முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத்தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
 
அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார். எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.
மானுடர்கள் யாவருமே மாமனிதர்கள் அல்லர். நிறை குறைகளுடன் இருப்பவர்கள்தாம். அமரர் ஜெயலலிதாவை அவரது நிறைகளுக்காக அவரது பிறந்தநாளான இந்நாளில் நினைவு கூர்வோம்.
 
எனக்கு அன்னமிட்ட கை திரைப்படத்தில் வருமிந்தப் பாடல் பிடிக்கும்வ் அரசியலில் , திரையில் தனது குருநாதரான எம்ஜிஆரை ஒட்டி ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் வகையில் அமைந்த பாடலிது. எம்ஜிஆர் தன் திரை நாயகிகளில் ஜெயலலிதாவை இது போன்ற அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களில் நடிக்க வைத்தார். அது அவரை மக்கள் மத்தியில் எம்ஜிஆரின் வாரிசாகக் கொண்டு சேர்த்தது.