- பீஷ்மப் பிரதிக்ஞை என்னும் ஓரங்க நாடகம் பற்றிப் பதிவுகளில் வெளியான நிகழ்வுக் குறிப்பையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு எழுதிய எதிர்வினையிது. - பதிவுகள்.-
மிகவும் நன்றி கிரிதரன், பீஷ்மப் பிரதிக்ஞை வெறுமனே ஓர் ஓரங்க நாடகம் மாத்திரம் அன்று. "பாத்திர உருவாக்கம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற ஒரு செயல் முறை அரங்க நிகழ்வுக்காக மேடை இடப்பட்ட நாடகம். இதிலே பீஷ்மர் என்னும் பாத்திரத்தை
1.டெல் சார்ட் நடிப்பு முறை
2. ஸரனிஸ்லவ்ஸ்கியின் மெதட் நடிப்பு முறை
3. மேயர் ஹோல்டின் உடற்பொறிமுறை நடிப்பு முறை
4.பிரக்டின் தொலைப் படுத்தல் நடிப்பு முறை
5. கூத்து நடிப்பு முறை
6. பரத நடிப்பு முறை
ஆகியவற்றைக் குழைத்து உருவாக்க முயன்றோம்.

முதல் நாள் பிரதியை வாசித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த போது என்னையே அவர்கள் செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். மாணவர்களின் பயிற்சிக்காக நான் அவர்களோடு மேடை ஏற வேண்டி இருந்தது. அந்த பயிற்சியின்போது அவர்களும் கற்றுக் கொண்டார்கள். நானும் கற்றுக் கொண்டேன்.
பீஷ்மர் மகாபாரதக் கதாநாயகன். அஸ்தினாபுரம அரசை சாம்ராஜ்யம் ஆக்கியவர். வாழ்நாள் பூராவும் பெண் இன்பம் அறியாதவர். தன் சகோதரர்களுக்காகவும், பேரப் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்தவர். போரே அவருக்கு இன்பம். அவரது வில்லே அவருடைய காதலி. தன் உணர்வுகளை அதனுடனேயே பேசி மகிழ்வார். தன் பேரப் பிள்ளைகளை வளர்க்க ஒற்றுமையாக்க நாட்டையே பிரித்துக் கொடுத்தவர். ஒற்றுமையாக்கும் முயற்சியில் தோற்றுப் போன கிழவர்.
பதினாறாம் நாள் பாரதயுத்த்தில் சேனைத் தலைவர் பதவி அவர் மீது திணிக்கப்பட்டது. அன்று அவர் இரண்டு பேரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று அவரால் நோப்படுத்தப்பட்ட சிகண்டி. அவளுக்கு அவர் இளைத்த தீங்கு அறமாக எழுந்து அவரை வருத்துகிறது. அடுத்தவர் அவர் தூக்கி வளர்த்த பேரப்பிள்ளை அர்ஜுனன். சிகண்டியால் இறப்பு நிச்சயம் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவரை வருத்துவதோ தான் தூக்கி வளர்த்த அறிவு புகட்டிய வில்லை கையில் கொடுத்த வளர்த்தபேரன் அர்ஜுனன் அன்று தன்னோடு போர் புரிய வருவதே. தீட்டிய மரத்தில் அவன் கூர் பார்க்க வருவதாக அவர் உணர்கிறார் வருந்துகிறார். வில்லோடு பேசியபடி கனத்த மனதோடு தன்னுடன் யுத்தம் புரிய வரும் பேரப்பிள்ளைகள் முன் வாருங்கள் மோதுங்கள், தர்மயுத்தம் எனக்கு புதியதல்ல.
எனச் சவால் விட்டு வில் தாங்கி யுத்த சங்கநாதம் ஒலிக்க மிடுக்கோடு நிற்கிறான் அந்தக் கிழவன்.
அந்தக் கிழவனின் மன உணர்வுகளைப் புலப்படுத்தவே மேற்குறித்த அத்தனை நடிப்பு முறைகளும் பயன்படுத்தப்பட்டன. அது ஒரு வகை நடிப்புப் பயிற்சியே. மனனம் செய்து நடிக்க வேண்டும் நேரம் கிடைக்கவில்லை. அதனால் அதனை நாங்கள் ஒரு வாசிப்பு. அரங்காகவே முடித்தோம். ஒரு வகையில் ஒரு பாட நெறி போல. இதுதான் அன்று நடந்தது. அயூரன்தான் வில்லு. அருமையான நடிகன் அவன். மற்றும் அம்பை, அர்ஜுனன், செம்படவன் ஆகிய பாத்திரங்கள்
அத்தோடு அந்த நாடகத்தை வழி நடத்தும் அண்ணாவியாரும் தாளக்காரனும் மொத்தமாக மேடையில் 7 பேர்.
இப்போது நாடகத்தின் பின்னணி யும் அது உருவான சந்தர்ப்பமும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். மாணவர்களும் கற்றுக் கொண்டார்கள் நானும் கற்றுக் கொண்டேன். கற்பித்தல் என்பதும் ஒருவரை கற்றல் தானே கிரிதரன்.