இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2006 இதழ் 83 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
நான் ஏன் எழுதுகிறேன்?

அறிஞர் அ.ந.கந்தசாமி

A.N.Kanthasami[ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் பல படைப்புகளை ஏற்கனவே பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். அப்படைப்புகளில் சிலவற்றைப் பதிவு செய்யவேண்டியதன் அவசியம் கருதி இங்கு யூனிகோட்டில் மீண்டும் மறுபிரசுரம் செய்கின்றோம். அ.ந.கந்தசாமி ஒரு பல்துறை வல்லுநர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, உளவியல், விமர்சனம், என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் ஆழமாகக் கால் பதித்தவர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் எந்தத் துறையினை எடுத்தாலும் அ.ந.க.வின் பெயர் தவிர்க்கப்பட முடியாதது.. பாரதியைப் போல் குறுகிய காலமே வாழ்ந்தாலும் (தனது 44வது வயதில் அ.ந.க. மறைந்துவிட்டார்) அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் சாதித்தவை அளப்பரியன. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் புலமை வாயந்தவர் அ.ந.க. இங்கு வெளியாகியுள்ள அ.ந.க.வின் படைப்புகளே அவரது மேதமையினைப் புலப்படுத்தும். ஆழமான, தெளிந்த, துள்ளுதமிழ் நடையில் அனைவரது நெஞ்சங்களையும் அள்ளிவிடும் வல்லமை அவரது எழுத்துக்குண்டு. ஆசிரியர் ]

அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது.

இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.

இக்கவிதை எனது முதலாவது கவிதையல்ல. இதற்கு முன்னரே கல்லூரிச் சஞ்சிகையில் ஒன்றிரண்டு கவிதைகளை நான் எழுதியிருந்தேன். இருந்தாலும் இது என் ஆரம்ப இலக்கிய முயற்சிகளில் ஒன்று.  எனவே "நான் ஏன் எழுதுகிறேன்?, எழுதினேன்?" என்பதற்கு இக்கவிதையில் பதில் காண முயற்சிப்பது பொருத்தமானதேயாகும்.

இக்கவிதையின் சில வரிகள் நினைவில் மிதந்து வருகின்றன. 

"..கொட்டும் இடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான் வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே.
சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றி எழுந்தன. 
இவ் ஒளி ம்ின்னல் செயல் என்னே! 
வாழ்வோ கணநேரம்!
கணநேரந்தானும் உண்டோ?
சாவும் பிறப்பு அந்தக் கணநேரத்தடங்குமன்றோ? ....."

 

மின்னலின் வாழ்வு கணநேரம். ஆனால் அக்கண நேரத்தில்:

"..சூழம் இருள் நீங்கும்.
சுடர் விளக்குப் போலிங்கு
சோதி கொழுத்திச் 
சோபிதததைச் செய்து விட்டு
ஓடி மறைகிறது...."

இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம்.

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர். 

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.

ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய  அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?

எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான்.  தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.

பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்.

ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.

இரண்டாவதாக எழுதும் கலை, பாடும் கலையைப் போல் எழுதுபவனுக்கு இன்பமூட்டும் கலை. எந்தவிதமான சிருஷ்டி வேலையிலுமே இயற்கை இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. அழகிய பதுமையைச் சிருஷ்டிப்பது தொடக்கம், தாயின் கருவில் ஒரு குழந்தையைச் சிருஷ்டிப்பது வரை எந்த சிருஷ்டி வேலையிலும் இன்பம் கிடைக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதிபோலும். எழுத்திலே உலகை மறக்கலாம். உள்ளக் கவலைகளை மறக்கலாம். அதனால்தான் உலகில் கவலைகளுக்கும், துன்பத்துக்கும் பெரிதும் ஆளாகிய எழுத்தாளர் பலர் புகழ்வாய்ந்த எழுத்தாளர்களாகி விடுகின்றனர்.

மூன்றாவதாக மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். தான் ஒருவன் உலகில் இருப்பது சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஆசை நனவிலி மனதில் என்றும் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். குழந்தை கூட தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகக் கையைத் தட்டுகிறது. ஆரவாரங்கள் செய்கிறது. இந்த ஆசையை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் இவ்வித உள்மன ஊக்கங்களில் இருந்து நமக்கு விடுதலையில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். மனித மனத்தின் இயல்பு அப்படி.

[நன்றி: தேசாபிமானி, நுட்பம்]

மனக்கண்

அறிஞர் அ.ந.கந்தசாமி

A.N.K's Novel Manakkan[ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்த அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவலுக்கு அவர் எழுதிய முடிவுரை இக்கட்டுரை. இதுவே இவரது வெளிவந்த ஒரே நாவலாகும். இந்நாவலின் பிரதியினைப் பெறுவதற்காக நாம் பெற்ற சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் பிரதியினை வைத்திருந்த திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர் அப்பொழுது கேட்ட பணத்தொகையினை எம்மால் கொடுக்க முடியாது போனதால் அம்முயற்சி தடைபட்டுப் போனது. மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அதனைக் கிழக்கிலங்கையின் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாக அறியத்தந்தார். பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு மனக்கண் நாவலின் பிரதியினைப் பெற்றுக் கொண்டோம். அதனைத் தேடுவதற்கும், அத்தியாயங்களைப் பிரதியெடுப்பதற்கும் மட்டுமே மிகவும் நியாயமான கட்டணம் அறவிட்டார்கள். ஆனால் அவர்கள் அனுப்பிய நாவற் பிரதி சாதாரண A1 பக்க அளவிலமைந்தருந்ததனால் வாசிக்க முடியாத அளவுக்குச் சிறியதாகவிருந்தது. இதனால் அப்பிரதியினை ததமிழகத்திலுள்ள சிநேகா பதிப்பக பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, அவர் மூலம் அங்குள்ள ஒருவர் மூலம் மீண்டும் கட்டண அடிப்படையில் தட்டச்சு செய்து வரவழைத்தோம். அதே சமயம் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து எமக்குக் கிடைத்த பிரதியில் அத்தியாயம் 30 விடுபட்டுப் போயிருந்தது. இதற்காக மீண்டும் பலமுறை இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையம் வாயிலாக எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போகவே கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் 'பதிவுகள்' இணைய இதழில் இதுபற்றி அறிவித்தல் கொடுத்து அ.ந.க.வின் ப்டைப்புகளையும் மேற்படி அத்தியாயத்தையும் எமக்குப் பெற்றுத்தர உதவுவோருக்கு செலவிடும் மணித்தியால அடிப்படையில் வேதனம் தருவோமென்று அறிவித்தோம். அதனடிப்படையில் கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னும் தமிழ் இலக்கிய ஆர்வலர் தொடர்பு கொண்டு அ.ந.கவின் ஆங்கிலக் கட்டுரைகள் சில, அ.ந.க.மொழிபெயர்த்த நாவலான எமிலி சோலாவின் 'நானா' , மேலும் சில கவிதைகளையும் எமக்குப் பெற்றுத் தந்தார். நண்பர் பலதடவைகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் மனக்கண் நாவலின் முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிப்பார்த்தும் அதற்கான தடயமெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பதிவுகளில் அ.ந.க.வின் மனக்கண் நாவலை அந்த அத்தியாயம் இல்லாமலே வெளியிட முடிவு செய்தோம். யாராவது அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் 30இனை வைத்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com] 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.

நான் இங்கே எடுத்துக் காட்டிய நாவலாசிரியர் எவருமே சாதாரணமானவரல்லர். உலக இலக்கிய மண்டபத்திலே தம் சிலையை நிலையாக நிறுவிச் சென்றிருக்கும் பேனா உலகின் பெரியவர்கள் இவர்கள். இவர்கள் எவருமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. தாம் சொல்ல விரும்பிய பொருளை விரிவாக எடுத்துரைப்பதிலேயே இவர்கள் தம் புலனைச் செலுத்தினார்கள். பாரதம் பாடிய வியாசர் ஓர் இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களில் தம் கதையை விரித்துரைத்தது போல இவர்களும் தாம் கூற வந்த கதைகளை அமைதியாகவும், ஆறுதலாகவும் சாங்கோபாங்கமாகவும் எடுத்துச் சொல்லிச் செல்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன் - ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத் தவிர, பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது - பாண்டவர் வென்றனர் - கெளரவர் தோற்றனர் என்று மிகச் சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதாநிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணர்ச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும் வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாக சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன்.  நல்ல நாவலாசிரியனுக்கும் இப் பண்பு இருக்க வேண்டும்.

நாவலும் சிறுகதையும்
இந்த இடத்தில் நாவலுக்கும் சிறு கதைக்கும் இருக்கும் வேற்றுமையைப் பற்றிச் சில வார்த்தைகள் நான் கூறவிருக்கிறேன். இந்த இரு இலக்கிய உருவங்களுக்கும் உள்ள வேற்றுமை கதை அமைப்பிலே மட்டுமல்ல, சொல்லும் முறையிலுமிருக்கிறது. சிறுகதை வேகமாக ஒரே மூச்சில் நிலத்தை நோக்கிக் குதிக்கும் நீர் வீழ்ச்சியைப் போன்றது. மின்னலின் வேகம் அதிலிருக்கும். ஆனால் நாவலோ ஓடுகிறதா, ஓடாமல் நிற்கிறதா என்று எடுத்த எடுப்பில் கூற முடியாத படி பெரு நதியின் மந்தமான அசைவில் செல்ல வேண்டும். கங்கை, கழனி, காவேரி போல் அசைய வேண்டும். குதிரை வண்டி போல் வேகமாகச் செல்லாது கோவிற்தண்டிகை போல் ஆடி அசைந்து வர வேண்டும்.

Manakkan Sceneநாவல் இவ்வாறு வர வேண்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாவலின் முக்கிய நேரங்களில் ஒன்று பாத்திரப் படைப்பாக இருப்பது. இரண்டு, கதை நிகழும் சூழலை வர்ணனைகள் மூலம் மனக் கண்ணின் முன்னர் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருப்பது. சிறுகதைக்கு இந்நோக்கங்களில்லை - ஒரு சிலர் தமது சிறுகதைகளில் இவற்றைச் செய்ய முயன்றாலும் கூட நானிங்கே நாவலின் இரண்டு முக்கிய நோக்கங்களையே சொன்னேனாயினும், டால்ஸ்டாய் போன்ற பெரு நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால் தான் யுத்த விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை “யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச் சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம் செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச் செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம் கொடுக்காமல் மேலே செல்வதில்லை.  ஆனால் இவ்வித விளக்கம் கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம். சிறு கதாசிரியனுக்கோ இத் தொல்லை இல்லை. ஆனால் இங்கே நாம் மறக்கவொண்னாத ஒரு விஷயமென்னவென்றால், என்ன தான் அழகான விளக்கம் கொடுத்தாலும் அவ்விளக்கம் கதைக்கும் குறுக்கே வந்து விழக் கூடாது என்பதாகும். இதற்கு மிகவும் நுட்பமான ஓர் அளவுணர்ச்சி நாவலாசிரியனுக்குத் தேவை. கதை தன் வழக்கமான ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்க, அதனோடு கை கோத்துக் கதாசிரியனின் விளக்கங்களும் போய்க் கொண்டிருக்க வேண்டும். இது விஷயமாக சாதாரணமாக உரையாடும்போது நாம் நம் நண்பர்களுக்குப் பிரெஞ்சு புரட்சி போன்ற ஒரு பொருள் பற்றிக் கொடுக்கும் ஒரு விளக்கத்துக்கும், ஒருமேடையில் அது பற்றிச் செய்யும் சொற்பொழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நினைவு கூர்வது நன்று. நாவல்களில் வரும் விளக்கம் நண்பரோடு பேசும் போது நாம் கொடுக்கும் விளக்கம்  போல் அமைய வேண்டும். இல்லாவிட்டால் அவை சரித்திர நூல்களாகவோ, சமூக இயற் பனுவல்களாகவோ, பொருளாதாரக் கட்டட நிர்மாண விவாத நூல்களாகவோ மாறிவிடும். உலகப் பெரும் நாவலாசிரியர்கள் பலரும் தம் விளக்கங்களை அளவறிந்து கையாண்டிருப்பதே அவர்களது படைப்புகளின் கலையழகு சிதைவுறாதிருப்பதற்குக் காரணம். உதாரணமாக விக்டர் ஹியூகோவின் பாரிஸ் நகரத்தின் சாக்கடை வர்ணனைகள் நீண்டவையாயிருந்தாலும் பரபரப்பான சம்பவங்களை மிகுதியாகக் கொண்ட அக்கதையின் ஓட்டத்தை அவை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. இந்தத் தன்மை இருப்பதால்தான் இன்றும் உலகெங்கும் விரும்பி வாசிக்கும் கதையாக இது இருந்து வருகிறது.

நாவலியக்கத்தின் தன்மைகள் பற்றி நான் இங்கு இவ்வாறு விவரித்ததன் காரணம் நாவல் தமிழுக்குப் புதியதோர் இலக்கிய உருவமாயிருப்பதுனாலேயேயாகும். புதிய இலக்கிய உருவமொன்று உருப்பெற்று வரும்போது அதை எவ்வாறு சுவைப்பது - எவ்வாறு விமர்சிப்பது என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? இது வாசகர்களின் சுவைக்கும் திறனை உயர்த்துவதோடு, எழுத்தாளர்களுக்கும் கூட அவர்களின் எழுத்துக்கு வழிகாட்டியாக அமையும். என்னைப் பொறுத்த வரையில் ஆரம்பத்திலிருந்தே நான் ஆக்க எழுத்தாளனாக மட்டுமல்ல, கலை இலக்கிய விமர்சகனாகவும் பயின்று விட்டதால் இவ்வித பிரச்சினைகளை என்னால் தட்டிக் கழிக்க முடியாமலிருக்கிறது.

நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவளை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)  பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது.

“மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது.

 நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக் கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம். ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால் தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள் இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள்.

இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில் சொனோலி (Cyril Chonolly) என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன் விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே நிலைதான்.

“மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான் வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான் பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.

ஆனால் நடையில் மட்டுமல்ல. “மனக்கண்” வேறு பல எழுத்தாளர்களின் நாவல்களுடன் மாறுபடுவது கதை அமைப்பிலும் தான். நாவலில் பாத்திர அமைப்பும் சூழ்நிலையும் மிக முக்கியமானவை என்றாலும் கூட இறுக்கமான நாடகத்தன்மை கொண்ட கதை அமைப்பும் அவசியமாகும். இவ்வித கதை அமைப்பில்லாத பாத்திர சிருஷ்டி நாவலாகாது. வெறும் வியாசமாகத்தான் விளங்கும். அடிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் இப்படிப்பட்ட பாத்திர சிருஷ்டியில் வல்லவர். சர் ரோஜர் டிகவுர்லி, கறுப்புடை மனிதன் போன்ற பாத்திரங்களை அவர் சிருஷ்டித்தார். ஆனால் அவர் தம் எழுத்தை நாவல் என்று கூறவில்லை. வியாசங்கள் என்றே வர்ணித்தார். இன்று நாவலைப் பற்றிய ஒரு புதிய கருத்தைச் சில விமர்சகர்கள் உலகின் பல பகுதிகலிலும் பரப்ப முயன்று வருகிறார்கள். நாவலில் கதை பின்னல் அவ்வளவு முக்கியமல்ல என்பது இவர்களின் கருத்து. இவர்களைப் பற்றி சோமர்சேட் மோம், “இந்த அளவுகோவலின்படி பார்த்தால் வியாசமெழுதுபவர்களே சிறந்த நாவலாசிரியர்கள். சார்லஸ் லாம்பும், ஹல்லீட்டுமே நல்ல நாவலாசிரியர்கள்” என்று கேலி செய்திருக்கிறார்.

கதை அமைப்பற்ற சப்பட்டை நாவல்களை எழுதுபவர்களைப் பற்றி அவர் இன்னோரிடத்தில் பின் வருமாறு கூறுகிறார்: “உயிருள்ள மனிதர்களைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் படைத்த கெட்டிக்கார எழுத்தாளர் பலர், அவ்வாறு அவர்களைச் சிருஷ்டித்த பின்னர் அவர்களை வைத்து என்ன செய்வதென்றறியாது  மயங்குகின்றார்கள். அவர்களை வைத்து பொருத்தமான கதையை உண்டாக்கும் ஆற்றல் இவர்களிடம் இல்லை. ஆகவே எல்லா எழுத்தாளர்களையும் போல (எல்லா எழுத்தாளரிடமும் ஓரளவு பொய்மை (Humburg) இருக்கிறது) இவர்களும் தமது குறைபாட்டை ஒரு நிறைபாடாகக் காட்ட முயல்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளட்டுமென்றோ, வாசகர்கள் இந்த விஷயத்தை அறிய முயல்வதே தவறென்றோ கூறி விடுகின்றனர். வாழ்க்கைக் கதைக்கு முடிவு இல்லையென்றும், சம்பவங்கள் செதுக்கப்பட்ட ஒரு முடிவை அடைவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் தொங்கிக்கொண்டுதான் கிடக்கும் என்றும் கூறி விடுகின்றனர். அவர்களின் இக்கூற்று எப்பொழுதும் உண்மையல்ல. ஏனென்றால் எல்லோர் கதைக்கும் சாவென்ற முடிவாவது இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும் கூட அது நல்ல வாதமாகாது. ஒரு சிறந்த கதையைப் படைப்பது கஷ்டமான ஒரு வேலைதான். ஆனால் அதற்காக அதை வெறுப்பது நல்ல நியாயமல்ல. துன்பியல் நாடகங்கள் பற்றி அரிஸ்டாட்டில் கூறியது போல் ஒரு கதைக்கு ஒரு தொடக்கமும் நடுவும் முடிவும் இருக்கவே வேண்டும்.

கதை அமைப்புப் பற்றி இக் கருத்தைக் கொண்ட சோமர்செட் மோம் நடையைப் பற்றி, “தெளிவும் இனிமையும் எளிமையும் கொண்டதே நல்ல நடை” என்ற கருத்தைப் பல இடங்களில் வெளியிட்டிருக்கிறார். கதை, நடை என்ற இரண்டிலும் மோமுடன் எனக்கு உடன்பாடு. ஏன், இவற்றில் டிக்கென்ஸ் தொடக்கம் தாகூர் வரைக்கும் உலகின் நல்ல நாவலாசிரியர்கள் எல்லோருமே இவ்வப்பிப்பிராயத்தையே கொண்டிருந்திருக்கின்றனர். “மனக்கண்”ணில் நான் பின்பற்றியிருப்பதும் இக்கொள்கைகளைத்தான்.

