இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2009 இதழ் 109  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

நினைவுகளின் தடத்தில் - (23 & 24)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன் -உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும் தான், என்னைப் புதியவனாகப் பார்க்காமல் வெகு அன்புடன் 'அண்ணா' என்று அழைக்க அதைக்கேட்க வெகு சுகமாக இருந்தது. பெரிய வீடு. நாட்டு ஓடு போட்ட வீடு. மண்தளத்தில் சாணிபோட்டு மெழுகிய கூடம், தாழ்வாரம். எட்டிப் பார்த்தால் கை நீட்டினால் தொட்டுவிடலாம் போல நீர் மேலெழுந்து நிரம்பியிருக்கும் கிணறு. உடையாளுரின் ஒரு திசையில் இரண்டு ·பர்லாங் நடந்தால் ஒரு ஆறு. அதற்கு நேர் திசையில் அரை மைல் தூரம் நடந்தால் இன்னொரு ஆறு. ஆற்றின் அக்கரையில் சந்திரசேகரபுரம் என்னும் ஒரு பெரிய கிராமம். நிலக்கோட்டையின் கோடைகால தண்ணீர் பஞ்சத்தில் வாழ்ந்த எனக்கு இதெல்லாம் மிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் பெரிய கொல்லை. தென்னையும் புளியமரங்களும் நிறைந்த கொல்லை.

உடையாளூரே ஒரு மேடிட்ட தளத்தில் தான் இருந்தது. ஊருக்குள் நுழையும் போதே மாட்டு வண்டி மேட்டில் ஏறித்தான் ஊருக்குள் நுழைய முடியும். சுற்று வட்டாரத்தில் எந்த கிராமமும் அப்படி ஒரு மேட்டில் இருப்பதாக நான் காணவில்லை. உடையாளூரில் மொத்தம் இருந்ததே நான்கு தெருக்கள் தான். ஒவ்வொரு தெருவிலும் சுமார் இருபது வீடுகள் இருக்கலாம். எங்கள் தெருவில் வீடுகள் ஒரு சாரியிலேதான் இருந்தன. 'ப' வடிவில் மூன்று தெருக்கள். 'ப'வின் நடுவில் குறுக்கே ஒரு கோடிட்ட மாதிரி நான்காவது தெரு. அந்த நடுத்தெருவில் தான் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை நான் பார்த்திருக்கிறேனே தவிர அங்கு ஏதும் உற்சவங்கள் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அந்தக் கோவில் பற்றி யாரும் பேசிக் கூட எனக்கு நினைவில் இல்லை. உடையாளூரில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில்கள் ஊருக்கு ஒரு எல்லையில் வெளியே இருந்த சிவன் கோவிலும் அதன் மறு எல்லையில் இருந்த செல்வ மாகாளி அம்மன் கோவிலும் தான். சிவன் கோவில் மிகப் பழமையான கோவில். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி வரும்போது, சுற்றிலும் கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணும். அந்தக் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள். ஒன்று மனிதர்கள் குளிப்பதற்கும் மற்றது மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கும் என இருந்தன. நான் அங்கு படித்தக் கொண்டிருந்த 47-48, 48-49 வருடங்களில் நீர் நிரம்பிருந்த அந்தக் குளங்கள் சில வருடங்களுக்கு முன் நான் போயிருந்த போது முற்றிலுமாக வற்றியிருந்தது மட்டுமல்லாமல், குளங்கள் இரண்டும் இருந்த சுவடு கூட அழிந்து வந்து போயிருந்தன.

ஊரின் மறு கோடியில் இருக்கும் செல்வமாகாளி அம்மன் கோவில் தான் சிவன் கோவிலை விட பிரசித்தமானது. பங்குனி உத்திரத்தின் போது திருவிழா நடக்கும். பின் வருடங்களில் எங்கள் குடும்பம் உடையாளூரை விட்டு நீங்கி என் தம்பி வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப ஊர், வீடு மாற்றிக்கொண்டிருந்த காலத்திலும், அப்பா எங்கு இருந்தாலும், பங்குனி மாத செல்வமாகாளி கோயில் திருவிழாவுக்கு உடையாளூருக்கு வந்துவிடுவாராம். அவர் மாத்திரமல்ல, ஊரில் உள்ளவர்கள் யாருமே எந்த வெளியூரிலிருந்தாலும் செல்வமாகாளி அம்மன் கோயில் உத்சவத்துக்கு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்களாம். உற்சவம் அந்த ஊருக்கு பெரிய உற்சவம் தான். காவடி எடுத்தல், தீ மிதித்தல் எல்லாம் உண்டு. ஊரில் எல்லாருடைய வீட்டிலும் ஒரு குழந்தைக்குப் பெயர் அம்மனின் பெயராகத் தான் இருக்கும். என் தங்கை ஒருத்தியின் பெயரும் கூட செல்லம்மாள் தான்.

