|
.மீள்பிரசுரம்:
திண்ணை.காமிலிருந்து.
குறிப்பேட்டுப் பதிவுகள்......
- வ.ந.கிரிதரன் -
[அண்மையில்
நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக்
கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது.
'மார்க்ஸியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு' என்னும்
தலைப்பில் 15 பக்கங்களிலொரு ஆய்வுக் கட்டுரை அப்போதிருந்த என் மனநிலைக்கேற்ப
29/12/1982இல் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை
நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் ஒன்று:
'கம்யூனிஸ்ட்டுக்களும், கடவுளும், மதவாதிகளும், பரிணாமமும்'
எனவும், அத்தியாயம் இரண்டு: 'மார்க்ஸியமும் அதன் மீதான நாத்திகம் பயங்கரவாதம்
பற்றிய குற்றச்சாட்டுக்களும்' எனவும்,
அத்தியாயம் மூன்று: 'மானுட வர்க்கப் பிரச்சினைகளும், அக உணர்வுகளும் பற்றியதொரு
கற்பனாவாதம்' எனவும், இறுதியான
அத்தியாயம் நான்கு: 'புரட்சிகளும், புரட்சிகர எதிர்ப்புரட்சிகர சக்திகளும்
(இலங்கைத் தமிழர் பிரச்னையுட்பட)' எனவும் மேற்படி
கட்டுரையானது பிரிக்கப்பட்டுள்ளது. அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும்
கட்டுரை முழுவதும் இழையோடுகின்றதை
அறிய முடிகின்றது. இது போல் பல கட்டுரைகள் என் குறிப்பேட்டில் காணக்கிடைக்கின்றன.
உதாரணத்திற்கு 'போரும் மனிதனும்,
இன்றைய உலகும் நாளைய உலகும்', 'தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆய்வு',
'மனிதனும் கவலைகளும்', 'நிர்வாணமும்
மானுடமும் (புதிய தத்துவம்)', 'இயற்கை மனிதனும், புதியதொரு தத்துவமும்',
'இயற்கையின் விதியொன்று', 'மனிதனின் இயற்கை, புற,
அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதனிலிருந்து ...(ஒரு சிக்கலான பிரச்னை
பற்றிய கண்ணோட்டம்)', 'கலையும்
மனிதனும்', 'மானுடத்தின் வழிகாட்டிகள்', 'மனித வாழ்வும் துறவும்', 'ஆண் பெண்
பற்றிய தொடர்புகள்', 'புத்தகங்களும் மனிதனும்',
'எனது குருமார்'... இவ்விதம் பல்வேறு தலைப்புகளில் காணப்படும் கட்டுரைகள்,
கவிதைகளெல்லாம் அன்றைய என் மனநிலையினைப்
படம் பிடித்துக் காட்டுகின்றன.
'மார்க்சிம் கார்க்கி'யின் புகழ்பெற்ற நாவலான 'தாய்' தான் முதன் முதலில் எனக்கு
இடதுசாரித் தத்துவத்தினை, மார்க்சியத்தினை முதன்
முதலில் கோடிழுத்துக் காட்டியது. அதன் பின் பல ஆண்டுகள் கழித்து என் மொறட்டுவைப்
பல்கலைக்கழக இறுதியாண்டுகளில் மாஸ்கோ
பதிப்பகத்தாரால் தமிழில் வெளியிடப்பட்ட பல மார்க்ஸிய நூல்களைக் குறிப்பாக
'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை', 'டூரிங்கு மறுப்பு', 'எங்கெல்சின் குடும்பம்,
சொத்து, தனியுரிமை', பல்வேறு மார்க்சிய அறிஞர்களால் எழுதித் தொகுக்கப்பட்ட
'வரலாற்றுப் பொருள் முதல்வாதமும், இயங்கியல் பொருள்முதல்வாதமும்', லெனினின்
பல்வேறு நூல்கள் போன்றவற்றைப் பின்னர் நான் படிப்பதற்கு ஆரம்பத்தில் சுழி போட்ட
நூலாக மேற்படி 'தாய்' நூலினைக் குறிப்பிட முடியும். பின்னர் இந்தத் 'தாய்' நாவல்
என் சகோதரன், மற்றும் அவனது நண்பர்களுக்கும், இன்னும் பலருக்குமென எண்பதுகளில்
தொடர்ந்தும் தன் பங்களிப்பினைத் தன் இறுதி மூச்சுவரை செய்யவும் தவறவில்லை.
மேற்படி 'தாய்' நாவல் எனக்குக் கிடைத்த வரலாறு சுவையானது. என் பால்யகாலத்துப்
பருவத்தில் நான் ஈழநாடு மாணவர் மலரில் எழுத
ஆரம்பிப்பதற்கு முன்னர் 'மரங்கொத்தியும் மரப்புழுவும்' என்னுமொரு உருவகக் கதை
எழுதியிருந்தேன். என் சொந்த அனுபவத்தின்
அடிப்படையில் எழுதப்பட்டிருந்த மிகச்சிறியதொரு சிறுவர் கதை அது. அதனை அப்பொழுது
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து
கொண்டிருந்த 'வெற்றிமணி' என்னும் சிறுவர் மாத இதழ் பிரசுரித்திருந்தது.
அச்சஞ்சிகையினை வாங்கும் பொருட்டு வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரும்
சமயங்களிலெல்லாம் யாழ் நகரின் சந்தைக்கண்மையிலிருந்த 'அன்பு புத்தகசாலை'க்குச்
செல்வது வழக்கம். அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் பிரபல எழுத்தாளர் செங்கை
ஆழியானின் சகோதரரான அன்றைய பிரபல எழுத்தாளர்களொலொருவராக விளங்கிய
'புதுமைலோலன்'தான். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வாலிபரே (கோபால் அல்லது பூபால்
இவ்விதமொரு பெயர் அவருக்கு இருந்ததாக ஞாபகம்) கோர்க்கியின் 'தாய்' நாவலை எனக்கு
இரவல் தந்துதவியவர். அவர்கூட யாழ் 'பி.ஏ.தம்பி லேனி'லுள்ள வீடொன்றில்தான்
வாடகைக்கிருந்தார்). அவருடன் ஒப்பிடும்பொழுது வயதில் மிகவும் சிறுவனாகவிருந்த
எனக்குத் தனது நூல்களைத் தந்துதவினார் அவர். செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'
நாவலினையும் அங்குதான் வாங்கினேன்.
மேற்படி குறிப்பேட்டிலுள்ள பல கட்டுரைகள், கவிதைகள் முதலான ஆக்கங்கள் அப்போது
நான் படித்த மேற்படி மார்க்சிய நூல்கள்,
நாவல்களின் தாக்கங்களினாலும், அப்போது நாடிருந்த சூழல் ஏற்படுத்திய தாக்கங்களின்
விளைவுகளினாலும் என் எண்ணத்திலேற்பட்ட எதிர்த்தாக்கங்களே. அப்போது, அந்த வயதில்
நான் புரிந்து கொண்ட தத்துவங்களினை நிலவிக் கொண்டிருந்த சமூக, அரசியல் மற்றும்
பிரபஞ்சச் சூழல்களின் பின்னணியில் வைத்து ஆராய்ந்ததன் விளவான என மனப் பதிவுகளே.
ஒருவகையில் அப்போது என் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்கு
வடிகால்களாகவும் விளங்கின மேற்படி குறிப்பேட்டுப் பதிவுகளெனவும் கூறலாம்.