 நாவலே இன்று வழக்கிலுள்ள இலக்கிய உருவங்களில் மிகவும் பிந்தியது. இருந்த போதிலும் அது மிகவும் வலிமை கொண்டதாக வளர்ந்து விட்டது. இன்னும் உலகின் எதிர்கால இலக்கியம் பெரிதும் நாவலாகவே இருக்கப் போகிறதென்பதிலும் சந்தேகமில்லை. நாவல் இவ்வாறு வெற்றி கட்டி வருவதற்குக் காரணம் மனிதரில் பெரும்பாலோருக்கு நாவல்தான் வாழ்க்கை அனுபவத்துக்கே வாயிலாவது இருக்கிறது என்பதாகும். தன்னந்தனியாகத் தூரக் கிராமத்தில் வாழ்பவள் நகரத்து அனுபவங்களை நேரடியாக அனுபவிக்காமலே நான் அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்களின் மூலம்தான். காதலை, நேரில் அனுபவியாதவள் காதலையும், தாய்மையின் அன்பை அறியாதவள் தாய்மையையும், பிள்ளைப் பாசத்தை நேரில் காணாதவள் பிள்ளைப் பாசத்தையும் , யுத்தத்தை நேரில் காணாதவன் யுத்தத்தையும், தான் நேரில் துய்த்தது போல் இன்று அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்கள் மூலமேயாகும். நாவல்கள் முழு உலக அனுபவத்தையுமே நமக்குத் திறந்து காட்டி நம் உளப்பண்பை விருத்தி செய்கின்றன.

ஆனால் நாவலென்பது புற நிகழ்ச்சிகளை மட்டும் கூறும் ஓர் இலக்கிய உருவமல்ல. அது மனதின் உட்புற நிகழ்ச்சிகளையும் காட்டுகிறது. அதனால்தான் சர் ஐவர் எவன்சன்ஸ் என்ற இலக்கிய விமர்சகர் “நாவல் இன்று ஓர் உட்புறத் தனி மொழியாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது” என்று கூறியுள்ளளார். “மனக்கண்”ணில் பல இடங்களில் சிந்தனையோட்டங்கள் நீள வர்ணிக்கப்படுவதைக் காணலாம். பாத்திரங்களின் குணா குணங்களை விளக்கிக் கொண்டு அவர்களின் அக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அவை நமக்குப் பெரிதும் உதவுகின்றன.

கதாசிரியனாகிய என்னைப் பொறுத்தவரையில் “மனக்கண்”ணை எழுதியது எனக்கு ஒரு பெரிய அனுபவம். இதற்கு முன் சிறுகதைகளையும் , கவிதைகளையும், சிறுவர் நெடுங் கதை ஒன்றையும், நாடகங்களையும் எழுதியுள்ள நான் எமிலி சோலாவின் “நானா” என்ற நாவலைத் தமிழ்ப்படுத்தியிருந்த போதிலும் “மனக்கண்”ணை எழுதிய போது புதியதோர் உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. பாத்திரங்களைச் சிருஷ்டித்து அவர்களைச் சமுதாயப் பின்னணியிலே உலவ விடும்போது அவர்கள் முன்னில்லாத ஒரு சக்தியையும் வலிவையும் பெற்று ஆசிரியனையே மலைக்க வைத்து விடக் கூடும் என்பதை நான் அனுபவத்தில் கண்டேன். நாவலை வாசிப்பவர்கள் மட்டுமல்ல அதை எழுதும் ஆசிரியனும் உணர்ச்சிப் பொங்கலில் அகப்பட்டுக் கொள்ளவே செய்கிறான். இந்தக் கதையை உருவாக்கிய கடந்த ஒரு வருட காலமும் நான் “அமராவதி வளவில்” ஓர் அங்கத்தினனாகவே ஆகிவிட்டேன். ஸ்ரீதர், சிவநேசர், பாக்கியம், சுசீலா, சுரேஷ், முரளி ஆகிய யாவரும் இரவும் பகலும் என்னோடிருந்தார்கள். அவர்களின் இன்பத் துன்பங்களை நானும் அனுபவித்தேன். இப்படிப்பட்ட அனுபவமேற்பட்டு அதனை எழுத்தில் வடிப்பதற்கு எழுத்தாளன் தன் உடல் சக்தி, மனச் சக்தி, நரம்பின் சக்தி ஆகியவற்றை மிகவும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதனாற்றான் ஆர்னால்ட் பெனட் என்ற ஆங்கில நாவலாசிரியர் “நாவல் எழுதுவதற்கு நாடகம் எழுதுவதிலும் பார்க்க அதிக நரம்புச் சக்தி தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

“மனக்கண்”ணின் பாத்திரங்களைப் பற்றிப் பேசுகையிலே, என்னைப் பெரிதும் மலைக்க வைத்தவர் சிவநேசரே. அவர் எவ்விதம் நடந்து கொள்வார் என்பது எனக்கு முன் கூட்டியே தெரியாது. பெரிய மனிதரான அவர் தன்னிஷ்டம் போல் நடந்து கொள்வார். அவரை நினைத்தால் வாசகர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்தவரையில் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் போன்ற உணர்ச்சி அவர் முன்னால் எனக்கு ஏற்படுகிறது.

முன்னர் கூறிய பாத்திரங்களைத் தவிர பத்மா தொடக்கம் வேலாயுதக் கிழவன் வரை, அதிகார் அம்பலவாணர் தொடக்கம் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா, அவளது மகன் திராவிடதாசன், வாத்தியார் பரமானந்தர், கமலநாதன், தங்கமணி, அவள் தோழி ரெஜீனா, சின்னைய பாரதி, நன்னித்தம்பி, பேராசிரியர் நோர்த்லி போல் ஏராளமான பாத்திரங்கள் மனக்கண்ணில் வந்து சென்ற போதிலும்’மோகனா’ என்னும் கிளியும் ‘ஸ்ரீதர்’ ‘சுரேஷ்’ என்ற மீன்களும் என் மனதை விட்டு ஒரு போதும் அகலா. இதில் ‘மோகனா’ என்னும் கிளி மனிதரால் மாற்ற முடியாத சிவநேசரின் உள்ளத்தைத் தன் கிளிப் பேச்சால் மாற்றித் தனிப் பெருமை கொண்டதல்லவா? கருங்கல்லில் ஈரத்தைப் பெய்த கல்லுருக்கு வேலையை அது செய்திருக்கிறது.

 “மனக்கண்” முடிவோடு நாம் ஸ்ரீதர் தொடக்கம் ‘மோகனா’ வரை எல்லாப் பாத்திரங்களிடமிருந்தும் விடை பெறுகிறோம். அத்துடன் பல்கலைகழகத்து நாடக மேடை தொடக்கம், தேர்ஸ்டன் வீதி, கொட்டாஞ்சேனை, மவுண்ட் வவீனியாக் கடற்கரை, நொச்சிக்கடை சுந்தரேஸ்வரர் கோவில், ‘அமராவதி வளவு, 'கிஷ்கிந்தா' இல்லம்,, பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’ ஐஸ்கிறீம் பார்லர் ஆகிய இடங்களில் நாம் ஸ்ரீதருடன் சுற்றித் திரிந்ததற்கும் முடிவு வந்துவிட்டது. ஸ்ரீதரின் செயல்களில் என்னால் மறக்க முடியாத ஒன்று அவன் கால்பேஸ் கடற்கரையில் பத்மாவுடன் மழை நீராடியமை. காவிய நாயகர்கள் கடல் நீராடியமையையும் புனல் நீராடியமையையும் நாம் முன்னர் பல நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீதர் தான் முதன் முதலாக மழை நீராடிய கதாநாயகனென்று நான் நினைக்கிறேன். “மனக்கண்” ஒரு விரிந்த நாவல். அதில் ஓர் இதிகாசத் தன்மை இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். அதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நான் அறியேன். பெரிய படாங்கில் எழுதப்பட்ட பரந்த சித்திரம் அது. ஆனால் சித்திரம் குறைவற்றதா? கலை இலக்கியத் துறைகளைப் பொறுத்தவரையில் குறைவற்ற படைப்பு எதுவுமே இவ்வுலகில் எவராலும் படைக்கப்பட்டு விடவில்லை. விக்டர் ஹியூகோ பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள்.

இலக்கிய விமர்சனப் பிரச்சினையான இது பற்றி இங்கே விரிவாக எழுத இடமில்லை. இன்னும் நூலாசிரியரே தந்து நூலின் சிறப்புகளையும் குறைகளையும் பற்றி எழுதலாமா என்ற இன்னொரு கேள்வியும் பிறக்கிறது. அவ்வாறு அவன் எழுத முற்படும்போது, பொய்யான அடக்கமும், தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மனப்பாங்கும் சரியான விமர்சனத்துக்குப் பாதகமாக அமையலாம். ஆகவே “மனக்கண்”ணை எவ்விதத்திலும் இங்கே விமர்சிப்பது என் நோக்கமல்ல.

நான் இத்தொடர்கதையை எழுத ஆரம்பித்ததும் எனது சக எழுத்தாளரும் நாவலாசிரியருமான செ.கணேசலிங்கனின் இந்திய விஜயத்தின் பயனாக, சென்னை இலக்கிய வட்டாரங்களில் எழுந்த ஒரு கேள்வியைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தொடர் நவீனம் நல்ல இலக்கியமாக அமைய முடியுமா என்பதே அது. பத்திரிகையின் கொள்கை நாவலின் போக்கை அமுக்கலாமென்பதும், வாராந்த வாசகனின் ஆவலைத் தூண்டுவதற்காக ஓர் எழுத்தாளன் நாடகத் தன்மையற்ற இடங்களையும் நாடகமாகக் காட்ட முயலாமென்றும், இவ்விதம் விட்டுக் கொடுப்பது அவனது பண்பாகிவிட்டால் அவன் கலையில் பொய்மை புகுந்து விடுமென்றும் கனேசலிங்கன் சுட்டிக்காட்டினார். இதில் ஓரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லையாயினும், முழு உண்மையின் சொரூபமும் அதில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் இன்று உலகப் பேரிலக்கியங்களாகக் கொண்டாடப்படும் பல நாவல்கள் தொடர் கதைகளாக எழுதப்பட்டனவே. டொஸ்டோவ்ஸ்கியின் “காம்சோவ் சகோதரர்கள்” நெக்ரசோவ் ரிவ்யூ என்னும் சஞ்சிகையில் வெளிவந்த தொடர் கதைதான். எமினி சோலாவின் ‘ நானா’வும் முதலில் தொடர்கதையாகவே வெளியிடப்படது. டிக்கென்ஸின் ‘ஒலிவர் டுவிஸ்ட்,’ ‘நிக்கலஸ் நிக்கல்பி,’ ‘இரு நகரக் கதைகள்’ என்பனவும் ‘பென்ட்லீஸ் வீக்லி’ போன்ற சஞ்சிகைகளில் தொடர்கதைகளாக வெளியிடப்பட்டவை தாம். ஏன், தமிழகத்தின் சிறந்த நாவலாசிரியர் என்று கருதப்படும் ‘கல்கி’யின் எல்லா நாவல்களுமே ‘ஆனந்த விகடனி’லும் ‘கல்கி’யிலும் தொடர் கதைகளாக வெளிவந்தவை தாமே? ஆகவே ஒரு நாவல் நல்ல இலக்கியமாக அமைகிறதா அல்லவா என்பதை, அது தொடர்கதையாக எழுதப்படுகிறதா அல்லது நேரடியாகவே புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பது ஒருபோதும் நிர்ணயித்து விடாது என்பதே எனது கருத்து. சிறந்த இலக்கியப் புலன்வாய்ந்த எழுத்தாளனால் சிரமமான சூழலிலும் நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும்.

இவை போக முடிவுரையின் ஓர் அம்சம் நன்றி நவிலலாகும். ‘மனக்கண்’ நாவலை நான் உருவாக்கித் தொடர் கதையாக வெளியிடுவதற்குத் ‘தினகரன்’ வார மஞ்சரி எனக்களித்த வாய்ப்பை நான் ஒரு போதும் மறக்க முடியாது. இதற்காக எனது மனப்பூர்வமான நன்றியைத் ‘தினகரன்’ வார மஞ்சரிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

[நன்றி: தினகரன்]
 

"மதமாற்றம்"

அ.ந.கந்தசாமி

['மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த 'செய்தி' இதழில் எழுதிய சுயவிமர்சனக் கட்டுரையிது.]


MathmaaRRam Drama: Audienceசுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.

கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.

நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான். 

நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்'  தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

'மதமாற்றம்' நாடகத்தின் முதற் சிறப்பு, அது இலங்கையில் சுயமாக எழுதப்பட்ட ஒரு மூல நாடகமென்பதாகும். மேலே நான் கூறிய நாடகங்கள்- சிங்கள நாடகமாகட்டும், ஆங்கில நாடகமாகட்டும் - எதுவுமே இலங்கையில் எழுதப்பட்ட மூல நாடகங்களல்ல. 'கர்ணன் போர்' இதிகாசத்தின் வழி வந்த கர்ணபரம்பரை நாடகம். 'சலோமியின் சபதம்' ஓஸ்கார் வைல்ட் தழுவல்.  ஆங்கில நாடகங்களிரண்டும் உலகின் பிரசித்தி பெற்ற அன்னிய நாடகாசிரியர்களின் சிருஷ்டிகள். 'நரிபேனா' கிராமியக் கதை. 'ஹரிம படு ஹயக்' இத்தாலிய நாடகாசிரியர் பிரான் டெல்லோ எழுதியது. என்னைப் பொறுத்தவரையில் நாடகம் என்பது எழுத்தும் தயாரிப்பும் சேர்ந்தது. ஒரு மொழியில் சுயமான நாடக இலக்கியங்கள் எழுந்து அவை மேடையில் அரங்கேற்றப்படுவதுதான் சிறப்பு. ஆனால் இதற்கு உலகின் சிறந்த நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுவதை நான் ஆட்சேபிப்பதாக பொருள் கொண்டு விடக் கூடாது. உண்மையில் அவை மூலத்திலுள்ள மாதிரியே இங்கு அரங்கேற்றப்படும்போது நமது நாடக எழுத்தாளர்களுக்கு அவை வழிகாட்ட வல்லனவாய் அமையும். அத்துடன் நமது நாடக ரசிகர்களின் ரசிகப்புலன் வரையும் அவை உதவும் என்பது என் அபிப்பிராயம்.

ஆனால் ஐந்து வேற்று நாடகங்கள் அரங்கேற்றும் பொழுது ஒரு சுயமான நாடகமாவது எழுதி அரங்கேற்றப்படாது விட்டால் நாடகம் இங்கு ஒரு இலக்கியத் துறையாக வளர்வது எப்படி? 'மதமாற்றத்தை'ப் பொறுத்தவரையில் அது சுயமாக எழுதப்பட்ட மூல நாடகம். மூலநாடகமாயிருந்து விட்டால் மட்டும் ஒரு நாடகம் சிறந்ததாகி விடாது. அதில் போதிய நாடகத்தன்மை கொண்ட நாடகக் கதையுண்டா, நல்ல உரையாடல்கள் இருக்கின்றனவா,  மனதைத் தாக்கும் கருத்துகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வகையில் 'மதமாற்றம்' நல்ல நாடகமே. அதனால் தான் பல ஆங்கில தமிழ் விமர்சகர்கள் அதை இப்சனோடும், ஷாவோடும், சாட்ரேயோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒப்பிட்டவர்களில் டெயிலி  மிரர் 'அர்ஜூனா' , சில்லையூர்  செல்வராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். சென்ற வாரம் இலங்கை வானொலியின் ஆங்கில ஒலிபரப்பில் பேசிய கே.எஸ்.சிவகுமாரனும் ஷாவின் 'ஆர்ம்ஸ் அண்ட் மான்' நாடகத்துடன் 'மதமாற்றை'த்தை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இந்நாடகத்தை இலக்கியம் என்ற முறையில் துருவி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருப்பவர் ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய விமர்சகரான கலாநிதி கே.கைலாசபதியேயாவர். 'இதுவே தமிழில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ள மிகவும் சிறந்த காத்திரமான நாடகம் (Serious Play). இவ்வாறு நான் சொல்கையில் தென்னிந்தியாவையும் அடக்கியே கூறுகிறேன்' என்று சமீபத்தில் 'சிலோன் ஒப்சேர்வர்' பத்திரிகையில் தமிழ் நாடக நிலை பற்றி எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

நடிப்பு
ஒரு நாடகம் எவ்வளவு தான் சிறப்புள்ளதானாலும் அது அரங்கில் சிறப்படைவது நடிகர்களாலும் தயாரிப்புத் திறனாலுமே. காவலூர் ராசதுரையின் மதமாற்றம் இந்த வகையில் எவ்வாறு அமைந்திருந்தது? நாடகக்கதையைப் பற்றி எழுதும்போது நாடகத்தை எழுதியவன் நானென்ற காரணத்தினால் மற்றவர்களின் கருத்துகளையேதான் அதிகமாக எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. ஆனால் நடிப்பைப்பற்றி எழுதும்போது இந்தத் தொல்லை எனக்கில்லை. இதில் எனது கருத்துகளை நான் மிகப்பட்டவர்த்தனமாகவே கூறிவிட முடியும்.

கலாநிதி கைலாசபதி தனது ஆங்கிலக் கட்டுரையில் 'மதமாற்றத்'தின் முன்னைய தயாரிப்புகள் பற்றிக் கூறுகையில், அவை தயாரிப்புத்தரம் குறைந்திருந்ததால் முழுப் பொலிவையும் பெற்று மிளிரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். புதிய 'மதமாற்றத்தைப்' பற்றி எவரும் அவ்வாறு கூறுவதற்கில்லை. பல இடங்களில் அது முழுப் பொலிவையும் பெற்றுச் சோபித்ததென்றே சொல்ல வேண்டும். ஆகச் சிறந்த ஆங்கில சிங்கள நாடகங்களுக்குச் சமதையான, சிறந்த நடிப்பை நான் 'மதமாற்றத்தில்' கண்டேன். நடிப்பைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அதிகப் புள்ளிகள் பெறும் தமிழ் நாடகம் இதுதான். நடிகர்களில் என் மனதைக் கொள்ளை கொண்டவர் சில்லையூர் செல்வராஜனே. அர்த்தபுஷ்டியுள்ள வசனங்களை நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டிய பொறுப்பு அவருக்கேற்பட்டது. அதை அவர் மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி விட்டார். இயற்கையான நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்ற பிரமையை எவருக்கும் ஏற்படுத்தத்தான் செய்யும்.

பொதுவாகக் கருத்து நாடகங்களை எழுதும் ஷா போன்ற பெரிய நாடகாசிரியர்களின் படைப்புகளில் சில சமயங்களில் பாத்திரங்கள் மிக நீண்ட பிரசங்கங்களைச் செய்ய ஆரம்ப்பிப்பார்கள். செயிண்ட் ஜோன், பாக்டு மெதுசேலா என்ற அவரது நான்கு மணி நேர நாடகங்களில் நாலைந்து பக்கங்களுக்குச் செல்லும் இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கங்களைக் காணலாம். நல்ல வேளையாக 'மதமாற்றத்'தில் இக்குறையில்லை. எந்த பாத்திரமுமே தொடர்ந்தாற்போல் ஐந்து வசனங்களைக் கூடப் பேசவில்லை. இது செல்வராஜனின் நடிப்புக்கும் பேச்சுக்கும் ஓரளவு உதவி செய்யவே செய்தது. இதனால் தனது கருத்து நிறைந்த வசனங்களை அதிகப் பிரசங்கத் தன என்று தோன்றாமலே பொழிந்து தள்ள முடிந்தது அவரால்.

