ஈழமங்கை மு.நவகீதாவின் 'பேரிகை'' பற்றி... - அகணி சுரேஸ், கனடா -
உலக நூல் நாளில் ஒரு நூலினைப் படித்திட வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற ஏதுவாக அமைந்தது 'பேரிகை' என்ற நூல். ஈழமங்கை மு.நவகீதா இன் முதலாவது படைப்பாக 'பேரிகை' என்ற நூல் ஏப்ரல் 20, 2024 சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய 'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அன்றைய நாளில் வெளியிடப்பட்ட 15 நூல்களில் இந்த நூலும் இடம்பெற்றது. ஈழப் பெண்களின் வரலாற்றுப் பதிவாக உருவான சின்னஞ் சிறிய நூலாக 'பேரிகை' என்ற நூல் இருந்தது. வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நெறியாளுகை செய்பவராக மட்டுமே அறிமுகமான நவகீதா இப்பொழுது நூலாசிரியராக அறிமுகமாயுள்ளார். நூலில் காணப்படும் 'என்னுரை' மூலம் அவரது கல்விப் பின்புலம், தாய்மண்ணுடன் ஒன்றிய அவரின் மனவுணர்வு பற்றியெல்லாம் அறியும் வாய்ப்பையும் பேரிகை என்ற நூல் அறியத்தந்தது.
சிலநாட்களுக்குள் உருவாகிய நூலாக இருந்தாலும், அளவில் சிறிய நூலாக இருந்தாலும் சிறப்பான நூலாக நூலாசிரியர் எழுதியுள்ளார். வீரமிகு ஈழமங்கைகள் சிலரின் விபரங்களை அழகான, எளிமையான நடையில் தேடலுடன், நுண்ணிய பார்வையும் மேலிடத் தந்துள்ளார் நவகீதா.
நாங்கள் அனைவரும் அரிய பணிகளைச் செய்தால் புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம் என்ற செய்தியை 'பேரிகை' சுட்டி நிற்கிறது.