- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) - ஆதவன் கதிரேசர்பிள்ளை என்னும் பெயர் க.ஆதவன் என்னும் பெயரில்  தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். தீர்த்தக்கரை, புதுசு எனச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களில் இவரது பல்வகைப்பட்ட படைப்புகள் வெளியாகியுள்ளன. நோர்வேயிலிருந்து வெளியான 'சுவடுகள் ' சஞ்சிகையில் வெளியான இவரது 'மண்மணம்' புகலிடத் தமிழ் இலக்கியத்தில் வெளியான முக்கியமான நாவல்களிலொன்று. தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தாங்கிய  'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்த 'மெய்யியல் கற்றல் கற்பித்தல்' என்னும் சிறு தொடரும் முக்கியமான இவரது பங்களிப்புகளிலொன்று. அத்தொடர் முழுமையாக இங்கே தரப்படுகின்றது.


மெய்யியலை எவ்வாறு கற்பிக்கலாம்? சரி, பிரச்சனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த...உங்களால் -பிரச்சினை-  என்று கருதப்பட்ட ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள். மறந்தும் -என்றால் என்ன?- என்கிறதும், -எங்கே?- என்பதுமான கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்க வேண்டாம். நீங்கள் இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே.. அக்கணத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் நீங்கள் அறியாமலேயே.

உதாரணம்:

1. புவியீர்ப்பு என்றால் என்ன?  2. கடவுள் எங்கே இருக்கிறார்?.

உதாரணம் இரண்டிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே .. நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். அதாவது...ஒன்றின் -இருப்பு- நீங்கள் அறியாமலே -இருப்பு- உங்கள் மேல் சுமத்தப்பட்டது.

இது போலவே மனம் எங்கே இருக்கிறது? என்ற கேள்விக்கும் விடையளிக்கும் போதே..-மனம்-என ஒன்று உண்டென்றும் அதன் இருப்பையும் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம். இனி, என்றால் என்ன? என்ற கேள்வியை எடுத்தால்…..உதாரணமாக… -அ- என ஒரு விடயம் இருக்கின்றது. –அ- விற்குள் 1------10 விடயங்கள் இருக்கின்றன எனக் கொண்டால், -அ- என்றால் என்ன என்பதற்கு 10 விடயங்களையும் கூறுதல் வேண்டுமல்லவா? 10 விடயங்களையும் ஒருவர் அறியாமலேயே –அ- பற்றிச் சொல்லுதல் முழுமையான அறிவில்லையல்லவா? 10 விடயங்களையும் முழுமையாக அறியமுடியுமா எனும் கேள்வியும் இங்கே எழுகிறது அல்லவா?

ஆகவே என்றால் என்ன?  எங்கே இருக்கிறது? போன்ற கேள்விகள் உண்மையான அறிவாகுமா? என்ற கேள்வியை மெய்யியல் கேட்டது; கேட்கிறது. கேள்வி மீதும் கேள்வி எழுப்புகிற ஒரே துறை மெய்யியலாகும்- என்று தத்துவஞானிகள் பெருமை கொள்வர். அப்போ அறிவெனப்படுவது யாது? அதாவது உறுதியான அறிவெனப்படுவது என்ன என்ற கேள்வி அன்றே எழுந்தது.

வரைவிலக்கணம் சொல்வது பற்றிப் பலர் பேசிக் கொண்டனர் பின்னாளில். - வரைவிலணக்கம்-  இதற்கென்ன வரைவிலக்கணம் என்று கேட்டார்கள். வரைவிலக்கணம் கூறுவது என்பது……. ஒன்றைச் சுட்டி, இதுவே இதுவென்றும்.. இதுவல்லாவிடில் அது என்றும் அதுவல்லாவிடில் இது என்றும் சொல்லப்பட்டது. ஒன்றின் பொதுவான இயல்புகளையும் சிறப்பான இயல்புகளையும் சொல்லுதல்- என்பது வரைவிலக்கணமாகும்  என்றும் சொல்லப்பட்டது.

மெய்யியல் என்றால் என்ன என்பதற்கு இன்றுவரை வரைவிலக்கணம் இல்லை. தத்துவம் என்றால் சொல்பவனுக்கும் விளங்காமல், கேட்பவனுக்கும் விளங்காமல் இருக்கும் ஒரு உரைநடை  என்கிற ஒரு பழைய சொல்லாடல் இன்றுவரை இருக்கிறது.  அப்போ என்ன செய்யலாம் ? இது என்ன ? மெய்யியலாளர் என அறியப்பட்டோரிடம் போகலாம்.

1. ஃபைதோகிரஸ் சொல்கிறார்

மெய்யியலாளர்கள் உலகின் பார்வையாளர்கள். அவர்கள் பங்காளிகள் அல்ல ஆனால் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை உதாரணமாகச் சொன்னார். அது மிகப் பிரபல்யம். அவர் சொன்னார்…ஒரு பெரிய ஸ்ரேடியம் அங்கே போட்டி நடைபெறுகிறது. விளையாடுபவர்களின் நோக்கம் தாங்கள் வெல்லவேண்டும் என்பது. இல்லாவிடில் அவர்கள் விளையாட வந்திருக்க மாட்டார்கள். அது போட்டியும் அல்ல. போட்டிக்கு ஒரு நடுவர் இருப்பார். அவர் இருந்தேயாகவேண்டும். இல்லையேல் யார் வென்றார்கள் என எவ்வாறு தீர்மானிக்க முடியும்?சரி, பார்வையாளருக்கு ஒரு த்றில். யார் வெல்வார்கள் என்று. ஆகவே பார்வையாளர்கள் கூடுகின்றனர். அங்கே பார்வையாளருக்கு ஐஸ்கிறீம் விற்க ஒரு சிறுவன் வருகிறான். அவனது நோக்கம் விற்பனை மட்டுமே. அவனுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பே இல்லை. இந்த விளையாட்டுத் திடலைக் கட்டியவனின் நோக்கம் என்ன? கட்டடம் உறுதியாய் இருக்கவேண்டும் என்பது. விளையாட்டெல்லாம் முடிந்தபின்னர் குப்பைகளைப் பொறுக்கவெனச் சிலர் வருவார்கள். அவர்களுக்கும் விளையாட்டிற்கும் தொடர்பேயில்லை. இப்படியே பலரை ஒரு ஒலிம்பிக் திடலில் காணலாம்.

இவை எல்லாவற்றையுமே அவதானிக்கவும் பார்க்கவும் எந்த நோக்கமுமில்லாமல் ஒருவன் வருகிறான். அவனே மெய்யியலாளன்  தத்துவவியலாளன் என்கிறார்  ஃபைதோகிரஸ்! ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை செம்பக்கத்தின் வர்க்கத்திற்குச் சமனாகும் என்ற தேற்றத்தை உலகிற்குச் சொன்னவர்.

உண்மை  என ஒன்று இருப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாயும் மெய்யியல் விளங்குகிறது எனச் சொல்லிக்கொண்டு அக்காலத்தில் கிரேக்கர்கள் சிலர் திரிந்தனர். மெய்யியலாளர் என்போர் உண்மையின் காவல் நாய்கள் என்றும், எப்பொழுது உண்மைக்குப் பங்கம் வருகிறதோ அப்பொழுது அவர்கள் விழிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. மிகத் தலைக்கனம் பிடித்தவர்களாயும் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

டையோஜனிஸ் என்பவர் மகா அலெக்சாண்டரின் குருவாய் இருந்தவர். அவரைப் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்புண்டு. ஒரு முறை டையோஜனிஸ், சிறு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலெங்கும் ஒலிவ் எண்ணெயைப் பூசிக்கொண்டும் ஏதன்ஸ் கடற்கரையில் சூரியக் குளியல் செய்து கொண்டுமிருந்தார்.

