இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2009 இதழ் 118  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் ..
நினைவுகளின் தடத்தில் (35)

- வெங்கட் சாமிநாதன் -


காந்தி இறந்து விட்டார், அதுவும் பிரார்த்தனையின் போது யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் கொஞசமாக தெளிவாகி மனதை நிலை குலையச் செய்தது. வெங்கட் சாமிநாதன் காந்தி இறந்து விட்டார், அதுவும் பிரார்த்தனையின் போது யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் கொஞசமாக தெளிவாகி மனதை நிலை குலையச் செய்தது. ஒரு மிகப் பெரிய மனிதர் இனி நம்மிடையே இல்லை. சில வருஷங்களுக்கு முன் அவரைப் பார்க்க அம்மையநாயக்கனூருக்கு மூன்று மைல் ஒரு ஒற்றையடிப் பாதையில் குறுக்காகச் சென்றுபார்த்துவந்தது, பின் ஒரு வருடம் முன்பு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் அருணா ஆச·ப் அலி (காந்தி சொன்னதன் பேரில் தலைமறைவாக இருந்தவர் தானாகவே போலிஸிடம் சரணடைந்தவர்) பேச்சைக் கேட்கச் சென்றது, அவருடைய ஹிந்திப் பேச்சைக் கேட்க குழுமிய கூட்டம், தமிழ் நாட்டில் அவர் ஒன்றும் பிரபலமான தலைவர் இல்லை, இருந்த போதிலும், "இந்த மழையைக் கண்டு பயந்த நீங்கள் எப்படி சுதந்திரத்திற்காகப் போராடப் போகிறீர்கள்?" என்ற ஒரு வார்த்தையில் அந்தக் கூட்டம் மழையில் கலையாமல் உட்காரவைத்தது எல்லாம், காந்தியின் தாக்கம் என்பதைப் பின்னர் அறிந்து கொண்ட விஷயங்கள். பி.எஸ் ராமையா தன் மணிக்கொடி வரலாற்றில் எழுதியிருந்தார். தீபம் பத்திரிகையில் எழுதிய போது படித்தது. பி.எஸ். ராமையாவும் அவரது சகாக்களும் இரண்டாம் ஆட்டம் ஏதோ படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது வழியில் சற்று தூரத்தில் ஒரு குடிசையின் முன் நின்றுகொண்டிருக்கும் வயதான பெண் ஒருத்தி ஒரு இளம் பெண்ணுக்குச் சொல்லுகிறாள்: "அதோ வராங்க பாரு, காந்திகாரங்க, அவங்க கூடப் போ. அவங்க துணைக்கிருக்கப் போ ஒரு பயமும் இல்லே" என்று சொல்கிறாள். எங்கோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிழவர், அவரை அடையாளம் காட்டும் ஒரு கதர் குல்லா போதும் இங்கு ஒரு குடிசை வாழும் பெண் நடு இரவின் தனிமையில் என்ற மாயத்தை எப்படிச் செய்தார் என்பதெல்லாம் பின்னர் நான் தெளிந்து வியந்தவை. சில நாட்கள் முன்பு கூட கொலை செய்யும் எண்ணத்தோடு ஒருவன் கூட்டத்தில் காணப்பட்டும் எனக்கு பாதுகாப்பு ஏதும் வேண்டாம் என்று சொன்ன மனிதர். இதெல்லாம் பின்னர் தெரிந்தவை. ஆனால் அன்று ஒரு பெரிய மனிதர் இனி இல்லை என்பது தான் மனதை என்னவோ செய்தது. அது ஒரு காலம். இன்று நாலு கருப்புப் பூனைகள் துப்பாக்கி சகிதம் காட்சி தருவது தன் பதவிக்கான அலங்கார அடையாளமாகியுள்ளதைப் பார்க்கும் போது, இது முற்றிலும் வேறு ஒரு காலம் என்று சலித்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.

திங்கட் கிழமை பள்ளிக்கூடம் போன போது பள்ளிக்கூடத்தில் ஏதும் இரங்கல் என்ற பெயரில் ஏதும் நடந்ததா என்பது நினைவில் இல்லை. சுதந்திர தினத்தன்று கூட பள்ளியில் ஏதும் நிகழ்ந்த நினைவு இல்லை. சரித்திர பாடம் எடுக்கும் 'சுந்தரம் பிள்ளை", எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர், பாடம் நடத்துவதே உணர்ச்சி மயமாகத்தான் இருக்கும். அவர் தான் காந்தி பற்றி அவ்வப்போது ஒரு ஆவேசத்தோடு சொல்லி வருவார். பள்ளிக்கூடத்தில் கதர் வேட்டியும் கதர் ஜிப்பாவுமாக வரும் ஆசிரியர் அவர் ஒருத்தர் தான். மற்றது எதுவும் நினைவில் இல்லை. காந்தியின் அந்திம யாத்திரையும் அந்த மக்கள் வெள்ளத்தையும், பின்னர் யமுனை நதிக்கரையில் நடந்த தகனமும், செய்திப்படங்களில் பின்னர் பார்த்தது தான். மௌண்ட் பாட்டன் தம்பதியர் தரையில் சம்மனிட்டு உட்கார்ந்திருந்தது, அது தான் அவர்கள் தரையில் அப்படி உட்கார்ந்தது முதல் தடவையாக இருக்கவேண்டும், மனத்தில் ஒரு அழியாத சித்திரம். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு விசேஷ ரயில் மூலம் மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் தில்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது சமுத்திரத்தில் கரைக்க. அந்த வண்டியில் ராஜாஜியும் அவினாசி லிங்கம் செட்டியாரும் இருந்தனர் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அந்த வண்டி நின்றது, மக்கள் கூட்டம் காத்து இருந்தனர். அஸ்தி கலசத்தைத் தரிசிக்க. எனக்கு இப்போது சரியாகச் சொல்ல முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாகக் கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்ததும் அஸ்தி கலசத்தைத் தரிசித்ததுமாக ஒரு நினைவு பதிந்திருக்கிறது.

அந்த வாரக் கடைசியில் கிராமத்துக்குத் திரும்பிய போது கிராமத்துக்கு வந்த ஒரு புதியவரைச் சந்தித்தேன். உடையாளூர்க் காரர் தான். இருபத்து ஐந்து முப்பது வாலிப வயதினர். தில்லியிலிருந்து வந்தவர். அழகான முகம். கட்டுக்குடுமியோடு இருந்தார். நிறைய பேசுவார். என்னை மதித்து வெகு சகஜமாக என்னை அவருக்கு சமமாக எண்ணி பேசிக்கொண்டிருந்தாரே என்று இப்போது அது பற்றி நினைக்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தில்லி பற்றியும், காந்தி பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார். தனக்கு வந்த கடிதத்தைக் காட்டினார். ஆச்சரியமாக அது ஹிந்தியில் எழுதப் பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் முதல் வரியே "காட்சே நாமக் ஏக் சண்டால் நே பாபுஜிகி ஹத்யா கர்தி" (காட்சே என்னும் ஒரு சண்டாளன் பாபுஜியைக் கொன்றுவிட்டான்) என்றுதான் ஆரம்பித்திருந்தது. அந்த கிராமத்தில், உலகத்தின் நவீன வசதிகள் எதுவும் அற்று ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழும் அந்த கிராமத்தில், கட்டுக் குடுமியுடன் ஒர் தில்லி வாழும் மனிதர் எதிர்ப்படுவார், அவர் உலகச் செய்திகளைப் பற்றிப் பேசுவார், அவருக்கு தில்லியிலிருந்து ஹிந்தியில் கடிதம் வரும் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும் போதுகூட, எப்படி? என்று ஆச்சரியப்படத்தான் தோன்றுகிறது.

அப்படித் தான் இருந்தது உடையாளூர் கிராமமும் உடையாளூர் வாசிகளின் உலகமும். அந்தத் தீவாகிவிட்ட உலகத்துள் மிக சுவாரஸ்யமானதும் உடையாளூர்க் காரர்களுக்கு குதூகலம் தருவதுமான நேரங்கள் காலை உணவு பத்து பதினோறு மனீக்கு முடிந்ததும் ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு திண்ணையில் சிலர் கூடிவிடுவார்கள். எங்கள் தெருவில் அப்படிக் கூடும் திண்ணை ஊரின் நுழைவாயிலாக இருந்த எங்கள் தெருவின் இரண்டாவது வீட்டுத் திண்ணை. அங்கு தான் பகுதி நேர தபால் அலுவலகம் இருக்கும் என்று சொன்னேன். கும்பகோணம், வலங்கிமான், இல்லையெனில் ஊருக்கு சற்று தெற்கே இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் சற்று பெரிய கிராமமான சந்திரசேகரபுர்ம் போய்வந்தவர்கள் சொல்லும் புதிய கதைகள் பரிமாறிக்கொள்ளப்படும். ஒரு முறை நான் அந்த சர்ச்சைகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றிருந்தேன். தஞ்சாவூர் எவ்வளவு பெரிய ஊராகி விட்டது என்பதைப் பற்றியது அந்த சர்ச்சை. ஒன்றிரண்டு பேர் தஞ்சாவூரில் எந்த ரோடில் புதிதாகக் கட்டிடங்கள் முளைத்துவிட்டன என்பதைப் பற்றிச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததைச் சொல்ல, கடைசியில் ஒருத்தர், "என்னடா விஷயம் தெரியாம என்னென்னமோ அளந்துண்டே போனா கேட்கறவனுக்கு என்ன ஒண்ணும் தெரியாதுன்ணு நினைப்பா? நீ என்ன பஸ் ஸ்டாண்டிலேர்ந்து நேரே கோர்ட்டுக்குப் போவே. அடுத்த வாயதா என்னிக்கீன்னு கேட்டுட்டு உடனே டான்னு பஸ் ஸ்டாண்டுக்குத் திரும்பிடுவே. திருச்சி ரோடோடே போயிருக்கியோ, போயிருக்கியாடா, நான் கேக்கறேன், பேசாம முழிச்சிண்டிருக்கியே, .... என்று சத்தம் போடுவார் ஒருத்தர். "ராமேந்திரா, கொஞ்சம் நிதானிச்சு பேசு. வாய்தா கேக்க போனது கும்பகோணத்துக்கு. நீ திருச்சி ரோடைப்பத்தி பேசறதுக்கு தஞ்சாவூருக்குப் போயிட்டே. உன் பேச்சை எவன் கேப்பான், சொல்லு..." ஒரே கும்மாளமாக இருக்கும்.

