- கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், விமர்சகர், மணற்கேணி - போதி - தலித் ஆகிய இதழ்களின் ஆசிரியர், அரசியல் - சமூகச் செயற்பாட்டாளர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், கலாநிதி து.ரவிக்குமார் அவர்களின் 'வணங்கா மண் - முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான ஈழம்' என்ற நூலுக்கு, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் எழுதிய நூன்முகக் குறிப்பு. -
01
இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும்.
இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. மூன்று பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ (The Jaffna Peninsula) எனப்படுகிறது.
வெளிநாட்டார் பயணக் குறிப்புகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தீபகற்பம் என்றே அது குறிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவு, ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனும் தனது தலையை இந்து சமுத்திரத்தில் வைத்துப் படுத்திருப்பதுபோல் காட்சியளிக்கும். யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாக வழங்கப்பெற்றமையால் யாழ்ப்பாணம் எனப் பெயர் சூடியது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை, இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் தொடுக்கும் நிலப்பகுதியாக விளங்குவது, ஆனையிறவு. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, யாழ்ப்பாணம் தனித்த பல சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்திற்கு, இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடனான ஊடாட்டத்தினை விடவும், இந்தியாவுடனான அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டுடனான ஊடாட்டம் நெருக்கமானது. வரலாற்றுத் தொடர்ச்சியுடையது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் யாழ்ப்பாணத் தீபகற்பம் இந்தியாவின் மதறாஸ் மாகாணத்தின்கீழ் (Madras Presidency) அமைந்திருந்தது.
புவியியல் வரைபடத்தில் இலங்கைக்குத் தலையாக அமையும் யாழ்ப்பாணம், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலில் சென்னைக்கு மூளையாகத் திகழ்ந்தது. ‘நாவலர் காலத்திலும் அவரது மறைவிற்குப் பின்னரான ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்களிலும் சென்னை எழுத்தறிவுச் சூழலில் யாழ்ப்பாணக் குழுமமே ஆதிக்கம் செலுத்தியது’ என்பார், க.கைலாசபதி.