dr_n_subramaniyan.jpg - 12.37 Kbdr_kauslaya_subramaniyan5.png - 47.49 Kbலங்கை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியானது 2010ஆம் ஆண்டிலே தனது நூறாவது ஆண்டை நிறைவுசெய்தது. அச்சந்தர்ப்பத்திலே அதன் கல்விசார் பன்முக இயங்குநிலைகளின் சாதனைகளை  நுனித்து நோக்கி மதிப்பிடும் முயற்சிகள் அதன் பழையமாணவர்களால் அனைத்துலக மட்டத்தில் பல நிலைகளில் முன்னெடுக்கப் பட்டன.  அக்கட்டத்திலே கனடாவில் வெளிவந்த  மகாஜனன்   நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டு, அதில் இடம்பெற்ற கட்டுரை இது.  அக்கல்லூரி சார்ந்தோர் தமிழ் இலக்கியம் சார்ந்து இயங்கிநின்ற மற்றும்  இயங்கி நிற்கின்ற நிலைகள் பற்றிய ஒரு சுருக்கமான  வரலாற்றுப்  பார்வையாக இது அமைகின்றது. இத்தலைப்பிலான ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எமக்கு விதைத்தவர் மேற்படி கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான  மதிப்புயர் திரு.பொ. கனகசபாபதி  அவர்களாவார்.  அவருக்கு எமதுமனம்நிறைந்த நன்றியைத ;தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையை (சில புதுத்தகவல்களையும் உள்ளடக்கியதாக) இங்கு மீள்பிரசுரமாக முன்வைக்கிறோம்.

1. ஈழத்து இலக்கியமும்  மகாஜனக் கல்லூரியும் - ஒரு தொடக்கநிலைக் குறிப்பு

    ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமைகொண்டது. சங்கப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடரும்  இந்த மரபானது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘நவீன இலக்கியம்’   எனப்படும் புதிய வரலாற்றுப் பாதையில் அடி பதிக்கத் தொடங்கியது. இப்புதிய பாதையிலே கடந்த நூறாண்டுக்காலப்பகுதியில் ஈழத்திலக்கியம் கடந்துவந்த வரலாற்றை மூன்று முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம். 

     இதன் முதலாவது கட்டம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முதல் 40ஆண்டுகள்வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாகும். ஈழத்துத் தமிழிலக்கியம் பாரம்பரிய குணாம்சங்களிலிருந்து படிப்படியாக விடுதலை எய்தி நவீனமயப்படத் தொடங்கிய கால கட்டம் இது. மேலைப்புலக் கல்விமுறைமையால் கிட்டிய ‘சீர்திருத்த சிந்தனை’களே இந்த நவீனமயப்பாட்டுக்கான அடிப்படைகளாக அமைந்தன.  சைவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்; ஆகிய சமயங்களைச்  சார்ந்த  நடுத்தரவர்க்க ‘கற்றோர் குழா’த்தினருள் (Elite Group) ஒரு சாரார் (தத்தம் சமய அடிப்படைகளில் ஆழமாகக் காலூன்றி நின்றவாறே)  ஆங்கிலக் கல்வியினூடாகப் பெற்ற உலகநோக்குடன் தம்மைச் சூழவுள்ள சமூகத்துக்கு  அறிவூட்டவும் சமூகக்குறைபாடுகள் எனக்கருதப்படுவனவற்றைக் கண்டிக்கவும் முற்பட்டனர். அவ்வகை முயற்சிகளின் இலக்கிய நிலைப்பட்ட ஒரு வெளிப்பாடாகவே ஈழத்து நவீன இலக்கியம் உருவாகத் தொடங்கியது. 

   இவ்வாறு உருவாகத் தொடங்கிய ஈழத்து நவீன இலக்கியமானது அழகியல் அம்சங்கள் மற்றும்  சமூகப்பார்வைசார் அம்சங்கள் என்பவற்றில் புதிய பரிமாணங்களை எய்தத்தொடங்கிய காலகட்டமே இரண்டாவது காலகட்டமாகும். இலக்கியம் என்பது சீர்திருத்தக் கருத்துகளைப் போதிப்பதற்கான ஒரு செயன்முறை என்ற புரிதலைக் கடந்து  அநுபவவெளிப்பாடு என்ற புரிதலை நோக்கி ஈழத்திலக்கியம் வளர்ச்சி எய்திய கால கட்டம் இது. இவ்வாறான இரண்டாவது காலகட்டம் 1930களின் பிற்பகுதிகளில் தொடங்கியது. இந்த இரண்டாவது காலகட்டத்தின் தொடக்கக்கட்டத்தை ஈழத்திலக்கிய வரலாற்றிலே  ‘மறுமலர்ச்சிக்காலம்’ எனச் சுட்டுவது மரபு. 1943 - 48 காலப்பகுதியில்   வெளிவந்த மறுமலர்ச்சி என்ற இதழ் ஆற்றியுள்ள இலக்கியப் பங்களிப்பின் வரலாற்று  முக்கியத்துவமே இதற்கான காரணியாகும்.

       மேற்சுட்டியவாறு 1930களின் இறுதியில் உருவாகத் தொடங்கிய ‘புதிய புரிதல்’சார்ந்த படைப்பாக்க முறைமையில், உள்ளடக்க நிலையில் ஈழத்து மண்சார் வாழ்வியலைப் பிரதிபலித்தல் மற்றும் சமுதாயப்பிரச்சனைகளை விமர்சித்தல் ஆகிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. சமுதாய விமர்சனத்தை முன்னெடுத்தவர்களில் ஒருசாரார்  மார்க்ஸியம் என்ற தத்துவத்தளம் சார்ந்து செயற்பட்டனர். இச்செயற்பாடு ‘முற்போக்கு’ என்ற ஒரு இலக்கிய இயக்கமாக வடிவங்கொள்ளத் தொடங்கியது. சமுதாய விமர்சனத்தை முன்னெடுத்தவர்களுள் இன்னொருசாரார் பொதுவான மனிதநேய நோக்குடன் அநுபவ அம்சங்களுக்கு முதன்மை தரும் படைப்பாக்க முறைமையை மேற்கொண்டனர். இவ்வாறான இருநிலைகளையும் சார்ந்தவர்களின் படைப்பாக்கங்களின் வரலாறாகவும் அவை தொடர்பான விவாதங்களின் வரலாறாகவுமே இந்த இரண்டாவது கட்ட வரலாறு தொடர்ந்தது. இவ்வாறான சூழலில் ஈழத்திலக்கியமானது அழகியல் மற்றும் சமூகச்சார்பு ஆகிய நிலைகளில்; குறிப்பிடத்தக்க புதிய பரிணாமங்களை எய்தியது.

     இந்த இரண்டாவது கட்ட இயங்குநிலையிலே ஒரு தனிவகைமை எனத்தக்க வகையில் ஏறத்தாழ 1980களிலிருந்து புதியதொரு வரலாற்றுக்கட்டம் உருவாவதை அவதானிக்க முடிகிறது. ஈழத்தின் இனப்பிரச்சினையானது ஆயுதப்போராட்டமாக வடிவெடுத்த சூழல் சார்ந்த வரலாற்றுக்கட்டம் அது. அச்சூழலில் அம்மண்ணின் தமிழர்சமூகம் பல்வகையான இன்னல்களை அநுபவித்தது. அதன் எதிர்விளைவாக வீறார்ந்த உணர்வெழுச்சிகளையும் எய்தியது. அன்றைய சூழலில் ஈழத்தமிழர் சமூகத்தினருள் குறிப்பிடத்தக்க தொகையினர் புலம்பெயர்க்கப்பட்ட நிலையில் புகலிடம் நாடும் முயற்சிகளில் பல்வேறு ‘துன்ப-துயர’  அநுபவங்களளை எய்தினர். இத்தைய பலநிலை அநுபவங்களையும் பிரதிபலிக்கத் தக்கவாறு உள்ளடக்க நிலையிலும் வெளிப்பாட்டு முறைமைகளிலும் ஈழத்திலக்கியம் புதுவகை பரிமாணங்களை எய்தத் தொடங்கிய காலகட்டம், இது. ஈழத்தில் வாழ்ந்துவருபவர்களும் புலம்பெயர்ந்தவர்களுமான பல இலக்கியவாதிகள் இப் புதுவகைப் பரிமாணங்களைத் தமது ஆக்கங்களில்  இனங்காட்டினர். இவ்வகையில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட இலக்கியமுயற்சிகள், (புகலிடநாடுகள் பலவற்றின் புதுவகை அநுபவங்களையும் உளவாங்கியநிலையிலே) ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற வகையிலான தனி அடையாளத்தை எய்தின என்பதும் சமகால வரலாறாகும்.

    இவ்வாறு   ஏறத்தாழ  நூறாண்டுகளுக்கு மேலாகத்  தொடரும்  ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் வரலாற்றிலே மேற்படி மூன்று காலகட்ட இயங்குநிலைகளிலும் முக்கிய  பங்களிப்புச் செய்துவந்துள்ள – பங்களிப்புச் செய்து வருகின்ற ‘கல்விக் களம்’ என்ற பெருமைக்குரியது தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி என்பது இங்கு அழுத்தமாகச் சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய செய்தியாகும்.

      இக் கல்லூரி 1910 ஆம் ஆண்டில் - ஈழத்து நவீனதமிழிலக்கியத்தின் தொடக்க காலகட்டத்தில் - நிறுவப்பட்டது. அதனை நிறுவியவரும் அதன் முதலாவது அதிபராகப் பணியாற்றியவருமான தெ.அ.துரையப்பாபிள்ளை(1872-1929) அவர்கள் இலக்கியத்துறைகளிலும் கவனம் செலுத்திநின்றவர் ஆவார். மேற்சுட்டிய ‘கற்றோர் குழா’த்தினருள் (Elite Group) ஒருவரான இவர் சமூக சீர்திருத்த சிந்தனைகளை முன்வைத்து பாடல்கள் இயற்றுவதில் ஆர்வங்கொண்டு செயற்பட்டவர்;. அத்துடன் நாடகம் மற்றும் இதழியல்  துறைகளிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர், இவர். இவ்வாறாகப் பாவலர் மேற்கொண்ட     இலக்கியம்சார் செயற்பாடுகள் சமகால(20ஆம்நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியின்) ஈழத்திலக்கியத்தின் நவீனமயப்பாட்டை முன்னெடுக்கும் வகையிலான முக்கிய வெளிப்பாடுகளாக அமைந்தனவாகும். பாட்டியற்றுதலில் புலப்படுத்திநின்ற தனி ஈடுபாடு காரணமாக ‘பாவலர்’ (பாட்டியற்றுதலில் வல்லவர்) என அடைசுட்டி குறிப்பிடப்படும் கணிப்பையும் பின்னாளில் இவர் பெற்றுள்ளார். பாவலருக்குப்பின் இக்கல்லுரியில் அதிபராகத் திகழ்ந்த திரு. கா. சின்னப்பா அவர்களும் இலக்கியத்துறையில் - பாடல்கள் இயற்றுவதில் - ஈடுபாடுகொண்டிருந்தவராவார். (இவரது எழத்தாக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளிக்கொணரப்படாமையால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய கணிப்புக்கு வாய்ப்பு கிட்டவில்லை என்பதை இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது)

     ஈழத்து நவீன இலக்கியமானது அழகியல் அம்சங்கள் மற்றும் சமூகப்பார்வை அம்சங்கள் என்பவற்றில்; புதிய பரிமாணங்களை எய்தத் தொடங்கியதான ‘மறுமலர்ச்சி’க்காலகட்டத்தில் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கிமான மூவர் மகாஜனக் கல்லூரி சார்ந்தோராவர். அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி1, ‘மஹாகவி’ (து.உருத்திர மூர்த்தி) ஆகிய இம்மூவரும் புனைகதை, கவிதை ஆகியவற்றைப் படைப்பதில் தீவிர ஈடுபாடு காட்டி நின்றவர்களாவர். இவர்களில் முதலிருவரும் இதழியல் துறையிலும்  செயற்பட்டுநின்றவர்களாவர். இவ்வாறு இலக்கியத்தின் பல்வேறு துறைகள் சார்ந்தும் இம்மூவரும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட செயற்பாடுகள் அழகியல் மற்றும் சமூகப்பார்வை ஆகிய அம்சங்களில் ஈழத்து இலக்கியச் செல்நெறியின் திசைவழியை அடையாளம் காட்டுவனவாக அமைந்தன என்பது வரலாறு தரும் செய்திகளாகும். இவ்வாறாக இம் மூவரும் இலக்கியநிலையில் ஆற்றியுள்ள பங்களிப்பைக் கருத்துட்கொண்டு இவர்களை, ‘மகாஜனக்கல்லூரி பெற்றெடுத்த மும்மணிகள்’ எனவும் ‘மறுமலர்சிக்கால மும்மணிகள்’ எனவும் மதித்துப் போற்றும் மரபு உருவாகிவிட்டது. 1

    மேற்சுட்டியவாறு ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் செல்நெறியிலே அதன்  தொடக்க காலம் முதலே தொடங்கித் தொடரும் மகாஜனக் கல்லூரியின் பங்களிப்பானது  அடுத்துவரும் காலகட்டங்களிலும் தொய்வின்றி தொடர்வதை வரலாறு உணர்த்துகிறது. அக்கல்விக்களம் காலத்துக்குக்காலம் ஆளுமைமிக்க இலக்கியவாதிகளைத் தோற்றவித்து   ஈழத்தின் நவீன இலக்கியச்செல்நெறியை வளம்படுத்தியுள்ளது. இலக்கியப் படைப்பு மற்றும் அது தொடர்பான திறனாய்வு என்பவற்றோடு மட்டும் அமையாமல் நாடகம், பண்பாடுசார் சிந்தனைகள், வரலாற்றாய்வு, இதழியல் முதலான பல துறைகளிலும்  மகாஜனக்கல்லூரியினர் தீவிர ஈடுபாடு காட்டிவந்துள்ளனர். அவ்வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றியக்கத்தில் அக் கல்விக்களம் பல்துறைப் பங்களிப்புகள் மூலம் ஆழமான தடங்களைப் பதித்துள்ளது என்பதை வரலாறு தெளிவாகவே உணர்த்திநிற்கிறது. அத்துடன், இன்று ஈழத்திலும் உலகநாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழ் இலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்க தொகையினர் தம்மை, ‘மகாஜன இலக்கிய பாரம்பரியத்தினர்’ என ‘உரிமையுணர்வு’டனும் பெருமையுடனும் அடையாளப்;படுத்தி நிற்பவர்களாவர் என்பதும்  இங்கு நாம் மனங்கொள்ள வேண்டிய ஒரு சமகாலச் செய்தியாகும.

   இவ்வாறாக ஈழத்து இலக்கிய பாரம்பரியத்துடன் மகாஜனக் கல்லூரி கொண்டிருந்த - கொண்டிருக்கும் - தொடர்பு மற்றும் அத்தொடர்பில் அது பதித்துவந்துள்ள முக்கிய  வரலாற்றுத் தடங்கள் என்பவற்றை வரலாற்று முறைமையில் சற்று விரிவாக நோக்கலாம். 
 
2. பாவலர் தெ.அ.துரையப்பா பிள்ளை அவர்களின் வரலாற்றுப் பாத்திரம்

   ஈழத்திலக்கியம் நவீனமயப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஆங்கிலம் கற்ற ஒரு கல்வியாளராக - கல்லூரி ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகிய நிலைகளில் - சமூகத் தொடர்புகொண்டு செயற்பட்டுநின்றவர் இவர். உதய தாரகை மற்றும் இந்துசாதனம் ஆகிய பத்திரிகைகளில்  சில ஆண்டுகள் ( முறையே 1901… மற்றும் 1917… கலப்பகுதிகளில்) ஆசிரியப்பணியும் புரிந்துள்ளார். இவர், சகலகுண சம்பன்னன் என்ற ஒரு நாடகநூலை 1905 இல் எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். தமது சமகால சமூகம் தொடர்பாகக் கொண்டிருந்த நோக்குகளைப் புலப்படுத்தும் வகையில் இதோபதேசக் கீதரச மஞ்சரி (17-10-1901), யாழ்ப்பாண சுவதேசக் கும்மி, எங்கள் தேசநிலை ஆகிய பாவடிவப்  படைப்புகளையும் இயற்றியுள்ளார். தனது வாழ்நாளின் முதற்பகுதியில் கிறிஸ்தவராகத் திகழ்ந்த இவர், பின்னர் சைவத்துக்கு மீண்டவராவர். சிவமணிமாலை(1927) என்ற பிரபந்தம் இவருடைய சைவசமயச் சார்பை உணர்த்திநிற்பது. Jaffna Present and Past (யாழ்ப்பாணம் அன்றும் இன்றும்) என்ற தலைப்பிலான சமூகவரலாற்றுப் பார்வை  சார்ந்த ஆங்கிலக்கட்டுரையொன்றும் அவரால் Ceylon National Review – Jan 1907  இதழில் எழுதப்பட்டுளது.

    சகலகுண சம்பன்னன் என்ற நாடகம் ஆங்கில நாடகமரபைத் தழுவி எழுதப்பட்ட ஒரு ‘ராஜா-ராணி’க்கதையாக அமைந்தபோதும் அதனுடைய மொழிநடையானது யாழ்ப்பாணத்தின் பேச்சுவழக்கு கலந்ததாகும். அவ்வகையில் ஆங்கில நாடக மரபைத் ஈழத்தமிழர் மத்தியில் தமிழ்ச் சூழலுக்கேற்பத் தொடக்கிவைத்த ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். 3.       

      இவரது இதோபதேசக் கீதரச மஞ்சரி, யாழ்ப்பாண சுவதேசக் கும்மி, எங்கள் தேசநிலை ஆகியன அக்காலகட்டத்தின் ‘நவீனமயமாதல்’ என்ற இயங்குநிலைக்கான முக்கிய சான்றுகளாகத் திகழ்வனவாகும். இவை நோக்கிலும் வெளிப்பாட்டிலும் சமகால சமூகச்சார்பு கொண்டனவாகும். சமகால சமூகக்குறைபாடுகளான தனிமனித ஒழுக்கக் கேடுகள், பொய்ம்மைகள் மற்றும் பொருளாசை சார்ந்தனவாகிய கைக்கூலி மற்றும் சீதனமுறைமை ஆகிய பலவும் இவற்றில் கண்டனத்துக்குள்ளாகின்றன. மாறாக, இன்சொல் மற்றும் ஈகை முதலான மனிதநேய அம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. வெளிப்பாட்டுநிலையிலே, சாதாரண பொது மனிதரும் எளிதில் பொருள்விளங்கிக் கற்பதற்கான இலகுநடையில்  -  குறிப்பாகக் கீர்த்தனை, பதம் மற்றும் கும்மி ஆகிய இசைப்பாடல் வடிவங்களில் - இவை அமைந்துள்ளன. இவ்வகையில் பாவலர் சராசரி மாந்தரைக் கருத்துட் கொண்டிருந்தமையை யாழ்ப்பாண சுவதேசக் கும்மியில் இடம்பெற்றுள்ளதான,

       “ தேசோபசாரங் கருதியிக் கும்மியைச்
             செப்புகிறேனாத லாலெவரும்
         லேசாய்விளங்க இலகுதமிழில்
             இயம்புவதே நலம் சங்கமின்னே.”

என்ற அவையடக்கப் பாடல் தெளிவாகவே உணர்த்திநிற்பது. இவருடைய சமூக சீர்திருத்த நோக்கின் பதச்சோறாக ஒரு பாடல்:

        “மிக்க பெருந்தொகைச் சீதனமில்லாது
           மேதினியில்மண வாழ்விலராய்
        துக்கமுறும் பெண்கள் யாழ்ப்பாண நாட்டிற்
           தொகையா யிருக்கிறார் சங்கமின்னே”

 (சங்கமின்னே! என்ற விளியானது மகாஜனக் கல்லுர்ரி என்றகல்விச் சமூகத்தை ஒரு பெண்ணாக உருவகித்துச் சுட்டிநின்றதாகும்)

      இவ்வாறாகப் பாவலர் அவர்கள் இலக்கியத் துறை சார்ந்து இயங்கிய முறைமைகள் அவரை ஈழத்திலக்கியத்தின் நவீனமயமாதற்சூழலின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவராகக் காட்டி நிற்பனவாகும். சமய தத்துவப் பொருண்மைகளில் பல்வேறு பிரபந்தங்களைப் பாடிவந்த அக்காலப் புலவர்கள் பலரின் மத்தியில் சமூக உணர்வை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் என்பது தெளிவாகவே தெரிவது

    மரபுப்பாவடிவங்களான ‘வெண்பா’ மற்றும் ‘கட்டளைக்கலித்துறை’ முதலியவற்றைப் பாடும் திறன் இவருக்கு இருந்தமையை இவருடைய பாடற்பரப்பில் நோக்கமுடியும். (சிவமணிமாலையின் 94 பாடல்களும் ‘கட்டளைக்கலித்துறை’ யாப்பில் அமைந்தனவாகும்.) இவ்வாறு மரபுப்பாவடிவங்களைக் கையாளும் திறனிருந்தபோதும் பொதுமக்கள் சுவைக்கத் தக்க ‘கீர்த்தனை’, ‘பதம்’ மற்றும் ‘கும்மி’ முதலியவற்றைக் கையாண்டுள்ளமை அவருடைய மக்கட்சார்பை உணர்த்துவதாகும். இச் செயற்பாடுகளால் பாவலர் அவர்கள் தமது சமகால ஈழத்திலக்கியத்தின் நவீனமய இயங்குநிலையில் தம்மை இணைத்துக்கொண்ட ஒருவராகக் கணிப்புக்குரியவராகிறார். 

    மகாஜனக் கல்லூரியின் பொன்விழாவை ஒட்டி 1960இல் பாவலரின் ஆக்கங்கள்  தொகுக்கப்பட்டு சிந்தனைச் சோலை என்றதலைப்பில் நூலாக்கப்பட்டன. பாவலர் அவர்களின் நூற்றாண்டு நிறைவின் நினைவாக பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டுவிழா மலர்  1972இல் வெளியிடப்பட்டது. இவை பாவலரின் இலக்கிய ஆளுமை பற்றிய ஆய்வுக்கான அடித்தளத்தை இட்ட முக்கிய முதற்கட்ட  முயற்சிகளாகும்.

3. மறுமலர்ச்சிக்கால  மும்மணிகளின்   பங்களிப்பு

   ‘மகாஜனக்கல்லூரி பெற்றெடுத்த மும்மணிகள்’ எனப்படும் அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி மற்றும் மஹாகவி ஆகியோரின் இலக்கியப் பங்களிப்புகளின் தகுதிப்பாடுகளையும் முக்கியத்துவங்களையும் தெளிந்துகொள்வதற்கு முதற்கண் ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சிக்கால’த்தின் முக்கியத்துவத்தைப்பற்றிய ஒரு குறிப்பை இங்கு முன்வைப்பது அவசியமாகிறது.

      ஈழத்திலே 19ஆம்நூற்றாண்டின் இறுதியிலிருந்தே நவீன இலக்கிய உருவாக்கத் துக்கான தொடக்கநிலை முயற்சிகள் தொடங்கிவிட்டன எனினும் நவீன இலக்கியத்தின் முக்கிய அடிப்படைகளான காலவுணர்வு, மாறிவரும் சமூகநிலை பற்றிய சிந்தனைகள் மற்றும் இயல்பான உணர்வெழுச்சியின் வெளிப்பாடாக அமையும் படைப்பாக்க முறைமை என்பன 1930களின் இறுதிவரை உருவாகியிருக்கவில்லை என்பது இங்கு நாம் கவனத்துட் கொள்ளவேண்டிய முக்கிய வரலாற்றம்சமாகும். இதனைத் தெளிந்துகொள்வதற்குச் சமகாலத் தமிழகச் சூழல் ஒப்புநோக்கப்படவேண்டியதாகிறது.  

   சமகாலத்திலே - 19ஆம்நூற்றாண்டிறுதியிலே - தமிழகச் சூழலிலும் இவ்வாறான நவீனமயப்பாடு உருவானது என்பதை அறிவோம். அங்கு அது உணர்வுபூர்வமான ‘புயல்வேக’ச்செயற்பாடாக வடிவங்கொண்டதாகும். முதலில்  மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை அவர்களின் பிரதாபமுதலியார்சரித்திரம் (1879), சுகுணசுந்தரி பி.ஆர் .ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம்(1896), அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (1910) முதலிய புனைகதை(நாவல்)களில் சமூகஉணர்வு, என்ற பண்புடன் வெளிப்படத் தொடங்கி, பின்னர்  ‘மகாகவி’சி.சுப்பிரமணிய பாரதியாரின் (1882-1921) கவிதையாக்கங்களில் ‘சமூகவிடுதலை’ மற்றும் ‘தேசவிடுதலை’ ஆகிய உணர்வுந்துதல்களின் பின்புலத்தில் - ‘சுவை புதிது, பொருள்புதிது, சொற்புதிது’ என்றவகையிலான ஒரு புரட்சிக்குரலாக - வெளிப்பட்டது. தொடர்ந்து, மணிக்கொடிக்காலத்தில்(1930-40களில்) ‘புதுமைப்பித்தன்’, கு.ப.ராஜகோபாலன், ‘மௌனி’ முதலியோர் எழுதிய சிறுகதைகளுடன் இந்நவீனமயமாக்கம் படைப்பாக்க முறைமையில் ஒரு நிறைவான நிலைபேற்றை அங்கு(தமிழகத்தில்) எய்தியது.

     சமகாலத்தில் ஈழத்தில் நிகழத் தொடங்கிய நவீனமயமாதல்  இயங்குநிலையானது தமிழகத்தில் நிகழத்தொடங்கிய அளவு உணர்வுந்துதல்களுடனும் ‘சமூக-தேசிய’ உணர்வுப் பரிமாணங்களுடனும்; உருவானதன்று. இங்கு(ஈழத்தில்)அது மேலைப்புலக் கல்விமுறைமையால் கிட்டிய ‘சீர்திருத்தச் சிந்தனைக’ளின் அடிப்படையிலான போதனை முறைமைகளிலேயே வெளிப்படத் தொடங்கியதாகும். பாவலர் முதலியோர் அந்நிலைமையையே பிரதிபலித்தனர் 

    காலவுணர்வு, மாறிவரும் சமூகச் சூழல் பற்றிய சிந்தனைகள் மற்றும் இவற்றினடியாக உருவாகும் இயல்பான அநுபவநிலைப்பட்ட படைப்பாக்க முறைமை முதலான  நவீனமயமாதல் அம்சங்களைத் தமிழகத்தில் பாரதி மற்றும் புதுமைப்பித்தன் முதலியோர் உணர்ந்திருந்ததைப்போல பாவலர் உட்பட்ட ஈழத்தின் சமகால இலக்கியவாதிகள் பலரும் 1930களின் இறுதி வரையான காலகட்டத்தில் உரியவாறு உணர்ந்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய வரலாற்றம்சமாகும். ஈழத்து மண்சார்ந்த சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட முக்கிய முதலாவது படைப்பான மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம்  நாவல் உட்பட 1930களின் இறுதிவரையான இலக்கிய முயற்சிகள் பலவும்  மேற்படி நவீனமயமாதல் அம்சங்கள் சார்ந்த  அருட்டுணர்வுகளுடனமைந்த  வெளிப்பாடுகளல்ல  என்பது இங்கு நமது கவனத்துக்குரியது. அவை ‘சீர்திருத்த சிந்தனைச்சார்பு’ என்ற அளவிலேயெ நவீனமயமாதற் பண்புகளைப் பிரதிபலித்து நின்றவையாகும்.   

    இந்நிலையில், 1930களின் இறுதியிலிருந்தே மாற்றம் நிகழத் தொடங்கியது. நவீன கவிதை மற்றும் புனைகதை என்பவற்றுக்குரிய உணர்வுத்தளம், மொழி மற்றும் உத்திமுறைமைகள் என்பனசார்ந்த ‘புரிதல்’ ஈழத்தில் ஏற்படத் தொடங்கிய காலம் இதுதான். தமிழகத்தின் மணிக்கொடிச் சூழல்சார்- 1930-40கள் காலகட்ட - எழுத்துகளே  ஈழத்து இலக்கியவாதிகள் மத்தியில் மேற்சுட்டிய புதியவகைப் புரிதல்களையும்   அருட்டுணர்வுகளையும் ஏற்படுத்தின. 1930இல் வெளிவரத் தொடங்கிய ஈழகேசரி முப்பதுகளின் இறுதியில் மேற்சுட்டிய மாற்றத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மறுமலர்ச்சி இதழ் அதனை முன்னெடுத்தது. மறுமலர்ச்சி இதழ் கையெழுத்து சஞ்சிகையாக 1943ஆம் ஆண்டில் உருவாகி 1946 பங்குனி முதல் இவ்விதழ் 1948 ஐப்பசிவரை எல்லாமாக 24 இதழ்கள் வெளிவந்து நிறைவுபெற்றதாகும். மேற்சுட்டியவாறான  புரிதலை உரியவாறு பிரதிபலித்துநின்ற  முக்கிய இதழ் இது  என்றவகையிலேயே இக்காலகட்டத்தை ‘மறுமலர்ச்சிக்காலம்’ என அடையாளப்படுத்தும் வகையிலான கணிப்பு ஈழத்திலக்கிய உலகில் உருவானது.

      இவ்விதழில் தொடக்கமுதலே தொடர்புகொண்டு இலக்கியப் பயணத்தை மேற்கொண்டவர்கள் என்ற வகையிலேயே ‘மகாஜனக்கல்லூரி பெற்றெடுத்த மும்மணிகளான  அ.செ.முருகானந்தன் ,அ.ந.கந்தசாமி மற்றும்  மஹாகவி ஆகியோருக்கு உரியது. இம் மூவரும் மறுமலர்ச்சிக்கால மும்மணிகள் என்ற கணிப்புக்க உரியவரகளாயினர். இவர்களுள்  அ.செ.மு அவர்கள் அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி யின் முதல் 17 இதழ்களுக்கு அதன் ஆசிரியரான தி.ச.வரதராசன் அவர்களுடன்  ‘இணையாசிரிய’ராகப் பணியாற்றி வந்துள்ளார்.4 ஏனையஇருவரும் அதில் தமது ஆக்கங்களை  வெளியிட்டுவந்துள்ளனர்.   அ.செ.மு அவர்கள் சில இலக்கிய நண்பர்களுடனிணைந்து திருகோணமலையிலிருந்து எரிமலை என்ற மாதமிருமுறை இதழையும் 1948இல் வெளிக்கொணர்ந்துள்ளார். அ.ந.க அவர்கள் தேசாபிமானி மற்றும் சுதந்திரன் ஆகிய இதழ்களிலும் ஆசிரியப்பணி புரிந்துள்ளார்.

     படைப்பாளிகள் என்ற வகையிலே மூவரும் சமகால சமூகச் சூழல்சார் அம்சங்களிலிருந்து தமக்கான இலக்கியப் பொருண்மைகளைத் தேர்ந்துகொண்டவர்கள். அப் பொருண்மைகளை மையப்படுத்தி சமகால ஈழத்து மண்ணின் வாழ்வியல் கோலங்களை எழுத்தில் வடித்தவர்கள, இவர்கள். சமூகக்குறைபாடுகள் எனப்படுபவற்றை விமர்சனம்செய்வதில் முன்னின்ற இவர்கள் இத்தொடர்பிலான இயல்பான உணர்வெழுச்சிகளின் வெளிப்பாடுகளாக இலக்கியங்களைப் படைக்க முற்பட்டவர்களாவர்.   

    இவ்வாறான இயங்குநிலையிலே இலக்கியக் கொள்கை என்ற நிலையில் அ.செ. மு மற்றும் மஹாகவி ஆகிய இருவரும் சமுதாயக் குறைபாடுகளை விமர்சித்தல் என்ற பொதுவான மனிதநேயப் பார்வையைக் கொண்டவர்கள். திறனாய்வியலில் இப்பார்வை  ‘விமர்சன யதார்த்தம்’எனப்படும். இவ்வகையில் சமகாலத்தமிழகத்தின் மணிக்கொடிச் சூழல்சார் நவீன இலக்கியப் பண்புகளை ஈழத்தில் பிரதிபலிக்க முற்பட்டவர்கள், இவ்விருவரில் அ. செ. மு அவர்கள் புனைகதையைத் தமது முக்கிய ஊடகமாகக் கொண்டவர்.  பல சிறுகதைகளும், வண்டிச்சவாரி(1944), புகையில் தெரிந்த முகம் (1950), யாத்திரை (1958) ஆகிய தலைப்புகளிலான குறுநாவல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன. வில்ஹெல்ம் ஸ்மித், டொரதி ஏ. செயர்ஸ் ஆகிய ஐரோப்பிய நாவலாசிரியர்களின் ஆக்கங்களை போட்டி (ஈழகேசரி-1941) அலிபாபாவின் குகை(1943) ஆகிய தலைப்புகளில் இவர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். 1940களிலிருந்து இவரால் எழுதப்பட்டுவந்த சிறுகதைகள் மனித மாடு என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன. 1986இல் நூலுருப்பெற்ற இத்தொகுப்பானது ஈழத்துச் சிறுகதைமரபின் தொடக்க நிலையை இனங்காட்டும் முக்கிய ஆவணங்களிலொன்றாகும்.

       “ முருகானந்தன், சரியான யாழ்ப்பாணக் களமும், பண்பாடும்,
         கருவுங்கொண்ட கதைகளைப்படித்துப் புகழீட்டினார்.” 5.

என்பது ‘இரசிகமணி’ கனக.செந்திநாதன் அவர்கள் இவரைப்பற்றித் தந்துள்ள கணிப்பாகும். தமிழகத்தில் அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் வெளியிட்ட கதைக்கோவை -3 இல் அ.செ.மு. அவர்களுடைய மனிதமாடு என்ற சிறுகதை இடம்பெற்றுளது என்பதும்  இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய செய்தியாகும். இவருடைய படைப்பாற்றல் பற்றிய அக்கால இலக்கிய உலகின் கணிப்புக்கு  இவை முக்கிய சான்றுகளாகும்.

   கவிதை, காவியம், பாநாடகம்  மற்றும் வில்லிசைப்பாடல் ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டியவரான மஹாகவி அவர்கள் ஈழத்தின் நவீன கவிதையின் உள்ளடக்கம் உருவம் உணர்த்துமுறை முதலிய கூறுகளில் முக்கிய பண்புகள் பலவற்றைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்தவர் என்ற கணிப்புக்குரியவராவார்.  இவருடைய தனிக்கவிதைகளிலொரு பகுதியானவை வள்ளி (முதற்பதிப்பு-1955), வீடும் வெளியும் (முதற்பதிப்பு-1973) ஆகிய தொகுதிகளாக நூலுருப்பெற்றுள்ளன. ‘குறும்பா’ என்ற புதுவகை யாப்பில் அமைந்த நூறு கவிதைகள் குறும்பா (1966) என்ற தொகுதியாக நூல்வடிவெய்தின. காவியங்கள் என்ற வகையிலே கந்தப்பசபதம், சடங்கு, ஒரு சாதாரணமனிதனின் சரித்திரம் (1974) என்பன நூலுருவில் வெளிவந்துள்ளன. இவற்றில் முதலிரண்டும் இரண்டு காவியங்கள் என்ற தலைப்பில் ஒரே நூலுள் அமைந்தனவாகும்.(1974). இவரது கண்மணியாள் காதை என்ற தலைப்பிலான வில்லிசைப்பாடல் 1978இல் நூலுருப்பெற்றது. இவர் எழுதியுள்ள பல்வேறு பாநாடகங்களில் கோடை, புதியதொருவீடு என்பவை முறையே 1970 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் நூலுருப்பெற்றன.

   மஹாகவியின் மேற்படி கவிதையாக்கங்கள் பலவற்றுக்கும் அடிநாதமாக அமைந்த அம்சம் ஆழமான மனிதநேயம் ஆகும். தாம்வாழ்ந்த சூழல், அதன் பல்வகைப் பண்பாட்டம்சங்கள் மற்றும் வாழ்வியல் முறைமைகள் என்பவற்றின் மீது மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்த அவர், அவற்றை கவிதைக@டாகக் காட்சிப்படுத்த விரும்பியவர்.  அத்துடனமையாது அச்சூழலின் சமூகக்குறைபாடுகள் மீதான தமது வெறுப்புணர்வையும் விமர்சனங்களையும் பதிவுசெய்வதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இவ்வகையில் சமகால சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒரு இலக்கியவாதியாக இவர் திகழ்ந்துள்ளார். மஹாகவி அவர்களைப்பற்றி மதிப்பீடுசெய்த முக்கிய விமர்சகரான  கலாநிதி எம்.ஏ.நுஃமான்அவர்கள், “புனைகதைக்குரியதாகிய யதார்த்தம் என்ற அம்சத்தைக் கவிதைக்குக் கொண்டுவந்தவர்”  எனவும் “சாதாரண மக்களின் வாழ்க்கை அநுபவங்களை நாவல் சிறுகதைகள் உரைநடையில் சித்திரிப்பது போல செய்யுள் நடையில் சித்திரித்த” வர் எனவும் அவரைப்பற்றிக்   குறிப்பிட்டுள்ளார்.6.
 
  மஹாகவி அவர்களின் படைப்பாளுமையின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுவற்றுள் ஒன்று சமகாலப் பேச்சுவழக்கு மொழியைப் பாவடிவங்களிற் பயிலச் செய்த - அதாவது சராசரி பேச்சோசையுடனான மொழியை  பாவடிவங்களுக்குரிய ஓசையைசயுடன் பெர்ருத்தமுற இணைத்த - செயற்பாங்காகும். இவ்வாறான பேச்சோசைக்கவிதைக்கு ஒரு சான்று:

     “சேலைஒன்று சரசரப்புற்றது
     திறப்பும் பூட்டும் கறகறப்புற்றன
     வேலியோ கறையான்படர்ந்துள்ளது
     மெல்லவே அதன் மண் அதிர்வுற்றது
     வாழை நட்டுள பாத்தியுள் ஈரமோ
     வைத்த காலிற் சளசளப்புற்றது
     மூலை ஒன்றினில் ஓலைக்கிடுகினை
     முன்விரிக்க,அது நெரிவுற்றது.”
(கண்மணியாள்காதை –ப.46)

    மஹாகவி அவர்களின் படைப்பாளுமையின் இன்னொரு சிறப்பம்சம் நாடகப்பாங்கான ஆக்கமுறைமையாகும். கோடை, புதியதொருவீடு முதலான அவருடைய  பாநாடகங்கள்  இவ்வாறான படைப்பாளுமையின் பெறுபேறுகளேயாகும்.

    மேற்சுட்டியவாறாக பேச்சுமொழியைப் பாவடிவங்களிற் கையாளும் திறன் மற்றும் பாநாடக ஆக்கத்திறன் என்பவற்றை மஹாகவி அவர்களின் சமகால முக்கிய ஈழக் கவிஞர்களான நீலாவணன், இ. முருகையன் முதலிய பலரும் கொண்டிருந்தனர் என்பது இங்குகுறிப்பிடப்படவேண்டிய முக்கிய வரலாற்றம்சமாகும்.

   மஹாகவி அவர்களின் படைப்பாளுமையின் மற்றொரு சிறப்பம்சம் புதியன புரியும் ஆர்வமாகும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது அவருடைய குறும்பா என்ற கவிதைத் தொகுப்பாகும். ஆங்கிலத்தில் ‘லிமெரிக்ஸ்’ டுiஅநசiஉமள என்ற பெயரில் அமைந்த பாவடிவமானது உள்ளடக்கத்தில் குறும்புத்தன்மையும் எடுத்துரைப்பில் சந்தச் சிறப்பும்கொண்டதாகும். வாழ்வியலை அங்கதச்சுவையுடன் தரிசனத்துக்கு இட்டுவரும் ஆற்றல் கொண்ட இவ்வடிவத்தை தமிழில் இட்டுவந்த முதல்வர் மஹாகவி ஆவர். மூன்று அடிகள் கொண்ட இப்பாவடிவம் பொருளமைதிப்படி ஐந்து அடிகளாகப் பிரித்து எழுதப்படுவது. முதலடி பாவின் விடயத்தைத் தோற்றவித்து நிற்கும். இரண்டாமடி விடயத்தை வளர்த்துச் செல்லும் மூன்றாமடி ஒரு திடீர்த் திருப்பமாக அமைந்து பாப் பொருண்மையை நிறைவுசெய்யும். மஹாகவி அவர்களின் குறும்பாவுக்கு ஒரு சான்று:

        முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
        முன்னாலே வந்துநின்றான் காலன்
              சத்தமின்றி வந்தவனின்
              கைத்தலத்திற்  பத்துமுத்தைப்
         பொத்திவைத்தான் போனான் முச்சூலன் .

    ‘லஞ்சம்’ என்ற சமூகக் குறைபாடு மரணத்தையும் வெல்லக்கூடிய அளவுக்கு வியாபித்துவிட்டதென்பதைக் குறும்புடன் உணர்த்துவது இக் குறும்பா.

     இவ்வாறாகப் படைப்பாளுமைகளால் மஹாகவி அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் முக்கிய கவிதைப்பண்புகளை உருவாக்கியவராகக் கணிக்கப்படுகிறார்.

        “ஈழத்தில் மட்டுமன்றி தமிழகம் உட்பட நவீனதமிழ்க்கவிதை
        வரலாற்றிலே மஹாகவி தானே ஒரு சகாப்தமாகின்றார்” <sup>7</sup>

 என எம்.ஏ.நுஃமான் அவர்கள் குறிப்பிடுவார். மஹாகவியின் கோடை என்ற பாநாடக நூலுக்கு பின்னுரை எழுதிய திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள், ‘பாரதி வளர்த்த சில கவிதைப்பண்புகளை இன்னொரு கட்டத்திற்கு உயர்த்தியவ’ராக மஹாகவியைக் கணித்துள்ளார்.8.

     மேற்சுட்டிய  இவ்விருவரிடமிருந்தும் அ.ந.கந்தசாமி அவர்கள் இலக்கியக் கொள்கைநிலையில் முக்கிய வேறுபாடுகொண்ட ஒருவராவார். மேற்படி இருவரும் ‘விமர்சன யதார்த்த’ப் படைப்பாளிகளாகத் திகழ, இவர் ‘சோசலிஸயதார்த்தவாத’ சிந்தனையாளராகவும்  படைப்பாளியாகவும்  திகழ்ந்தவர். மார்க்ஸியம் என்ற தத்துவத்தளத்தில் உருவான இந்த இலக்கியக் கொள்கை இது.  ஈழத்தமிழ்ச் சூழலில் இது அறிமுகமான காலகட்டத்தில்(1940-50களில்) அதனை முதலில் வரித்துக்கொண்டவர்களில் முக்கியமான ஒருவர் இவர். இதனை அவர்,   “மக்கள் இலக்கியம் என்ற கருத்தும் சோசலிஸ்ட் யதார்த்தம் என்பனவுமே என்மனதைக்கவர்ந்த  இலக்கிய  சித்தாந்தங்களாக விளங்குகின்றன.” 9  என வெளிப்படையாகப் பிரகடனம் செய்துள்ளார்.  இவ்வாறான கொள்கைத்தளத்தில் நின்று  1940களிலேயே தமது எழுத்துகளில் ‘பாட்டாளிவர்க்கச்சார்பு’, ‘தீண்டாமை ஒழிப்பு’ முதலிய வற்றுக்காக அவர் குரல்கொடுக்கத் தொடங்கிவிட்டார். இலக்கியத் துறையில் இவருடைய பங்களிப்பு பன்முகப்பட்டதாகும். கவிதை , சிறுகதை ,நாவல், நாடகம் , மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனம் ஆகிய பலதுறைகளிலும் ஈடுபட்டதோடு தாம் சார்ந்து நின்ற ஈழத்து ‘முற்போக்கு  இலக்கிய’ அணியைக் கட்டமைத்து வளர்ப்பதிலும் தனிக்கவனம் செலுத்தியவர் இவர். அ.ந.கந்தசாமி  அவர்கள்  தமது சொந்தப் பெயருடன் கவீந்திரன் மற்றும்  பண்டிதர் திருமலைராயர் ஆகிய  புனைபெயர்களிலும் தமது ஆக்கங்கள் தந்துள்ளார் ஏறத்தாழ முப்பது ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக எழுத்துப்பணி பணியும்  ஆற்றிவந்த  இவர் முப்பதுக்கும் மேற்பட்ட தலைப்பகளில் கவிதைகள் புனைந்தவர். ஈழகேசரி, தினகரன் , வீரகேசரி, சுதந்திரன்,தேன்மொழி  முதலிய இதழ்களிலும் வேறும்பல சிறப்பிதழ்களிலும் இவருடைய கவிதையாக்கங்கள் அச்சேறிகியுள்ளன. தேன்மொழி  (21-03-1955) இதழில் ‘எதிர்காலச் சித்தர் பாடல்’ என்ற தலைப்பில் பதிவான,
 
     “ அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே உண்டாம்
           அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
       விரசமொடு விகற்பங்கள் வளர்க்கும்மொழி எல்லாம்
           வீழ்ந்துவிடும் ஒரு மொழியே இவ்வுலகில் உண்டாம்.
       சரசமொடு உலகத்து மக்களெல்லாம் தம்மைச்
           சமானர்கள் மனிதகுலம் என்ற இனமென்பார்
       அரசர்கள் ஏழைபணக் காரன்என்ற பேதம்
           அத்தனையும் ஒழிந்துவிடும் எதிர்கால உலகில்”

என்ற  கவிதையிலே   எதிர்காலம் பற்றிய அ.ந.க. அவர்களின்  கனவுகள் வெளிப்படுகின்றன.

    அ.ந.க அவர்கள்  ஏறத்தாழ அறுபது சிறுகதைகள் எழுதியள்ளார்;.இவை வீரகேசரி , பாரதி    சுதந்திரன்,  தேசாபிமானி  முதலிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவருடைய  மனக்கண் என்ற நாவல் 1960களில் தினகரனில்  தொடராக வெளிவந்தது. பின்னர் இது சமகால முக்கிய முற்போக்க இலக்கியவாதியான  சில்லையூர்ச் செல்வராசன் அவர்களால் வானொலி நாடகமாக்கப்பட்டு ஒலிபரப்பாகியது. கழனிவெள்ளம் என்ற தலைப்பில் இவரால் எழுதப்பட்ட நாவலொன்றின் மூலப்பிரதி   1983 கலவரத்தில் எரியுண்டு போனதாக அறியப்படுகின்றது.  அ.ந.க. அவர்கள் சங்கீதப் பிசாசு என்ற தலைப்பிலான சிறுவர் நாவலொன்றையும்  சிரித்திரன் இதழில் எழுதியுள்ளார்.  மதமாற்றம், தாஜ்மகால் உதயம் ,அரச நட்பு, கடைசி ஆசை  ஆகிய தலைப்புகளிலான  நாடகங்களை   இவர் எழுதியுள்ளார்.  எமீல் சோலா(1840-1902) என்பாரின் பிரெஞ்சு நாவலான நாநா இவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு,  1951 சுதந்திரன் இதழில் வெளிவந்தது. பொம்மை மாநகர் என்ற தலைப்பிலான சரித்திர நாவலொன்றும்  இவரால் மொழிமொழிபெயர்க்கப் பட்டதாகத் தெரிகிறது.10.

