அஞ்சலி:  கலைவளன்'  சிசு நாகேந்திரன் மறைந்தார்! பல்துறை ஆற்றல் மிக்க கலைஞரை இழந்தோம்!தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும்  நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம்  அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர்.   ஒரு சில வருடங்களுக்கு முன்னர்  அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும்  அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தது.  யாழ். நல்லூர்    இவரது  பூர்வீகம்  எனச்சொல்லப்பட்டாலும்,  பிறந்தது கேகாலையில்  1921 ஆம்  ஆண்டில்.   இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி.

அந்நாளைய  அரிவரி  தொடக்கம்  லண்டன் மற்றிக்குலேஷன்    வரையில்  யாழ்.  பரமேஸ்வரா       கல்லூரியில் ( இன்றைய யாழ்.  பல்கலைக்கழகம்)   படித்த  நாகேந்திரன்,   பின்னர்  யாழ். மத்திய  கல்லூரியில்  வர்த்தக  முகாமைத்துவம்  கற்று, London Chamber of Commerce  உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார். 1944   இல்  மன்னார்  அரசாங்க  அதிபராக  கடமையாற்றிய சிற்றம்பலம்  அவர்களிடம்  தட்டச்சாளராக  பணியாற்றும்  அரச நியமனம்   கிடைத்தது.   பின்னர்  கொழும்பில்  அரச  திணைக்களம் ஒன்றில்    பணிபுரியும்போது  கணக்காய்வாளராக  பதவி  உயர்வு பெற்றார்.    அதனைத்தொடர்ந்து,  1979  இல்   சேவையிலிருந்து ஓய்வுபெறும்   வரையில்    பல்வேறு  திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு    பிள்ளைகளின்  தந்தை.  ஒரு  சாதாரண எழுதுவினைஞருக்குரிய  ஊதியம்.   எளிமையான  வாழ்க்கை. இவற்றுக்கு   மத்தியில்  பிள்ளைகளை  படிக்கவைத்து  நல்ல நிலைமைக்கு    அவர்களை   உயர்த்தியவர். தனது வாழ்வை தமிழ் சமூகத்திற்கு  பலவழிகளிலும்  பயன்படும்விதமாக    அமைத்துக்கொண்டிருந்ததுதான்   அவரது  தனிச்சிறப்பு.    அத்துடன்  மற்றவர்களுக்கு  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இளமைக்காலத்தில்  படிப்பில்  படு  சுட்டி  எனப்பெயரெடுத்த  இவர், மாணவர்    தலைவராகவும்  பல்துறை  விளையாட்டு  வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.   உதைபந்தாட்டம்,    கரப்பந்தாட்டம்,  டெனிஸ், டேபிள்   டெனிஸ்  முதலானவற்றிலும்  வல்லவராகியிருக்கிறார். அயராது    இயங்கிய   இவரது  சூட்சுமும்  இந்தப்பின்னணிகள்தான் என்பது    எமக்குப்புரிகிறது.

இவரது  கலை  உலக  வாழ்க்கையும்  குறிப்பிடத்தகுந்தது. தேடல் நிரம்பியது.    கொழும்பில்  தொழில்  நிமித்தம்  வாழ்ந்த  காலத்தில், ‘ராஜ்  நகைச்சுவை  நாடக  மன்றம்’  இவரை உள்வாங்கியிருந்தமையால்   இம்மன்றம்  மேடையேற்றிய பல நாடகங்களில்   தோன்றினார்.    யாழ்ப்பாணம்  திரும்பியதும்  அச்சுவேலி    ராஜரட்ணத்துடன்  இணைந்து   அந்நாட்களில்  பிரபல்யமாகியிருந்த  ‘சக்கடத்தார்’ என்னும்   நாடகத்தில்  ஒரு பாத்திரமானார். இந்நாடகம்  ஆயிரம்  தடவைகளுக்கு  மேல்  மேடையேறியிருக்கும்.  யாழ்ப்பாணத்தில்  கலைஞர்கள்   தாசீசியஸ்,   குழந்தை   சண்முகலிங்கம்,  திருநாவுக்கரசு                ஆகியோருடனும்  இணைந்து இயங்கியிருக்கிறார்.    ரகுநாதனின்  நிர்மலா, வி. எஸ். துரைராஜா தயாரித்த   குத்துவிளக்கு  முதலான    திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.

ஆச்சிக்குச்சொல்லாதை,    வா  கோட்டடிக்கு,  கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல,   தொடாதே,  அவமானம்,  ஊர் சிரிக்குது,    அது  அப்ப...  இது  இப்ப...  முதலான  பல  நகைச்சுவை நாடகங்களிலும்    நடித்திருக்கும்  நாகேந்திரன்,   யாழ்.  திருநெல்வேலி நாடக   அரங்கக் கல்லூரியினால்  தயாரிக்கப்பட்ட  வையத்துள் தெய்வம்,  கந்தன்  கருணை,   அன்னத்துக்கு  அரோஹரா,   கூடி விளையாடு   பாப்பா,   இனி   என்ன  கலியாணம்,   கவிஞர்  அம்பியின் வேதாளம்  சொன்ன  கதை  முதலானவற்றிலும்  நடித்திருப்பதுடன், பொறுத்தது  போதும்,   கோடை   ஆகியவற்றின் மேடையேற்றத்தின்போது   அரங்க  நிர்மாணப்பணியையும்  திறம்பட மேற்கொண்டிருக்கிறார். அந்நாட்களில்  தமிழ்  வானொலி  நேயர்களின்  விருப்பத்துக்குரிய நாடகங்களாகத் திகழ்ந்த  சிறாப்பர்  குடும்பம்,   லண்டன்  கந்தையா முதலானவற்றிலும்   நடித்திருக்கிறார். 