அறுவடை ஆன பிறகு, கோடை மாதங்களில் அந்தத் தின்ணையில் சீட்டாட்டம் இரவு பூராவும் நடக்கும். ராத்திரி சாப்பாடானதும் தொடங்கும் சீட்டாட்டம் எப்போது முடியும் என்று தெரியாது. நான் பார்த்ததில்லை. அதில் ஒரு கை குறைகிறது என்றால் சேர்ந்து கொள்வார். அப்பா அந்த விவகாரத்துக்குப் போனதே இல்லை. அதைச் சொல்லி அப்பா அடிக்கடி சலித்துக்கொள்வார். "அவனுக்கென்ன, வேலையா, வெட்டியா, விடிய விடிய சீட்ட்டாடிண்டிருப்பான்" என்று. அந்த சீட்டுக் கச்சேரிக்கு ஒரு உதவியாள் தயாராக இருப்பார். வெத்திலை பாக்கு, கூஜா, டம்ளர், தயாராக் ஒரு குடம் தண்ணீர், எதுவும் எப்போதும் குறையாது வற்றாது பார்த்துக்கொள்ள வேண்டும். பக்கத்தில் சிவன் கோவிலிலும் அவருக்கு அது தான் வேலை. கிணற்றிலிருந்து அபிசேகத்துக்கு வேண்டிய நீர் இறைத்துக் கொடுப்பது, பூ, சந்தனம் இத்யாதி அர்ச்சனைப் பொருட்களை தயாராக்குவது எல்லாம் அவர் வேலையாக இருந்தது. சீட்டாட்டக் காரர்களுக்கு இந்த கைங்கர்யம் செய்தால் கொஞ்சம் உபரி வரும்படியும் கிடைக்கும். தனிக் கட்டை. கிடைப்பதை வைத்துக்கொண்டு வாழ்பவர்.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவர்கள் எல்லோரும் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு திருவிழாக்காலங்களில் வசதி உள்ளவர்கள் கோயில் மண்டகப்படி இன்னிக்கு எனக்கு, நாளைக்கு உனக்கு என்று ஆர்வத்தோடு செயல்படுவார்கள். அதில் அவர்களுக்கு பெருமையும் உண்டு. ஊருக்கு இரண்டு மைல் தெற்கே ஒரு ஆறு தாண்டி அதன் மறுகரையில் சந்திரசேகர புரம் என்று சொன்னேனே, அந்தச் சற்றுப் பெரிய கிராமத்தில் ஒரு பெரிய கூட்டுறவுப் பண்டக சாலை இருந்தது. தஞ்சை ஜில்லாவிலேயே மிகப் புகழ் பெற்றது, வெற்றிகரமாக நடப்பது என்று சொல்வார்கள். அங்கு நான் ஒரு முறை நிறைய மளிகை சாமான்கள் வாங்கப் போயிருக்கிறேன். பெரிய ஊர்களில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் மாதிரி அது பெரிதாக இருக்கும். அந்த கிராமத்துக்கு அதுமிகப் பெரியது தான். அது போல ஒன்று உடையாளுருக்கும் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது. அப்பாவும் அதில் உறுப்பினர். பத்து ரூபாய் சந்தா செலுத்தியது எனக்குத் தெரியும். ஒரு முறை ஜெனரல் பாடி மீட்டிங்குக்குப் போய் வந்ததும் தெரியும். முதல் வருடம் அவருக்கு ஏதோ ஒரு ருபாய் சொச்சம் டிவிடெண்டு கிடைத்ததும் நினைவில் இருக்கிறது. உடையாளூரில் வேலிக்கணக்கில் நிலம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு வீட்டை வாங்கி காலியாக வைத்திருப்பார்கள். அறுவடை முடிந்ததும் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பதற்கென்று. அந்த மாதிரி ஒரு வீட்டைத் தான் ஒருவர் இந்தக் கூட்டுறவுப் பண்டக சாலை நடத்தக் கொடுத்திருந்தார். இன்னொரு ஒரு புதிய வளர்ச்சி, ஐந்தாம் வகுப்பு வரை அங்கு ஒரு பள்ளிக்கூடமும் வந்திருந்தது நான் 1948-ல் உடையாளூருக்குப் போன போது. அதற்கு முன்னர் ஒரு திண்ணைப்பள்ளிக்கூடம் தான் இருந்தது. அதில் வகுப்பு விவகாரமெல்லாம் இருந்ததில்லை. ஒரு பெரியவர் உட்கார்ந்து கொண்டு :"பசங்களுக்கு ஒண்ணும் தெரியாம விட்டுடப் படாது" பசங்களின் வயதுக் கேற்ப ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். எல்லாப் பசங்களும் திண்ணையில் ஒன்றாகத் தான் உட்கார்ந்திருப்பார்கள். அதில் எல்லா க்ளாசுகளும் இருக்கும். இப்போது ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கூடம் வந்துவிட்டது. நான் உடையாளுருக்கு வந்ததும், மாமாவோடு என் தம்பி ஐந்தாம் வகுப்பை உடையாளூரில் முடித்துக்கொண்டு மேல் படிப்புக்கு மாமாவோடு நிலக்கோட்டைக்குச் சென்றான். நிலக்கோட்டையில் என் இடத்தில் அவன். இங்கு உடையாளூரில் அவன் இடத்தில் நான். உடையாளூரும் சில மாற்றங்களை அடைந்து கொண்டு தான் இருந்தது, ஆனால் மிகவும் மெதுவாக.

1.12.08

நினைவுகளின் தடத்தில் - 36

வெங்கட் சாமிநாதன் உடையாளூர் மாறிக்கொண்டு வந்ததாகச் சொன்னேன். மாறாமல் எப்படியிருக்கும்? ஆனால் இந்த மாற்றத்தையெல்லாம் மாற்றன் என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. தத்தித் தத்தி குழந்தை நடை பழகுவது போல, இடறி, இடறி விழுவதும் எழுவதுமாகத் தான் இருந்தது. முதல் அடி வைப்பில் இடறி விழுந்தால், "நான் தான் அப்பவே சொன்னேனே, இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுடான்னு, சொன்னால் கேட்டியா?" என்பது போல் குரல்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் நிறைய எழும். கல்யாணம் என்றோ என்னவோ பேர் என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை. ஆனால் இப்படித்தான் அவர் பெயர் மனதில் நிழல் அடிக்கிறது. நன்றாக சமைப்பவர். யார் வீட்டில் கல்யாணம் என்றாலும், அவர் வந்துவிடுவார். சமையலில் ஒத்தாசையாக இருப்பார். எந்த பெரிய வைபவமும், கிராமத்தில் அந்தக் காலத்தில் சமையலுக்கு என்று ஆட்களை சம்பளத்துக்கு நியமிப்பதில்லை. வீட்டில் உள்ள பெண்களே தான் எல்லா சமையல் காரியங்களுக்கும் பொறுப் பேற்றுக் கொள்வார்கள். பக்ஷணங்கள் எல்லாம் தயார் செய்வது என்பது ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கி விடும். அக்கம் பக்கத்துப் பெண்களும் உதவிக்கு வந்து விடுவார்கள். அந்த மாதிரியான சூழலில் கல்யாணம் தன் சமையலுக்குப் பேர் போனவர். "கல்யாணம், உன் ஆத்துக்காரி கொடுத்து வச்சவடா, அவளும் கூடமாட ஏதாவது செய்வளா, இல்லே நீ வந்து, "என்னத்துக்குடி நீ கிடந்து கஷ்டப்படறே, நான் ஒருத்தன் இருக்கேனோல்யோம்பியா?" என்று தமாஷ்களும் நடக்கும். அவரும் சிரித்துக்கொண்டே அவ்வப்போது சமயத்துக்கு ஏற்றாற்போல் ஏதாவது பதில் சொல்லி விடுவார். கோபப் படமாட்டார். நல்ல மனுஷன். கிராமத்திலே எத்தனை கல்யாணம் நடந்து விடும்? யாராவது எப்பவாவது, "வீட்டில் அவளுக்கு உடம்பு முடியவில்லை, வேறு வழி இல்லை" யென்றால், "ஏண்டா கல்யாணம், ஒரு 200 லட்டு பண்ணிக்கொடேண்டா, என்ன கேக்கறே சொல்லு" என்று வாய்ப்பு வரும். 'இதையெல்லாம் நம்பி இருக்க முடியுமா? சின்னதா ஒரு ஹோட்டல் ஆரம்பித்தால் என்ன?' என்று அவருக்குத் தோன்றியது. ஊருக்குள் நுழையும் முன், பிள்ளையார் கோயில் மேட்டுக்குக் கீழே, காவிரிக்குப் போகும் பாதை முனையில், சிவன் கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு சின்ன தென்னங்கீற்றுக் கொட்டகை போட்டுக் கொண்டார். நல்ல வசமான இடம். ஊரை விட்டு வெளியே வந்தால், வலங்கிமானுக்குப் போகணுமா, காவிரிக்குப் போகணுமா, இல்லை கும்பகோணம் போகணுமா, இல்லை கோவிலுக்குத் தானா, எதாக இருந்தாலும், எங்கே போவதானலும் எல்லாப் பாதைகளுக்குமான முச்சந்திதான் கல்யாணம் கீற்றுக் கொட்டகை போட்டுக் கொண்ட இடம்.

சாயந்திரம் தான் அந்தக் கடை திறக்கும். ஒரு நாள் வடை, இன்னொரு நாள் போண்டா, இப்படி தினம் ஒன்றாக வீட்டி லேயே ரெடியாக போட்டுக்கொண்டு வந்து அங்கு உடகார்ந்து விடுவார். யார் வாங்கினார்கள், எப்படி வியாபாரம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. கிராமத்தில் யாரும் அவ்வளவு சுலபமாக காசை வெளியே விட்டு விடமாட்டார்கள். எதை நம்பி அவர் இதை ஆரம்பித்தார் என்று இப்போது நினைத்துப் பார்க்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. சாயந்திர வேளையாதலால் நாலைந்து பேர் அங்குகூடி விடுவார்களாம். சீட்டட்டத்துக்கோ அல்லது வேறு எதற்குமோ ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் கூடுவதில்லையா, அது போலத் தான். வாங்கிச் சாப்பிடுகிறவர்கள் கூட்டமல்ல. அரட்டைதான் நடக்கும். வியாபாரமல்ல. "ஏண்டா கல்யாணம், இன்னிக்கு என்ன பஜ்ஜியா? ஒண்ணு கொடேன் பாப்பம். ஆத்திலே பண்ற மாதிரியா, இல்லே வியாபாரத்துக்குத் தானே, நாமே சாப்பிடப் போறோம்னு பண்றியா தெரியாடாமா?" என்று ஆரம்பிக்கும் அரட்டை. "தேங்காண்ணையா, இல்லே நல்லெண்ணையாடா? என்று ஒரு கேட்பார். "நல்லெண்னைதான்னா", ன்னு பதில் வரும். "வியாபாரத்திலே அதெல்லாம் கட்டிவராது. கடலெண்ணையாக்கும், அநாவசியமா துருவித் துருவிக் கேக்கப்படாது இந்த இடத்துலே" என்று ஒருவர் கல்யாணத்துக்கு சப்போட்டாப் பேசுவார். "அட கடலெண்ணைன்னுதான் இருக்கட்டுமே. கடலெண்ணென்னு தெரியாம பண்ணிப்பிடறானோல்யோ, அது சாமர்த்தியம் தானே, அது கூட கல்யாணத்துக்குத் தெரியலேன்னா எப்படி? "என்று இன்னொருத்தர் கல்யாணத்தைத் தாங்கிப் பேசுவார். இப்படித்தான் அந்த இடத்தில் கலகலப்பு இருக்குமே தவிர வியாபாரம் நடக்கவில்லையாம். ஒரு நாளைக்கு இந்த அரட்டைக்கு முத்தாய்ப்பாக ஒருத்தர், "கல்யாணம், இவா இப்படித்தான் சொல்லீண்டிருப்பா, நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதே, நான் சொல்றதைக் கேளு, பேசாமே மண்ணெண்ணேயிலே பண்ணிப்பிடு, என்ன நான் சொல்றது? செலவும் குறைச்சல். இல்லாட்டா கட்டுபிடியாகுமா சொல்லு?" சொன்னாராம். இந்த வம்பே வேண்டாம் என்று கல்யாணம் அந்தக் கீத்துக் கொட்டகைக் கடையை ஒருவாரத்திற்குள் மூடிவிட்டார், அதிக நஷ்டமில்லாமல்.

அந்தக் கல்யாணம் வீட்டில் தான் ஒரு டைம் பீஸ் இருந்தது. கிராமத்தில் வேறு எந்த வீட்டிலும் கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை. விடிவதற்குச் சற்று முன்னால் எழவேண்டும். பொழுது சாய்ந்ததும் சாப்பிட்டு உறங்க வேண்டும். இடையில் எந்தக் காரியத்தை மணி பார்த்துச் செய்யவேண்டும்? வெயிலைப் பார்த்து, விழும் நிழலைப் பார்த்து உத்தேசமாக நேரம் தெரிந்து விடும். ஆனால், ஒரு நாளைக்கு அது எனக்கு போதுமானதாக இருக்கவில்லை.

பாட்டி நிலக்கோட்டையிலிருந்து வந்து கொஞ்ச நாள் உடையாளூரில் தங்கியிருந்தாள். நிலக்கொட்டைக்குத் திரும்பிப் போகணும். எதற்காக வந்திருந்தாள், எப்படி வந்தாள் என்பதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. ஞாபகம் இருக்கவேண்டும், அதைச் சொன்னால் தான் இனி நான் சொல்ல வருவது முழுமையாகும். ஆனால் நினைவில் இல்லை. அதில் நான் சம்பந்தப்படவில்லை என்பதாலோ என்னவோ. எப்படித் தனியாக வந்தாள், என்பது என் யூகத்திற்கும் புலப்படவில்லை. நிலக்கோட்டையிலிருந்து அம்மைய நாயக்கனூர் கொடை ரோடு ரயில் நிலையத்திற்கு மாமா பஸ்ஸில் அழைத்து வந்து ரயில் ஏற்றிவிடுவார் தான். ஆனால் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து உடையாளூருக்கு எப்படி பாட்டி வந்திருக்க முடியும்? பாட்டி தனியாக குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு வலங்கிமான் போய் பின்னும் அங்கிருந்து இன்னொரு குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு உடையாளூர் வருவதென்பதெல்லாம், பாட்டியின் கிட்டத்தட்ட அறுபது வயது அனுபவத்தில் இல்லாத காரியங்கள். இப்போது பாட்டி நிலக்கோட்டை போகவேண்டும். கும்பகோணத்தில் ரயில் ஏற்றிவிட்டால் சாயந்திரம் நாலு நாலரை மணிக்கு கொடைரோடு போய்ச்சேர்ந்து விடுவாள். பாட்டி முதல் நாள் ராத்திரி தோசையோ ஏதோ சாப்பிட்டதோடு சரி. ரயில் ஏதும் சாப்பிட மாட்டாள். ஊருக்குப் போய் குளித்துவிட்டு சமையல் செய்து தான் சாப்பிடுவாள். இதிலெல்லாம் பாட்டி அப்படி ஒன்றும் பெரிதாக கெடுபிடி செய்கிறவள் இல்லை. ஆனால் அது தானே ஒரு பிராம்மண விதவை அனுஷ்டிக்க வேண்டிய நியமம். அதை மீற மாட்டாள். அவ்வளவு தான். நிலக்கோட்டை போகும் வரை வெறும் வயிறு தான். மாமா கொடைரோடு வந்து அழைத்துக்கொண்டு போய்விடுவார். அவருக்குச் செய்தி சொல்லியாயிற்று. கும்பகோணத்திற்கு செங்கோட்டா பாஸஞ்சர் காலை ஆறு மணிக்கு வரும். அதற்கு உடையாளூரிலிருந்து மாட்டு வண்டியில் வலங்கிமான் போய் அங்கிருந்து குதிரை வண்டி பிடித்து காலை ஆறு மணிக்குள் கும்பகோணம் போவது என்பது நடவாத காரியம். உடையாளூரில் மாட்டு வண்டிக்கு ஏற்பாடு செய்தாலும், வலங்கிமானில் காலை நாலரை மணிக்கு குதிரை வண்டிக்கு எங்கே போவது? ஆக, பாட்டியை எப்போது நான் பள்ளிக்கூடம் போகும் வயல் வரப்புகள் வழியே நடத்தி அழைத்துச் செல்வது தான் சாத்தியமான காரியம். "என்னடா, பாட்டியை கும்மோணத்திலே ரயில் ஏற்றி விடறயா?" என்று அப்பாவும் அம்மாவும் கேட்ட பிறகு, சாதாரணமாகவே 'மாட்டேன்' என்று சொல்வது முடியாது. அப்பாவோடு பாட்டி போகமாட்டாள். அப்பா முன்னாலேயே கூட பாட்டி நிற்க மாட்டாள். பேச மாட்டாள். அப்பாவும் தான். அம்மாவிடம் சொல்லித்தான் மற்றவர்க்கு செய்தி போகும். ஆக, வீட்டில் அடுத்த பெரியவன், ஆண்பிள்ளை நான் தான். இது ஒரு பெரிய காரியம் அதை நான் செவ்வனே செய்துமுடிக்கவேண்டும். "காலம்பற விடியறதுக்கு ரண்டு முன்னாடியே கிளம்பிடு. பாத்து மெதுவா கூட்டி அழைச்சிண்டு போ, என்ன?" என்றார் அப்பா. முதல் நாள் இரவே பாட்டி தன் பெட்டியைத் தயார் செய்து வைத்துக் கொண்டாள்.

அப்பா எழுப்பினார்: "எழுந்திரு. போய் கல்யாணத்தோடே கடிகாரம் ஒடலையாம். வெளுத்துண்டு வர்ரமாதிரி இருக்கு. எதுக்கும் நீ கிளம்பிடு. பாட்டியை மெதுவாத்தான் அழைச்சிண்டு போகணும். நாழியாகும்" என்றார் அப்பா.

பாட்டியை அழைத்துக் கொண்டுபோய் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் ஏற்றி விட்டு, நான் திரும்ப இங்கு மகாமகக் குளம் மேற்குத் தெருவில் இருக்கும் பாட்டி வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அங்கு குளித்து சாப்பிட்டு பள்ளிக்கூடம் போகலாம். ஒன்றும் சிரம மில்லை. நான் எப்படியும் கும்பகோணம் போய்த்தானே ஆகவேண்டும்.

பாட்டியின் பெட்டியை நான் எடுத்துக் கொண்டேன். இருட்டித் தான் இருந்தது. "நீ பாதி தூரம் போகும் போதே நன்னா விடிஞ்சுடும்டா, வெளுத்துண்டு வராப்லே தான் இருக்கு." என்றார் அப்பா. இருட்டி இருந்தாலும் கொஞ்சம் இருட்டில் கண் பழகினால் சின்ன வரப்பு கூட நன்றாக தெரியவந்துவிடும். உடையாளூரிலிருந்து அரை மைல் தூரத்திலிருக்கும் ஆற்றங்கரை வரை வண்டிப் பாதை உண்டு. அந்த ஆற்றைக் கடந்த பிறகு ஒற்றையடிப் பாதை கும்பகோணம் அரசிலாற்றங்கரை வரும் வரைக்கும். எங்கள் ஊர் ஆறு வந்ததும் நான் பெட்டியை ஆற்றின் கரையிலேயே வைத்துவிட்டு பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடந்து பாட்டியை ஆற்றின் மறுகரையில் நிற்க வைத்துவிட்டு மறுபடியும் ஆற்றைக் கடந்து பெட்டியை எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து மறுகரைக்கு வருவேன். பாட்டி நான் பெட்டியை எடுத்து வரும் வரையில் மறுகரையில் காத்திருப்பாள். நான் வந்ததும் நடையைத் தொடர்வோம். நாதன் கோயில் வரும் முன் இன்னொரு ஆறு இருக்கிறது. அதையும் இப்படித்தான் கடக்கவேண்டும். ஆனால் அதன் பிறகு இரண்டு இடங்களில் குறுக்கே ஓடும் வாய்க் கால்களையும் இப்படித்தான் கடக்க வேண்டும். அந்த இரண்டு வாய்க்கால்களையும் கடக்க குறுக்கே இரண்டு தென்னை மரங்களை வெட்டிப் பாலமாகப் போட்டிருக்கும். ஆனால் அதைப் பாட்டியால் கடக்கமுடியாது. வாய்க்காலில் இறங்கித்தான் அழைத்துச் செல்ல வேண்டும்.

இதோ விடிந்து விடும். விடியும் சமயத்திலாவது கும்பகோணம் ரயில் நிலையத்தை அடைந்துவிடவேண்டும். தாமதமாகப் போய் விட்டால் வண்டி போய்விடும். பின் இந்த இருட்டில் பாட்டியை நடத்தி அழைத்துச் சென்ற கஷ்டத்திற்கு அர்த்தம் இல்லாது போய் விடும். அப்புறம் அப்பா அம்மாவிடம் பேச்சுக் கேட்கமுடியாது. எனக்கே ரொம்ப அவமானமாக இருக்கும். சீக்கிரம் போகணும் என்பதற்காக பாட்டியை வேகமாக நடக்கச் சொல்லமுடியாது. இவ்வளவு தூரம் பாட்டியை நடத்தி அழைத்துக் கொண்டு போவதே பாவம். அதிலே ஆத்திலே இறங்கு, வாய்க்காலில் இறங்கு, சீக்கிரமா வா என்றெல்லாம் வேறே கஷ்டப்படுத்த முடியுமா என்ன? இரவு ரொம்ப அமைதியாக இருந்தது. யாரும் பின்னால் வருவாரோ முன்னால் எதிர்ப்படுவாரோ கிடையாது. சுத்தி ஒரே வயல் பரப்பு. ஆற்றில் ஓடும் ஜலத்தின் சலசலப்பு. இரவுப் பூச்சிகளின் கிச் கீச் என்று ஒரு மாதிரியான சப்தம் வழி பூராவும். பயமென்றில்லை. பாட்டி கூட இருக்கிறாள். பாட்டிக்கு நான்,. எனக்கு பாட்டி என்று ஒருவருக்கொருவர் துணை இருப்பதான ஒரு தைரியம் மனத்தில். ஏதும் ஆபத்து வந்தால் நானோ பாட்டியோ இருவருமே பிரயோஜனமில்லை. இருந்தாலும் பயம் என்ற நினைப்பே இருவருக்குமே இல்லை. முடிந்த வரை சீக்கிரம் கும்பகோணம் போய்ச்சேரவேண்டுமே என்ற நினைப்புத்தான். போய்க்கொண்டே இருந்தால் விடிந்து விடுமே. அப்புறம் என்ன?