மிகவும் புகழ்பெற்ற நாவலாசிரியர்களான டால்ஸ்டாய், ததாவ்ஸ்கி போன்றோரின்
புகழ்பெற்ற நாவல்களான 'புத்துயிர்ப்பு', 'குற்றமும்
தண்டணையும்' போன்றவற்றையும், அண்டன் செகாவ் போன்றோரின் சிறுகதைகளையும் முதன்
முதலில் அப்பொழுதுதான் வாசித்தேன்.
மேற்படி மாஸ்கோ பதிப்பக நூல்களையெல்லாம் கொழும்பின் கொம்பனித்தெருவிலுள்ள இத்தகைய
நூல்களை விற்கும்
புத்தகசாலையொன்றில் வாங்கினேன். ஒரு சிறு வட்டத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த
சிந்தனைகளை முதன் முதலில் அவ்வட்டத்தினை உடைத்து வெளியேற வைத்துச் செழுமையும்
விரிவும் படுத்தியவை மேற்படி மார்க்ஸிய நூல்களும், இலக்கியப் படைப்புகளுமே.
இந்த நூல்களில் சிலவற்றை 1983 கலவரத்தின் முன் சந்தித்த பொழுது நண்பர் எழுத்தாளர்
எஸ்.கே.விக்கினேஸ்வரன் பெற்றுச்
சென்றிருந்தார். அன்றைய சூழலில் நான் சந்தித்த சிலரில் ஆழமான நூலறிவும்,
மார்க்ஸிய சிந்தனைகளும் கொண்டு விளங்கிய
இளைஞர்களில் இவரும் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க
வெளியீடான நுட்பம் இதழுக்கு நான் எழுதிய 'பாரதி கருத்து முதல்வாதியா
பொருள்முதல்வாதியா?' என்னும் கட்டுரையினை வாசித்து விட்டு என்னுடன் சந்திக்க
ஆவல்கொண்டு
சந்தித்ததுடன் எமக்கிருவருக்கிடையிலுமான தொடர்பு முதன் முதலில் ஏற்பட்டது. இவர்
நல்லதொரு சிறுகதையாசிரியரும் கூட.
அப்போது சிரித்திரன் நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் இவரது சிறுகதையொன்று
,'பாஸ்' என்று நினைக்கின்றேன், பரிசு
பெற்றிருந்தது. அவருடன் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் 'புத்துயிர்ப்பு' போன்ற
நாவல்களுட்படப் பல்வேறு சமூக அரசியல் விளைவுகள் பற்றியெல்லாம், மார்க்சியத்
தத்துவங்கள் பற்றியெல்லாம் உரையாடிக் கொண்டிருந்தது ஞாபகத்திலுள்ளது. பின்னர் பல
வருடங்களின் பின்னர் நாடு இந்தியப் படைகளின் ஆதிக்கத்திலிருந்த காலத்தில்
கடிதமொன்று போட்டிருந்தார். அதில் மறக்காமல் மேற்படி 'பாரதி..' பற்றிய
கட்டுரையினைக் குறிப்பிட்டிருந்தார். அதில் 'கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பாரதியின்
மெய்ஞானம் என்றொரு நூல்
வெளிவந்துள்ளது. பாரதி கருத்துமுதல் வாதியா பொருள் முதல்வாதியா என நீர் எழுப்பிய
கேள்வியை - நீர் அன்று கூறியது போல் கருத்துமுதல்வாதத்திற்கும்
பொருள்முதல்வாதத்திற்கும் ஒரு பாலமாக அவர் இருந்ததாக அல்ல - முழுமையாக ஆய்கிறது
இந்நூல். அண்மையில் வெளிவந்த ஒரு நல்ல தத்துவார்த்த ஆய்வு நூல் இது என்பதை நான்
துணிந்து கூறுவேன். ந.ரவீந்திரன் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல், பாரதி பற்றிய
மயக்கங்களுக்கு பூரணமான தெளிவினை ஊட்டுவதாக உள்ளது. பாரதியின் ஆன்மிக நிலையையும்,
அவரது அரசியலில் அவர் பொருள்முதல்வாத நிலையை எடுப்பதையும் சுட்டிக்காட்டி ஒரு
முரண்பட்ட மனிதராகி பாரதியை மறுத்து, ஆன்மிகம், அரசியல் இரண்டிலும் அவரது
இயங்கியல், பொருள்முதல்வாத நிலையின் கூறுகளை இனங்கண்டு, தெளிவாக்குகிறது
இந்நூல்.' என அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அன்று நிலவிய அரசியல், சமூகச்
சூழல் பற்றிய அழகானதொரு விவரிப்பாகவும், இலக்கியத் தரம் மிக்கதாகவும் விளங்கிய
அக்கடிதத்தினை அப்போது நான் வெளியிட்ட 'குரல்' கையெழுத்துப் பிரதியிலும் பதிவு
செய்திருந்தேன். அச்சமயதில் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் பயின்று
கொண்டிருந்த என் கடைசித் தங்கையும் IPKF: Indian Peace Killing Force
என்னும் தலைப்பில் அப்போதிருந்த நிலையினைப் படம் பிடித்துக் கடிதமொன்றினை
எழுதியிருந்தார். அதனையும் மேற்படி 'குரல்' கையெழுத்துப் பிரதியில் பதிவு
செய்திருந்தேன். இவற்றைச் சமயம் வரும்போது பதிவுகளிலும் பதிவு செய்வேன்.
மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை
அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு
செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த
வகையிலென் முதலாவது பதிவு. காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென
விரியும் பதிவுகளிவை. இவற்றில் பாரதி
பற்றி எழுதிய சில கட்டுரைகளும், கவிதைகள் சிலவும் அவ்வப்போது சஞ்சிகைகள் மற்றும்
பதிவுகள் இணைய இதழில்
பிரசுரிக்கப்பட்டுள்ளன.-
13/09/1982
கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்த பிரபஞ்சம்!
ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!
பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமெமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!
மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
இந்த மண்ணினை, இந்தக் காற்றினை,
இந்த வெளியினை, அடிவானினை,
இந்த எழில் மலர்களை, மரங்களை,
இந்தச் சூரியனை, இதன் ஒளியினை,
இவற்றையெல்லாம் நான்
மனப்பூர்வமாக நேசிக்கின்றேன்.
இதோ இங்கே வாழும் இந்த மானுடர்களை,
ஆபிரிக்க நீக்ரோக்களென்றாலென்ன,
அமெரிக்க வெள்ளையரென்றாலென்ன,
அரபு முஸல்மானென்றாலென்ன,
ஆசிய தேசத்தவரென்றாலென்ன,
இவர்களையெல்லாம்,
இந்த மானுடர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
விரிந்த, பரந்த இப்பிரபஞ்சத்துக்
கோள்களை, கதிர்களை, பால் வீதிகளை,
ஆங்கு வாழும் தகைமைபெற்ற
உயிர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
இந்த உயிர்களிற்காகவே
இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை
விடுவிப்பதற்காகவே
என் நெஞ்சில் பொங்குமுணர்வுகளை
எழுத்தாக வடிக்கின்றேன்.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்1
5/3/1983
கவிதை: பொறியின் கதை!
சிறு வித்தொன்றிலிருந்தொரு பெருவாலமரமும்
செழித்திலை தளிர்த்து நிற்கும்.
உருவொன்றினளவிற்கும்
உள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறு பொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனையறியாரே
ஒருவேளை அவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
கருத்தொன்றின் பெருவீச்சில்
உருச்சிறுத்தேயுலர்ந்தொழிந்திட்டவரசுகளின்
வரலாறோ பலப்பல.