எங்கள் குடும்பங்களில் சுவாமி மலைக்குச் சென்று குழந்தைக்கு முடி இறக்குவது என்பது ஒரு கட்டாயம். இரண்டாவது கட்டாயம் உடையாளூர் செல்வமாகாளி அம்மன் கோயில் சென்று அங்கும் முடி இறக்கவேண்டும். மூன்றாவது என் அம்மா வேண்டிக் கொள்வது திருப்பதி சென்று மூன்றாவது முடி இறக்குவது. தில்லியிலிருந்து ஒவ்வொரு வருடமும் என் பையன் கணேசனுக்கு முடி இறக்குவது என்று வேண்டிக்கொண்டது மூன்று ஸ்தலங்களில் ஆனதால் மூன்று முறை விடுமுறையில் வரவேண்டியிருந்தது. எங்கள் ஊர்க்காரர் மற்றவர்களுக்கு செல்வமாகாளி அம்மன் கோயில் ஒரு ·பர்லாங் தூரத்தில். சுவாமிமலை மூன்று மைல் தூரத்தில். எங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் நிறைய. இந்த குடும்ப பழக்கம் என் பேத்தி விஷயத்திலும் தொடர்கிறது. என் பேத்திக்கு முடியிறக்க மூன்று வருடங்களுக்கு முன் சென்ற போது, செல்வமாகாளி அம்மன் கோயிலில் சில தெய்வங்களுக்கு சுருட்டும் சாராயமும் கூட படைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

உடையாளூரும் செல்வமாகாளி அம்மனும் சுற்று வட்டார கிராமங்கள் ஊர்களில் கூட பிரசித்தம் பெற்றிருந்தது பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது. சிவன் கோயில் கல்வெட்டு பற்றிச் சொன்னேன். அக் கல்வெட்டில் உடையாளூரின் பெயர் வேறாகத் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கல்வெட்டின் ஒரு பகுதியை, சுமார் இருபது இருபத்தைந்து வரிகள் அச்சிட்டு கண்ணாடி போட்டு வைத்திருந்ததை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பின்னர் ஊரின் பெயர் சோழர் காலத்தில் என்னவாக இருந்தது என்று மறந்ததை நினைவு படுத்திக்கொள்ள ஒரு முறை அதைக் கோவிலில் தேடியபோது அது இருக்கவில்லை. புராதன சின்னங்கள் மாத்திரம் இல்லை, அச்சின்னங்களின் பதிவுகள் கூட மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்நாட்களில் இவற்றிற்கு மதிப்பு ஏதும் இருப்பதில்லை. ஊரில் இருந்த இரண்டு பெரிய குளங்களே சுவடற்று மறைந்து விட்ட பிறகு, இவற்றிற்கு கிராமத்தில் அன்றாடத் தேவை உண்டு, புராதன சின்னங்களுக்கு என்ன பொருளார்த்த தேவை? - இருப்பினும், ..... நாம் தான் எதையும் பகுத்தறிந்து ஆராய்ந்து செயல்படுபவர்களாயிற்றே!

உ.வே.சாமிநாத அய்யர் எழுத்துக்களில் உடையாளூர் பற்றி பிரஸ்தாபங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. உ.வே.சாவுக்கு இரண்டு தலைமுறை முந்தியவரும், அக்காலத்திய புகழ் பெற்ற சங்கீத வித்வானும், சாகித்ய கர்த்தாவுமான கனம் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை பற்றி தான் அறிந்த குறிப்புகளையும் தான் சேர்த்து வைத்திருந்த கீர்த் தனங்களையும் சேர்த்து ஒரு சிறிய புத்தகம் எழுதியுள்ளார் உ.வே.சா அதில் கனம் கிருஷ்ணய்யர் தன் ஸ்தல யாத்திரையின் போது உடையாளூருக்கும் செல்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ளதை அவர் வார்த்தைகளிலேயே சொல்ல லாமே.