பாட்டியும் நானும் பெட்டியோடு இரண்டு ஆற்றையும் கடந்தாயிற்று. பாட்டி எங்கும் வழுக்கி விழ்வும் இல்லை. நடக்க முடியலேடா கொஞ்சம் உட்கார்ந்துட்டு போலாமே என்றும் பாட்டி ஒரு தடவை கூட சொல்லவில்லை. அரசலாற்றை அடைந்த போது, அதிர்ஷ்டவசமாக தோணி காத்திருந்தது. இந்த நேரத்தில் இருட்டில் தோணி கிடைக்குமா என்றே இந்த நிமிஷம் வரை எண்ணிப் பார்க்கவில்லை. தோணியைப் பார்த்ததும் தான், "அட இப்போஎப்படி தோணி தயாரா இருக்கு!" என்று ஆச்சரியப்படத்தான் தோன்றியது.

கும்பகோணம் டவுனுக்குள்ளும் நுழைந்து நடக்க ஆரம்பித்தோம். பெட்டியைத் தூக்கி வருவதிலும் எனக்கு சிரமமோ களைப்போ ஏதும் இருக்கவில்லை. ரயில் நிலையம் போய்ச் சேர்ந்து பாட்டியை ஒரு பெஞ்சில் உட்காரவைத்தேன். "அப்பாடா" என்று இருந்தது. நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டோம். ஆச்சரியம் என்னவென்றால் இன்னம் விடியவில்லை. ஸ்டேஷனில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ரயில் இன்னும் வரவில்லை. ஸ்டேஷனிலும் கூட்டமில்லை. இந்த நேரத்திற்கு அதிகம் போனால் இருபது முப்பது பேர் வண்டிக்குக் காத்திருப்பார்கள். நாலைந்து பேர் கூட கண்ணில் படவில்லை. கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அப்போது தான் ஐந்தே கால் ஆகியிருந்தது. ஆக, வீட்டை விட்டுக் கிளம்பியபோது மணி உத்தேசமாக, இரண்டரையோ இல்லை, மூன்று இருக்குமோ என்னவோ

"ரொம்ப முன்னாடியே கிளம்பிட்டோம் போலிருக்கேம்மா, மணியே தெரியலே. நடு ராத்திரிலே தனியா அஞ்சு அஞ்சரை மைல் நடந்திருக்கோம்மா" என்றேன் பாட்டியிடம். "போனாப் போறது போ. வந்து சேந்துடோமில்லியா, அது போறும்." என்றாள் பாட்டி.

பாட்டியை ரயிலேற்றிவிட்டேன். சாயந்திரம் நாலு நாலரை மணிக்கு கொடைக்கானல் ரோட் போய்ச்சேரும். மாமா ஸ்டேஷனில் காத்திருந்து பாட்டியை அழைத்துப் போவார். கொடைக்கானல் மோட்டார் யூனியன் பஸ் ஒன்று காத்திருக்கும். முக்கால் மணி நேரத்தில் மாமாவும் பாட்டியும் நிலக்கோட்டை போய்ச் சேர்ந்து விடுவார்கள். பாட்டி கிணற்றடிக்குப் போய் குளித்துவிட்டுத் தான் சமையல் அடுப்பை மூட்டுவாள். முந்தின நாள் ராத்திரி தோசை சாப்பிட்டது. காலையில் குளித்துவிட்டு கா·பி சாப்பிட்டாள். கா·பி இல்லாமல் தலை வலி வந்துவிடும் பாட்டிக்கு. இனிமேல் அடுப்பு மூட்டி, தோசை வார்த்துச் சாப்பிடுவாளோ இல்லை, இரண்டு வாழைப்பழமும் போறுண்டா, என்று நாள் பூராவும் வெறும் வயிற்றோடு ரயில் வந்த களைப்பில் படுத்துண்டா போறும்னு இருந்து விடுவாளா, தெரியாது. ஒரு வயதான பிராமண விதவைக்கான ஆசார அனுஷ்டானங்களை விதித்தவர்கள், இப்படியான ரயில் பிரயாணங்களை எதிர்பார்த்தார்களா என்ன? ஆனால் பாட்டி இந்த ஆசார அனுஷ்டானங்களில் எதையும் எதற்கும் தளர்த்தியவள் இல்லை.

மணி ஆறேகால் தான் ஆகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் இருபது நிமிஷத்தில் மகாமகம் மேற்குத் தெருவுக்குப் போய்விடலாம். அனேகமாக பாட்டி இன்னும் கா·பி சாப்பிட்டிருக்கமாட்டாள். எனக்கும் கா·பி கிடைக்கலாம்..

20.1.09
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்