இரசனைக் குறிப்பு : விரும்பித் தொலையுமொரு காட்டில் விரும்பாது தொலைந்த ஜில் பிராட்லி! பிரமிளாவின் பெண் வார்ப்புகளில் ஒன்று! -ரஞ்ஜனி சுப்ரமணியம் -
சிறுகதையொன்றின் கருவும் களமும் காலமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளரின் மனம் செல்லும் வழியும் மொழியும் , அவரது எழுத்தின் ஊடாக வெளிப்படுகின்ற விதமே அப்படைப்பின் மேலான வாசகரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது. இலக்கியத்தின் எந்த ரூபத்திலும் எழுத்தாளரின் வெளிப்பாட்டு மொழிதான் வெற்றியைப் பெருமளவில் தீர்மானிக்கிறது.
படைப்பாளரது மொழியாடலானது, பெருங்காற்றில் அள்ளுண்டு போவது போலவும் நீர்ச்ச்சுழலொன்றில் சிக்கியது போலவும் சுனாமியின் பேரலையில் ஆழ்ந்து போவது போலவும் பாத்திரப் படைப்பினுள்ளும் சம்பவக் கோர்வைகளுக்கு உள்ளும் வாசகரை ஈர்த்து மூழ்கடிக்கும் வல்லமை கொண்டதென நினைக்கும் கணங்களில் , முன்வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று இலங்கையைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான பிரமிளா பிரதீபன் அவர்களுடையது.
அவரது இலக்கியவெற்றி எழுத்துநடையால் அதிக பிரபலம் பெற்றது. தனித்துவமான மொழிப்பிரயோகம் சாதாரண கதைமாந்தரையும் வியந்து நோக்க வைக்கும் திறன் கொண்டது .மற்றுமோர் சிறப்பு அகவுணர்வுகளை மிகநுட்பமாகவும் ரம்மியமாகவும் மனோலயத்துடனும் வெளிக்காட்டும் , கதை மாந்தரினூடாகத் தன்னை வெளிப்படுத்துவது. பிரதியை வாசிக்கும் போதே ' அடடா , இது எனது உணர்வு ஆயிற்றே ' என வாசகரை நினைக்க வைப்பது அவரது எழுத்தின் வல்லமை.