|
உதவி வந்தது!
- அ.ந.கந்தசாமி -
அழகான
வீடுகளில் அலங்கார வாழ்வு நடத்திய பெரிய மனிதர்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது. தமது வலிவிழந்த
முதுகின்மேல் ஏறியுட்கார்ந்து ஆதிக்கஞ் செலுத்திவந்த சோம்பேறிக் கும்பலுக்கு 'அரோகரா' கூறி முதுகை
நிமிர்த்தி எழுந்துவிட்டார்கள், ஏழை மக்கள். எங்கும் புரட்சியின் பெருந்தீ கொழுந்து விட்டெரிந்தது.அதிலே
பழய நிலச்சுவான்தார்களின் பவிசும்,பட்டயமும் பஸ்மீகரித்தன. ஆனால் அந்த அக்கினியில் இருந்து நவஜீவனம்
என்ற அற்புதக் குழந்தை ஜனித்தது. அந்தக் குழந்தையின் மோஹனத்திலே மூழ்கி மயங்கி ஆனந்தித்தனர் மக்கள்.
ஆனால் இவ் அக்கினி குமாரனைக் கண்டு கொள்ளிக் கண் பாய்ச்சிய கொடியோர்களும் இல்லாமல் இல்லை.
அவர்கள் அதன் கழுத்தை நெரித்துக் கொல்லுவதற்குத் தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தனர்.......
இந்த நிலைமையில்தான் லேயாங் நகரம் அப்போது விளங்கியது.
சீனாவின் ஒரு கோடியிலே புதுவாழ்வென்னும் சிசு அப்போதுதான் அங்கு ஜனித்திருந்தது. ஆனால் மணிபோன்ற
தன் சிறு கண்களை இன்னும் அச்சிசு திறக்கவில்லை. தன் பூங்கால்களை உதைத்து, தளிர்க்கரங்களை அசைத்து
விளையாட ஆரம்பிக்கவில்லை குழந்தை.
இருந்தபோதிலும் குழந்தை பிறந்ததும் மகிழாத தாய் உண்டோ?
நகரத்தாய் ஆனந்தநகரா முழக்கிக் கொண்டிருந்தாள். அவள் நரம்பொவ்வொன்றிலும், இசைகதித்து விம்மும்
வீணையின் நரம்புபோல, சந்தோஷம் துலங்கித் ததும்பிக்கொண்டிருந்தது. அவளை ஆடைபோல் சுற்றியிருந்த
நகரச் சுவரிலே இந் நவீன குழந்தையின் ஜனனத்தை உணர்த்தச் செங்கொடி பறந்து கொண்டிருந்தது.
காலைக் கதிரவனின் பொன்னொளி அதன் மீது பட்டுச் சிதறுகையில்
அச்செங்கொடி அக்கினிப் பிளம்புபோல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஆம், அது அக்கினிப் பிளம்புதான்.
துஷ்ட்டர்களைக் கொடுங்கோலர்களைச் சுட்டெரிக்கும் அக்கினித் தீ! முன்னேற்றத்தை, இன்பத்தை, புது வாழ்வை
முன்னின்று வரவேற்கும் ஆராத்தியின் செஞ்சுடர் அது!
நகர மக்களுக்கு செங்கொடி நம்பிக்கையை, நல்வாழ்வின் நறுமணத்தை
உணர்த்தியது. கமிண்டாங் படைகளுக்கும், நிலச் சுவான்தார்களின் படைகளுக்கும் முன்னே தம் படை எதிர்த்து
நிற்கவல்லதா என்ற அச்சம் அவர்களை நடுங்க வைந்தது. ஆனால் அவர்களுக்கொன்று மட்டும் தெரியும். தாம்
புரியப் போகும் போர் ஒரு சிலரின் நன்மைக்காக் நடத்தப் போகும் போரல்லவே? தங்கள் ஒவ்வொருவரது
நன்மைக்காகவும் நடக்கும் போராட்டம்! எனவே ஷியாங் கே ஷேக்கின் கூலிப்பட்டாளம் போல் தாம் விளங்க
மாட்டார்கள். அசகாய செயல்களெல்லாம் செய்வதற்கு வேண்டிய ஆவேச உணர்ச்சி அப்படியே பொங்கிப் பரிமளிப்பது
திண்ணம். எனவே தோல்வியுற மாட்டார்கள் என்ற என்ணம் பசுமரத்தில் ஆணிபோல அவர்கள் உள்ளத்தில் தைத்திருந்தது.