ஒரு சத்தியத்தின் ஒளிநாடி பறக்கின்ற பொறியெனிலோ
ஒருநாளில் பெரும் சுவாலையெனவேயொளி வீசிச் சுடர்ந்திடுமே!
அதனொளியில் சடசடத்துதிர்ந்துவிடும் அழுக்காறுச் சுவரெலாமே.
எரிந்து, பொசுங்கிச் சுவாலையெனவே ஆயிடுமே தீமையெலாம்.
உருவொன்றினளவிற்கு முள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறுபொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனை யறியாரே
ஒருவேளை யிவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
29/05/1983
இலட்சியவாதிகளும் காதலும்!
'வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்' -- பாரதியார்.
ஏதாவதொரு இலட்சியத்திற்காக வாழ்பவர் மத்தியில் (விடுதலைப் போராளிகளுட்பட) காதலைப்
பற்றியும், பெண்ணைப் பற்றியுமொரு
சந்தேகக் கண்டோட்டம் நிலவுகின்றது. 'காதல்', 'பெண்' என்பவை தங்கள் இலட்சியத்தைப்
பாழடித்து விடுவன என இவர்கள்
கருதுகின்றார்கள். ஆயின் இது உண்மையா? லெனினோ, கார்ல் மார்க்ஸோ அல்லது
காந்தியடிகளோ காதலை இகழவில்லையே. அம்
மகாபுருஷர்களின் வாழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாகவன்றோ அவர்தம்
காதற்கிழத்தியர் விளங்கினர்.
மேற்கூறிய சந்தேகத்திற்கு முக்கிய காரணம்... பெண்களை அடிமைகளாக வெறுமனே
உடலிச்சை தீர்க்கும் போக கருவிகளாகக் கருதும் ஆண் தலையெடுத்த சமுதாய அமைப்பில்
வாழுபவர்கள் மற்றவர்களைப் போல் பெண்களையும், காதலையும் வெறுமனே போகக்
கருவிகளாக எண்ணிவிடுவதனால் தான் 'எங்கே அந்த மோகம் தங்களைத் திசை திருப்பி
விடுமோ' என்று கருதுகின்றார்கள்.
உண்மையில் இவர்களைப் புரிந்துகொண்ட பெண்களால் இவர்களது இலட்சிய வாழ்வு மேலும்
சிறப்படையுமே தவிர வேறல்ல. சரியான
துணை கிடைத்து விட்டால் ஓர் ஆணின் வெற்றிக்கு எதுவுமே தேவையில்லை. பெண்கள்
ஆண்களைப் போலவே சகலவித
வேலைகளிலும் ஈடுபடக் கூடியவர்களாகவும், சில வேளைகளில் மிகுந்த
மனோதிடமிக்கவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
மானுட வாழ்வின் வெற்றியே தூய காதலின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. இலட்சிய
தம்பதிகள் தத்தமது மனக் கட்டுபாடுகள் மூலம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்
கொள்கின்றார்கள். காதலைக் காமத்தின் வெளிப்பாடாக மட்டும் கருதுபவர்கள்தான்,
பெண்களை
வெறுமனே போகக் கருவியாகக் கருதுபவர்கள்தான், மன அடக்கமற்றவர்கள்தான் 'காதலையும்',
'பெண்'ணையும் கண்டதும் காததூரம் ஓட வேண்டுமென்று அலறுகின்றார்கள்.
'காதலினாலுயிர் தோன்றும் இங்கு
காதலினாலுயிர் வீரத்திலேறும்' - பாரதியார்.
மார்ச் 6, 1983.
கவிதை: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.
- மார்ச் 6, 1983.-
நவம்பர் 11, 1982
கவிதை: சிறகுகளை விரிப்பீர்!
இரும்புச் சங்கிலிகளெங்கும் பரந்து, கவிந்து
வீதிகளினொவ்வொரு முடுக்குகளிலும்
தனித்து நிற்கும் சோகங்கள்....
ஓ! தோழரே! மெல்ல எழுவீர்.
ஆம். மெல்ல எழுவீர்.
படர்ந்து கிடக்கும் விலங்குச் சிறைகளை
உடைத்தெழுவீர். நொறுக்கிச் சிதைப்பீர்.
உங்களால், ஆம் உங்களால்தானது
முடியக் கூடும் தோழரே.
உங்கள் சிந்தனைச் சூளைகளில்
புடமிட்ட கருவூலங்களால்
ஆம்! நிச்சயம் உங்களால்தான்
அவை முடியக் கூடும் தோழரே.
உமது உறுதிய திண்ணெஞ்சும்
உமது சீரிய நல்வாழ்வும்
தோழரே!
வரலாற்றின் படிக்கற்கள் நீவிர்தான்.
நீவிரேதான்.
விடுதலைச் சிற்பிகளே! உமது
வேலையினைத் தொடங்கிவிடுவீர்.
கொட்டிடும் பனியிலும், கூதலிலும்
துப்பாக்கிக் குண்டுகளின் புகைச்சலிலும்
இருண்ட சிறைக் கோட்டங்களின்
தனிமைகளிலும்
உமது பணி சிறக்கட்டும்.
மெல்ல ஆனால் உறுதியாக உமது சிறகுகளை
விரிப்பீர். விரிப்பீர்.
மெல்ல ஆனால் உறுதியாகச்
சொர்க்கமொன்றின் தரிசனத்தினை
நீவிர் நிச்சயம் காண்பீர்.
- நவம்பர் 11, 1982 -
நவம்பர் 10, 1982
கவிதை: கோழைகளோ நாம்!
முள்ளந்தண்டொடிந்த கோழைகளோ
நாமெலாம். பொய்மை
படர்ந்துளதே பொய்கைப்
பாசியென.
நெஞ்சத்துரமெலாம் வற்றியதே
கோடை நீரென.
ஐயகோ! கேடுகெட்ட வாழ்வு
வாழ்கின்றோமே பேடிகளாய்
நாமெல்லாம்.
எலும்பெல்லாம் நடுநடுங்கிக்
கிடந்திடுதே உக்கிய தண்டெனவே.
மானமிழந்து, மதிகெட்டு எம்வாழ்வெலாம்
பாழானதே பாலைகளாயிதுவரை.
துப்பாக்கிகள் கொணர்ந்து வரும்
சிப்பா(பே)ய்'களின் சிரிப்பொலியில்
நடுங்கிச் செத்திடுவமே நாணமற்ற
பாபிகளாய்.
எரிகிறதே நெஞ்செல்லாம்; கனன்றெறிகிறதே
ஓங்கிடும் காட்டுச் சுவாலையெனவே. செஞ்
சுவாலையின் தீக்கங்குகள் வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும். வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும்.
- நவம்பர் 10, 1982 -
மே 29, 1983
கவிதை: கற்பனைப் பெண்ணே!
கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?
பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?
அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது. அங்குனக்கென்ன
வேலை.
கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?
தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.
சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.
ஒருபுறத்தே மாடமாளிகளைகளில் கூட கோபுரங்களில்
ஆணவத்தினெக்காளிப்பு தாண்டவமாடிடுகையில்
மறுபுறத்திலோ
காடுகளிலும் மேடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
'மரணத்துள் வாழு'மொரு நிலையிங்கேன்?
கற்பனைப் பெண்ணே! அடீ கற்பனைப்பெண்ணே!
நிஜங்களின் தரிசனம் உனக்குக் கிடைத்ததா?
ஏழ்மையிலவை தூங்கிக் கிடக்கின்றனவே. உனக்குத்
தெரிந்ததா?
புரிந்து கொண்டால் அறிந்து தெரிந்து கொண்டால்.. வாடி! வா!
இக்கவிதன் மடியில் நெஞ்சில் உனக்கு
நிறையவே இடமுண்டு. வாடி! வா!
- மே 29, 1983 -
29 யூன் 1983
இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற்
கவிதையொன்று!
- இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. புஷ்கினின்
கவிதையினை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன். -
நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்... இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
துன்புற வைத்ததில்லை.
நானுன்னைக் காதலித்தேன்; எனக்குள்ளேயே,
நம்பிக்கையில்லாமலேயே,
ஆனாலும் உண்மையாக, வெட்கத்துடன்.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்.
- 29 யூன் 1983 -
ஜூன் 6, 1983
கவிதை: மனப்பெண்ணே!
என்ன ஆயிற்றாம்? உன்னைத்தான் கேட்கின்றேனடீ!
என்னவாயிற்றாம்? அட உன்னைத்தானென் மனப்பெண்ணே!
உனக்கென்னவாயிற்றாம்? உரைப்பாயெனிலது நன்றன்றோ!
தாவித் தாவிக் குதியாட்டம் போட்டிருந்தவுன்னாலெங்ஙனம்
வாடிக் கிடந்திட முடிந்ததோ?
வனிதையே! விளம்புவையே!
போராட்டங்களிற்குள் புத்தெழுச்சி பெற்றனையே! பின்னேன்
பதுங்கி மாய்ந்து கிடக்கின்றனை.
பாய்ந்தெழு! பாய்ந்தெழு! பாய்ந்தெழு! அட,
பாய்ந்தெழத்தான் மாட்டாயோ பைங்கிளியே!
தோல்விகள் செறிந்திட்ட போதெல்லாம்
தோள்கொட்டி எழுந்து எழுந்து நின்றனையே!
சிரித்தனையே! ஆயின், வெட்டுண்ட விருட்சமென
வீழ்ந்து கிடப்பதுவும்தான் முறையாமோ?
விருட்டெனப் பொங்கியெழத்தான் முடியாதோ?
அட, உன்னைத்தானென் ஆருயிர் மனமே!
உன்னைத்தான்.
வாழுமிச் சிறுவாழ்விலுமுனைத்
தாழ்த்துவதுதானெதுவுமுண்டோ?
உண்டோ? உண்டோ? சொல் மனமே!
பிரபஞ்சச் சுழல்களிற்குள்
உரமற்று உளைவதாலென்ன பயனோ?
உளைவதாலென்ன பயனோ? பயனோ? பயனோ?
13 நவம்பர் 1982
தனிமையும் நானும்!
தனிமை! தனிமை! சிலவேளைகளில் மிகவும் கொடூரமாக விளங்குகின்ற போதிலும் தனிமைதான்
எத்துணை இனிமையானது.
தனிமையில் என் நெஞ்சம் சம்பவங்களை அசை போடுகிறது. அதன் விளைவுகள் புடமிட்ட
சிந்தனைச் சிதறல்களாக வெளிப்படுகின்றன.
எங்கும் நீண்டு, பரந்து, ஓவென்று ஆர்ப்பரிக்கும் அலைகடலைப் பார்க்கையில் என்
நெஞ்சினை இனம் புரியாத சோகமொன்று கவ்விச்
செல்லும். தனிமையில் மூழ்கி நிற்கும் கடல் ஒரு துணையை நாடிச் சோகப்
பண்ணிசைத்திடுமொரு பெண்ணாகத்தான் எனக்குத் தெரியும்.
நீண்டு பரந்து கிடக்கும் கடல் நங்கையினை மாலைகளில் பார்த்துக்
கொண்டிருப்பதென்றால் அ·து போன்றதொரு ஆறுதல் வேறேது?
இதுபோல்தான் கானகச் சூழலும் என்னைக் கவர்ந்திழுத்து விடும். தனிமைகளில் ஏதோ
சோகமொன்றின் கனம் தாங்கமாட்டாத
தோழர்களைப் போன்று விருட்சங்கள் ஏதோ ஒருவித அமைதியில் மூழ்கிக் கிடக்கும் நிலை;
இடையிடையே துள்ளிப்பாயும் மர
அணில்கள்; சிட்டுக்கள்; அகவும் மயில்கள்; காட்டுப் புறாக்கள். ஓ! தனிமைகளில்
கானகச் சூழல்களில் என்னையே நான் மறந்து விடுவேன்.
இரவுகளின் இருண்ட தனிமைகளில், தூரத்தே சோகத்தால் சுடற்கன்னிகளை நோக்குகையில்
நெஞ்சினில் பொங்குமுணர்வுகள்...
தனிமைகள் என்னைத் தகித்து விடுகின்றன. தவிப்படையச் செய்து விடுகின்றன. சிந்தனைச்
சிட்டுக்களைக் கூண்டிலிருந்து விடுவித்து
விடுகின்றன. சோகத்தின் பாதிப்புகளால் நெஞ்சினைப் புடம்போட்டு விடுகின்றன.
தனிமைகள் தான் என்னை எழுத்தாளனாக்கி வைத்தன.
இயற்கையின் ஒவ்வொரு மூலையிலும், துளியிலும் மறைந்து கிடக்கும், பொதிந்து
கிடக்கும் மிக மெல்லிய உணர்வுகளைக் கூட
உணர்ந்து விடும்படியான வல்லமையினைத் தனிமைகள் தானெனக்குத் தந்து விடுகின்றன.
தனிமைத் தோழர்களை நான் போற்றுகின்றேன். தனிமைத் தேவியரை நான் மனதார
நேசிக்கின்றேன். காதலிக்கின்றேன். தனிமைத்
தத்துவவித்தகர்களை நான் தொழுகின்றேன். துதிக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.
தனித்திருக்கும், இருண்ட இந்த இரவுகள்....
கறுத்து வானை வெறித்து நிற்கும்
கடற்பரப்புக்கள்...
தனிமைத் தவமியற்றும் கானகத்து
விருட்சங்கள்...
ஓ1 இவ்வுலகம்தான் எத்துணை
இனியது! எத்துணை
எழில் வாய்ந்தது!
இன்பம்! இன்பம்! இன்பம்!
எல்லாமே இன்பம்! இன்பம்! இன்பம்!
- 13 நவம்பர் 1982 -
15 ஆகஸ்ட் 1982
ஒரு தீர்ப்பும் தமிழர் போராட்டமும்!
தென்னாபிரிக்காவின் இனவெறி பிடித்த அரசாங்கத்தின் கொடுமையான சட்டங்களிற்கு நிகரான
சட்டமென சர்வதேச ஜூரிமாரால் கண்டிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்
விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு சாதாரண குற்றவியல் சட்டக் கோவையின் கீழ்
விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள்
சிவநேசனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த குட்டிமணி
(யோகச்சந்திரன்), ஜெகன், கறுப்பன் ஆகிய எதிரிகளில் முதலிருவர்களையும் பயங்கரவாதச்
சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தியூடர் டீ
அல்விஸ் அவர்களிற்கு குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின்படி மரணதண்டனை
விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். விந்தையான தீர்ப்பு! ஆயுதப் படைகளின் தடுப்புக்
காவலில் பெறப்பட்ட எதிரிகளின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொண்டு ஜூரிகளற்ற
நீதிமன்றத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு நீதியினையே அவமதிப்பதாகவிருக்கின்றது.
எதிரிகள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிற்கு
வரமுன்னர் நிகழ்ந்துள்ளதால் தான் சட்டரீதியாக இத்தகைய தீர்ப்பினை வழங்க
நிர்பந்திக்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் நீதிபதி கூறுவது எதைக் காட்டுகிறது.
நீதிபதியே தனது தீர்ப்பைப்பற்றி வருந்துவதாகக் கூறுகிறாரென்றால், நிலவும்
சட்டத்தின் தன்மையினை, 'தர்மிஷ்ட்ட' அரசு எனக் கூறிக் கொள்ளும் அரசின் தம்மிஷ்ட்ட
சட்டங்களின் தன்மைகளை யாவரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்தத் தீர்ப்பினை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட குட்டிமணியும்,
ஜெகனும் 'தங்களிற்குக் கருணையேதும்
தேவையில்லையெனவும்', 'தங்களைத் தமிழ் மண்ணிலேயே தூக்கிலிடும்படியும், தங்கள் உடலை
யாழ் மருத்துவ பீடத்திற்கு
ஒப்படைக்கும்படியும், கண்களைப் பார்வையற்ற தமிழனொருவனுக்குக் கொடுக்கும்படியும்'
கூறியிருப்பது அவர்களது மனத்திண்மையையும் இலட்சியப் போக்கினையும் காட்டி
நிற்கின்றது.
"என்னைப் போல் தமிழ் இளைஞர்கள் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள்.
அந்த அப்பாவித் தமிழ் இளைஞர்களும்
பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மரணதண்டனைக்கு இலக்காவார்கள். ... நீதிபதி
எனக்களித்த தீர்ப்பின் மூலம் தமிழர்களின்
விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தினையும், உற்சாகத்தினையும்
ஏற்படுத்தியுள்ளார். என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான
குட்டிமணிகள் தமிழ் ஈழத்தில் உருவாவார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருக்க
மாட்டார்கள். அவர்கள் தமிழ் ஈழத்தின் தீரமிக்க வீரர்களாகவேயிருப்பார்கள்"
(ஆதாரம்: 14-08-1982 வீரகேசரி).
குட்டிமணியின் இந்த இறுதி வாசகங்கள் அடக்குமுறைகளிற்காட்பட்டு வாடும் தமிழ்
மக்களிடையே நிச்சயம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும்.
விடுதலைக்கான போராட்டத்தினை அவை நிச்சயம் விரைவு படுத்தியே தீரும்.
- 15 ஆகஸ்ட் 1982 -
குறிப்பேட்டுப் பக்கங்கள் - 2!
20-09-1982.
-அண்மையில் பெய்ரூட்டில் பாலஸ்த்தீன அகதிகளை
லெபனான் வலதுசாரிப் படைகளும், இஸ்ரேலியப் படைகளும் கொன்றொழித்ததையிட்டெழுந்த
உணர்வுகள். -
பெய்ரூட்டின் அகதிகள் முகாம்களில்
அடிபட்டு, மிதிபட்டு, துவைபட்டு,
வதையுற்று வெடிபட்டுக் கிடக்கும்
இரத்தம் தோயந்த மாமிசப் பிண்டங்களின்
மேல்...
அட மானிடா! என்னடா! உன்னைத்தான்!
அட மானிடா! முட்டாளே!
முழிக்கிறாயாடா? முழியடா! முட்டாளே!
முழியடா!
கர்த்தரின் சீடப்பிள்ளைகளின்
கூத்தினைப் பார்த்தாயாடா! பாரடா!
பாரடா! பைத்தியக்காரா!
பாரடா!
திருநீலகண்டனின் திருப்புதலவர்கள்;
புத்தனின் பாலகர்கள்;
அல்லாவின் அருமைந்தர்கள்;
பாரடா! இவர்களை. ஏய் உன்னைத்தான்!
யாரடா ? இவர்க்ளெல்லாரும்?
இவர்களின் கூத்தினால் எரியும்
குமுறும் இன்றைய உலகினைப்
பாரடா! பைத்தியக்காரா!
பாரடா! பைத்தியக்காரா!
தத்துவம் மட்டும் பேசிடும்
வித்தர்கள் - நெஞ்சினில் நீதி
செத்தவர்கள்.
அட! மானிடா! என்னடா! உன்னைத்தான்.
அட! மானிடா! முட்டாளே!
முழிக்கிறாயாடா? முழியடா! முட்டாளே!
முழியடா!
கொலம்பியாக்களில் ஏறிக்
கும்மாளம் மட்டும்தான் போடமுடியுமுன்னால்;
அப்பாவிகளின் சிரங்களில்
தர்மத்தின் தலைகளில
எப்-16களில் , மிக்-23களில்,
மிராஜ்களிலேறிக்
குண்டுகளை மட்டும் வேண்டுமானால்
உன்னால் கொட்டித்தள்ளிவிட
முடியும்! வேறென்னடா முடியும்?
அடி முட்டாளே! ஏய்! படு
முட்டாளே!
ஆயிரத்து ஐந்நூற்றுக்குமதிகமான
அப்பாவி உயிர்கள்...
அவர்கள் என்னடா குற்றம் செய்தார்கள்?
கண்டும் காணாதது போல் நிற்கிறாயே?
கயவனே! வெட்கமாயில்லை, நாயே!
வாயென்ன உனக்கு அடைத்துத்தான்
விட்டதா?
அமெரிக்கனொருவனின் தலைமயிருதிரட்டும்.
ஆகா! அயோக்கிய 'ராஸ்கலே'!
தத்துவம் பேசமட்டும், கருத்தரின், நீல
கண்டனின், புத்தனின், அல்லாவின்
பொன்மொழிகளைப் புடம்போடமட்டும்
வந்துவிடுவாய்! வரிந்து கட்டிக் கொண்டு
வந்து விடுவாய்! இல்லையாடா?
சுயநலநாயே! நயவஞ்சகப் பேயே!
அவர்கள் அப்பாவிகளடா!
அவர்கள் அப்பாவிகள்.
எந்தக் குற்றமும் செய்யாத
அப்பாவிப் பெண்டுகள், மழலைகளடா!
ஈவு இரக்கமற்ற அயோக்கிய ராஸ்கலே!
உனக்கென்னடா தெரியும் அவைபற்றி.
தத்துவம் மட்டும் பேசமுடியும்.
பேசு! பேசு! பேசிக்கொண்டேயிரு!
முட்டாளே! பேசு!
ஐயோ! என் பிரிய நண்பர்களே!
நண்பிகளே! செல்வங்களே!
உங்கள் இலட்சியக் கனவுகள் பூத்துக் குலுங்குவதாக!
பூத்துக் குலுங்குவதாக! பூத்துக் குலுங்குவதாக!
20-09-1982.
எதற்காக!
தனிமைகளென்னைத் தகிக்கும் வேளைகளில்
இனிமைகள் சிலநாடி உள்ளமேங்கும்; இம்
மண்ணில் வந்து பிறந்தோம்; பின்னொருநாள்
மண்ணோடு மண்ணாகிக் கலந்திடுவோம்.
இதுதான் வாழ்க்கையென்றால்.....
எண்ணங்கள் எழுந்து தலை விரித்தாடும்.
பயனற்று வாழ்க்கை கழிவதாயின், பிறந்த
பயனென்றொன்றுண்டா? உதவாத
உயிரற்ற ஒரு வாழ்வுக்காய்த்தானா இவ்
உலகில் வந்து பிறந்தோம்? சீறியெழும்
சிந்தனைகளின் தாக்கத்தால்
சிந்தை சுழன்று தடுமாறும்.
உயர்ந்து வீணே வளர்ந்து விட்டோம்.
'உவற்றாலேதும்' பயன்தானுண்டோ?
எண்ணங்கள் சில தோன்றிச் சலிப்பொன்று
எழுந்தாடத் தோட்டத்துப் பக்கம்
எழுந்து செல்வேன்.
கூழைக் குடித்தொருவன் பிறரைக்
கும்பிட்டே வாழ்வான்; அவ்
ஏழைகள் வயிற்றிலடித்தே மற்றவனோ
ஏப்பமொன்றை மெல்ல விடுவான்.
குடத்தினிலிட்ட விளக்காய் ஒருத்தி
குடிசையில் முடங்கிக் கிடப்பாள்.
'மிடியும்' 'மக்ஸி'களுமென்று மற்றவள்
மதர்ப்புடன் திரிந்து செல்வாள்.
படிப்பதற்கு மனமிருந்தும் ஒருத்தன்
பட்டினியால் கெட்டலைவான்.
குடியும், கூத்துமென்றே அடுத்தவன்
காரினில் கூடித்திரிவான்.
ஏற்றத் தாழ்வுகளால் இங்கு
எல்லாமே இரண்டு பட்டாச்சு;
மாற்றங்கள் எதுவுமின்றி
மனிதன் மறுகியே வாழலாச்சு; இம்
மாற்றத்தைக் கொணர மனதில்
சீற்றங்களிருந்துமென்ன?
முயற்சியைத் தொடங்கத் துணிவின்றி
அயற்சியில் ஆழ்ந்து கிடப்பேன்.
20-09-1982.
கவி மகாகவியின் 'குறும்பா'வைப் படித்த்தன் விளைவான
முயற்சியில்.......
நகைச்சுவைக்கு இரு குறும்பாக்கள்:
இரண்டிற்குமேல் ஒருபோதும் இல்லை.
இவ்வாறு சொல்லி நின்றாள் முல்லை.
முல்லையவள் சொற் கேட்டு
முத்தனவள் கணவன் சொன்னான்:
ஆதலினால் இல்லைபெருந் தொல்லை.
காதலியைக் காண்பதற்காய் ஓடி.
காளையவன் சென்றிட்டானுளம் வாடி.
காத்திருந்த கன்னியவள்
காதலனைக் கண்டு மனங்
கனிந்து தழுவினாள் இன்பம் கோடி.
20-09-1982.
15-01-1983!
[கட்டுரையுமல்ல; கவிதையுமல்ல. ஒரு கருத்துருவம்] மனிதனே!
மனிதனே! நான் உனக்கொன்று சொல்வேன்; கேள்!
மற்றைய உயிர்கள் யாவினும் உன்னை உயர்ந்தவனாக
உருவகித்துப் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாய்.
இப்பிரபஞ்சமே நீதான் என்பதுபோல் பெரிதுமே
இறுமாந்து கிடக்கின்றாய்.
'தர்மம்', 'நீதி', 'நியாயம்', 'தர்மிஷ்ட்டம்', 'காருண்யம்''
என்றெல்லாம் பெரிதாகப் பெரிதும் அலட்டிக் கொள்கின்றாய்.
ஆனால் உண்மையில் நீ செய்வதென்ன?
உன் சக இனத்தவர்களையே வர்க்கங்களாக்கி
ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமையென்று பிரிவுபடுத்தி
சிறுமைப்படுத்திக் கொண்டு வாழ்கின்றாய்.
இத்தகைய சிறுமைகளை உள்ளடக்கிய அமைப்பினைக் கட்டிக்
காப்பதனையே 'தர்மம்' என்கின்றாய். இதனிலும் பெரியதொரு
அதர்மம் வேறுண்டோ?
புசிப்பிற்காய், கேவலம் உன் வயிற்றுப் பசியிற்காய் நாள்தோறும்
உயிர்களைக் கொன்றொழித்துக் கொண்டே 'காருண்யம்'
பேசுகின்றாய். வெட்கமாயில்லை.
மனிதனே! உனக்கொன்று சொல்வேன் கேள்.
ஒவ்வொரு முடிவினையும் செய்யும் போதும்,
ஒவ்வொரு செயலினையும் புரியும் போதும்,
உன் சிந்தையை ஒருகணம் தீட்டிக் கொள்!
எப்போதும் உன் அறிவிற்கு எது சரியென்று படுகின்றதோ
அதனைச் செய்திட ஒருபோதுமே தயங்கிடாதே!
எத்தகைய எதிர்ப்புகள் வந்திடினும் சிறிதுமே
வளைந்து விட்டிடாதே!
உன் முடிவு மட்டும் சரியானதாக, தர்மமானதாகயிருக்குமாயின்
முடிவினைப்பற்றி நீ கவலைப்படுவதை விட்டுவிட்டு
காரியத்தினை ஆற்றிடு.
ஒருபோதுமே அதர்மமானதொன்றினை அறிந்தும் , அதற்கு
அடிபணிவதன் மூலம் உன் சுயமரியாதையினை இழந்து
வாழ்ந்திடாதே!
இஃது எவ்வாறோ, அவ்வாறே மற்றைய
மனிதனையும் சுயமரியாதை
தனையிழந்து வாழ்திடும்படியான செயல்களை
ஒருபோதுமே ஆற்றிடாதே!
15-01-1983!
14-01-1983!
இயற்கையின் விதியொன்று!
இப்பிரபஞ்சத்திலுள்ள
எல்லாவிதமான உயிர்களையும், எல்லாவிதமான உயிர்களின் குணவியல்புகளையும் அல்லது
எல்லாவிதமான செயல்களையும் ஆராய்ந்து பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே
உணர்ந்து கொள்ளலாம். ஒருபுறத்தில் ஆக்ரோஷமான, ஆவேசமான போக்குகளென்றால் மறுபுறமோ
எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாத அமைதியான போக்குகள் நிலவுவதைக் காணக்
கூடியதாகவிருக்கின்றது. அதாவது ஒரு புறத்தில் மூர்க்காவேசமிக்க, புலாலுண்ணும்
உயிர்கள்; கோபம்,. பொறாமை முதலிய பொங்கும் குணவியல்புகள். சீறி வெடிக்கும்
சூறாவளி, புவி நடுக்கம், பெருகிடும் ஆறுகள், பீறிடும் எரிமலை, குமுறும் அலைகடல்
போன்ற செயல்கள். இவை ஒருபுறமென்றால்... மறுபுறமோ இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறான
இய்லபுகளை உள்ளடக்கிய உயிர்கள். சாந்தமே உருவான சாதுவான பசு, ஆடு போன்ற
பிராணிகள். அமைதியான , இரக்கம் மிக்க, குணவியல்புகளை. சீறிக் குமுறிடும்
இயற்கையின் விளைவுகளுக்கு நேர் எதிரான தன்மை மிக்க இயற்கையின் செல்வங்கள். மென்
தென்றல். ஆனந்தம் மிக்க அமைதியான அருவிகள்.
இவ்வாறு இருபெரும் பிரிவுகளாக பிரிவுபட்டுக் கிடக்கும் உயிர்கள், குணங்கள்,
செயல்களில் முதலாவது வகையான் மூர்க்காவேசம்,
கோபாவேசம் மிக்க போக்குகளினால் விளைவதெல்லாம் நாசம்தான். அழிவுதான். கேடுதான்.
புலாலுண்ணிகள் மற்றைய உயிர்களை
அழித்து நாசம் செய்கின்றன. எரிமலை வெடிப்புகள், பொங்கும் கடல், ஆறுகள், சூறாவளி
போன்றவை பெருங்கேடுகளை நாசத்தினையே
விளைவிக்கின்றன. கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற இயல்புகளோ பேரழிவுகளையே
தோற்றுவிக்கின்றன. மாறாக இரண்டாவது வகையான அன்பான, அமைதியான, இரக்கம்மிக்க
போக்குகளோவெனில் இன்பத்தினைத் தருகின்றன; ஆனந்தத்தினைத் தருகின்றன. முதல் போக்கு
அழிவினை ஏற்படுத்துகின்றதெனில் இரண்டாவது போக்கோ புத்தாக்கத்தினைப, பொழிவினைத்
தந்து விடுகின்றன.