பல நாடுகளைப் போரில் வென்று சக்ரவர்த்தியாகித் தன் பரிவாரங்களுடன் ஏதன்ஸ் வந்தான் அலெக்ஸ்சாந்தர். வந்தவுடன் எங்கே என் குருநாதர் டையோசனிஸ் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கவேண்டுமெனக் கேட்டான். அவர் கடற்கரையில் சூரியக்குளியல் செய்கிறார் எனச் சொல்லப்பட்டது அவனுக்கு. அரண்மனைக்குச் செல்லாது கடற்கரை நோக்கிச் சென்றான் பாரிய பட்டாளத்துடன் அலெக்சாண்டர்.

"குருவே டையோஜனிஸ், உலகம் முழுவதும் வென்று வந்தேன். எல்லாவுலகும் என் காலடிக்கீழ். நீங்கள் என் குரு. உங்களுக்கு என்ன வேண்டும்..? கேளுங்கள்"  என்றான்.  "சற்றுத் தள்ளி நில். அந்தச் சூரியஒளி என்மேற் படட்டும் முதலில், அப்புறம் பேசலாம்" என்றார் டையோஜனிஸ். இவர்தான் பகலிலும் கையில் விளக்குடன் மனிதனைத் தேடித் திரிந்தார்.

சோக்கிரட்டீசுக்குப் பைத்தியம் பிடித்தால் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டுமாயின், டையோஜனிசைப் பாருங்கள் என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார். மிக எளிமையாய் சில விடயங்களை முதன்முதலாக டையோஜனிஸ் சொன்னார்.

அவர் சொன்னது என்ன தெரியுமா..? 'மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு' என்பதுதான்.


மூவரைத்தாண்டி மேலைத்தேய மெய்யியல் நகராது.

1. சோக்கிரட்டீஸ்
2. பிளேட்டோ
3. அரிஸ்ரோற்றில்

1) சோக்கிரட்டீஸ்

சோக்கிரட்டீஸ்.

இவர் ஒரு பிரசங்கி. இவர் ஒரு நூலையும் எழுதவில்லை. இவரது சீடன் பிளேட்டோ. இவர் சொன்னதாக பிளேட்டோ எழுதியவைகளே இவரது தத்துவம். இவருக்கு என்ன தெரியும் என்று இவரைக் கேட்டபொழுது 'எனக்கொன்றும் தெரியாது என்று எனக்குத் தெரியும்'  என்று பதிலிறுத்தார்.

அதாவது தெரிந்தவற்றுக்கும் தெரியாதவற்றும் எப்படி ஒரு எல்லையை வகுக்கமுடியும் என்று கேட்டார். அறிவின் வரையறை என்ன? அதன் எல்லை என்ன? ஏன் என்று கேள் என்றார். உன்னை அறி என்றார். ஒரு பொழுதேனும் அவர் தான் சொன்னதிலிருந்து பின் வாங்கவில்லை. தப்புவதற்கு ஏகப்பட்ட வழியிருந்தும் அவர் தப்பவில்லை. நஞ்சைத் தானுண்டார். இறந்து போனார்.

நீதி பற்றி இவர் சொன்னவைகள் ஏராளம். நீதி பற்றித் தெரியாத ஒருவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியாகுமா என்றும் கேட்டார்.

2) பிளேட்டோ.

இவர் இல்லாவிடில் அறிவு நகர்ந்திருக்காது. "ஞானம்- என்பது அறிவு" என்றார். தனது குரு சோக்கிரட்டீஸ் சொன்னதை புத்தகமாக எழுதினார். 'குடியரசு' எனும் மாபெரும் நூலை எழுதினார். தூய கணிதத்தில் அளவிலாப் பற்றுக் கொண்டிருந்தார். முதன் முதலில் 'பல்கலைக் கழகம்' ஸ்தாபித்தார். அந்தப் பல்கலைக் கழத்தில் அவர் ஒரு அறிவித்தல் எழுதியிருந்தார். 'தூய கணிதம் தெரியாதவன் இங்கே வரக்கூடாது' என்று

அப்போ அங்கே அரிஸ்டோட்டில் மாணாக்கராய் இருந்தார்.  "உனக்கு தூயகணிதம் தெரியாதே. நீ வெளியே போ" என்றாராம். அரிஸ்டோட்டில் சொன்னாராம் "எனக்கு தருக்கவியல் தெரியும்" என்று

3) அரிஸ்டோட்டில்

முதன் முதலில் தருக்கவியலை உலகிற்குச் சொன்னார். 'கவிதையியல்' எனும் நூலை எழுதிய மகானும் அவர்தான். சரி. இதெல்லாம் நீங்கள் கூகிளில் அல்லது விக்கியில் அறியலாம். நீங்கள் அறிய வேண்டிய மிகப் பெரிய விடயம் இதுதான்

அறிவு

1. அனுபவ அறிவு
2. ஞான அறிவு

என மாபெரும் பிரிவுகளாய் பிரிந்து கிடக்கிறது அன்றிலிருந்து.


டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.டேக்காட் என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.

1) அறிவின் உறுதி என்பது 2ம்2ம் 4 என்பதுபோல உறுதியாய் இருக்கவேணும். அரக்கக்கூடாது. தளம்பக்கூடாது.
2) அறிவிற்கான வரையறை என்பது ஒரு பொழுதும் ஐயப்படலாகாது.

ஐயப்படக் கூடிய அறிவு அறிவில்லை என்றார். ஐயவாதத்தின் தந்தை எனவும் அவரை அழைத்தார்கள். ஐயவாதம் அல்லது சந்தேகவாதம் என்பது மிகவும் சுவாரசியமானது.

டேக்காட் சொல்லும் சந்தேகவாதம் இதுதான். நான் எல்லாவற்றையும் ஐயுறுகிறேன். ஐயப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. எல்லா அறிவுமே ஐயுறக்கூடியது. அப்போ என்னதான் ஐயுறமுடியா அறிவு?

இறுதியில் அவர் ஒரு முடிபுக்கு வந்தார். அது என்ன தெரியுமா… 'நான் எல்லாவற்றிலும் ஐயுறுகிறேன். இப்போதைக்கு இதுவே ஐயுறா என் அறிவு' என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. 'சந்தேகப்படுதல் என்பது அறிவின் செயற்பாடு. சந்தேகப்பட முடியா அறிவென்பது சாத்தியமில்லை. இந்த அறிவுச் செயற்பாட்டுக்கு ஒர் இடம்- வேண்டும் இந்தச் செயற்பாட்டை நீங்கள் உள்ளுதல் (சிந்தனை) எனக் கொள்வீர்களானால் அது இருக்க வேண்டும். இல்லாத ஒன்று, ஒன்றையுமே செய்யமுடியாது ஆதலால் அது இருக்க வேணும்' என்று சொல்லிவிட்டு 'உள்ளுகிறேன் ஆதலால் உள்ளேன்'  என்றார்.

டேக்காட் இல்லாமல் எந்த அறிவுத்தொகுதியும் நகர்வதாயில்லை. கணிதத்தில் அவர் செய்தது 'தெக்காட்டுப் பெருக்கம்' என அழைக்கப்படுகிறது. உளவியலில் 'இருமைவாதத்தை'  அவர் நிறுவியவிதம் அற்புதம். உடலுக்கும் உளத்துக்கும் என்ன தொடர்பு என்பதை- ஒரு இயந்திரத்தினுள் பேய் குடி கொண்டால் எப்படியிருக்குமோ அப்படி என்றார்.

இருப்பு வாதத்தின் தந்தையும் அவரே. இவருக்கு முதல் 'இருப்புவாதம்' என்கிற பேச்சு எழவில்லை. எழுந்தது டென்மார்க்கில். (சோர்ன் கியக்கக்கோட் பின்னாளில் அது பற்றி பிறகு பேசலாம்) 'சந்தேகவாத'மும் அப்படித்தான். ஏன் என்று கேட்டார்களே ஒழிய அறிவைச் சந்தேகப்பட வைத்த மாமேதை.

தனிப்பட்டமுறையில் எனக்கு டேக்காட்டிடம் பிடித்தது: 'எதையுமே சந்தேகப்படு. எதுவும் உறுதியான அறிவல்ல'


லுட்விக் விற்கிஸ்ரைன்ற்சிலபோதுகளில் ஏன் மெய்யியலைக் கற்கவேணும் இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் பலர் கேட்பர். மெய்யிலுக்கான பயன்பாடு என்ன? தத்துவத்தால் என்ன பயன்? பயன்பாட்டு வாதம் ஒரு புறமிருக்கட்டும். லுட்விக் விற்கிஸ்ரைன்ற் எனும் மொழியியல் மெய்யியலாளரிடம் போகலாம். அவர் சொன்னார்- ஒரு போத்தலுக்குள் ஒரு ஈ அகப்பட்டுவிட்டது அந்த ஈ ஐ எவ்வாறு விடுவிக்கலாம். இதுவே மெய்யியல். எல்லோரும் அகப்பட்டுவிட்ட ஈ ஆ மெய்யியல்?

அவர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மெய்யிலாளர் என்பது என் கணிப்பு. பாரிய பிரச்சினைகளை அவர் தீர்த்தார்.

1) தனியன் ஒன்றைச் சுட்டும் பொழுது அது வெறுமனே தனியனைச் சுட்டுகிறதா.? அல்லது பொதுவைச் சுட்டுகிறதா..? உதாரணமாக – மரம் – எனும் தனியனை நாம் சுட்டும் பொழுது.. அந்த மரம் இந்த மரம் எனச் சொல்கிறோம். ஆனால் –மரம்-  என்பது எதைச் சுட்டுகிறது ? பொதுக் கருத்து என்பது என்ன..? பொதுவிலே ஒரு கருத்து இருக்கமுடியுமா..? -அழகு- என்பது தனிச்சொல்லா..? பொதுச் சொல்லா..? இப்படியாகப் பல கேள்விகளை அவர் கேட்டார். ஈற்றில் சொல் = அர்த்தம் = பயன்பாடு என்கிற சமன்பாட்டை நிறுவினார். இவருக்கு முன்னோர்கள் சொல்=அர்த்தம் என்பதுடன் நின்றுவிட்டனர். இவரே உலகிற்கு முதன்முதலில் சொன்னார் சொல்லுக்கு அர்த்தம் மட்டுமில்லை அதற்கொரு பயன்பாடும் இருக்கிறதென்று.

'கூப்பிட்டுத்தொலை' -  இந்தச் சொல்லின் அளவீடு என்ன? எத்தனை மீற்றர்?  'அந்திமாலை' - இந்தச் சொல்லின் உண்மையான அர்த்தம் என்ன? -இளவேனில்- இப்படியே இவர் பல உதாரணங்களைச் சொல்வார். இவரது புகழ்பெற்ற உதாரணம் -பல்லுக்கொதி- பல்வலி - என்பது பொதுச் சொல்லா தனிச்சொல்லா?  'பல்வலியை உணரமுடியும் சொல்லமுடியுமா' என்று இவர் கேட்டார்.

'உனக்கு நீ யே பேசமுடியுமா இது சாத்தியமா'? மொழி பொதுவாக இல்லாமல் தனியனுக்கு மட்டும் உரித்தாக முடியாது. அது தன் பயன்பாட்டில் மட்டுமே அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. அர்த்தம் என்பது ஒரு சொல்லின் பயன்பாடு. தனிச்சுட்டு தனிச் சுட்டுத்தான். பொதுச் சொல் என்பது அதனதன் பாரம்பரியம் சார்ந்தது.

'பாரம்பரியமும் தொடர் அர்த்தங்களுமே சொல்லாகிறது அதுவே மொழி. இது சிக்கிலானது. இங்கே தர்க்கத்தைக் கொண்டு நிறுவுவது இயலாமற் போகலாம்' என்று சொன்னார் விற்கின்ஸ்ரைன். கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில்- தர்க்க அணுவியல் வாதத்தின் தந்தை பேர்ட்ரண்ட் ரசலுடன் நேரடியாகவே மோதினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மிகத்தலைக்கனம் பொருந்தியவர். என்றும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர் என்றும் கணிக்கப்பட்டார். மிக இளவயதில் இறந்து போனார்.

நோர்வே பேர்கன் பல்கலைக்கழகத்திலும் அவர் வாழ்ந்திருக்கிறார். நான் அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தத்துவம் பயிற்றுவித்த ஆசான் காசிநாதர் இவரது பாரம்பரியத்தில் வந்தவர். அதனாலும் இவரை எனக்குப் பிடிக்கும்.
அப்பாடா…  இவரின்றி மெய்யியலுலகே அசையாதென்பர் இவரை அறிந்தோர். இரு பெரும் பிரிவுகளாய் அறிவுலகு பிரிந்திருந்தது.

1. ஞான அறிவு
2. அனுபவ அறிவு.

2 ம் 2 ம் நாலு என்பது அனுபவ அறிவல்ல. 2 மனிதரும் 2 மனிதரும் 4 மனிதராய் அதோ தெரிகிறார்கள் பார் என்பது அனுபவ அறிவு. முக்கோணம் 3 கோணங்களை உடையது. இதற்கு அனுபவம் தேவையில்லை. முக்கோணம் பற்றிய ஞான அறிவு வேண்டும். ஆனால், அந்த முக்கோணம் சற்றுச் சரிந்திருக்கிறதென்றால்…அதற்கு அனுபவ அறிவு வேண்டும்.

1. உயரமான மனிதன் ஒரு மனிதன். (ஞான அறிவு)
2. உயரமான மனிதன் நீலச் சட்டை அணிந்துள்ள ஒரு மனிதன். (அனுபவ அறிவு)

இப்படியே அறிவானது பெரும் பிரிவாய் பிளவுண்டிருந்தது. இம்மானுவெல் கான்ற்-கான்ற்- இதனைத் தெளிவு படுத்தினார். இவர் –தோற்றப்பாடு- எனும் கோட்பாட்டைச் சொன்னார். -பினோமினோலஜி- அதாவது….அறிவின் கூறுகளை கோடிட்ட இரு பெரும் பிளவுகளாகப் பார்க்க முடியாது. ஒன்றின் தோற்றம் ஒன்றின் காட்சி ஞான அறிவினாலும் அனுபவ அறிவினாலும் இரண்டும் இணைந்தே மெய்ப்பிக்க முடியும் என்றார்.

மிக மிக செம்மையான தெளிவான மெய்யியலாளர் என இவரைச் சொல்வர். இவர் நேரந் தவறமாட்டார். இவர் நடந்து போகும்போது அவ்வூர் மக்கள் தமது கடிகாரத்தை சரியான நேரத்தில் விடுவார்களாம்.

(கான்ற் பற்றி மிக நுட்பமாகவும் ஆழமாயும் பின்னர் எழுதுவேன். அதுவரை….kant Immanuel என்று கூகிளில் தேடினால் வந்து குவியும்.) இவர் நடுநிலையாய் செயற்பட்டார். நடுநிலை என்பதைவிட –நடு- -மத்தி- என்பதை அறிவுறுத்துகிறார்.

ஞானமும் தேவை அனுபவமும் தேவை என்கிறார். அதுவே அவரது தோற்றப்பாட்டு வாதம். (நடுநிலை என்பதே இல்லையென மாக்சியர்கள் தற்போதும் அப்போதும் சொல்வர். கான்ற் ஹேகலுக்கு முந்தியவர் மார்க்ஸ் ஹேகலுக்குப் பிந்தியவர்)


இனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா
என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா..? -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.

ஆக, ஒன்றினது இருப்பை அதன் இருப்புத்தான் தீர்மானிக்கிறது எனச் சொல்வோர் –இருப்புவாதிகள்- என அழைக்கப்பட்டனர். மற்றையோர் –சாரவாதிகள்- என அழைக்கப்பட்டனர். இருப்புவாதிகள்—எக்சிஸ்ரென்சியலிஸ்ற்.
சாரவாதிகள்—எசென்ஸ்சியலிஸ்ற்.

இருப்புவாதிகளும் தங்களுக்குள் மோதுண்டு இரு பெரும் பிரிவாகினர்.

1. தீயிஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக்கொண்ட இருப்புவாதிகள்)
2. ஏதீஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக் கொள்ளாத இருப்புவாதிகள்)

இதனைத் தமிழில்- ஆத்திக இருப்புவாதிகள் , நாத்திக இருப்புவாதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.

சோர்ண் கியர்க்ககோட்ஆத்திக இருப்புவாதிகளில் மிகப் பிரபல்யமானவர் நான் வாழும் நாட்டில்(டென்மார்க்) வாழ்ந்த சோர்ண் கியர்க்ககோட் என்பவர். இவரை இருப்புவாதத்தின் தந்தை என நவீன மெய்யியலாளர் அழைப்பர். இவர் பாகம் பாகமாய் எழுதிய நூல்கள்
டென்மார்க்கின் மூலைமுடுக்கிலுள்ள கிராம நூல்நிலையங்களிற்கூடக் கிடைக்கும். பல மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும். மேலதிக விபரங்கள் வேண்டுவோருக்காகக் கீழுள்ள இணைப்புகள்:

Kierkegaard:
http://www.age-of-the-sage.org/philosophy/kierkegaard.html
http://en.wikipedia.org/wiki/S%C3%B8ren_Kierkegaard
http://en.wikipedia.org/wiki/S%C3%B8ren_Kierkegaard…
http://en.wikipedia.org/…/File:S%C3%B8ren_Kierkegaard_i_Cor…

Født: 5. maj 1813, København
1. Død: 11. november 1855, København
2. Begravet: Assistens Kirkegård, København
3. Søskende: P.C. Kierkegaard
4. Forældre: Michael Pedersen Kierkegaard, Ane Sørensdatter Lund Kierkegaard

For both Kierkegaard and Nietzsche, the content of a fulfilling life is not simply handed down from some outside source. Rather, it must be actively taken up. Nietzsche explains that one must create a fulfilling life and then he writes: “It will be the strong and domineering natures that enjoy their finest gaiety in such constraint and perfection under a law of their own” (GS, §290). Kierkegaard’s story is less active—one must “let [his commitment] twine in countless coils…” (F&T, 71, emphasis added)—but it is still conditional upon his choice. A fulfilling life must be chosen and created. Self-constraint is a mark of strength for both Kierkegaard and Nietzsche.

Kierkegaard and Nietzsche disagree on the importance of a constant self in living a fulfilling life. However, they agree on more than a few points along the way. Specifically, they both value strength, discipline, risk, and self-imposed constraints. They agree that a desire for certainty can hold one back from living a fulfilling life. The insights of both thinkers are much needed in modern society ( https://arigiddesignator.wordpress.com/…/kierkegaard-and-n…/).

முடிந்தவரை உங்களுக்குத் தமிழில் தர முனைகிறேன். காத்திருங்கள்….என் அன்புடை நண்பர்களே!