
* கட்டுரையாளர் - -முனைவர் செல்லத்துரை சுதர்சன், (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) -
இந்திய மெய்யியலின் ஆன்மிக மனத்தை, தமிழுக்கேயான உலகநிலைப்பட்ட நவீன சிந்தனை மரபொன்றைக் கட்டமைப்பதற்குத் தளமாக்கி, சிந்தித்தும் எழுதியும் செயலாற்றியும் வினை புரிந்தவன், பாரதி. பண்டைய வேத, உபநிஷத ஞான மரபினூடும் வேதாந்த மரபினூடும், பல்வகை மதநெறிகளின் உட்கிடையான முழுமுதல் பற்றிய அறிவினூடும், தமிழ் நிலத்தின் சித்தர் தத்துவத்தினூடும் அவன் பெற்றிருந்ததும், காலத்தேவையுணர்ந்து புதுமை செய்ததும், அதனைத் தனது பாணியில் முன்வைத்ததுமான கருத்துநிலையை, 'பாரதீயம்' என இக்கட்டுரை கருதுகிறது. தமிழ் நவீனம் என்பதைத் தனியே மொழி, இலக்கிய நவீனமாக அணுகாது, தனது காலத்திருந்த, ஒட்டுமொத்த இந்திய மெய்யியல் சாரத்தினூடு அணுகிய, பாரதியின் தனித்த சிந்தனையின் தேட்டமே, 'பாரதீயம்'. இது, பாரதி நவீன காலத்தில், தமிழுக்கு வழங்கிய தத்துவார்த்தக் கொடை. பாரதீயத்தில் வேத, உபநிஷத் வழிவந்த வேதாந்தமாகிய பகவத்கீதை குறித்த உரையாடல்களே முதன்மையானவை. அவ்வகையில், 'பாரதி பார்வையில் பகவத்கீதை' எனும் பொருளிலான இந்த அறிமுகக் கட்டுரை, கீதையின் தோற்றம், பிரதான அடிப்படைகள் எவ்வாறமைந்தன, சத்திரியர்களின் மேலெழுகையை எதிர்கொண்டு தாக்கியதில் கீதையின் வகிபாகம் எவ்வாறமைந்தது, இந்திய விடுதலை இயக்க காலத்தில் அதன் வரலாற்றுப் பாத்திரம் எவ்வகையில் முதன்மை மிக்கது, தத்துவத்தின் வரலாற்றோட்டத்தில் கீதை மீதான எதிர்க் கருத்தியலை பாரதி எவ்வாறு எதிர்கொண்டான், கீதை பற்றிய பாரதியின் நோக்குநிலை எவ்வாறமைந்தது, கீதையூடு அவன் அவாவிய புரட்சி எத்தகையது போன்ற வினாக்களை இக்கட்டுரை அலச முன்னிறுத்துகிறது.
இந்தியத் தத்துவ மரபின் சிகரமான பகவத்கீதை, பிரஸ்தான திரயங்களில் ஒன்றாகவும், அகத்தூய்மை, செயலூக்கம், பொதுநலன் ஆகியவற்றைப் பேசுவதாகவும், வேதமரபு சார்ந்த சமூகக் கட்டமைப்புத் தளத்தில் உருவான சிந்தனையாகவும் கருதப்படுவது. 'கீதையை உள்ளடக்கியமைந்த மஹாபாரத இதிகாசம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.4ஆம் நூற்றாண்டு வரையான பல நூறாண்டுகளில் உருவாகியது' என்பார், நா.சுப்பிரமணியன். ஆகையால், இக்காலப் பகுதியிலேயே கீதை உருப்பெற்றதாகக் கருதமுடிகிறது. உபநிஷத்தாகவும், பிரம்ம வித்தையாகவும், யோக சாஸ்திரமாகவும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜூன சம்பாஷணையாவும் கீதை திகழ்வதை அதன் ஒவ்வொரு அத்தியாய நிறைவும் அறிவிக்கிறது. 'உபநிஷத்துக்கள் யாவும் பசுக்கள்' எனவும் 'பால் கறப்பவன் கோபால நந்தனன்' எனவும் 'அருச்சுனன் பசுக்கன்று' எனவும் 'அருந்துவோர் பேரறிவாளர்' எனவும் 'அருந்தப்பெறும் கீதையாகிய அமிழ்தம் மேன்மைமிக்க பால்' எனவும் கீதையின் தியான சுலோகம் கூறுவதால் 'உபநிஷதப் பசுக்களின் பாலே கீதை' என்பது புலனாகிறது.
'தத்வமஸி' எனும் உபநிஷத மகா வாக்கியத்தின் விரிவு கீதை என்பதும், கீதையின் கருத்துக்கள் உபநிஷத்திலிருந்து வளர்ச்சி பெற்றன என்பதும், கீதையின் முழுமையான அமைப்புசார் வடிவத்துக்கு உபநிஷத்துக்களே காரணம் என்பதும், கீதையை வேதாந்தக் கருவூலம் எனக் கருதவைக்கிறது. பெரும்பாலும், யோகம் பற்றிக் கூறும் ஈசாவாஷ்ய, கடோ, முண்டக, சாந்தோக்கிய, சுவேதாஸ்வரத முதலாய பழைய உபநிஷத்துக்களே கீதையின் அடிப்படைக் கருத்துக்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. கீதையானது போர்த் தேரின் தட்டில் உருவாகியமைகூட, உபநிஷதக் கருத்தேற்றலின் ஓர் உருவகமே. 'உடலைத் தேராகவும் மனத்தைக் கடிவாளமாகவும் புத்தியைச் சாரதியாகவும் ஜீவனைத் தேரில் வீற்றிருப்பவனாகவும் அறி. குதிரைகள் புலன்கள். ஈடுபடும் விடயம் பாதை. எந்த மனிதன், விவேக புத்தியாகிய சாரதியால் அடக்கப்பட்ட மனமாகிய கடிவாளத்துடன் உள்ளானோ, அவன் உலகியல் வாழ்க்கைக் கடுவழியின் எல்லையை அடைவான்' என்ற கடோபநிஷத் சுலோகத்தின் வழியே தேர்த்தட்டில் கீதையின் பிறப்பு, உருவகமாகி நிலைபெற்றமை ஓர் உருவகம் என்பதை உறுதிப்படுத்துகிறது.