச்சிவேகத்தில் பவளவிழா  பற்றி சொல்லிவிட்டேன். நான் உரையாற்றிக்கொண்டிருக்கையில்  குறுக்கிட்ட தமிழர் செந்தாமரை ஆசிரியர் நண்பர் அரசரட்ணம், “ தகவலுக்கு நன்றி. கனடாவில்  குறிப்பிட்ட  பவளவிழாவை எமது தமிழர் செந்தாமரை இதழே நடத்தும்” என்றார்.  மண்டபத்தில் கரகோசம் எழுந்தது.  நான் பேசி முடிந்து  இருக்கைக்கு வந்ததும் இரண்டு சிவப்பிகளும் என்னைப்பார்த்து புன்முறுவல் பூத்தனர். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை. அன்றைய இனிய சந்திப்பும் எதிர்பாராத நிகழ்வுதான்.  அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு கனடாவில் நண்பர் கனக. அரசரட்ணத்தின் அகால  மரணமும்  எதிர்பாராததுதான். அதனைக்கேள்வியுற்றதும்  அமெரிக்காவிலிருந்து வந்த சிவப்பிரகாசம் அவர்கள்,    திருமதி ராஜி கனக. அரசரட்ணத்திடம்  தமது  ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்து   அன்னாரின்  குடும்பத்தின்  ஆழ்ந்த துயரத்தில் பங்கேற்றார்.

ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களுடன்  அவ்வப்போது தொலைபேசியில்  உரையாடுவேன். அவரது பெற்றோரின் பூர்வீகம் வடபுலத்தில் மாதகல்  என்றும்  அவரது தந்தையார் மலையகத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் மலையகத்தில் பிறந்திருக்கிறார் என்றும்  அறிந்துகொண்டேன்.  1958 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார  பட்டதாரியாகியிருக்கும் சிவப்பிரகாசம்  அவர்கள்,  அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும்  ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம்  மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின்  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய  சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன்  குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார்.

பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் , லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகிறது. கைலாசபதி  தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கே சிவகுருநாதன் உட்பட மேலும் சிலருடன் ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரிய பொறுப்பை திறம்பட மேற்கொண்டிருக்கிறார் சிவப்பிரகாசம். இதழியல்  துறையில் பல்வேறு நுட்பங்களையும் தாம் இங்கேதான் முதலில் கற்றுக்கொண்டதாகவும்  தெரிவித்தார்.

வீரகேசரி குடும்பத்தினர் கனடாச் சந்திப்பொன்றில்..

 

தினகரனில் பணியாற்றிய காலப்பகுதியில் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பல பயண இலக்கிய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.  மாக்ரட்  இளவரசியின் காதல் கதையை தினகரனிலும் எழுதினார். கைலாசபதி  தமது பணிகளை பல்கலைக்கழகம்  நோக்கி திருப்பியதும் சிவகுருநாதன்  தினகரனில் ஆசிரியராக பொறுப்பேற்கிறார்.  சிவப்பிரகாசம்  அங்கே  துணை ஆசிரியராகின்றார். பின்னர் இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகில் குறிப்பாக கொழும்பில் திடீரென்று  ஒரு  மாற்றம்  நிகழ்கிறது. எஸ்மண்ட் விக்கிரமசிங்கா வீரகேசரியின்  நிருவாகப்பொறுப்பை  ஏற்றுக்கொள்கின்றார். அவருக்கு  நம்பிக்கையான   சிலர்  அச்சமயம்  தேவைப்படுகின்றனர்.  எஸ்மண்ட் விக்கிரமசிங்கா தற்போதைய  பிரதமர்  ரணிலின் தந்தையார்.  எஸ்மண்ட்   மறைந்தபோது வீரகேசரியில் துணை ஆசிரியராக  பணியாற்றிக்கொண்டிருந்த  நடராஜா  எழுதியிருந்த வரிகள்  இச்சமயம்  நினைவுக்கு  வருகிறது. குறிப்பிட்ட ஆக்கத்திற்கு  நடா  இப்படித்தான் தலைப்பிட்டிருந்தார்: “ தங்கப்பேனா ஓய்ந்தது”  வீரகேசரியின் நிருவாகப்பொறுப்பை தங்கப்பேனா ஏற்றுக்கொண்டபோது,   மூவர் அவரது கவனத்திலிருந்தனர். அவர்கள் க. சிவப்பிரகாசம்,  து.சிவப்பிரகாசம், எஸ் பாலச்சந்திரன். இவர்கள் மூவருமே  தினகரனிலிருந்து  எஸ்மண்ட்  விக்கிரமசிங்காவினால் வீரகேசரிக்கு   அழைத்து  வரப்பட்டவர்கள்.  க.சிவப்பிரகாசம்  ஆசிரிய பீடத்துக்கும் து.சிவப்பிரகாசம் விளம்பரப்பிரிவுக்கும்  பாலச்சந்திரன் விநியோகப்பிரிவுக்கும் எஸ்மண்ட் விக்கிரமசிங்காவினால்   நியமிக்கப்படுகின்றனர். 1983 கலவரம் நடைபெறும்வரையில் 1966 ஆம் ஆண்டு முதல் க.சிவப்பிரகாசம்  வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் முதலில் இணை ஆசிரியராகவும்  பின்னர் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்து சில மாதங்களிலேயே மாலைத்தினசரியாக  மித்திரனை  சிவப்பிரகாசம் அறிமுகப்படுத்துகிறார்.   அடுத்தடுத்து  ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான  இதழ்களையும்  அறிமுகப்படுத்துகிறார்.  தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக்கல்லூரிக்கும்  சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார். வீரகேசரியில் க. சிவப்பிரகாசம்  பிரதமஆசிரிய பொறுப்பிலிருந்தபோது  இலங்கை  அரசியலிலும்  தமிழ்ச்சமூகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.  குறிப்பாக 1971 ஜே. வி. பி. கிளர்ச்சி, 1972 இல்  இலங்கை, ஸ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கத்தில்  ஜனநாயக சோஷலிஸ குடியரசானது. பல்கலைக்கழக  பிரவேசத்தில் தரப்படுத்தலினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தப்பின்னணிகளுடன்  தமிழர் ஐக்கிய  விடுதலை முன்னணி -  தமிழ் இளைஞர் பேரவை தோற்றம்,   யாழ். மேயர் துரையப்பாவின் படுகொலை,  தந்தை செல்வா எம்.பி. பதவி துறப்பு. காங்கேசன் துறைத்தொகுதி   இடைத்தேர்தல், வட்டுக்கோட்டைத்தீர்மானம், ட்ரயல் அட் பார்  வழக்கு,  1977 இல் ஜே. ஆர், ஜயவர்தனா  தலைமையில் ஐ.தே.க. ஆமோக  வெற்றியுடன் அரசு அமைத்தது.  அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானது.  அவருக்கு  எதிரான நம்பிக்கை இல்லாத்தீர்மானம்,  முருங்கன் காட்டினுள்  இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை  உட்பட  மூவரின்  படுகொலைகள்,  புலித்தடைச்சட்டத்தின்  உருவாக்கத்திற்கு தூண்டுகோலாக  இருந்த  வீரகேசரியில்  மாத்திரம் வெளியான  ஒரு பரபரப்பான புலிகளின் பிரசுரம்,  1977, 1981 கலவரம், யாழ். நூலகம், ஈழநாடு  எரிப்பு,  எம்.பி. வெ. யோகேஸ்வரன்   உயிர்தப்பிய சம்பவம், தமிழர் கூட்டணி எம்.பி.க்களின் வெளியேற்றம், 1983  இனச்சங்காரம்...... இப்படியே  பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். இத்தகைய  நெருக்கடியான தருணங்களில் தமிழ் மக்களின் குரலாகவும்  தமிழ் மக்களின்  அபிலாஷைகளை   உலக அரங்கில் முன்வைக்கும்   ஊடகமாகவும் விளங்கிய வீரகேரியின் பிரதம ஆசிரிய பொறுப்பிலிருந்தவர்  எத்தகைய  சாமர்த்தியசாலியாக இருக்கவேண்டும்  என்பதை   புரிந்துகொள்ள முடிகிறது.