செல்வராஜனுக்கு அடுத்தபடி என் மனதைக் கவர்ந்தவர் கதாநாயகியாக நடித்த ஆனந்தி. தன்னம்பிக்கையோடு மேடையைத் தன் வீடுபோல் கருதி வசனங்களைக் கொட்டித் தள்ளினார் ஆனந்தி. சபையோரிடையே மிகுந்த பரபரப்பையூட்டிய பாலச்சந்திரன் - ஷீலா சந்திப்பு சீனில், அவர் நடிப்பு மிகச் சோபித்தது. ஆனால் இரண்டோர் இடங்களில் அவர் வசனங்களை மறந்து திண்டாடியதை மட்டும் என்னால் மன்னிக்க முடியாது. நாடகத்தில் நடித்த மற்றையவர்கள் எல்லோருமே தம் தம் பாகங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தனர். சில நடிகர்கள் சிறிய பாகங்களை வகித்ததால், தமது முழு நடிப்புத் திறனையும் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காக எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கு நாடகத்தை யாராலும் எழுதிவிட முடியாதல்லவா?

செட்டுகள்
நாடகத்தின் அடுத்த சிறப்பம்சம் அதன் செட்டுகளாம். அனேகமான தமிழ் நாடகங்களில் ஆர்ப்பாட்டமான செட்டுகளை அமைத்து சபையோரின் கவனத்தை நாடகத்திலிருந்து செட்டுக்குத் திருப்பி விடுகிறார்கள். லடீஸ் வீரமணியின் செட்டுகளில் இக்குறையில்லாதிருந்ததே அதன் தனிச் சிறப்பு. ஆனால் கடைசிக் காட்சியில் ஒளி அமைப்பு பிரமாதமாயிருந்த போதிலும் நாடகத்தின் சுறுசுறுப்பை ஓரளவு குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். பின்னணியைப் பொறுத்தவரையில் லடீஸ் வீரமணியின் 'நாடகத்தின் காவியத்தில்..' என்ற பாரதி பாட்டு அதிக அற்புதமாக இருந்தது.

இயக்கம்
'மதமாற்றம்' டைரக்டர் லடீஸ் வீரமணி ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவரென்றாலும் இந்நாடகமே அவரது மிகசிறந்த தயாரிப்பு என்று நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் அவர் நாடகப் பிரதியை கூடியவரை அடியொற்றிச் சென்றமையும் நல்ல நடிகர்கள் பலர் அவருக்குக் கிடைத்தமையுமேயாகும்.

பொதுவாகச் சொல்லப் போனால் 'மதமாற்றத்தின்' நான்காவது அரங்கேற்றம் அந்நாடகத்துக்கு முன்னில்லாத சிறப்பை அளித்திருக்கிறது. நடிப்புத் துறையிலும் தயாரிப்பிலும் இலங்கையின் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குச் சமமாக விளங்கும் அது, எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கையையூட்டுகிறது. இத்தகைய  ஒரு நாடகத்தை தயாரித்தளித்தற்காக தன் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரையைப் பாராட்டுகிறேன்

நன்றி: 'செய்தி' , ஜுலை 3, 1967

 

தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்!

- அறிஞர் அ.ந.கந்தசாமி-
 

[ சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைஒரு அரைகுறை விமர்சகர் Blank Verse என்று விமரிசிக்கப் போய் அறிஞர் அ.ந.கந்தசாமியிடம்வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் விளைவே கீழுள்ள கட்டுரை. இச்சமயத்தில் பேராசிரியர்கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் யாப்பிலக்கணம்' நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கே சமர்ப்பணம்செய்திருந்ததை ஞாபகப் படுத்துவதும் பொருத்தமானதே - ஆர்]

சமீபத்தில்கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர்,சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம்.இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்கவேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும்.பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில்ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில்முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக்கொள்வதாகும். ஆனால் இஅவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல.

இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்பவிரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின்இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும்முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்?

ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக்குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சிபெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள்.யாப்பிலக்கணத்தைக் கற்காமலே அது பற்றித் தீர்ப்புக் கூறத் தமக்கு உரிமையுண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்- நான் முன்னே கூறிய பட்டதாரிச் சிறு கதாசிரியரால்'சொறி விமர்சகர்' என்று ஒரு முறை வர்ணிக்கப்பட்டவர் - நான் சில ஆண்டுகட்கு முன்பே 'வெண்பா எழுதுவதுஎப்படி?' என்ற யாப்பிலக்கணம் சம்பந்தமான தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதியபோது, அதில்ஏதோ பிழை இருப்பதாகக் குறிப்பிட்டார் இப்போ செத்துமடிந்து போன ஒரு யாழ்ப்பாண ஏட்டில்! ஆனால்என்ன பிழை என்று அன்றும் காட்டவில்லை, இன்றும் காட்டவில்லை. பிழை இருந்தால் அல்லவா காட்டுதற்கு?மேலும் பிழை காட்டுவதற்கு அவருக்கு யாப்பிலக்கணம் பிழையறத் தெரிந்திருக்க வேண்டும். அவர் அந்த நிலையில்இல்லை. இருந்தாலும் பேசத்துணிவு கொண்டு விட்டார்! ஏன்? அவர் தமிழ் வாத்தியார்; ஓதாது உணரக்கூடியஞானசம்பந்தர்! படித்திராவிட்டாலும் படித்திருப்பார் என்று எண்ணக்கூடிய மெளடீகங்கள் எம்மிடையே பலர்உண்டு என்பது அவருக்குத் தெரியும், அதுதான் அவ்வளவு துணிவு!

Blank Verse பற்றிப் பேசியவருக்குஆங்கிலப் படிப்பு உண்டு. ஆனால் அது பற்றிப் பேச ஆங்கிலமொழி அறிவு மட்டும் போதாது. ஆங்கில யாப்பிலக்கணஅறிவு வேண்டும். மேலும் சில்லையூர் கவிஞன் தமிழ்க் கவிஞன். அவனது கவிதை எந்த தமிழ் யாப்புக்குள்அடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழ் யாப்பிலக்கண அறிவும் வேண்டும். இரண்டும் தெரியாதவன்,ஒப்பியல் யாப்பிலக்கண சம்பந்தமான இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசவே கூடாது. எந்த ஜனநாயகத்திலும்இந்த உரிமையை நாம் மறுத்தேயாக வேண்டும். இரண்டும் தெரியாமலே இந்த மெளடீகம் தான் ஓதாது உணரக்கூடியஒரு ஞானசம்பந்தர் என்ற எண்ணத்தில் போலும் தன் வாயைப் பிளந்து வாந்தி எடுத்தது! ஆனால் அந்த வாந்தியில்,பார்ப்பனக் குறவனின் பால் மணம் வீசவில்லை; சாராய நெடி தான் சந்தி சிரித்தது!

என்னைப் பொறுத்தவரையில் நான்பண்டிதரல்ல, பட்டதாரியல்ல, பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியுமல்ல, ஓதாதுணர்ந்த ஞானசம்பந்தன் என்றுமார் தட்டி நிற்க! ஒரு சிலவற்றையேனும் ஓதியுணர்ந்த, சாதாரண மனிதன் நான். உலகில் எட்டு அதிசயம்என்றெல்லாம் ஏதேதோ சொல்லுகிறார்கள் இன்று. இதில் நான் கண்ட பேரதியம் என்னெவென்றால், விஷயந்தெரியாதவர்கள் மிகத் துணிவுடன் விஷயந் தெரிந்தவர்கள் போலப் பேச முன்வந்து விடுவதுதான். இந்தஅதிசயத்தைப் பார்த்த பிறகு மற்ற அதிசயங்களை நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற் ஆசையே எனக்குஇல்லாமல் போய் விட்டது.

பண்டிதத் தராதரப் பத்திரமோ,பட்டதாரித் தராதரப் பத்திரமோ, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதற்கு லைசென்ஸ் அளிக்கிறது என்றுஎவரும் எண்ணக் கூடாது! 'எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் எப் பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள்மெய்ப்பொருள் காண்பதறிவு ' என்ற வள்ளுவன் கருத்து, இன்றைய உலகின் கருத்து என்பதை மறந்துவிட வேண்டாம்.

இத்துடன் பீடிகை போக நான் எடுத்துக்கொண்ட ஒப்பியல் யாப்பிலக்கண விவகாரத்துக்கு வருவோம்.

முதலாவதாக, Blank Verse என்றால்,வெறும் செய்யுள் என்று மொழி பெயர்த்துக் கொண்டு, வெறும் செய்யுள் என்றால் வெற்றுச் செய்யுள் என்று வியாக்கியானம்செய்து, 'ஆகா வெற்றுச் செய்யுள் என்றால் மோசமான செய்யுள்!' என்று ஆர்ப்பரிக்க, இலக்கணம் தெரியாத,ஓதாதுணர்ந்த, 'மரபு' காக்க முற்பட்ட மெளடீகங்களால்தான் முடியும்! 'வெண்பா' என்றால் 'வெள்ளைக் கவி'.வெள்ளைக் கவி என்றால் ஆழ்ந்த பொருள் அமையாக் கவி. அதனால்தானே 'வெள்ளைக் கவி காளமேகமே!உன் கள்ளக் கவிக் கடையைக் கட்டு' என்று அதிமதுரன் பாடினான், என்று யாராவது ஆர்ப்பரித்தால் அது எத்துனைஅபத்தமோ அத்தகைய அபத்தம் தான் Blank Verse பற்றி இப்படி நினைப்பதும். Blank Verse என்றால்வெற்றுக் கவி அல்ல. வெண்பா என்பது வெள்ளைக் கவி அல்ல. Blank Verse ஒரு ஆங்கிலப் பாவினம்.வெண்பா தமிழ்ப் பாவகைகளான வெண்பா, கலிப்பா,வஞ்சி,ஆசிரியம் என்ற நான்கு பாக்களில் ஒன்று.

Blank Verse இன் இலக்கண அமைதிபின்வருமாறு; 

  • அதில் எதுகை இருக்கக் கூடாது. எதுகைஎன்றதும் இந்தப் பட்டதாரிகளும் பண்டிதர்களும் தாம் ஓதாதுணர்ந்த யாப்பிலக்கண , அறிவோடு 'எதுகை -கை எது?' என்று கேட்டுக்கொண்டு கிளம்ப வேண்டாமென்று அவர்களை மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். இன்னும் எனக்குத் தெரிந்த ஒரு பண்டித வித்துவான் யாப்பிலக்கணம் என்றால் எதுகையும் மோனையும்தான் என்றுஎண்ணிக் கொண்டிருப்பவர்; அவர் , - அதெப்படி? எதுகை இல்லாமலும் ஒரு பாட்டா?' என்று கேட்டுக்கொண்டுவரலாம். கரை போட்ட துணியில் அழகிருக்கிறது. ஆனால் கரை போடாத துணியிலும் இன்னொரு வகைஅழகு இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் நாம் இவருக்கு அளிக்கக் கூடிய பதில்! ஆனால் அதைப் புரிந்துகொள்ள அழகுணர்ச்சி வேண்டும். அது அவரிடம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர் நம் பதிலைஏற்றுக் கொள்வார். இது ஆங்கில இலக்கண விவகாரம். ஆங்கில யாப்பின்படி Blank Verseஇல் எதுகைஇருக்கக் கூடாது.

  • மோனை இருக்கலாம் அன்றி இல்லாதிருக்கலாம்.மோனை என்றதும், இது மகனே என்பதன் மரூஉ. யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கும் ஒரு கொடுந்தமிழ்ப் பிரயோகம்என்று ஆர்ப்பரிக்க வேண்டாமென்று இந்த அரைகுரைப் படிப்புள்ள பட்டதாரிகளையும் பண்டிதர்களையும் வேண்டிக்கொள்கிறேன். உளரும் லைசென்ஸ் பெற்றவர்களல்லவா? அதனால்தான் இவ்வேண்டுகோள்.

  • ஆனால் அளவொத்த அடி வேண்டும். அடிஎன்றதும் கையால் அடித்தல், காலால் அடித்தல் அல்ல. அடி என்றால் வரி. வரி என்றால் திருமணம் செய்,சுயம் வரி என்றெல்லாம் பாதை தவறிப் பேசலாம் பத்திரம் பெற்ற பட்டதாரிகள். பத்திரம் இருக்கும்போதுபயம் உண்டோ? ஆனால் அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.அல்லது அடி விழலாம். அடி என்றால் பொல்லடி மட்டுமல்ல, சொல்லடியும் கல்லடியும்தான்.

  • ஒரு வகைச் சீரில் இயங்க வேண்டும்.சீர் என்றதும் சிறப்பு, சீர்வரிசை என்று ஓதாதுணர்ந்தவர்கள் பொருள் தர முன்வரலாம். இது யாப்பிலக்கணச்சீர்; நீங்கள் நினைக்கும் சீர் அல்ல. 

இந்த Blank Verse  இற்குஒரு உதாரணத்தைத் தந்து அதை அலகிட்டுப் பார்ப்பது நல்லதென்ரு நான் நினைக்கின்றேன். பட்டதாரி மெளடீகம்Blank Verse என்றால் என்ன என்று இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்.

Oh, Swear Nor By the Moon
The Incon sis stant MoonThat Monthly changes in
Her Cir cied orb (Shakespeare,Romeo Juliet)

  • இதில் எதுகை கிடையாது.

  • முதல் அடியில் மோனையில்லை. இரண்டாம்அடியில் Changes in her cricied orb என்று வருவது மோனை. மோனை வரலாம்; அல்லது வராதுவிடலாம்...

  • ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்கொண்ட Pentameterஎன்ற அடிகள். ஆகவே அளவொத்த அடிகள்.

  • இதில் காணும் சீரின் பெயர் Lambic.இரண்டு அடிகளும் ஒருவகைச் சீரிலேயே இயங்குகின்றன.

Blank Verse என்பது இதுதான். இதுபோல் அமைந்ததைத்தான் ஆங்கில யாப்பில் Blank Verse என்று அழைப்பார்கள். ஆனால் ஆங்கிலத்திலும்,இதர மேனாட்டு மொழிகளிலும் Verse Librre அல்லது Free Verse என்று இன்னொன்றும் உண்டு. அதற்குத்தான்விதிகள் கிடையாது. எதுகை, மோனை, அளவு, சீர், தளை என்பன எதுவுமே கிடையாது அதற்கு. ஆனால்அதற்கும் இலக்கண அமைதி ஒன்றுண்டு. கூறும்பொருள் கவிதைத் தன்மை கொண்டதாயிருக்க வேண்டும். Cadenseஎன்ற இன்னிசை அதில் ஒழுக வேண்டும்.

Blank Verse ஆங்கிலத்தில் எப்படிப்படகவிஞர்களால் இதுவரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது. உலகின் மிகச் சிறந்தகவிஞன் என்று பலரால் கருதப்படும் ஷேக்ஸ்பியரின் கவிதை,  பெரும்பாலும் இந்த எதுகையற்ற BlankVerseஆல் தான் எழுதப்பட்டுள்ளது. டெனிசன், மார்ளோவ், மில்டன் எல்லோரும் தம் நீண்ட காவியங்களைஇந்த Blank Verseஇல்தான் எழுதினார்கள். பெரும்பாலும், தமது சிறுகவிதைகளில் தான் இக்கவிஞர்கள்எதுகையை உபயோக்கித்துள்ளார்கள்.

சரி, இதுவரை ஷேக்ஸ்பியடின் BlankVerseஐப் பார்த்தோம். இனி, தான் தோன்றிக் கவிராயர் என்னும் சில்லையூ செல்வராசனின் கவிதைகளைஅலகிட்டு, அவற்றில் Blank Verse என்ற யாப்பின் தன்மைகள் ஓரளவாவது இருக்கின்றனவா என்பதை ஒருவகைஒப்பியல் யாப்பிலக்கண முறையில் கவனிப்போம்.

சில்லையூர் செல்வராசன் வெண்பாக்கள்,விருத்தங்கள்,சிந்துக்கள், ஆசிரியப்பாக்கள், கட்டளைக் கலித்துறை என்ற பலவித பா வகைகளிலும் தமதுகவிதைகளைப் புனைந்து தமிழன்னையின் பாதங்களில் சூட்டியிருக்கிறார். இவை யாவும், அவற்றுக்குரிய இலக்கணத்துக்குள்அமைந்திருக்கின்றனவே அல்லாமல் Blank Verse என்ற கவி உருவத்தின் தன்மைகளைப் பெறவில்லை.

பொதுவாகக் கவி அரங்கங்களில்அவர் பாடும் பாடல்கள் வெண்டளை தழுவிய ஒரு புதிய கவி உருவமாகும். இது பாரதிதாசன் போன்ற பெருங்கவிஞரால் கையாளப்பட்டு, இன்று தமிழ்க் கவிஞர் பலராலும் உபயோக்கிக்கப்படும் ஒன்று. இக்கவி உருவத்திற்குஉதாரணமாக செல்வராசன் கவி அடிகள் ஒன்றிரண்டை இங்கு அலகிட்டுப் பார்ப்போம்.

யாழ்ப்பாணச் சாமி தனைக்
காழ்ப்பால் இகழ்ந் தெழுதும்
கூழ்ப்பானைப் பண்டிதரைக்
குட்டுதற்கே வந்துள்ளேன்!

இது பின்வரும் சீரமைதி:

தேமாங்காய்   - கூவிளங்காய்
தேமா        - கருவிளங்காய்
தேமாங்காய்   - கூவிளங்காய்
கூவிளங்காய்   -தேமாங்காய்

இவை யாவும் வெண்பாவில் பயிலும்சீர்கள். காய் முன் நேரும், மா முன் நிரையும், நிரை முன் நேரும், வருவது வெண்டளை. தளை அமைதிசரி. இப்புதிய பாவினத்தில், சாதாரணமாக, குறளைப்போல, இணை எதுகையே வரும். ஆனால் இவரதுஅடியிலோ யாழ், காழ், கூழ் என்ரு மூன்று எதுகைகள் வந்துள்ளன. ஆகவே, எதுகையமைதி தேவைக்கதிகமாகவேஇருக்கிறது. முதலடியில் இரண்டு எதுகை விழுந்து விட்டதால் மோனை அவசியமில்லை. ஆனால் அங்கும் 'யா'வுக்கு'இ' மோனையாக விழுகிறது. சொல்லாட்சியில் கவிஞர் வல்லவராய் இருப்பதால் அவரால் தேவைக்கதிகமாகவேஎதுகைகளையும், மோனைகளையும் அள்ளி வீச முடிகிறது. தமிழ்ப் பாட்டில் எதுகை மோனை நயம் அதிகமாயிப்பதுகுற்றமல்ல, தனிச்சிறப்பு எனக் கருதப்படுகிறது என்பதையும் நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நிச்சயமாக இது Blank Verseஅல்ல. அதில் எதுகையே இருக்கக் கூடாது. செல்வராசனின் கவி அதற்கு முற்றிலும் முரண். அப்படியானல்,இது Verse Libre ஆக இருக்கலாமோ? அதுவும் முடியாது. ஏனெனில் அளவொத்த அடிகள், அதுவும் தளைச்சிறப்புக் கொண்டவை, எதுகை மோனை எல்லாம் கொண்டவை, எப்படி Verse Libre ஆக முடியும்? அதுவும்முடியாது.

ஆகவே செல்வராசனின் கவியரங்கக்கவிதைகள் Blank Vesre அல்ல' வேறு பாவினம்.

உண்மையைச் சொல்லப்போனால் செல்வராசன்இதுவரை எழுதாத பாவினங்களில் ஒன்றுதான் Blank Verse. அவர் எதுகையற்ற பாட்டு எழுதினதே கிடையாது.எதுகையற்ற பாட்டுத்தான் Blank Verse.

ஏன், இந்தப் பட்டதாரிச் சிறுகதையாளர்பேசிய கூட்டத்திலேயே செல்வராசனின் கவி மழை பொழிந்தது. அதுகூட பஃறொடை வெண்பா (சிலர்இதைக் கலி வெண்பா என்று அழைத்தலும் உண்டு)வில் தான் பொழிந்தது.

உதாரணத்திற்குச் சில வரிகளைஇங்கு தருகிறேன். சீரமைதி, தளையமைதி, எதுகை, மோனை எல்லாம் சரிவர அமைந்த பஃறொடை அது:-

'..........
பாராட்டைப் பெற்றவர்கள் பாலவும்பீரிசுடன்
சீராளன் ஆறுமுகச் செல்வனும் -ஆராய்ந்து
செய்யும் கருமம் சிறப்பாகச் செய்பவர்கள்
எய்யும் இலக்கறிந்தே எய்பவர்கள்- ஐயமிவண்
சற்றுமில்லை அன்னார்கள் காரியத்தைச்சாதிப்பர்
முற்றும் சிறப்பாய் முடிப்பார்கள்....!'

இவ்வாறு அழகுறச் செல்லும் பஃறொடையேஇது. ஆனால் Blank Verse தமிழிலும் உண்டு. அது ஒரு வகை ஆசிரியம். ஆசிரியத்தில் எதுகை வரலாம்;அல்லது வராது விடலாம்.

  • அளவொத்த அடி

  • எதுகை இன்மை

  • மோனை இருத்தல் அல்லது இல்லாதிருத்தல்

  • ஒரே வகைச் சீர்

இவை எல்லாம் அமைந்த எதுகை அற்ற நிலைமண்டில ஆசிரியம் - அதாவது கடைசியடிக்கு முன்னடி முச்சீராக வராத ஆசிரியம் - ஏறக்குறைய, ஏன்முற்றாகவே ஆங்கில Blank Verse இற்குச் சமம் என்று கூறலாம்.

ஆனால் இவ்வகை Blank Verseதமிழில் கவிஞர்களின் விருப்பினை ஏனோ இதுவரை பெறவில்லை. செல்வராசனும் இதுவரை அதனைக் கையாண்டதுகிடையாது. அவர் இதுவரை எழுதாத பாவினம் உண்டானால் அது Blank Verse தான்.

விஷயம் இவ்வாறிருக்க செல்வராசனின்கவிதையை ஆராய்ந்து, அது Blank Verse என்கிறார் பட்டதாரிச் சிறுகதையாசிரியர், ஒப்பியல்யாப்பிலக்கணம் அறிந்த மேதாவி போல! 'தேவதைகள் போவதற்கஞ்சும் இடங்களிலும் குட்டிச் சாத்தான்நாணாது செல்லுமாம்' என்ற வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது, இதைப் பார்க்கும்பொழுது!

நன்றி: 31 ஜூலை 1970 - தேசாபிமானி-
வசந்தம் நவம்பர் 1965

அ.ந.கந்தசாமியின் கவிதைகள் சில!

சிந்தனையும் மின்னொளியும்!

சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-
 

எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமி·து மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் கானப் பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணீக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும்பி மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிள ந் தெறிந்திருப்போம் என்றுனிகழ்த்திடுவார்.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை எனென்ன்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?

வள்ளூவர் நினைவு!

வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்
இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்
இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.

வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.

வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்" என்றார்.

நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.

கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அ·தொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.

கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீ£ர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.

-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-

நான் செய் நித்திலம்!

வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல்
வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான்
இப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்;
கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக்
கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை
வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென்
மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி
ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள்
நீங்கள் செய்த நித்திலம் இதுவே.
என்று கூறி மகிந்தனள்; அவள் கண்
ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று
அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி
தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில்
உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி
வந்தஅம் முத்தில் வையகத் தின்பம்
யாவும் கண்டனன்; அம்முத்தெனது
மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட
மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி
உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன்.
நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே!

வில்லூன்றி மயானம்!

நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வ·து.

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீ¢ழாம்
மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்
கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்
கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம்.

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்
சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்.

அன்னையார் பிரிவு!

ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!

பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்
பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச்
சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ்
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!

மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற
காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த
பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின்
பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின்
சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க
கஸ்த்தூரி யன்னாய்! எம் கருத்தே! கண்ணே!
பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இ·தோ
பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ?

சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல்
மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய்
உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?

மாம்பொழிலாள் நடனம்!
மத்தள மெத்த முழங்க முழங்க
மாங்குயி லோஎனக் கீதம் இசைக்க
தத்தரி நெடுங்கண் திசைகளில் ஓடத்
தாம்தீம் ததிங்கின தோம்தோம் என்று
முத்தன மூரல் மென்மதி சிந்தி
முனிவரும் தங்கள் யோகம் மறப்ப
பத்தரை மாற்றுத் தங்கம் அனையாள்
பாரத சாத்திரச் சதிர்பயின் றாளே.

கட்டிள மெல்லுடல் கைகள் அசைய
கமல்பொற் பாதச் சலங்கை கிலுங்க
மொட்டிள முலைகள் முந்திடக் கன்னி
மோகன மெல்லிசை தானும் அசைய
பட்டுடை காற்றில் விசிறி அலைய
பார்ப்பவர் நெஞ்சினிற் காதலை மூட்டி
கட்டுட லாளந்த மாம்பொழி லாள்தன்
கண்களை வீசிச் சதிர்இடுகின்றாள்.

ஆடகப் பொன்னணி மன்னிடக் காலில்
அழகு சிலம்பு புலம்பிட நங்கை
நாடக மாடுதல் கண்டிடு நம்பியர்
நங்கையின் வேல்விழி உண்டிடுகின்றார்
கூடுதல் வேண்டிக் குமைந்திடு கின்றார்
குறிதவ றாதே ஐம்மலர் மன்மத
வேடுவன் வீசிடு வெங்கணை தன்னால்
வெய்துயித் திட்டார் வெந்திடுகின்றார்.

கோல்வளை வேல்விழி கொன்றிட லாலே
குமரர்கள் கோதையின் தாமரை போலும்
கால்தனில் நூபுரக் கிண்கிணி யாகி
கன்னியின் மெல்லுடல் தழுவ நினைந்தார்.

கன்னிகை யாளோர் கதிரொளி மின்னல்
காசினி வந்தே ஆடுதல் போல
புன்னகைப் பூவினை அள்ளி எறிந்து
புதுநட மிடுமக் காட்சியைக் கண்டு
மன்னவன் விச்சவி மகிபனின் மைந்தர்
மையலில் மூழ்கித் தனித்திட லானார்
மின்னிடை யாளின் பொன்னணி மேனி
முயங்கிட வேண்டி மயங்கிநின் றாரே.
 

அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள் சில!

நள்ளிரவு!

- அ.ந.கந்தசாமி -

‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவதற்கா இவ்வளவு தூரம் சந்தோசப்படுகிறான் என்று எண்ணினேன் நான்.என்னுடன் பேசிய ‘அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினிமாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின்ஸ்ரீட்டும், பூந்தோட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒடுங்கிக்கொண்டேன். பழைய கிறீஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தாவுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்.

அங்குமிங்குமாய் சிலர் நீட்டி நிமிர்ந்தும் மடங்கி முடங்கியும் கூனிக் குறுகியும் படுத்துக் கிடந்தார்கள். ஒருசிலர் நித்திரையாகிவிட்டார்கள். இன்னும் சிலர் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் மெல்லிய குரலில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே ஒதுங்கி ஒருசில வினாடிக்குள் மழையின் வேகம் அதிகரித்தது. சாரல் வராந்தாவின் உள் சுவர்வரை வீசி அடித்தது. படுத்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். அங்குமிங்குமாக தமது படுக்கை இடங்களை மாற்றிக் கொண்டார்கள், அல்லது மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சி எல்லாம் எனக்குப் புதுமையாகவும் கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றியது. அவற்றைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுதுதான் அங்கு மழையோடு போட்டி போட்டு வந்து வராந்தாவில் ஏறினான் அவன். பக்கத்திலே சந்தியிலிருந்த மின்சார வெளிச்சம் மழையால் மங்கி இருந்தபோதிலும் வராந்தாவில் ஒரு சிறிது வீழ்ந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்திலே அவனைக் கவனித்தேன். உற்சாகமான சிரித்த முகம். சுத்தமான ஷர்ட்டும், கோடுகளிட்ட வெள்ளைச் சாரமும், இடையில் ஒரு புலித்தோல் பெல்ட்டும் காட்சி அளித்தன. வயதில் வாலிபன். நன்றாக நனைந்து போயிருந்தான்.

‘இழவு பிடித்த மழை!’ என்று கூறிய அவன், என்னைப் பார்த்து “நீங்கள் மழையினால் இங்கு அகப்பட்டுக் கொண்டீர்களோ?” என்று கேட்டான்.

“ஆம்” என்றேன். அத்துடன் சம்பாஷிப்பது அந்த நேரத்திலே டானிக் போல உற்சாகம் தருவதாய் இருந்ததாலதனைத் தொடர விரும்பி “நீ எங்க அவசரமாய் போகின்றாய்?” என்றேன் சுமுகமாய்.

அவன் சிரித்தான். “இதுதான் எனது மாளிகை! படம் பார்த்துவிட்டு வருகிறேன், படுப்பதற்கு” இப்படியாக ஏற்பட்ட பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, எவ்விதமாகவோ வளைந்து வளைந்து சென்றது. அவன் நான் யார், எங்கிருக்கிறேன் என்பதையெல்லாம் விபரமாகக் கேட்டான். நான் பத்திரிகை ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் பயந்து திகைத்து விடுவானோ என்று அஞ்சி ஒரு கடையிலே சேல்ஸ்மேன் என்று கூறினேன்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் சர்வசாதாரணமாக கஞ்சாச் சுருட்டொன்றைப் பற்றவைப்பதகாக அதற்கு வேண்டிய முஸ்தீபுகளைச் செய்ய ஆரம்பித்தான். மடியில் கஞ்சாவை எடுத்து கையில் வைத்துக் கசக்கினான். பின்னால் சிகரட்டைச் சீர்குலைத்து அதனுள்ளே அதைப் பொதிந்தான்.

என்னைப் பார்த்து “நீங்கள் கஞ்சா பிடிப்பதில்லையா?” என்றான் சிரித்துக் கொண்டு. “இல்லை” என்ற பாவத்தை முகத்தில் பரவவிட்டேன். “குளிருக்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொள்ளலாம், குடித்துப் பாருங்கள்” என்று வற்புறுத்தினான். அவன் பேச்சு, அவன் புன்னகை எல்லாமே என்னை அடிமை கொண்டிருந்தன. குடித்துத்தான் பார்ப்போமே என்று சிகரெட்டை வாங்கினேன். அவன் தன் கையிலிருந்த நெருப்புப் பெட்டியால் பற்றிவைத்து விட்டான்.

கஞ்சாப் புகையை உள்ளே இழுத்தேன். அந்தக் குளிருக்கு அது சிறிது தெம்பு தரத்தான் செய்தது. மழையோ இப்போது மேலும் அடித்துப் பெய்யத் தொடங்கியது. பொட்டுப் பொட்டாக ஆங்காங்கு பரந்து கிடந்த மின்சார வெளிச்சத்தில் தார் ரோடு எண்ணெயால் மெழுகியதுபோலப் பளபளத்தது.

எனக்குப் போதை உண்டாகியதோ என்னவோ தெரியாது; ஆனால் மஸ்துப் பொருட்களின் போதைக்கு ஒரு அபூர்வசக்தி உண்டு. மனிதனின் தன்னுணர்ச்சியையும், வெட்கத்தையும், பயத்தையும் போக்கடித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் சிலர் போதையின் வயப்பட்டதும் வேதாந்தம் பேசுகிறார்கள். பயத்தாலோ வெட்கத்தாலோ அவர்கள் உள்ளக் கூஜாக்களில் அடைபட்டிருந்த வேதாந்தம் மெல்ல மெல்ல வெளியே கிளம்ப லாகிரிப்போதை மூடியைத் திறந்து விடுகின்றது.

நானும் நண்பனும் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஐந்தாறு தடவை கஞ்சாவை இழுத்த பின்னர் குறைச் சிகரட்டை அவன் வாங்கிக் கொண்டான்.

நான் கேட்டேன்: “நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன் என்றாயே, ஏன் போகிறாய்? என்ன குற்றஞ் செய்தாய்?”
அவன் சிரித்தான். “அதோ பார்த்தீர்களா ஒரு பெண் முடங்கிப் படுத்திருக்கிறாள்! அவளைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு”
“ஒருநாளிரவு கள்ளுக்கடை முடுக்கிலே அவளைப் பலாத்காரம் செய்கையில் பொலிசார் பிடித்து வழக்குப் போட்டுவிட்டனர்” என்று கூறி அவன் கலகலவெனச் சிரித்தான்.

“யார் அந்தப் பெண்?” என்றேன் ஆவலுடன்.

“அவளா? யாரென்று யாருக்குத் தெரியும்! ஆனால் அவள் பக்கத்திலே படுத்திருக்கிறதே குழந்தை, அது என் குழந்தைதான்!”
“அப்போ அவள் உன் மனைவியா?”

அவன் முகத்தைச் சுளித்தான். “அவள் எல்லோருக்கும் மனைவிதான். ஆனால் என்னிடம் மட்டும் அவளுக்குச் சிறிது அதிகப் பிரியம்! நானும் அப்படித்தான்!”

எனக்கு ஒரு விசயம் ஒரே புதிராகிவிட்டது. கஞ்சா மயக்கத்தில் முன்னுக்குப் பின் முரணாக அவன் பேசுகிறானோ, அல்லது எனக்குத்தானவன் ஒன்றுபேச வேறொன்று கேட்கிறதா என்ற சந்தேகம் ஜனித்தது.

எனது நண்பன் இப்பொழுது அந்தப் பெண்ணிருந்த பக்கத்துக்குச் சென்றான். நிச்சிந்தையாகத் துயின்று கொண்டிருந்த அவளுக்கு அருகில் சென்று, “பேபி பேபி” என்று கூப்பிட்டான். அதை அவள் எதிர்பார்த்துத் துயின்றுகொண்டிருந்தவள் போல எழுந்து உட்கார்ந்தாள். கண்களை கசக்கி விட்டுக் கொண்டாள். பின் அவர்கள் இருவரும் ஏதோ சில வார்த்தைகள் குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு நிமிஷத்தில் நண்பன் மீண்டும் என்னிடம் வந்தான். அவன் கையில் வெற்றிலை பாக்கு நிறைய இருந்தது.

“நீங்கள் வெற்றிலை பாக்கு போடுவீர்களா?” என்று என்னிடம் கேட்டான் அவன். நான் வெற்றிலை பாக்குப் போடுவதில்லை. என் மனதில் ஆச்சரியமும் இந்த வினோதமான காதலர்களின் தன்மையை அறிவதில் அவாவும் அதிகமாகி இருந்தது. இவர்கள் காதலர்களா? அல்லது பலாத்கார வழக்கிலே சம்பந்தப்பட்ட இ பகைவர்களா? அவன் கூறுவதின்படி அவர்கள் இண்டுமென்று அர்த்தமாகிறது. குளிர்ந்த நீர் கையை வைத்ததும் கையைச் சுட்டது என்று கூறுவது போல் இந்தது, இத வினோதச் செய்தி. இன் பூரா விபரங்களையும் அறிய வேண்டுமென்ற ஆவல் அடக்க முடியாமல் என் மனதிலே கிளம்பியது.

மீண்டும் சம்பாஷணையில் ஓட்டத்தை உண்டாக்குவதற்காக “நீ என்ன தொழில் செய்கிறாய்?” என்று அவனிடம் கேட்டேன்.
அவன் அர்த்தபுஷ்டியுடன் புன்னகை புரிந்தான். “தொழில் எதுவென்றிருக்கிறது? எப்படியும் ஜீவனோபாயம் நடந்தாற் சரிதானே?” என்று வேதாந்தி போல் பேசினான் அவன்.

“அப்படியானால்..” என்று ஆரம்பித்த வசனத்தை பூர்த்தி செய்யாது நிறுத்தினேன் நான்.

அவன் சிரித்தான்.

மழை இப்பொழுது முன்னிலும் திடீர் வேகத்தோடு பெய்ய ஆரம்பித்தது. இடிகள் வானவெளியிலே உருண்டுருண்டு சப்தித்தன. வானம் தன் மூடிய கண்களைத் திறந்து உலகை ஒருதடவை பார்த்து பின் படீரென்று இமைக் கதவுகளை மூடிக்கொள்வது போல மின்னல் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது.

எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. புத்திசாலியாகவும், நேர்மை உள்ளவனாகவும் தோன்றும் இவன் பிக்பாக்கட்டா? ம். அவன் நேர்மையுள்ளவன்தான். இல்லாவிட்டால் தான் பிக்பாக்கட் என்பதைக் கூறிவிடுவானா? இந்த முடிச்சுமாறிக்கும் சமூகத்தின் இதர கள்வர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்கள் தம் போக்கை மூடி மறைத்துக் கண்ணியம் நிறைந்தவர்களாக நடிக்கிறார்கள். இவனோ உண்மையைக் கூறிவிடுகிறான். இதன் காரணமாக என் உள்ளத்தில் ஒரு மகாத்மாவாக, சத்தியவந்தனாகத் தோன்றினான் அவன்.
“அப்படியானால் உனக்கு ஒழுங்கான வருமானம் கிடைக்காதே! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாய்?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.

உலகத்திலே எல்லோரும் பிக்பாக்கட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். ட்ராமிலும், பஸ்ஸிலும், சினிமா நெருக்கடியிலும், அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பவன் போல, நகரத்தில் மடியில் கனமுள்ள எவரும் அவனை ஞாபகப்படுத்தி அஞ்சிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவனுக்குத்தானும் அவன் நேரில் காட்சியளிப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவகை உடையைக் கொண்டு இவன் பிக்பாக்கட்டாயிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறதே அல்லாமல் நிச்சயம் செய்து கூறுவதற்கில்லை. பழைய காலத்து ‘சதாரம்’ நாடகத்தில் கள்ள உடைபோட்டு ‘கொள்ளையடிக்க போவோமடா’ என்று பாடிவரும் கொள்ளைக்காரர்கள் நாடகத்திற்குத்தான் சரியேயல்லாமல், வாழ்க்கையில் நாம் காணக்கூடியவர்கள் அல்ல. பிக்பாக்கட்டுக்கள் தீயணைக்கும் வீரர்கள் போல் அதற்கென்றுள்ள உடையை உடுத்துக்கொண்டா தமது தொழிலுக்குப் போகப் போகிறார்கள்? – பார்க்கப்போனால் கடவுள் போல் இவர்களும் பலர் மனதிலே அரூபிகளாகத்தான் விளங்க முடியும். ஒரு சிலர் பிடிபடுவதும் உண்மைதான்! ஆனால் அவர்கள் உண்மைக் குற்றவாளிகள்தாம் என்பதை யார் கண்டார்கள்?

என் மனதிலும் ‘பிக்பாக்கெட்’ என்பவன் நகரில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஒரு அரூபியாகத்தான் இதுவரை இருந்தான்.
ஆனால் இப்பொழுதோ என் கண்முன் காட்சி தந்துவிட்டான். என்புதோல் போர்த்த சதையுடம்புடனே நிற்கும் அவனது அந்தரங்கங்களை எல்லாம் கூடிய அளவு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை, அந்த ஆசையில்தான் ‘எவ்வளவு சம்பாதிப்பாய்?’ என்ற கேள்வி என் உள்ளத்தில் ஜனித்து வாயினால் வெளிப்பட்டது.

“மாதம் முடிந்ததும் இவ்வளவு கிடைக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய தொழிலல்ல இது. சில சமயம் ஒன்றுமே கிடைக்காது.”
எனக்கு இதிலே மனம் படியவில்லை. என் உள்ளத்தை அலைக்கழித்த அந்தப் பெண்ணின் விவகாரத்திற்கு எப்படி வருவது என்று தெரியவில்லை. இருந்தும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “ஆமாம், நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறாயே, உனக்கு கவலையாய் இல்லையா? பயம் கிடையாதா?” என்று அந்தத் திசைக்கு சம்பாஷணையைத் திருப்புவதற்குச் சாதகமான முறையில் என் பேச்சை ஆரம்பித்தேன்.

அவன் இதற்கும் தன் புன்னகையுடனேயே பதிலளித்தான். “பன்னிரண்டாவது தடவையாக ராஜா வீட்டுக்குப் போகிறேன், பயமா? எதற்கு?” என்றான் அவன்.

ஆரம்பத்திலிருந்தே அவன் பேச்சு, செயல் எல்லாம் எனக்குப் புதுமையாயிருந்தன. ஆனால் இப்பொழுதோ அந்தப் புதுமையின் உச்சியை நான் எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.

அவன் மேலும் தொடர்ந்தான். “ஜெயிலிலே எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். உண்மையில் அங்கிருந்து நான் வெளியே வந்து ஒண்ணரை மாதந்தான் ஆகிறது. பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தவிர அனேகமாக மற்ற நண்பர்களெல்லாம் இன்னும் அங்குதான் இருப்பார்கள்..”
ஏதோ நண்பர்களைச் சந்திக்க வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு செல்லும் ஒருவன் போல அவன் பேசினான். மறியற்சாலை அவனைத் தன் இருண்ட அறைகளைக் கொண்டு பயமுறுத்தவில்லை. அவன் வர்ணனையைப் பார்த்தால் அவனை அது மயக்கி அழைப்பது போலத் தெரிந்தது.

நான் அவன் முகத்தை நோக்கினேன். கஞ்சா நெருப்பு இப்பொழுது தன் முடிவான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. மழை நேரத்தில் குளிர்ந்த பாரமான காற்றினாற் போகும் புகை விரைவாக மேலெழுந்து மறையவில்லை. ஆறுதலாக சுருள் சுருளாக மாடிப்படிகளில் சிரத்தையோடு ஏறும் ஒரு குழந்தை போல மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்தது. அதனூடாக அவன் கண்களைப் பார்த்தேன். அதில் ஒளியும் இன்பமும் அலைவீசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், ஆச்சரியம் மேலும் அதிகமாகியது.

“அப்போது சிறைக்குப் போவது உனக்குப் பிரியமென்று சொல்லு!”

“சந்தேகமில்லாமல்”

“ஏன்? அங்கே என்ன அவ்வளவு விஷேசமிருக்கிறது?”

“என்ன இருக்கிறதா? அப்போது உங்களுக்குச் சிறையைப் பற்றி ஒன்றுமே தெரியாதென்று சொல்லுங்கள்”

குருவின் சொற்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பக்தி நிறைந்த ஒரு சிஷ்யன்போல அவன் வார்த்தைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“இந்த மழை ஓய்ந்ததன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டுக்கோ கடைக்கோ செல்வீர்கள். அடைமழை இரவுக்கும் நித்திரைக்கும் நல்ல பொருத்தம். நன்றாகத் தூக்கம் வருமல்லவா?”

நான் தலையை ‘ஆம்’ என்ற பாவனையில் அசைத்தேன்.

“எனக்கும் தூக்கம் வரும். ஆனால் துங்கத்தான் இடமில்லை! பார்த்தீர்களா நமது மாளிகை எப்படி ஈரமாய் போய்விட்டதென்று.”
கதை சுவாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்த நான் அப்போது தான் நிலத்தை நோக்கினேன்; காலிலே செருப்பு அணிந்து இருந்ததால் சுற்றிலுமிருந்த ஈரம் என்னை அவ்வளவாகத் தாக்கவில்லை. அவன் கால்களை நோக்கினேன். அவை ஈரத் தரையில் பதிந்து சிறிது வெளிறி இருந்தன.

குளிர்ந்த காற்றொன்று மழைச் சாரலை உள்ளே அடித்து வீசியது. உடம்பிலே சிலிர்ப்பும் நடுக்கமும் சிறிது தோன்றின.

“நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று என்னை விசாரித்தான் அந்த அதிசய நண்பன்.

“சாப்பிட்டுவிட்டுத்தான் படம் பார்க்கக் கிளம்பினேன்” என்றதும் அவன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். எதையோ பேச அவன் கூச்சமடைந்தானென்று தெரிந்தது.

பேசிக்கொண்டிருந்தவர்கள் மெளனமாகியதும் காதிலே மழையின் ‘ஓ’வென்ற இரைச்சல் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அந்த ஓசையிலே ஒரு தனிமையுணர்ச்சி இருப்பது போல எனக்குப் பட்டது. வானம் யாரை நினைத்து இவ்வளவு கண்ணீரையும் கொட்டி ஓவென்று அழுதுகொண்டிருக்கிறதோ? என்ற வினோதமான கற்பனை என் மனதிலே தோன்றியது.

“நீ சாப்பிட்டு விட்டாயா?” என்றேன்.

“இன்று இந்தக் கஞ்சாவோடு சரி! ஒரு டீ அடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான்! ஆமாம், நீங்கள் கேட்டீர்களே, ஜெயிலிலே என்ன சுகமென்று. நேரத்துக்கு உணவு! இது போன்ற அடைமழை நேரத்தில் இருண்ட சிறைச்சாலை ‘கம்’ என்றிருக்கும். நல்லாக நித்திரை வரும்! அந்தக் கருங்கற் சுவர்களை மீறிக் குளிர் உள்ளே நுழைந்துவிட முடியாது..”

நான் திகைத்து விட்டேன்.

அடிமைத்தனத்திலே கிடைக்கும் சுகத்தை விரும்பிய இவன் சிறையை நாடுகிறான்! என் மனதைச் சிறிது நேரத்தின் முன் கவர்ந்து நின்ற அவனது உருவம் இப்பொழுது வெறுக்கத்தக்கதாகத் தோன்ற ஆரம்பித்தது. இப்படியும் ஒரு மனித ஜன்மம்! ஒருவேளை ஆகாரத்துக்காக தனது சுதந்திரத்தையே விற்கத் தயாராகி விடுகிறதா?

“அப்படியானால் உன் சுதந்திரம் பறிபோவதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா?” என்றேன் நான்.

“சுதந்திரம்!.. ஜெயிலுக்குப் போனதும் அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்பது போன்ற கவலையிலிருந்து விடுதலை கிடைக்குமல்லவா?” என்றான் அவன்.

என் சிந்தனையில் புதிய அலைகளைக் கிளறிவிடும் அவன் பிக்பாக்கட் என்று என்னால் நம்ப முடியவில்லை. என் உள்ளத்திலே மீண்டும் மோகனரூபம் பெற்றான் அவன்.

“அப்படியானால் ஜெயிலுக்குப் போக நீயேதான் சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொண்டாயா?”

அவன் இதற்கும் தன் சிரிப்புடனேயே பதில் தந்தான். அவனது கசந்த வாழ்விலே எப்படி இந்தச் சிரிப்பென்னும் இனிமை உதயம் ஆகிறது என்று ஆச்சரியப்பட்டேன் நான்.

“ம் அந்தப் பெண்ணின் ஒத்தாசையால் அது முடிந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் அதை மறுக்கமாட்டாள். அவளுக்கு என் மீது அவ்வளவு பிரியம். அன்று பொலீஸ்காரர் ரோந்துவரும் நேரத்தில் பலாத்கார நாடகத்தை நடத்தினோம். அவள் பலே கெட்டிக்காரி. ‘டவர்ஹால்’ நடிகைகள் கூட அவள்மாதிரி நடிக்க மாட்டார்கள்! அவ்வளவு கூச்சல் போட்டாள் அவள்.. அடுத்த நாள் கோட்டில் ஜரானோம்” என்று கூறிச் சற்று நிறுத்தினான் அவன்.

“அங்கே குற்றத்தை ஒப்புகொண்டாயாக்கும்” என்றேன் நான்.

“இல்லை! நாளைத் தவணையன்றுதான் ஒப்புக்கொள்ளப் போகிறேன்” என்று விளக்கினான் அவன். இதுவரை பிணையிலிருந்து வருவதாகவும் அவனது கோஷ்டியில் ஒருவன் இப்பொழுது வர்த்தகத் துறையில் சிறிது முன்னேறி வந்ததாகவும் அவனே தனக்குப் பிணை கொடுக்க முன்வந்ததாகவும் மற்ற விபரங்களையும் தெளிவுபடுத்தினான்.

“நாளை குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த பட்சம் ஆறுமாதம் சிறைவாசம் நிச்சயம்!”

விஷமம் செய்து ‘ஓ’வென்று கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்த இளம் சிறுமி ஒருத்தி படிப்படியே காரம் குறைந்து பின்னர் நீண்ட நேரம் சிணுங்கிக்கொண்டு உட்கார்ந்து விடுவது போல வேகமும், வலியும் குன்று மழை மந்த நடை போட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய உள்ளத்தில் தாண்டவமாடிய பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டதால், அங்கும் சிந்தனைக்குகந்த ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

மணிக்கூண்டுக் கோபுரம் சமீபத்தில்தான் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு மணிக்கு பதினைந்து நிமிசங்கள் இருந்தன. ஒரு கூப்பிடு தொலைவில் தேநீர்க்கடை இருந்தது. தூறலிடையே அங்கு நண்பனையும் அழைத்துச் சென்று தேநீர் அருந்தினேன். நானே தேநீருக்குப் பணத்தைச் செலுத்தினேன்.

கடையிலிருந்து வெளியே வரும்போது மழை முற்றாக நின்று விட்டது. அவனிடம் விடைபெற்றுக்கொண்டு நான் ஜம்பட்டா வீதியில் உள்ள என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

சிறையை விரும்பி அங்கே செல்ல முனைந்த அந்த இளைஞன் எழுப்பிய எண்ணங்கள் மனதிலே சுழன்று கொண்டிருந்தன. அவன் கல்லால் ஆகிய சிறையை விரும்புவது நாட்டிலுள்ள பசி பட்டினி என்னும் சிறைகளிலிருந்து ஓரளவு விடுபடவே என்பதை நினைத்ததும் தான் அச்சிறைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பது எனக்குத் தெரிய ஆரம்பித்தது. குற்றம் புரியாமலே குற்றம் புரிந்ததாகச் சட்டத்தை ஏமாற்றி அதனால் கிடைக்கும் தண்டனையை அடைந்து சுகிப்பதற்கு ஒருவன் முன்வருகிறான் என்றால் அது நம் சமுதாய அமைப்பின் ஓட்டையையே காட்டுகிறது என்ற எண்ணமும் என் உள்ளத்தில் பளிச்சிட்டது.

வீதியிலே யாருமில்லை. என் செருப்பின் சப்தம் மட்டுமே என்னைப் பயமுறுத்துவதுபோல ஒலித்துக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் ஒரு குறுக்குத் தெருவில் இருந்து ஒரு ‘கொக்கை’த்தடியுடன் அங்கே பிரசன்னமானான். மழையின் காரணமாக எங்கோ ஒதுங்கி இருந்து விட்ட நகரசபையின் இருட்டடிப்புத் தொழிலாளியான அவன் மின்சாரதீபங்களை அணைத்துச் சென்று கொண்டிருந்தான். இருளின் தூதுவனாக நடந்து கொண்டிருந்த அவன் மக்கள் வாழ்வில் இருளைப் பரப்பி நின்ற இன்றைய சமுதாயத்தைத்தான் எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருந்தான்!

- “உழைக்கப்பிறந்தவர்கள்” 1950 தொகுதியிலிருந்து. மேற்படி சிறுகதை சுதந்திரனில் ஐம்பதுகளில் வெளிவந்தது.-
 

'பாதாள' மோகினி
 
-அ.ந.கந்தசாமி -

கலைஞன்சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும்வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப் பிழம்பான அந்த அழகு ஜோதியிலே தன்னை மறந்து வீற்றிருந்தான்அவன். சிவப்பு ரோஜாவையும் செந்தாமரையயும் மேகப் புரவி மீது பவனிவரும் முழுநிலவையும் அழகின்எல்லை என்று கவிஞர்கள் பாடினார்கள். அவற்றின் மோகனத் தோற்றத்திலே வாழ்வின் திருப்தியைக் கண்டார்கள்.சாந்தி எய்தினார்கள்.கலைஞன் சிவகுமார் இதற்கு மாறானவன். கருங்கற் பாறை பிழந்து, வெள்ளியை உருக்கிவார்த்தார்களோ என்னும்படி பாய்ந்துவரும் வேகமான அருவியிலும் ஏன் ரமணீயமான ரோஜா மலரிலும், சிவந்தகமலப் புஷ்பத்திலும்கூட அவன் குறை காணுவான். குளிர்ந்த பூரணை நிலவின் அழகிலும் அவன் கலைக் கண்ணுக்குக்குறைபாடு தென்படும். அவன் இலட்சியவாதி. அழகின் லட்சியமான பேரழகை தெய்வீகமான ஒரு விந்தையழகைத்தேடி அலைந்து அவன் உள்ளம் அவன் ஆத்மா அமைதியற்றுத் துடிதுடித்தது.

கலைஞன் சிவகுமார் இவ்வுலகை வெறுத்தான். சாதாரண மக்களிடையேகாணும் அவலட்சணமான் தோற்றமும், பண்பற்ற செயலும் பேச்சும், அவர்களின் பொறாமையும் துவேஷமும் சுயநலமும்அவனை மானிடர் மீதே அருவருப்புக் கொள்ளும்படி செய்தன. இதனால் சாதாரண பாமர மக்களினது போலிருந்ததனது இயற்பெயரான ராமலிங்கம் என்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்பெயர் தாங்கிய எத்தனையோரெளவுடிகளை முட்டாள்களை ரசிகத்தனம் அற்ற கோவேறு கழுதைகளை அவன் வாழ்க்கையில் கண்டிருந்தான். தனதுஇயற்பெயர் தன்னையும் இந்தக் கேவலப் பிராணிகளோடு சேர்த்துவிடும் என அஞ்சி 'சிவகுமார்' என்ற புதுப்பெயரைச் சூடினான்.

அவன் பருவ வாலிபர்கள் தலைமயிரை வெட்டி காற்சட்டை அணிந்தனர்.இங்கும் தன் பெயருக்கு இருந்த பேராபத்து விளங்குவதை அவன் கண்டான். ஆடை அலங்கார விஷயத்திலும் மற்றவர்களுக்குப் புறம்பாக விளங்க வேண்டுமென எண்ணிய அவன் தனது மேன்மையான பளபளக்கு கேசத்தை நீள வளர்த்தான்;நீண்டதோர் பட்டு அங்கியை அணிந்தான். இயற்கையிலே உயர்ந்த கம்பீரமான தோற்றமும் நீலோற்பலம்போல் நீண்ட பெண்மை ததும்பும் நேத்திரங்களும் அமைந்த சிவகுமார் இந்த அலங்காரங்களுடன் உண்மையில்பாபக்கலப்பற்ற பசுமையான குழந்தை உள்ளம் படைத்த ஒரு தேவகுமாரன் போலக் காட்சி அளித்தான்.

அழகுத் தெய்வத்தின் உபாசகனான அவன் ஒரு சமயம் களியாட்டவிழாவொன்றிற்கு அழகு ராணிகளைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளில் ஒருவனாக அழைக்கப்பட்டான். நீதிபதிகள்மிஸ்.ரதிப்பிரியா என்னும் உயர்குலச் சுந்தராங்கியைக் களியாட்டத்தின் அழகு ராணியாகச் சிபார்சுசெய்தனர். அவளது அழகிலும் குறை கண்டான் கலைஞன். எனவே அழகுப் போட்டியின் முதலாம் இரண்டாம் இடங்களைக்காலியாக வைத்து மூன்றாவது இடத்துக்கு மிஸ் ரதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கருதினான். கூந்தல்கரி போல ஒரே கருமையாகவில்லாமல் பஞ்சு போலப் பறிக்கும் அலைகளைக் கொண்டு ஒரு மன மோகனத்தோற்றத்தை அளிக்க வேண்டும்; கொங்கைகள் அண்ணாந்து பார்க்கும் இரு கலசங்கள் போல் இலங்க வேண்டும்;கொடி போன்ற இடை அவசியம்தான். ஆயினும் மிகவும் மெலிந்து பஞ்சையின் இடைபோல் இருக்கக் கூடாது;பாதங்கள் இரு மாடப்புறாக்கள் போல் சிறிதாகவும் மல்லிகை மொக்குப் போல பூரித்தும் விளங்க வேண்டும்;- இனி அவள் கண்கள்! "அவை அற்புதமான நீலோற்பல நேத்திரங்கள் போலவே விளங்க வேண்டும்" இவ்வாறுஅவன் கற்பனையிலே குளிர் நிலவும் பூந்தென்றலும், பூவின் மென்மையும், விண் மீன்களின் ஒளியும் ஒன்றுசேர்ந்து உருவானது போன்ற ஒரு தோற்றம் எழுந்தது.

அதனைத்தான் சிவகுமார் கடந்த இரு நாட்களாக தன் அறையில்உட்கார்ந்தபடி சித்திரமாகத் தீடினான். ஆனால் அந்த ஓவியத்தை எழுதுகையில் எதிர்பாராத ஒரு விபத்துஏற்பட்டது. கண்ணெழுதும் போது கரிய மையில் ஒரு துளி அக்கண்ணாடிக் கன்னங்களில் தவறி வீழ்ந்து விட்டது.சிவகுமார் ஒரு கணம் யோசித்தான். இதனை அழித்து அக்கன்னத்தை மீண்டும் எழுதும் பட்சத்தில் அதற்கு திரும்பவும்இவ்வர்ண வாய்ப்பு ஏற்படுமா என்பது சந்தேகமே. இவ்வாறு நினைத்த அவன் அக்கரிய புள்ளியை இயற்கையில்அமைந்த ஒரு மச்சம் போல அமைத்து நிறுத்தினான்.

