ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பற்றிய சானல் 4 வெளியிட்ட காணொளி - https://www.youtube.com/watch?v=uz-a62ikv9Q

இந்தக் காணொளியில் முன்பு பிள்ளையானின் ஊடகக் காரியதரிசியாகவிருந்த அஷாட் ஹன்ஸீர் மெளலானா பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார்.

1. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கோத்தபாயா ராஜபக்சவின் கீழ் , பிள்ளையான் தலைமையில் இயங்கிய The Tripoli Platoon என்னும் ஆயுதக் குழுவே  , கோத்தபாயா ராஜபக்சவின் ஆணையின்படி கொன்றது.

2. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் கோத்தபாயா ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பொருட்டு அவரது நம்பிக்கைக்குரிய இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியான Suresh Salley  யின் ஏற்பாட்டில், முஸ்லிம் தீவிரவாத அமைப்பின் துணையுடன்  நடத்தப்பட்டன. பிள்ளையான அதற்கு உதவியாகவிருந்தார்.

3. The Tripoli Platoon கோத்தபாயா ராஜபக்சவின் கீழ் நேரடியாக இயங்கிய  பிள்ளையான் தலைமையிலான குழு. இதன் நோக்கம் அரசியல் எதிரிகளை ஒழிப்பதுதான். பலரின் கொலைகளுக்குக் காரணமாக இந்த அமைப்பு இருந்திருக்கின்றது.

இவையெல்லாம் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எனப்பல வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அந்நாடுகள் இக்குற்றச்சாட்டுகளைச் சும்மா விட்டுவிடப்போவதில்லை.

தென்னிலங்கை அரசியல்வாதிகள்  ஏற்கனவே வெளிநாட்டு விசாரணைக்  குழுவை வற்புறுத்தத்தொடங்கி விட்டார்கள். அவர்கள் தம் அரசியல் நலன்களுக்காக நிச்சயம் இதனைத்  தக்க சமயத்தில் அகப்பட்ட துருப்புச் சீட்டாகவே பயன்படுத்துவார்கள்.

மேற்படி அனைத்துப் படுகொலைகளிலும் இறந்தவர்களின் குடும்பங்களும் சும்மா  இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.  இந்நிலையில் வழக்கம்போல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். சானல் 4 பெரியதோர் தொலைக்காட்சி ஊடகம். அவர்கள் ஆதாரங்களைப் பரிசோதித்துப் பார்த்த பின்பே மேற்படி காணொளியை ஒளிபரப்பியிருப்பார்கள்.

உண்மைகளைக் கண்டறிய வெளிநாட்டு விசாரணைக் குழுவே தற்போதுள்ள சூழலில் உகந்தது. அதுவே உண்மைகளை வெளிக்கொண்டு வரும் சக்தி மிக்கது.

சானல் 4 வெளியிட்ட காணொளி - https://www.youtube.com/watch?v=uz-a62ikv9Q