அஞ்சலிக்குறிப்பு: ஈழத்தின் மூத்த தலைமுறை படைப்பாளி கவிஞர் வி. கந்தவனம் நினைவுகள் ! - முருகபூபதி -
இலங்கை வடபுலத்தில், தென்மராட்சியில் விநாயகர் – சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1933 ஆம் ஆண்டு பிறந்து, தனது மாணவப் பருவத்திலேயே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி, பாடசாலை ஆசிரியராக , அதிபராக பணியாற்றி , பின்னாளில் தென்னாபிரிக்காவிலும் கல்விச்சேவையாற்றியிருக்கும் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள், கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் இலக்கிய மற்றும் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டவர்.
இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் மறைந்திருக்கும் கவிஞர் கந்தவனம் அவர்கள் தமது 91 வயதில் விடைபெற்றுள்ளார்.
அவருடன் எனக்கு நெருக்கமான இலக்கிய உறவு இல்லையாயினும், அவர் பற்றிய நினைவுகள் நெஞ்சில் பசுமையாக வாழ்கின்றது. நினைவுகளுக்கு மரணம் இல்லை அல்லவா..?
ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், எங்கள் நீர்கொழும்பூரில் இயங்கிய இந்து வாலிபர் சங்கத்தில் மூன்று நாட்கள் தமிழ் விழா நடந்தது. அப்போது அதன் அருகே அமைந்திருந்த விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) நான் ஐந்தாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.