பின்னும் ஒருமுறை படத்தை நோக்கினான். அவன் நீண்ட நேரம்தியானத்தமர்ந்து எழுதிய அச்சொப்பன சுந்தரி ஒரு தெய்வீகத் தன்மையுடன் கொலு வீற்றிருந்து தன் உதயத்தையும்உலகத்தின் இதர கலை உள்ளங்களையும் ஆட்சி செலுத்துவது போலிருந்தது அவனுக்கு! தன் வாழ்வின் அரும்பணிமுற்றுப் பெற்றதென மமதையும் இறும்பூதங்கொண்டு ஆனந்த உலகில் சஞ்சரித்தான் அவன்.

அன்று பிறைச்சந்திரன் வானில் பவனி வந்தான். கலைஞன்ஜன்னலண்டை உட்கார்ந்து கீழே நகரத்து அலைமோதலை ஒரு முறை பார்த்துவிட்டு மேலே ஆகாயத்தை நோக்கிநிமிர்ந்தான். அப்போதுதான் அவன் நண்பன் பாலச்சந்திரன் அந்த அறையில் பிரவேசித்து "சிவகுமார்"என்று குரல் கொடுத்தது கேட்டது.

நண்பர்கள் சேஷமம் விசாரித்தனர். "பாலசந்திரன்! அருமையானபடமொன்றை எழுதுவதில் கடந்த இரண்டு நாட்களும் கழிந்தன. அற்புதமான படம்! அதோ பார்!" பாலச்சந்திரன்அந்தப்புறம் பார்த்தான். சிலைபோல் அமைந்துவிட்டான் அவன்.

சிறிது நேரம் கழித்து "சிவகுமார், உனக்கு அவளை எவ்வளவுகாலமாகத் தெரியும்? அல்லது அவள் வசிக்கும் விடுதியிலா?"

"என்ன சொல்லுகிறாய்?...இவள் போன்ற பெண் எங்காவதுஇருக்கிறாளா? எங்கே?"

"நீ அவளைப் பார்க்காமல் இந்தப் படத்தை என்பதை என்னால்நம்ப முடியாது. அதோ அவளது கன்னத்திலுள்ள நீல மச்சத்தைக் கூடக் கணக்காக எழுதியிருக்கிறாயே?"

சிவகுமார் பதிலளித்தான்:

"கண்னின் புருவ வளைவைச் செப்பனிடும்போது ஒரு துளி மைதவறி வீழ்ந்தது. அதைத்தான் மச்சமாக அமைத்தேன் நான்....அவள் என் கற்பனைச் சுந்தரிதான். என்னசொல்லியும் நம்ப மறுக்கிறாயே!"

"சரி அப்படியானால் அக்கண்கள் எவ்விதம் வந்தன?..உனக்குஞாபகமிருக்கிறதா? இரண்டு மாதங்களின் முன் நான் ஏழாம் குறுக்குத் தெருவிலிருக்கும் ஒரு இடத்துக்கு உன்னைஎன்னுடன் வரும்படி அழைத்தேன்..... நீ பெரிய சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு வர மறுத்துவிட்டாய்......"

"ஆம் நினைவில்லாமல் என்ன? நினைவிருக்கிறது"

"ஆனால் நான் போய் வந்தேன். வந்தபோது உன்னிடம் அற்புதமானபேரழகி ஒருவள் அந்த விபசார விடுதிக்குப் புதிதாக வந்திருக்கிறாள் என்று கூறி அவளை அதிகநேரம்வர்ணித்துக் கொண்டேயிருந்தேனல்லவா?..."

"ஆம்"

"அவள் கண்களைப்பற்றி என்ன சொன்னேன்? அக்கண்கள் உனதுகண்களைப் போலவே விளங்கின என்று வர்ணித்தேன்.அவ்விதம் சொன்னேனா இல்லையா?" 

"ஆம்....சொன்னதுண்டு" என்று வேண்டாய் வெறுப்பாய்க் கூறியகலைஞனை பாலச்சந்திரன் இடைமறிப்பது போன்று "பார் கண்ணாடியில்! உன் கண்களுக்கும் இக்கண்களுக்கும் ஏதாவதுவித்தியாசமுண்டா?" என்று கூறினான் வெற்றித் தோற்றத்துடன்.

"பாலச்சந்திரன் நீ சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது என்கண்களைப் பார்த்துத்தான், அந்தக் கண்களைப் நான் வரைந்தேன். ஆனால் நீ நம்ப மாட்டாய்! ஏனெனில் உனக்குஅருமையான சாட்சிகள் இருப்பது போலத் தெரிகிறது. நான் சத்தியம் செய்கிறேன். இப்பெண்ணை நான்கற்பனை உலகத்தில்தான் கண்டு பிடித்தேன்...இருந்த போதிலும் இலட்சிய அழகுபடைத்த மோகினி போன்றவள்விபசார வீட்டில் இருக்கிறாள் என்றால் அதை நான் நம்பமாட்டேன்."

"இது விந்தையாகவல்லவா இருக்கிறது! என்ன அதிசய ஒற்றுமை!ஆனால் நீ விரும்பும் பேரழகு நீ  வெறுக்கும் விபசார விடுதியில் வசிக்கும் ஏழையிடம்தான்காணப்படுகிறது! வேண்டுமானால் நாளை வா - நான் காட்டுகிந்றேன்"

சிவகுமாருக்கு எல்லாம் பெரிய விந்தையாக இருந்தது. முதலில்அவன் விபசார விடுதிக்குப் போகத்தயங்கினான். ஆனால் முடிவில் "இது பரிசோதனை போகலாம்" என்றமுடிவுக்கு வந்தான் அவன்.

ஏழாம் குறுக்குத் தெருவில் இருந்த அந்த விடுதி அந்த நகரின்"பாதாள லோகத்துக்"கே ஒரு அரிய அணிகலனாக இலங்கி வந்தது. நாகரிகமான அந்தஸ்து படைத்த கனவான்கள்கூசாமல் போககூடியதாக இருந்த ரகசிய இன்பவீடு அது ஒன்றுதான் என்பதே பாலச்சந்தர் அபிப்பிராயம்.

எந்த நகரிலும் தடுக்கப்பட்ட பொருட்கள் கஞ்சா, அபின்,குடிவகை, ரேஸ் பந்தயம் என்பன பொலிஸ் காவல் அமைந்த வெளியிலுள்ள உலகில் கிடைக்காவிட்டால் நகரின் மேல் மூடிக்குக் கீழே இருக்கும் இன்னோர் உலகிலே தாராளமாகக் கிடைத்தன. இந்த உலகை நகரின்'பாதாள லோகம்' என்று கூறுவது பொருத்தமானதுதானே?

அந்த இல்லம் பார்ப்பதற்கு ஒரு விபசார விடுதிபோலத் தோன்றவில்லை.அக்கம் பக்கத்திலுள்ள எவருமே அதனை அவ்விதம் சந்தேகிக்க முடியாது. பாதாளலோகத் தரகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமேஅது தெரியும்!  மிகுந்த திறமையோடு ஜாக்கிரதையாகவும் மிக ரக்சியமாகவும் தொழில் நடைபெற்றது.

பாலச்சந்தரும், சிவகுமாரும் அங்கு சென்றனர்.பீடிகையானபண விஷயங்கள் பைசாலானதும் சிவகுமார் அவனுக்குக் காட்டப்பட்ட ஒரு அறையினுள் நுழைந்தான். அவன் கண்களைஅவனால் நம்ப முடியவில்லை!

அந்த அழகி - அதே கன்னத்து மச்சம். அதே கருநெடும்நீலோற்பலநேத்திரங்கள் - கூந்தல் அலை அலையாகப் புரண்டு கிடக்க ஒரு மெத்தையிலே ஒரு பட்டுப் பாவாடையுடன்,ஒரு ஜாக்கட்டு பட்டுமணிந்து அலங்கோலமான நிலையில் காணப்பட்டாள். அவன் கற்பனைச் சுந்தரி- அழகுதெய்வம் கண்ணெதிரே உயிர்ப்பெற்றுக் காட்சியளித்தாள்!

அவன் திக்பிரேமை பிடித்தவன் போல் ஆகி விட்டான்! பேச்சுக்கோசெயலுக்கோ எழுச்சி ஏற்படவில்லை.

அந்த மோகினி அவனைப் பார்த்து முல்லைச் சிரிப்புதிர்த்தாள்.வாருங்கள் என்று அழைப்பதுபோல் இருந்தது. அவளது மயக்கும் பார்வை - அதில் கள்ளின் போதையும் கவிதையின்போதையும் காணப்பட்டன.

ஆனால் அவன் நகரவில்லை. அழகின் தெய்வம் விபசாரியாஎன்ற சிந்தனை அவனைக் கலக்கியது.

ஆனால் அவளோ அவனை ஆசையுடன் நோக்கினாள். இதுவரை- இது போன்ற அழகன் அவளை நாடி வந்தது கிடையாது.  அழகுமட்டும் போதாது. ஆண்மையும் வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கை இன்பமாகும் என்பதை அவள் அறியாதவளல்ல. அவன் இத்துறையில் நல்ல அனுபவசாலியாகஇருந்தபோதிலும் ஒருகணம் அவனது பேரழகு அவளை அடிமை கொண்டது.

சிவகுமார் இவ்வாறு வெகுநேரம் நிற்கவில்லை. அங்கிருந்துவெளியேறுவது நல்லதுபோல் தோன்றியது. அவனுக்கு  அவன் கனவுகள் சிதைந்தன. மெல்ல வெளியேறினான்.

"இது என்ன விசித்திரப்பிரகிருதி!" என்றூ கூறிக்கொண்டேபெருமூச்சு விட்டாள் அந்தப்  பாதாளமோகினி. ஆனல், சீக்கிரமே அறைக்கதவு திறந்து மூடியது.பாலச்சந்தர் சர்வ சகஜமாக உள்ளே நுழைந்தான்.

இரவு 11 மணியளவில் பாலச்சந்தர் அன்று சிவகுமாரைச் சந்திப்பதற்குஅவன் அறைக்குச் சென்றான். சிவகுமார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் எழுதிய அற்புத ஓவியமோகிழிந்து கிடந்தது. அழகின் தெய்வீகத்தில் அவன் கொண்ட் நம்பிக்கை சிந்தைது போய்விட்டது என்பதைஅது காட்டியது.

சிவகுமார் இப்பொழுது யதார்த்த உலகிற்கு வந்தான். அங்கேஅழகிற்கும் அலங்கோலத்திற்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. அவன் குழம்பிப் போய்விட்டான்!உலகை அவன் இதுவரை நோக்கிய நோக்கு கோணல் நோக்குப் போல அவனுக்குத் தோன்றியது.

அவன் அயர்ந்து தூங்கிப்போயிருந்தான். அவனைக் குழப்ப வேண்டாமெனபாலச்சந்தர் வெளியேறிவிட்டான்.

ஒரு வாரங்கழித்து சிவகுமாரைக் கண்ட அவனது நண்பர்கள் அவனைஅடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம் அவன் சிலை உடை எல்லாமே மாறிப்போயிருந்தன - ஏன்அவன் பெயர்கூட மாறிப்போய்விட்டது. ராமலிங்கம் என்றே அவன் தன்னை வர்ணித்துக் கொண்டான். மொத்தத்தில்அவன் இப்போது கலை மணம் வீசும் கற்பனத் தேவ உலகில் வசிக்கவில்லை. பாதாளத்திற்கு போய் வந்ததின்பயனாக அவன் இப்போது பூவுலக வாசியாக மாறிவிட்டான்!

[நன்றி: சுதந்திரன் 01.04.1951

உதவி வந்தது!

- அ.ந.கந்தசாமி -

அழகானவீடுகளில் அலங்கார வாழ்வு நடத்திய பெரிய மனிதர்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது. தமது வலிவிழந்தமுதுகின்மேல் ஏறியுட்கார்ந்து ஆதிக்கஞ் செலுத்திவந்த சோம்பேறிக் கும்பலுக்கு 'அரோகரா' கூறி முதுகைநிமிர்த்தி எழுந்துவிட்டார்கள், ஏழை மக்கள். எங்கும் புரட்சியின் பெருந்தீ கொழுந்து விட்டெரிந்தது.அதிலேபழய நிலச்சுவான்தார்களின் பவிசும்,பட்டயமும் பஸ்மீகரித்தன. ஆனால் அந்த அக்கினியில் இருந்து நவஜீவனம்என்ற அற்புதக் குழந்தை ஜனித்தது. அந்தக் குழந்தையின் மோஹனத்திலே மூழ்கி மயங்கி ஆனந்தித்தனர் மக்கள்.ஆனால் இவ் அக்கினி குமாரனைக் கண்டு கொள்ளிக் கண் பாய்ச்சிய கொடியோர்களும் இல்லாமல் இல்லை.அவர்கள் அதன் கழுத்தை நெரித்துக் கொல்லுவதற்குத் தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தனர்.......

இந்த நிலைமையில்தான் லேயாங் நகரம் அப்போது விளங்கியது.சீனாவின் ஒரு கோடியிலே புதுவாழ்வென்னும் சிசு அப்போதுதான் அங்கு ஜனித்திருந்தது. ஆனால் மணிபோன்றதன் சிறு கண்களை இன்னும் அச்சிசு திறக்கவில்லை. தன் பூங்கால்களை உதைத்து, தளிர்க்கரங்களை அசைத்துவிளையாட ஆரம்பிக்கவில்லை குழந்தை.

இருந்தபோதிலும் குழந்தை பிறந்ததும் மகிழாத தாய் உண்டோ?நகரத்தாய் ஆனந்தநகரா முழக்கிக் கொண்டிருந்தாள். அவள் நரம்பொவ்வொன்றிலும், இசைகதித்து விம்மும்வீணையின் நரம்புபோல, சந்தோஷம் துலங்கித் ததும்பிக்கொண்டிருந்தது. அவளை ஆடைபோல் சுற்றியிருந்தநகரச் சுவரிலே இந் நவீன குழந்தையின் ஜனனத்தை உணர்த்தச் செங்கொடி பறந்து கொண்டிருந்தது.

காலைக் கதிரவனின் பொன்னொளி அதன் மீது பட்டுச் சிதறுகையில்அச்செங்கொடி அக்கினிப் பிளம்புபோல அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஆம், அது அக்கினிப் பிளம்புதான்.துஷ்ட்டர்களைக் கொடுங்கோலர்களைச் சுட்டெரிக்கும் அக்கினித் தீ! முன்னேற்றத்தை, இன்பத்தை, புது வாழ்வைமுன்னின்று வரவேற்கும் ஆராத்தியின் செஞ்சுடர் அது!

நகர மக்களுக்கு செங்கொடி நம்பிக்கையை, நல்வாழ்வின் நறுமணத்தைஉணர்த்தியது. கமிண்டாங் படைகளுக்கும், நிலச் சுவான்தார்களின் படைகளுக்கும் முன்னே தம் படை எதிர்த்துநிற்கவல்லதா என்ற அச்சம் அவர்களை நடுங்க வைந்தது. ஆனால் அவர்களுக்கொன்று மட்டும் தெரியும். தாம்புரியப் போகும் போர்  ஒரு சிலரின் நன்மைக்காக் நடத்தப் போகும் போரல்லவே? தங்கள் ஒவ்வொருவரதுநன்மைக்காகவும் நடக்கும் போராட்டம்! எனவே ஷியாங் கே ஷேக்கின் கூலிப்பட்டாளம் போல் தாம் விளங்கமாட்டார்கள். அசகாய செயல்களெல்லாம் செய்வதற்கு வேண்டிய ஆவேச உணர்ச்சி அப்படியே பொங்கிப் பரிமளிப்பதுதிண்ணம். எனவே தோல்வியுற மாட்டார்கள் என்ற என்ணம் பசுமரத்தில் ஆணிபோல அவர்கள் உள்ளத்தில் தைத்திருந்தது.

தாம் கூட்டாக நடத்தும் போர் எப்படிப்பட்டதாயிருக்கும்? புதிதாகப்பெற்றெடுத்த புது வாழ்வுக் குழந்தை. பல மாதங்களல்ல; ஆண்டுகளாகப் பாடுபட்டு தாங்குதற்கரிய வலியோடுபெற்றெடுத்த அருமைச் சிசு. ஆகவே தாம் நடத்தும் போர் நகரத்தாய் தன் சிசுவைக் காப்பாற்றிக்கொள்ளநடத்தும் போராக இருக்கும்.  கொடிய கழுகின் வாயிலிருந்து தன் சின்னஞ்சிறு குஞ்சுகளைக் காப்பாற்றகோபத்துடன் முன்னிற்கும், தாய்க் கோழியின் உக்ரோஷம் அப்போராட்டத்திலே பொங்கி நிற்கும். ஆனால்அதுமட்டும் போதுமா?

கோழி எவ்வளவு சீறினாலும் கொத்தும் கழுகு விட்டுச் செல்லுமா?கை கொடுத்துதவ 'செஞ்சேனை வரும். செஞ்சேனை வரும்' என்று ராப்பகலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்மக்கள். சூ-டே என்ற மகா வீரன் தலைமையிலே ஏழை மக்களின் பக்கத்திலே நின்று கமிண்டாங் கொள்ளையரைஎதிர்த்து நின்ற செஞ்சேனை பற்றி, அதன் ஒப்பற்ற திறமைகளைப்பற்றிப் பலவிதமான கதைகளை அவர்கள்கேட்டிருந்தார்கள். ஆகவே அது எப்போது வரும், விடுதலைப் பட்டாளம் வருவதெப்போ என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர் மக்கள். அதன் வரவுக்கு மங்கள கீதம் பாடுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர் மாந்தர்.கடைசியில் ஒரு நாள்........

நகரத்தைக் காவல்காத்த காவலாளர்கள் தூரத்திலே காற்றில்அலையும் செங்கொடிகளோடு புழுதி கிளப்பிக்கொண்டு வருகின்ற செம்படையைக் கண்டார்கள். நகர மக்கள்உள்ளம் அவர்களைக் கூவிக் கூவி அழைத்தது. மதிலில் பறந்த செங்கொடியோ 'வா வா' என்று காற்றில்துடி துடித்து வரவேற்றது. செஞ்சேனையின் வரவு!  அச்சேதிக்கு சீனப் பாலவைனங்களில் துள்ளிப்பொங்கும் சூறாவழிக்கில்லாத வேஹம் உண்டாகிவிட்டது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆனந்த வெள்ளம் அணையுடைத்துப்பாய்ந்தது. செஞ்சேனை! செஞ்சேனை! விடுதலைப் பட்டாளம்! தொழிலாள விவசாயிகளின் பட்டாளம்!ஏழை மக்களின் உயர்வையே தன் லட்சியமாகக் கொண்ட மண்ணாசை அற்ற மகா பட்டாளம்! இதுவே யாவர் வாயிலும் விளங்கிய சொற்கள். இந்த அபூர்வபடையைக் கண்கொண்டு பார்க்கும் பாக்கியத்தை அடையநகரின் கோணங்களில் எல்லாம் உறைந்து கிடந்த பொதுமக்கள், வயோதிபர் பெண்கள், சிறுவர் எல்லோரும்குவிந்து நின்றனர் நகரவாயிலிலே.

சூ-டே கம்பீர நடைபோட்டு முன்னே வர நகரத்துள் நுழையஆரம்பித்தது செம்படை. வானமதிரக் கோஷங்கள், சந்தோஷ ஆர்ப்பரிப்பு. சூ-டேயை முன்னின்று வரவேற்றாள்ஒரு பெண். சீனாவில் மலர்ந்திருந்த புதிய வாழ்வுக்குச் சான்று கூறுவது, போல் இருந்தது ஒரு பெண் முன்னின்றுவரவேற்பது. அவள் பெயர் காங். சீனப்பெண்களின் பழய பழக்கங்கள் அவளிடம் இல்லை. நீண்டு தொங்கும்கூந்தலுக்குப் பதில் கத்தரிக்கப்பட்ட தலைமயிர். இரும்புச் சப்பாத்தணிவதால் குறுகிச் சிறுத்திருக்கும் பாதங்களுக்குப்பதில் பூரண வளர்ச்சியுற்ற இயற்கையான பாதங்கள். நயனம் கோணிய, நாணப்பார்வைக்குப் பதில் நேரியவீரப்பார்வை.

காங்கும் சூடேயும் சந்தித்தனர்.  உடல்கள் மட்டுமல்லகணத்திலே இரண்டுயிர்களும் சந்தித்துச் சம்பாஷித்து ஒன்றை ஒன்று புரிந்து கொண்டன. பிரிய முடியாதஓர் பிணைப்பிலே ஒன்றிக் கொண்டன அவர்களது அந்தரங்க ஆசைகள். சூடேயில் ஆண் குலத்தின் ஈரமும் அவ்ஈரத்திற் பிறந்த வீரமும் உருவெடுத்து விளங்கின. காங்கிலோ பெண்ணின் பெருமையாவுமே உறைந்து கிடந்தது.ஏழைகள் சார்பிலே - ஒடுக்கப்பட்டார் சார்பிலே பேசிய வீரம் அவள் உள்ளத்திலே ஊற்றெடுத்துப் பிரவகித்தது.

* * *

லெயாங் நகரம் பாதுகாப்பில் நெடுநாள் இருக்கவில்லை. மக்களின்பந்தோபஸ்து வாழ்வு நீடிக்கவில்லை. கமிண்டாங் காடையர்களின் அட்டஹாசம் ஆரம்பித்தது. குஞ்சுப்பறவைகளைக்கொத்தத் திரியும் கழுகு போலவே தலைக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது ஷியாங்கின் ராணுவ பலம்.மெல்லமெல்லமாகத் தாக்குதல்களும் ஆரம்பித்தன. பசி, பட்டினி, சாவு, பயம் எல்லாம் வேகத்துடன் நகரமாந்தரைப் பற்றிப் படர்ந்து கவ்வின. ஆனால் உரிமைப் போருக்கெழுந்த அவர்கள் அகராதியில் 'சரணாகதி'என்ற வார்த்தை மட்டும் இல்லை. கடைசிவரையில் போரிடக் கங்கணங் கட்டி விட்டார்கள். செஞ்சேனையோபக்கத்திலே கைகொடுத்து உதவிக் கொண்டிருந்தது.

ஆனால் கமிண்டாங் படையின் அடிகள் பலமாக விழத்தலைப்பட்டன.அதற்கு அன்னிய ஏகாதிபத்தியங்களின் மர்மக் கைகள் ஆயுதபலத்தை அளித்தன. தோல்விக்கு மேல் தோல்வி.செம்படையினர் வீழ்ச்சியின் ஓரத்திலே நிற்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் போராடி வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.போதாதற்கு நகருக்கு உணவு வரும் இடங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு விட்டன.

இங்ஙனம் அழிவு பயமுறுத்தப் பயமுறுத்த ஆக்ரோஷம் பொங்கியதல்லாமல்அச்சம் உண்டாகவில்லை. போராவது போர்....! ரத்த வெள்ளம் தண்ணீர்ப்பிரவாஹம் போல் பாய்ந்தது.வெற்றியின் தூரக்காட்சி வெளிப்பட வெளிப்பட கமிண்டாங் படைகளுக்கு கரை கடந்த வெறியும் உத்ஸாகமும்.அதன் முன்னே செம்படை சிதறிச் சின்னாபின்னமாகி ஒழிந்து அழிந்து மரணத்தின் வாயிலிலே வீழ்ந்துகொண்டிருந்தது.......

ஆம். இனி நம்பிக்கை இல்லை. லெயாங் வெறுக்கப்பட்ட முதலாளிகளுக்கும்அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கும் கொண்டாட்ட ஸ்தலமாகப் போகிறது.

சீனத்தின் சின்னஞ்சிறு முதலாளிகளும், சீன் நகரங்களில்வியாபாரம் எல்லாவற்றையும் அழுங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பணமூட்டைகளும், ஜப்பானியகெய்ஷாப்பெண்களோடு ஆடிப்பாடிக் குடித்துக் குதூகலித்து வாழப்போகும் பாவபூமி!- மறு புறமோ ஏழைகள் எழும்பைஎருவாக்கிப் பட்டினிப் பயிர் வளர்க்கப் போகிறார்கள்!

ஆனால் என்ன செய்வது? லெயாங்கைக் காப்பாற்றினோம் என்றுசாக முடியவில்லை. ஒரு உத்தமக் கொள்கைக்கு உயிர் விட்டோம் என்றாவது சாவோம் என்று செம்படை போராடுகிறது.

கமிண்டாங் தளகர்த்தர்கள் வெற்றி மதுவைக் குடித்து வெறிகொண்டு விட்டார்கள். எக்காளமும், ஏளனமும் கலந்த சிரிப்பு அவர்களின் முகத்திலே! ஆம், அவர்களின்பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அல்லவா போராடுகிறது? சமாளிக்க முடியவில்லை. வீழ்ந்து கொண்டிருக்கிறதுசெஞ்சேனை!

நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் அந்நேரத்திலே, யுத்தத்தின்பேரொலியின் ஊடே வாத்திய சங்கீதம் ஒன்று பொங்கி ஒலித்தது. ஆஹா,! இது எங்கிருந்து வருகிறது?செஞ்சீனாவின் போர்க் கீதத்தை அழகுற இசைக்கும் வாத்திய சங்கீதம்! அதைத் தொடர்ந்து பட்டாள அசைவின்பேரொலியொன்று. ஆயுதந் தாங்கிய லொறிகளின் ஆர்ப்பாட்டச் சபதம்.

செம்படையினர் சப்தத்தின் திசையை நோக்கினர். கமிண்டாங்க்படையினர் கண்களும் திரும்பின.

தூரத்து வான வளையத்தண்டை பிரமாண்டமான மக்கள் கூட்டம்அசைவது மங்கலாய்த் தெரிந்தது.....

ஆம், இதைப் போன்ர பெரிய சேனையைக் கண்டதில்லை. சப்தங்களின்கலவையை நோக்கினால் ஆயுதத்திலும் இதைப் போன்ற சைனியம் ஒன்று சீனத்தில் இதுவரை இல்லை.....

மெல்ல மெல்லக் காட்சி தெளிவடைந்தது. அரிவாள் அம்மட்டிகுறுக்கிட்ட செங்கொடுகள் கடல் அலைகள் போல அந்த ஜனக்கடல் மீது தெரிந்தது.

ஆம்! செம்படை! செம்படை! எங்கிருந்து வந்தது பிரமாண்டமானஇச்செம்படை! கமிண்டாங் சேனைகள் கலங்கின. அவர்கள் முகத்திலே பயத்தின் முத்திரை. சிந்தனை செய்யநேரம் இல்லை. அவர்களின் அழிவு நீச்சயமாகி விட்டது! வேறென்ன?

கண்ணை மின்ன விழிக்கும் நேரத்தில் ஓட்டம் பிடித்தனர்.குதிகால்கள் பிட்டத்திலே தட்டும்படியான பெரும் ஓட்டம். ஆயுத லொறிகள் எல்லாம் மணிக்கு அறுபது மைல்வேகத்தில் வெறியோட்டம் தொடங்கின. ஓட்டம்!..ஓட்டம்!...ஓட்டம்!...

கமிண்டாங் சேனை ஓடி விட்டது. ஒரு கண்டம் தப்பித்தது.செஞ்சேனை தங்களுக்கு உதவி கொண்டுவந்த புதுமைப் படையினரை  எதிர்கொண்டு வாழ்த்த காத்தநின்றது. "எங்கிருந்து வந்தது இத்தகைய சேனை!" என்று அவர்களால் யூகிக்க முடியவில்லை. 'கமிண்டாங்க்சேனைதான் ஷியாங் கை ஷேக்கை விட்டுப் பிரிந்து எம்முடன் சேர வருகிறார்களோ" என்றெண்ணினர் சிலர்."இல்லை என்றால் இதுவென்ன?" என்று தயங்கினர். வேறெதுவும் அவர்களால் சிந்திக்க முடியவில்லை.

* * *

இரு சேனைகளும் எதிர் ஊன்றின. செஞ்சேனையை நோக்கிவந்து கொண்டிருந்தது இப்புதிய செஞ்சேனை.

இரு செஞ்சேனைகளும் எழுப்பும் வெற்றிக் கீதம் ஒன்றுடன் ஒன்றுசங்கமாகிவிட்டன. வாத்திய சங்கீதம் பேர் இரைச்சலாக முழங்கிற்று.

திடீர் நிசப்தம். சப்தங்கள் ஓய்ந்தன. இரு சேனைகளும் அசையாதுநின்றன. செங்கொடிகள் மட்டும்தான் அசைந்து கொண்டிருந்தன. ஆனால் இது என்ன ஆச்சரியம்!  புதியசேனை சேனை போலவே தெரியவில்லையே! சாதாரண ஜனக்கள், பெண்கள்,வயோதிபர், சிறுவர்கள் எல்லோரும்கூடிய வெறும் ஜனத்திரளாய் அல்லவா இருக்கிறது!

செம்படையினர் திகைத்தனர். புதிய செம்படையில் இருந்துஒருவன் முன்னே வந்தான்.

"செஞ்சேனை தோற்றுக் கொண்டிருக்கும் சேதி எங்கள் காதில்ஈட்டிபோல் பாய்ந்தது. கிராமம் முழுவதையும், அயல் கிராமங்களையும் ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டோம்.அப்பொழுது ஒரு யோசனை. எல்லாருமாகச் சேர்ந்து செங்கொடிகளோடும் சேனையின் சங்கீததோடும், ஆயுதலொறிகளின் சப்தத்தை உருவாக்க தகரங்களை உருட்டிக் கொண்டும் செல்வோம் என்ற யோசனை. பலித்துவிட்டது. பிரமாண்டமான சேனை என்று எண்ணி விட்டனர் கமிண்டங் கொள்ளையர்கள். வீரர்களின் ஓட்டம்வெகு வேகமாயிருந்தது. அதை மெச்ச வேண்டும்! நம்து படையையும் நகரத்தையும் நாம் காப்பாற்றி விட்டோம்"என்ற வார்த்தைகள் அவன் வாயில் இருந்து உணர்ச்சியோடு பொங்கின. அவ்வளவுதான். செம்படையினர் கண்களில்நீர் துளிர்த்தது. ஒவ்வொருவரும் தம் கைக்குட்டையைக் கண்ணருகில் கொண்டு சென்றனர். மக்களின் இத்தகையஒத்துழைப்பு இருக்கும் போது எம்மை வெல்ல யாரால் முடியும் என்ற கம்பீரமும், மிடுக்கும் அவர்கள் உருவங்களிலேபாய்ந்தது.

எதிர்காலம் என்றுமில்லாத வெற்றிகளை அவர்களுக்கு வைத்திருப்பதனைஉணர்ந்து கொண்டார்கள் வீரர்கள்!

* * *

சீக்கிரமே சந்தோஷ ஆரவாரம் நகரத்தை அப்படியே அதிரவைத்துக் களேபரப்படுத்தியது. நகரச் சுவரிலே செங்கொடி புதுயுகக் காலையின் செவ்வானைப் போல, அலைவீசிக் கொண்டிருந்தது. பிடுங்கப் படாது அதனைக் காப்பாறி விட்டதற்காக மக்கள் உள்ளத்திலோ ஆனந்தவெள்ளம் அலை அடித்தது. செங்கொடிக்கு உண்டோ அழிவு என்று வாழ்த்தினர் அவர்கள்!

{பாரதி இதழிலிருந்து. கே.கணேஷ், ராமநாதனைக் கூட்டாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த ஈழத்துச் சிற்றிதழ் பாரதி)

வழிகாட்டி!

- அ.ந.கந்தசாமி -

சமுதாயத்தைமூடி இருக்கும் பகட்டை நீக்கி, உண்மை நிலைகளை அம்பலப்படுத்தும் ஒரு புதுமை எழுத்தாளன் போல, இரவின்இருள் திரையை நீக்கி உலகின் சோக நாடகத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தான் உதயசூரியன். அவன் ஒளியில்முதலில் உயர் மரங்களின் பொன் கொம்புகள் அசைந்தாடின. மாரிக் காலம். ஆனால் வசந்தத்தின் செந்தளிர்கள்பெற்றவை போல் மரங்களெல்லாம் அவன் மந்திர ஸ்பர்ஸத்தில் மாயஞ் செய்தன. இரவு பெரு மழையிலே குளித்திருந்தஉலகம் ஒரு புதுமை எழில் கொண்டு ஸ்நானம் முடித்து வந்த ஒரு கன்னிப் பெண்ணின் அழகு கொண்டு விளங்கிற்று.ஆனால்போலிக் கலைஞர் போல உலகை ஒரு முகப் பார்வையில் சித்தரிப்பவனல்ல சூரியன். நாட்டைச் சூழ்ந்துள்ளசகதி, சேறு, வறுமை, துன்பம் எல்லாவற்றையும் எடுத்துக் காட்ட ஆரம்பித்தான். அந்தக் குட்டிப் பட்டணத்தின்செல்வ மாளிகைகளின் பக்கத்திலே ஒடிந்து கிடக்கும் குடிசைகளையும், குமைந்து கிடக்கும் ஏழைகளையும் தன்ஒளிக்கரத்தினால் சுட்டிக் காட்டினான். இரவு மழையினாலும் புயலினாலும் சின்னா பின்னப் படுத்தப் பட்டுசிதறிக் கிடந்த ஓலைக் கூரைகளையும், , அவற்றைக் கொண்ட வீடுகளின் சில்லிட்ட ஈரத்தன்மையயும் அவன்கதிர்கள் கெளவிப் பிடித்தன.

அப்படிப்பட்ட ஒரு ஈரத்தெருத் திண்ணையில் தான் இன்றும் நித்திரைக்கூட்டில் அடைபட்டுக் கிடந்தான் அந்தக் கபோதி. இரவு முழுவதும் கூதிரின் வெட வெடக்கும் சில்லிட்ட குளிர்.வருண தேவனின் வெறியாட்டுக் கடுமையாயிருந்தது. இடியின் பயங்கர மத்தளமும், அதற்கிசைய மின்னல் மோஹினியரின்நடனலாகவமும், வான் மேடைக்குக் கோர அழகொன்றை ஊட்டின.
 
திண்ணையில் கொட்டும் மழையின் சுக விசாரணை. விடியுமட்டும்'ஏகாதேசி'. மழை ஓய்ந்த பிறகு தான் அந்தகனுக்கு நித்திரை வந்தது. விடிவெள்ளி கிழக்கிலே விழித்தெழுந்துவிட்டது. கோழிகள் கூவ ஆரம்பித்து விட்டன, அவன் துயில் போகும்போது. அயர்ந்து ஆறுதலான நித்திரையில்ஆழ்ந்து விட்டான். அவன்.

* * *             

காலையில் வீட்டுக்காரர் விஸ்வநாதர் திறந்ததும் கண்ணெதிர்ப்பட்டகாட்சி இது தான். கூனிக் குறுகிப் படுத்திருக்கும் வற்றல் கபோதி. அருகே அவனைப் போலவே வளைந்துமெலிந்த தண்டு. அவனது பிரியாத பிரிய நண்பனான ஒரு கோல்- அவனுக்கு  வழிகாட்டி நடத்தும்அனபன் - ஆம், சொல்லப் போனால் கண்ணற்ற அவனுக்குக் கண்ணாய் விளங்கிய கழி - கிடந்தது. தலைப்புறத்தில் ஒரு தகரம், சில மூட்டை, முடிச்சுகள்- இவைதான் அவனது சர்வ சொத்தும்.

இன்றுமட்டுமல்ல அவர் கண்ணெதிரில் அவன் காலையில் பட்டது.எத்த்னையோ தடவை அவன் முகத்தில் விழித்திருக்கிறார் அவர். ஆனால் அவன் அப்பொழுதெல்லாம் கைக்கெட்டாததூரத்தில் வீட்டின் எதிரேயிருந்த தேநீர்க்கடை அண்டை காட்சி அளிப்பான். ஆனால் இன்று தன் வீட்டுத் திண்ணைய்யில்! பக்கத்தில்!

எரிமலை வெடித்தது போன்ற ரெளத்திராகரமான ஆத்திரம்அவருக்கு. "காலை சகுனமாகப் பள்ளி கொள்ளும் கபோதி!" அவரால் தாங்க முடியவில்லை. எள்ளும் கொள்ளும்வெடித்தது அவர் முகத்தில். தன் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு வாய்க்கு வந்த செந்தமிழில் திட்ட ஆரம்பித்தார்அவர். கையில் அகப்பட்ட குச்சி ஒன்றை அவன் மீது விட்டெறிந்தார் கோபத்தில்.

இயற்கையில் விஸ்வநாதர் சாந்த சொரூபி அல்லாவிட்டாலும்குரூர சுபாவம் படைத்தரென்று கூற முடியாது. இன்றைக்கு அவர் உள்ளம் ஆத்திரத்தில் ஏற்றுண்ணும் ஒரு தெப்பம்போல் இருந்தது. காரணம் அவர் வயிற்றுப் போராட்டத்தோடொட்டிய ஒரு சேதி.

அவர் ஒரு கல்யாண தரகர். சென்ற இரு மாத காலமாக அவர்ஊரில் எந்த ஜதையையும் சேர்த்து வாழ்க்கைப் படகில் ஏற்றவில்லை. மன்மதன் தன் கரும்புவில்லில் புஷ்பபாணங்களைத் தொடுத்து ஜதை சேர்ப்பதாக கஞ்சா மயக்கத்தில் கவிஞர்கள் கூறுவது வழக்கம். அதில் சரிபிழை தெரியாதவருக்கும் ஒன்று மட்டும் தெரியும். விஸ்வநாதர் போன்ற தரகர்கள் வானத்தை வில்லாகவளைக்காது நடத்தப்படும் கல்யான வாணிபம் அபூர்வம்.

