முன்னுரை

- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -நாட்டுப்புறக்கலைகளுள் சிறந்த இடத்தைப் பெறுவன நிகழ்த்துக்கலைகளாகும். திருவிழாக்காலங்களின் போதோ அல்லது சுபநிகழ்ச்சிகளின் போதோ நிகழ்த்துப்படுகின்ற கலையாதலால் இது ‘நிகழ்த்துக்கலை’ எனப்பெயர்பெறுகின்றது.

நிகழ்த்துக்கலை

மக்களின் முன் நிகழ்த்திக்காட்டப்படுவதால் இது நிகழ்த்துக்கலை எனப் பெயர் பெற்றன. நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் என்னும் சொற்றொடர் ‘Folk Performing Art’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாகக் காட்சிதருகிறது.

இச்சொற்றொடரில் முக்கியமான நிகழ்த்துதல் என்பது ஏனையவற்றை உள்ளடக்கி நிற்பதை நம்மால் உய்த்து உணரமுடிகிறது.

நாம் நடத்துகின்ற நிகழ்த்துதல் அழகு உடையதாகவும், நம்முடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதாகும். நம்கருத்து முழுமையாக பார்வையாளர்களை அடைவதாகவும் இருத்தல் வேண்டும்.

நிகழ்த்துகலைகளாவன

கரகாட்டம்
காவடியாட்டம்
தேவராட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
பொய்க்கால்குதிரையாட்டம்

கரகாட்டம்

கரகம்+ஆட்டம்=கரகாட்டம்

கரகம் என்பது மண்ணாலோ, செப்பினாலோ மற்ற உலோகத்தினாலோ சிறியபானையாக உருவாக்கப்படுகிறது.

கரகம் என்பதற்கு ஆலங்கட்டி, நீர்த்துளி, கமண்டலம், புனிதநீர்தாங்கும்குடம், கும்பம்,செம்புக்குடம் ஆகியவையே இக்கலையுடன் தொடர்புபடுத்தமுடியும் என்று ஆ.காபெருமாள், ரா.இராமச்சந்திரன் ஆகிய இருவரும் கூறுகிறார்கள்.1

தலையில் கரகத்தை வைத்து ஆடுவதால் இது கரகாட்டம் என்று அழைக்கப்படுகிறது. நையாண்டி மேளத்தின் பின்னணிக்கேற்ப ஆட்டத்தின் வேகமானது மாறுபடும்.

கரகாட்டம் தெய்வவழிபாட்டுடனும், தொழில் முறையடனும் தொடர்புடையது தெய்வவழிபாடு கரகத்தை சத்தி கரகம் என்பர். தொழில் முறைக்கரகத்தை ஆட்டக்கரகம் என்றும் கூறுவர். இவ்வாட்டக் கரகத்தைத் தோண்டிக்கரகம், செப்புக்கரகம் எனவும் அழைப்பர். இவ்வாட்டமானது தஞ்சாவூர்,திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் ஆடப்படுகிறது.

காவடியாட்டம்

கா+அடி+ஆட்டம்

அ.அறிவு நம்பி கு.முருகேசன் போன்ற நாட்டுப்புறப்பாடல் அறிஞர்கள் காவடி என்ற சொல்லிற்கு அடிச்சொல்லாக் “கா“ என்ற எழுத்தை இருந்து இருக்க வேண்டுமென்று சான்றுகாட்டி விளக்கம் அளித்துள்ளனர்.

காவடியாட்டமானது பெரும்பாலும் முருகனின் அருள்பெறும் வேண்டி பக்தர்கள் தங்களுடைய தோளில் காவடியினைச் சுமந்துச் சென்று தங்களுடைய வேண்டுதலை முருகனிடம் வைத்து முருகனின் அருளினைப் பெறுவதற்காக ஆடப்படும் ஆட்டமாகும்.

இவ்வாட்டத்தில் பெரும் பங்கு மேளத்திற்கும், தாளத்திற்குமே உண்டு .பழனி கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது பழனிக்கு வரும் பக்கதர்கள் முருகனைப் போற்றி காவடியினை ஏந்தியபடி காவடிச்சிந்தினைத் தம் வாயாரப் பாடி மகிழ்ந்தனர்.

ஒருவர் காவடிச் சிந்தினைத் தம் வாயாரப் பாடி மற்றவர்கள் எல்லோரும் பின் தொடர்ந்து ‘அரோகரா’ என்று குரலினை எழுப்புவர்.

காவடியின் வகைகள்

புஷ்பக்காவடி, பன்னீர் காவடி, மச்சக்காவடி, மயில்காவடி, பால்காவடி, சந்தனக்காவடி, பஞ்சாமிர்தக்காவடி போன்ற பலவகையானக் காவடிகள் காணப்படுகின்றன.

பொய்க்கால் குதிரையாட்டம்

இரண்டடி நீளம் கொண்ட மரக்கட்டையைக் காலில் கட்டிக் கொண்டு அதன் மீது ஆணும் பெண்ணும் நின்ற வண்ணமாக வண்ண வண்ண காகித்த்தாலே (அ) வண்ண வண்ண் துணிகளோலோ பொய்க்கால் குதிரையினைச் செய்து அதனை முதுகில் தூக்கியவாறு ஒரு வகையான இசை மரபுக்கேற்ப ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரையாட்டம் எனப்படும். இக்கலை ஒரிஷசாவில் ‘சைத்திகோடா’ என்றும் பெயர் பெற்றிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் தமிழக்க் கலைஞர்களே இக்கலையை நிகழ்த்தச் செல்கின்றனர். மேலும் ருஷ்யா, போலந்த், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது என கு.முருகேசன் இக்கலையைப் பற்றி ஆய்ந்து கூறுகிறார்.2

தற்போது பெரும்பாலும் இந்நிகழ்த்து கலைஞர்கள் சென்னை விழுப்புரம், கடலூர், பண்ரூட்டி, சேலம், ஈரோடு, மதுரை முதலான ஊர்களில் இருப்பதாக அறிந்த போதிலும் பொய்க்கால் குதிரையாட்டம் என்றால் நம்முடைய நினைவின் முன் நிற்பது தஞ்சாவூரே ஆகும். இக்கலைக்கு புகழ் பெற்றதும் தஞ்சாவூரே ஆகும்.

பொய்க்கால் குதிரையாட்டம் என்றால் தஞ்சை

தஞ்சையென்றாலே பொய்க்கால் குதிரையாட்டம்

என்னும் அளவிற்கு பொய்க்கால் குதிரையாட்டத்தில் இம்மாவட்டமானது பெயர் பெற்று சிறப்புடன் விளங்குகிறது.


மாடு ஆட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம் போன்றே காளைமாட்டின் கூட்டினுள் தன் உடம்பை மறைத்துக் கொண்டு ஏழு வகையான இசைக்கேற்ப ஆடும் ஆட்டம் மாடு ஆட்டம் (அ) காளையாட்டம் என்று வழங்கப்படுகின்றது.

இஃது முதல் வினைக்குத் துணைவினை இருப்பதுபோல இது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவே இருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாட்டத்திற்கு தலைப்பகுதி தனியாகவும், உடம்பு பகுதி தனியாகவும் செய்து பின்னர் உடம்பினுள் பொருத்தி ஆடுகின்றனர்.இவ்வாட்டம் இன்று பல இடங்களில் காணப்படுகின்றது.

மயிலாட்டம்

ஆண்கள் ஆடும் ஆட்டமாகும். இந்தியாவின் பாரம்பரிய கலையான பரத நாட்டியத்தில் மயிலாட்டம் என்ற ஒரு பிரிவும் காணப்படுகிறது. இது துணையாட்டமாகக் காணப்படுகிறது.

மயில் அகவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பினும் மேளதாளத்திற்கேற்ப மயில் ஆட்டக்கலைஞர் மயிலின் அசைவுகளை ஆட்டிக்காட்டுகிறார். மயில் தோகை விரித்தல், அகவுதல், தலையை அசைத்தல், ஓடுதல் போன்ற செயல்களை மயிலாட்டக் கலைஞர்கள் எவ்வளவு எவ்வாறு நுணுக்கமாக செய்கிறார்களோ அந்த அளவுக்கு ஆட்டம் சிறப்பாக அமையும் மயிலாட்டத்தில் குரல் சாகசம், நடை சாகசம் போன்றவை முக்கியமாகக் கருதப்படுகிறது.3

தப்பாட்டம்

“தப்பு“ என்னும் தோலினால் செய்யப்பட்ட கருவியை அடித்து ஆண்களால் மட்டுமே தப்பாட்டம் ஆடப்படும். சமீபகாலமாக பெண்களாலும் தப்பாட்டம் ஆடுவதை நம்மால் காணமுடிகிறது. இவ்வாட்டத்தை நிகழ்த்துபவர்கள் குறிப்பிட்ட சாதியினைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இவ்வாட்டத்தினை நிகழ்த்துபவர் பல குழுக்களாக தஞ்சை மாவட்டத்திலும் தமிழகத்திலும், தென்மாவட்டங்களிலும் உள்ளனர். தப்பாட்டத்திற்கு சிறந்த குழு தஞ்சை ரெங்கநாதன் குழு என்று சொல்லும் அளவிற்கு பெயர்பெற்றது.

