சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப்பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


 

சிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 3 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..!

எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

வைகாசி மாதம் பிறந்தது
வசந்த காலமும் மலர்ந்தது
பூக்கள் பழங்கள் சொரிந்தன
பறவைகள் பாடிக் களித்தன.

தென்றல் காற்றும் வீசியது
தோப்பில் குயில்கள் கூவின
காக்கைகள் அழகாய்க் கூடுகள்
கட்டியே முட்டைகள் இட்டன.

கூடு கட்டத் தெரியாத
குயிலும் பார்த்தே இருந்தது
தன்னைப் போன்ற காக்கையென
தானும் நினைத்துக் கொண்டது.

காக்கை வெளியே பறக்கையிலே
கள்ளத் தனமாய்க் கூட்டினிலே
குயிலும் முட்டை இட்டதுவே
காக்கையும் அடை காத்ததுவே.

குஞ்சுகள் பொரித்து வந்திடவே
காக்கையும் இரையை ஊட்டியதே
எல்லாக் குஞ்சும் தனதெனவே
எண்ணிக் காக்கை வளர்த்ததுவே..

காக்கைக் குஞ்சுகள் கரைந்திடவே
குயிலின் குஞ்சுகள் கூவினவே
காக்கையும் அறிந்து கொண்டதுவே
குயிலின் செயலைப் புரிந்ததுவே..

வளர்ந்த குயிற் குஞ்சுகளை
வெளியே காகம் துரத்திடவே
இறக்கை விரித்துப் பறந்தனவே
இரையைத் தேடி மகிழ்ந்தனவே.

கீதம் பாடும் குயிலுக்கோ
குஞ்சை வளர்க்கத் தெரியவில்லை
இயலாதோர்க்கு உதவி செய்தால்
எல்லோர் வாழ்வும் சிறந்திடுமே.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.