|
பவளவிழாக் காணும் தெளிவத்தை ஜோசப்!
- எம்.கே.முருகானந்தன்.-
இது
தெளிவத்தை ஜோசப் அவர்களின் பவளவிழா ஆண்டு. ஞானம் சஞ்சிகை அவருக்கு விழா எடுத்து
(16.05.2010) கௌரவிக்கிறது இலங்கை தமிழ் படைப்புலகில் தனக்கென ஒரு உயர் இடம்
அவருக்கு இருக்கிறது. மலையக இலக்கியத்திற்கு முக்கிய இடம் தேடித் தந்தவர்களில் அவர்
முக்கியமானவர். அதற்கு மேலாக ஒட்டு மொத்த இலங்கைத் தமிழ் படைப்புலகில் அவரது
பங்களிப்பு அபரிதமானது. கோட்பாட்டு எல்லைகளுக்கள் சிக்குறாது சுதந்திரமாக தனக்கேயான
தனித்துவப் பாணியில் படைப்பவர். அவரது சிறுகதைகள் பெறுமதியானவை. மனித நேயம்
கொண்டவை. கலைத்துவமானவை. அத்துடன் ஆவணச் சேகரிப்பாளர். தனது ஆவண சாகரத்தில் மூழ்கி
முத்தெடுத்து பல ஆய்வுக் கட்டுரைகளும் தருபவர். விழா எடுப்பதற்கு மிகவும்
பொருத்தமான நபர். அதனால் எல்லோரும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர்
மட்டுமல்ல ஒரு அருமையான மனிதர். பண்புள்ளவர். பழகுவதற்கு இனியவர். எனது இனிய
நண்பரான அவரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன். அவர் எனது இனிய நண்பர். ஆனால் அவரது
ரசிகன். அவரது படைப்புகளைத் தவறவிடாது படித்து மகிழ்பவன். நான் இலங்கைத் தமிழ்
இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் இவரது ரசிகனாக இருக்கிறேன்.
கலைச்செல்வி, மல்லிகை, சிரித்திரன், அஞ்சலி என வாசிக்கத் தொடங்கிய காலம் எமது
எழுத்தாளர்கள் மீதான ஈர்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவனாக
இருந்தபோது ஜஸீமா தியேட்டரில் படம் பார்க்கப் போவதுண்டு. வழியில் உள்ள ஸ்டார் டொபி
தொழிலகம் கண்ணில்படும். 'இங்குதான் தெளிவத்தை கணக்காளராக தொழில் பார்க்கிறார்' எனக்
கட்டிடத்தைப் பார்த்து மகிழ்வேன். ஆனால் அப்பொழுது சந்திக்கக் கிடைக்கவில்லை
தெளிவத்தை
ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பி. பெப்ரவரி 16, 1934) பதுளை ஹாலி எல்ல விற்கு அருகில்
உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். ஆரம்பக் கல்வி கற்றது தோட்டப் பாடசாலையில்
அதுவும் ஆசிரியரான தகப்பனாரிடம். பாடசாலைக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மூன்று
வருடங்கள் தமிழ் நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் ஹை ஸ்கூல் படித்துவிட்டு
மீண்டும் இங்கு வந்து பதுளை சென் பீட்டஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். அவரது
ஆதர்ஸ மனிதன் அவரது 'ஆஞா'தான். ஆஞா என்றால் இவரது குடும்ப வழக்கப்படி தந்தை. அவர்
ஒரு ஆசிரியர். தோட்டப்பள்ளி ஆசிரியர். வித்தியாசமானவர். கடமைக்காக தொழில் செய்யாது
அதை ஒரு சமூகப்பணிபோல அர்ப்பணிப்போடு செய்தவராவார். அவரிடமிருந்துதான் இவருக்கு
நேர்மை, தன்னடக்கம், சமூகநோக்கு போன்ற பல நற்பண்புகள் கிட்டியிருக்கிறது எனத்
தெரிகிறது.
சிறுகதையாளர், நாவலாசிரியர், விமர்சகர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முகப் படைப்பாளி.
இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர்.
அறுபதுகளில் இலங்கையில் ஏற்பட்ட தேசியம் சார்ந்த அரசியல் மாற்றமும் அதன்
தொடர்ச்சியாக கலை இலக்கிய எழுச்சி பெற்ற காலத்தில் எழுதத் தொடங்கியவர். மலையகம்
என்ற மண்ணுக்கு, அதன் தனித்துவத்திற்கு, அந்த உணர்வுக்கு உருவம் கொடுத்தவர்.
சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம்
பிடித்துக் காட்டும் வல்லமை கொண்டவை இவரது படைப்புகள். கோகிலம் சுப்பையா முதல்
இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான படைப்பாளிகளில் தனித்துவம்
ஆனவர்.
காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.
'நாமிருக்கும் நாடே' சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது
பெற்றுள்ளார்.
வெளியான நூல்கள்
1. காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2. நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3. பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4. மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
வரவிருக்கும் நூல்கள்
1. குடைநிழல் நாவல்
2. நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்
3. மலையக நாவல் வரலாறும் வளரச்சியும்
4. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியலும் இலக்கியமும்
படைப்பாளி என்பதற்கு மேலாக நிறைய நூல்களையும் சஞ்சிகைகளும் கொண்ட நூலகம் அவரிடம்
உள்ளது. கிடைத்தற்கு அரிய பல நூல்கள் அவரிடம் உண்டு. தனது சேகரிப்புகளை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்பவர். தமது படைப்புகளை தொலைத்துவிட்ட
பலரும் தனிப்பட்ட முறையில் அவரை அணுகுவர். மனமகிழ்வோடு பகிர்ந்து கொள்வார்.
நூலகம்
என்ற இணைய ஆவணக் காப்பகம் இலங்கையில் வெளியான பல நூல்களையும் சஞ்சிகைகளையும்
ஆவணங்களையும் இணையத்தில் பதிவு ஏற்றி எவரும் இலகுவாகத் தேடிக் கண்டு பிடித்து
படிக்க உதவுகின்றனர். இது ஒரு எண்ணியமாக்க முயற்சி. இத் திட்டத்திற்கு தெளிவத்தை
தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் சஞ்சிகைகளையும் பதிவு எடுப்பதற்காக கொடுத்து
உதவியுள்ளார். தற்காலத்தில் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களுக்காக
மாத்திரமின்றி எதிர்காலச் சந்ததியினருக்கும் உதவக் கூடிய இத் திட்டத்திற்கு
அனைவரும் கை கொடுப்பது அவசியம். தெளிவத்தை அதனை முன்னோடியாகச் செய்து
காட்டியுள்ளார். பொன்விழாக் கண்ட எழுத்தாள நண்பரான தெளிவத்தை இன்னும்
பல்லாண்டுகளுக்கு தனது அரிய பணியைத் தொடர வேண்டும் என வாழ்த்தி அமைகிறேன்.
kathirmuruga@hotmail.com
Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html |