கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்! - சந்திரா நல்லையா -
Antonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார்.
“ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மா செய்ததை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா? அத்தகைய ஒரு பேரழிவை எதிர்த்து தன்னந்தனியாக நின்றிருக்க முடியுமா? அல்லது குழந்தைகளை அதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமா? அம்மாவின் வாழ்க்கை நமக்கு பெரிய பாடம். கடந்துவர முடியாதவையாக என்று மாபெரும் நெஞ்சுரம் கொண்ட மனிதர்களுக்கு கூட தோன்றிய இன்னல்களை கடந்து வருவதில் மனோ உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பாடம் எமக்கு காட்டியது. ….நமக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்தார். நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் செய்தார்.”
கிராம்ஷியின் முதுகு இயற்கையிலேயே கூனலாக இருந்தமையால் அவரது வளர்ச்சி குறுகிக் காணப்பட்டது. பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். வீட்டின் வறுமை காரணமாக பதினொரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அந்த அனுபவத்தை கிராம்சி பின்னர் இவ்வாறு எழுதுகிறார். “ என்னைவிட கனமான புத்தகங்களை சுமந்து செல்வதுதான் எனக்குள்ள வேலை. யாருக்கும் தெரியாமல் பல இரவுகள் நான் அழுததுண்டு. என் உடம்பு அப்படி வலிக்கும்.”1904 இல் தந்தை தண்டனைக்காலம் முடிந்து வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவுகிறது. கிராம்சி தமது படிப்பை மீண்டும் தொடர்கிறார்.