    மேற்சுட்டியவாறான அவருடைய ஆக்கங்கள்  திரு அ.ந.க அவர்களின் இலக்கியத் துறைசார் பன்முக ஆளுமையின் சான்றுகளாகத் திகழ்வன. இவ்வகையான எழுத்துத் துறைசார் ஆளுமைகளைவிட  ஒரு ‘இயக்கவாதி’ என்றவகையில் - ஈழத்து  ‘முற்போக்கு இலக்கிய’ இயக்கத்தை  கட்டமைத்து வளர்ததெடுத்தவர்களுள் முக்கியமான ஒருவர் என்ற வகையில்- இவர் புலப்படுத்திநின்ற ஆளுமை  மிகப் பெரிது.ஈழத்தின் முற்போக்கு இலக்கிய அணிசார்ந்தவர்களான பிரபல விமர்சகர்   கலாநிதி க.கைலாசபதி மற்றும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, பல்துறைக்கலைஞரும் கவிஞருமான  சில்லையூர்ச் செல்வராசன் , எழுத்தாளர் எஸ் அகஸ்தியர் முதலிய பலராலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்டவர் இவர் என்பது இங்கு நமது கவனத்துக்குரியது. கைலாசபதி அவர்கள் தமது ஒப்பியல் இலக்கியம் என்ற  நூலை இவருக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

            “  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன்
             விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்            தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற             அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்” 

என்பது கைலாசபதி அவர்களின் சமர்ப்பண வாசகம்.<sup>11</sup> அகஸ்தியரும் தமது நாவலொன்றை இவருக்குச்சமர்ப்பித்துள்ளார். டொமினிக் ஜீவா அவர்கள், “நான் படித்த பல்கலைக்கழகம் அ.ந.க.” எனக் குறிப்பிட்டுள்ளார்.<sup>12</sup> இவ்வாறாக இவர்கள்  அ.ந.க.அவர்களுக்கு   அளித்துள்ள  கௌரவமானது உண்மையில் மகாஜனாவின் இலக்கியப் பாரம்பரியத்துக்கு  அளித்த கௌரவமாகவே கொள்ளப்படத்தக்கது.    இவ்வாறு முற்போக்கு இலக்கிய அணிசார்ந்து இயங்கிநின்ற  அ.ந.க. அவர்களை  ‘முற்போக்கு இலக்கியத்தின் மூத்தபிள்ளை’ எனக்கூறுவது மரபாகிவிட்டது.13.

      மும்மணிகளில் ஒருவரான மஹாகவி அவர்களும் தமது படைப்புகளிலொன்றான கண்மணியாள்காதையை  அ.ந.க. அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் என்பதும் இத்தொடர்பில் சுட்டப்படவேண்டிய முக்கிய செய்தியாகிறது.

    மேற்கண்டவாறாக இம்; மும்மணிகளும்  ஏறத்தாழ 30ஆண்டுகள் தொடர்ச்சியாக  மேற்கொண்ட இலக்கியச் செயற்பாடுகள் ஈழத்து இலக்கியச் செல்நெறியின் வரலாற்றில் மகாஜனக்கல்லூரியின் பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்வனவாக அமைந்தன. இம்மூவருள்ளும் மஹாகவி மற்றும் அ.ந.க. ஆகியோர் வரலாற்றில்  பதித்துள்ள தடங்கள் ஆழமானவை. இவை சமகால ஈழத்திலக்கிய வரலாற்றை வழிநடத்திய பெருமைக்குரியவையுங்கூட.

 4. ‘மும்மணி’களின் சமகாலத்திலும் அதனைத் தொடர்ந்தும்  மகாஜனாவின் இலக்கிய  இயங்குநிலை   

     அ.செ.மு, மகாகவி, அ.ந.கந்தசாமி ஆகியோர் இலக்கியத்துறையில் தீவிரமாக இயங்கிநின்ற காலப்பகுதியில் - குறிப்பாக 1940 - 70 காலப்பகுதியில் - மகாஜனக்கல்லூரியானது உயிரோட்டமுள்ள ஒரு இலக்கியக்களமாகத் தொடர்ந்தது. அக்கல்லூரியில் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணியாற்றிய பலரும் கலை மற்றும் இலக்கியத் துறைகளில் ஈடுபாடுகொண்டவர்களாகத் திகழ்ந்தமையே இதற்கான முக்கிய காரணியாகும். ஆசிரியர்களிற் பலர் தாமே கலை மற்றும் இலக்கியத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அத்துறைகளில் அவர்கள் தாம் இயங்கியதோடமை யாமல் மாணவர்களையும் இயக்கிநின்றனர். இவ்வாறான இயங்குநிலைக்கு இக்கல்லூரியின்  அதிபர்களாகத் திகழ்ந்தவர்கள் பலரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துநின்றனர்.

    குறிப்பாக, மும்மணிகளின் சமகாலத்தில் அக்கல்லூரியில் அதிபராகத் திகழ்ந்தவர்களில் முக்கிமான ஒருவரும் பாவலரின் புதல்வருமான தெ.து. ஜெயரத்தினம் அவர்கள் மகாஜனாவின் கலை, இலக்கிய பாரம்பரியம் தொடர்வதற்கான அடித்தளத்தை அமைத்தளித்த ஒருவராவார். 1960இல் தமது தந்தையாரின் பாடல்களைச் சிந்தனைச்சோலை என்ற தொகுப்பாக வெளிக்கொணர்ந்தமை மற்றும் நாடகத்துறையில் கல்லுரி மாணவர்கள் ஈடுபாடுசெலுத்தவும் அகிலஇலங்கை ரீதியான போட்டிகளில்  பங்குபற்றவும் வாய்ப்பளித்தமை முதலிய பல செயற்பாடுகள் அக்கல்விக் களமானது கலை, இலக்கியக் களமாகவும் திகழ்வததற்கான - மகாஜன இலக்கிய பாரம்பரியத்தைத் தொடர்வதற்கான - உணர்வுநிலைச் சூழலை அமைத்தளித்தன.

    1950கள் காலகட்ட யாழ்ப்பாணக் கல்விச்சூழலில் மகாஜனக்கல்லூரியில் உயர்தர மாணவர் தமிழ்மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய வரலாற்றம்சமாகும்.14. ஆங்கிலவழிக்கல்விக்கு முதன்மை தந்துநின்ற அக்காலப்பகுதியில்,  உயர்தரவகுப்பு மாணவர்கள் தமிழைப்பேசவும் அதில் இலக்கியம் படைக்கவும் அதுபற்றி உரையாடவும்  தமிழ்  நாடகங்களில் நடிக்கவும்  வாய்ப்பான ஒரு சூழலை இவ்வாறான மாணவர்மன்ற உருவாக்கம் ஏற்படுத்தியிருக்கும் என்பது உய்த்துணரக்கூடியது.

   மும்மணிகளின் சமகாலத்திலும் அதன்பின்னரும் மகாஜனா இலக்கிய பாரம்பரியம் உயிரோட்டத்துடன் தொடர்வதற்குப் பின்புலங்களாக அமைந்த முக்கிய சூழல்சார் காரணிகள் இவை எனலாம்.

   4.1   1940 கள் முதல்  70களின் நடுப்பகுதி வரை  – தொடர்ச்சியும் தளவிரிவும்

      இவ்வாறான சூழற்பின்புலத்திலே, 1940-70 காலப்பகுதியில் இலக்கியத்துறையில் அடிபதித்து பங்களிப்பு செய்தோர் என்றவகையில் திருவாளர்கள் செ.கதிரேசர்பிள்ளை, த.சண்முகசுந்தரம், ஏ.ஜே.கனகரத்னா, புலவர்.நா.சிவபாதசுந்தரனார், சி.நாகலிங்கம்,   தெல்லியூர் நடராசா, வ.குகசர்மா,  நா.சோமகாந்தன்(ஈழத்துச் சோமு), புலவர் ம.பார்வதி நாதசிவம், மயிலங்கூடலூர் பி.நடராசன்,  ஆ.சிவநேசச் செல்வன்,  க.சண்முகலிங்கம், மயிலங்கூடலூர் த.கனகரத்தினம் என ஒரு பெயர்வரிசை நீள்கிறது. (இப்பட்டியல் நிறைவானதன்று.) இவர்களில் ஒருசாரார் நாடகம், கவிதை, புனைகதை முதலியவற்றில் ஈடுபாடு காட்டியவர்கள். இன்னொருசாரார் இலக்கியஆய்வு, பண்பாட்டாய்வு  மற்றும் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு  முதலிய துறைகளில் தனிக்கவனம் செலுத்தி நின்றவர்களாவார். மற்றொரு சாரார் இதழியலிற் கவனம் செலுத்தினர்.

    மகாஜனாவுக்கு ஒரு நாடக இலக்கிய பாரம்பரியம் உளது என்பதை,  பாவலர், அ.ந.கந்தசாமி,  மஹாகவி ஆகியோர் பற்றிய குறிப்புகளிலே நோக்கியுள்ளோம்.    இந்த மரபைச் சமகாலத்திலே அங்கு ஆசிரியப்பணி புரிந்தவர்களான  புலவர் நா.சிவபாத சுந்தரனார்;, திருவாளர்கள்.சி.நாகலிங்கம், த.சண்முகசுந்தரம் மற்றும்  செ.கதிரேசர்பிள்ளை முதலிய பலர்  மேலும் வளம்படுத்தியுள்ளனர். புலவர் நா. சிவபாதசுந்தரனார் எழுதிய எது உறுதி?(1948),  மறக்குடிமாண்பு(1963)சி.நாகலிங்கம் அவர்களால் எழுதி நெறிப்படுத் தப்பட்ட அணையாத சுடர்(1951), த.சண்முகசுந்தரம் அவர்களின் வாழ்வுபெற்ற வல்லி (1962), பூதத்தம்பி(1964),  இறுதிமூச்சு(1965)  செ.கதிரேசர் பிள்ளையவர்களின் காங்கேயன் சபதம்(1965), ஜீவமணி (1966), அம்பையின் வஞ்சினம் (1967), கோமகளும் குருமகளும் (1968),குருதட்சணை(1969) முதலிய பல ஆக்கங்களால் மகாஜனக்கல்லூரிச் சூழலின் நாடக இலக்கிய மரபு தொடர்ந்தது – வளர்ந்தது.15(இப்பட்டியல் நிறைவானதன்று.)

   புலவர் சிவபாதசுந்தரனார் அவர்கள் பண்டைய இலக்கியங்களிலிருந்து தமது நாடகங்களுக்கான கருப்பொருள்களைத் தேர்ந்துகொண்டவர். திரு.சண்முகசுந்தரம் அவர்கள் ஈழத்து வரலாற்றுச் செய்திகளிலிருந்து தமது நாடகங்களுக்கான கதையம்சங்களை எடுத்துக்கொண்டுள்ளார். திரு.செ.கதிரேசர்பிள்ளையவர்களுக்கு கதையம்சங்களை வழங்கியது மஹாபாரத இதிஹாஸமாகும். அவருடைய மேற்சுட்டிய நாடகங்கள் இலங்கை அரசின் கலைக்கழக நாடகப்போட்டிகளில் மகாஜனக் கல்லுர்ரியின்  மாணவர்கள் நடிப்பதற்காக 1965-69 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. அத்துடன்  அவ்வவ்;வாண்டுப் போட்டிகளின் முதற்பரிசுகளுக்காகத் தேர்வுபெற்றவை அவை  என்பதும் குறிப்பிடப்படவேண்டிய முக்கியத்துவமுடைய செய்தியாகும். இந்நாடகங்களின்  பிரதிகள் பாரதம் தந்த பரிசு என்ற தலைப்பில் மகாஜனக்கல்லுர்ரிப் பழையமாணவர் சங்கத்தினால்  1980இல் நூலாக வடிவம் பெற்றுள்ளன.

    புலவர் சிவபாதசுந்தரனார் அவர்கள் நாடகாசிரியராகத் திகழ்ந்ததோடமையாது பழந்தமிழ்  நூல்கள்தொடர்பான ஆய்விலும் கால்பதித்தவர். அவர் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி(1972) என்ற நூலாக்கம் ஈழத்தறிஞர்களால் மட்டுமன்றி,  பேராசிரியர்  தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், டாக்டர் சி.இலக்குவனார் முதலிய தமிழகப் பேரறிஞர்களாலும் பாராட்டப்பெற்ற சிறப்புடையதாகும். (மகாஜனாவின் ‘கல்லூரிகீத’த்தை  எழுதியவரும் புலவர் சிவபாதசுந்தரனார் அவர்களே  என்பது இங்கு பதிவுபெறவேண்டிய முக்கிய தகவல் ஆகும.) 

      கதிரேசர் பிள்ளை அவர்கள் கவிஞராகவும் திகழ்ந்தவர். மறுமலர்ச்சிக்காலக் கவிஞர்களுள் ஒருவரான இவர், 1960-70கள் காலப்பகுதியில் யாழ்ப்பாணச்சூழலில் நிகழ்ந்த கவியரங்குகள் பலவற்றில்  பங்குகொண்டு இசையுணர்வுடன் கவிதைகள் வழங்கியவர்.

    திரு. த.சண்முகசுந்தரம் அவர்கள் நாடகாசிரியராகத் திகழ்ந்ததோடமையாமல் புனைகதை மற்றும் நடைச்சித்திரங்கள் என்ற வகைசார் படைப்புகளையும் தந்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுடன் ஈழத்தின் நாட்டாரியல்சார் கலை இலக்கிய முயற்சிகள் தொடர்பான தேடல்களில் ஈடுபட்டவர். இத் தொடர்பில் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் சில நூலவடிவம் எய்தியுள்ளன.   பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  தமிழ்ச்சங்க வெளியீடான இளங்கதிர் சஞ்சிகையின் முதலாவது இதழின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய தகவல் ஆகும்.

 மகாஜனாவின் பழைய  மாணவரும் பின்னர் சில ஆண்டுகள் அங்கு ஆசிரியப்பணி புரிந்தவருமான மயிலங்கூடலுர்ர் பி. நடராசன் அவர்கள் ஆடலிறை என்ற புனைபெயர் பூண்டவர். படைப்பாளி, தொகுப்பாசிரியர்,பதிப்பாசிரியர்,பண்பாட்டாய்வாளர் மற்றும் உயர்நிலை ஆய்வுகளுக்குத் துணைநிற்பவர் முதலான பல்தளப்பரிமாணங்களைக் கொண்டவர். பலருடைய படைப்பாக்கங்களுக்கும் ஆய்வுமுயற்சிகளுக்கும் ‘செவிலித்தாய்’ ஆகத்திகழ்ந்துவருபவர்,இவர். ஈழத்தின் குழந்தை இலக்கியத் துறையில் தனிக்கவனம் செலுத்தி நிற்பவரான இவரின், ஆடலிறை குழந்தைப்பாடல்கள் என்ற நூல் யாழ். இலக்கியவட்ட வெளியீடாக 2005இல் வெளியாகியுள்ளது. ‘மகாஜனக்கல்லூரியின் இலக்கிய பாரம்பரியம்’ உருவாக விதையிட்டவர்களில் முக்கியமான ஒருவர் இவர்.

   60களில் மகாஜனாவில் பயின்ற மாணவர்களுள் முக்கிமான ஒருவரான     திருஆ.சிவநேசச்செல்வன் அவர்கள் தமிழ் மற்றும் நூலகவியல் என்பவற்றில் உயர்நிலைப் பட்டங்களைப் பெற்ற ஒரு கல்வியாளர். ஈழத்தமிழியல் தொடர்பான ஆய்வுகளில் தனி ஈடுபாடுகாட்டிநின்றவர். ஈழத்தின் முக்கிய நாளிதழ்களான வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகியவற்றின்  ஆசிரியராகத் திகழ்ந்தவர் இவர்.  மயிலங்கூடலுர்ர் பி.நடராசன் அவர்களுடன் இணைந்து ‘மகாஜனக்கல்லூரியின் இலக்கியப்பாரம்பரியம்’ என்ற எண்ணக்கருவை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உளது. 1972இல் பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாமலர் தயாரிக்கப்பட்டபோது அதற்;கு ஆசிரியராக அமைந்தவர் இவரே என்பது இவருடைய   பங்களிப்பின் வரலாற்று முக்கியத்துவத்துக்குத் தக்கதொரு சான்றாகும். தற்பொழுது கனடாவில் வதிகின்ற இவர் இங்கு முகவரி என்ற ஒரு மாத இதழின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டுவருகிறார். 

     மகாஜனாவிற் பயின்றவர்களில் ஒருவரான புலவர்.ம. பார்வதிநாதசிவம் அவர்கள்,ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபின் வாரிசாக அமைந்தவர். ‘பரீட்சை எடாத பண்டிதர்’ எனவும் ‘குருகவி’ எனவும் சிறப்பித்துப்பேசப்படும் ம.வே.மகாலிங்கசிவம் அவர்களின் புதல்வாரன இவர் சமகால சமூக அநுபவங்களுடன் மனிதநேயக்கவிதைகள் பலவற்றை வடித்தவர். காதலும் கருணையும் என்ற இவருடைய கவிதைத் தொகுதி பிரபல விமர்சகரான கலாநிதி. க.கைலாசபதி அவர்களின் பாராட்டைப்பெற்றதாகும்.16

   இக்காலப்பகுதியல் மகாஜனாவிற் பயின்றவர்களில் புனைகதைத்துறையில் ஈடுபட்டவர்கள் என்றவகையில் நா.சோமகாந்தன்(ஈழத்துச் சோமு) முக்கியமான ஒருவராவார். ஆகுதி (சிறுகதைத் தொகுதி- 1986) விடிவெள்ளி பூத்தது(நாவல்-1989;) ஆகிய இவருடைய ஆக்கங்கள் ஈழத்தின் சாதியாசார மதிப்பீடுகளில் நிகழத்தொடங்கிய மாற்றங்களின் பதிவுகள் என்றவகையில் வரலாற்று முக்கியத்துவமுடையனவாகும். ஒரு இலக்கியவாதி என்றவகையில் முற்போக்கு இலக்கிய அணியின் முக்கிய தூணாகத் திகழ்ந்தவர் இவர். அவ்வகையில் இவர் அ.ந.கந்தசாமி அவர்களின் வழிதொடர்ந்தவர் ஆவார். நாவலர்சபையின் இலக்கியச் செயற்பாடுகளிலும் இவர் முக்கிய பங்களிப்பு செய்துவந்துள்ளார்.

  திரு. ஏ.ஜே.கனகரத்னா அவர்கள்  இலக்கியத் திறனாய்வுத்துறையில் ஆழமான ஈடுபாடுகாட்டியவர். மகாஜனாவில் சிலகாலம் ஆசிரியப்பணிபுரிந்தவகையில் மகாஜன இலக்கிய  பாரம்பரியத்துடன் இவர் தொடர்புபூண்டவராகிறார். இவர் நவீன இலக்கியத்திறனாய்வை மார்க்ஸிய சிந்தனைத் தளங்களை மையப்படுத்தி  முன்னெடுத்தவர்களில் முதல்வரிசையாளர் என்ற கணிப்புக்குரியவர். குறிப்பாக கலை, இலக்கியம் என்பவற்றுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு தொடர்பாக ஆழமாகச் சிந்தித்து எழுதியவர் இவர். மத்து(1970),மார்க்சியமும்இலக்கியமும் - சில நோக்குகள் (1975),செங்காவலர் தலைவர் யேசுநாதர் (2000) ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ள இவருடைய கட்டுரையாக்கங்கள்  திறனாய்வியல் ஆர்வலர்களுக்குப் பெருவிருந்தாக அமைவன.

   மகாஜனாவின் பழைய மாணவரும் இலங்கை நிர்வாக சேவைத்துறையில் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளவருமான திரு. க.சண்முகலிங்கம் அவர்கள் அரசியல்,சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர். குறிப்பாக ஐரோப்பிய நவீன அரசியற்சிந்தனைகளை நுனித்து நோக்கி விமர்சனமுறைமையில்  எடுத்துரைக்கும் ஆய்வாளர்,இவர். இவ்வாறான அறிவுத்துறைப் புலமையூடாகத் தமிழ் இலக்கிய விமர்சனத்திலும் இவர் அடிபதித்தவர். அந்தோனியோ கிராம்சி மற்றும் அல்தூசர் ஆகியோர் தொடர்பாக இவர் தந்துள்ள அறிமுகங்கள் சமகால தமிழ் இலக்கியத்; திறனாய்வுத் தளத்தை வளம்படுத்தி நிற்பன. இவருடைய இவ்வகைக் கட்டுரைகள் அடங்கிய நூல்: நவீன அரசியற் சிந்தனை - ஓர் அறிமுகம் (2009) 

    மகாஜனாவின் மாணவரான மயிலங்கூடலுர்ர் த.கனகரத்தினம் அவர்களின் இலக்கியநிலைப்;பங்களிப்பு என்றவகையில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒன்று அவர்   சிங்களஇலக்கியம்  – தமிழ் இலக்கியம் ஆகியவற்றுக்கு உறவுப்பாலமாக அமைந்தமையாகும். இவ்வகையில் சேதுபந்தனம் என்ற அவருடைய தொகுப்பு முக்கியமானது.

    மேலே குறிப்பிட்டோருள் தெல்லியூர் நடராசா அவர்கள் புனைகதைத்துறை  உட்படப் பல்வேறு எழுத்துத்துறைகளில் ஈடுபட்டவருங்கூட. ‘பௌராணிக வித்தகர்’ பிரமஸ்ரீ  வ. குகசர்மா அவர்கள் பல  சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    1940கள் முதல் 70 கள் வரையான காலப்பகுதியில்  மகாஜனா சார்ந்தியங்கியவர்களில்   கலை இலக்கியத் துறைகளில் சிறப்புறச் செயற்பட்டு நின்றவர்கள் என்றவகையில் மேற்சுட்டியவர்களைத்தவிர மேலும்சிலர்  இங்கு நமது கவனத்துக்கு வருகின்றனர். திரு. ஏ . செல்லத்துரை,பண்டிதர் சி.அப்புத்துரை, சைவப்புலவர் சி . செல்லத்துரை, பேராசிரியர்  சபா.ஜெயராசா ஆகியோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடையோராவர். 1940களின் பிற்பகுதியில் மகாஜனாவில்  பட்டதாரி ஆசிரியராகத் திகழ்ந்தவரான  திரு.ஏ. செல்லத்துரை அவர்கள்  இசையறிவும் நாடகத் திறனும் வாய்த்தவராவார். இவரின் நெறிப்படுத்தலில் சபா முதலியார் ,துரோகி யார் ?  ஆகிய நாடகங்கள்  அக்கல்லூரியில் அரங்கேற்றப்பட்டன.

     1940களின் ஈற்றில் பிற்பகுதியில்  மகாஜனாவில் பயின்றவர்களில் ஒருவரான பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களும்  1970இல் சில மாதங்கள் மகாஜனாவில் கற்பித்தவரான சைவப்புலவர் . சி . செல்லத்துரை அவர்களும் சமயம் மற்றும் கலை,இலக்கியத்துறைகளில் தனிக்கவனம் செலுத்திநிற்பவர்களாவர். இத்துறைசார் செயற்பாடுகளில் ‘இரட்டையர்’ எனத்தக்க வகையில் இணைந்து  செயற்படும் இவர்கள் ஈழத்துத்  தமிழ்ப் புலமைமரபின் சமகால ஆளுமைகளாகத் தம்மை இனங்காட்டி நிற்பவர்களுமாவர்.  இவர்கள் நவீன கலை இலக்கியச் சூழலுடனும் -குறிப்பாக குழந்தை இலக்கியத் துறையுடன் -நெருக்கமான உறவுகொண்டவர்களாவர். சைவப்புலவர் அவர்கள் நாடகத் துறையிலும் ஈடுபாடு காட்டிநிறபவர்.

     சமகாலக் கலை இலக்கியச் செயற்பாடுகள் சார்ந்த சிந்தனைக்களமாக  1980களில் ‘வலிகாமம்-வடக்கு’ச் சூழலை மையப்படுத்தி உருவான ‘ தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம்’ என்ற அமைப்பைத் தொடக்கியவர்களில்;  முக்கியமானவர்கள் இவர்கள். இன்றுவரை தொடரும்  இக்களச் செயற்பாடுகள் இவர்களது செயல்திறனுக்கச் சான்று பகர்வன. பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களால் அண்மைக்காலத்தில்(2007-8 ஆம் ஆண்டுகளில்)  இக்களத்தால் வெளியிடப்பட்டதான ,இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு  (பாகங்கள்  1,2)என்ற நூலாக்கம் மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியத்துக்குப் பெருமை சேர்ப்பதான ஆய்வுச் செயற்பாடாகும்.

     1960களில் மகாஜனாவில் படித்தவர்களில் ஒருவராக அறியப்படும் திரு சபா. ஜெயராசா அவர்கள் 70களில் ஆரம்பத்தில் சிலகாலம் அங்கு ஆசிரியப்பணி புரிந்தவருமாவார்.  படிப்பித்தவர. கல்வித்துறையில் புலமைபெற்றுக் கலாநிதியாக உயர்ந்த இவர் அத்துறையில் பல்கலைக்கழகப்   பேராசிரியராகவும் திகழ்ந்தவராவார். கல்வியியலசார்  மேலைத்தேயச்  சிந்தனைகளைத் தமிழுக்கு இட்டுவரும் பெரு முயற்சியின் ஒருகூறாக அந்நாடுகளின் கலை,இலக்கியப் பார்வைகளைத் தமிழ்ச் சூழலுக்குப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து  அறிமுகம் செய்வுவருபவர் இவர். குழந்தைக் கவிதைத் துறையிலும் இவர் நாட்டங்கொண்டுள்ளார்.

          மகாஜனாவிலே   1960களின் பிற்பகுதியிலே ஒரு புதிய இலக்கிய பரம்பரை ஒன்று  முளைவிட்டது. மகாஜனாவின் நாடகங்களிற் பங்குபற்றி நடித்தவர்களும் மற்றும் புனைகதை கவிதை நாடகம் முதலியவற்றில் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டவர்களுமான மாணவர்களுட் சிலர் இலக்கியத்துறைகளில் அடிபதித்தனர்.  இவ்வகையில் மாவை. தி. நித்தியானந்தன், திருமதி கோகிலா மகேந்திரன், கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன், பேராசிரியர் கலாநிதி  நா.சண்முகலிங்கன் மற்றும் வேல் அமுதன், கலாநிதி மு.க.சிவகுமாரன், குரும்பசிட்டி கே.எஸ் சிவகுமாரன் என இவர்களின் பெயர்ப்பட்டியல் நீளும.

     திரு மாவை தி. நித்தியானந்தன் அவர்கள் கவிதை,புனைகதை மற்றும்   நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். புலம்பெயர் இலக்கியச் சூழலில் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவராகத் திகழ்பவர் இவர். 60களில் மகாஜனாவில் கற்று,பின்னர் அங்கு பலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவரான கோகிலா சிவசுப்பிரமணியம் (பின்னாளில் திருமதி கோகிலா  மகேந்திரன் அவர்கள் புனைகதை மற்றும் நாடகம் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். கவிதை மற்றும் அறிவியல் ஆக்கங்கள் எழுதுவதிலும் கவனம் செலுத்தியவர். அவருடைய எழுத்தாக்கங்கள் பலவும் நூலுருப்பெற்றுள்ளன. ஈழத்து நாடகத்துறையில் !970களில் புதியவரவாக அமைந்த நாடக அரங்கியல் கற்கைநெறிக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலம் மகாஜனாவின் நாடகத்துறைக்குப் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர். இவர் முற்சுட்டிய ‘ தெல்லிப்பழைக் கலை இலக்கியக் கள’த்தின் தொடக்க உறுப்பினர்களுள் முக்கியமான ஒருவர் என்பதும் அதனை இன்றுவரை தொடர்ந்து இயக்கிவருபவர் என்பதும் இங்க குறிப்பிடப்படவேண்டியமுக்கிய செய்திகளாகும். ‘கலைஞர்’ மற்றும் ‘இலக்கியவாதி’ ஆகிய நிலைகளுக்கு மேலாக, பெண்ணியம்(Feminism) மற்றும் சீர்மியம் (Counciling)  ஆகியவை சார்ந்தும் அவருடைய சமூகத்தொடர்புநிலை விரிந்து சென்றுளது. இவ்வகையில் கோகிலா அவர்கள் மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியத்தை முன்னெடுத்துவரும்  முக்கிய ஆளுமைகளுள் ஒருவர் என்ற கணிப்புக்குரியவராகிறார்.

     இவரின் சமகாலத்தில் மகாஜனாவில் பயின்ற  கௌசல்யா ஜம்புகேஸ்வரக் குருக்கள் அவர்கள் (பின்னாளில் திருமதி கலாநிதி  கௌசல்யா சுப்பிரமணியன்) இசை மற்றும் நாடகம் – அரங்கியல் ஆகிய துறைகளில் தனது புலமையை வளர்த்துக்கொண்டவர். இசைத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றவரான இவர் அத்துறையில்  தொடர்ந்து நுண்ணாய்வுகளை மேற்கொண்டுவருபவர். இவற்றுக்கு மேலாக,  ‘இதழியல்  மற்றும் பொதுசனத் தொடர்பியல்’ என்ற  துறையிலும் தனிக்கவனம் செலுத்திய இவர் அத்துறையில்  முதுகலைப் பட்டம் பெற்றவருமாவார். தமிழகப் பல்கலைக் கழகங்களின் கலாநிதிப்பட்ட ஆய்வேடுகளை மதிப்பீட்டறிக்கை வழங்கும்  வெளிநிலைத் தேர்வாளர் (External Examiner) ஆகவும்  இவர் திகழ்ந்துவருகிறார்.   மேற்சுட்டிய ‘தெல்லிப்பழைக் கலை இலக்கியக்கள’த்தின்  தொடக்க உறுப்பினர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் தமது  துணைவரான கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களோடு இணைந்து எழுதிய இந்தியச் சிந்தனை மரபு(1993, 96) என்ற நூல் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் உயர்பட்டங்களுக்கான பாடநூலாகக் கொள்ளப்பட்டுளது. இவர் மேற்குறித்த புலமைசார் செயற்பாடுகளோடு  நூற்பதிப்பு மற்றும் திறனாய்வு ஆகிய துறைகளிலும்  தனது ஆளுமையை விரிவுபடுத்தி வருகிறார். 

    யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த  பேராசிரியர் கலாநிதி  நா.சண்முகலிங்கன் அவர்கள்  60களில் மகாஜனாவில் பயின்றவர். சமூகவியல் துறையில் புலமைபெற்றுள்ள இவர் அத்துறைசார்ந்து பல நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். படைப்புநிலையிலே இவர்,இசைப்பாடல்,கவிதை,சிறுகதை ஆகியவற்றில் ஈடுபாடுகாட்டிவருபவர். ‘இலங்கைவானொலி’ வெளியிட்ட இசைத்தட்டுகளில் இவருடைய தன்னுணர்ச்சிக் கவிதைகள்; சில பதிவாகியுள்ளன.17 உயர்கல்விநிர்வாகியாகப் பணிபுரியும்  இப்பேராசிரியர் ஒரு கலைஞராகவும் திகழ்பவராவார். மகாஜனாவின் இலக்கியமரபுக்கு பெருமை சேர்த்து நிற்பவர்களில் முக்கியமான ஒருவராக இவர் திகழ்கிறார். 

     புனைகதை நாடகம் ஆகிய துறைகளில் பல ஆக்கங்களை எழுதி வெளியிட்டுள்ள  திரு. வேல் அமுதன் அவர்கள் தகவம் (தமிழ்க்கதைஞர்வட்டம் ) என்ற அனைத்திலங்கை நிலையிலான அமைப்பின் முக்கிய தூண் ஆவார். அவ்வகையில் இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர் என்ற கணிப்புக்கும் உரியவர்.

    60களில் மகாஜனாவில் பயின்று பின்னர் அங்கு ஆசிரியராகவும் பணியாற்றியவரான  கலாநிதி.மு.க.சிவகுமாரன் அவர்கள் குரும்பசிட்டி கிராமத்தின் இலக்கிய பாரம்பரியத்தில் வந்தவர். இப்பொழுது ஜெர்மனியில் வதியும் அவர், தந்தையார் முன்னர் ஈழத்தில் வெளியிட்ட வெற்றிமணி  என்ற சஞ்சிகையை ஜெர்மனி மண்ணில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

     70களின் ஆரம்ப ஆண்டுகளில் மகாஜனக் கல்லூரியிலே பயின்றவரான திரு.  குரு அரவிந்தன் அவர்கள் அக்காலகட்டத்திலேயே எழுத்துலகில் அடிபதித்தவர். சமகாலத்தில் யாழ்ப்பாணச்சூழலின் ‘கல்லூரி மாணவர் இலக்கியமன்றங்’களுடன் தொடர்புகொண்டு இலக்கிய ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். 90களிலிருந்த புலம்பெயர் சூழலிலே முக்கி படைப்பாளியாகத் தன்னை இனங்காட்டிநிற்பவர். 

    1940 - 70 காலப்பகுதியில் மகாஜனாவின் இலக்கியப் பாரம்பரியம் உயிரோட்டத்துடன் தொடர்ந்தது என்பதை மேலே நோக்கினோம். அத்தொடர்ச்சியிலே  படைப்புநிலை,குழந்தை இலக்கிய முயற்சி,ஆய்வு மற்றும் திறனாய்வுச் செயற்பாடுகள்,மொழிபெயர்ப்பு,இதழியல் மற்றும் வானொலி ஆகிய தொடர்புசாதனநிலைகள்,கலை இலக்கிய நிறுவன அமைப்புச் செயற்பாடுகள் முதலான பல தளங்களில் மகாஜனா மரபின் இலக்கிய ஈடுபாடு விரிவுபெற்றுச்சென்றது என்பதும் சான்றுகளினூடாக உணர்த்தப்பட்டது.  அத் தொடர்பிற் செயற்பட்டுநின்றவர்களுள் முக்கியமானவர்கள் என்ற கணிப்புக்குரிய  சிலர்பற்றிய சுருக்கக் கணிப்பீடுகளும் முன்வைக்கப்பட்டன. (அவர்களுட்  சிலரின் ஆளுமைவெளிப்பாடுகள் 1970க்குப் பிற்பட்டகாலங்களைச்  சார்ந்தனவேயெனினும் அவர்கள் மகாஜனாவுடன் மாணவ மற்றும் ஆசிரிய நிலைகளில் தொடர்புகொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தை கருத்துட்கொண்டே மேலே சுட்டப்பட்டனர்.)
   
  4.2. எழுபதுகளின் மத்தியிலிருந்து  ஒரு புத்தெழுச்சி 

    மேற்சுட்டியவாறு  மறுமலர்ச்சிக் காலம் முதல் இலக்கியத்துறையில் தொடர்ச்சியும் தளவிரிவும் எய்திவந்துள்ள மகாஜனாவின் இலக்கிய இயங்குநிலையில் 1970களின்; மத்தியில் புதியதொரு செயலூக்கம் உருவானதை வரலாறு உணர்த்திநிற்கிறது. குறிப்பாக,நாம் மேலேநோக்கிய புலவர் நா. சிவபாத சுந்தரனார்,திருவாளர்கள் செ.கதிரேசர்பிள்ளை, த.சண்முகசுந்தரம், மயிங்கூடலூர்.பி.நடராசன், ஆ.சிவநேசச்செல்வன்  முதலியோரும் செ.இராஜகுலேந்திரன் முதலான சமகால ஆசிரியர்களும் தந்த  ஊக்கமும் வழிகாட்டலும் 1960களிலே மகாஜனாவின் மாணவர்கள் மத்தியிலே இலக்கிய ஆர்வத்தை ஆழமாக விதைத்தன. இந்த விதை முறையாக முளைவிட்டுப்பயிராகிப் பலன் தரத் தொடங்கியதை மேலே நாம்நோக்கிய திரு.மாவை. நித்தியானந்தன், திருமதி கோகிலா மகேந்திரன், கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன், பேராசிரியர் கலாநிதி  நா.சண்முகலிங்கன் மற்றும் வேல் அமுதன், கலாநிதி மு.க.சிவகுமாரன் முதலியவர்களின்  இலக்கிய இயங்குநிலைகளினூடாகத் தெளிந்துகொள்ளலாம். 

     இவ்வாறான வரலாற்றியக்கத்திலே 1972இல் பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டதும் அதில் பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு  நினைவுமலர் வெளியிடப்பட்டதுமான நிகழ்வுகள் புதியதொரு எழுச்சிக்குக் கட்டியம் கூறுவனவாக அமைந்தன.  ஈழத்து இலக்கிய வரலாற்றில் மகாஜனக் கல்லுர்ரிக்கு ஒரு ‘தனி இடம்’ உளது என்பதை மேற்படி மலரில் இடம்பெற்ற எழுத்துகள் உணர்த்திநின்றன. அந்த ‘வரலாற்று இட’ த்தைப் பேணிக்கொள்ளவேண்டும் என்ற உணர்வுந்துதல் அக் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் உருவாகத்தொடங்கியது. இதன் பேறாக மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பதற்கான பல்வகைச் செயன்முறைகள் கல்லுர்ரிநிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டன. கவிதைப்போட்டி,சிறுகதைப் போட்டி முதலியவற்றை நடத்தவது,அவற்றில் தேர்வாகும் ஆக்கங்களை நூல்வடிவில் வெளிக்கொணர்வது,இதழ்வெளியீட்டு முயற்சிகளில் மாணவர்களைத் துர்ண்டிச் செயற்படுத்துவது முதலியனவாக இச் செயன்முறைகள் அமைந்தன.

      சமகாலத்தில் உயர்கல்விப்  பாடத்திட்டமாக அமைந்திருந்த ‘தேசிய உயர் கல்விச் சான்றிதழ் கற்கை நெறி’(H.N.C.E) க்கான கல்வியில் மாணவர் செயலூக்கத்தை மையப்படுத்துவதான செயல்திட்டப்பணி என்ற ஒரு பகுதி அமைந்திருந்தது. மகாஜனக் கல்லூரி நிர்வாகம் இதற்கான செயற்பாடுகளில் இலக்கியத்தை முன்னிலைப்படுத்தியது. சூழலிலுள்ள இலக்கியவாதிகள் தொடர்பான தகவல்களைத் தேடித்திரட்டல், அவற்றினூடாக ஒப்படைகள் தயாரித்தல் என்பனவாக இவ்வகைச் செயல்திட்டக்கல்வி அக்கல்லுர்ரியில் வடிவமைக்கப்பட்டது. புலவர் சிவபாத சுந்தரனார் மயிலங்கூடலூர் பி.நடராசன் முதலிய ஆசிரியர்கள் மாணவர்களை இச்செயற்பாடுகளில் வழிநடத்தினர்.

இக்காலகட்டத்தில் மகாஜனாவின் அதிபர்களாகத் திகழ்ந்த பலரும்  மாணவர்களின் இலக்கியச்செயற்பாடுகளுக்குப் பேரூக்கமளித்நின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கியசெய்தியாகும். அக்காலப்பகுதியில் அதிபராகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான திரு. பொ. கனகசபாபதி அவர்கள் இலக்கிய ஆர்வங்கொண்ட மாணவர்களை அவர்களின் வகுப்பறைகளுக்கே சென்று பாராட்டி ஊக்கமளித்து நின்றவர் என்பதும் இங்கு நினைவில் கொள்ளப்படவேண்டிய ஒரு வரலாற்றுத் தகவல் ஆகும்.18.

     இவ்வாறான பின்புலத்திலே, படைப்பாளுமைக்கு ஊக்கமளிக்கும் வகையில்  கல்லூரியில் நடைபெற்றுவந்த போட்டிகள்; மூலம் மாணவர்கள் பலர் இலக்கியத்துறையில் தீவிர ஈடுபாடுகாட்டினர். படைப்பு மற்றும் சஞ்சிகை உருவாக்கம் ஆகிய  தளங்களில் இவர்களின் ஆர்வம் செயற்படத் தொடங்கியது. இவ்வகையில் இக்காலப்பகுதியில் இலக்கியத் துறைகளில் அடிபதித்த மாணவர்கள் என்ற வகையில், பொ.இரகுபதி, .நாகேஸ்வரன், சி.சே.சண்முகநாதன், சு.சரவணபவன், ஸ்ரீகதிர்காமநாதன், சேரன், ஆதவன், நா.சபேசன், விஜயேந்திரன், அ.ரவி, பாலசூரியன்,யுவனேஸ்வரி (ஊர்வசி), திருமகள், சுதந்திரச் செல்வி என ஒரு பெயர்வரிசை தொடர்கிறது.  

     1977ஆம் ஆண்டில் உயர்வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற கதைகள் இளம் முல்லை என்ற தொகுப்பாக நூலுருப்பெற்றன. இந்நூலுருவாக்க முயற்சிக்கு பின்புலமாக நின்று செயற்பட்வர் ஆசிரியர் திரு.த.சண்முகசுந்தரம் அவர்கள். இதனை அடுத்து 1981இல் இவர்கள் என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு மாணவர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாக்கத்திற்குப் பின்னணியிலிருந்து செயற்பட்டவர் ஆசிரியர் செ. இராஜகுலேந்திரன் அவர்களாவர்.   இத் தொகுதிகளின் கதைகள் பலவும் மகாஜனாவின் இலக்கியபாரம்பரியத்தின்  படைப்பாளுமை தொய்வின்றித் தொடர்கின்றது என்பதை உறுதிசெய்வனவாக அமைந்தனவாகும். 

     மகாஜனாவுக்கெனச் சிறப்பான கையெழுத்துச் சஞ்சிகை மரபு இருக்கின்றது எனவும் மகாஜனப்படைப்பாளிகளின் பயிற்சிக்களங்களாக அவற்றைக் குறிப்பிடலாம் எனவும் கலாநிதி நா. சண்முகலிங்கன் குறிப்பிடுவர்.19. இத்துறையில் மாணவர்களை வழிப்படுத்தியவர்களில் முக்கியமான  ஒருவராக   ஆசிரியர் திரு. ச.விநாயகரத்தினம் அவர்கள் திகழ்ந்துள்ளார் என்ற தகவலையும் இவர் பதிவுசெய்துள்ளார.20.

    இக்கல்லுர்ரி மகாஜனன் என்ற இதழை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. இது    மாணவர்களின் எழுத்து முயற்சிகளுக்கு முக்கிய களமாகத் திகழ்ந்துவருவது. மகாஜனனுக்குப் புறம்பாக மாணவர்களால் முதன் முதலில் 1974இல் சங்கமம் என்ற தலைப்பில் ஒரு சஞ்சிகை வெளியிடப்பட்டது. பொ.இரகுபதி, க.நாகேஸ்வரன், சி.சே.சண்முகநாதன், சு.சரவணபவன், ஸ்ரீகதிர்காமநாதன் முhலிய மாணவர்களின் முயற்சியால் வெளிவந்த இதழ்,இது. திரு. த.சண்முகசுந்தரம் மற்றும் ஆ.சிவநேசச்செல்வன் ஆகியோரரை ஆலோசகர்களாகக்கொண்டு வெளிவந்த  இவ்விதழில் கலை, இலக்கியம், அகழ்வாராய்ச்சி, அறிவியல் முதலான பல்துறைகளைச்சார்ந்த எழுத்தாக்கங்கள் மற்றும் நேர்காணல்கள் என்பன இடம்பெற்றன. உயர்ந்த தரத்தைப் பேணிநின்ற இச் சஞ்ககை 1974-75 ஆம் ஆண்டுகளில் சில இதழ்களே வெளிவந்து நிறைவுபெற்றுவிட்டதெனினும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிலையான தடம்பதித்த ஒன்றாகும்.

    மகாஜனாவின் இதழியல் வரலாற்றில் அடுத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடைய சஞ்சிகை புதுசு ஆகும். உயர்வகுப்பு மாணவர்களான திரு நா. சபேசன், இளவாலை விஜயேந்திரன், பாலசூரியன், அ.ரவி ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 1980களில்  வெளிவரத் தொடங்கிய இச்சஞ்சிகை அவர்கள் பழைய மாணவர்களாகிவிட்ட நிலையிலும்கூட ஆறு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து வெளிவந்தது.   “ஈழத்து இலக்கியத்தின் தரமான பரப்புகளை அதிகரிக்கவும்,அதிகரிக்கும் எண்ணத்தில் முயலும் ஏனையோருக்குத் தோள்கொடுக்கவும் முன் நிற்கிறோம்”  என்பது இதன் முதலாவது இதழில் ஆசிரியர்களின் முன்வைப்பாக அமைந்த நோக்கங்களிலொன்றாகும். சமகால ஈழத்திலக்கியத்தின் தரம் தொடர்பானதும்  அதில் தாங்கள் பங்களிப்புச்செய்வதற்குள்ள வாய்ப்புகள் தொடர்பானதுமான இக்குறிப்பானது மகாஜனக்கல்லூரி மாணவருலகு சமகால ஈழத்து இலக்கியம் தொடர்பாக எய்தியிருந்த ‘சிந்தனை முதிர்ச்சி’யை உணர்த்திநிற்பதாகும். படைப்பிலக்கியம்,திறனாய்வு மற்றும் ‘சமூக –அரசியல்’ சிந்தனைகள்சார் எழுத்துகள் எனபவற்றைத் தாங்கி வெளிவந்த இச் சஞ்சிகை சமகால - 1980களின் - ஈழத்திலக்கியச் செல்நெறியைக் கட்டமைப்பதில் முக்கிய பங்களிப்புச்செய்துள்ளது. 21

     மேற்சுட்டியவாறு 70களின் மத்தியில் மகாஜனாவில் ஏற்பட்ட புத்தெழுச்சியினூடாக இலக்கியப் பிரவேசம் செய்தவர்களில் பலர் தொடர்ந்து தமது ஆளுமைகளை வளர்த்துக்கொண்டு மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியத்தின் சிறப்பை ஈழத்திலும் புலம்பெயர் சூழல்களிலும் பரவச்செய்துள்ளனர் என்பதை வரலாறு தெளிவாக இனங்காட்டிநிற்கிறது.

     சங்கமம் இதழின் ஆசிரியர் குழுசார்ந்தவர்களும் கவிஞர்களாகவும் புனைகதையாளர்களாகவும் அக்காலப்பகுதியில் எழுத்துத்துறையில் அடிபதித்தோரும்   ஆகிய அக்கால மகாஜன இலக்கியவாதிகளுட் பலர் தமது கல்லூரி நாட்களின்பின்னரும் அவ்வத் துறைகளில் தீவிரமாக இயங்கித் தமது ஆளுமையை நிறுவிக்கொண்டனர். அவர்களுள் ஒருசாரார் புலம்பெயர் சூழல்களிலும் தொடர்ந்து இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனர். திரு க. நாகேஸ்வரன்,சேரன்,நா.சபேசன்,அ.ரவி(அ. இரவி),இளவாலை விஜயேந்திரன் முதலிய பலரை இவ்வகையிற் பெயர்சுட்டிக் குறிப்பிடலாம்.

    இவர்களுள் திரு க. நாகேஸ்வரன் அவர்கள் தமிழைச் சிறப்புப்பாடமாகப்பயின்று அத்துறையில் கலாநிதிப் பட்டம் ஈட்டியவர். ஈழத்தில் பல்கலைக்கழகமட்டத்தில்  தமிழியலாய்வை முன்னெடுப்பதன் மூலம் மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியத்தைத் தொடர்கிறார். திரு. பொ இரகுபதி அவர்கள் தொல்லியலில் கலாநிதிப்பட்டம் பெற்று  அனைத்துலகமட்டத்தில் ஒரு ஆய்வறிஞனாகத் தனது ஆளுமையை விரிவுபடுத்தியுள்ளார்  மஹாகவியின் புதல்வாரன சேரன் அவர்கள் தந்தையார் வழியில் ஒரு கவிஞராகத் திகழ்வதோடு ‘இதழியல்’ மற்றும் ‘சமூகவியல்’ துறைகளில் இன்று அனைத்துலக மட்டத்தில் கவனத்துக்குரிய ஒருவராகத் தமது ஆளுமையை விரிவுபடுத்தியுள்ளவர். சபேசன், இரவி, இளவாலை விஜயேந்திரன் மற்றும் ஆதவன்  முதலியோர் ஐரோப்பிய நாடுகளில் புகலிட வாழ்வை மேற்கொண்ட நிலையில் கடந்த பல ஆண்டுகளாகப் புலம்பெயர் இலக்கியத்துறையில் தனிக்கவனம் செலுத்திவருகின்றனர். இரவி அவர்கள் எழுதியுள்ள காலம் ஆகிவந்த கதை(2003) என்ற ஆக்கம் சுயவரலாற்றுப்பாங்கில் யாழ்ப்பாணச் சூழலின் கடந்த அரைநூற்றாண்டுச் சமூக வரலாற்றியக்கத்தை ஒரு சிறுவனுடைய பார்வையூடாக நினைவுக்கு இட்டுவருவது.ஈழத்துப் புனைகதைத் துறையின் புலம்பெயர் சூழல்சார்  இயங்குநிலையின் முக்கிய வகைமாதிரிகளுளொன்றாகக் கணிப்பெய்தியுள்ள ஆக்கம் இது.

    மகாஜனாவிலே  1970களின் மத்தியில் உருவான புத்தெழுச்சி 80களின் பிற்பகுதிவரை தொடர்ந்தது. 80-90கள்  காலப்பகுதியில் ஓளவை, ஸ்ரீரஞ்சனி(பின்னாளில் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா), “இளங்கோ ”(மு.மதிமாறன்) பிரணவன் மகேந்திரராஜா, பா.மகாலிங்கசிவம், பா.பாரதி முதலிய பலர் மகாஜனக் களத்தினூடாகஇலக்கிய உலகில்அடிபதித்தனர்.   

    80களின் ஈற்றில் ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வும் அதற்கெதிரான அரசின் இராணுவ நடவடிக்கைகளும் வீறுகொண்ட நிலையில் போர்ச்சூழல் கல்லூரியை  இடம்பெயரவைத்தது. இதன்காரணமாக இலக்கியம்  உட்பட அக்கல்லூரியின் பல்வகை இயங்குநிலைகளிலும்  செயற்பாடுகளிலும்  பாதிப்புகள் எற்பட்டன.

   அந்நிலைமைகளிலுங்கூட அக்கல்லுர்ரி தனது இலக்கிய உணரவோட்டத்தைத் தொடர்ந்து பேணிவந்துளது. அண்மைக்காலத்தில் அக்கல்லூரி மீளவும் தெல்லிப்பழையில் தனது பாரம்பரிய தளத்தில இயங்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதன் இலக்கிய பாரம்பரியம் மீளவும் அதன் மையக்களத்திலிருந்து புத்தெழுச்சிபெறும் என்பது இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்
  
 5. புலம்பெயர் இயங்குநிலையில்…

    மகாஜனக் கல்லூரியின் இலக்கிய பாரம்பரியம் கடல்கடந்த நிலையில் புகலிட நாடுகளில் உயிரோட்டத்துடன் தொடர்வதைக் கடந்த கால்நூற்றாண்டு வரலாற்றி யக்கத்தில் தெளிவாகவே இனங்காண முடிகின்றது. இக்கட்டுரையின் தொடக்கப்பகுதியில் நாம் ஏலவே சுட்டியதுபோல உலகநாடுகள் பலவற்றிலும் வாழும் ஈழத்தமிழ் இலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்க தொகையினர் தம்மை,‘மகாஜன இலக்கிய பாரம்பரியத்தினர்’ என ‘உரிமையுணர்வு’ டனும் பெருமையுடனும் அடையாளப்;படுத்தி நிற்பவர்களாவர்.

     இவ்வாறாக புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் மகாஜன இலக்கிய பாரம்பரியத்தினருட் பலரும் கலை, இலக்கியம் ஆகிய துறைகளில்  அனைத்துலகநிலையில் நிகழ்ந்துவரும் வளர்ச்சிப் பரிமாணங்களையும் நன்கு தெரிந்து தெளிந்து செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாக,இவர்களுட்பலரும்  கலைää இலக்கியம் எனபன தொடர்பான உலகுதழுவிய பார்வைகளை; உள்வாங்கியவர்களாக செயற்படுகின்றனர். அத்துடன் தொடர்புசாதன தொழில்நுட்பத் திறன்களையும்   வளர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களுள் ஒருசாரார்  வளர்ச்சியடைந்துள்ளநாடுகளின் அறிவியல்ääதொழில்நுட்பம் மற்றும் சமூகவியல் முதலிய பல்வேறுதுறைகளின் அறிவுப்பரப்புகளை  அருகிருந்து தரிசிக்கவும் பெற்றுக்கொள்ளவும்  வாய்ப்புபகள்  பெற்றுள்ளவர்களாவர். அவ்வாறு பெற்றுக்கொண்டவற்றைத் தமிழ்ப்பண்பாட்டுத்தளத்துக்கு மடைமாற்றம் செய்ய இவர்கள் முனைந்துவருகின்றனர். இவ்வாறான புலம்பெயர் இயங்குநிலையிலே மகாஜன இலக்கிய பாரம்பரியம் புதிய  திசைவழிகளில் முன்னோக்கிச் செல்வது தெளிவாகவே தெரிகின்றது. 

     இவ்வாறான முன்னோக்கிய செயற்பாட்டினர்; என்றவகையிலே அதிபர்    பொ.கனகசபாபதி, பேராசிரியர்கள் உ.சேரன், ஆ.க.சி.கந்தராசா மற்றும் கந்தையா முருகதாசன், இளவாலை விஜயேந்திரன், இளவாலை ஜெகதீசன்,  க.நவம், நா. கணேசபிள்ளை, கௌசல்யா சுப்பிரமணியன், குரு அரவிந்தன், ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, பொ.இரகுபதி,‘வெற்றிமணி’ மு.க.சிவகுமாரன், நா. சபேசன், மு.இளங்கோ, குரும்பசிட்டி.ஜெகதீஸ்வரன், கதிர் துரைசிங்கம், சிவ ஞானநாயகன, அம்மா மனோகரன், ப.வை.ஜெயபாலன்,  “இளங்கோ”(மு.மதிமாறன்), பிரணவன் மகேந்திரராஜா என பலர் பெயர்களை இங்கு  முன்வைக்கமுடியும்.   (மேற்படி பெயர்ப்பட்டியல் முழுமையானதன்று என்பதை இங்கு குறிப்பிடுவது  அவசியமாகிறது.  எமது கவனத்திற்குவந்த குறிப்பிடத்தக்க சிலரின் பெயர்கள் மட்டுமே  இங்கு பதிவு பெற்றுள்ளன.  இவர்களுள் ஒருசாரார்  முன்னரே ஈழத்தில் இலக்கியவுலகில் கால் பதித்து இயங்கிநின்று,அதன் தொடர்ச்சியாக  புலம்பெயர் சூழல்களிலும் தம் ஆளுமையை விரிவுபடுத்தி வருபவர்களாவர்.இவர்கள் அனைவரையும் பற்றித் தனித்தனி நிலையில் எடுத்துப்பேசுதற்கு ஆர்வம் உளது.  இக்கட்டுரை எழுதிய சூழலில் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. எனவே குறித்த சிலரைப்பற்றிய தகவல்களே தனித்தனி நிலையில் இங்கு முன்வைக்கப்படுகின்றன.  எதிர்காலத்தில் இக்கட்டுரை நூல்வடிவில் விரிவுறும்போது  ஏனையவர்களைப்பற்றிய தகவல்களும் தனித்தனி நிலையில் பதிவாவது  சாத்தியமாகலாம்.)

   மகாஜனக் கல்லூரியில் 1960களில் சில ஆண்டுகள் ஆசிரியராகவும் 1970களின் பிற்கூற்றில் அதிபராகவும் திகழ்ந்த திரு.பொ.கனகசபாபதி அவர்கள் அக்காலப்பகுதிகளில் மாணவர்களின் இலக்கிய ஈடுபாட்டுக்கு ஊக்கமளித்து நின்ற ஒருவர் என்பதை முன்னர் நோக்கியுள்ளோம். புலம்பெயர் சூழலிலே, கனடாவை மையப்படுத்திநின்று அனைத்துலகப் பார்வையுடன் இயங்கும் அவர், புனைகதை சார்ந்த எழுத்தாக்கங்கள் மற்றும் விமர்சனம் முதலியவற்றை நோக்கித் தமது ஆளுமையை விரிவுபடுத்தியுள்ளார். விமர்சனம் என்றவகையிலே அவர் கலை,இலக்கியம்,‘சமூக-பண்பாட்டு’ வரலாறு, அறிவியல் அம்சங்கள் மற்றும் விளையாட்டு முதலிய பல்துறைகள் சார்ந்து கட்டுரைகளும் எழுதி வருகிறார்.  மாறன் மணிக் கதைகள், திறவுகோல் (இதுஒருவிண்ணாணம்), மனம் எங்கே போகிறது.?, மரம் மாந்தர் மிருகம், எம்மை வாழவைத்தவர்கள்   ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நூல்கள்; இவருடைய விரிந்துசெல்லும் ஆளுமையின் முக்கிய பதிவுகளாகும்.  இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ‘புலம்பெயர் சூழல்சார் மகாஜன இலக்கிய பாரம்பரிய’த்தை சிறப்பாக முன்னெடுத்துவரும்  இவர், அனைத்துலக நிலையிலான மகாஜன இலக்கியவாதிகளை இணைக்கும் ஒரு ‘இலக்கியப்பால’மாகவும் திகழ்கிறார். 

    சேரனின் ஆளுமை அம்சங்கள் தொடர்பாக முன்னரே நோக்கியுள்ளோம். ‘புலம்பெயர் இலக்கியச் சூழல்’ என்றவகையில்   இங்கு நாம் சிறப்பாகச் சுட்டவேண்டிய அம்சம் ஒன்றுளது. 80களின் மத்தியிலிருந்து உருவாகத் தொடங்கிய புலம்பெயர் இலக்கியமானது ‘தனக்கெனத் தனி அடையாளங்களைக் கொண்டது’ என்பதையும் அதனால் அதுää‘கவனிக்கப்படவேண்டியதான முக்கியத்துவமுடைய தனியொருவகைமை’ என்பதையும் 90களில் பொதுவான தமிழிலக்கியச்சூழலில் எடுத்துப்பேசியவர்களில் முக்கியமான ஒருவர் அவர். தமிழரின் பாரம்பரியமானதும் தமிழகப் புவிச் சூழலை மையப்படுத்தியதுமான   ‘ஐந்திணை’ என்ற  சிந்தனைக்கு  மேலாக புலம்பெயர் நிலைமையின் நிலைகளின்  ‘ஆறாந்திணை’ (ஆறாவது திணை) மற்றும் ‘ஏழாந்திணை’என்ற ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்தவர்.இக்கருத்தாக்கங்கள்சமகால வரலாற்றில் நிலைத்துவிட்டன.  சேரன் அவர்களூடாக மகாஜனக்கல்லூரி  சமகாலத் தமிழிலக்கியச் சூழலுக்கு வழங்கிய முக்கிய  பங்களிப்பு இது என்பது குறிப்பிடப்படவேண்டிய முக்கிய செய்தியாகும். சேரனின் ஆளுமை தொடர்பாக  இங்கு குறிப்பிடவேண்டிய மற்றொரு செய்தி  ரொறன்ரோ பல்கலைக்கழகத்தை மையமாகக்கொண்டு அனைத்துலக மட்டத்தில் தமிழியலாய்வை முன்னெடுக்கும் செயற்பாடாகும். பேராசிரியர் செல்வா கனகநாயகம் முதலிய அறிஞர்களுடனிணைந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இவர்  இப்பணியைச் சிறப்புற மேற்கொண்டு வருகிறார்.

    1950-60களில் மகாஜனக்கல்லூரியில் பயின்றவராக அறியப்படும் கந்தையா முருகதாசன் அவர்கள் புனைகதை, நாடகம் மற்றும் இதழியல் முதலிய துறைகளில் ஈடுபாடுகொண்டவர். ஜெர்மனியைத் தளமாகக்கொண்டுள்ள இவர் புலம்பெயர் இலக்கிய வாதிகளை இணைக்கும் செயற்பாட்டாளராகவும் திகழ்பவராவார் . 

   கனடாவைக் களமாகக் கொண்டு இலக்கியத்துறையில் இயங்கிநிற்கும் குரு அரவிந்தன் அவர்கள புலம்பெயர் சூழலில் அதிக வாசகர்களால் அறியப்பட்ட ஒரு படைப்பாளியாவார்.  புனைகதைத் துறையில் தீவிர ஈடுபாடு காட்டிநிற்பவரான   ;இவர்  குறிப்பாக, கனடா மற்றும் ‘யு.எஸ்.’உட்பட்ட வடஅமெரிக்கச் சூழலில் வாழும் தமிழர்களின் சமூக – குடும்ப உறவுகளின் உணர்வோட்டங்களை எழுத்தில் வடித்துவந்துள்ளார்.   அறிவியல்சார்; கண்ணோட்டமும்   சமூக யதார்த்தப்பார்வையும்  கொண்ட  படைப்பாளியாக இவர்  வளர்த்துவருவது தெரிகிறது.    புனைகதைப் படைப்பு  என்பதற்கு   மேலாக, கலை இலக்கிய ஆய்வு- திறனாய்வு,திரைப்படப் பிரதியாக்கம் மற்றும்   ஒளிப்பட இயக்கம் முதலான துறைகளையும் நோக்கி  இவருடைய கலைääஇலக்கிய ஆளுமை  விரிவடைந்து செல்கின்றது.

    ஸ்ரீரஞ்சனி அவர்கள் கனடாச் சூழலின் தமிழ்க் குடும்பங்களில் சமகாலத் தலைமுறையினர் மற்றும்  புதிய தலைமுறையினர் ஆகியோருக்கிடையில் ஏற்படும் ‘உளமுரண்’ அம்சங்களை மையப்படுத்திப் புனைகதைகள் படைத்துவருகிறார். குறிப்பாகப் ‘பெண்மை’ மற்றும் ‘பெற்றோரியம்’ முதலியன தொடர்பான அம்சங்கள் இவருடைய கவனிப்புக்கு உட்பட்டுள்ளமையை அவருடைய ஆக்கங்களில்  நோக்கமுடிகின்றது. ஒரு படைப்பாளி எனபதற்கு மேலாக கலைஇலக்கியஆய்வு-திறனாய்வு ஆகிய துறைகளையும நோக்கி இவருடைய எழுத்துத்துறை இயங்குநிலை   விரிவுபெற்று வருகின்றது.  

    கனடாவில் வாழும் இலக்கியவாதிகளுள் முக்கியமான ஒருவரான க.நவம் (க.நவரத்தினம்) அவர்கள் படைப்பு,  திறனாய்வு மற்றும் இதழியல் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவர் பதினைந்தாண்டுகளின் முன் தொடர்ச்சியாக வெளிவந்து நிறைவுபெற்றதான நான்காவது பரிமாணம் என்ற  புலம்பெயர்  இதழின் ஆசிரியர் என்பதும் அவ்வகையில் புலம்பெயர் இதழியல் வரலாற்றியக்கத்துக்கு முக்கியபங்களிப்பு செய்துள்ளவர் என்பதும் இங்கு நமது கவனத்துக்குரியன.  இத்தகு ஆளுமை கொண்ட திரு.க. நவம் அவர்கள்  மகாஜனக்கல்லுரியில் 1970களில் சில தினங்;கள் (பயிற்சி ஆசிரியர் நிலையில்)  கற்பித்தவர் என்ற வகையில், ‘மகாஜனாவின்  இலக்கியப்பாரம்பரியத்துடன் அவர் தொடர்புடையவராகிறார்.

51 திரைத்துறை ஈடுபாடு - சுருக்கக்குறிப்பு  

     மேற்சுட்டியவாறான   மகாஜன இலக்கிய பாரம்பரியத்தினரின புலம்பெயர் சூழல்சார் இயங்குநிலையிலே  தனிக் கவனத்துக்க வரும் ஒரு முக்கிய அம்சம்  திரைப்படம் என்ற துறைசார்ந்த  ஈடுபாடாகும். (குரு அரவிந்தன் அவர்கள் ‘திரைக்கதையாக்கம்’ , ஒளிப்பட இயக்கம் என்பவற்றில் ஈடுபாடுகொண்டிருப்பவர்; என்பதை மேலே  நோக்கினோம்.)

      1950கள்  காலப்பகுதியிலே மகாஜனாவிற் பயின்ற ஒருவரான   திரு. விஜயசிங்கம்  அவர்கள் தமிழகத்தின் திரைப்படத்துறையில்  அடிபதித்து, இயக்குநராக வளர்ந்துள்ளார்.. கொல்லங்கலட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த இவர் இளம்வயது முதல் 1959வரை மகாஜனாவிற் பயின்றவர்.   சென்னையில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்து பின்னர் இயக்குனர் என்ற நிலைக்குவளர்ந்தவர் இவர்.  ‘பணம் பத்தும் செய்யும்’. முதலிய சில என்ற படங்களை இவர் இயக்கியுள்ளார்.

    மேலும்  மாவை நித்தியானந்தன், கதிர். துரைசிங்கம், சேரன் ,க. நவம், மு.க.சிவகுமாரன், அ.கேதீஸ்வரன், சுரேஸ்ராஜா, மா.தியாகேஸ்வரன், ‘ரொலெக்ஸ்’நடராசா, இராமநாதன், ஜெயசிங்கம் , சுமங்கலி அரியநாயகம்  என திரைத் துறையில் ஈடுபாடுகாட்டிநிற்கும் மகாஜனர்களின் பெயர்வரிசை விரிந்துசெல்கிறது மகாஜனா பல்லாண்டுகளாக வளர்த்துவந்துள்ள  நாடக மரபின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இதனை நாம் கருதமுடிகின்றது;

  6.மகாஜனக் கல்லூரியின் இலக்கிய பாரம்பரியம் என்ற கருத்தாக்கம்

     1960இல் வெளிவந்ததான துரையப்பா பிள்ளையவர்களின் பாடல்களின் தொகுப்பான சிந்தனைச்சோலை மற்றும் 1972இல் வெளிவந்த பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு நினைவு மலர்  ஆகியன  மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியம் தொடர்பான ஆய்வுகளுக்குத் தோற்றுவாய் செய்வனவாக அமைந்தவை என்பதை மேலே நோக்கியுள்ளோம். ‘மகாஜனக்கல்லூரியின் இலக்கியப்பாரம்பரியம்’ என்ற எண்ணக்கருவை உருவாக்கயதில் திரு ஆ.சி. சிவநேசச் செல்வன் மற்றும் மயிலங்கூடலூர் பி.நடராசன் ஆகியோருக்க முக்கிய பங்கு உளது என்பதும் முன்னர் சுட்டப்பட்டது.

      1970களின் மத்தியில் உருவான புத்தெழுச்சியைத் தொடர்ந்து ‘மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியம்’ என்ற உணர்வோட்டம் வலுப்பெற்றுவந்தது. 1981இல் நூலுருப்பெற்ற இவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அன்று யாழ்ப்பாணப்பல்கலைக்கழக தமிழ்விரிவுரையாளராகத் திகழ்ந்தவரான எம். ஏ. நுஃமான் அவர்கள் வழங்கிய அறிமுகவுரையானது அக்காலப்பகுதிவரையான மகாஜனாவின் இலக்கியப் பங்களிப்பு தொடர்பான ஒரு வரலாற்றுக் குறிப்பாக அமைந்தது.  மகாஜனாவின் இலக்கியவரலாறு பற்றிய ஆய்வுநிலைப்பட்ட ‘முதல் வரைவு’ இதுவே எனலாம்.

     யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே தமிழ்ச் சிறப்புப் பட்டத்துக்குப் பயின்றவரான    சி.சுமத்திரி அவர்கள் அப்பட்டத்தேர்வின் ஒருபகுதியாக மஹாகவியின் வாழ்க்கையும் கவிதையும் என்ற தலைப்பிலான ஆய்வேட்டை 1979இல் சமர்ப்பித்துள்ளார் என்ற தகவலையும் இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது.  பாவலரின்  நினைவுகளைப் பேணிக்கொள்ளும் வகையில் இக் கல்லூரியிலே ஆண்டுதோறும்; நிகழ்த்தப்பட்டுவந்துள்ள நினைவுப் பேருரைகளில் ‘மகாஜனாவின்  இலக்கியப் பாரம்பரியம்’ தொடர்பான அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படலாயின. இவ்வகையில், ‘பாவலரும் பாரதியும்’ - நா.சுப்பிரமணியன்(24-06-1982), பாவலர் துரையப்பா பிள்ளையின் யாழ்ப்பாணம் - அன்றும் இன்றும் பேராசிரியர் - கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை(1986)  ‘மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம்’ - நாகலிங்கம் சண்முகலிங்கன்(24-06-1988), ‘ஈழத்துத் தமிழ் நாடகமரபில் மகாஜனக்கல்லூரி’ - கலாநிதி சி.மௌனகுரு (29-10-1989) ஆகிய தலைப்புகளிலமைந்த  ‘பாவலர் நினைவுப் பேருரை’ப் பதிவுகள்  குறிப்பிடத்தக்கன.
    . 
     இவை தவிர,இலண்டனில் வாழும் மகாஜனக் கல்லூரியின் பழையமாணவர்கள் ‘வாணியின் வீடு’ என்ற தலைப்பிலே 1988இல் வெளியிட்ட சிறுநூலும்  ‘மகாஜனவின் இலக்கியப பாரம்பரியம்’ பற்றிய பார்வையில்  குறிப்பிடத்தக்கமுக்கியத்துவமுடையதாகும். ‘தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியின் இலக்கிய உலகப் பணிகள் பற்றிய மதிப்பீடுகள்’ என்ற துணைத்தலைப்புடன் அமைந்த இவ்வாக்கம் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை, கலாநிதி நா.சுப்பிரமணியன், எம். ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய  கட்டுரைகளை - உள்ளடக்கிய தொகுப்பாகும். பாவலர் மறைந்த 75ஆம் ஆண்டு நினைவாக 2004இல பிரான்சிலுள்ள மகாஜனாவின்  பழைய மாணவர் சங்கம்  வெளியிட்ட   பவளமல்லி என்ற தொகுப்பும் இவ்வகையில்  முக்கியமான ஒரு பதிவாகும். பாவலர் தொடர்பான முக்கிய பார்வைகள் சில இதில் பதிவாகியுள்ளன. ‘ஈழத்தின் தமிழிலக்கிய வரலாற்றியக்கத்தலே மகாஜனக் கல்லூரி சார்ந்த முன்னோடி இலக்கியவாதிகளுட் பலரும் முக்கிய இயக்குவிசைகளாகத் திகழ்ந்துள்ளனர்;’ என்பதற்கான தரவுகளைப் பேணி நிலைப்படுத்தும் செயற்பாடுகளாக இவை அமைந்தன.

     இவ்வாறாகப் பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த  ‘மகாஜனக் கல்லூரியின் இலக்கிய பாரம்பரியம்’ என்ற கருத்தாக்கங்களின் ‘அஞ்சலோட்டத்தொடர்ச்சி’யாகவே, அக்கல்லூரியின் நூற்றாண்டு நிறைவை முன்வைத்து ‘மகாஜனாவும் ஈழத்து இலக்கிபாரம்பரியமும்’ என்ற தலைப்பிலான இக்கட்டுரை கருவாகி உருவாகியுள்ளது. இத்தொடர்பிலான தேடல்களில் அண்மைக்காலம்வரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்த வரலாற்றுப்பார்வை அமைந்துளது. குறிப்பாக 1980களின் இறுதிப்பகுதி முதலான கடந்த 20ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலகட்டத்தின் மகாஜனக் கல்லூரித்தள இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இக்கட்டுரை உருவாகும் கட்டம்வரை கிடைக்கவில்லை என்பதை இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது. இவ்வகையில் மேலும் தகவல்கள் கிடைக்கும் நிலையில் எமது இந்த வரலாற்றுப்பார்வையானது விரிவு, ஆழம் மற்றும் மாற்றம் என்பவற்றை எய்தும்.

   பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை அவர்களை முதல்வராகக்கொண்டு தொடர்கின்றதான மேற்படி மகாஜனாவின் நூறாண்டுகால இலக்கிய பாரம்பரியத்தினை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கும் பொழுது,ஈழத்து இலக்கியத்தின் கடந்த நூறாண்டுகால வரலாற்றின் பொதுவான செல்நெறியிலே அக்கல்லூரியின் இலக்கியச்செயற்பாடுகள் மிக முக்கியமான தடங்களைப் பதித்துள்ளன என்பதையும் தொடர்ந்து பதித்து வருகின்றன என்பதைத் தெளிவாகவே இனங்காணமுடிகின்றது. மேலும் குறிப்பாக, புகலிடச் சூழல்களிலும்    மேற்படி கல்லூரி சார்ந்தோரின் இலக்கிய இயங்குநிலைகள் சீரானகதியில் தொடர்கின்றன என்பதும்  தெளிவாகவே தெரிகின்றது.   இவ்வாறான மகாஜனாவின் பங்களிப்பு நிலை எதிர்காலத்திலும் தொய்வின்றித் தொடரவேண்டுமென விழைகின்றோம். அவ்வாறே தொடரும் என்பதே  எமது நம்பிக்கையுமாகும்.

குறிப்புகளும் சான்றாதாரங்களும்

1.  “அ.ந.கந்தசாமி அவர்கள் பின்னர்   யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சேர்ந்து பயின்றாலும் இவரது ஆரம்ப விதைகள் மகாஜனாவிலேயே தூவப்பட்டன.”     எம்.ஏ. நுஃமான்.  இவர்கள்  சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்  தகவல் : வாணியின் வீடு -தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியின் இலக்கிய உலகப்  பணிகள் பற்றிய மதிப்பீடுகள்.  தெல்லிப்பழைமகாஜனக்கல்லூரி பழைய மாணவர் வெளியீடு,இலண்டன் .1988. ப.20

2.  “இம் மூவரையம் மகாஜனக் கல்லூரி பெற்றெடுத்த மும்மணிகள் என  கனக.செந்திநாதன் ääகதிரேசர்பிள்ளை ஆகியோர் மதிப்பிட்டுள்ளனர.”     எம் ஏ. நுஃமான்:  மேற்படி.   “மறுமலர்ச்சிக்கால மும்மணிகளாகக் கருதப்படுகின்ற அ.செ.முருகானந்தன்,  அ.ந. கந்தசாமி ,மஹாகவி ஆகிய மூவரும்…”     நாகலிங்கம் சண்முகலிங்கன்: ‘மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம்’    பாலர் துரையப்பா பிள்ளை நினைவுப் பேருரை-7 மகாஜனக்கல்லூரி,    தெல்லிப்பளை . 1988-06-24.  ப.4

  3  கலாநிதி சி. மௌனகுரு,‘ஈழத்துத் தமிழ் நாடகமரபில் மகாஜனக்கல்லூரி’ பாவலர் தெ.அ. துரையப்பாபிள்ளை  நினைவுப் பேருரை-8,தெல்லிப்பழை.1989. 10-29. ப.8.

  4.  தகவல் : செங்கை ஆழியான், (தொகுப்பாசிரியர்)மறுமலர்ச்சிக் கதைகள்.  இலங்கை வட-கீழ் மாகாண  ‘கல்வி, பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு’ வெளியீடு.   பக்: எ

5.  கனக. செந்திநாதன்,ஈழத்து இலக்கிய வளர்ச்சி, அரசு வெளியீடுääகொழும்பு 1964.  ப.40

6.  மலர் மன்னன் வெளியீடான  என்ற இதழில் இடம்பெற்றதான  எம் . ஏ.     நுஃமானின்  இக்குறிப்பு தொடர்பான மேலதிக தகவலுக்கு : பார்க்க:    கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் -பார்வைகள் -பதிவுகள்-2 (பதி. கௌசல்யா சுப்பிரமணியன் சவுத் விஷன் வெளியீடு ,சென்னை , 2005.) ப. 229.

7. எம் .ஏ. நுஃமான் இவர்கள்   அறிமுகம் . வாணியின் வீடு மேற்படி: ப. 20.

8. சண்முகம் சிவலிங்கம்அவர்கள்  மஹகாகவியின் கோடை(வாசகர் சங்க வெளியீடு,  கல்முனை, 1970)பாநாடகத்தின்பின்னுரையில்(ப.72) பதிவுசெய்துள்ள கணிப்பு இது.

9. இலங்கை,மொரட்டுவைப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடான நுட்பம் -  1981 இதழில் இடம் பெற்றுள்ள அ.ந.கந்தசாமியின் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல் இது

10. அ.ந.கவின் சிறுகதைகள் நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்புகள்   என்பன தொடர்பான இவ்வகைத் தகவல்களிற்பலவற்றுக்குமான ஆதாரம்:
    திரு.வ.ந.கிரிதரன் “அ.ந.கந்தசாமி --- சிறு அறிமுகம்”.  பதிவுகள் (இணைய இதழ்) மே.2006.

11. கைலாசபதி,  ஒப்பியல் இலக்கியம் ,பாரி நிலையம் ääசென்னை . 1969.

12. தகவல்கள்: திரு. வ.ந. கிரிதரன் : பதிவுகள் (இணைய தளம்) முற்குறிப்பிட்டது.

13.  எம் .ஏ. நுஃமான், இவர்கள் அறிமுகவுரை வாணியின் வீடு மு.கு : ப. 20.

14.  தகவல் : மாணவர் தமிழ்மன்றம் உருவானமை பற்றிய தகவல்: எம்.ஏ.நுஃமான் மேற்படி. 

15. இவ் வரலாற்றுச் செய்திகளுக்கான  தகவல்கள்:   அ. கலாநிதி சி. மௌனகுரு‘ஈழத்துத்தமிழ் நாடகமரபில் மகாஜனக்கல்லூரி’  மேற்படி. பக், 9-10    ஆ. க. சொக்கலிங்கம் எம் .ஏ (பின்னாளில் கலாநிதி ) ஈழத்துத் தமிழ்நாடக இலக்கிய வளர்ச்சி,முத்தமிழ்     வெளியீட்டுக்கழகமääயாழ்ப்பாணம், 1977   பக். 162, 198-99

16. பார்க்க:  இலக்கியவழியில் இனிய நறுமலர்ääமயிலங்கூடலூர் பி.நடராசன்(தொகு)
   கலைப்பெருமன்றம்,அம்பனை.1972 பக் 3-5

17. தகவல் : நாகலிங்கம் சண்முகலிங்கன்: ‘மகாஜனக் கல்லூரியின் இலக்கியப்பாரம்பரியம்’,மேற்படி.   பக்.10-11

18. தகவல்: நாகலிங்கம் சண்முகலிங்கன். மேற்படி ப.13.(இவர் ,நா.சபேசன் அவர்களின் இனிவரும்காலம் (பொதிகை ääசென்னை.1986)என்றஆக்கத்திலிருந்து  மேற்படி தகவலை எடுத்தாண்டுள்ளார்.

19. நாகலிங்கம் சண்முகலிங்கன்  மேற்படி: ப.11

20. மேற்படி:ப.13.நா.சபேசன் அவர்களின்   இனிவரும்காலம் (பொதிகை ,சென்னை.1986)என்ற ஆக்கத்திலிருந்து மேற்படி தகவலை எடுத்தாண்டுள்ளார்.

21. இச் சஞ்சிகையின் வரலாற்ற முக்கியத்துவம் தொடர்பான விளக்கத்திற்கு :   பார்க்க: நா.சுப்பிரமணியம்  (பின்னாளில் கலாநிதி நா. சுப்பிரமணியம் ),  “ஈழத்துத் தமிழிலக்கியச் சஞ்சிகை வரலாற்றில் ‘ புதுசு’வின் பண்பும் பணியும்”   ஈழநாடு வாரமலர்,யாழ்ப்பாணம். (30-03-1986---27-04-1986)  இக்கட்டுரை பின்னர் மேற்சுட்டிய வாணியின் வீடு மற்றும்  கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் -   பார்வைகள் -பதிவுகள்-2 ஆகியவற்றில்  மீள்பதிவு எய்தியுள்ளது.

- இக்கட்டுரையாக்கத்துக்கான தகவல்கள் பலவற்றைத் தந்துதவியவர்களான   திருவாளர்கள் பொ.கனகசபாபதி, குரு. அரவிந்தன்,க.முத்துலிங்கம்,வே. நந்தீஸ்வரன் மற்றும் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் ஆகியோருக்கு  எமது நன்றி) -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
-02-07-2014--