கனடாவில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் - குரு அரவிந்தன் -
கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதாலும் இங்கு ஆவணப்படுத்துகின்றேன்.
எழுத்தாளர் அகில் சாம்பசிவம் தொகுத்து வெளியிட்ட ‘இலக்கியவெளி’ சிறப்புமலர் 3-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ (கவிதைத்தொகுப்பு), ‘நவீன விக்கிரமாதித்தன்’ (நாவல்), வ.ந. கிரிதரன் கட்டுரைகள் ஆகியன 19-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. இதே தினத்தில் கலாநிதி சண்முகம் வெற்றிவேல் எழுதிய ‘இலக்கியத்தில் உளவியல்’ ‘தமிழர் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள்’ ஆகிய நூல்கள் ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றன.
திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் ‘ஒற்றை வானமும் ஒரு பறவையும்’ (கவிதைத் தொகுப்பு ) ‘பொன்வண்டு’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன கனடியத் தமிழ் வானொலியால் 12-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. கனடா தமிழ் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் இதழ் 5-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஒலி,ஒளி ஊடகர் பி. விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகவிழா 4-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் சம்பந்தனின் ‘விழியும் துளியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 14-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. உரையாளர் பொன்னையா விவேகானந்தனின் ‘தமிழ்மொழிக் கல்வி,’ ‘தமிழ்ப்பண்பாடு,’ ‘நாடகங்கள்,’ ‘பெயர்வுத் தமிழ்ச்சமூகம் - இருப்பும் இடர்களும்’ ஆகிய நூல்கள் 8-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது.