அந்நியமாதல் கருத்துநிலையில் ஈழத்து புகலிடத் தமிழ் இலக்கியம் - நான் நிழலானால் சிறுகதைத்தொகுதி மீதான ஓர் ஆய்வுக்கண்ணோட்டம் - - குமாரசூரியர் யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம். -
அறிமுகம்
ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறியின் புதியதோர் புலனாக அமைவது புகலிடத் தமிழ் இலக்கியம் ஆகும். புகலிடத் தமிழ் இலக்கியம் என்ற சொல் ஈழத்து அரசியல் சூழலுடன் தொடர்புடைய பொருண்மை கொண்டது. உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு அரசியல், புவியியல், பண்பாடு, வாழ்க்கை முறை, மொழி முதலான அனைத்து அடிப்படைகளிலும் இருந்து; வேறொரு நாட்டில் தஞ்சம் பெற்று வாழ்பவர்கள் எழுதுகின்ற இலக்கியங்களே புகலிடத் தமிழ் இலக்கியம் என்று வரையறை செய்யப்படுகின்றன. ஒருவர் தனது தாய் நாட்டில் இருந்து வெளியேறிச்சென்று வேறொரு நாட்டில் வாழும் போது எழுதுகின்ற இலக்கியங்களை தனியே ஒரு வகைப்பாட்டில் குறிப்பிடுகின்ற வழக்கம் உலக இலக்கிய வரலாற்றில் உண்டு. இத்தகைய இலக்கியங்கள் “தமிழில் புகலிட இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம, அலைந்துதழல்வு இலக்கியம, புலச்சிதறல் இலக்கியம்” என்று பலவாறாக அழைக்கப்படுகின்றது.
அந்த வகையில் அந்நியமாதல் கருத்து நிலையானது 2010-ஆம் ஆண்டு வெளிவந்த நான் நிழலானால் என்ற ஸ்ரீPரஞ்சனி விஜேந்திர அவர்களினுடைய சிறுகதைத் தொகுதியில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதை அடிப்படையாகக் கொண்டதாக இந்த கட்டுரை அமைகின்றது.