அண்மையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தைக் கொசுவை அழிப்பதுபோல் அழிக்க வேண்டுமென்றூ கூறியது இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பலத்தை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதவெறி பிடித்த இந்து மதகுரு ஒருவர் உதயநிதியின் தலைக்குப் பத்துக் கோடி என்று அறிவித்திருக்கின்றார். நல்லவேளை உதயநிதி வட இந்திய மாநிலங்களில் வசிக்கவில்லை. வசித்திருந்தால் அந்தச் சாமியாரின் கட்டளையை ஏற்று ஒரு கூட்டம் புறப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக உதயநிதி இந்த எச்சரிக்கையை இலேசாக எண்ணிவிடக்கூடாது.  அவதானமாகவுமிருக்க வேண்டும்.  இவ்விதம் கொலை அச்சுறுத்தல் விட்ட அந்தச் சாமிக்கெதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

இந்தச் சர்ச்சையையைக் காரணமாக வைத்து தமிழகத்தின் ஆட்சியைக் கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியற் கோமாளியான சுப்பிரமணியன் சுவாமி அதற்கான எச்சரிக்கையை ஏற்கனவே விட்டிருக்கின்றார்.  போதாதற்கு ஆளுநர் ரவியுடனான தமிழக அரசின் முரண்பாட்டையும் மறந்துவிட முடியாது. அப்படியேதும் நடந்தால் மிகப்பெரிய வெற்றியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.  இன்றுள்ள திமுகவின் வசீகர ஆளுமைகளில் முன்னிலை வகுப்பவர்கள் உதயநிதியும், கனிமொழியும்தாம். ஸ்டாலின் தன் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளால் இன்றுள்ள நிலைக்கு உயர்ந்திருப்பவர்.  ஆனால் உதயநிதி, கனிமொழி போல் மிகுந்த வசீகர ஆளுமை மிக்கவரல்லர். கனிமொழியின் 'தமிழ்', 'ஆங்கிலப்புலமை, உதயநிதியின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' தோற்றம், கலைஞரைப்போல் சமயத்துக்கேற்ப உதிர்க்கும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் பதில்கள், திரைப்பட நடிப்பு  காரணமாக திமுகவின் முக்கிய பலமாக இருப்பவர்கள் இவர்கள். உண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் பலமும் இவர்கள்தாம்.

உதயநிதி ஸ்டாலின் விட்ட தவறு ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறியதுதான். பல்  மத மக்கள் வாழும் தமிழகத்தில் இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையினர்.  அவர்கள் தாம் விரும்பும் மதங்களைப் பின்பற்றுவது அவர்களது உரிமை. சானதனதர்மம் என்பது இந்துக்களின் புனித நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்றும் கருதலாம்.  அதிலுள்ள மனுதர்மம் வகுத்துள்ள வர்ணக் கோட்பாடு மக்களை சாதிரீதியாகப் பிரித்து, வேறுபாடுகளை உருவாக்கியுள்ளதால் அது சமத்துவத்துகு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. அவற்றையே ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருக்க வேண்டும். அவ்விதம் பேசியிருந்தால் அதற்கு  இவ்விதமான எதிர்ப்பு பாஜக கூடாரத்திலிருந்து கிளம்பியிருக்காது.

உண்மையில் அதனையேதான் அவ்விதம் கூறியதாக உதயநிதி விளக்கமளித்துள்ளார்.  ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுவே திமுகவின் கொள்கை என்றும் கூறியுள்ளார்.  இவ்விளக்கங்களுடன் சனாதன தர்மத்தின் ஒரு பகுதியான மனுதர்ம சாத்திரம் வகுத்துள்ள வர்ணக் கோட்பாட்டைக் கொசுவை நசுக்குவதுபோல் ஒழிக்க வேண்டுமென்று கூறியதைத்தான் பொதுவாக அன்று கூறி விட்டேன் என்னும் விளக்கத்தையும் சேர்ப்பதன் மூலம் சர்ச்சையின் சூட்டை ஓரளவு தணிக்கலாம்.

சில இந்துத்துவவாதிகள் மக்கள் வாழ்வதற்குப் பல் தொழில் செய்பவர்களும் வேண்டும். அதைத்தான் மனுதர்மம் கூறுகிறது. சாதிப்பிரிவுகள் தேவை  என்பதையல்ல என்று பதிலுக்கு வாதிடுகின்றார்கள். அப்படிக் கூறுபவர்களைப் பார்த்துக் கேளுங்கள்: 'அதுவே சரியென்று வைத்துக்கொண்டால், பார்ப்பனர்கள் சூத்திரரர்கள் செய்யும் வேலைகளைச் செய்யட்டும். சூத்திரர்கள்  பார்பபனர்கள் செய்யும் வேலையைச் செய்யட்டும்.' அதற்கு மனுநீதி வெறும் தொழிற் பிரிவுகளையே குறிப்பிடுகிறது என்று வாதம் செய்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?