அவரது கண்ணியில் ஒரு மாத காலமாக ஒருவரும் சிக்கவில்லை.இரண்டு தினங்களின் முன்பு தான். ஒரு 'பெரிய' இடத்தில் மோப்பம் பிடித்திருந்தார். இது விஷயத்தில்விஸ்வநாதர் கை தேர்ந்த வேட்டை நாய் என்று கூற வேண்டும். அது சம்பந்தமாகத் தன் கண்ணியை விரித்துஏதாவது அகப்படுத்துவதற்கு ஆயத்தமாக சில முக்கியஸ்தர்களைக் காண்பதெற்கென்றே காலையில் பஞ்சாங்கம்பார்த்து ராகு காலத்தின் முன் கிழம்பியிருந்தார் அவர்.

அந்த வேளையில் குருடன் சகுனமாகக் காட்சி அளித்தால்...?

வீசி எறிந்த குச்சி உடம்பில் பட்டதும் அவன் விழித்தான்.விழிகளல்ல. அவைதான் நிரந்தரமாக மூடி விட்டனவே! அவன் உணர்வுகள், கோபதாப, பசி துக்கங்கள்விழித்தன. காதூடே வைரம் போல் ஊடுருவி அறுத்துச் சென்றன கர்ணகடூர வசை மொழிகள்! நீண்ட நேரநித்திரை கொண்டு விட்டதை உணர்ந்து அவசர அவசரமாகத் தடுமாறி எழுந்தான். அவன்.

விஸ்வநாதர் அவ்வளவுடன் நிற்கவில்லை...'டாங்க்' என்றசப்தம்...அருகிலிருந்த கழி ஆகாயத்தில் பறந்து சென்று வீட்டுத் தகரக் கூரைமேல் மோதி நாதம் எழுப்பிற்று.சப்தத்தின் உண்மை அர்த்தம் புரியவில்லை குருடனுக்கு. எழுந்து நடப்பதற்காகக் கழியை அங்குமிங்கும் தடவித்தேடினான் அவன்.

வேகத்தோடு நுரை கக்கி வீசி வந்த ஆத்திர அலை மோதிவெடித்து விட்டதால் விஸ்வநாதருக்குத் திருப்தி. சீறிக் கொண்டே போய் விட்டார் அவர்.

* * *

முகந்தெறியாத காரிருளில் வெளியே செல்வதற்கு அறையின்வாயிலைத் தேடி நடக்கும் கைகள் போல, தடுமாறியும் அவசரமாகவும், அலைந்தன கபோதியின் கரங்கள்.ஆம. அவன் வாழ்வு நிரந்தரமான ஒரு காரிருளில் தான் கழிகிறது. கன்னங்கருத்த சூன்யமான பேயிருள்!அதில் அவன் அப்படியே சொக்கி துக்க சொரூபமாக, நம்பிக்கை இழந்தவனாக, ஆகிவிடாது காப்பாற்றியதன் நண்பனைத் தான் ஆசையோடு தேடுகிறான் அவன். ஆனால், தேடுகிறான், தேடுகிறான் காணவில்லை!

இரண்டு மூன்று நிமிஷங்கள் நிலத்தைத் தடவித் தடவித் தேடியாய்விட்டது. காணவில்லை! இருந்தால் கைக்கு அகப்பட வேண்டுமே! காணாது போகவே அவனால் தாங்க முடியவில்லை.திகைத்தான். யாரோ சதிகாரர்கள், ஒருபோதும் உபகாரம் அல்லாது அபகாரம் செய்வதறியாத தன் நண்பனைநீண்ட வருட காலமாக அவனை விடாது தொடர்ந்த உண்மைத் தோழனை தன்னிடமிருந்து பிரித்து விட்டார்கள்என்பதை உணர்ந்தான் அவன்.

தன்னைத் திட்டிய பிரமுகராகத்தான் இருக்க வேண்டுமென்பதையூகித்தறிந்து கொண்டான்.  அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. கண்ணோரத்தில் ஒரு கண்ணீர்த்துளி வெடித்தது. உள்ளத்தின் பொருமல்தான் அவ்வெடிப்பினால் பாய்ந்தது போலும்.

* * *

அவன் உயிரின் ஓர் அம்சம் அந்தக் கழி. அது பிரிந்தால்தன் வாழ்வின் கொடியே துவண்டு வாடிவிடும் என்றெல்லாம் சில சமயம் அவன் எண்ணுவதுண்டு. நன்றி அறிதலோடுஅதனை அணைத்து முத்தம் இடுவது கூட உண்டு. இன்று அது பிரிந்து விட்டது. உள்ள வானில் சோக கருமேகம்கவிந்து முகத்தையே இருளடையச் செய்து விட்டது.

அந்தக் கழி அவனோடு பொருந்திய வரலாறே அதிசயம்.அதன் பின்னே மனிதனின் அன்புணர்வுச்சியின் காவியம் இருந்தது.

ஆறு வருடங்களின் முன் திருவிழாத் தினமொன்று. அன்றுதான்யந்திர யமனொன்று - ஒரு மோட்டார் லொறி- அவன் கண்களைக் காணிக்கையாகப் பறித்துப் பெற்றுக் கொண்டது.விபத்து நடந்த  வீதியில் ஒரு வாலிப வைத்தியர் அவன் மீது இரக்கம் காட்டி இலவசமாக அவன்கண்ணிலுள்ள புண்ணை சொஸ்தப்படுத்தினார். அந்த வைத்தியரின் இனிய வார்த்தைகள், மறக்க முடியாத உயர்ந்தசங்கீதம் போல, இன்னும் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. அவர் முகம்! - அதனைத் தான் அவனால்பார்க்க முடியாதே!

கண் சொஸ்தமான பின்னர் கழியையும் அவர்தான் உதவினார்.உண்மையான பதிவிரதை ஒருவளைப் போல அது அவனோடு விடாது தொடர்ந்தது. கணங்கூடப் பிரிந்ததில்லை.பார்க்கச் சகிக்காத பாவிகள் அதனிப் பிரித்து விட்டார்கள். அது எங்கே, எங்கே என்றலறிய துள்ளம.

* * *

மாலை மயங்கி விட்டது. தெரு லாம்புகள் மினுங்க ஆரம்பித்தன.வீதியில் ஜனப் புழக்கம் குறைந்தது. சப்தங்கள் குறைந்தன.

சேர்ந்த சல்லிகளை எடுத்து எண்ண ஆரம்பித்தான். போவதற்காயத்தமாகினான்குருடன். ஆனால் வழக்கம் போல் அவன் நண்பன் வந்து விட்டான். இருவரும் கதைக்க ஆரம்பித்தார்கள். இவ்இருவருள்நட்பு வளர்ந்ததே ஆச்சரியம். ஒருவன் ஐம்பதின் ஓரத்தைத் தொட்டு விட்ட வயோதிபக் கபோதி. மற்றவன்ஒன்றுமறியாத பத்து வயதுச் சிறுவன்.

இவை வேற்றுமைகள். ஆனால் ஒற்றுமைகள் பல இருந்தன. பிச்சையில்ஜீவிப்பவர்கள், அரைப்பட்டினி கிடப்பவர்கள், யாருமற்ற அநாதைகள் என்பன சில. இவ் ஒற்றுமை அடிப்படையில்தான்போலும் வேற்றுமையின் வேலிகளைத் தாண்டி இரு உள்ளங்களும் ஒன்றுபட்டு நட்பு ஜனித்தது.

இருவருள்ளும் சில்லறைக் கொடுக்கல், வாங்கல், பரஸ்பர உதவிகள்என்பன உண்டு. கிழவனுக்கு சிறுவன் மீது குழந்தை ஆச்சே என்று இரக்கம். சிறுவனுக்கு அவன் மீது வயோதிபராச்சே,குருடராச்சே என்ற அனுதாபம். இந்தப் பரஸ்பர நல்லெண்ணம் பற்றிப் படர்ந்து ஒருவிதப் பாசமாக இரு உள்ளங்களையும்இறுகப் பிணைத்தது. கொழுகொம்பற்ற கொடிகள் இரண்டு தோட்டத்தில், தம்முள் தாமே பிணைந்து படர்வதுபோல. 

கிழவன் உணர்ச்சி விம்மும் குரலில் தனது அன்றைய அபாக்கியஅனுபவங்களைக் கூறினான். கண் இழந்ததை விட கழி இழந்ததால் தான் பட்ட துன்பம், அது தனக்குக் கிடைத்தவரலாறு, அதை உதவிய வாலிப வைத்தியர் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் ஒன்றன்பின்னொன்றாகக்கூறி வந்தான்.

சிறுவன் உள்ளத்தை அது தொட்டது. "வருத்தப்படாதே. நான்இன்னோர் கழி நாளைக்குத் தருகிறேன்" என்றான் அவன். எப்படியாவது கிழவனுக்கு ஒரு நல்ல கழி பெற்ருக்கொடுத்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அவன். 

கிழவனுக்குத் திருப்தி ஏற்பட ஆரம்பித்தது. "அதையும் இந்தமாதிரி யாராவது பாவி எடுத்து வீசி விடாதிருக்க வேண்டும்" என்று கூறிக்கொண்டான் அவன்.

இதைக் கேட்டதும் மின்னல் போல் ஒரு யோசனை சிறுவன் உள்ளத்தில்வீசி அடித்தது. துடிதுடிப்போடு அவன் சொன்னான்:" அப்படியானால் நானே வழிகாட்டியாய் இருக்கிறேனே!என்னை யாராலும் தூக்கி வீச முடியாதல்லவா?" என்றான் அவன். "அது மட்டுமல்ல, வீதி எல்லாம் சுற்றிப்பணம் சேர்ப்பதும் முடியும். இருவரும் பங்கு போட்டுக்கொள்ளலாம்" என மேலும் தொடர்ந்தான்.

கிழவனால் நம்ப முடியவில்லை. தன்மீது இத்தகைய அன்புணர்ச்சிகொண்ட உள்ளமும் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டான். சிறுவனின் கள்ளங்கபடமற்ற அன்பு அவன் இதயத்தைக்கெளவியது. அவன் பேச விரும்பினான்.

முடியவில்லை. குரல் தளதளத்தது. "ஆகட்டும்!" என்று தன் தலையைஅசைத்தான் கிழவன்.

அவனது குருட்டுக் கண்ணின் சூன்யத்திலும் அன்பின் உணர்ச்சி மின்னல்ஒரு கணம் ஜொலித்தது போல் தோன்றிற்று. ஒருவிதப் பரவச உணர்வால் அவன் நரம்புகளில் எல்லாம் இன்பமின்சாரம் படர்ந்து சென்றது. "இழந்த வழிகாட்டிக்கு இது குறைந்த வழிகாட்டியல்ல" என்று கூறிக் கொண்டான்அவன். பொலபொலவென்று காற்றில் உதிரும் பூக்கள் போல கண்ணீர்த்துளிகள் அவன் கபோலத்தைத் தடவிச்சென்றன. அக்கண்ணீர்த்துளிகளில் துக்கத்தின் பாரமில்லை. ஆன்ந்த உணர்ச்சி நிறைந்திருந்தது.

இருவரும் மெளனமாக எழுந்தார்கள். சிறுவன் கையைப் பிடித்துவழிகாட்டத் தேநீர்க் கடைக்கு சென்றான் கிழவன். தேநீர் அன்று அமிர்தம் போல் இனித்தது. காரணம்:அதில் இன்பத்தின் மதுரமும் கலந்து கரைத்திருந்தது.

[ 'பாரதி' இதழிலிருந்து..]

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆங்கிலக் கட்டுரையொன்று....

From the pages of arthasastra!

Hoarders, Blackmarketeers & Smugglers!

By A.N.Kandasamy

"merchants and pirates were for a long time one and the same person. Even today mercantile morality is really nothing but a refinement of piratical morality." When Nietzsche, the German philosopher, uttered these words in the nineteenth century, he was actually echoing the views of that kautiliya of Arthasastra held on the same matter about 2,250 years before him. For Kautiliya in his Fourth Book of the Arthasastra entitled the Removal of Thorns has devoted the entire second chapter of the book to the protection of the people from the avarice and trickeries of the trading classes. In fact the name of the chapter itself is Protection against Merchants. By the use of the carefully chosen word "Protection," Kautiliya clearly suggests to us that he considers the merchant as an enemy of society and that people should be afforded protection against his onslaughts on them in the same way you provide protection against pestilences, famines and fire.

While one may hesitates to endorse either Kautiliya or Nietzsche completely in their considering the trader as an enemy of the people or a pirate, no one would disagree in classifying the hoarder, the blackmarketeer, the smuggler, the adulterator and the swindler who uses short weights and measures among them as No.1 enemies of the public and treat them as such. These public enemies become the more odious when they practice their hateful activities in the field of essential stuffs especially in the field of trade in food materials.

If one analyses recent history it would be found that it was the avarice of the hoarder and the blackmarketeer more than natural causes that had caused food shortages leading a severe famines in which people have perished like flies inmany countries. One such famine was the pre-independence famine of Bengal in India. This was an entirely man-made famine and one cannot fail to recall the depth of indignation with which the late Jawaharlal Nehru called upon the British Raj to hang the hoarders by nearest lamp posts.

No civilized nation can countenance of the hoarder with equanimity and , in fact, the severest punishment is called for the suppression of such enemies of the people, if society is to shrive and flourish. The profit motive throughout the ages had made man a heartless brute and he doesn't for a moment hesitate to indulge in the most unhumanitarian activities in his desire to accumulate wealth. Onle the strong arm of the law could stop him and that is why legislative enactments against the trickeries of the traders become necessary.

Many of us today believe that the penal laws enacted against the evil practices of the merchant classes are of recent origin and bequeathed to us by the imperialists who ruled over us during the last two or three centuries. But that is not so. A study of our ancient books on law and politics such as the Manudharma Sastra, Kautiliya's Arthasastra and Yagnavalkya's Dharma Sutra clearly shows us that penal enactments to punish hoarders, blackmarketeers, adulterators, smugglers, price-cheats and offenders in the field of weights and measures were enforced in an ancient India with great severity and efficiency. In fact even a system of price control existed with the superintenended of Commerce being in charge of it. Even the idea of a state trading corporation in local produce is discernible especially in the Arthasastra where its author as follows in his Chapter No. 6 of book No. 4.

"The merchandise of the king which is of local manufacture shall be centralised. Imported merchandise shall be distributed in several markets for sale. Both kinds of merchandise shall be favourably sold to the people."

Now coming to the other laws, Kautiliya has the following to say about the treatment that is to be meted out to hoarders of grain. This particular law is found in a chapter named "The remedies against calamities such as floods pestilences and Famines"

"During famines he may either do such works as are usually resorted to in a calamities; he may show favour by distributing either his collection of provisions, or the hoarded provision of the rich among the people... or the policy of thinning the rich by exacting excessive revenue (Kassanam). or causing them to vomit their accumulation may be resorted to."

The policy of price control is clearly explained by kautiliya in the Second Chapter of book No.4 where he also mentions the punishment to be meted out to the offender. The pertinent reference is as follows:

"The Superintendent of commerce shall fix aprofit of five fixed price of local commodities and ten per cent on foreign produce. Merchants who enhance the price or realise profit even to the extent of half a pana more than the above in the sale or purchase of commodities shall be punished with a fine ranging from 100 panas to 200 panas."

Here we find a very good feature of price control which is not found even in our modern laws and that is the forbidding of buying things at a lesser price of goods that come under the purview of the price control scheme. The absence of such provision in our laws leads to the malpractice of traders taking advantage of poverty-stricken people who are sometimes prepared to sell the things which they bought at a higher price for a lower price when they require spot cash for some emergency need of theirs. Here we see that the laws of ancient India were more comprehensive than the laws of our own 20th century.

But the ancient Indian laws reserved their highest finest for Blackmarketeers who usually bought and sold commodities at very much higher prices than those fixed by the Superintendent of Commerce under his price control scheme. This is what Kautiliya says about the punishment to be meted out to them:-
"Merchants who conspire either to preserve the sale of merchandise or to sell or purchase commodities at higher prices shall be fined 1,000 panas."

Manu Dharma Sastra too deals with the subject of Price cheats and has the following law included in it pages:_

"But that man who behaves dishonestly to honest customers or cheats in his prices shall be fined in the first or in the middlemost amercement."

Adulteration is another offence the avaricious trader practices upon his innocent customers. The following law pertaining to adulteration is found in the Arthasastra:'

"Adulteration of grains, oils, alkalis, salts, scents and medicinal articles with similar articles of no quality shall be punished with a fine of 12 Panas."

Manu too has law against adulteration. He says:-
"For adulteration unadulterated commodities and for breaking gems or for improperly boring them, the fine is the first or lowest amercement."
 

Regarding the offences in the field of weights and measures the Arthasastra makes the following points:-
The Superintendent shall charge 4 mashas for stamping weights and measures; a fine of 27 Panas shall be imposed for using weights and measures without proper stamping.

Differences of a Karsha on the balance called Tula is no offence. Difference of two Karshas shall be punished with a fine of 6 panas.

CHEATING of other kinds were also not forgotten. For example here is oneof Manu's laws:-
"He who sells for seed corn that which is not seed corn shall be punished with mutilation."

Another offence which was dealt great severity was smuggling of forbidden goods. Manu's law regarding smugglers is as follows:
"Let the king confisticate the whole property of a trader who out of greed exports goods of which the king has a monopoly or the export of which is forbidden."

The punishment for smuggling in Arthasastra isa littel different. It says:-
"Those who smuggle a part of merchandise on which toll has not paid as well as those who with a view to smuggle with one pass a second portion of merchandise after breaking open the bag shall forfeit the smuggled quantity and pay as much fine as is equal to the quantity so smuggled."

India is today a land of vegetarianism and has been so for many centuries. But this is only so, from the time of Ashokavardhana who enacted laws forbidding the slaughter of animals after having come into contact with the teachings of the Buddha. But during the time of Chandragupta and Kautiliya, things were different and Arthasastra devotes a whole chapter to the proper running of slaughter-houses and sale of meat of various description. Here are some of the sale of meat as found in Arthasastra:-

Butchers shall sell fresh and boneless flesh of beasts (MRGAPASU) just killed.
If they sell bony flesh they shall give an equivalent compensation (PRATIPAKAM).
If they is any dimunition in weight owing to the use of a false balance they shall give eight times the dimunition.
The flesh of animals which have been killed outside the slaughter house and rotten flesh shall not be sold. Otherwise a fine of 12 Panas shall be imposed.

The above sampling gives us an idea of the type of laws that existed in India to safeguard the interests of the people from the trickeries of the trades 2,200 years ago. Times have changed, but the traders attitudes have not. The fault is not in man, but in the system. Morality is a product of material environment and as long as private profit remains the main motive of trade neither hoarding nor adulteration will cease.
The traders of Kautiliya's times were not very much different from those of Nietzshe's time. Nor are they now.

Perhaps society would soon move forward to material environments wher private profit will cease to be the motive of trade and where a people's state would handle trade completely. In the meantime however, punitive laws alone can give some protection at least to the people against the evils of private trade.


Courtesy: Tribune, December 4,1965 (SriLanka)

 


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner