சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப்பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

அழகிய தமிழ்ப் பாட்டி
எங்கள் ஔவைப் பாட்டி
இனிய தமிழில் பாடல்கள்
எமக்குத் தந்த பாட்டி.

பாலர் பாடி மகிழ
பாடல் பலவும் தந்தார்
நலமாய் மக்கள் வாழ
நீதி நெறிகள் சொன்னார்.

நெல்லிக் கனியை உண்டு
நீண்ட காலம் வாழ்ந்தார்
வாழும் வரைக்கும் தமிழை
வாழ்த்தி வளர்த்தே வந்தார்.

ஊர் ஊராய் நடந்தே
அழகு தமிழில் பாடினார்
அரச சபைக்கும் சென்றே
அறிவு உரைகள் சொன்னார்.

வயதால் தளர்ந்த போதும்
வாடிப் போக வில்லை
தமிழைப் பாடும் ஆவல்
துளியும் குறைய வில்லை.

வெயில் காலம் ஒன்றில்
வழியால் நடந்த போது
மிகவும் களைத்துப் போயே
மரத்தின் நிழலில் அமர்ந்தார்.

பாட்டி என்ன களைப்போ
பழங்கள் உமக்கு வேண்டுமோ.
சிறுவன் நாவல் மரத்தில்
சிரித்துக் கொண்டே கேட்டான்.

ஆமாம் அப்பனே போடு..
என்றே பாட்டி சொன்னார்
சுட்ட பழம் வேண்டுமோ
சுடாத பழம் வேண்டுமோ.?

என்றே சிறுவன் கேட்டான்
என்ன சுட்ட பழமோ..
ஒன்றும் விளங்க வில்லையே
என்று எண்ணிய பாட்டி.

சுவைத்துப் பார்ப்போம் என்றே
சுட்ட பழமே கேட்டார்
பழங்கள் நிறைய விழுந்தன
பாட்டி எடுத்து ஊதினார்.

பழங்கள் மிகவும் சூடோ..
பார்த்தே சிறுவன் கேட்டான்
தமிழை வென்ற ஔவை
தானும் சிரித்துக் கொண்டார்.

பழங்கள் மிகவும் சூடே
பார்த்தேன் அழகை முருகா
என்றே ஔவை பாட
அழகன் வாழ்த்தி நின்றான்.!

அழகன் முருகனே உருகிவிட்ட
ஔவையின் இனிய தமிழினையே
கற்றே உயர்வோம் வாழ்வினிலே
காலம் எல்லாம் மகிழ்ந்திடுவோம்.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.