1977 -1983 காலப்பகுதியில் அவருக்கு அருகாமையிலிருந்து பணியாற்றிய  என்போன்றவர்களுக்கு  அவரது பொறுமை, நிதானம் வியப்பானதுதான்.  அச்சமயம் அவருக்கு ஆசிரிய பீடத்தில் பக்க பலமாக இருந்தவர்களின் பணியும் விதந்து போற்றுதலுக்குரியதுதான். செய்தி ஆசிரியராக  பணியாற்றிய டேவிட்ராஜூ,  சிரேஷ்ட துணை ஆசிரியர்களாகவிருந்த  நடராஜா, கார்மேகம், வாரவெளியீட்டுக்கு பொறுப்பாகவிருந்த  பொன். ராஜகோபால்,  கண. சுபாஷ் சந்திரபோஸ், வீ. ஆர். வரதராஜா, சேதுபதி,  அஸ்ஹர்,  கே. நித்தியானந்தன், சனூன், சொலமன்ராஜ், தவராஜா,  எஸ். என். பிள்ளை, பாலவிவேகானந்தா,  ஸி.எஸ். காந்தி, ஜோன் ரெஜீஸ்,  பற்றீஷியா ஆரோக்கிய நாதர், இ.தம்பையா,  ஜி.நேசன், கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கும் ஆ. சிவநேசச்செல்வன் செல்லத்துரை மூர்த்தி,  டீ.பி.எஸ்.ஜெயராஜ், சோமசுந்தரம் ராமேஸ்வரன், பாலச்சந்திரன்  ஆகியோருடன்,  இன்றும் அங்கே பணியிலிருக்கும்  திருமதி அன்னலட்சுமி இராஜதுரை, வீ. தனபாலசிங்கம் உட்பட  பலர் இச்சந்தர்ப்பத்தில்  எனது  நினைவுக்கு   வருகிறார்கள்.

க. சிவப்பிரகாசம்  பயண இலக்கியம் எழுதுவதிலும் ஆற்றல் மிக்கவர் என்பதற்கு அவரது சோவியத் பயணக்கதை நூல் ‘ சிரித்தன செம்மலர்கள்’ ஒரு உதாரணம். 1975 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் நாட்டுக்குச்சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள்  பகிர்ந்துகொண்டார். இந்தப்பயணக்கதை பின்னர் 1976 ஜூலையில் வீரகேசரி பிரசுரமாக வெளியானது.

அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி முதலான நாடுகளுக்கு ஏற்கனவே பயணித்திருக்கும் சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஒரு சோஷலிஸ நாட்டுக்கும் சென்றுவரவேண்டிய எண்ணம் நீண்ட காலமாக இருந்திருக்கிறது. அந்தக்கனவு 1975 இல் நனவாகியிருக்கிறது.

சோவியத் பயணக்கதை வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமான காலப்பகுதியில் அதனை ஆவலுடன் படித்த வாசகர்களில் நானும் ஒருவன்.  வானத்தில் தேன் சிந்தியது என்று ஒரு அத்தியாயம் எழுதியிருப்பார்.  மிகுந்த கலை நயத்துடன் அக்காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட  அந்த  விமானத்தில் ஒரு சக பயணி எடுத்து வந்த தேன் போத்தல்  விமானம் உயரத்தில் பறக்கத்தொடங்கியதும் பவன அமுக்க வேறுபாட்டினால்  போத்தலின் அடைப்பு வெளியேறி  தேன் சிந்திவிடுகிறது.  இந்தக்காட்சியை சுவைபட சித்திரித்திருந்தார்.

சோவியத் நாட்டில்  செம்மலர்கள் காதலைக்குறிப்பதனால் தமது பயண இலக்கியத்தொடருக்கும் அவர் சிரித்தன செம்மலர்கள் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இக்காலப்பகுதியில் இலங்கையின் வடபுலத்திற்கு தென்னிலங்கையிலிருந்து முதல் தடவையாகச்சென்ற சில கவிஞர்கள், தாமும்  " சிரித்தன பனைமரங்கள் " என்ற தலைப்பில்  எழுதுவதற்கு  ஆசையாகவிருப்பதாக  குறிப்பிட்டனர். அந்தளவுக்கு க. சிவப்பிரகாசம் அக்காலப்பகுதியில் வாசகர் மத்தியில் சிறு சலனத்தை தமது எழுத்துக்களின் ஊடாக ஏற்படுத்தியிருந்தார். சிரித்தன செம்மலர்கள் நூலின் ஒவ்வொரு  அத்தியாயமும் பாரதியின் கவிதை வரிகளுடன்தான் தொடங்கியிருந்தன. அபூர்வமாகத்தான் அவர் ஆசிரிய தலையங்கம் எழுதுவார். அதற்காக அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்வதும் உண்டு. அவர் ஆங்கிலத்தில் சிந்தித்து  தமிழில் எழுதுபவர் என்றும் பத்திரிகை வட்டாரங்களில் அபிப்பிராயம்  இருந்தது.

வீரகேசரி நிறுவனத்தில் ஊழியர் நலன்புரிச்சங்கத்திலும் சிவப்பிரகாசம் தலைவராக பதவி வகித்தவர். பல நல்ல திட்டங்கள் இவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கின்றன. சக உறுப்பினர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்வார். அச்சமயம் நிறுவனத்தின்  ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா ஒருவர் வீதம் தெரிவாகி குறிப்பிட்ட சங்கத்தின் நிருவாகக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.  இந்த ஜனநாயகம் இங்கு முறையாகப் பேணப்பட்டது.  நானும் அந்தக்குழுவில் இவரது தலைமையின்  கீழ்  இயங்கியிருக்கின்றேன்.

எதிர்பாராதவிதமாக 1983 ஜூலை கலவரம் வந்தது. கொழும்பில் ஏற்பட்ட  அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை.  வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  சில நாட்கள் பத்திரிகை வெளிவரவில்லை. பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும்  இடங்களிலும் முடங்கினர்.  சிவப்பிரகாசம்  அவர்களது   வீடும் காரும் சேதமானது. அந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  தனதும்  குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக  சிந்தித்திருக்கவேண்டும். 1983 இனச்சங்காரம், பலருக்கும் எதிர்காலம்  பற்றிய  கேள்விக்குறியை  முன்வைத்தது. அவரும்  தமது குடும்பத்தினருடன்  வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது. அவருக்காக வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர் மிகவும் உருக்கமாக  உரையாற்றினார். அவர் தமது இதழியல் பணியில் காண்பித்த  நிதானத்தையே  அந்த  நிகழ்ச்சியிலும்  காண்பித்து   தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டார்.  எனினும்  அவரது கண்கள்  பனித்திருந்தன.  கடமையில்  மிகுந்த  கண்டிப்பானவர். ஆனால்,  குழந்தை உள்ளம்கொண்டவர். சக ஊழியர்களிடத்தில் பணிகள் தொடர்பாக அவர் கோபம் கொண்டாலும்  அந்தக்கோபம்  நீடிக்காது. கோபம் உள்ள இடத்தில்தானே  குணமும்  இருக்கும்  என்பார்கள்.

சில பத்திரிகையாளர்கள் எழுதிய செய்திகள் தொடர்பான அரசியல் நெருக்கடிகள் வந்த சமயங்களில்  நிருவாகத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும்  இடையிலிருந்து  மிகுந்த சாமர்த்தியமாக செயற்பட்டு,   குறிப்பிட்ட  பத்திரிகையாளர்களை  இரண்டு தரப்பிலிருந்தும்  காப்பாற்றியிருக்கிறார்.

அவர்  சிறந்த கனவானாகவே  வாழ்ந்திருப்பதாக அவருடன் நீண்ட காலம்  இணைந்து  இயங்கியவரான  திரு. து. சிவப்பிரகாசம் சொல்வார். 1972 இல் நான் வேலை தேடும் படலத்திலிருந்த காலப்பகுதியில் நீர்கொழும்பு  பிரதேச நிருபர்  பணியை  எனக்குத்தந்தவர்தான்  ஆசிரியர் க. சிவப்பிரகாசம். இவரது துணைவியார் எங்கள் ஊரில் நான் ஆரம்பக்கல்வி பயின்ற  இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அதனால் சிவப்பிரகாசம் அவர்கள் அவ்வப்போது எங்கள் ஊருக்கும் வந்திருக்கிறார்.

1977 இல் எனக்கும்  நண்பர் வீ. தனபாலசிங்கத்திற்கும் வீரகேசரியில்  ஒப்புநோக்காளர்  பணியும் தந்து,  எம்மை இதழியல் துறையின்  முதல்கட்டத்தில்  வளர்த்துவிட்டவர். தற்பொழுது கடுமையான  சுகவீனத்துடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்  என்பதை  அறிந்ததும்  ஆழ்ந்த துயரடைந்தேன்.  கடந்துசென்ற பசுமையான  நினைவுகள்  மனதில்  வந்து  அலைமோதுகின்றன.

சில  கேள்விகளுக்கு  எம்மிடம்  பதில் இல்லை.  இறைவனிடம் அந்தப்பதில்   இருக்கிறது.  ஆனால்,  அவர் எமக்குச் சொல்லமாட்டார். ஆசிரியர் க. சிவப்பிரகாசம் இலங்கை தமிழ்  இதழியல் துறைக்கு ஒரு முன்னோடியாக விளங்கியவர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.