இங்கிலாந்திலும்  சிறிது  காலம்  வாழ்ந்திருக்கும்  இவர்,  அங்கு ‘களரி’ நாடகப்பள்ளியின்   சார்பாக  மேடையேறிய  புதியதொரு வீடு, அபசுரம்,    எந்தையும்  தாயும்  முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.  1994  ஆம்   ஆண்டு  இங்கிலாந்திலிருந்து  விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்த   தருணத்தில்  கலைஞர் தாசீசியஸ்  உட்பட  பலர்  இவருக்கு  அளித்த  பிரிவுபசார வைபவத்தில் ‘கலைவளன்’  என்ற  பட்டமளிக்கப்பட்டார். இவ்வாறு  ஒரு  நாடகக்  கலைஞனாக  தமது இருப்பை    வெளிப்படுத்திக்கொண்டவர்,   அவுஸ்திரேலியாவுக்கு  புலம் பெயர்ந்த   பின்னர்  தன்னை   ஒரு  எழுத்தாளனாகவும் நிலைநிறுத்திக்கொண்டார்.

சிசு. நாகேந்திரன் அவர்கள், தமது பேத்திக்கு அந்தக்கால    யாழ்ப்பாணம்  எப்படி  இருந்தது...? எனச்சொல்லிக்கொடுப்பதற்காக   எழுதிய  கட்டுரைகளே  பின்னர் சிட்னியிலிருந்து    வெளியாகும்  கலப்பை   இதழில்  பிரசுரமானது.  குறிப்பிட்ட  கட்டுரைகளே  பின்னர்  அதே  பெயரில்  தமிழகத்தில் நூலுருவாகி   பலரதும்  பாராட்டையும்  விமர்சனங்களையும்  பெற்றது. இந்நூலுக்கு    கிடைத்த  வரவேற்பினால்  உற்சாகமடைந்த  சிசு. நாகேந்திரன்,    பிறந்த  மண்ணும்  புகலிடமும்  என்னும்  மற்றுமொரு  கட்டுரைத் தொகுதியையும்  வரவாக்கினார்.   இந்நூலை    அவுஸ்திரேலிய  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் வெளியிட்டது.  

நாடகக்கலைஞனாக   அறிமுகமாகி  எழுத்தாளனாக  தன்னை வளர்த்துக் கொண்ட  சிசு. நகேந்திரன்,   சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார்.   சில  வருடங்களுக்கு  முன்னர்  ஆரோக்கியமாக  வாழ்வதற்குரிய  சில உடற்பயிற்சிகள்   பற்றிய  இவரது  பயிற்சியும்  காட்சியும்  இடம்பெற்ற    இறுவட்டையும்  வெளியிட்டார். அவுஸ்திரேலியாவில்      தமிழ்   இலக்கிய  கலைச்சங்கத்தில் மட்டுமல்ல,   விக்ரோரியா  ஈழத் தமிழ்ச்சங்கம்,   தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,    இலங்கை   மாணவர்  கல்வி  நிதியம்,  விக்ரோரியா  கே.சி. தமிழ் மன்றம் ஆகியனவற்றிலும்       இதயசுத்தியோடு  இயங்கியவர். அவுஸ்திரேலியா கம்பன் கழகத்தின் மாருதி விருதும் பெற்றவர். முன்னர் எழுதிய " பழகும் தமிழ்ச்சொற்களின் மொழி மாற்று அகராதி - ( தமிழ்- ஆங்கிலம்) நூலின் இரண்டாம் பாகமும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தவர். அவரைக்காணும் தோறும் எமக்கு  மகாகவி பாரதியின்

" தேடிச்சோறு  நிதந்தின்று - பல
சின்னஞ்  சிறு கதைகள்பேசி - மனம்
வாடித்துன்பமிக  உழன்று - பிறர்
வாடப்  பல  செயல்கள்  செய்து - நரை
கூடிக்  கிழப்பருவம்  எய்தி -கொடுங்
கூற்றுக்  கிரையெனப்பின்  மாயும் - பல
வேடிக்கை   மனிதரைப்போலே - நான்
வீழ்வே னென்று   நினைத்தாயோ  "

வரிகள்தான் நினைவுக்கு வரும்.

சில தினங்களுக்கு முன்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடும்போது அவருக்கு ஒரு நல்ல செய்தியை கூறியிருந்தேன். அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில்  நீண்ட காலமாக அங்கம் வகித்து சில பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்  சிசு அய்யா அவர்கள் உதவியவர். அவரது உதவியினால் தனது கல்வியைத் தொடர்ந்த  யாழ். மாவட்ட மாணவர் ஒருவர்,  கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ. த. உயர்தரப்பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கும் நற்செய்தியை அவருடன்  பகிர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட மாணவருக்கு தனது நல்வாழ்த்துக்களையும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும்  தெரிவுக்குமாறு சொன்னார். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளராகவும் இறுதிவரையில் இணைந்திருந்தவர். சுமார் 99 ஆண்டுகள் முழுமையான வாழ்வு வாழ்ந்து விடைபெற்றிருக்கும் ஆளுமை கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களின் நினைவுகளே இனி எம்மிடம் எஞ்சியிருக்கும். எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது. முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்  - உள்ளே