இனி ஒரு மனிதனது வாழ்வையே எடுத்துப் பார்ப்போம். அறியாமையின் விளைவான
மிருகங்களைப் போன்றே இம்மனிதனும் தன் நாவிற்காக, வயிற்றிற்காக மீன், தவளை,
பாம்புக் கறி, கோழி, கவுதாரி, காடை, ஆடு, மாடு, எருமை, பன்றி, மான், மரை,
அணிலென்று,
இன்னும் பல்வேறு வகையான உயிர்களை நாள்தோறும் இலட்சக் கணக்கினில் கொன்று
குவித்துக் கொண்டிருக்கிறான். இதன் மூலம்
சிந்திக்குமாற்றலற்ற மிருகங்கள், பட்சிகளைப் போன்ற உயிர்களிற்கும், சிந்திக்கும்
ஆற்றல் பெற்ற தனக்கும் எவ்வித
வித்தியாசங்களுமில்லையென்பதனைக் காட்டிக் கொண்டிருக்கின்றான்.
உண்மையில் நவீன இயற்கை விஞ்ஞானம் கூறுவதென்ன்? புலாலுண்ணுதல் தற்காலிகமாக
மனிதனுக்கு வேண்டுமானால் சக்தியினைப் பொலிவினைத் தந்திடலாம். ஆனால் உண்மையில் இவை
உடல் நலத்திற்குப் பெருங்கேட்டினையே விளைவிப்பன. ஒரு மனிதனின் ஒவ்வொரு
உறுப்புகளுமே இயல்பாக அவற்றிற்கு வேண்டிய சக்தியை விட மேலதிகமான சக்தியினைப்
புலாலுண்ணுதலின் போது பெறுவதால் கூடுதலாக அவை வேலை செய்வதால் தங்களது வாழ்நாளைக்
குறுக்கிக் கொள்கின்றன. அபப்டியானால் இந்த மனிதன் ஏன் தனக்குக் கேடு விளைவிக்கும்
செயல்களை ஆற்றுகின்றான்?
அதற்குக் காரணம் மனிதனின் அறியாமைதான்; இவ்வுலகின் முக்கால்வாசிக்குமதிகமான
மனிதர்கள் வறுமையிலும், பசி, பிணி, ,
கவலைகளால் சீரழிந்து கொண்டிருக்கையில், இயல்பாகவே பெருமளவிலான மனிதர்கள்
அறியாமையில் உழன்று விட வழி
ஏற்படுகின்றது. ஆனால் அதே சமயம் அளவிற்கு அதிகமான செல்வக் குவியலில் புரளும்,
ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டமோ தனது
அறியாமையால் தன்னையே அழிப்பதோடு மட்டுமல்லாமல், சக உயிர்களையும் அழித்துக்
கொண்டிருக்கின்றது. இதுதான் காரணம்.
இதுதான் சரியான காரணம்.
இதேபோல்தான் மனிதனது வாழ்நாளினைக் கோபம், பொறாமை, ஆசை போன்ற உணர்வுகள் சிதைத்து
விடுகின்றன என்று நவீன
விஞ்ஞானம் கூறுகின்றது. மனிதன் இத்தகைய குணங்களினால் தன்னை மட்டுமல்ல சக
மனிதர்களையுமே அழித்துக்
கொண்டிருக்கின்றான். நாடுகளுக்குள், நாடுகளிற்கிடையில் நாள்தோறும் போட்டி,
பூசல்கள், போர்களினால, தனி மனிதர்கிடையிலேற்படும்
மோதல்களினால் எத்தனையோ இலட்சக்கணக்கான உயிர்கள்
அழிந்துகொண்டிருக்கின்றனவே.
இவையெல்லாம் உணர்த்தி நிற்பவைதான் எவை? அன்பு, இரக்கம், அமைதியான பண்பு இவையே
இப்பூவுலகின் ஆனந்தத்திற்கு
அத்தியாவசியமென்பதையல்லவா. கஷ்ட்டத்தில் உழன்று கிடப்பவனுக்கு
உதவிடும்போதினில்தான் எத்துணை
இன்பமயமானதாகவிருக்கின்றது. அன்பு செலுத்துகையில்தான் எத்துணை
மகிழ்ச்சிகரமானதாகவிருக்கிறது.
ஆனால் இதற்காக ஏற்றத்தாழ்வுகளை, ஒருபக்கச்சார்பான சட்டதிட்டங்களை, சுரண்டல்
ச்முதாய அமைப்பினை, ஒருபுறம் கோடிக்கணக்கில் ஏழைகளையும், இன்னுமொருபுறத்தில் ஒரு
செல்வந்தக் கூட்டத்தினையும் உருவாக்கிட அனுமதித்திடும் சமுதாய அமைப்பினை
அங்கீகரித்துக்கொண்டே 'அன்பு' பற்றிப் போதிப்பது கேலிக்கிடமானது. இருக்கின்ற
பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கிடவே அவை வழிவகுத்திடும். மாறாக மானுட
வர்க்கத்தினைச் சரியான வழியில் , பொதுவுடமை அமைப்பினை நோக்கித் திருப்பிக் கோண்டே
அன்பினைப் போதிப்பதே சரியான வழி.
15-01-83.
சமர்ப்பணமொன்று........
இந்தச் சொல் மாலையை நானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏனேனில் என்னால் தற்சமயம் மட்டுமல்ல
இப்பிறவியிலேயே செய்யக் கூடியது இது ஒன்றுதான்.
சிலவற்றைச் சோல்லாமலிருக்க முடிவதில்லை.
இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான். இதயத்தின்
கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய நினைவு;.
உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாத்தொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில்.. இன்றோ
விடுபட முடியாததொரு நிலை. அது
உனக்கும் புரியும். எனக்கும் தெரிகின்றது.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில் அமைதி நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்கையில்
கூடவே ஒரு சோகமும் படர்வதை
என்னால் அறிய முடிகின்றது.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை...
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்...
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.
30-05-1983.
போரொன்றெழுந்து......
தலைக்குமேல் விமானங்கள் சீறிச் செல்லும்;
தலைகள் பல சிதறிச் செந்நீரில் மூழ்கும்;
படபடக்கும் 'மெஷின்கன்'களின் பேரிரைச்சலில்
பாலகர்கள் மார்புகள் துளைபட்டுக் கிடக்கும்;
கலைஞர் இரத்ததிலுருவான கட்டடங்கள்
நிலைகுலைந்து வீழ்ந்து சிதறிடும்;
ஆடைகள் நிலைகுலைந்து அங்கங்கள் பற்றி
அரிவையர் மானம் மதிலேறும்;
போரொன்றெழுந்து இப்பாரெங்கும்
பிணக்காடாகும்;
காரிருள் எங்கும் சூழம்;
கயவர்கள் செயல்கள் பரவும்;
மோதி மோதியே மக்களிங்கு
மாண்டு போவர்; அழிவர்;
அறிந்தவர் இறுமாப்பழியும்;
ஆள்பவர் கொட்டம் அடங்கும்;
பண்பாட்டுச் சிகரம் சரியும்;
பஞ்சத்தின் பிடியில் உலகம்
தஞ்சம்.
21-01-83.
சமர்ப்பணம்...
மீண்டும் இலங்கை பற்றியெரிகின்றது.
தூய மிருதுவான நெஞ்சங்களைச்
சிதைப்பதில்,
மீண்டும் நொந்த உள்ளங்களின்
மரண ஓலங்கள்.. பிலாக்கணங்கள்...
சோகநிழல்கள்...
சிதறிய பாதைகளில்
வாழ்வேயொரு கேள்விக்குறியாக....
அவமானம், அச்சம், வேதனை, சோகம்
அடியே! புரிகிறதாடீ! உன்னவர்
இங்கு புரியும் கூத்து.
என்ன செய்தாரிவர்? எடியே!
ஏன் மெளனித்து விட்டாய்? உன்னைத்தான்.
உன்னைத்தானடி!
மீண்டும், மீண்டும்.. முடிந்த கதை
தொடர்ந்த கதையாய்...
பென்சீன் வளையமாய்... அடியே!
இங்கு நடக்குமிந்தக் கூத்து..
இதற்கொரு முடிவு?
அன்பே! எனக்குப் பாலஸ்த்தீனத்துக்
கவிஞனொருவனின்
சொற்கள்தான் ஞாபகத்தில் வருகின்றன:
"கோழிக்குஞ்சுக்குக் கோதும்,
முயலிற்கு வளையும் உண்டு.
ஆயின் பாலஸ்த்தீனியனுக்கோ...?"
அன்பே! புரிகின்றதா?
'எலி வளையானாலும் தனிவளை'.
ஆமாம். அது இல்லாததுதான்.
9-06-1983.
குறிப்பேட்டுப் பதிவுகள் - 3
களத்தில் குதித்திடு!
என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுயகெளரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகரமுடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினக் குதறியெறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும,
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியினொவ்வொரு துளியும்,
இளம்பரிதியினொவ்வொரு கதிரும்,
விருட்சத்தினொவ்வோரிலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!
- 14-11-1982. -
வெளியில் அவர்கள்!
இந்தக் குடிய்சையினின்றும் வெளியே
இறங்கிடவே யான் அஞ்சுகின்றேன். ஆம்! ஏனெனில்
இங்கு நான் பூரணமனிதனாக, பூரண மனிதனாகவே
இருப்பதனை உணர்கிறேன்.
இருப்பதையுண்டு, உறங்கிட முடிகின்றது.
இன்பமே! உந்தனன்பினில் குளித்திட முடிகின்றது.
இங்கு யாரிடத்துமென் தன்மானத்தினை நான்
இழந்திடத் தேவையில்லை.
கூனிக் குறுகி யார் கால்,கையையும் பற்றிக்
கும்பிடும்போடுமொரு வாழ்வு இங்கில்லை.
உள்வைத்துப் புறம்பேசுமொரு
உழுத்த பழக்கத்திற்கு அவசியமேதுமில்லை.
ஆயின் அவர்கள் வெளியே நிற்கின்றார்கள்.
அவர்தம் வெடிமருந்து தோய்ந்திட்ட கைகளைப் போலவே,
இதயமும்... ஆம்! வெடிமருந்து தோய்ந்த நெஞ்சம் அவருடையது.
சிதைத்தல்! சீரழித்தல்! வதைத்தல்! அவர்தம் வாய்ப்பாடு
இதுவே.
அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் கவிந்த
புறவுலகோ,
பாவத்தின் சன்னிதியில் மாய்ந்து வேகும்; நோகும்.
தருமத்தின் சரித்திரத்தில் பொறுமைக்கும்
ஓரெல்லையுண்டு.
இனி ஒரு விதி செய்வோம். ஆம்! எந்நாளுமே
அதனைக் காத்திடப் போகின்றேன். அஞ்சிடப் போவதில்லை.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
இனி நானும் வெளியே இறங்கிடப் போகின்றேன்.
வெளியே இறங்கிடப் போகின்றேன்.
- 1982 -
எழுச்சியின் அர்த்தங்கள்!
இரத்தக் காட்டேரிகளின் கூத்தினில்...
இதோ.. மீண்டும் பனங்கூடல்கள் பற்றியெரிகின்றன.
'பூட்சுகள்' தடதடக்கப்
பாய்ந்துவரும் 'ட்ரக்'குகளின் பேரிரைச்ச்ல்களில்,
சாலைகளில், செம்மண் புழுதி பறக்கும்.
படலை மூடி, பெண்கள், பிள்ளைகள்
வியர்த்து, விதிர்விதிர்த்துப் பய்ந்து போய்ப்
பதுங்கிக் கிடப்பர். தம்
புருஷரைப் பற்றியணைத்துக் கொள்வர்.
ஆனால். அவர்கள்... எதற்கும்
அஞ்சுதலற்ற அரக்கர்கள்.
'இதுவென்ன வாழ்வு! சோகங்கள் கவிந்த
இருள்வாழ்வு. தொய்ந்த நெஞ்சினில் படரும் முகாரிகள்,
மூலைமுடுக்கெல்லாம் படர்ந்து கிடக்கும்
மயானத்து அமைதி.'
ஆயின் அவர்கள், மக்கள், எழுச்சியுறத்
தொடங்கி விட்டார்கள்.
கண்ணகிகள் போர்முரசம் கொட்டி விட்டார்கள்.
இளைஞர்கள் திண்தோள்கள் தினவெடுக்கத்
தொடங்கி விட்டன்.
மழலைகள் 'போர்ப்பரணி' ஜெபிக்கத் தொடங்கிவிட்டனவே.
பனங்கூடல்கள் 'சலசல'க்கின்றனவே காற்றினில்.
புரிகின்றதா? அவற்றின் அர்த்தங்கள்.
நாசங்களின் முடிவுகள் நாசங்கள்தான்.
அழிவுகளின அழிவுகள் அழிவுகள்தான்.
இந்த மண், ஆங்கு வீசிடும் தென்றல்,
எழில்மலர், பொய்கை, வான்,விருட்சங்கள்,
புட்கள் யாவுமே,
இசைக்கின்றனவே. அர்த்தங்கள் புரிகின்றதா?
சத்தியங்கள் சாவதில்லை. சாசுவதமானவை.
சத்தியங்கள் சாவதில்லை. சாசுவதமானவை.
- 15-3-1983-
உண்மையின் வெம்மை!
அடியே! நீ ஏனடீ வீணாக என்னுடன்
ஊடிக் கொள்கிறாய்?
நானப்படி என்னதான் கூறிவிட்டேனென்று
நீயின்று கோவித்தாய்?
உண்மையத்தானே உரைத்தேன்.
உணமை சுடுமென்பார்களே.
உன்னையுமது சுட்டதோடீ!
கண்ணே! கலங்குமுன் கயல்களைத் துடையடீ!
கவலைகளுடலின் புல்லுருவிகளன்றோ.
கண்களைவெட்டிச் செவ்விதழ் போதையேற்றிக்
கார் கூந்தல் பரப்பி
அன்னமென ஆயிழையே! நீ
அசைந்து நடைபயின்று வந்தாய்.
செழித்தவுன் அழகுகளிற்கிடையில் அகப்பட்டு
அல்லலுறுமுந்தன் மெல்லிடை பார்த்ததும்
உரிமைகளிழந்துழலுமெம்மவர் நிலைதானெந்தன் சிந்தையில்
எழுந்தது. எடுத்துச் சொன்னேன். அது தப்பா?
உண்மையைத்தானே உரைத்தேன். உந்தன்
செவ்விதழ்கள், நாணிச் சிவக்கும் வதனம், இவையெலாம்
இரத்தம் சிந்திய எம்மக்களைத்தான் ஞாபகப்படுத்தின.
இதைத்தானே இயம்பி |