கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மையில் உடல் நிலை காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,சத்திர சிகிச்சையின் பின்னர் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார். இதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கவிஞர் மிக விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த மனோதிடமும், நம்பிக்கையும் உள்ள ஆளுமை அவர்.
அவர் பூரண நலத்துடன் மீளட்டும். இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடட்டும்.

எனக்கு மிகவும் பிடித்த கவிஞரின் கவிதை 'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்'  மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க  இதழான நுட்பம் (1980/1981) இதழில் வெளியான கவிதை.

கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்  - வ.ஐ.ச.ஜெயபாலன் -

முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.

வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.

பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவறுத் தெறிவோம்.
வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.

தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.

கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி உனக்கு
விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?

விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.

கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.

பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.


- நுட்பம் ,19801981 மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு