மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு அண்மையில் வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் 2020 ஆம் ஆண்டு முதல் மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் உதவ முன்வந்துள்ளது.
மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு
நுவரேலியா மாவட்டத்தில் முதல்கட்டமாக நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவருகிறது.

இந்த அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், மலையக தாய்மாருக்கான விழிப்புணர்வு , பாடசாலை மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல், முன்பள்ளி உதவிகள், பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் வழங்குதல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கள ஆய்வுகள் முதலான வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றது.
மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு
அண்மையில் நடைபெற்ற மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சி, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தாய்மார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம்.ஜீ. அமரசிறி பியதாஸ, மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். மோகன்ராஜ், அபிவிருத்தி கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஸ் ராஜ், உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி பாமினி செல்லத்துரை, மற்றும் ஆசிரியை திருமதி ஷாதினி பிரேம்குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளையும் பதிவேடுகளையும் வழங்கினர்.

இவர்களில் செல்வி பாமினி செல்லத்துரை, இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை முன்னர் பெற்று கல்லூரி கல்வியையும் பல்கலைக்கழக கற்கை நெறியையும் பூர்த்தி செய்து, தற்போது நுவரேலியா கல்வி வலயத்தின் உதவிப்பணிப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வவுனியாவில்

வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதிக்கொடுப்பனவு வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை 14 ஆம் திகதி வழங்கப்பட்டது.

கடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமகாலத்தில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் கொரனோ வைரஸ் தாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் விழிப்புணர்வு விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிறுவனத்தின் முகாமைக் குழு உறுப்பினர் திரு. அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் மாணவர்களுக்கான 2020 ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான நிதியுதவிகளை வழங்கினர்.

பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி வரையில் இயங்கமுடியாத சூழல் தோன்றியிருப்பதனால், இந்த நிகழ்வு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வுஅவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலமாக தங்கு தடையின்றி இயங்கி, இலங்கையில் நீடித்த போரில் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களினதும் கடந்த சில வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களினதும் கல்வி இடைநிறுத்தப்படலாகாது என்ற நோக்கத்துடன் ஆதரவுக்கரம் நீட்டிவரும் அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் இன்றைய நிகழ்வில் மாணவர்கள் – தாய்மார் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவி வழங்கப்படும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாணவர்கள் சிலரதும் கண்காணிப்பாளர் அமைப்பாகவும் இயங்கிவருகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.