தாம் கூட்டாக நடத்தும் போர் எப்படிப்பட்டதாயிருக்கும்? புதிதாகப்
பெற்றெடுத்த புது வாழ்வுக் குழந்தை. பல மாதங்களல்ல; ஆண்டுகளாகப் பாடுபட்டு தாங்குதற்கரிய வலியோடு
பெற்றெடுத்த அருமைச் சிசு. ஆகவே தாம் நடத்தும் போர் நகரத்தாய் தன் சிசுவைக் காப்பாற்றிக்கொள்ள
நடத்தும் போராக இருக்கும். கொடிய கழுகின் வாயிலிருந்து தன் சின்னஞ்சிறு குஞ்சுகளைக் காப்பாற்ற
கோபத்துடன் முன்னிற்கும், தாய்க் கோழியின் உக்ரோஷம் அப்போராட்டத்திலே பொங்கி நிற்கும். ஆனால்
அதுமட்டும் போதுமா?
கோழி எவ்வளவு சீறினாலும் கொத்தும் கழுகு விட்டுச் செல்லுமா?
கை கொடுத்துதவ 'செஞ்சேனை வரும். செஞ்சேனை வரும்' என்று ராப்பகலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
மக்கள். சூ-டே என்ற மகா வீரன் தலைமையிலே ஏழை மக்களின் பக்கத்திலே நின்று கமிண்டாங் கொள்ளையரை
எதிர்த்து நின்ற செஞ்சேனை பற்றி, அதன் ஒப்பற்ற திறமைகளைப்பற்றிப் பலவிதமான கதைகளை அவர்கள்
கேட்டிருந்தார்கள். ஆகவே அது எப்போது வரும், விடுதலைப் பட்டாளம் வருவதெப்போ என்று அங்கலாய்த்துக்
கொண்டிருந்தனர் மக்கள். அதன் வரவுக்கு மங்கள கீதம் பாடுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர் மாந்தர்.
கடைசியில் ஒரு நாள்........
நகரத்தைக் காவல்காத்த காவலாளர்கள் தூரத்திலே காற்றில்
அலையும் செங்கொடிகளோடு புழுதி கிளப்பிக்கொண்டு வருகின்ற செம்படையைக் கண்டார்கள். நகர மக்கள்
உள்ளம் அவர்களைக் கூவிக் கூவி அழைத்தது. மதிலில் பறந்த செங்கொடியோ 'வா வா' என்று காற்றில்
துடி துடித்து வரவேற்றது. செஞ்சேனையின் வரவு! அச்சேதிக்கு சீனப் பாலவைனங்களில் துள்ளிப்
பொங்கும் சூறாவழிக்கில்லாத வேஹம் உண்டாகிவிட்டது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆனந்த வெள்ளம் அணையுடைத்துப்
பாய்ந்தது. செஞ்சேனை! செஞ்சேனை! விடுதலைப் பட்டாளம்! தொழிலாள விவசாயிகளின் பட்டாளம்!
ஏழை மக்களின் உயர்வையே தன் லட்சியமாகக் கொண்ட மண்ணாசை அற்ற மகா பட்டாளம்! இதுவே
யாவர் வாயிலும் விளங்கிய சொற்கள். இந்த அபூர்வபடையைக் கண்கொண்டு பார்க்கும் பாக்கியத்தை அடைய
நகரின் கோணங்களில் எல்லாம் உறைந்து கிடந்த பொதுமக்கள், வயோதிபர் பெண்கள், சிறுவர் எல்லோரும்
குவிந்து நின்றனர் நகரவாயிலிலே.
சூ-டே கம்பீர நடைபோட்டு முன்னே வர நகரத்துள் நுழைய
ஆரம்பித்தது செம்படை. வானமதிரக் கோஷங்கள், சந்தோஷ ஆர்ப்பரிப்பு. சூ-டேயை முன்னின்று வரவேற்றாள்
ஒரு பெண். சீனாவில் மலர்ந்திருந்த புதிய வாழ்வுக்குச் சான்று கூறுவது, போல் இருந்தது ஒரு பெண் முன்னின்று
வரவேற்பது. அவள் பெயர் காங். சீனப்பெண்களின் பழய பழக்கங்கள் அவளிடம் இல்லை. நீண்டு தொங்கும்
கூந்தலுக்குப் பதில் கத்தரிக்கப்பட்ட தலைமயிர். இரும்புச் சப்பாத்தணிவதால் குறுகிச் சிறுத்திருக்கும் பாதங்களுக்குப்
பதில் பூரண வளர்ச்சியுற்ற இயற்கையான பாதங்கள். நயனம் கோணிய, நாணப்பார்வைக்குப் பதில் நேரிய
வீரப்பார்வை.
காங்கும் சூடேயும் சந்தித்தனர். உடல்கள் மட்டுமல்ல
கணத்திலே இரண்டுயிர்களும் சந்தித்துச் சம்பாஷித்து ஒன்றை ஒன்று புரிந்து கொண்டன. பிரிய முடியாத
ஓர் பிணைப்பிலே ஒன்றிக் கொண்டன அவர்களது அந்தரங்க ஆசைகள். சூடேயில் ஆண் குலத்தின் ஈரமும் அவ்
ஈரத்திற் பிறந்த வீரமும் உருவெடுத்து விளங்கின. காங்கிலோ பெண்ணின் பெருமையாவுமே உறைந்து கிடந்தது.
ஏழைகள் சார்பிலே - ஒடுக்கப்பட்டார் சார்பிலே பேசிய வீரம் அவள் உள்ளத்திலே ஊற்றெடுத்துப் பிரவகித்தது.
* * *
லெயாங் நகரம் பாதுகாப்பில் நெடுநாள் இருக்கவில்லை. மக்களின்
பந்தோபஸ்து வாழ்வு நீடிக்கவில்லை. கமிண்டாங் காடையர்களின் அட்டஹாசம் ஆரம்பித்தது. குஞ்சுப்பறவைகளைக்
கொத்தத் திரியும் கழுகு போலவே தலைக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது ஷியாங்கின் ராணுவ பலம்.
மெல்லமெல்லமாகத் தாக்குதல்களும் ஆரம்பித்தன. பசி, பட்டினி, சாவு, பயம் எல்லாம் வேகத்துடன் நகர
மாந்தரைப் பற்றிப் படர்ந்து கவ்வின. ஆனால் உரிமைப் போருக்கெழுந்த அவர்கள் அகராதியில் 'சரணாகதி'
என்ற வார்த்தை மட்டும் இல்லை. கடைசிவரையில் போரிடக் கங்கணங் கட்டி விட்டார்கள். செஞ்சேனையோ
பக்கத்திலே கைகொடுத்து உதவிக் கொண்டிருந்தது.
ஆனால் கமிண்டாங் படையின் அடிகள் பலமாக விழத்தலைப்பட்டன.
அதற்கு அன்னிய ஏகாதிபத்தியங்களின் மர்மக் கைகள் ஆயுதபலத்தை அளித்தன. தோல்விக்கு மேல் தோல்வி.
செம்படையினர் வீழ்ச்சியின் ஓரத்திலே நிற்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் போராடி வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
போதாதற்கு நகருக்கு உணவு வரும் இடங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு விட்டன.
இங்ஙனம் அழிவு பயமுறுத்தப் பயமுறுத்த ஆக்ரோஷம் பொங்கியதல்லாமல்
அச்சம் உண்டாகவில்லை. போராவது போர்....! ரத்த வெள்ளம் தண்ணீர்ப்பிரவாஹம் போல் பாய்ந்தது.
வெற்றியின் தூரக்காட்சி வெளிப்பட வெளிப்பட கமிண்டாங் படைகளுக்கு கரை கடந்த வெறியும் உத்ஸாகமும்.
அதன் முன்னே செம்படை சிதறிச் சின்னாபின்னமாகி ஒழிந்து அழிந்து மரணத்தின் வாயிலிலே வீழ்ந்து
கொண்டிருந்தது.......
ஆம். இனி நம்பிக்கை இல்லை. லெயாங் வெறுக்கப்பட்ட முதலாளிகளுக்கும்
அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கும் கொண்டாட்ட ஸ்தலமாகப் போகிறது.
சீனத்தின் சின்னஞ்சிறு முதலாளிகளும், சீன் நகரங்களில்
வியாபாரம் எல்லாவற்றையும் அழுங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பணமூட்டைகளும், ஜப்பானியகெய்ஷாப்
பெண்களோடு ஆடிப்பாடிக் குடித்துக் குதூகலித்து வாழப்போகும் பாவபூமி!- மறு புறமோ ஏழைகள் எழும்பை
எருவாக்கிப் பட்டினிப் பயிர் வளர்க்கப் போகிறார்கள்!
ஆனால் என்ன செய்வது? லெயாங்கைக் காப்பாற்றினோம் என்று
சாக முடியவில்லை. ஒரு உத்தமக் கொள்கைக்கு உயிர் விட்டோம் என்றாவது சாவோம் என்று செம்படை போராடுகிறது.
கமிண்டாங் தளகர்த்தர்கள் வெற்றி மதுவைக் குடித்து வெறி
கொண்டு விட்டார்கள். எக்காளமும், ஏளனமும் கலந்த சிரிப்பு அவர்களின் முகத்திலே! ஆம், அவர்களின்
பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அல்லவா போராடுகிறது? சமாளிக்க முடியவில்லை. வீழ்ந்து கொண்டிருக்கிறது
செஞ்சேனை!
நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் அந்நேரத்திலே, யுத்தத்தின்
பேரொலியின் ஊடே வாத்திய சங்கீதம் ஒன்று பொங்கி ஒலித்தது. ஆஹா,! இது எங்கிருந்து வருகிறது?
செஞ்சீனாவின் போர்க் கீதத்தை அழகுற இசைக்கும் வாத்திய சங்கீதம்! அதைத் தொடர்ந்து பட்டாள அசைவின்
பேரொலியொன்று. ஆயுதந் தாங்கிய லொறிகளின் ஆர்ப்பாட்டச் சபதம்.
செம்படையினர் சப்தத்தின் திசையை நோக்கினர். கமிண்டாங்க்
படையினர் கண்களும் திரும்பின.
தூரத்து வான வளையத்தண்டை பிரமாண்டமான மக்கள் கூட்டம்
அசைவது மங்கலாய்த் தெரிந்தது.....
ஆம், இதைப் போன்ர பெரிய சேனையைக் கண்டதில்லை. சப்தங்களின்
கலவையை நோக்கினால் ஆயுதத்திலும் இதைப் போன்ற சைனியம் ஒன்று சீனத்தில் இதுவரை இல்லை.....
மெல்ல மெல்லக் காட்சி தெளிவடைந்தது. அரிவாள் அம்மட்டி
குறுக்கிட்ட செங்கொடுகள் கடல் அலைகள் போல அந்த ஜனக்கடல் மீது தெரிந்தது.
ஆம்! செம்படை! செம்படை! எங்கிருந்து வந்தது பிரமாண்டமான
இச்செம்படை! கமிண்டாங் சேனைகள் கலங்கின. அவர்கள் முகத்திலே பயத்தின் முத்திரை. சிந்தனை செய்ய
நேரம் இல்லை. அவர்களின் அழிவு நீச்சயமாகி விட்டது! வேறென்ன?
கண்ணை மின்ன விழிக்கும் நேரத்தில் ஓட்டம் பிடித்தனர்.
குதிகால்கள் பிட்டத்திலே தட்டும்படியான பெரும் ஓட்டம். ஆயுத லொறிகள் எல்லாம் மணிக்கு அறுபது மைல்
வேகத்தில் வெறியோட்டம் தொடங்கின. ஓட்டம்!..ஓட்டம்!...ஓட்டம்!...
கமிண்டாங் சேனை ஓடி விட்டது. ஒரு கண்டம் தப்பித்தது.
செஞ்சேனை தங்களுக்கு உதவி கொண்டுவந்த புதுமைப் படையினரை எதிர்கொண்டு வாழ்த்த காத்த
நின்றது. "எங்கிருந்து வந்தது இத்தகைய சேனை!" என்று அவர்களால் யூகிக்க முடியவில்லை. 'கமிண்டாங்க்
சேனைதான் ஷியாங் கை ஷேக்கை விட்டுப் பிரிந்து எம்முடன் சேர வருகிறார்களோ" என்றெண்ணினர் சிலர்.
"இல்லை என்றால் இதுவென்ன?" என்று தயங்கினர். வேறெதுவும் அவர்களால் சிந்திக்க முடியவில்லை.
* * *
இரு சேனைகளும் எதிர் ஊன்றின. செஞ்சேனையை நோக்கி
வந்து கொண்டிருந்தது இப்புதிய செஞ்சேனை.
இரு செஞ்சேனைகளும் எழுப்பும் வெற்றிக் கீதம் ஒன்றுடன் ஒன்று
சங்கமாகிவிட்டன. வாத்திய சங்கீதம் பேர் இரைச்சலாக முழங்கிற்று.
திடீர் நிசப்தம். சப்தங்கள் ஓய்ந்தன. இரு சேனைகளும் அசையாது
நின்றன. செங்கொடிகள் மட்டும்தான் அசைந்து கொண்டிருந்தன. ஆனால் இது என்ன ஆச்சரியம்! புதிய
சேனை சேனை போலவே தெரியவில்லையே! சாதாரண ஜனக்கள், பெண்கள்,வயோதிபர், சிறுவர்கள் எல்லோரும்
கூடிய வெறும் ஜனத்திரளாய் அல்லவா இருக்கிறது!
செம்படையினர் திகைத்தனர். புதிய செம்படையில் இருந்து
ஒருவன் முன்னே வந்தான்.
"செஞ்சேனை தோற்றுக் கொண்டிருக்கும் சேதி எங்கள் காதில்
ஈட்டிபோல் பாய்ந்தது. கிராமம் முழுவதையும், அயல் கிராமங்களையும் ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டோம்.
அப்பொழுது ஒரு யோசனை. எல்லாருமாகச் சேர்ந்து செங்கொடிகளோடும் சேனையின் சங்கீததோடும், ஆயுத
லொறிகளின் சப்தத்தை உருவாக்க தகரங்களை உருட்டிக் கொண்டும் செல்வோம் என்ற யோசனை. பலித்து
விட்டது. பிரமாண்டமான சேனை என்று எண்ணி விட்டனர் கமிண்டங் கொள்ளையர்கள். வீரர்களின் ஓட்டம்
வெகு வேகமாயிருந்தது. அதை மெச்ச வேண்டும்! நம்து படையையும் நகரத்தையும் நாம் காப்பாற்றி விட்டோம்"
என்ற வார்த்தைகள் அவன் வாயில் இருந்து உணர்ச்சியோடு பொங்கின. அவ்வளவுதான். செம்படையினர் கண்களில்
நீர் துளிர்த்தது. ஒவ்வொருவரும் தம் கைக்குட்டையைக் கண்ணருகில் கொண்டு சென்றனர். மக்களின் இத்தகைய
ஒத்துழைப்பு இருக்கும் போது எம்மை வெல்ல யாரால் முடியும் என்ற கம்பீரமும், மிடுக்கும் அவர்கள் உருவங்களிலே
பாய்ந்தது.
எதிர்காலம் என்றுமில்லாத வெற்றிகளை அவர்களுக்கு வைத்திருப்பதனை
உணர்ந்து கொண்டார்கள் வீரர்கள்!
* * *
சீக்கிரமே சந்தோஷ ஆரவாரம் நகரத்தை அப்படியே அதிர
வைத்துக் களேபரப்படுத்தியது. நகரச் சுவரிலே செங்கொடி புதுயுகக் காலையின் செவ்வானைப் போல, அலை
வீசிக் கொண்டிருந்தது. பிடுங்கப் படாது அதனைக் காப்பாறி விட்டதற்காக மக்கள் உள்ளத்திலோ ஆனந்த
வெள்ளம் அலை அடித்தது. செங்கொடிக்கு உண்டோ அழிவு என்று வாழ்த்தினர் அவர்கள்!
{பாரதி இதழிலிருந்து. கே.கணேஷ்
, ராமநாதனைக் கூட்டாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த ஈழத்துச் சிற்றிதழ் பாரதி) |