சாமி அடி    – கோவில் திருவிழா, சாமி ஊர்வலம்

முகூர்த்த அடி    - திருமணம், மஞ்சள் நீராட்டு விழா

சாவுஅடி    - மரணத்தின் போது அடிப்பது

ஒத்த அடி    - சாவுக்கு மறுநாள் பால் தெளிப்பின் போது

அடிப்பது4

என்ற நிலைகளில் தப்பாட்ட அடியானது நிகழ்கிறது.

தேவராட்டம்

திருமாலின் அருள் பெற்றவர்கள் நாங்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் கம்பளத்து நாயக்கர்களே தேவர்கள் ஆவர். இவர்கள் ஆடும் ஆட்டமே “தேவராட்டம்“ ஆகும். இது ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டமாகும்.

கலைக்கோட்டு மாமுனிவரின் மகள் ஆண் உறவின்றி புத்திரப்பேறு வேண்டும் என தந்தையிடம் வரம் கேட்டாள். அவர் அவளுக்குக் கண்பழம் (எலுமிச்சம் பழம்) ஒன்றைக் கொடுத்தார். அப்பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அக்குழந்தையின் மரபினைக் கண்பழத்தார் என்று அழைத்தனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது 5

முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்கி ஆடும் ஆட்டமாதலின் தேவராட்டம் என்று வழங்கினர். கம்பளத்து நாயக்கர்களும் தொட்டியர் என்றும் இராஜகம்பம் என்றும் வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

கம்பளத்து நாயக்கர்களால் இவ்வாட்டம் அதிகமாக ஆடப்படுகிறது. இவ்வாட்டத்தின் வாயிலாக கம்பளத்து நாய்க்கர் இயல்பு வாழ்க்கையும் மற்றும் அவர்களது சமூகம் சார்ந்த சடங்குகள் பற்றியும் அறிய முடிகின்றது. இச்சாதியினைச் சார்ந்த பெண்ணைத் திருமணத்திற்கு அழைத்துச் செல்லும் போது இவ்வாட்டம் ஆடப்படுகிறது. தேவராட்டம் ஆடுவோர் எண்ணிக்கை வரையறை ஏதுமில்லை.


முடிவுகள்

நாட்டுப்புற மக்கள் தங்களுடைய இன்பங்களை அனுபவிப்பதற்காகவும், துன்பங்களை மறப்பதற்காகவும், நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தினர் என்பது மிகையல்ல. நாளும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நாட்டுப்புற மக்களின் கலைகள் இன்று அழிந்து வருகின்றது. முந்தைய தலைமுறையின் கலை நிகழ்ச்சிகளை இந்த தலைமுறையைச் சேர்ந்த நாம் கண்டுகளிப்பதோடு மட்டுமல்லாது அடுத்து தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது நமது தலையாயக் கடைமையாகும்.

பார்வை நூல்கள்

1.பெருமாள் அ.கா இராமச்சந்திரன் ரா.தமிழக நாட்டார்நிகழ்த்துகலைகள் ப- 95

2. .பெருமாள் அ.கா இராமச்சந்திரன் ரா.தமிழக நாட்டார்நிகழ்த்துகலைகள் ப- 355

3. .பெருமாள் அ.கா இராமச்சந்திரன் ரா.தமிழக நாட்டார்நிகழ்த்துகலைகள் ப- 385

4.இராமநாதன் ஆறு,நாட்டுப்புறக்கலைகள் ப – 120-121,மெய்யப்பன் தமிழாய்வு மையம்,சிதம்பரம்.

5. .பெருமாள் அ.கா இராமச்சந்திரன் ரா.தமிழக நாட்டார்நிகழ்த்துகலைகள் ப- 281

6.நாட்டுப்புறஇயல் – சு.சக்திவேல்

7.தமிழக நாட்டுப்புறக் கலைகள் – சு.பால சுப்பிரமணியன்

 

மின்னஞ்சல் – இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.