குடிவரவாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற கனடியப் பழமைவாதக் கட்சியின் தலைவராக அமரர் பிரயன் மல்ரோனியைக் (Brian Mulroney) கூறலாம். இவரது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிவரவாளர்களுக்கான 'நிர்வாக மறுபரிசீலனை' த் திட்டத்தின் (Administrative Review - ADR)  மூலம் கனடாவில் தங்கியிருந்த அகதிக்கோரிக்கைக்காரர்கள், சட்டவிரோதக் குடிவரவாளர்கள்  ஆயிரக்கணக்கில் பயனடைந்தார்கள். நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றார்கள்.

இவரது ஆட்சிக்காலத்தில் முதன் முறையாகக் கப்பலில் நியூ ஃபவுணலாந்துக் கரையில்  வந்திறங்கிய இலங்கைத்  தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். எதிர்ப்புகளை மீறி அவர் அப்போது கூறிய வார்த்தைகள் முக்கியம். அவர் கூறினார் "we are not in the business of turning away refugees." அக்கூற்றே அன்று வந்திறங்கிய தமிழ் அகதிகள் பிரச்சனையைத் தீர்க்கப் போதுமானதாகவிருந்தது.

இது பற்றிய நல்லதொரு கட்டுரையினை இன்று லிபரல் பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ஹரி ஆனந்தசங்கரி  ஆகஸ்ட் 10, 2016 வெளியான 'டொராண்டோ ஸ்டார்' பத்திரிகையில் 'Accepting Tamils 30 years ago changed Canada'  என்னும் தலைப்பில் எழுதியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் குடிவரவாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பழமைவாதக் கட்சிப் பிரதமராக இவர் நினைவு கூரப்படுவார்.

இவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.