"அப்போது அந்தக் கிராம தேவதையாகிய செல்வமாகாளி யென்னும் தெய்வத்துக்கு உத்சவமாதலின் அந்தத் தேவதை திருவீதியில் வந்தது; அக்காலத்தில் அக்கிராமத்தாருடைய விருப்பத்திற்கிணங்கிக் கல்யாணி ராகத்தில் "வல்லமையுன் வல்லமையே" என ஒரு கீர்த்த்னத்தை இவர் பாடினார். அது வருமாறு

ராகம் - கல்யாணி: தாளம் - ஆதி

பல்லவி

வல்லமையுன் வல்லமையே
சொல்ல எவர்க்குந் தரமா? (வல்லமையுன்)

அனுபல்லவி

எல்லாம் உன் செயலே வேறில்லை
பூபதிராஜபுரந்தனில் வாழும்
செல்ல மாகாளி அம்மையே தேவி பரஞ்சோதி (வல்லமையுன்)


இவ்வளவு போதும் இப்போதைய தேவைக்கு. பின் உ.வே. சா ஒரு அடிக்குறிப்பு தருகிறார். "பூபதி ராஜபுரம் என்பது உடையாளூரில் உள்ள ஒரு பகுதி. தமாஷாகத்தான் இருக்கிறது. உழக்குக்குள் கிழக்கும் மேற்குமா, என்பது ஒரு கேலி வழக்கு. உடையாளூரே நான்கே தெருக்களும் சுமார் 80-100 வீடுகளே கொண்ட ஒரு சிறிய கிராமம். அதனுள் பூபதி ராஜபுரம் ஒரு பகுதி. கனம் கிருஷ்ணய்யர், தியாகப்ரம்மம் வாழ்ந்த காலத்தவர். அவருடன் பழக்கமுள்ளவர். அந்த காலத்தில் உடையாளூரும் பூபதி ராஜ புரமும் இருந்த கோலம் அப்படித்தானோ என்னவோ.

இதேபோல இன்னொரு பக்கத்து கிராமமும் சரித்திரப் பிரசித்தி பெற்றது. நான் தினம் பள்ளி செல்வதற்காக கும்பகோணம் போகும் வழியில் எங்கள் ஊர் ஆற்றைத் தாண்டியதும் அதன் மறு கரையில் கொஞ்ச தூரத்தில் உள்ளது நாதன்கோயில் என்னும் இன்னொரு கிராமம். எங்கள் வழியில் வலது பக்கம் திரும்பினால் நாதன் கோயில் கோபுரமும் சன்னதி தெருவும் தெரியும். அது மிக அழகான காட்சி. அந்த நாதன் கோயில் ஒரு பழங்கால போர் நிகழ்ந்த இடம். நந்தி வர்மன் என்ற பல்லவ அரசனுடன் சம்பந்தப்படுவது. எனக்கு இப்போது சரியாக ஞாபகமில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவன் அவன் காலத்திய பாண்டிய மன்னனை போரில் வென்று தன் ராஜ்யத்தை விஸ்தரித்திருந்தான். பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்குமான துவந்த யுத்தம் ஆக்கிரமிப்பு, ராஜ விஸ்தரிப்பு என்பது அவன் தந்தை தந்தி வர்மன் காலத்திலிருந்து தொடர்வது. கடைசியாக ஸ்ரிமார ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் இந்த நாதன் கோயில் அருகில் தான் மூன்றாம் நந்தி வர்மனோடு மறுபடியும் போரிட்டு தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என்பது சரித்திரம். இந்த யுத்தம் நடந்தது கி.பி.859-ல். இந்த மூன்றாம் நந்தி வர்மனோடு சம்பந்தப்பட்டது தான், அவன் புகழ் பாடுவது தான் நந்திக் கலம்பகம். உடையாளூரின் பெருமை பேச அல்ல நான் கொஞ்சம் ஊரை விட்டு தள்ளி நடக்க ஆரம்பித்தது. அந்த சுற்று வட்டாரமே எனக்கு கொஞ்சம் பெருமை பேச வாய்ப்பளித்தால் நான் என்ன செய்ய! அந்த சுற்று வட்டாரத்தில் தான், ஆடு துறை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் என உ.வே. சாமிநாதய்யரும் அவர் தம் ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் நடமாடி உ.வே.சா எழுதிய வாழ்க்கைக் குறிப்புகளில் இடம் பெரும் இடங்கள்.

உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்குப் போக அந்நாட்களில் வலங்கைமான் என்னும் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் ஊர் சென்றுதான் பஸ் பிடித்துப் போகவேண்டும். அந்த வலங்கைமான் ஒரு சிறப்புப் பெற்ற ஊர். வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் (ரைட் ஆனரபிள் என்று அந்நாடகளில் அறியப்பட்டவர், silver tongued orator என்ற புகழ் பெற்றவர், கோபால கிருஷ்ண கோகலேயின் Servants of India Society யை அவருக்குப் பின் நிர்வகித்தவர் பிறந்த, ஆரம்பப்பள்ளி படித்த ஊர். இன்னம் சொல்லப்போனால், என் அப்பா வழித் தாத்தா வலங்கைமானைச் சேர்ந்தவர் தான். அவர் காலத்தில் தான் உடையாளூருக்குக் குடி பெயர்ந்ததும். உடையாளூரில் எங்களைக் குறிப்பிடுபவர்கள் வலங்கைமானையும் சேர்த்துத் தான் அடையாளம் காட்டுவார்கள். வலங்கைமான் சாஸ்திரிகள் வீடு என்று. அந்த அடையாளத்தை எங்களுக்குக் கொடுத்தவர் எங்கள் தாத்தா சுந்தரேச சாஸ்திரிகள்.அவர் புகைப்படம் உடையாளூர் வீட்டில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். பின் எப்போது அது எங்கு காணாமற் போயிற்றோ தெரியாது.

அந்நாட்களில் அனேகமாக எந்தச் சிறிய தேவைக்கும் நாங்கள் வலங்கைமானுக்குத் தான் போக வேண்டிருந்தது. உடையாளூரில் ஒரு சின்ன மருத்துவ மனை கூட கிடையாது. நான் படிக்கச் சென்ற 1947-ல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் வளர்ந்திருந்தது. மாமாவுடன் நிலக்கோட்டைக்கு ஆறாவது படிக்கப் போவதற்கு 5-ம் வகுப்பு டி.சி. பெற்றது அந்த திண்ணைப் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் தான். ஊரில் ஒரு படித்த வாலிப வயதினர் தான் தபால் கார்டு கவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு தேவையானவர்களுக்குக் கொடுப்பார். அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையம் 1947-ல் கூட இருக்கவில்லை. தபால் பட்டுவாடா செய்ய ஒருவர் வலங்கிமானிலிருந்து வருவார். அவர் தான் தபால்கள் கொடுப்பார். எடுத்தும் செல்வார். பகல் 11 மணி வாக்கில் வருவார். ஆக பெரிய தேவைகளுக்கு கும்பகோணமும், மற்ற சிறிய தேவைகளுக்கு வலங்கைமானுக்கும் போக வேண்டியிருக்கும். யாரும் தெருவில் பனியனும் தோளில் ஒரு துண்டுமாக நடக்கக் காட்சி யளித்தால், ஒவ்வொரு வீட்டிலும் திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் கேட்கும் கேள்வி, "ஏண்டா பிச்சை, கும்மோணமா?" தான். பனியனும் துண்டும் அணிந்த பிச்சையோ, கிச்சாவோ, கட்டாயம் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கட்டாயம் வாங்கி வருவார். இந்த பரஸ்பர சகாய உணர்வு உடையாளூரில் எல்லோருக்கும் இருந்தது. இத்தோடு மட்டுமல்ல. "ஏண்டா, காமாட்சி ஜோஸ்யர் தெருவுக்கு ஒரு நடை போய்ட்டு வந்துடேன்" என்று சொல்லி அங்கு சீனுவைப் பார்த்து என்ன செய்தி சொல்ல வேண்டுமோ அதையும் பிச்சா கட்டாயம் கேட்டுக்கொண்டு போகவேண்டும். பிச்சாவுக்கு அதில் தயக்கம் இராது.

30.6.08

***** ***** *****

நினைவுகளின் தடத்தில். - 24

வெங்கட் சாமிநாதன் -தெருவில் பனியனோ, துண்டோ ஒருவன் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து விட்டால் அவன் பயணம் கும்பகோண்த்திற்குத் தான் என்று நினைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள அவனை இதையும் அதையும் வாங்கி வா என்று சர்வ சாதாரணமாகச் சொல்வதும் அதை அவன் மனம் கோணாமல் செய்வதும் எங்கள் கிராமத்து வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தம் விதித்த கலாச்சாரம். "மாட்டேன், என் வேலை எனக்கு, உன் வேலையை நீ பார்த்துக்கொள் " என்று அவன் மனத்தால் கூட நினைக்க மாட்டான்.

இப்படித்தான் பல பெரிய காரியங்களுக்கு ஊர் முழுதும் கூடி தாமாகவே உதவ முன் வரும். ஒரு வீட்டில் ஒரு கல்யாணம், அல்லது ஏதும் பெரிய விசேஷம் என்றால், எல்லோரும் அந்த விசேஷத்தின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அதை தாமாகவே மேற்கொண்டு மிக சந்தோஷத்துடன் செய்வார்கள். அதே போல அந்த கிராமத்தில் யார் வீட்டிலும் கல்யாணம் என்றால் பத்திரிகை அடித்து எல்லோருக்கும் கொடுத்து அழைப்பது என்பதெல்லாம் கிடையாது. ஒரு வீட்டில் பெண்ணுக்கோ, பையனுக்கோ கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதற்கான யத்தனங்கள் ஆரம்பித்ததுமே கிராமத்தில் எல்லோருக்கும் அது தெரிய வந்து விடும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊராரின் பங்கேற்பு தொடங்கிவிடும். கல்யாணமோ அல்லது வேறு எந்த விசேஷமோ, நான் பார்த்திருக்கிறேன். முதலில் காலையில் ஒரு முறை அழைப்பு வரும். பிறகு பதினோரு மணிக்கு மறுபடியும் அழைப்பு வரும். கொஞ்ச நேரம் கழித்து இலை போட்டாச்சு சீக்கிரம் வாங்கோ" என்று அழைப்பு வரும். அதற்கு அரை மணி நேரம் கழித்து, "ரெண்டாம் பந்திக்கு இலை போட்டாச்சாம், உங்களையெல்லாம் சாப்பிடறதுக்கு சீக்கிரம் வரச்சொல்லி அப்பா சொல்லச் சொன்னா" ன்னு அழைப்பு வரும். இப்படி கிராமம் பூராவும் வீடு வீடாக சென்று அழைப்பு திரும்பத் திரும்ப போய்க்கொண்டே இருக்கும். சிவன் கோயில் மண்டகப்படியை முறை வைத்து ஒவ்வொரு வசதி உள்ள வீட்ட வரும் வைத்துக் கொள்வார்கள். ஊரில் இருந்த எந்த கோவிலுக்கும் சொத்து இருந்ததாகத் தெரியவில்லை. ஊர் ஜனங்களே எடுத்து தங்களுக்குள் முறை வைத்து நடத்திக் கொள்வதைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

உடையாளூர் சென்ற பிறகு தான் சிவன் கோவில் மணியின் ஒலி காதில் விழத்தொடங்கியது. ஒவ்வொரு நாளும், விடியும் முன் தொடங்கும் உஷாக்கால ஒலியின் தொடக்கத்திலிருந்து அர்த்த ஜாம பூஜை நடப்பதன் செய்தியாக வரும் கடைசி ஒலி வரை, அது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகியது. கிராமத்திலிருந்து அதிக தூரமில்லை, சுமார் ஒன்று அல்லது ஒன்றரை ·பர்லாங்கு தூரம் தான் இருக்கும், ஆற்றின் பெயர் எனக்கு மறந்து விட்டது. முடிகொண்டான், திருமலை ராஜன், குடமுருட்டி என்று ஏதோ ஒரு பெயர் அதற்கு, அந்தப் பெயரை வெகு அபூர்வமாகத்தான் நான் கேட்டிருக்கிறேன். அதிலும், ஒவ்வொரு கிராமமும், வழியில் குறுக்கிடும் ஆறும் எல்லாமே சுமார் ஒரு மைல் அல்லது அரை மைல் தூரத்திலிருந்தன. தஞ்சை ஜில்லா கிராமத்தாருக்கு, அவர்கள் ஊரில் ஓடும் ஆறு எதாக இருந்தாலும், அது காவிரி தான் அவர்களுக்கு. ஆறு என்ன, எந்த பெரிய வாய்க்காலும், குளிக்கத் தகுந்த பெரிய வாய்க்காலானால், அதுவும் கிராமத்து ஜனங்களுக்கு காவிரி தான். காலையில் விடியும் முன் கிராமத்துப் பெண்கள் 'காவிரிக்குப்' போய்க் குளித்துவிட்டு ஈரப்புடவையுடனும், இடுப்பில் ஜலம் நிரப்பிய குடத்துடனும் வருவதை, 'காவிரியில்' ஜலம் ஓடும் காலங்களில் பார்க்கலாம். அதற்கும் முன்னால், விடிவதற்கு முன்னாலேயே மார்கழி மாதமானால் பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே ஊர்வலம் வந்து முடிந்திருக்கும். இன்னொரு கோஷ்டி தேவாரம் பாடிச் செல்லும்.

உடையாளூரில் ஒரு பெருமாள் கோவிலும், மிகப் பழமையான 12-ம் நூற்றாண்டு சிவன் கோவிலும் இருந்த போதிலும் மிகப் பிரசித்தமானதும் வெளியூரில் எங்கிருந்தாலும், எவ்வளவு தூரத்திலிருந்தாலும், உடையாளூர் வாசிகளை பங்குனி உத்திரத்தில் நடக்கும் தன் உற்சவத்திற்கு அழைத்துவிடும் தெய்வம் செல்வமாகாளி அம்மன் தான். கனம் கிருஷ்ணய்யரையே ஊர்வலம் வந்த தெய்வம் அக்கணமே ஒரு கீர்த்தனைய இயற்றிப் பாட வைத்த அம்மன். உ.வே.சா வின் எழுத்துக்களில் இடம் பெற்றது உடையாளூர் சிவனோ பெருமாளோ இல்லை. செல்வமாகாளி அம்மன் தான். ஒன்றும் பெரிய கோவில் இல்லை. சின்னது தான். கோவிலின் கர்ப்பக் கிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அம்மனின் மூர்த்தியும் முழு உருவ மூர்த்தி இல்லை. ஒரு பாளம் போன்ற பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். எனக்கு இது ஒரு வித்தியாசமான காட்சியாகப் பட்டது. ஒரு சின்ன கோயில். அதைச் சுற்றி நாலா பக்கமும் எழுப்பட்டுள்ள சுற்றுச் சுவர். இதற்குள் அதன் வலது பக்கத்தில் ஒரு கிணறு. இன்னும் சில சின்ன சின்ன தேவதைகள். ஒரு சின்ன தேவதைக்கு சுருட்டு முதலியன படைக்கப்பட்டிருந்தது. ஆனால் உயிர்பலி இங்கு நடப்பதில்லை. அதை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. கல்கத்தா காளி கோயிலில் கூட இன்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. செல்வமாகாளி அம்மனின் கோயிலிக்கு பூசைகள் செய்வது பரம்பரையான ஒரு பூசாரி தான். மூன்று வருடங்களுக்கு முன் நான் என் பேத்திக்கு முடியிறக்கப் போன போது பூசாரியாக இருந்தது முப்பதுக்களில் இருந்த ஒரு இளம் வாலிபன் தான். முன்னாலேயே அருகிலிருக்கும் சாக்கோட்டையில் இருக்கும் என் தம்பி மூலம் சொல்லி வைத்திருந்ததனால் பூசாரியே பூசைக்கு வேண்டிய பூக்கள் வகையறா, நிவேதனத்துக்கு வேண்டிய பொங்கல், வடை, எல்லாம் செய்து வைத்திருந்தது தயாராக இருந்தது. பால் வாங்கி வைத்திருந்தார். பஞ்சாமிர்தமும் செய்து வைத்திருந்தது. எல்லாம் அபிஷேகத்திற்காகத் தான். சம்பிரமங்களில் எதுவும் குறைபட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் உற்சவம் இல்லாத காலம் என்ற காரணத்தாலோ, அல்லது கால மாற்றத்தில் கிராம மக்களும், கிராமமும் நலிவடைந்த காரணத்தாலோ, அன்றைய முற்பகலில் எங்களைத்தவிர கோவிலுக்கு வந்தவர்கள் அதிகம் யாரும் இல்லை.

அந்த பூசாரி இளைஞனின் குடும்பம் தலை முறை தலைமுறையாக இக்கோவில் காரியங்களில் ஈடுபட்டிருந்ததால், பூஜைக்கான பொருட்களைச் சேகரிக்க, நிவேதனங்களைத் தயாரிக்கவும் முடிந்திருக்கிறது. அதோடு அந்த இளைஞன் அபிஷேகம், அர்ச்சனைகளை வட மொழியில் மந்திரங்கள் சொல்லியும் தமிழில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடவும் செய்தான். வடமொழி மந்திரங்களை எங்கிருந்து கற்றான்? தலைமுறை தலைமுறையான ஈடுபாட்டில் தான் என்று எனக்குத் தோன்றிற்று. இது ஏதும் இப்போது நாம் கேட்கும் அரசியல் ரீதியான நிர்ப்பந்தங்களால் நிகழ்வது அல்ல. இக்கோயில் தமிழ் அரசின் அறநிலையத் துறையின் கீழ் வருவதல்ல. இது செல்வமாகாளி அம்மனின் பல நூற்றாண்டுகளாக கிராமத்தில் எல்லா மக்களிடையேயும் செல்வாக்குப் பெற்றதன் காரணமாக அந்த பூசாரிக் குடும்பமே தானாகவே கொண்ட ஈடுபாட்டின் விளைவு என்று எனக்குத் தோன்றுகிறது. அரசியல் கட்சியின் பயமுறுத்தல் காரணமாக இல்லாது,. அரசின் கட்டளை காரணமாக இல்லாது தானாகவே மக்களின் உடன்பாட்டில், விருப்பத்தில் நிகழும் மாற்றங்கள்

எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. 1974லில் நான் என் மகனுக்கு செல்வ மாகாளி அம்மன் கோயியில் குடும்ப வழக்கப்படி/ஊர் வழக்கப்படி முடியிறக்க தில்லியிலிருந்து உடையாளூர் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் என் பெற்றோரும் வந்திருந்தனர். அப்பாவோ ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பவர். அம்மாவும் தான். ஆனால் அப்பா அளவுக்கு தீவிரம் இல்லை. அப்போதும் இந்த பூசாரிக் குடும்பத்தின் மூத்தவர் ஒருவர் தான் பூஜைகள் செய்தார். பரம்பரையாக ஏதோ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பழக்கத்தால் தான் ஆசார சீலரான என் அப்பா இதையெல்லாம் சகஜமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது பற்றி எந்த மாற்று சிந்தனையும் இல்லாமல். இதில் அவர் தனியர் இல்லை. அந்த கிராமமே ஏற்றுக்கொண்ட விஷயம் இது. அதோடு, அவர்கள் எங்கிருந்தாலும் பங்குனி உத்சவத்துக்கு உடையாளூர் ஓடி வந்துவிடுகிறார்கள் என்றால்..! இன்னமும் சொல்வதானால், சுவாமி மலையில் பிறந்த என் மாமாவுக்கு குல தெய்வம் சுவாமிநாத ஸ்வாமியே ஆன போதிலும், நிலக்கோட்டையில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர், நிலக்கோட்டை மாரியம்மனின் பக்தராகி விட்ட காரணத்தாலோ என்னவோ, ஒரு முறை என் சிறுவயதில் தஞ்சைக்கு என்னை அழைத்துச் சென்றபோது அவர் சென்றது பெரிய கோவிலுக்கு அல்ல. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்குத் தான் அர்ச்சனை செய்ய அழைத்துச் சென்றார். வாழ்விடமும் அதன் பழக்கங்களும் கூட பல மாற்றங்களைக் கொணர்ந்து விடுகின்றன போலும். வேறு எப்படிப் புரிந்து கொள்வது?

உடையாளூர் இப்போது எப்படியோ தெரியாது. 1947லிருந்து 1949 வரை இரண்டு வருஷங்கள் அங்கு இருந்த காலம் முழுதும் ஒரு தனி உலகமாகத்தான் இருந்தது. கும்பகோணத்திலிருந்து பக்கத்திலிருந்த வலங்கைமானிலிருந்து கூட அது வேறுபட்ட ஒரு தனி உலகமாகத்தான் இருந்தது. எந்த வீட்டுப் பெரிய காரியங்களுக்கும் ஊர் முழுதுமே முன் வந்து பொறுப்புக்களில் பங்கு கொள்வது பற்றிச் சொன்னேன். அது ஒரு தனி உலகமாக, பழைய உலகமாக இருந்த காரணத்தாலேயே சாத்தியமாயிற்றோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. 1951-52 ல் நான் ஹிராகுட் அணை கட்டும் இடத்தில் வேலியில் இருந்த போது, சீனிவாசன் என்னும் ஒரு நல்ல படிப்பாளி நண்பராக இருந்தார். அவரும் தஞ்சை ஜில்லா திருக்கருகாவூர் கிராமத்திலிருந்து வந்தவர். அவர் மிக சுவாரஸ்யமான ஆளுமை கொண்ட மனிதர். அவரைப் பற்றி தனியாக எழுத வேண்டும். பின்னர் எழுதுகிறேன். அவர் ஒரு சிவில் எஞ்சினியரிங் குத்தகைக்காரரிடம் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது அவர் வேலை பார்க்குமிடம் மாறும். அப்படி அவர் அப்போது இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது அவர் அங்கு இல்லை. இருப்பினும் அவரைத் தேடி வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் அந்த கிராமத்துப் பெரியவருக்கு அந்த செய்தி போக, அவர் எங்களை ஒரு குடிசையில் தங்க வைத்தார். நாங்கள் தங்கியிருந்த குடிசைக்கு அவ்வப்போது யாராவது வந்து எங்களை உபசரித்துப் போவார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் அந்த கிராமத்தில் இருக்கும் ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருப்பதாகவும் அதற்கு அந்த கிராமத்துப் பெரியவரின் மேற்பார்வையில் கிராமத்தில் இருக்கும் மற்ற மக்கள் உதவிக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்த வீடு கிராமத்து மக்களாலேயே எந்த எஞ்சினியரின் உதவியும் இல்லாமலேயே வெளியிலிருந்து எந்தக் கட்டுமானப் பொருளும் வாங்கி வரவழைக்காமலேயே அந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்தது அந்த கிராமத்தின் பெரும்பாலான காரியங்கள் இப்படித்தான் கிராம மக்களின் கூட்டுறவால் சாத்தியமாகின்றன என்றும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. இது எங்களுக்கு மிக ஆச்சரியம் தரும் ஒரு விஷயமாகப் பட்டது. மேலும் அவர்கள் தேவையும் மிகக் குறைவானதே.

இப்படித்தான் பழங்கால வாழ்க்கை பெரும்பாலும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. நான் இருந்த அந்த 47-49 வருடங்களில், வாசலில் காய்கறி விற்பவர்கள் வருவார்கள். அவர்களில் யாரும் காய்கறியோ, பழமோ, எதுவுமே காசுக்கு விற்றவர்கள் இல்லை. எல்லோர் வீட்டிலும் அவர்கள் காய்கறிகள் விற்றுப் பெற்றது அரிசியோ தான். பண்டமாற்று நடந்து கொண்டிருந்தது. கொத்த மல்லியும் கருவேப்பிலையும் நிலக்கடலையும் வாங்கிக் கொண்டு அதற்கு விலையாக அரிசி கொடுப்பது என்பது எனக்கு அதிகமாகப் பட்டது. ஒரு நாள் அம்மாவைக் கேட்டேன். "ஏம்மா ஒரு அணா இரண்டு அணாவுக்கு பதிலாக ஆழாக்கு ஆழாக்கா அரிசி கொடுக்கிறாயே, இது அதிகமில்லையா?" என்று. "இதென்ன இப்படி ஒண்ணும் தெரியாத பிள்ளையா இருக்கானே இவன்?" என்பது போல் அம்மா சிரித்தாள். என் நினைவில், அந்த கறிகாய்க் காரியும் அம்மாவோடு சேர்ந்து சிரித்தாள் என்றே நினைக்கிறேன். என்ன சந்தோஷமான உலகம் அது என்று இப்போது அது பற்றி எழுதும்போது தோன்றுகிறது.

8.7.08
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner