இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2007 இதழ் 91  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
வ.ந.கிரிதரனின் 27 சிறுகதைகள்!
வ.ந.கிரிதரனின் 27 சிறுகதைகள்!

- இம்முறை ஒரு பதிவுக்காக பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, ஆனந்தவிகடன், மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகளை வாசகர்களுக்காக இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. -

1. 
சீதாக்கா!
-வ.ந.கிரிதரன் -

1.

இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.

"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

"நல்லதாகப் போய் விட்டது. நான் மான்ரியாலிருந்து வந்த பஸ் டிரைவர். என்னுடைய பஸ்ஸில் ஒரு ஸ்ரீலங்காத் தமிழ்ப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள். அகதியாக வந்தவள். இங்கு அவளுக்கு யாரையுமே தெரியாது. உன்னால் முடிந்தால் உதவ முடியுமா?"

"தாராளாமாக "வென்றேன்.

"மிகவும் நன்றி நண்பனே!" என்றவன் பயணிகள் தங்கியிருக்கும் கூடத்திற்குச் சென்று சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

"நண்பனே! இந்தப் பெண்ணுக்குத் தான் உன் உதவி தேவை" என்றவாறு அழைத்து வந்த பெண்ணைப் பார்த்த எனக்கு வியப்புத் தாளவில்லை.

"சீதாக்கா" என்று கத்தியே விட்டேன்.

சீதா அக்காவுக்கும் என்னைக் கண்டதில் அளவிடமுடியாத வியப்புத் தான். எதிர்பாராத சந்திப்பல்லவா. மான்ரியால் பஸ் டிரைவருக்கு நன்றி கூறினேன். அவனும் " உனக்கு முன்பே இவளைத் தெரியுமா? நல்லதாகப் போய் விட்டது. எல்லாம் கடவுள் அருள்" என்று கூறி விட்டுச் சென்றான்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே! "யென்றேன்.

"எனக்கும் தான் மாது. பார்த்து எவ்வளவு நாளாச்சு " என்றாள் சீதாக்கா.

சீதாக்கா உண்மையிலேயே நல்ல வடிவு தான். அதிகாலையில் எழுந்து, கோலம் போட்டு. அருகிலிருக்கும் பிள்ளையார் கோயில் சென்று கோயில் ஐயருக்கு வேண்டிய உதவிகளெல்லாம் செய்து வருவதையெல்லாம் வியப்புத் ததும்ப பார்த்துக் கொண்டிருப்பேன். ஊரில் யாருக்கு என்ன உதவியென்றாலும் உதவி செய்யத்
தயங்காத உள்ளம் சீதாக்காவினுடையது. ஆண்பிள்ளையில்லாத குடும்பம். வயதான தாயையும் பார்த்துக் கொண்டு, ஊரிலிருந்த நெசவு சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, எந்தவிதமான சூழல்களையும் துணிவாக ஏற்றுக் கொண்டு வளையவரும் சீதாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பெருமையாகவிருக்கும். சீதாக்காவுக்கு எப்பொழுதுமே துணை நான் தான். நூல் நிலையம் போகும்போது என்னைத் தான் எப்பொழுதும் கூட்டிச் செல்வாள். சீதாக்காவும் என் மூத்த அக்காவும் நல்ல சிநேகிதிகள். இருவருக்குமிடையில் நாவல்களைப் பரிமாறுவது நான் தான். கல்கி, விகடனில் வந்த தொடர்கதைகளை அழகாகக் கட்டி வைத்திருப்பாள். ஜெயகாந்தன், உமாசந்திரன், நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, ஜெகசிற்பியன் நாவல்களென்றால் சீதாக்காவுக்கு உயிர். ஆனால் ..சீதாக்கா பாவம். இவ்வளவு அழகிருந்தும், குணமிருந்தும் அவளுக்குக் கல்யாணம் மட்டும் ஆகவேயில்லை. இந்த ராஜகுமாரியைக் கூட்டிக் கொண்டு போக எந்த ராஜகுமாரன் வரப் போகின்றானோவென்றிருக்கும். நான் ஊரில் இருந்த வரையில் ஒரு ராஜ குமாரனுக்கும் அந்த அதிருஷ்ட்டம் வாய்த்திருக்கவில்லை. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன் பிறகு இப்பொழுதுதான் பத்து வருடங்கள் கழித்து சீதாக்காவைக் காண்கின்றேன்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே" என்றேன்.

"எனக்கும்தான் மாது. நம்பவே முடியவில்லை. நான் நம்புகிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடவில்லை" என்றாள் சீதாக்கா.

"சீதாக்கா எப்ப ஊரிலையிருந்து வந்தனீங்கள்"

"அது பெரியதொரு கதை. ஆறுதலாகச் சொல்லுகிறன். அது சரி நீ எப்ப கனடா வந்தனீ. ஜேர்மனியிலை நிற்கிறதாகவல்லவா கேள்விப்பட்டனான்"

"ஜேர்மனியிலைதான் இருந்தனான். போன வருஷம் தான் இங்காலை வந்திட்டேன். அங்கும் பிரச்சினைகள் தானே. நாங்களிருந்த இடத்திலை நாசிகளின்ற கரைச்சல் வேறு. மற்றது அங்கிருந்தால் 'பேப்பரும்' இலேசாகக் கிடைக்காது "

குடியுரிமைக்கான பத்திரங்களை 'பேப்பர்' என்றுதான் பொதுவாகக் கூறுவது வழக்கம்.

"இங்கே யாரோடை இருக்கிறாய் மாது"

"நானும் ஒரு நண்பனுமாக அபார்ட்மெண்ட் எடுத்து இருக்கிறம். கோப்பி ஏதாவது குடிக்கப் போறீங்களா சீதாக்கா"

இருவருமாக அருகிலிருந்த டோனட் கடையொன்றுக்குச் சென்று காப்பி அருந்தி விட்டு எனது இருப்பிடம் நோக்கிப் பயணித்தோம். பாவம் சீதாக்கா. ஊரில் இருந்த போதெல்லாம அவளுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டெமென்று நினைப்பேன். ஆனால் அதற்கான வசதிகள் என்னிடமிருக்கவில்லை. ஆனால் இம்முறை எனக்கு அதற்கான வசதிகள் நிறையவேயிருக்கின்றன. சீதாக்காவுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென மனதினுள் முடிவு செய்து கொண்டேன்.

'டொன்வலிப் பார்க்வே'யில் அதிகாலையென்ற படியால் வாகன நெரிச்சல் அவ்வளவாகவிருக்கவில்லை. மெல்லிய குளிர்காற்றில் விரைவதே சுகமாகவிருந்தது.

"சீதாக்கா நேராக ஊரிலிருந்தா வாறீங்கள்.."

"அது ஒரு பெரிய கதை. நானும் அவருமாக ஊரிலையிருந்து போன மாசம் ஒரு ஏஜெண்ட்டோடை வெளிக்கிட்டனாங்கள். அவரை சிங்கப்பூரிலை விமான நிலையத்திலை நிற்பாட்டிப் போட்டாங்கள். இனி இங்கையிருந்து கொண்டு தான் அவரைக் கூப்பிட முயற்சி செய்ய வேண்டும்"

என்ன! சீதாக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா? நிம்மதியாகவிருந்தது.

"சீதாக்கா எப்ப உங்களுக்குக் கல்யாணம் நடந்தது? எனக்குத் தெரியாதே."

"போன வருஷம் தான். அவர் எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திலை வாத்தியாராகவிருந்தவர். வெளியூர்க்காரர். எங்களுடைய வீட்டிலைதான் சாப்பாடு. அப்ப ஏற்பட்ட பழக்கம் தான். நல்ல மனுஷண்டா மாது"

சீதாக்காவின் முகத்தில் வெட்கத்தின் சாயை படிந்தது.

"ஒன்றுக்கும் கவலைப் படாதையக்கா. எப்படியாவது அவரை இங்கே கூட்டி வந்து விடலாம்"

என்று சீதாக்காவுக்கு ஆறுதல் கூறியபொழுது மனதினுள் எப்படியாவது இம்முறை சீதாக்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டேன். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க உதவ வேண்டுமென எண்ணியதுண்டு. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அவளை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கட்டாயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

2.

"சீதாக்கா, இவன் தான் என் 'ரூம்மேட்' சபாபதி. உன்னை மாதிரித்தான் சரியான சாமி பைத்தியம். சபா! சீதாக்கா எங்களுடைய ஊர் தான். பஸ் டேர்மினலிலை தான் சந்தித்தனான். கொஞ்ச காலத்திற்கு எங்களுடன் தான் தங்கப் போகின்றா"

"ஹலோ. உங்களைப் பற்றி இவன் அடிக்கடி கதைப்பான் "

சபாபதிக்கும் சீதாக்காவுக்கும் உடனடியாகவே ஒத்துப் போய் விட்டது.

"மாது! உனக்கு நல்லதொரு நண்பன் வாய்த்திருக்கிறான்" என்று மனம் நிறைந்து பாராட்டினாள்.

சீதாக்கா வந்ததிலிருந்து எங்களுடைய அபார்ட்மெண்ட்டின் கோலமே மாறி விட்டது. அதுவரையில் பிரம்மச்சாரிகளுக்குரிய வகையில் அலங்கோலமாகக் கிடந்த அப்பார்ட்மெண்ட் தலைகீழாக மாறி விட்டது. அபார்ட்மென்டிற்கே ஒருவித வடிவும் ஒழுங்கும் வந்து விட்டது. அதிகாலையிலேயே எழுந்து விடும் சீதாக்கா டேப்பில் எம்.எஸ்.சின் சுப்ரபாதத்தினைப் போட்டு விடுவாள். குளித்து விட்டு எந்த வித விகல்பமுமில்லாமல் குறுக்குக் கட்டுடனேயே உலராத கூந்தல் தோள்களில் புரண்டபடியிருக்க அபார்ட்மெண்ட் முழுக்க சாம்பிராணி புகையை பரப்பி விடுவாள். அதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த அபார்ட்மெண்ட்டிற்கே ஒருவித லக்சுமிகரக் களை வந்து விட்டது. என்னைவிடச் சபாபதிக்குத் தான் சரியான சந்தோசம். தன்னைப் போலொரு சரியான சாமிப் பைத்தியம் வந்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

நான் சீதாக்காவை இங்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு அவளுடைய கணவர் பற்றிய தகவல்களைப் பெறு முயன்றேன். அதில் வெற்றியும் கண்டேன். அவளது கணவன் இன்னும் தன்னுடைய பராமரிப்பில் தான் இருப்பதாகவும், அவனை எப்படியும் கனடா அனுப்புவது தனது கடமையென்றும் அவன் உறுதி தந்தான். சீதாக்காவையும் அவளது கணவனுடன் கதைப்பதற்கு ஒழுங்குகள் செய்தான்.

"இஞ்சேருங்க! நீங்க ஒன்றுக்கும் கவலைப் படாதையுங்கோ. நான் சொல்லுவேனே மாது. அவனும் இங்கு தான் இருக்கிறான். அவனுடன் தான் தங்கியிருக்கிறன். நான் நம்பியிருக்கிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடேல்லை. உங்களையும் கெதியிலை கொண்டு வந்து சேர்த்து விடுவான். மாது. அவர் உன்னோடையும் கொஞ்சம் பேச வேண்டுமாம்"

என்று தொலைபேசியைத் தந்தாள் சீதாக்கா.

"மாது! மெத்தப் பெரிய நன்றி. நீங்க செய்த உதவியை மறக்க மாட்டோம்" என்று அவளது கணவன் மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தான்.

"நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ அங்கிள். எப்படியும் கெதியிலை இங்கை வந்து விடுவீங்கள். சீதாக்காவைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்" என்று அவருக்கு உறுதியளித்தேன்.

3.
நாட்கள் சில விரைவாக சென்று மறைந்தன. மாதங்கள் சிலவும் கடந்து சென்றன. சீதாக்காவின் கணவர் விடயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் முறையும் ஏதோ தடங்கல். சீதாக்கா முகத்திலும் சில வேளைகளில் கவலை படரத் தொடங்கியது.
"சீதாக்கா!  ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ. எப்படியும் அவர் கெதியிலை வந்து விடுவார்" என்று ஆறுதல் கூறினேன்.

ஏன் தான் கடவுள் சீதாக்காவை இப்படிப் போட்டுச் சோதிக்கின்றாரோ என்றிருக்கும். இதற்கிடையில் எனக்கும் ஊரில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்திருந்தன. பெண்ணைப் பார்ப்பதற்காக என்னைக் கொழும்பு விரைவில் வரும்படி அக்கா கடிதம் போட்டிருந்தா. கனடா மாப்பிள்ளையென்றபடியால் கொழுத்த சீதனாமாம். பெட்டையும் நல்ல வடிவாம். சிவப்பாய் தக்காளிப்பழம் மாதிரி. தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் மாதிரி கனவுகளில் மிதக்க ஆரம்பித்தேன். இவ்விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் நான் சபாபதியிலேற்பட்டிருந்த மாற்றத்தினை அவதானிக்கத் தொடங்கினேன். அடிக்கடி ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்பொழுதெல்லாம் அநேகமாக அப்பார்ட்மென்டே கதியாகக் கிடக்கத் தொடங்கினான். அதிகாலையே சீதாக்காவுடன் சேர்ந்து எழுந்து விடத் தொடங்கினான். குறுக்குக் கட்டுடன் சாம்பிராணித் தட்டுடன் வரும் சீதாக்காவின் மேல் அவனது கண்கள் இரகசியமாக மேயத் தொடங்கியதைத் தற்செயலாக அவதானித்தேன். ஓரிரவு வீடு அபார்ட்மெண்ட் திரும்பிய பொழுது வீடியோவில் தமிழ்த் திரைப்படமொன்று ஓடிக் கொண்டிருந்தது. சீதாக்கா சோபாவில் சாய்ந்து நித்திரையாகிக் கிடந்தாள். படம் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போயிருக்க வேண்டும். அவளது சேலை கூட இலேசாகி மார்பிலிருந்து விலகிக் கிடந்தது. இதனை உணராமல் தூங்கிக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த் சபாபதி என்னை கண்டதும் சிறிது திகைத்தவனாகத் தனது பார்வையினை மாற்றினான். எனக்கு முதல் முறையாகக் கவலையேற் பட்டது. சீதாக்காவுக்கு இவனாலேதாவது மனக் கஷ்ட்டங்களேற்பட்டு விடக் கூடாதேயென்று மனம் தவித்தது. சபாபதி நல்லவன்.ஆனாலும் பருவக் கோளாறு. தவறிழைக்க மாட்டானென்று பட்டது. ஆனால் ..எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? சீதாக்காவை அவளது கணவருடன் சேர்த்து வைக்கும் மட்டும் அவளைப் பாதுகாத்து வைக்க வேண்டுமேயென்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.
இதற்கெல்லாம் முடிவு....சபாபதியை வெளியே அனுப்புவது தான். இவன் என் நீண்ட கால நண்பனல்லவே, கனடாவிற்கு வந்த இடத்தில் அறிமுகமானவன் தானே. ஒரு நாள் அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு அருகிலிருந்த டோனட் கடைக்குச் சென்றேன்.

"இங்கை பார் சபா. உன்னோடைத் தனியாக ஒரு விசயம் பேச வேண்டும்"

'என்ன? ' என்பது போல் அவன் என்னை நோக்கினான்.
"இஞ்சை பார் சபா. நான் சுத்தி வளைக்க விரும்பவில்லை. இனியும் நீ என்னுடன் இருப்பதை நான் விரும்பவில்லை. சீதாக்கா போகும் மட்டுமாவது நீ என்னுடனிருப்பதை நான் விரும்பவில்லை. உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இந்த அபார்ட்மெண்டுக்கு நீ வரும் போதே ஒரு மாதம் நிற்கிறனென்று தான் நீ வந்தனீ. நானும் விரைவிலை கல்யாணம் செய்யவிருக்கிறன். அதன் பிறகு என்னுடைய மனுசியும் வந்து விடுவாள். நீ வேறை அபார்ட்மெண்ட் பார்க்கிறது நல்லது..."

சபாபதி இதற்கேதும் மறுப்புத் தெரிவிக்காதது எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. அடுத்த வாரமே அவன் இடம் மாறி விட்டான். சீதாக்காவுக்குக் கூட வியப்பாகவிருந்தது. "ஏன் கெதியிலை மாறிவிட்டான். உங்களுக்கிடையிலை ஏதாவது பிரச்சினையோ?' என்று கேட்டாள்.

4.
சபாபதியின் அமைதிக்கான காரணம் விரைவிலேயே விளங்கி விட்டது. அபார்ட்மெண்ட் மாறிய வேகத்திலேயே அவன் எனக்கும் சீதாக்காவுக்குமிடையில் தொடர்பு இருப்பதாக கதையினைப் பரப்பி விட்டான். நான் இதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவன் இவ்வளவு நஞ்சு மனம் கொண்டவனாக இருப்பானென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எனக்கு என்னைப் பற்றிக் கவலையேதுமில்லை.ஆனால் இவற்றால் சீதாக்காவுக்கு ஏதாவது பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாதேயென்று மனம் கிடந்து தவித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்யலாமென்று மூளையைப் போட்டுக் குடைந்தது தான் மிச்சம். இதற்கிடையில் இதன் முதலாவது விளைவாக அக்காவின் கடிதம் வந்திருந்தது.

" தம்பி, உனக்குப் பேசிய கல்யாணம் முறிந்து விட்டது. உனக்கும் எங்களுடைய சீதாக்காவுக்கும் தொடர்பாமென்று யாரோ கதை கட்டி விட்டிருக்கிறாங்கள் போலை. அவங்களுடைய காதுகளுக்கும் அந்தக் கதை போய் விட்டது. இந்தச் சம்மந்தம் வேண்டாமென்றிட்டாங்கள். நான் சொல்லுறனென்று குறை நினைக்கதையடா. பனை மரத்தினடியில் நின்று பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறதாத் தானிந்த உலகம் சொல்லும். உன்னை எனக்குத் தெரியும். சீதாவை எனக்குத் தெரியும். ஆன இந்த உலகத்துக்கு இதெல்லாம் விளங்கவாப் போகுது. நீ சீதாவுக்குத் தனியாக அபார்ட்மெண்ட் பார்த்து வைக்கிறதுதான் உனக்கும் நல்லது. அவவுக்கும் நல்லது. அவளின்ற புருசனுக்கும் இந்தக் கதை போய் ஏதாவது பிரச்சினை வரக் கூடாது பார்"

இவ்விதம் எழுதியிருந்தாள். எனக்குக் கவலை கவலையாகவிருந்தது. சீதாக்காவை நினைத்தால் தான் பாவமாயிருக்கு. பாழாய்ப்போன் சீதனப் பிரச்சினையால் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அவளுடைய நல்ல காலம் அவளைப் புரிந்து கொண்ட ஒரு இராமன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான். சீதாப் பிராட்டியையே இந்தப் பாழாய்ப் போன ஊர் விட்டு வைக்கவில்லையே. அக்கினி குளிக்கவல்லவா வைத்து விட்டது. பாவம் சீதாக்கா. இவளை மட்டும் சும்மா வைத்து விடுமா?

5.
அன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு முடிவுடன் வந்து கொண்டிருந்தேன். என்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் சக நண்பியான யோகமாலா அவளும் தாயுமாகத் தான் அண்மையில் வாங்கிய 'கொண்டோ'விலையிருக்கிறாள். அவளுடன் இப்பிரச்சினை பற்றிக் கதைத்ததில் அவள் சீதாக்காவை அவள் கணவர் வரும் மட்டும் தன்னுடன் வந்து தங்கியிருக்க உதவுதாக உறுதியளித்தாள். அதற்குப் பதிலாக என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கு வாடகை தருவதாக நானும் உறுதியளித்தேன். இது பற்றி சீதாக்காவுடன் கதைக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். எப்படித் தொடங்குவது என்பது தான் தெரியவில்லை. ஒரு களங்கமில்லாத நட்புக்குக் கூடக் களங்கம் கற்பித்து விடுகின்றதே இந்த உலகம். ஊரில் தான் பிரச்சினை என்று வந்தால் இங்கும் நாட்டு நிலைமகளால் ஓடி வந்த சீதாக்காவுக்கு உதவக் கூட முடியாமலிருக்கிறதே.

அபார்ட்மெண்ட் வந்த எனக்கு முதலில் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வந்து கதவைத் திறக்கும் சீதாக்காவைக் காணவில்லை. அபார்ட்மெண்ட் இருளில் மூழ்கிக் கிடந்தது.

லைற்றைப் போட்டேன். சீதாக்காவைக் ஓரிடத்திலும் காணவில்லை. அப்பொழுதுதான் மேசையில் விரித்து வைக்கப் பட்டிருந்த கடிதத்தினை அவதானித்தேன். அவசரமாக எடுத்துப் பிரித்தேன். சீதாக்கா தான் எழுதியிருந்தாள்.

"மாதவா! நான் இப்படி சொல்லிக் கொள்ளாமல் போவதற்காகக் கோபிக்க மாட்டாயென்று நினைக்கிறேன். இன்று என்னுடைய கணவர் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தார். அப்பொழுதுதான் உன்னையும் என்னையும் சேர்த்துக் கதை கட்டியிருந்த விசயம் பற்றிக் கூறினார். அவரது கவலையெல்லாம் உன்னைப் பற்றித் தான். அவருக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இந்தக் கதைகளைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார். எனக்கு இப்பிடியொரு நல்ல புருசன் கிடைத்தது கதிர்காமக் கந்தனின்ர அருளால் தான். உன்னுடைய அக்காவும் இன்று பகல் போன் பண்ணியிருந்தா. அப்பத் தான் எனக்கு உன் கல்யாணம் நின்ற விசயமே தெரியும். நான் இங்குள்ள சுப்பர்மார்க்கட்டிலை அடிக்கடி சந்திக்கிற மட்டக்களப்புப் பெட்டையொன்று தனியாத் தான் அபார்ட்மெண்ட் எடுத்துத் தங்கியிருக்கிறா. அவ ஒவ்வொரு முறை சந்திக்கிற போதும் தன்னுடன் வந்து விடும்படி கேட்கிறவ. அவவுடன் போவதாக முடிவு செய்து விட்டேன். என்னாலை உனக்கு வீணாகப் பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாது பார். உன்னுடன் நேரிலை இதை கூற எனக்குத் துணிவில்லை. அதுதான் கூறாமலே போகின்றேன். நான் உனக்குப் பிறகு ஆறுதலாகப் போன் எடுக்கிறேன்...இப்படிக்கு... சீதாக்கா" என்றிருந்தது.

தொப்பென்று சோபாவில் போய்ச் சாய்ந்தேன். ஊரில் இருந்த மட்டும் ஒரு ராஜகுமாரி போல் வளைய வந்து கொண்டிருந்த சீதாக்காவுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கும். அன்னிய நாட்டிலாவாது ஒரு சந்தர்ப்பம் வந்ததேயென்று சந்தோசப் பட்டால் அதற்கும் கொடுத்து வைக்கவில்லையேயென்று கவலையாகவிருந்தது. நாட்டு நிலைமைகளால் உறவுகள் பிரிபட்ட நிலையில் வந்திருந்த சீதாக்காவுக்கு உதவுதற்குக் கூட இந்தப் பாழாய்ப்போன சமுதாயம் விட்டு வைக்க மாட்டெனென்கிறதே. எத்தனை நாட்டுக்குத் தான் புலம் பெயர்ந்து போயென்ன? புலன் பெயர்ந்தோமா?

நன்றி: திண்ணை,  பதிவுகள்.

 'சீதாக்கா' சிறுகதை பற்றிப் பரிமாறப்பட்ட கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.

அன்புள்ள கிரிதரன், திண்ணை மின்னிதழில் உங்களுடைய சீதாக்கா கதையைப் படித்தேன். மிக நன்றாக இருந்தது. கடைசி வரியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்கத்தக்கது. பாராட்டுக்கள். அன்புடன் மதுரபாரதி

"சீதாக்கா": உலகின் நல்ல மனிதர்களை; நற்சிந்தனைகளை என்று தன் "சீதாக்கா" கதையில் காட்டியிருக்கும் வ.ந.கி. இக்கதையை எழுதிய நேரத்தில் கொஞ்சம் உறங்கியிருந்தால் அவர் உடல் நலத்திற்கு நன்மையளித்திருக்கும். அயோக்கியனாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும் அறை நண்பனைத் தவிர மற்றெல்லாப் பாத்திரங்களும் சுத்த யோக்கியர்களாக சிந்திக்கிறார்கள். அப்படியானால் இன்றைய சமூகத்தில் இந்த யோக்கியர்களைக் காண்பதே அரிதாகி விட்டதா? கதை சொல்லியுடனோ அல்லது அறை நண்பனுடனோ சீதாக்கா ஏன் உறவுவைக்கக் கூடாது? "கண்காணிப்புச் சமூகம்" என்கிற "தற்கற்பிதக் தனங்கள்" எல்லாம் மீண்டும் மீண்டும் விலங்கிடவே பயன்படலாம். பாதை மாறிகள், அயோக்கியர்கள், எதிரோடிகளுக்கு உள்ள தற்துணிச்சல் இல்லாததற்கு யோக்கியர்கள் கவலை கொள்ளவெண்ண்டும். வ.ந.கி. யின் எழுத்து நடையில் மாற்றமிருக்கிறது. கதையின் ஓட்டம் தடையற்று வழுக்கிச் செல்கிறது. கருவின் அழுத்தங்கள் கூடுகின்றபோது நல்ல கதைகளை வ. ந.கி. யால் எழுதமுடியும்! -செங்கள்ளுச் சித்தன் (திண்ணை விருந்தினர் பக்கத்தில்)-

சித்தரின் திண்ணை படைப்புகள் பற்றிய கருத்துகளிற்காக நன்றிகள். சீதாக்கா பற்றிய அவரது கருத்துகளில் 'சீதாக்கா ஏன் கதை சொல்லியுடன் அல்லது நண்பனுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது?' எனக் கேள்வியொன்றையும் எழுப்புகின்றார் சித்தர்? ஏன் சித்தர் இவ்விதம் கேள்வி எழுப்புகின்றார்? 'சொம்பு போல் குடிவைக்குள்ளே சோறு போல் கொதிக்கும் கள்'ளை மாந்திய மயக்கத்தில் அவர் இவ்விதம் கேள்வி கேட்கின்றாரோ நாமறியோம்? ஆனாலும் அந்தக் கேள்வியின் அரத்தமற்ற தன்மையினை யாம் புரிவோம். ஒரு பெண் என்றால் அவள் இன்னொரு ஆணுடன் புணர்வதைத் தான் பலர் தவறாகப் பெண் உரிமையென விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள் பலர் என்பது போல் எனக்கொரு சந்தேகம். சித்தருக்கும் அவ்விதமொரு எண்ணப் பாங்குள்ளதோ தெரியவில்லை. இந்தக் கதையில் வரும் சீதாக்கா ஒரு இரக்கத்திற்குரிய பாத்திரம். சமூகத்தில் நிலவுகின்ற சீதனப் பிரச்சினையால் அழகிருந்தும் குணமிருந்தும் இவளது கல்யாணம் பல வருடங்களாகத் தடைப்பட்டு விட்டிருந்ததொரு நிலையில் புலம் பெயர்ந்தவளையும் சோதனைகள் பல வடிவங்களில் தொடர்கின்றது? அன்புக்குரிய கணவனை இன்னுமொரு நாட்டில் இழந்த நிலையில் ஆதரவற்றதொரு சூழலில் அன்னிய நாட்டில் புகல் தேடும் இவளது நிலையினை உணர்ந்து கொள்ளாமல் எதற்காக இவளை இவ்விதமானதொரு கோணத்தில் சித்தர் பார்க்கின்றாரோ? பெண் என்றால் அவள் வெறும் புணர்விற்குரியதொரு பண்டம மட்டும் தானா? இக்கதையில் வரும் சீதாக்கா உண்மையில் கொடுத்து வைத்தவள். உண்மையில் இது போன்ற பல உண்மைச் சம்பவங்களில் பெண்கள் பலர் சீரழிக்கப் பட்டிருப்பதையே அவர்களது குடும்பங்கள் சிதறிக்கப் பட்டிருப்பதையே காணமுடிகின்றது. இவையெல்லாம் பெண்களை வெறுமனே பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்குரிய பண்டங்களிலொன்றாகக் கருதி அணுகியதால் வந்த வினைகளென்பது எனது கருத்து. ஆனால் மேலுள்ள கதையில் வரும் சீதாக்கா கொடூர சிந்தையுள்ளதொரு கணவனிடமிருந்து விலகியோடி வந்து இன்னுமொரு துணையினைத் தேடுபவளாக இருந்து அதனை மறுத்திருந்தால் சித்தர் கூறுவதில் நியாயமிருக்கக் கூடும்? - மாயவன் -('திண்ணை' விருந்தினர் பகுதியில்)

அம்பி மாயா! சித்தன் "சீதாக்கா" குறித்து எழுதியதில் 50% சரியென்றே அடியேனுக்குப் படுகிறது.ஆனாலும் பெண்ணுரிமைப்போர் என்பதை கட்டற்ற பாலுறவாகவும், எதுக்கெடுத்தாலும் ஆண் சொல்வதை எதிர்க்கவேண்டும் என்றும், இன்னும் எத்தனையோ வல்லடிவழக்குகளாகவும் ப்ரிந்துவைத்துக்கொண்டு செயற்படும் நாரீமணிகளையும், அவர்தம் பக்கவாத்தியங்களையும் நினைக்க சிரிப்புத்தான் வருகிறது..!இதே போல இலக்கியத்தில் ஒரு கோஷ்டி இருக்கிறது. ஒரு மாஜிக்கல் கதை, ஒரு பின்நவீனக்கதை, ஒரு ஒருபாலுறவுக்கதை, என்று செருப்புக்கேற்ப காலைத் தறிப்பவர்கள் காட்டும் சர்க்கஸ் பெரிய தொந்தரவு. மற்றும் உன் "சீதாக்கா" கதையை ஒரு பாட்டியோ, அல்லது வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு கதைகாவியோ ரெலிபோனில் மற்றவருக்கு அளக்கக்கூடும்.... இதில் கதையம்சம் இருக்கிறது கலைத்துவமோ, பாத்திரங்களின் பன்முக வெளிப்பாடுகளோ ஒன்றுமேயில்லையே. சற்றுச் சிந்தித்துப்பார் மகனே!! -பிரியா (திண்ணை விருந்தினர் பகுதியில்)-

சீதாக்கா கதை புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை என்பதையே அதன் மையக் கருத்தாக எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். பெண்ணியமோ, பெண் பிரச்சனைகளோ பேசுவதாக இல்லை அந்த கதை. அப்படிப் பேச முயன்றிருந்தால் சீதாக்காளின் சிந்தனையிலிருந்து கதை வந்திருக்கும். இது கதை சொல்லி (ஓர் ஆண்) அவர் பார்வையிலிருந்தே வந்திருக்கின்றது. சீதாக்கா பார்வையிலிருந்து வந்திருந்தால் சீதாக்கா தன் மேல் தவறான பார்வை செலுத்தும் அறைத் தோழனை தானே உணர்ந்து தனது நடவடிக்கையைச் செய்திருப்பாள். சீதாக்கா எல்லாவற்றுக்கும் ஆணை எதிர்பார்த்து இருப்பவளாகச் சித்தரித்திருக்க மாட்டர். புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்ல என சொல்ல வந்த விசயத்தில் ஆசிரியர் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் அதில் வரும் பெண் உணர்வுகள் மறைக்கப்பட்டது வருத்தமே -திலகபாமா ( சிவகாசி)-

சீதாக்கா எல்லாவற்றுக்கும் ஆணை எதிர்பார்த்து இருப்பவளாகச் சித்தரித்திருக்க மாட்டர்.' எனத் திலகபாமா கூறுவது தவறு.
இக்கதையில் வரும் சீதாக்கா இறுதியில் தனித்தே முடிவு எடுக்கின்றாள். அவ்விதம் அவள் எடுக்கும் முடிவு அவளாகவே எடுக்கும் முடிவு. அதற்குக் கூட அவளுக்கு இன்னுமொரு பென்ணே உதவுகின்றாள். எந்த வொரு ஆணையும் சார்ந்து அவளது முடிவு இருக்கவில்லையே. அதே சமயம் திலகபாமா கதை 'புலம் பெயர்ந்தும் புலன் பெயராத' தமிழ் மக்களின் நிலையினைக் கூறுவது எனக் கூறுவதும் சரிதான். அதே சமயம் பிரியர் படைப்பு பற்றிக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தவொரு படைப்பிலுமே முழுமை இல்லை. இயற்கையின் படைப்பான எம்மிலும் தான். ஆனால் மனிதர் படைக்கும் எழுத்துப் படைப்புகளில் மட்டும் பலர் முழுமையைத் தேட விளைகின்றார்கள். ஒரு படைப்பு பல்வேறு காரணங்களுக்காக புரியப்படலாம். சுவைக்கப் படலாம்.சில படைப்புகளில் கதையமசம் சிறந்திருக்கலாம். சிலவற்றில் அழகியல் அமசம் சிறந்திருக்கலாம். சிலவற்றில் கூறப்படும் பொருள் சிறந்திருக்கலாம். ஆனால் ஒரு படைப்பில் எல்லாமே முழுமையாக , அனைவரது பார்வையிலும், அமைந்து இருப்பதில்லை. ஒருவருக்கு அவ்விதம் அமைந்திருப்பதாகப் பட்டால் இன்னொருவருக்கு அவ்விதம் அமைந்திருப்பதில்லை. சித்தரிற்கு அதன் நடை பிடித்திருக்கின்றது. பிரியருக்கு அதில் கதையம்சம் இருப்பதாகப் படுகின்றது. திலகபாமாவுக்கு அது கூற வந்த பொருள் பற்றியும் அதன் வெற்றி பற்றியும் ஒருவித கருத்து இருக்கின்றது. மதுரபாரதிக்கு கதை 'நன்றாக' வந்திருப்பதாகப் படுகின்றது. உதாரணமாகப் பிரியருக்கு ஆழ்வார் பிரசுரங்களில் அளவற்ற பிரியம் இருக்கும். ஆனால் அனவருக்கும் அவ்வாறே இருப்பதில்லையே. இந்நிலையில் இவ்வுலகில் 'முழுமையற்ற படைப்பினில் முழுமையைத் தேடும் மூடர் நாம்' என்று படுகின்றது. அதற்காக 'சீதாக்கா' ஒரு சிறப்பான கதையென்று வரிந்து கட்டிக் கொண்டு வாதாட நான் இங்கு வரவில்லை. அதில் பலமுமிருக்கலாம். பலவீனமுமிருக்கலாம். ஆனால் ஒரு சிலரையாவது அது பற்றிக் கருத்துக் கூற அது நிர்ப்பந்தித்துள்ளது. அந்த வகையில் அதற்கும் ஒரு வெற்றியுண்டு என்றே படுகின்றது. -மாயவன் -(திண்ணை, விருந்தினர் பகுதியில்)

Dear Giritharan, I read your "Seetha Acca" short story and am very much impressed. You have written nicely, what is happening in our society in the western world today. With regards, Rajah. (பதிவுகள் கடிதங்களிலிருந்து)

நன்றி: பதிவுகள் மார்ச் 2002; இதழ் 27.

2. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.
- வ.ந.கிரிதரன் -


ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான்.

பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..' இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.

இதற்குள் றோட்டுக் கரையில் சனங்கள் விடுப்பு விண்ணானம் பார்க்கக் கூடத்தொடங்கிட்டுதுகள். இந்த விஷயத்தில் எல்லா மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன் பார்வையை மறைத்தபடி கனடா பக்கர்ஸிற்குச் சொந்தமான பெரிய 'ட்றக்'கொன்று நின்றதால் இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.

றோட்டுக் கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக்காரனொருவனைப் பார்த்து ''ஏ..மேன் ..வட்ஸ் த மாட்டார்? வட்ஸ் கோயிங் ஓன்..." பலமாகக் கத்தினான்.

அதற்கு அந்தச் சைனாக்காரன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ''பீவ்..எஸ்கேப்..ஸ்லோட்டர்.." என்றான்.

அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத்தைக் கேட்டுச் சிரித்தான். இவனுக்கும் சிரிப்பாகவிருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று ஸ்லோட்டர் ஹவுஸ்ஸிலிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன் அவ்விதம் கூறினான் என்பதும் விளங்கியது.

மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம் தோன்றியது. அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரையோரம் நிறுத்தி விட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். 'ஸ்ட்ரீட் கார்' செல்லும் இருப்புப் பாதையின் மேல் , சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்களைப்பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம் கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாயிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.

உருண்டு திரண்டு கொழுகொழுவென்று வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த கனடா பக்கர்ஸ் ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல் பாசங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தது.

எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால், அந்த ஐந்தறிவு உயிரினால், தாக்குப் பிடிக்க முடியும்? 'மட மாடே! மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?'

திடீரென பொன்னையாவிற்குச் சிந்தையில் ஒரு எண்ணம் எழுந்தது.

'இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்?' அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. 'இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருக்கும்?'

'கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை..அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது..'

ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை...'இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?..அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள்..தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்...'

மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன் தன்னை நெருங்குபவர்களை எதிர்த்து நிற்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற்கிறது.

அதன் கண்களிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது..எதை நினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா?தன்னை சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர்களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது?

திடீரெனப் பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'ஏன் இந்த மாட்டிற்குரிய விலையைக் குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினாலென்ன? ஊரிலையென்றாலும் வீட்டு வளவிலை போய்க் கட்டி வைக்கலாம்...இங்கு எங்கு போய்க் கட்டி வைப்பது..? அப்பார்ட்மென்றிலையா..?அப்படித்தான் காப்பாற்றினாலும் இந்த ஒரு மாட்டைக் காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடுகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா..?'

இதற்கிடையில் யாரோ மாடு டிரபிக்கிற்குத் தடையாயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து விட்டார்கள் போலும்.. 'எமர்ஜன்ஸி பிளாஸிங் லைட்'டுடன் 'சைரன்' முழங்க பொலிஸ் காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்து நின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்களென்று கமராக்களுடன் கூடி விட்டனர்.

மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப் போராட்டத்திலீடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம் பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல் பட முடியாத , இயலாத கூட்டம். தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குத் தன்மேல் ஒருவித வெறுப்புக்கூடத் தோன்றியது.

தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக்கண்ட பொலிஸார் தங்களிற்கு கூடிக் கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கத் தொடங்கிவிட்டன.

தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில் ஹோர்னகளை மாறிமாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதைப் பொலிஸார் உணர்ந்தார்கள்.

இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.

ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப் பட்ட நிலையில் 'ட்ரான்குலைசரா'ல் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டைத் தூக்கிய கனடாப் பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை 'ஸ்லோட்டர் ஹவுஸி'ற்குள் கொண்டு சென்றார்கள்.

ஒருவழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.

பஞ்சாப்காரன் திட்டப் போகின்றானென்ற நினைப்புடன் தன்காரில் பாய்ந்தேறினான் பொன்னையா. கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக்கூறி வழக்குப் போடும் 'ஹியுமேன் சொசைடி'யின் ஞாபகமும் வந்தது. சிரிப்பு வந்தது.

சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தை தந்தாலும் அதன் சுதந்திர வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன் மேல் ஒருவித பக்தியை, பெருமிதத்தை ஏற்படுத்தியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான்.

[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

நன்றி: பதிவுகள் யூலை 2000; இதழ் 7. , திண்ணை


3. நீ எங்கிருந்து வருகிறாய்?'
- வ.ந.கிரிதரன் -


கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:

"இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!"

இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது 'ஹாக்கி' அல்லது 'பேஸ் பால்' விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.

"உண்மைதான். ஆனாலும் எனக்கு இந்தக் குளிரைத் தாங்க முடியும். ஆனால்.. இந்த உறைபனி (Snow) இருக்கிறதே... அதனை மட்டும் தாங்கவே முடியாது.." என்று இவன் பதிலுக்கு உரையாடலினைத் தொடர்ந்தான். அதற்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தவனாகத் தொடர்ந்தான்:

"நீ வெப்பமான நாட்டினில் பிறந்தவன் அதுதான். ஆனால் எனக்கு இந்த உறைபனியில்லாவிட்டால் இருக்கவே முடியாது. இதற்குள்ளேயே பிறந்து, வளர்ந்து, விளையாடி வளர்ந்தவர்கள் நாம்... அது சரி..."

இவ்விதம் அவன் கூறிச் சிறிது நிறுத்திய பொழுது உடனடியாகவே இவனுக்கு அவன் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகின்றானென்பது தெரிந்து விட்டது. இருபது வருடங்களாக இந்த மண்ணில் இருக்கிறானல்லவா. இது கூடத் தெரியாமல் போய் விடுமாவென்ன?

"ஏ! நண்பனே! நீ அடுத்து என்ன கூறப் போகின்றாயென்பது எனக்குத் தெரிந்து விட்டது..." என்று இவன் கூறவும் அவனது முகத்தில் சிறிது வியப்பு படர்ந்தது.

"நீ என்ன சோதிடனா எதிர்காலத்தை எதிர்வு கூறுவதற்கு?"

"நான் சோதிடனல்லன். ஆனால் இந்த மண்ணுடனான எனது பிணைப்பும் சொந்தமும் எனக்கு இந்த விடயத்திலெதிர்வு கூறும் வல்லமையினைத் தந்து விட்டன. அது சரி.. 'நீ எங்கிருந்து வந்தாய்" (Where are you from?') என்பது தானே நீ கேட்க எண்ணிய வினா?"

அதற்கு அவன் சிரித்தபடியே பதிலிறுத்தான்: "நீ நன்றாகவே கனடாவினைப் பற்றிக் கற்றறிந்து விட்டாய்."

"உண்மைதான். ஏனெனில் நான் இந்த நாட்டுக் குடிமகனல்லவா!" என்றான். இந்தக் கேள்வியினை, 'நீ எங்கிருந்து வருகிறாய்?' என்னும் வினாவினை, அவன் இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்த நாட்களிலிருந்து எதிர்கொண்டு வருகின்றான். இளையவர், முதியவரென்ற பாகுபாடின்றி அவன் அனைவரிடமிருந்தும் அவ்வப்போது எதிர்கொண்டு வருகின்றான். அவன் வந்த பின் இந்த மண்ணில் அவதரித்தவர்களும் வளர்ந்து பெரிதாகி அவனிடம் இந்த வினாவினத் தொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அண்மையில் அவனிடம் மட்டுமே கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த மண்ணில் பிறந்த அவனது வளர்ந்து விட்ட அவனது குழந்தையிடமும் கேட்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். வந்த புதிதில் அவன் இந்தக் கேள்வியினை ஒருவித ஆர்வத்துடன் எதிர்நோக்கினான். தன்னைப் பற்றி அறிய இவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வமென்று மகிழ்வுற்றான். எனவே அப்பொழுதெல்லாம் அவனது இதற்கான பதிலும் விரிவானதாகவே இருக்கும். தன் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றியெல்லாம் விரிவாகவே அலுக்காமல், சலிக்காமல் அவன் பதிலுறுப்பான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அந்த ஆர்வமில்லை. ஆரம்பத்தில் ஆர்வமாககப் பதிலிறுத்தவன் அதன் பின் பதிலிறுப்பதலில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். வினாத்தொடுப்போருக்குப் பூகோள சாத்திரம் கற்பிக்கத் தொடங்கினான். இந்தக் கேள்வி எதிர்பட்டதுமே அவன் பின்வருமாறு தனது பதிலைக் கேள்வியொன்றுடன் ஆரம்பிப்பான்.

"இதற்கான பதிலை நீ அறிய வேண்டுமானால்.. அதற்கான எனது பதில். ஊகி என்பதுதான்.."

"ஓகே.. ஊகிப்பதா.. சரி..எங்கே முகத்தைக் காட்டு பார்ப்போம்.... " என்பார்கள். இவனும் முகத்தைக் காட்டுவான். உரையாடல் தொடரும்.

"பார்த்தால்... கயானா.. அல்லது கிழக்கிந்தியனைப் போல் தெரிகிறாய்... ஓகே. நீ இந்தியனா.." என்பார்கள்.

இவன் அதற்குக் கீழுள்ளவாறு பதிலிறுப்பான்:

"நீ நன்கு நெருங்கி விட்டாய்... ஆனால் நான் இந்தியனில்லை... ஆனால் எனது மண் இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ளது..."

"ஓகே.... பாகிஸ்த்தானா.. "

"அதுவுமில்லை.... " என்பான்.

"பங்களாதேஷ்.." என்பார்கள். அவ்வளவுதான் அதற்குமேல் பெரும்பாலோருக்கு வேறு நாடுகளின் பெயர்களே தெரிவதில்லை. இவனும் விட மாட்டான்.

" சரி.. உனக்கு நான் சிறிது உதவி செய்கிறேன்.. தயாரா" என்பான்.

அவர்களும் அடுத்த கட்டத்திற்குத் தயாராவார்கள்.

"அது ஒரு அழகான தீவு.. ஆங்கிலேயர்களின் முக்கியமான காலனிகளிலொன்று."

" நீ என்னை நல்லாவே சோதிக்கிறாய்... இனி நான் பூகோள சாத்திரம் இதற்காகவே படிக்க வேண்டும்..." என்று கூறியபடியே மண்டையினைப் போட்டு உடைத்துக் கொள்வார்கள். இறுதியில் இவனும் மனமிரங்கிப் பதிலிறுத்து விடுவான். பின்னர் அதிலும் இவனொரு சிறியதொரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். இறுதியாகப் பதிலிறுப்பதைத் தவிர்த்துப் பின்வருமாறு கூறுவான்: 'உனக்கு உண்மையிலேயே இதற்கான பதில் தேவையென்றால்.. வீடு சென்றதும் உலக வரைபடத்தை எடுத்துப் பார் புரிந்து கொள்வாய்... இந்தியாவின் தெற்குப் புறமாக உள்ள தீவு என்னவென்று அறிய முயற்சி செய். பதிலை நீயே கண்டு கொள்வாய்....'

"......."

"என்ன சிந்தனையிலாழ்ந்து விட்டாய்? என் கேள்விக்கென்ன பதில்?" என்றான் அவன்.

"நண்பனே! இதற்கான பதிலுனக்குத் தேவையென்றால்... என் கேள்விக்கு நீ பதில் தரவேண்டும்."

"உன் கேள்வியா? நீ தான் கேள்வியே கேட்கவில்லையே... கேட்காத கேள்விக்கு எவ்விதம் பதில் தரமுடியும்? "

"அவசரப்படாதே... இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்... நீ தயாரா?'

"நான் தயார். நீ தயாரென்றால் சரிதான்..."

"நீ எங்கிருந்து வருகின்றாய் நண்பனே! "

" நானா.... தொடராண்டோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வருகின்றேன்.."

"நான் அதைக் கேட்கவில்லை.."

"பின் எதைக் கேட்கிறாய்.."

"உன் மூலமென்ன.. நீ எங்கிருந்து வந்தாய்... இந்த மண்ணுக்கு..."

" நீயென்ன விளையாடுகின்றாயா... இது நான் பிறந்த மண்... "

"நான் அதைக் கேட்கவில்லை.... உன்னுடையா மூலமென்ன.. ஆதியில் உன் குடும்பத்தவர் எங்கிருந்து வந்தார்கள்... அது உனக்குத் தெரியும் தானே..."

"ஓ.. அதுவா... அவர்கள் ஒண்டாரியோ மாநிலத்தில் வடக்கிலுள்ள தண்டர்பேயிலிருந்து வந்தவர்கள்....."

"அதையும் நான் கேட்கவில்லை... அது சரியான பதிலுமல்ல.... " என்றான். கேள்வி கேட்டவன் முகத்தில் சிறிது பொறுமையின்மை, ஆத்திரம் பரவியதை இவன் அவதானித்தான். அது அவன் குரலிலும் தொனித்தது.

" நீ என்னுடன் விளையாடுகிறாய். நான் யார் தெரியுமா? இந்த மண்ணின் குடிமகன். என்னைப் பார்த்து நீ கேலி செய்கிறாய்.."

" நண்பனே... பொறு.. அவசரப்படாதே... நீ இன்னுமென் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நான் கேட்டதென்னவென்றால்.... உன் தாத்தா, பாட்டி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்..."

அவன் கூறினான்: " இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கின்றாய்.. கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கின்றாய்.... அது உனக்குத் தெரிகிறதா?"

"எனக்கு நன்றாகவே தெரிகிறது. உனக்குத் தெரிந்தால் சரிதான்" இவ்விதம் கூறிவிட்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த போக்குவரத்து வண்டியில் ஏறுவதற்குத் தயாரானான் இவன்.


நன்றி:இசங்கமம் http://www.e-sangamam.com/who.asp
பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60, திண்ணை


4. தேவதரிசனம்!
வ.ந.கிரிதரன்


கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின் கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில் நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும் ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல் தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா? அப்பொழுதுதான் அந்த அதிசயம் என் கண் முன்னால் நிகழ்ந்தது. எனக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் என்னருகில் இன்னுமொரு மனித உருவமிருப்பதை அப்பொழுதுதான் அவதானித்தேன். வியப்புடன் ஒருவித திகிலும் கலந்ததொரு உணர்வு மேலிட வினவினேன்:

"யார் நீ? எப்பொழுது இங்கு வந்தாய்?"

"நான்?" இவ்விதம் கேட்டுவிட்டு ஒரு கணம் அந்த அந்நியன் சிரித்தான். தொடர்ந்தான்: "விபரிப்பதற்கு அதுவொன்றும் அவ்வளவு சுலபமல்ல நண்பனே! உனக்குப் பொறுமையிருந்தால் சிறிது விளக்குவேன்."

நான் அந்தப் புதியவனை மெளனமாக எதிர்நோக்கி நின்றேன். அவன் தொடர்ந்தான்.

"என் கால்களைப் பார்க்கிறாயா?" இவ்விதம் கூறியவன் தனது ஆடைகளைச் சிறிது உயர்த்தினான். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அங்கு பாதங்கள் நிலத்தைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்ததை அவதானித்ததின் வியப்பின் விளைவே எனது ஆச்சரியத்துக்குக் காரணம்.

வந்தவன் தொடர்ந்தான்" "இப்பொழுது என் கண்களைச் சிறிது நேரம் பார்." பார்த்தேன். ஏற்பட்ட வியப்பு தொடர்ந்தது. அங்கு அசைவற்ற கண்களைக் கண்டேன்.

வந்தவன் மேலும் தொடர்ந்தான்: "இப்பொழுது உண்மை புரிந்ததா?"

நான் சிறிது தடுமாறினேன்: "அப்படியென்றால் நீ.. நீங்கள் தேவர்களில் ஒருவரா?"

அவன்: "பரவாயில்லை! நீ தேவனென்றே கூறலாம். அப்படித்தான் உன்னவர்கள் என்னைக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள என்னை அறிந்தது பூரணமற்றது. கட்டுக் கதைகளால் இட்டு நிரப்பி விட்டார்கள். அறியாததனாலேற்பட்ட விளைவு. உனக்கு உண்மை பகர்வேன். நீ அதிசயித்துப் போவாய். புரிந்து கொள்வாய். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மேலும் நீ காணும் இந்த உருவம் கூட எனது உண்மையான உருவமல்ல. நான் உன்னுலகுனுள் அடியெடுத்து வைக்கும் சமயங்களிலெல்லாம் இது போன்றுதான் வருவது வழக்கம். சில சமயங்களில் நான் ஆணாகவும் வருவேன். வேறு சில சமயங்களில் நான் பெண்ணாகவும் வருவேன். இன்னுமோர் சமயம் நான் ஆணும் பெண்ணும் கலந்த உருவுமெடுப்பேன்."

அவனே தொடர்ந்தான்: "உண்மையில் உன்னால் ஒருபோதுமே ஒரு நிலைக்குமேல் என்னை அறியவே முடியாது. இருக்கும் உன் அறிவின் துணையுடன் ஓரளவு புரிய மட்டும் தான் முடியும்."

"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.." எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது.

"உனக்கு உண்மையில் புரிந்தால் மேலும் குழம்பி விடுவாய்."

"குழப்பமா?"

"ஆம்! கூறுகிறேன் கவனமாகக் கேள்."

சிறிது நேரம் இருவருக்குமிடையில் மெளனம் நிலவியது.

அவனே தொடர்ந்தான்: " நண்பனே! நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. இந்த வெளி. கழித்துக் கொண்டிருக்கின்றாயே இந்த நேரம். உண்மையில் இந்தப் பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் உன்னால் எவ்விதம் உண்மையினை அறிதல் சாத்தியம். உண்மையில் இன்னுமொன்றினையும் அறிந்தால் .."

"அறிந்தால்..."

"உண்மையில் இந்தப் பிரபஞ்சம். நீ காணும் இந்தப் பிரபஞ்சம். நான் என் ஓய்வு நேரத்தில் உருவாக்கியதொரு விளையாட்டு. உன்னைப் போல் தான் நானும் என் இருப்பினைப் பற்றிய விசாரங்களுக்குள் சிக்கிக் கிடந்த வேளை விடை புரியாமல் தவித்த போது ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக என் முழு அதிகாரத்தின் கீழுள்ளதொரு உலகினைப் படைக்க விரும்பினேன். அதன்பொருட்டு நான் உருவாக்கிய விளையாட்டே நீ காணும் இந்தப் பூவுலகு; அண்டசாரசரங்கள்..எல்லாம். புரிந்ததா?"

"புரியவில்லையே நண்பனே?"

"நீ பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றாய். அவற்றைக் கடந்தவன் நான். உனது பரிமாணங்களுக்குள் நீ கணினி விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதைப் போல் நான் என் பரிமாணங்களுக்குள்ளிருந்து உருவாக்கிய விளையாட்டுத்தான் நீ வாழும், நீ காணும், நீ உணருமிந்த உலகு. உன்னவரைப் பொறுத்த அளவில் நான் தேவன். கடவுள். எது எப்படியோ... உன் பரிமாணங்களை மீறியவன் நான். ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு. உன்னைப் போல் தான் என் பரிமாணங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில் எனக்கும் ஒன்றுமே தெரியாது. அதற்காகவே என் இருப்பும் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னைப் போன்ற முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குள்ளும் என்னால் உடனடியாக உன்னையொத்த வடிவினை எடுத்து மிக இலகுவாக உட்சென்று பங்கு பற்ற முடியும். உண்மையில் உன்னுடன் இங்கு உரையாடிக் கொண்டிருப்பபதைப் போன்றதொரு தோற்றமே ஒருவித ஏமாற்றுத்தான். நான் உருவாக்கிய இந்த விளையாட்டுக்குள் செல்வதற்காக நான் உருவாக்கியதொரு பொய்யான தோற்றந்தான் இது. உண்மையில் நான் உன்னைப் பொறுத்தவரையில் உருவமற்றவன் எல்லா உருவங்களையும் எந்நேரத்திலும் எடுக்கக் கூடியவன். பரிமாணங்களை மீறியவன். சகலவிதமான பரிமாணங்களுக்குள்ளும் புகுந்து விளையாடக் கூடியவன். இருந்தும் நானும் ஒரு குறிப்பிட்ட பரிமாணங்களை எல்லையாகக் கொண்டவன் தான். உனக்கும் எனக்குமிடையிலான வித்தியாசம்... நீ என்னை விடக் குறைந்த அளவிலான பரிமாணங்களுக்குள் வாழுமோர் ஐந்து அவ்வளவே. வெளியையும் காலத்தையும் உன்னால் என்றுமே மீற முடியாது. ஆனால் அதற்காக உனது பரிமாணங்களுக்கப்பாலெதுவுமில்லையென்று ஆகி விடமாட்டாது. நீ நான் உருவாக்கியதொரு விளையாட்டின் அங்கம் தான். ஆயினும் உன்னைப் பொறுத்த வரையில் இயலுமானவரையில் இருக்கும் சூழல்களுக்கேற்றபடி நீ ஓரளவுக்காகவாது சுயமாக இயங்கும்படி நான் உன்னை, இந்த உலகை, இங்குள்ள அனைத்து உயிர்களையுமே உருவாக்கியுள்ளேன். இந்த எனது விளையாட்டில் காணப்படும் அனைத்துமே சூழலுக்கு ஈடு கொடுத்து தங்களைத் தாங்களே அறிதற்கு, புடமிடுதற்கு முடியும். அதற்கு ஏற்றவகையில் நான் எழுதிய , வடிவமைத்த விளையாட்டு இருப்பதை நீ இங்கு காணும் உயிர்கள் அனைத்தினதும் அடிபப்டை இயல்புகளிலிருந்து இலேசாகப் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் முற்றாக அறிந்து கொள்ளல் சாத்தியமற்றது. அந்த வகையில் நீ உருவாக்கும் கம்யூட்டர் வீடியோ விளையாட்டுக்களை விட எனது இந்த விளையாட்டு அதி அறிவியல் நுட்பம் கொண்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நான் எழுதிய விளையாட்டில் பல இன்னும் தீர்க்கப்படாத குறைகள் உள்ளன. நீ எழுதும் கணினி ஆணைத்தொடர்களில் காணப்படும் வழுக்கள் போன்றவைதான் அவையும். குறைகளற்ற 'புறோகிறாம்'கள் ஏதேனும் உண்டா. ஆனால் உன்னைப் போல் நான் எனது இந்த விளையாட்டின் பிரச்சினைகளில் தலையிட்டுத் திருத்துவதில்லை. உன்னைப் போல் புதிய புதிய பதிப்புக்களை வெளியிடுவதில்லை. எனது படைப்புக்களான உங்களிடமே அதற்குரிய ஆற்றலையும் கூடவே சேர்த்தே படைத்துள்ளேன். நீ சுயமாக இயங்கும் இயந்திர மனிதர்களை, 'ரோபோட்'டுக்களைப் படைப்பதை ஒத்ததிது. உனது அறியும் ஆற்றல் எனது முக்கியமான அம்சங்களிலொன்று. அதனை நீ எவ்விதம் பாவிக்கின்றாயென்பதில் தான் உனது பிரபஞ்சத்தில் காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய வழிவகைகள் உள்ளன."

இவ்விதம் கூறிய எனது படைப்புக்குக் காரணகர்த்தா மேலும் கூறினான்: "இப்பொழுது சிறிது நேரம் என்னுடன் பயணிக்க உனக்கு விருப்பமா? விரும்பினால் இன்னும் சிறிது உண்மையினை உனக்குக் காட்ட என்னால் முடியும்."

எனக்கு இடையிலொரு சந்தேகம் எழுந்தது. கேட்டேன்: "உன் படைப்பிலொரு அற்பப் புழுவான என்மேல் ஏனிவ்விதம் பரிவு காட்டுகின்றாய்? ஆர்வம் கொள்கிறாய்?"

அதற்கு அவன் சிரித்தான்: "யார் சொன்னது உன்மேல் மட்டும் தான் இவ்விதம் ஆர்வம் காட்டுகின்றேனென்று. இது போல் உன்னவர் பலபேரிடம் அவ்வப்போது நான் இரக்கம் கொண்டு காட்சியளிப்பதுண்டு. அறிதலுக்கு உதவுவதுண்டு. பொதுவாக என் அறிவின் குழந்தைகளான உங்களில் எவரெவர் சிந்திக்கும் ஆற்றலைப் பாவித்துச் சூழலை மீறிச் சிந்திக்க விளைகின்றார்களோ அவர்களிடத்தில் எனக்கு மிகுந்த பாசம் உண்டாவதை என்னால் ஒருபோதுமே தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கு உதவுவது எனக்கு மிகவும் உவப்பானதொரு பொழுதுபோக்கு. எனது படைப்புகளின் திறமை கண்டு நானே அத்தகைய சமயங்களில் பிரமிப்பதுண்டு. நான் உருவாக்கிய விளையாட்டின் அடிப்படையினைப் புரிந்து கொள்ள நீங்கள் முனைவது எனக்கு என் விளையாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் முக்கியமான செயல்களிலொன்று. நன்கு இயங்கும் உனது 'புறோகிறாம்' கண்டு நீ வியப்பது, களிப்பது போன்றது தான் இதுவும். பயணத்தைத் தொடங்குவோமா?"

ஆமெனத் தலையசைத்தேன்.

என் கடவுள் , தேவன் (எப்படி வேண்டுமானலும் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணையேதுமில்லை) தொடர்ந்தான்: "இப்பொழுது நான் உன்னை என் பரிமாணங்களுக்குள் காவிச் செல்லப் போகின்றேன். உன் நகரின் முக்கியமான, பலத்த காவலுள்ள சிறைச்சாலையொன்றிற்குச் செல்லப் போகின்றேன். மிகவும் பயங்கரமான காவலுள்ள அச்சிறைச்சாலையில் பல பயங்கரச் செயல்களைப் புரிந்த உன்னவர்களை உன்னவர்கள் அடைத்து வைத்திருக்கின்றார்கள்."

இவ்விதம் அவன் கூறியதைத் தொடர்ந்து என்னைக் கடவுள் தன் பரிமாணத்தினுள் எடுத்துச் சென்றான். அதே கணத்திலேயே நானும் அவனும் என் நகரின் முக்கியமான அந்தச் சிறைச்சாலையினுள் நின்றோம். சிறைக்கைதிகளுக்கு மத்தியில் நாம் நின்றோம். ஆனால் அவர்களில் யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இரவானதால் எல்லோரும் துயில்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன வியப்பிது. யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே" என்றேன்.

அதற்கு அந்தக் காரணகர்த்தா கூறினான்: "அதிலென்ன ஆச்சரியம். நாமிருவரும் இன்னும் எனது பரிமாணத்தினுள் தான் இருக்கின்றோம். அதுதான் காரணம். அவர்களால் தான் அவர்களது பரிமாணங்களை மீறமுடியாதே. நான் இப்பொழுது அவர்களில் சிலரை, உன்னவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிலரை எனது பரிமாணத்தினுள் காவி வரப் போகின்றேன். "

அதனைத் தொடர்ந்து சிலரை அவன் மிக இலகுவாகவே தனது உலகுனுள் எடுத்து வந்தான். சிறைச்சாலையினுள் ஒருவித பதட்டமான சூழல் உருவாகியதை அவதானிக்க முடிந்தது.

கடவுள் கூறினான்: "அவர்கள் தமது உலகிலிருந்து மாயமாக மறைந்த இவர்களைத் தேடுகின்றார்கள். அதுதான் பதட்டத்தின் காரணம்"

"என்ன வழக்கம் போல் கனவுதானா?"

குரல் கேட்கவே திரும்பினேன். எதிரில் துணைவி மரகதவல்லி. எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது. கனவா...இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவா. இவ்வளவு நேரமும் என்னுடன் இவ்வளவு அறிவுபூர்வமாக உரையாடிக் கொண்டிருந்த கடவுள் கனவுத்தோற்றம் மட்டுமே தானா? இருப்பின் இரகசியத்தினை ஓரளவு அறிந்து விட்டேனென்று களிப்படைந்ததெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே தானா? இது தான் இவ்விதமென்றால் மறுநாட் காலையோ எனக்கு இன்னும் வியப்பளிப்பதாக புலர்ந்தது. முக்கிய தினசரியொன்றின் அன்றைய காலைப் பதிப்பின் முக்கிய செய்தி பின்வருமாறு தொடங்கியிருந்தது:"சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மறைவு! மறைவின் காரணம் புரியாத சிறைக் கைதிகள், காவலர்கள் திகைப்பு! பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வெளியில் மறைந்தனர் கைதிகள் சிலர். கூடு விட்டுக் கூடு பாய்ந்தனரா? விடை தெரியாத புதிர்." அப்படியானால்....?

ngiri2704@rogers.com
பதிவுகள் நவம்பர் 2004; இதழ் 59, திண்ணை

5. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!'
- வ.ந.கிரிதரன் -


'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!'

- கி.பி.3025இல் ஒருநாள்.

- பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே.

- கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,றறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர அழிந்தொழிந்து போய் விட்டன.

- ஒரு சில விருட்ச வகைகளே எஞ்சியிருந்தன.

- மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத்தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி விட்டிருந்தன.

- இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும் காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், அண்மித்து விட்டது. மனிதர்கள்

ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த பூமியின் நிலையினையொத்த கோளமொன்றினைக் காண்பதற்கான தேடுதலை விரைவுபடுத்த வேண்டிய தேவையிலிருந்தார்கள்.

- கதிரவன் 'சிவப்பு அரக்கன்' நிலைக்கு வருவதற்கு இன்னும் பல பில்லியன் வருடங்களிருந்தன. அதுமட்டும் மனித இனம் இங்கிருக்க முடியாத நிலையினை மானுட இனம் ஏற்படுத்தி விட்டது.

- எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள்.

- இத்தகையதொரு சூழலில் விஞ்ஞானிகள் அண்டவெளிப்பயணங்களின் வேகத்தினைத் துரிதப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.

- அதில் முன்னணி வகித்த உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி ஆத்மாநாமின் மனம் அன்று மிகுந்த மகிழ்சியுடனும், ஒரு வித பரபரப்புடனுமிருந்ததற்குக் காரணமிருந்தது.

- அவர் ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆய்வொன்றின் தொடர்சியினைப் பூரணப்படுத்துமொரு நாளை அண்மிக்கும் வகையிலானது அவரது ஆய்வு.

- குறைந்தது ஒளி வேகத்திலாவது செல்லும் வகையில் பிரயாணத்தின் வேகமிருக்க வேண்டும்? கி.பி.2003இல் ஆஸ்திரேலியர்கள் இதற்கான முதல் வித்தினை விதைத்திருந்தார்கள். அதற்கான பலனை அறுவடை செய்யுமொரு காலம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் ஆத்மாநாமின் முயற்சியினால் அண்மித்துக் கொண்டிருந்தது. அன்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் லேசர் கதிர்களை அழித்து மீண்டும் சிறிது தொலைவில் உருவாக்கிச் சாதனையொன்றினைப் புரிந்திருந்தார்கள். 'தொலைகாவு'தலுக்கான (Teleporting) சாத்தியத்தினை அவர்களின் ஆய்வு அன்று தொடக்கி வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக இன்று ஆத்மாநாம் ஒரு முழு மனிதனையே 'தொலைகாவு'தல் மூலம் பிரயாணிக்கும் வகையிலானதொரு பொறியினை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகப் பரீட்சித்துப்பார்க்கவிருக்கின்றார். இதற்காக நகரின் இரு எதிரெதிர் திக்குகளில் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரு ஆய்வு கூடங்களிலுள்ள இரு 'தொலைகாவும்' அறைகள் பாவிக்கப்படவுள்ளன. தொலைகாவும் அறை இலக்கம் 1இலிருந்து தொலைகாவும் அறை இலக்கம் 2ற்கு முழு மனிதரொருவனைக் கடத்துவதற்கான சோதனை அன்று நடக்கவிருந்தது. ஒரு மனிதனின் உடலிலுள்ள, ட்ரில்லியன்கள் கணக்கிலுள்ள மூலக்கூறுகளையெல்லாம் அழித்து மீண்டும் உருவாக்குவதென்றால் அவ்வளவு இலேசான காரியங்களிலொன்றாயென்ன!

- மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம். விஞ்ஞானப் புனைகதைகளில், விஞ்ஞானத் திரைப்படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்திருந்ததொரு விடயம், இதுவரையில் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகியிருந்ததொடு விடயம், இன்று அவரது முயற்சியினால் நடைமுறைச் சாத்தியமாகும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்தப்

பரிசோதனை மட்டும் வெற்றிகரமாக அமைந்து விட்டால்..... அதனை எண்ணவே ஆத்மாநாமின் சிந்தையெல்லாம் களியால் பொங்கிக் குதித்தது. சரித்திரத்தில், அவரது சாதனை பொறிக்கப்பட்டுவிடும். சாதாரண சாதனையா என்ன? இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றியடைந்து விட்டால்.... மனிதர் ஒரு சில வருடங்களிலேயே அயலிலுள்ள சூரியமண்டலத்திலுள்ள கோள்களுக்கு பயணிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டு¢விடும்.

- அண்டத்தை அளப்பதற்குரிய வல்லமையினை அவரது ஆய்வின் வெற்றி மனிதருக்கு வழங்கிவிடும்.

- எத்துணை மகத்தான வெற்றியாக அது அமைந்து விடும்.

"ஆத்மா! உன்னைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னை இந்தக் கடைசித் தருணத்தில் ஏமாற்றி விடாதேயடா?" இவ்விதம் ஆத்மாநாம் ஒருமுறை தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

அவர் உண்மையில் தனக்குத்தானே கூறிக்கொண்டாலும் அவர் ஆத்மாவென்று விளித்தது அவரையல்ல. அவரது பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளத் துணிச்சலுடன் வந்ததொரு ஆத்மாவான 'ஆத்மா'வைத்தான். இளைஞனான ஆத்மாவைத்தான்.

ஆத்மாநாம் பத்திரிகையில் சுகாதார அமைச்சினூடாக வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து முன்வந்திருந்த இளைஞர்களில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது இந்த ஆத்மாவைத்தான். ஆத்மா உண்மையிலேயேயொரு இயற்பியல்-வானியற் பட்டதாரி. அத்துடன் அத்துறையில் வெகுஜனப்பத்திரிகைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் பிரபல்யமான எழுத்தாளன். ஆத்மாநாமின் ஆய்வின் முக்கியத்துவத்தை மனதார விளங்கி, உணர்ந்து, தனது காலகட்டத்துக்கான பங்களிப்பு என அதனைப் புரிந்து முன்வந்திருந்தான். இந்தப் பரிசோதனையில் தன்னை இழப்பதற்குமவன் துணிந்து வந்திருந்தான்.

சரியாக காலை மணி பத்துக்குப் பரிசோதனை ஆரம்பிப்பதாகவிருந்தது. ஆத்மாநாம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக மணி ஒன்பது. ஆத்மாநாமை கூட்டிச் செல்வதற்காக ஆய்வு கூடத்திலிருந்து பணியாட்களிருவர் வாகனத்தில் வந்திருந்தார்கள். தொலைகாவும் அறை இலக்கம் 1இல் ஏற்கனவே ஆத்மாவுட்பட வெகுசன ஊடகவியலாளர்கள் பலரும் வந்து காத்திருந்தனர். முதல் நாளிரவிலிருந்தே அவர்களில் பலர் வந்து கூடாரம் அடித்து விட்டிருந்தார்கள். ஆத்மாநாம் ஆய்வுகூடத்தை அடைந்தபொழுது மணி சரியாக ஒன்பது மணி பதினைந்து நிமிடங்கள். அவரை எதிர்பார்த்து ஆத்மா காத்திருந்தான். ஏற்கனவே அவன் உடல்நிலையெல்லாம் சக வைத்தியர்களால் பரிசோதனைகுட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு அவன் தகுதியானவனென அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தான்.

ஆத்மாநாம் ஆத்மாவைப்பார்த்துக் கேட்டார்: "என்ன திரு.ஆத்மா! பரிசோதனைக்குத் தயாரா?"

ஆத்மா அதற்கு இவ்விதம் பதிலிறுத்தான்: "நான் தயார். நீங்கள் தயாரா?"

இவ்விதம் அவன் கூறியதும், அவனது நகைச்சுவையுணர்வு கண்டு அனைவரும் வியந்து சிரித்தார்கள். ஆத்மா எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவனாகவிருக்கிறானென்று மூக்கில் விரல் வைத்து அவனை வாழ்த்தினார்கள்.

ஆத்மாநாம் கேட்டார்: "திரு. ஆத்மா. நீங்கள் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கூற விளைகின்றீர்களா?"

அதற்கு ஆத்மா கூறினான்: "அவர்களேதாவது கேட்கும் பட்சத்தில்"

ஆத்மாநாம் ஊடகவியலாளர்களைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்: "நீங்கள் திரு.ஆத்மாவிடம் ஏதாவது கேட்கவிரும்புகின்றீர்களா""

அதற்குப் பலர் தங்களது கைகளை உயர்த்தினார்கள்.

ஆத்மாநாம் கூறினார்:" எல்லாருக்கும் பதிலிறுப்பது சாத்தியமில்லை. இருவருக்கு மட்டுமே திரு.ஆத்மா பதிலிறுப்பார்"

ஊடகவியலாளர் ஒருவர் எல்லாரையும் முந்திக்கொண்டு பின்வருமாறு கேட்டார்: "திரு.ஆத்மா! உங்களுக்கு இத்தகையதொரு விஷப்பரீட்சையில் ஈடுபடும் எண்ணம் எவ்விதமேற்பட்டது?"

இந்த ஆயிரம் வருடங்களில் கேள்வி கேட்பதில் மட்டும் இன்னும் இந்த ஊடகவியலாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடப் பரிணாம வளர்சியின்றியிருந்தார்கள் என்பதற்கு சான்றானதொரு வினா.

அதற்கு ஆத்மா சிறிது யோசித்துவிட்டுக் கீழ்வருமாறு பதிலுரைத்தான்:"இதனை விஷப்பரீட்சையென்று சொன்ன முட்டாள் யார்? இது என் வரலாற்றுக் கடமை. ஆயிரம் வருடங்கள் வாழும் வினாடியையொத்த எம் வாழ்வின் பயனாக இதனை நான் கருதுகின்றேன். சிறுவயதிலிருந்தே அண்டவெளிப்பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான். அதுதான் முக்கிய காரணம்." [ கி.பி.3000இல் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும் நிலையிலிருந்தார்கள். பிறக்கும் ஒவ்வொருவரும் , இருதயம் தொடக்கம், மூளை தவிர, சகல உடலின் அங்கங்களையும் அடிக்கடி மாற்றுவதன் மூலம் சுமார் ஆயிரம் வருடங்கள் வாழக்கூடியதொரு நிலை நிலவிய காலகட்டம்.]

எல்லோரும் ஆத்மாவின் தைரியத்தை மெச்சினார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்: "திரு.ஆத்மா! உங்கள் தைரியத்துக்கு நாம் தலை வணங்குகின்றோம். மானுட குலத்தின் நீட்சிக்குத் தங்கள் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்படும். உங்கள் பயணம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்".

அவரைத் தொடர்ந்து அனவரும் வாழ்த்தி வழியனுப்ப, ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1ற்குள், விஞ்ஞானி ஆத்மாநாம், மற்றும் அவரது உதவியாளர்கள் சகிதம் நுழைந்தான். வெளியில் ஏனைய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் பார்வையாளர் கூடத்தில் காத்திருந்தார்கள். பரிசோதனை தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 2இலிருந்த சக மருத்துவர்களுடன் கதைத்து அங்கு எல்லாம் தயார்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அங்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் மீள உயிர்த்தெழும் ஆத்மாவை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள்.

ஆத்மாநாம் இறுதியாக ஆத்மாவை பார்த்துக் கூறினார்: "திரு.ஆத்மா! உங்களது இந்தப் பங்களிப்புக்காகத் தலை வணங்குகின்றேன் மானுட இனம் சார்பில். உங்களைப் போன்ற சூழலை மீறிய துணிச்சற்காரர்களால்தான் மானுட இனம் இத்துணைதூரத்துக்கு வளர்ச்சி கண்டுள்ளது. வரலாற்றில் நிலைத்து நின்று விட்டீர்கள் இந்த ஒரு செய்கையின் மூலம். திரு.ஆத்மா உங்களுக்காகத் தலை வணங்குகின்றேன்."

அதற்கு ஆத்மா கூறியவைதான் கீழேயுள்ளவை: "நீங்கள் மிகவும் புகழ்கின்றீர்கள். நான் செய்யும் இந்தச் சாதாரண காரியத்துக்காக என் மனித இனம் பெரும் பயனடையுமானால் அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சி".

இதன் பின்னர் ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1இனுள் விஞ்ஞானி ஆத்மாநாமுடன் நுழைந்தான். அவனைச் சரியாக இருக்கையில் அமர்த்தி விட்டுச் செய்யவேண்டியவை பற்றிய

அறிவுறுத்தல்களை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திவிட்டு ஆத்மாநாம் வெளியில் வந்தார். வரும்பொழுது அவர் பின்வருமாறு தமக்குள் எண்ணினார்: 'எத்துணை துணிச்சலான பையன். ஆத்மா நீ வாழ்க!'

சரியாகப் பத்துமணிக்கு விஞ்ஞானி ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 1இனை இயக்கி வைத்தார்.

அதே கணத்தில் தொலைகாவும் அறை இலக்கம் 2இல் காத்திருந்த விஞ்ஞானிகள் அறைக் கதவினைத் திறந்தார்கள்.

ஒளிவேகத்தில் தொலைகாவுதல் நடப்பதால் ஆத்மாவின் புத்துயிர்ப்பு அதே சமயத்தில் நிகழவேண்டும்.

அறையினைத் திறந்த மருத்துவ விஞ்ஞானிகளை வெற்றிகரமாகத் தொலைகாவப்பட்டிருந்த ஆத்மாவின் ஆத்மாவற்ற ஸ்தூல உடல் வரவேற்றது.

பதிவுகள்ப் பெப்ருவரி 2005; இதழ் 62


6. கெளதமனின் வாழ்வு!
- வ.ந.கிரிதரன் -


அ. கெளதமனும், மனோரஞ்சிதமும்!

வானமிருண்டு கறுத்துக் கிடந்ததொரு அந்திப் பொழுதில் வழக்கம்போல் கெளதமன் தான் வசிக்கும் 'அபார்ட்மென்ட்' பலகணியிலிருந்து முடிவற்று விரிந்து, பரந்து கிடக்கும் மெல்லிய இருளில் கறுப்புப் படுதாவாகக் காட்சியளிக்கும் நீல வானைப் பார்த்தபடி பல்வேறு விதமான சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தபோது அவனது சிந்தனைகளில் வழக்கம்போல் அதிக இடத்தினை ஆக்கிரமித்திருந்த சிந்தனையாக 'இருப்பும் அது பற்றிய காரணமும்', அடுத்ததாக 'மனிதரும் அவர்தம் உணர்வுகளும், செயல்களும்' இருந்ததென்பதை நிச்சயமாகக் கூற முடியும். விடைதெரியாப் புதிரெனத் தொடரும் இருப்புப் பற்றிய மெய்ஞான விளக்கவுரைகளென்றாலென்ன, விஞ்ஞான விளக்கங்களென்றாலென்னெ, கற்பனையும்,கருத்தும் கலந்த கவிதைகள், கதைகள், நாவல்கள் அல்லது ஓவியப் படைப்புகளென்றாலென்ன எல்லாமே அவனது சிந்தனையை விரிய வைத்து, ஒருவித தெளிவினைத் தந்து, அவற்றிலாழும்போது ஒருவித பரவசநிலையினைத் தந்து, நடைமுறையினை, நிகழ்காலம் மறந்து காலங்கடந்ததோருலகில் சஞ்சரிப்பதற்கு பெரிதும் உதவுவதால் இவையெல்லாம் அவனுக்கு எப்பொழுதுமே உற்ற தோழர்களாக விளங்கினவென்றும் நிச்சயமாகக் கூறலாம். இருப்பின் சகல பக்கங்களையும் ஆராயும் ஆர்வம் மிக்கவனாக அவன் இருந்த காரணத்தினால்தான் அவனால் சார்பியல்தத்துவம் பற்றியோ, சக்திச் சொட்டுப் பெளதிகம் பற்றியோ, இயற்கையை , சமுதாயத்தை வழிநடாத்தும் அடிப்படைக் காரணிகளைப் பற்றியோ, வறுமையில் வாடும் குழந்தைகள் பற்றியோ, மாசுறும் சூழல் பற்றியோ, மூண்டு வியாபித்திருக்கும் போர்ச்சூழல் பற்றியோ, உயிரணுவின் அற்புதமான ஆற்றல் பற்றியோ, நவீன கலை, இலக்கிய முயற்சிகள் பற்றியோ எப்பொழுதுமே தன்னை ஒருவித அர்ப்பணிப்புடன் கூடிய தேடலுக்கு ஈடுபடுத்த முடிந்ததென்றும் மேலும் அவனைப்பற்றிக் கூறும்பொழுது கூறலாம். நூல்கள் வாசித்தலென்பது, அவை எவைபற்றியதாக இருந்தபோதும், எப்பொழுதுமே அவனது இருப்புடன் பின்னிப்பிணைந்து விட்டதொரு, பிரிக்க முடியாததொரு அம்சமாக இருந்ததற்குக் காரணிகளொன்றாக அவனது உடலில் ஆட்சி செலுத்தும் அவனது அப்பாவின் 'ஜீன்' நிச்சயமாக இருக்குமென்றும் துணிந்தும் கூறலாம். அவனது குறிப்பேட்டிலொருமுறை அவன் பின்வருமாறு எழுதியிருந்ததை வாசித்தல் அவனது உளஆளுமை/இயல்பு பற்றிச் சிறிது அறிதற்கு மேலும் உதவக் கூடும். அக்குறிப்பேட்டில் அவன் பின்வருமாறு எப்பொழுதோ எழுதியிருந்ததை இப்பொழுது வாசிப்பதன் மூலம் அவன்பற்றிச் சிறிது புரிதற்கு முயல்வோமாக.

அதில் அவன் 'எனது குருமார்' எனத் தலைப்பிட்டு எழுதியிருந்த சிறு குறிப்பு வருமாறு: "ஒவ்வொரு மனிதனினதும் வாழ்வினைப் பொறுத்தவரையில் யாரோ ஒருவர் குருவாகவேயிருந்து விடுவது இயல்பு; திருடனுக்குக் கூட ஒரு குரு, அது சூழ்நிலையாக அல்லது மனிதனாக அல்லது எதுவுமேயாக இருந்து விடலாம். இந்நிலையில் என் குரு தவறு, என்னைப் பொறுத்தவரையில் குருமார் பலருள்ளனர். என் சிந்தனை மாற்றத்தினைப் பொறுத்தவரையில் குருமார்கள்: ஐன்ஸ்டன், கார்ல்மார்க்ஸ், சார்ள்ஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்ட், ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பாரதியார், மார்க்ஸிம் கோர்க்கி... இவ்விதம் பலரைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றி அல்லது இவர்களது நூல்களையெல்லாம் கரைத்துக் குடித்தவனென்பது இதன் பொருளல்ல. ஆனால் இவர்களது தத்துவங்கள், இவர்களது வாழ்க்கை வரலாறுகள்,.. இவையெல்லாமே புதுமை நாடித் தவித்து ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த என் நெஞ்சினில் சிந்தனைச் சுவாலையினைக் கொழுந்து விட்டெரிய வைத்து விட்டன; அறியாமை இருளினில் மூழ்கிக் கிடந்த என் சிந்தனைதனைச் சீர்செய்து வைத்து விட்டன. தோல்விகளால் நிலைகுலைந்து, தளர்ந்து, மனமொடிந்து கிடந்திட்ட வேளைகளிலெல்லாம் என் நெஞ்சினில் நிலவிய அச்சம்தனை, திகில், விரக்திதனை, நம்பிக்கையின்மை, ஏக்கம்தனை அகற்றி புத்தெழுச்சிதனை ஊட்டிய அருமருந்துகள் எவையென்று எண்ணுகின்றீர்கள்? இப்பெரியார்தம் வாழ்க்கை வரலாறுகளே! அவர்தம் படைப்புகளே! என் சிந்தனையில் மாற்றத்தினை ஏற்படுத்தியவர்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களென்றால், மேரி கியூரியுட்பட சிறுமி ஆன் பிராங் உட்பட, கட்டடக் கலைஞன் லிகோர் பூசியோ உட்பட சகல பெரியார்தம், அறிஞர்தம், கலைஞர்தம் வாழ்க்கை வரலாறுகளுமே என்னைப் படிப்படியாக மாற்றிக் கொண்டு வந்தன; வருகின்றன; வரும். ஆக, உண்மையில் பார்க்கப் போனால் எனது சரியான குருமார்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? சந்தேகமேயின்றி நூல்கள்தான்; நிச்சயமாகப் பத்திரிகை, சஞ்சிகைகள்தான்; இதற்கும் மேலாக எனது 'உள்ளுணர்வு'தான்; சிறுவயது முதலே என் ஆழ்மனத்தே புதைந்து கிடந்திட்ட ஆசைகளை ஒழுங்கு படுத்தி, சூழல்களிடமிருந்து பாடங்களைக் கற்றிடச் செய்திட்ட, செய்கின்ற உள்ளுணர்வுதான். ஆக இவையெல்லாமே எனது குருமார்களே! வழிகாட்டிகளே! ஓ! உம்மை நான் போற்றுகின்றேன்; உம்மை நான் துதிக்கின்றேன்; உம்மை நான் வணங்குகின்றேன்". இவ்விதமாக இருந்த அவனது குறிப்பொன்றே போதுமானது அவன் எத்தகையதொரு மானுடனென்பதை அறிந்து கொள்வதற்கென்பதையும் நிச்சயமாகக் கூறலாம். சந்தேகமேயில்லாமல், இருண்ட, பரந்ததோர் ஆபிரிக்க வனத்தின் நடுப்பகுதியில் நூல்கள் சூழ அவனை விட்டுவிட்டால், எத்தனை காலமென்றாலும் அவனால் வாழ்ந்து விடக் கூடியதொரு புத்தகப்பூச்சியாக அவனைக் கருதினால் அதிலாச்சரியமொன்றுமில்லைதான், ஆனால் அவ்விதம்தான் மனோரஞ்சிதம் அவனை எப்பொழுதுமே எண்ணிக் கொண்டிருந்தாள்.

யாரிந்த மனோரஞ்சிதமென்று மண்டையைப் போட்டுக் குடைகின்றீர்களா? அவனுக்குத் தெரிந்ததொரு கவிஞர் கூறியதுபோல் 'காமன் சட்டம்' (kaman Law). இன்னும் புரியவில்லையா? 'காமன் லா' (Common-Law). புரிந்ததா? அவள் அவனது 'காமன் லா'வாக இருப்பதால் யாராவது நீங்கள் மேற்படி கவிஞர் குறிப்பிட்டது போலொரு உறவு முறை அவர்களிருவருக்குமிடையில் நிலவும்; நிலவக் கூடுமென நினைத்துக் கிளூகிளூப்படைந்து விடாதீர்கள். பனை மரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கள்ளெனக் கூறும் உலகமொன்றில் வாழ்வதால், ஒரு கூரைக்குள் வாழும் அவர்களிருவரையும் பற்றியும் அவ்விதம் நினைத்தால் அதனால் அவர்களொன்றும் ஆட்சேபிக்கப் போவதில்லை. உண்மையில் அவள் அவ்விதமொரு உறவுக்காகத்தான் அவனிடம் கடந்த ஐந்துவருடங்களாக முயன்று கொண்டிருந்தாலென்றால் ஒருவேளை நீங்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போகலாம்; ஆனால் உண்மை. அவளும் அவனைப் போலொரு மனநிலை வாய்க்கப்பட்ட பிறவியென்பதால் அவளிடம் அவனுக்கொரு அளவுமீறாத ஈடுபாடொண்டு உண்டு; அவ்வளவே. அவனது இத்தகைய மனப்போக்குக் காரணமேதாவதுண்டாவென நீங்கள் சிறிது ஆராய விளையலாம்; ஆச்சரியமில்லை. அவன் கடந்தகாலத்து நிகழ்வொன்று அதற்குக் காரணமாயிருக்கக் கூடுமென அவன் கூடச் சிந்திப்பதுண்டு, ஆனால் அது பற்றி அவனுக்குக் கூட ஐயமுண்டு. மகா புலமை வாய்ந்ததொரு உளநல மருத்துவர் வேண்டுமானால் அது பற்றி ஆராய்ந்து தன் முடிவினைக் கூற முடியும். ஆனால் சந்தர்ப்பம் வரும்போது அதுபற்றி நீங்களும் அறிந்து உங்களது கருத்தினை அல்லது முடிவினைக் கூறுவதற்கும் அல்லது அடைவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்பொழுது அதுபற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

"வழக்கம்போல் கவிஞர் தத்துவவிசாரத்தில் ஈடுபட்டு விட்டாரோ?" இவ்விதம் கேள்வியொன்று எழுந்ததுமே, இதுநாள் வரையில் நீங்கள் வாசித்த கதைபுத்தகங்கள் அல்லது திரைப்படங்களின் பாதிப்பின் விளைவாக நீங்கள் இன்னேரம் அந்தக் குரலுக்குரியவள் யாரென்று ஊகித்திருப்பீர்கள்; உங்கள் அந்த ஊகத்தின்படி அந்தக் குரலுக்குரியவள் மனோரஞ்சிதமாக நிச்சயம் இருந்திருப்பாள். நிச்சயமாக உங்கள் ஊகம் பொய்த்திருக்க வாய்ப்பில்லை; நியாயமில்லை என்பதை உறுதிசெய்தபடி எதிரில் அகன்று,ஒடுங்கி, அகன்றிருந்ததொரு உடல்வாகுடன் நின்றவள் சாட்தாத் மனோரஞ்சிதமே.

ஆ. உறவா ? உணர்வா?

மனோரஞ்சிதத்தின் எழில் மிக்க தோற்றம் ஒருகணம் அவன் சிந்தையை அசைத்து மறுகணம் நிதானத்தை வழக்கம்போல் அளித்துவிடவே கெளதமன் அவளது அழகு பற்றியும், அதற்கும் மேலாக அவள் உடல்முழுவதும் வியாபித்துச் சுடர்ந்து கொண்டிருக்கும் ஞானச்சோபை பற்றியும் இன்னுமொரு கணம் எண்ணிச் சிறிது உள்ளூர ஒருவித தண்மை கலந்த இன்பஉணர்வில் மூழ்கி இதுவரை காலமும் அவளுடன் பழகிய அவனது இருப்பின் வரலாறு பற்றி அடுத்தகணத்தில் உணர்ந்து, அறிந்து, களிப்பெய்து, நிலையற்ற இந்த இருப்பினில் எத்துணை பெறுமதி வாய்ந்ததாக அவளுடனான தொடர்பிருக்கிறதென்று வியந்து, இது இவ்விதமே இருப்பின் முடிவுவரை தொடருமா, அவ்விதம் தொடர்ந்தால் அது, இருப்பு, எவ்விதம் பயனுள்ளதாக, நிறைவுள்ளதாக இருக்குமென மேலும் நினைத்து மீண்டுமொருகணம் அவளது எழில்வாய்ந்த தோற்றத்தில் தன் பார்வையினைத் திருப்பிய அதே சமயம்
அவளுடன் அவ்வப்போது நடைபெறும் உரையாடல்கள் பற்றியும் தன் சிந்தையினைத் திருப்பினான்.

"கெளதமன், எதற்காக நீங்கள் உங்களையே தேவையற்று தீக்கோழி தன தலையினை மண்ணினுள் மூடிக் கொள்வதுபோல் மூடி, உணர்வுகளைக் கடந்ததொருவராகக் காட்டுவதற்கு முயன்று, முயன்று கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் எத்தனைநாள் தான் நான் காத்துக் கிடப்பது? நம் உறவின் பூரணத்துவத்தினை எட்டுவதிலென்ன இன்னுமிந்த தயக்கம். உணர்வுகள், பசிகள் எல்லாமே இருப்பின் இயல்பான தேவைகளென்பதை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப்போகின்றீர்கள். எப்பொழுதுதான் எனக்கு விமோசனம் அளிக்கப் போகின்றீர்கள்?"

இவ்விதமான அவளது வினாக்கள் அடிக்கடி தொடருவதொன்றும் புதிரானதல்ல. கெளதமனும், மனோரஞ்சிதமும் ஒருகூரையின் கீழ் இவ்விதம் வாழ்ந்து வந்தபோதும், தம் உணர்வுகளை, எண்ணங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து வந்தபோதிலும், இருவரும் ஒருவரையொருவர் பூரணமாக இரசித்து, வாழ்ந்திருந்தபோதிலும், அவள் அவர்களுக்கிடையிலான உறவில் பூரணத்துவம் இன்னுமில்லையென எண்ணினாளென்பதை ஏற்கனவே அறிந்தோம்; ஆனால் அதுபற்றிய அவனின் உணர்வுகளோ வேறாக இருந்தனவென்பதை இனி அறிவதற்கு அவன் அவர்களிருவருக்குமிடையிலான உறவானது சாதாரணத்தை விட அசாதாராணமானதென எண்ணுவதும், உணர்வுகளைக் கடந்ததொரு ஞானத்தினடிப்படையிலுள்ளதெனக் கருதுவதும், சாதாரண இருப்பின் விளைவான உணர்வுகளெல்லாம் அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையினை நிர்ணயிப்பவையாக இருக்கக் கூடாதென்றதொரு முடிவுக்கு உள்ளூர வந்திருப்பதும் முக்கியமான சில காரணங்கள். உறவு முக்கியமெனின் அது உணர்வுகளைக் கடந்துமிருக்க வேண்டும், அவ்விதம் தாக்குப் பிடிக்க முடியாததொரு உறவு பூரணத்துவமற்றதெனறு அவன் நினைத்தால் அவளோ உறவின் பூரணத்துவமே உணர்வுகளின் சங்கமிப்பில்தான் உள்ளதென நினைத்து வந்தாள். உறவா? உணர்வா?
ஒருமுறை அவள் தனது குறிப்பேட்டில் கீழுள்ளவாறு பாரதியின் வசன கவிதையொன்றினை இரவல்வாங்கி எழுதியிருந்ததை அவன் வாசித்ததுண்டு:

'இருப்பின் எழிலென்னை எப்பொழுதுமே இன்பத்திலாழ்த்துகிறது.
இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று. திங்களும் நன்று.
வாந்த்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடு இனிது.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும் , கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன. பறவைகள்
இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை.
நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம்.
கெளதமன் நல்லவன்.
இருப்பின் அற்புதமவன்.
இவனுடன் சுகித்து, இன்புற்று,
உடல், உயிர்கலந்து
இருத்தல் இனிது.
கெளதமா?
ஏன் எனை இவ்விதம்
காமத்தில், விரகத்தில்
வாட்டி வதைக்கின்றாய்?
என்றெனை ஏற்றுக் கொள்ளபோகின்றாய்?'

அதனை வாசித்துவிட்டு அவன் தன் குறிப்பேட்டில் கீழுள்ளவாறு எழுதியிருந்ததை அவள் ஒருமுறை அவனது குறிப்பேட்டினைத் திருட்டுத்தனமாக வாசிந்து அவனது பரந்த உள்ளம் கண்டு மெய்மறந்து, ஒருவித பரவைச நிலையெய்தி, இவனைத் தன் துணைவனாகக் கொள்வதற்குத் தானென்ன தவம் செய்திருக்க வேண்டுமென்று மகிழ்வெய்தி, இவனது இந்த உறவு மட்டும் உணர்வுடன் உடலும் கலந்ததாகவிருக்கும் பட்சத்தில் அது எவ்விதமானதொரு பூரணத்துவம் பெற்றதாகவிருக்குமெனச் சிந்தித்திருந்தாள்.

'இந்தப் பிரபஞ்சம் பரந்து கிடந்து விரிகின்றது எந்தவித முடிவுமற்று. இந்த நீலவான்தான் எத்துணை அழகானது; இங்கு வாழும் சாத்தியங்களைக் கொண்ட உயிரினங்கள் அவை எத்தகைய பரிமாணங்களையெடுத்தபோதிலும்தான் எத்துணை எழில்வாய்ந்தவை. பிரமாண்டமானதிந்தப் பிரபஞ்சத்தின்
வெறுமையான, விரிந்து செல்லும் வெளியினூடு சிறு குமிழென விரையுமிந்த நீலவண்ணக் கோள்தான் எத்துணை இனியது. ஆயினுமேன் இந்த நீலவண்ணக் கோள் போர்களினாலும், ஏழ்மை, வறுமை போன்ற துயர்களினாலும் நிறைந்துபோயிருக்கின்றது? சோகங்களால் நிறைந்து போயிருக்கின்றது? எதற்காக? நல்லதொரு கவிதையினைச் சுவைத்துப் படிதின்பம் துய்த்தல்போல் வாழுதற்குரிய இவ்வாழ்வினையேன் மனிதரிவ்விதம் நாசமாக்குகின்றார்? இருப்பின் பொருள், அர்த்தம் அறிதலே அதன் காரணமாகவிருக்கவேண்டியதென்பதையே உணரமுடியாதவண்ணமேன் மானுடர் தாம் விரித்த சமுதாய வலைகளில் சிக்கி அதன் சிக்கவிழ்ப்பதில் தம் பொன்னான நேரத்தினைச் செலவிடுதலிலேயே தம் இருப்பினைக் கழித்து விடுகின்றார்?

'உலகெலாமோர் பெருங்கன வ·துளே
உண்டு உறங்கியிடர் செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங் கனவாகும்; இதனிடை
சில தினங்கள் உயிர்க்கமுதாகியே
செப்புதற்கரிதாக மயக்குமால்
திலகவாணுதலார் தருமையலாந்
தெய்விகக் கனவன்னது வாழ்கவே'

இந்த நீர்க்குமிழியினைப் போன்று அடங்கிவிடும் இந்தக் கணப்பொழுதான வாழ்வினுள் சிக்கிக் கிடக்கும் நாகரிக மனிதர்களான நாம் ஆற்றுவதென்ன? நிலையற்ற தற்காலிகமாகவுள்ளது நமது இருப்பு; இருந்துமிதன் நிலையற்றதிதன் தன்மையினை விளங்காமலேனிந்தக் குத்துவெட்டு, அடிதடி? உணவிற்காக சக உயிர்களைக் கொன்றொழித்திடும் அதே சமயம் எமக்குள்ளேயே மோதல்கள், கொலைகள்; போர்! போர்! போரினால் இன்றைய உலகே வெந்து கொண்டு கிடக்கின்றது. தேவைதானா? இவையெலாம் தேவைதானா? இருக்கப் போகின்ற ஒரு சிறு பொழுதினையும் அமைதியற்று ஆவேசமாகக் கழிப்பதின் பயன் தான் யாதோ? இறுதியில் மரணப்படுக்கையிலும் அமைதியில்லை. ஆனால் இன்றைய மானுடத்தின் தேவை: அன்பு! அன்பு! அன்பு! ஆம். பூரணமாக அன்பு செலுத்திடும் தன்மையும், பொறுமையும், சகிப்புத் தன்மையும் அதே சமயம் தீர்க்கதரிசனமிக்க பார்வையும், செயல்களும் ஆக இவையே இன்றைய தேவைகள்...'

கெளதமனின் அறிவுத்தாகமெடுத்த தேடல் கலந்த உணர்வுகளை அறிவதிலொரு இன்பம் அவளுக்கு. தன்னையே அறிந்ததுபோன்றதொரு தெளிந்த உணர்வு ஆட்கொள்ள அவள் தன்னையே மறந்தின்புற்றுக் கிடப்பாள். சில சமயங்களில் அவள் தன் குறிப்பேட்டில் அவனுடன் கற்பனையில் உறவாடி மகிழ்வதுமுண்டு. அவ்விதமான உரையாடல்களின் மாதிரிக்கொன்று கீழே தரப்பட்டுள்ளது.

மனோரஞ்சிதத்தின் குறிப்பேட்டிலிருந்து....

அவள்: கெளதமரின் சிந்தனையின் ஆழத்தினை நானும் அறிந்து கொள்ளலாமா?

அவன்: நீ என் மீது கொண்டிருப்பதாகக் கூறுகின்றாயே அந்தக் காதலுணர்வுகள் சக்தி வாய்ந்ததாகவிருப்பின் என் மனதின் ஆழத்தினை அறிந்து கொள்வதில் உனக்குச் சிரமமேதுமிருக்கப் போவதில்லை.
அவள்: அப்பாடா! ஒரு வழியாகக் காதலைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திக்கத் தொடங்கி விட்டாரே கெளதமர். ஆச்சரியம்தான்... ஆனால்...
அவன்: ஆனால்....
அவள்: ஆனால்... காதலைப் பற்றிச் சிந்திக்க முடிந்தவருக்குக் காமத்தினை உணரமுடியாமல் போவதேனோ? காமம் கலந்த காதலாலன்றோ இந்த
இருப்பு உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றது. கெளதருக்குப் புரியவில்லையா? அல்லது புரியாததுபோல் நடிக்கின்றாரா?
அவன்: காமத்தைக் கடந்த காதல் இருக்கக் கூடாதா? உணர்வு தாண்டிய உறவு துளிர்க்கக் கூடாதா? காமத்துடன் கூடிய உறவினை விட ஞானத்துடன் கலந்த உறவிலுள்ள இன்பத்தினை அறிய முடியாத அப்பாவிப் பெண்ணாகவிருக்கின்றாயே?

இ. மனோரஞ்சிதத்தின் மனோதிடம்!

கெளதமனின் உளநிலையினை மாற்றுவதெவ்விதம்? ஆடியில் தன்னை ஒருகணம் பார்த்த மனோரஞ்சிதம் தன்னெழில்கண்டு ஒருகணம் தானே கிறங்கினாள். தன் பருத்த முலைகண்டு, புடைத்த குறங்கின் அசைவினில் ஆடாத இவனென்ன ஆடவன்? ஆடைகளை ஒவ்வொன்றாக அகற்றித் தன்னையே இரசித்தாள். இன்று கெளதமனை ஒரு கை பார்த்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டவளாகக் கட்டிலில் ஆடைகலைந்து படுத்திருந்தாள் மனோரஞ்சிதம். விசுவாமித்திரன் முன் கெளதமன் எம்மாத்திரமென எண்ணினாளோ? இன்று அவனை ஒரு கை பார்த்து விடவேண்டுமென திட்சங்கற்பம் செய்து கொண்டவளாக அவனை எதிர்பார்த்துப் படுக்கையில் காத்திருந்தாள் அவள். தன்னெழில் கண்டு அவன் சித்தம் நிலைகுலைய
மாட்டானா என்று ஒருவித எதிர்பார்ப்புடன் காத்து நின்றாள்.

வெளியிலிருந்து தன்னிருப்பிடம் திரும்பிய கெளதமனை அவளது நிர்வாணம் வரவேற்றது. படுக்கையில் புகபெற்றதொரு ஓவியமொன்றில் நிர்வாணமாகச் சாய்ந்து படுத்திருக்குமொரு பெண்ணைப் போல் படுத்திருந்த அவளது தோற்றம் கண்டு அவனது சித்தம் கலங்கியதா? அவளை அவனது பார்வை ஒரு கணத்தில் தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரையில் ஆராய்ந்து பார்த்தது. விரிந்திருந்த அளகபாரத்தை, அழகிய கண்களை, சிவந்த உதடுகளை, விம்மிப் புடைதிருந்த மார்புகளை, கொடியிடையினை, அகன்றிருந்த இடுப்பினை, தொடைகளையென ஒருகணம் நோக்கினான் அவன். எதற்காக இன்று இவ்விதம் இவள் இவ்விதம் நடந்துகொள்கிறாளெனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் இவ்விதம் அவளைப் பார்த்துக் கேள்வியினைத் தொடுத்தான்:

"மனோரஞ்சிதம்! நீ எவ்வளவுதூரம் நமக்கிருவருக்கிடையில் நிலவும் உறவினை மாசுபடுத்தி விட்டாய்?"

அதற்கவள் படுக்கையிலிருந்து எழும்பாமலேயே, "என்ன நம் உறவினை மாசு படுத்திவிட்டேனா? இவ்வளவு நாட்களாகக் காத்துநிற்கின்றேனே.. உங்களுக்கு என் நிலை இன்னும் புரியவில்லையே.... இயற்கையின் தேவையினை, காலத்தின் கட்டாயத்தினைத் தாங்களேன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எதற்காக ஓடிஓடி ஒளிந்து கொள்கின்றீர்கள்? நாணத்தை விட்டுத்தான் கேட்கின்றேன். என்னை ஏற்றுக் கொள்வதிலென்ன தயக்கம்?" என்று பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.

கெளதமன் அவளை மீண்டுமொருமுறை நோக்கினான். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் சுடர்ந்து கொண்டிருந்த இச்சையினைத் தூண்டுமெழிலினை அவன் கண்டானா?

"மனோரஞ்சிதம். உனது உடலின் அங்கங்களின் எழில்காட்டி என்னை மயக்குமளவுக்குத் தாழ்ந்து போய் விட்டாயே? எவ்வளவுதூரம் நம் உறவினைச் சிறுமைப் படுத்தி விட்டாய்? இருப்பின் அர்த்தம்தனை அறியத் துடித்துக் கொண்டிருக்குமென்னை அதன் அறியாமைக்குள் சிக்கவைத்திட முனைந்து விட்டாயே?"

"கெளதமா! என்ன இருப்பின் அறியாமையா? காமம்தானே படைப்பின் ஆதாரம். அதில்லாவிட்டால் நானில்லை. ஏன் நீருமில்லையல்லவா? அது கண்டு விலகியோடுவதிலென்ன நியாயம்? என் தேவை நியாயமானதொன்றல்லவா?"

"நமக்கிடையிலுள்ள உறவின் ஆழத்தைக் காமம்தான் நிர்ணையிக்க வேண்டுமென நீ நினைப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. உன் உடலின் அவயங்களின் நேரத்தியில், எழிலில் என் நெஞ்சில் காமம் கட்டவிழ்ந்து பாயவில்லையே. படைப்பின் நேர்த்தியில் சுடர்விடும் உனது அங்கங்கள் ஒவ்வொன்றும் எனக்கு இருப்பின் இரகசியத்தையல்லவா கட்டியங்கூறி நிற்கின்றன. என்னை மீண்டும் மீண்டும் இவ்விதம் கட்டிப் போட முனைந்து விடாதே. நம் உறவின் அடிப்படையே இந்தப் புரிதல்தானே. இருப்பினை மீறுதற்கு முயலுமென்னை நீ மீண்டும் மீண்டும் அதற்குள் கட்டிப் போட முனைவதென்ன நியாயம்? இதுதான் உனக்குத் தேவையென்றால் உனக்கு நானெதற்கு? எனக்குத்தான் நீயெதற்கு? உனக்கு 'நான்' தேவையா? அல்ல
திந்த என் வலிய வனப்பான உடல் தேவையா? அறிவு துலங்குமென் உறவு உனக்குத் தேவையா? அல்லது உணர்வின் சங்கமத்தில் மூழ்க இந்த உடல் தேவையா? அன்று சித்தார்த்தன் உறவுகள் துறந்தோடினான் ஞானம்பெற. நான் அவ்விதம் ஓடவில்லையே மனோரஞ்சிதம். உறவு துறந்து, உணர்வு கடந்து என் தேடல் தொடரவில்லையே. உணர்வடக்கித் தொடருமிந்த உறவினூடல்லவா நான் என் தேடலைத் தொடருகின்றேன். ஆனால் நீயோ .. மீண்டும் மீண்டும் உன் உணர்வு வலைக்குள் சிக்க வைக்க முயன்று கொண்டிருக்கின்றாய். அதன் மூலம் நம்முறவின் சிறப்பினையும் மாசுபடுத்த முனைகின்றாயா? சொல். மனோரஞ்சிதம். சொல்."

கெளதமனையே மீண்டுமொருமுறை உணர்வு பொங்கப் பார்த்தாள் மனோரஞ்சிதம். மறுகணமே தன்னுணர்வடக்கியெழுந்தாள்.

"கெளதமா! இதுதான் உன் முடிவென்றால் நான் உன்னை இனியும் வற்புறுத்தப் போவதில்லை. நம்முறவுக்கு எதுவுமே குறுக்கே வராமல் பார்த்துக் கொள்கிறேன். உணர்வடக்கிய உறவுதான் தேடலுக்கு அவசியமென்று நீ நினைக்கும் பட்சத்தில் நான் அதற்குக் குறுக்கே வரப்போவதில்லை. எனக்கு என் உணர்வினை விட எம்மிடையேயுள்ள உறவுதான், உன்மேல் நான் கொண்ட காதல்தான், முக்கியமானது. அதனை இழப்பதற்கென்னால் ஒருபோதுமே முடியாது. என்றாவதொருநாள் நீ உணர்வுடன் கூடிய உறவின் மூலம் உன் தேடலினைத் தொடர எண்ணினால் அதுவரையில் நான் பொறுமையுடன் காத்து நிற்பேன்"

இவ்விதமாகக் கூறியெழுந்தாள் மனோரஞ்சிதம். கெளதமன் மீண்டுமொருமுறை அவளை நோக்கினான். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் சுடர்ந்த ஞானத்தினொளியில் அவன் தன்னை மீண்டுமொருமுறை மறந்தான்; துறந்தான்.

ngiri2704@rogers.com
நன்றி: திண்ணை.காம்; ஜனவரி 7, 2006
http://www.thinnai.com/st0106063.html
பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 73


7. நடுவழியில் ஒரு பயணம்!

- வ.ந.கிரிதரன் -


பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ
அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம்
நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து சில நிர்வாண நடனமாதர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி
கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு
சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

"ஏ! நண்பா! எப்படிச் சுகம்" என்று உரையாடலினைத் தொடர்ந்தேன்.

"நான் நல்லாத்தானிருக்கிறேன். நீ எப்படி?"யென்றான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் போதை இன்னும் தணியாததை.

"நானும் நலமே! நன்றி!" என்றேன்.

அவன் அவ்வழியால் சென்று கொண்டிருந்த டாக்ஸிகள் சிலவற்றை மறித்தான். ஒருவராவது அவனுக்காக நிற்பாட்டுவதாகத் தெரியவில்லை.

"பார். கறுப்பினத்தவனென்றதும் ஒருத்தனாவது நிற்பாட்டுகிறானில்லை. அங்கு பார். அந்த கறுப்பின டாக்ஸிச் சாரதி கூட நிற்பாட்டுகிறானில்லை" என்றான்.

"அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பத்திரிகைகளில் பார்த்திருப்பாயே. எத்தனை தடவைகள் அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள். சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்களே. மிகவும் ஆபத்தான பணிதான். உனக்கென்ன டாக்ஸிதானே வேண்டும். நான் மறிக்கவா?" என்றேன்.

"அவ்விதம் செய்தால் நன்றியுள்ளவனாகவிருப்பேன்" என்றான்.

"அது சரி. நீ எங்கு போக வேண்டும்?"

"கோடன் ரிட்ஜ் தெரியுமா? 'டான்வோர்த்' வீதியும் 'மிட்லாண்ட்' வீதுயும் சந்தியும் சந்திக்குமிடத்திற்கண்மையில்.." என்றான்.

"ஓ! நீ கிழக்கினிறுதியில் (East End) இருக்கிறாயா? நல்லதாகப் போயிற்று. நானும் உன்னிருப்பிடத்திற்கப்பால்தானிருக்கிறேன். வேண்டுமானால நாமிருவருமே டாக்ஸி கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே. நீ என்ன சொல்கிறாய்?" என்று அவனை நோக்கினேன்.

'மிகவும் அருமையான யோசனை நண்பனே!" என்றான்.

அவ்வழியால் வந்த டாக்ஸியொன்றினை மறித்தேன். உடனேயே போட்டி போட்டிக் கொண்டு வந்து நின்றார்கள். அவன் சிரித்தான்:

"பார்த்தாயா. இவ்வளவு நேரமாக நான் மறித்துக் மொண்டு நிற்கிறேன். ஒருத்தராவது நிற்கவில்லை. நீ ஒரேயொரு தரம்தான் மறித்தாய். பார்! என்ன மாதிரி போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்பதை."

நின்ற டாக்ஸியில் இருவரும் ஏறியமர்ந்தோம். டாக்ஸி சாரதி பங்களாதேசைச் சேர்ந்தவன். செல்லும் இடத்தைக் கூறி விட்டுச் சாரதியைப் பார்த்து "பாகிஸ்தானா" என்றேன். "இல்லை, பங்களாதேஷ்" என்றான். அவனுடன் சிறிது உரையாடி விட்டு என் கவனம் அருகிலிருந்த சோமாலியனைப் போன்ற தோற்றத்திலிருந்தவன் பக்கம் திரும்பியது.

"எந்த ஊர்? சோமாலியாவா?" என்றேன்.

"இல்லை. எரித்திரியா" என்றான்.

எனக்கு எப்பொழுதுமே எரித்திரியா மீது அதன் மக்கள் மீது மிகுந்த அனுதாபமும், மதிப்புமுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சமாதான ஊர்வலமொன்றில் பங்கேற்றுவிட்டு கனடா திரும்பியிருந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த முதியவரொருவரை 'டொராண்டோ பல்கலைக் கழகத்தில்'
நடைபெற்ற கூட்டமொன்றில் சந்தித்ததிலிருந்து எரித்திரியா மீதான என் ஆர்வம் அதிகரித்திருந்தது. எரித்திரியா விடுதலைப் போராட்டத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டதோடு ஆதரவாளராகவும் விளங்கி அதன் பயனாக சிறைவாசமும் அனுபவித்திருந்த அந்த முதியவர் எரித்திரியா மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி நன்கு அறிந்திருந்தார். போராளிகளினதும், மக்களினதும் முழுமையான ஒத்துழைப்பின் மூலம் விடுதலைப் பெற்ற நாடு எரித்திரியா என்பாரவர்.

"உன் நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திலும் அதன் வெற்றியிலும் போராளிகளினிடத்திலும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன் நான். எபப்டி உங்களால் இதனைச் சாதிக்க முடிந்தது?"

"ஆரம்பத்தில் 1961இல்தான் எரித்திரியா விடுதலை அமைப்பு ஆரம்பமானது. அதில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் எல்லோருமே அதிக அளவில் அங்கம் வகித்தார்கள். பின்னர் கிறிஸ்தவர்களினால் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு உருவானது. இரு அமைப்புகளிற்குள்ளும் ஏற்பட்ட பகைமையினை உணர்ந்த எதியோப்பிய அரசு சரியான தருணத்தில் தாக்கவே எம்மண்ணின் பல பகுதிகள் மீண்டும் அவர்கள் வசம் வீழ்ந்தன. பின்னர் ஏற்பட்ட சூழல்களினால் எரித்திரியா விடுதலை அமைப்பு ஓரங்கட்டப்பட்டது. எதியோப்பியாவில் உருவான திக்ராய விடுதலை அமைப்பும் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பும் ஒன்றிணைந்து எதியோப்பிய அரசுக்கெதிராகத் தொடுத்த போரின் விளைவாகவே நாடு விடுதலை பெற்றது"

இவ்விதம் கூறி விட்டு அவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்து போனான்.

"எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு கிறித்தவர்கள் அமைப்பென்று கூறினாயே? உங்கள் நாட்டுச் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்களா..."

"இல்லை... முஸ்லீமகள்.."

"அப்படியென்றால் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பில் முஸ்லீம்கள் இருக்கவில்லையா?"

"இருந்தார்கள்... முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் நிறைய எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பில் இருந்தார்கள். ஆரம்பத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறி எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பு உருவானாலும் பின்னர் தாங்கள் வெளியேறியது எரித்திரியா விடுதலை அமைப்பின் அதிகார வேட்கையினை எதிர்த்தேயென எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பினர் கூறினார்கள். இதன் மூலம் எரித்திரியா மக்கள் விடுதலை அமைப்பினர் தங்களை அனைத்து
மக்களினதும் அமைப்பாக மாற்றி விட்டார்கள்."

எனக்கு மிகவும் ஆச்சரியமாகவிருந்தது. அன்று அந்த எரித்திரிய நண்பனை அவனிருப்பிடத்தில் விட்டு விட்டு என்னிருப்பிடம் திரும்பியபோது அதிகாலை இரண்டினைத் தாண்டி விட்டிருந்தது. தற்செயலானதொரு நடுவழி நள்ளிரவுச் சந்திப்புக் கூட எவ்விதம் பல விடயங்களைப் போதித்து விட்டது.

மேற்படி சந்திப்பின் மூலம் நான் பல விடங்களை அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக இதுவரை நான் அறியாமலிருந்த சக கனடியனொருவனின் பூர்வீகம் பற்றி, அவன மண்ணின் போராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தற்செயலாக நடைபெறும் ஒரு சில நடுவழிப் பயணங்கள் கூட சிற்சில சமயங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகின்றன என்பதற்கு இச்சந்திப்பொரு உதாரணம்.

அன்றிரவு படுக்கையில் சாய்ந்த பொழுது இன்னும் போரின் உக்கிரத்துள் வதங்கிக் கொண்டிருக்கும் என் நாட்டின், என் மக்களின் ஞாபகங்கள் தான் எழுந்தன. நான் ஆனந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அங்கு ஒரு பச்சிளங் குழந்தையின் மெல்லுடல் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஓரிளம் பெண்ணின் அநாதரவான ஓலத்தால் ஒரு கிராமத்தின் நள்ளிரவு அதிர்ந்து கொண்டிருக்கலாம். கனவுகளும் கற்பனைகளுமாக வாழ்வைத் தொடங்கிய ஓரிளங்குடும்பத்தின் இருப்பே மிருக வெறி பிடித்த மனிதர் சிலரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம். 'ஷெல்'களால், பெருகும் இரத்த ஆறால் இன்னும் என்னெவெல்லாமோ நடந்து கொண்டிருக்கலாம்.

- பதிவுகள் டிசமபர் 2006; இதழ் 84


8. சிறுகதை: 'வங்காலை'!

- வ.ந.கிரிதரன் -


மீண்டும் மீண்டும் அந்தத் துன்பகரமான நினைவுகளே சிந்தையில் வளைய வந்து கொண்டிருந்தன. அந்தச் செய்தியின் ஆழமும், அதன் பின்னால் புதைந்து கிடக்கும் துயரமும் நெஞ்சினைப் பிளக்குமொரு வலியாகக் கோடிழுத்தன. எதற்காக? ஏன்? இணையக் கடலின் ஆழத்தில் முத்தெடுக்க முனைந்தவன் முள்ளையெடுத்த கதையாக ஆகிப் போன நிலைமை. எத்தனை கனவுகளுடன், கற்பனைகளுடன், துள்ளல்களுடன், தழுவல்களுடன், மகிழ்ச்சி கலந்த உணர்வுகளுடனிருந்தது சூழல். பொறுப்பும், கனிவும், காதலும் மிக்கு விளங்கியது பொழுது. இளங்கணவனும் தந்தையுமான அந்த இளைஞன்; தாயும், தாரமுமான அந்த இளம் யுவதி. வஞ்சகமற்ற பால் மணம் மாறா அந்தப் பச்சிளங் குருத்துகள்.

எதற்காக இந்தக் கூத்து?

படைப்பின் இன்பத்திற்குப பின் இவ்விதமொரு சோகமா?

சில சம்பவங்கள், சில சொற்கள், சில காட்சிகள் இவையெல்லாம் சில வேளைகளில் நெஞ்சினை உலுப்பி விடும் ஆற்றல் பெற்றவையாக இருந்து விடுகின்றன. இந்தச் சம்பவமும், அது பற்றிய ஊடகச் சித்திரிப்புகளும், பிம்பங்களும் அத்தகைய வல்லமை மிக்கவை.

மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளும், அவற்றின் பின்னால் பொதிந்து கிடக்கும் துயரங்களும், சோகங்களும்....

உலகம் முழுவதும்தானே இத்தகைய காட்சிகளாலும், துயரங்களாலும், கொடுமைகளாலும் நிறைந்து கிடக்கின்றது. ஏன் இந்தக் கண்ணீர்த் தீவின் தென்பகுதியில் கூட இத்தகைய காட்சிகள், துயரங்கள் நடக்கவில்லையா?

உண்மைதான். இந்தப் பூமிப்பந்தின் எந்தத் திக்கிலென்றாலும் இத்தகைய சம்பவங்கள் நடந்து விடுகையில் நெஞ்சு வலிக்கத்தான் செய்கிறது. ஆயினுமென்ன.. நானுமோர் அற்ப மனித ஐந்துதானே. அதே குறை நிறைகளும் எனக்கிருக்காதா? ஊரின் துயரங்களையும், சோகங்களையும்விட என் வீட்டுத் துயரமும், சோகமும் என்னைத் தாக்கும் வீச்சு அதிகமல்லவா? அதற்கு நான் மட்டுமென்ன விதி விலக்கா?

போரில், யுத்தத்தில் நடைபெறும் அழிவுகளை விடத் தனிப்பட்ட துன்புறுத்தல்களுடன், வதைகளுடன் கூடிய இத்தகைய அழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகம்தான்.

மீண்டும் மீண்டும் அதே நினைவுகள்...

அன்று காலையில் வழக்கம்போல் எத்தனை எத்தனை கனவுகளுடன், இன்பங்களுடன், அந்தக் குடிசையின் பொழுது விடிந்திருக்கும்? அந்தப் பிஞ்சுகளில் எத்தனை எத்தனைப் பிஞ்சுக் கனவுகள், கற்பனைகள் பூத்திருக்கும்? துணையிரண்டின் நெஞ்சங்களில் எத்தனை எத்தனை காதல் மலர்கள் வழக்கம் போல் பூத்திருக்கும்?

எனக்கு மட்டும் வருங்காலம் அறிந்து எதிர்வு கூடும் சாத்தியமிருந்திருந்தால்....... காலத்தை மீறிடும் வல்லமை இருந்திருந்தால்.... கடந்த காலத்திலிருந்து உம்மிருப்பின் முடிவு வரையிலான சம்பவக் கோர்வைகளை உயிர்ப்புடன் மீள அடுக்கி வைத்திருக்க மாட்டேனா?
சோதிடர்களே ! எங்கு போயொளிந்தீர்?

கண்களுக்கு முன்னால் உறவுகள சீர்குலைக்கப்பட்ட போது அவ்வுறவுகளின் உள்ளங்களில்தானெத்தனை உணர்வுகளோ?

முடிவில் கூட நிம்மதியற்ற இருப்பு!

என்ன உலகமிது! என்ன உலகம்!

போரொழிந்த பாரொன்றின் சாத்தியமுண்டா? என்றாயினும்.

சொந்த மண் துறந்து, தொலைவிலினிலே என்னிருப்பு. நீரோ தொலைவிலிருந்து மண் நாடி மீண்டீர்? உம் விடயத்தில் நிலமென்னும் நல்லாள் நல்லாளற்றுப் போனாதேனோ?
இருந்தும், மண் நாடி, வல்லூறுகளுக்கு மத்தியில் கூடு கட்டி இருப்பை எதிர்பார்த்த புட்களே! உம்மிருப்பின் உறுதியும், துணிவும், நம்பிக்கையும் போற்றுதற்குரியன. போற்றுதற்குரியன. பயனற்றுப் போகாதும் இருப்பு இங்கொருபோதும்.

வங்காலை தலை நிமிர்ந்து நிற்கிறது.

**மன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ளது தோமஸ்புரி கிராமம். ஈழச் சூழல் காரணமாகத் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசுக்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து மீண்டும் தமது தோமஸ்புரிக் கிராமத்திற்குத் திரும்பிய குடும்பம் மூர்த்தி மாட்டினுடையது (வயது: 35). மனைவி: மேரி மெக்ரனினின் சித்திரா (வயது 27). குழந்தைகளிருவர்: ஆன் லக்சிகா (பெண் குழந்தை, வயது 09), ஆன் டிலக்சன் (ஆண் குழந்தை, வயது 07). மூர்த்தி மாட்டின் தச்சுத் தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளி. அவரது தொழிலுக்குப் பயன்படுத்தும் உழி போன்ற உபகரணங்களால் பயங்கரமான சித்திரவதைகளின் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். ஸ்ரீலங்காப் படையினரே இப்படுகொலைக்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டிய கிராமத்தவர்கள் படையினருக்கெதிராக நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.**

பதிவுகள் அக்டோபர் 2006; இதழ் 82.


9. மனோரஞ்சிதம்!
வ.ந.கிரிதரன்


மனோரஞ்சிதம்! நான் மனோரஞ்சிதத்தை மீண்டுமொரு முறை சந்திப்பேனென்று எண்ணியிருக்கவேயில்லை. அதுவும் இவ்விதம் எதிர்பாராமல். இருபது வருடங்களாவதிருக்கும் அவளைக் கடையாகச் சந்தித்து..முன்பை விட இன்னும் தளதளவென்று பூசி மெழுகி மின்னிக் கொண்டிருந்தாள். அழகென்றால் அப்படியொரு அழகு. சங்ககாலக் கவிஞர்கள் வர்ணிப்பதைப் போல் பணை, வன, தட, பருத்த, அகன்ற போன்ற வார்த்தைகளைத் தாராளமாகவே பாவிக்கலாம் அவளை வர்ணிப்பதற்கு. அவ்விதமானதொரு உருவ அமைப்பு. அப்பொழுது நான் மிகவும் கட்டுப்பெட்டி என்று சொல்வார்களே அவ்விதமானதொரு குண அமைப்பு எனக்கு. என் வாழ்வில் எப்பொழுதுமேயே நிதானமானதொரு வளர்ச்சி தான் ஏற்பட்டு வந்திருக்கின்றது. நிதானமென்றால் அப்படியொரு நிதானம். ஒவ்வொரு மட்டத்திலும் ஆற அமர நின்று நிதானித்து உணர்ந்து அறிந்து வந்திருக்கின்றேன் என் வாசிப்புப் பழக்கத்தைப் போல். ஆரம்பத்தில் அம்புலிமாமாவில் மண்டுகோட்டை மந்திரவாதியில் நிதானமாக ஆரம்பித்துப் பின் அறுபது சதத் துப்பறியும் நாவல்களில் மேதாவி, சிரஞ்சீவி, பிடிசாமி, சந்திரமோகனென்று உழன்று, மணியன், அகிலன், ஜெகசிற்பியன், கார்க்கி, டால்ஸ்டாய், தி.ஜா, சு.ரா,காவ்கா..வென்று நிதானமாகவே வளர்ந்து வந்திருக்கின்றது. வளர்ச்சியென்பது பரிணாமவளர்ச்சியாகவே அமைந்து வந்திருக்கின்றது. திடீர்ப்பாய்ச்சல் என்பதெல்லாம் என் வாழ்வில் கிடையவே கிடையாது. என் அரசியல் பற்றிய கருதுகோள்களும் இவ்விதமாகத் தான்...ஆண்ட இனம் மீண்டும் ஆள நினப்பதில் தவறென்ன என்ற தமிழரசுக் கட்சியினரின் ஆவேசத்துடன் ஆரம்பித்துப் பின் படிப்படியாக மார்க்ஸ்,லெனின்,....என வளர்ந்து வந்திருக்கின்றது. என் வாழ்வில் மனோரஞ்சிதம் எதிர்ப்பட்ட காலகட்டத்தில் நான் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன். என்னுடன் 'டியூசன்' வகுப்பில் சக மாணவியாக அறிமுகமானவள் தாள் மனோரஞ்சிதம். அப்பொழுதெல்லாம் நான் நான் பண்பாடு, கலாச்சாரம் ,கற்பு, .....என்று சிந்தனையோட்டங்களில் வளைய வந்து கொண்டிருந்த காலம். மனோரஞ்சிதமோ சிட்டுக் குருவியாகச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாள். அவளது சிந்தனையோட்டங்கள் எனக்கு மலைப்பை மட்டுமல்ல ஒருவித ஆத்திரத்தையும் ஏற்படுத்தின. பெண் என்றால் இவ்விதம் தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகளை நான் வைத்துக் கொண்டிருந்தேன் 'இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பிளை. இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே..' என்று வாத்தியார் பாடுவாரே அது போல. சக மாணவர்களுடன் சகஜமாகச் சிரித்துச் சிரித்துப் பழகும் அவளது போக்கு எனக்கு ஒரு வித எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. இதனால் உள்ளூர அவளது அழகு என்னைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்த போதும் எட்டியே இருந்து வந்தேன் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி. எத்தனை முறை நானும் இவளும் சண்டை பிடித்திருப்போம். 'ஆணுக்கொரு நியாயம். பெண்ணுக்கொரு நியாயமா? தாலி பெண்ணுக்குச் சுதந்திரத்தை அடக்கி வைக்கப் பாவிக்கின்றதொரு வேலி' என்று அடிக்கடி வாதிக்கும் மனோரஞ்சிதத்தை என்னால் ஏற்கவே முடிந்ததில்லை. 'கற்பு பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு' என்று அவள் குற்றஞ் சாட்டுவதை என்றுமே நான் ஏற்றதில்லை. பதிலுக்கு 'பாரதியின் புதுமைப்பெண்ணென்று உனக்கு நினைப்போ?' என்று அவளைச் சீண்டுவேன். 'கற்பு என்பது இருவருக்கும் பொது. ஆண் தவறு செய்தால் பெண்ணும் தவறு செய்ய வேண்டுமா?' என்று பதிலுக்கு வாதிப்பேன். ஆனால் மனோரஞ்சிதமோ அவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டாள். 'நீ ஒரு சரியான Male Chauvanist' என்று வைவாள்.

மனோரஞ்சிதம் பாடும் போது மிகவும் இனிமையாகவிருக்கும். அவளது உடல் வளம் மட்டுமல்ல குரல் வளமும் அனைவரையும் வசியம் செய்து மயக்கி விடும். குறிப்பாக அவள் 'அமுதைப் பொழியும் நிலவே' , 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' போன்ற அன்றைய பி.சுசீலாவின் பாடல்களைப் பாடும் பொழுது எவ்வளவு நேரமானாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்படியே உருகிக் குழைந்து மனமொன்றிப்பாடுவாள். அவளது அழகும் குரல் வளமும் 'கோழி கூவத்தொடங்கியிருந்த' பருவத்திலிருந்த என்னைப் படாத பாடு படுத்தின. ஆனால் நான் கோட்பாடுகளை மையமாகவைத்து வாழ்வினை நடத்துபவன். நானாக உணரும் வரையில், உணர்ந்து அறிந்து தெளிவு பெறும் வரையில் பிடித்துக் கொண்டிருக்கின்ற கோட்பாட்டினை விட்டு விட்டு ஓடுவதென்பது என்னால் முடியாத செயல்.

அவளை எவ்வளவுக்கெவ்வளவு நான் உணர்வுகளின் அடிப்படையில் விரும்பினேனோ அவ்வளவுக்கவ்வளவு என் சிந்தனையோட்டங்கள், கருதுகோள்கள் அடிப்படையில் வெறுத்தேனென்று தான் கூற வேண்டும்.

அவளுக்குக் கவிதையென்றால் உயிர். நானோ அந்தக் காலத்தில் கவிதைகளென்று என் அன்றைய மனநிலையோட்டங்களைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். என் கவிதைகளின் கருப்பொருளாகப் பெண், பண்பாடு, கற்பு, காதல் போன்ற பழமைத்துவமான கருத்துகளே நிறைந்திருக்கும். யாரோ சிலர் அவளிடம் நான் இவ்விதம் கவிதைகள் எழுதுவதைக் கூறி விட அவள் என்னிடம் 'காதல்' பற்றி உடனடியாகக் கவிதையொன்றைப் பாடுமாறு சவால் விடவே நானும் வரகவியொருவனைப் போல் ஏற்கனவே என் மனதில் உருவாகியிருந்த காதல் பற்றிய கவிதையொன்றை அள்ளி விட்டேன். 'ஓர்நாள் அவள் முகம் காணாவிடில் மனமொடிந்து ஓரத்தே முடங்குவதும், உன் கூர்விழிகள் முன்னால் மன்னவன் கூர் வேலென்ன வேலென்ன என மயங்குவதும், கார் குழல் நங்கையர் மேல் கண்ட காதலினாலன்றி வேறெதனால்?' என்று அந்தக் கவிதை அமைந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டிலிருந்து கொண்டு 'மன்னவன் கூர்வேல்' பற்றிப் பாடியிருந்தேன். அந்த அப்பாவிப் பெண்ணோ அதனைக் கேட்டு உருகியே விட்டாள். சிறிது காலம் அதன் விளைவாக என் பின்னால் சுற்றிக் கொண்டேயிருந்தாள். அவள் உண்மையில் அவ்விதம் சுற்றிக் கொண்டிருந்தாளா அல்லது நான் தான் அவ்விதம் கற்பனை செய்து கோண்டிருந்தேனோ என்பதில் இன்று வரையில் எம்னக்கொரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவள் செயல்கள், பேச்சு முதலியவற்றை வைத்து நான் அவ்விதம் எண்ணிக் கொள்வதற்கு எனக்கு நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அடிக்கடி அவள் ஆண் நண்பர்களை மாற்றிக் கொண்டிருந்தாள். அவளுடன் ஒருமுறையாவது பழகினால் அதுவே ஜென்ம சாபல்யம் என்பது போல் நாண்பர்களும் அவள் பின்னால் அடிக்கடி சுற்றிக் கொண்டேயிருந்தார்கள். அவளால் கைவிடப்பட்டவர்களும் சரி, மற்றவர்களும் சரி ஒருமுறையாவது அவள் பொருட்டுச் சண்டைகள் போட்டதென்பது கிடையாது என்பதுதான் அதிசயமான விடயம்.

இத்தனை வருடங்கள் கழித்து, புலம் பெயர்ந்த சூழலில், டொராண்டோ மாநகரில் ஆலயமொன்றில் அவளைத் தற்செயலாகச் சந்தித்த பொழுது எனக்கு ஆச்சர்யத்துடன் பழைய சம்பவங்களும் ஞாபகத்தில் வந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் மிகவும் அதிகமாகவே பரினாமம் அடைந்திருந்தேன். பெண்ணியம் பற்றிய தீவிரமான கருதுகோள்கள் என்னை ஆட்கொண்டிருந்தன. 'கற்பு' என்பது பெண்ணடிமைத்தனமென்பதில் எந்தவிதச் சந்தேகமுமற்றதொரு நிலைக்கு மாறியிருந்தேன். இத்தனைக்கும் என் மனைவி மிகவும் எதிர்மாறான கருத்துகளைக் கொண்டிருந்தாள். ஆலயம் அது இதென்று அலைந்து கொண்டிருப்பவள். ஆனால் அதற்காக அவள் மேல் என் கருத்துகளைத் திணிப்பவனல்ல. அவள் சுயத்தினை, கருத்துகளை மதிப்பவன். அதனால் தான் ஆலயமே செல்லாத நான் அவளை ஆலயத்தில் இறக்கி விட்டு, வெளியில் வாகனத் தரிப்பிடத்தில் அவளுக்காகக் காத்திருந்தேன். அவ்விதம் காத்திருந்த சந்தர்ப்பமொன்றில் தான் நான் மனோரஞ்சிதத்தை மறுபடியும் என் வாழ்வில் சந்தித்திருந்தேன். ஜீன்சும், டீசேர்ட்டுமாக மிகவும் நாகரிகமாகத் திரிந்து கொண்டிருந்த மனோரஞ்சிதம் காஞ்சிபுரப்பட்டில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். பல 'பவுண்'களில் மின்னிய தாலியைத் தெரியும்படியாகத் தொங்க விட்டிருந்தாள்.. மூக்குத்தி மூக்கில். கையில் அர்ச்சனைத் தட்டு. பின்னால் சிறிது தள்ளி அவளது கணவர் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராமல் கண்டதும் சிறிது திகைப்புடன் ஆச்சரியமும் கலக்கவே வார்த்தைகள் தாமதமாகவே வெளிவந்தன.

'மனோரஞ்சிதமா..நம்பவே முடியவில்லை.' என்றேன். ஒரு கணம் அவளது முகத்திலும் பழைய நினைவுகள் படர்ந்து என்னை இனங்கண்டுகொண்ட உணர்வுகளோடின. 'யார். கருணாகரனா!' என்று சிறிது வியந்தாள். 'நல்லாப் பழுதாகிப் போனீர்கள். என்ன குடும்பப் பாரமா?' என்று இலேசாகச் சிரித்தாள். இன்னும் அதே மாதிரித்தான் பேசுகின்றாள். இந்தக் குறும்புத்தனமான பேச்சு அவளது முக்கியமான சுபாவம். 'நீர் முன்பை விட இன்னும் அழகாகவிருக்கின்றீர்' என்று பதிலுக்குச் சிரித்தேன். 'தாங்ஸ்' என்று சிறிது நாணினாள். 'நம்பவே முடியவில்லை. மனோரஞ்சிதம் கோயிலிலா 'என்றேன். பதிலுக்கு மனோரஞ்சிதம் சிரித்தாள். 'குழந்தைகளுக்கு எங்களது பண்பாட்டையெல்லாம் பழக்க வேண்டாமா' என்றாள். அத்துடன் பின்னால் வந்து கொண்டிருந்த தனது கணவரிடம் 'இவர் கருணாகரன். என் பாடசாலை நண்பர்' என்று அறிமுகப்படுத்தினாள். ஒரு காலத்தில் 'தாலி பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கும் வேலி''யென்று முழங்கியவளைத் தாலியும் காஞ்சிபுரப்பட்டுமாக மேற்கு நாடொன்றில் இந்துக் கோயிலொன்றில் சந்திப்பேனென்று நான் நினைத்திருக்கவேயில்லை. காலத்தின் கோலத்தை எண்ண வியப்பாகவும் சிரிப்பாகவுமிருந்தது. 'பண்பாடு. பண்பாடு' என்று முழங்கிய நானும் அதற்கு எதிராக முழங்கிய அவளும் முற்றிலும் மாறானதொரு எதிர் எதிரானதொரு சூழலில் மீண்டும் சந்தித்திருக்கின்றோம். ஒவ்வொரு முறை மனோரஞ்சிதம் என் வாழ்வில் எதிர்ப்படும் சமயங்களிலெல்லாம் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நிற்க வேண்டுமென்பதிலிருந்த முரண்நகையினை எண்ணிச் சிரிப்பு வந்தது. ஆலயத்திலிருந்து குழந்தையுடன் வந்து கொண்டிருந்த என் மனைவி கேட்டாள். 'யாரவள்? உங்களுடைய பழைய காதலியா?' இன்னும் சிறிது காலத்துக்கு என்னுடன் மோதுவதற்கு என் மனைவிக்கு புதியதொரு கருப்பொருள் கிடைத்து விட்டது.

நன்றி: மானசரோவர்.காம்
பதிவுகள், திண்ணை


10. யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- வ.ந.கிரிதரன் -


வெகு சாதாரணமாக நிகழ்ந்து விடும் சில சந்தர்ப்பங்களில் வெகு அசாதாரணமான நிகழ்வுகள் சில வேளைகளில் நடந்து விடுகின்றன என்பதைப் பலர் உங்களது நிஜ வாழ்வில் பலமுறை அவதானித்திருப்பீர்கள். நான் அவனைச் சந்தித்ததும் அத்தகையதொரு சாதாரண சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகளிலொன்றே. வானமிருண்டு, இடியும் மின்னலுமாய்க் காலநிலை குதியாட்டம் போட்டபடியிருந்ததொரு சந்தர்ப்பத்தில், தற்செயலாகப் பொத்துக் கொண்டு பெய்யத்தொடங்கிய மழையிலிருந்து தப்புவதற்காகத் தற்செயலாக மழைக்கு ஒதுங்கியதொரு நகரின் கட்டத்தின் முகப்பொன்றின் கீழ் தான் தற்செயலாக அவனைச் சந்தித்தேன். அந்தச் சாதாரண சந்திப்பு எவ்வளவு மகத்தானதென்பதைப் பின்னர் தான் புரிந்து கொண்டேன். கறுப்பர்கள் என்று வெகு இளக்காரத்துடன் உரையாடல்களில் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டே மனித உரிமைக்காக நடைபெறும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் பலரில் அடியேனும் ஒருவன். அதன் விளைவாகக் கறுப்பினத்தவர்களில் யாரைக் கண்டாலும் ஒரு இளக்காரமான சிந்தனை கலந்த உணர்வு ஏற்பட்டு விடுவது வழக்கம். பகுத்தறிவினை மீறிச் செயற்படும் ஆழ்மனதின் சித்து விளையாட்டுகளில் இதுவுமொன்று.

அந்த யமேய்க்கன் மிகவும் நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தான். கறுப்புக் கால்சட்டையும், மெல்லிய வெளிர் நீல நிறத்தில் மேற்சட்டையும் அணிந்திருந்தான். சவரம் செய்யப்பட்ட சுத்தமான முகம். மழைக்கு ஒதுங்கிய என்னைப் பார்த்ததும் அவன் கீழ்க்கண்டவாறு வினா தொடுத்து வரவேற்றான்:

"நல்வரவு நண்பனே! நீயும் என்னைப் போல் தான் போதிய ஆயத்தமில்லாமல் புறப்பட்டு விட்டவர்களில் ஒருவன் தான் போலும். இந்த விடயத்தில் நாங்களிருவருமே ஒரே படகில் பயணிப்பவர்கள் தான்."

"உண்மைதான் நண்பனே! கனடாவைப் பொறுத்தவரையில் இந்தக் காலநிலையினை உறுதியாக எதிர்வு கூறுவது அண்மைக்காலமாகவே கடினமாகிக் கொண்டு வருவதை நீ அவதானித்தாயா?' என்று அவனுடனான எனது சம்பாஷனையினைத் தொடர்ந்திட அடி போட்டு வைத்தேன். அதை எதிர்பார்த்திருந்தவன் போல் உடனடியாகவே அவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

"எல்லாம் மனிதர்களாகிய நாம் இந்தச் சூழலுக்கு இழைக்கும் அநியாயம் தான். இல்லையா? இப்படியே போனால் விரைவிலேயே நாமும் டைனசோர் போன் வழியில் போய் விட வேண்டியது தான். என்ன சொல்லுகிறாய்?"

"உனது கூற்றினைப் பார்த்தால் நீ சூழலில் மிகவும் அக்கறையுள்ளவனைப் போல் தென்படுகிறாய்? " என்றேன்.

"அதிலென்ன சந்தேகம். நான் மட்டுமல்ல, இந்தப் பூவுலகில் உள்ள ஒவ்வொருவருமே இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தான். அதிலென்ன சந்தேகம்?" என்று பதிலிறுத்துச் சிறிது சிந்தனையில் மூழ்கினான். மேலும் எனது பதிலெதனையும் எதிர்பார்க்காமல் அவனே தொடர்ந்தான்.

" பார். இந்த மேற்குலகே கட்டடங்களால் நிறைந்திருப்பதை. எங்கு பார்த்தாலும் காங்ரீட் வனங்கள். வீதிகளெங்கும் மில்லியன் கணக்கில் வாகனங்கள் புகை கக்கியபடி. ஆனால் வறிய மூன்றாவதுலக நாடுகள் காடுகளை அழித்தால் சூழலுக்கு ஆபத்தென்று பெரிய கூப்பாடு. மேற்கு நாடுகள் சூழலுக்கு விளைவிக்கும் அசுத்தம் இருக்கிறதே. யார் அதைக் கேட்பது. இங்கிருந்து சூழலை அழித்துக் கொண்டே வறிய நாடுகளின் காடுகளைப் பேணிட வேண்டுமாம். மூன்றாம் உலக நாடுகள் மேல் தொடுக்கப்படும் யுத்தங்களில் பாவிக்கபப்டும் நவீனரக ஆயுதங்களால், அழிவுகளால் சூழல் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது. யார் இதைத் தட்டிக் கேட்பது?"

யார் இதைத் தட்டிக் கேட்பது? இந்த அவனது கேள்வி என்னைப் பெரிதும் சிறிது நேரம் ஆட்கொண்டது. ஒவ்வொரு சிறிய மனித உரிமை மீறலுக்கும் பொங்கியெழுந்த மனது, புதிய சூழலின் அநீதிகளுக்கெல்லாம் இசைந்து போனால் போகிறதென்று ஆகி விட்டது போல் தெரிகிறது. வந்த இடம் சொந்தமில்லாதவிடத்தில் இந்த இடத்தில் எது நடந்தாலென்ன என்று நரம்புகள் தளர்ந்து போய் விட்டனவா? அல்லது இதெல்லாம் நானே வலிந்து வரவழைத்துக் கொண்டது தானேயென்ற எண்ணத்தின் ஆதிக்கமா?

"நண்பனே! போகிற போக்கினைப் பார்த்தால் இஸ்லாமுக்கும் , கிறித்துவத்துக்குமிடையில் நடைபெறும் யுத்தமாக யுத்தங்கள் விரிவடைந்து போவதை நீ உணர்கின்றாயா? யுத்தங்களுக்கெல்லாம் தாயான யுத்தத்தினை நீ இனிமேல் தான் பார்க்கப் போகின்றாய். எதற்கும் நாமெல்லாரும் இங்கு கவனமாகத் தானிருக்க வேண்டும்" என்றான்.

"நண்பனே! நீ நன்கு சிந்திக்கின்றாய். இந்த உலகில் யுத்தம் இல்லாவிட்டால் எவ்வளவு நன்றாகவிருக்கும். யுத்தமில்லாத பூமி வேண்டும் நண்பனே!"

"உனக்குத் தெரியாது....நீ இங்கு எவ்வளவு காலம் இருக்கிறாயோ தெரியாது. ஆனால் நான் இங்கு வந்து சரியாக முப்பது வருசங்களைத் தாண்டி விட்டது. பலவற்றை நான் அறிந்து கொண்டுள்ளேன். அவற்றின் அடிப்படையில் நான் என் சிந்தனையினை வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். அது தவிரப் பெரிதாகப் பள்ளிப் படிப்பேதுமில்லை. இன்னும் என்னைப் பார்த்து 'எங்கிருந்து வந்திருக்கிறாய்?' என்று தான் கேட்கிறார்கள். நேற்றுப் பிறந்த பயல்களிருவர் அவ்விதம் தான் நேற்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா?" என்று நிறுத்தினான்.

"என்ன சொன்னாய்?" என் குரலில் விடை ஓரளவு தெரிந்திருந்தும் ஒருவித ஆவல் தொனித்தது. எப்பொழுதுமே புதிர் ஒன்றினை எதிர்நோக்கும் போது எழும் வழக்கமான ஆவல் தான்.

"நான் இத்தகைய கேள்விகளை எதிர்நோக்கும் போது இப்பொழுதெல்லாம் முன்பு போல் உடனடியாக ஆத்திரப்படுவதில்லை. இந்த விடயத்தில் என் மனது மிகவும் பக்குவமடைந்து விட்டது. நான் கேட்டேன்: 'பையன்களா உங்களுக்கென்ன வயது?'. அதற்கு அவர்களிலொருவன் கூறினான்: 'ஏன் கேட்கிறாய்? இருந்தாலும் அதனை அறிவது எமது கேள்விக்குரிய விடையினை அறிவதற்குதவுமென்றால் கூறுகின்றேன்... வருகிற நவம்பரில் எனக்கு இருபது முடிகிறது. அவனது வயதினை நீ அவனிடமே கேட்டுக் கொள்'. அதற்கு நான் கூறினேன்:' அது போதுமெனக்கு.' பின்னர் கேட்டேன்:' உங்களுக்கு இந்த மண்ணுடன் இருக்கும் சொந்தத்தினை விட எனக்கு பத்து வருடம் அதிகமான சொந்தமுண்டு. இந்த நிலையில் என்னை விட உங்களுக்கு அப்படியென்ன அதிகமான உரிமை இருக்க முடியுமென்று இவ்விதமொரு கேள்வியினை நீங்கள் கேட்கலாம். நான் கேட்கிறேன். பையன்களே நீங்களிருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?'. இருவருமே எவ்விதம் ஆடிப்போய் விட்டார்கள் தெரியுமா?" இவ்விதம் கூறி விட்டு அந்த யமேய்க்கன் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். பொதுவாகவே அதிகமான கறுப்பினத்தவர் இவ்விதமாக உரையாடல்களின் போது பெருங்குரலில் சிரித்து ஆனந்தமாக உரையாடலினை வளர்த்துச் செல்வார்கள். இவனும் இதற்கு விதிவிலக்கானவல்லன்.

பிறகு கூறினான்: "உன்னைப் பார்த்தால் கிழக்கு இந்தியனைப் போன்றிருக்கிறாய். நான் வந்திருந்த பொழுது இருந்த நிலைமையே வேறு....காக்ஸ்வெல்/ஜெராட்டிலிருக்கும் சின்ன இந்தியாவிலுள்ள பழைய கடைக்காரர்களைக் கேட்டால் அறிந்து கொள்வாய். கடைகளுக்கெல்லாம் கல்லாலெறிவார்கள். கீழத்தரமாக எழுதி வைப்பார்கள். பத்திரிகைகளில் ஒவ்வொரு முறை யமேய்க்கர்கள் பற்றிய செய்திகள் வரும் பொழுது எவ்வளவு சிரமமாக இருக்கிறது தெரியுமா? முழு யமேய்க்கச் சமூகமுமே சமுக விரோதக் கும்பல் போல் பலரும் நினைத்து விடுகிறார்கள். ஆனால் அதே சமயம் என்னை எடுத்துக் கொள். இத்தனை வருடத்தில் நான் எந்த விதமான தப்பும் இந்த மண்ணில் செய்ததில்லை. கடுமையாக உழைத்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் பலர் எவ்விதம் நினைத்து விடுகிறார்கள்"

அவன் குரலில் தொனித்த கவலை எனக்குப் புரிந்தது. நெஞ்சில் ஆழமாக உறைத்தது. என் இயல்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறிவிட நினைத்துக் கூறாமல் அவனது பேச்சினைச் செவிமடுத்திருந்தேன். இந்தக் கணத்தில் கூட நான் ஏன் அவனிடம் உண்மையாக நடந்து கொள்ள முயலவில்லை என்று என்னை ஒருமுறை கேட்டுக் கொண்டேன். என் குற்றத்தினை ஒப்புக் கொண்டு நானென்ன மகாத்மாவாகவா ஆகி விடப் போகின்றேன். உணர்ந்து கொண்டேன். அதனை முரசடித்து அறிவிக்க வேண்டுமாயென்ன? இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் வெகு சாதாரணமாக நிகழ்ந்து விடும் சில சந்தர்ப்பங்களில் வெகு அசாதாரணமான நிகழ்வுகள் சில வேளைகளில் நடந்து விடுகின்றன என்பது. நான் அவனைச் சந்தித்ததும் அத்தகையதொரு சாதாரண சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகளிலொன்றே. வானமிருண்டு, இடியும் மின்னலுமாய்க் காலநிலை குதியாட்டம் போட்டபடியிருந்ததொரு சந்தர்ப்பத்தில், தற்செயலாகப் பொத்துக் கொண்டு பெய்யத்தொடங்கிய மழையிலிருந்து தப்புவதற்காகத் தற்செயலாக மழைக்கு ஒதுங்கியதொரு நகரின் கட்டத்தின் முகப்பொன்றின் கீழ் தான் தற்செயலாக அவனைச் சந்தித்தேன். அந்தச் சாதாரண சந்திப்பு எவ்வளவு மகத்தானதென்பதைப் பின்னர் தான் புரிந்து கொண்டேன்.

நன்றி: பதிவுகள், திண்ணை


11. கலாநிதியும் வீதி மனிதனும்!
வ.ந.கிரிதரன்


நள்யாமப்பொழுதினைத் தாண்டிவிட்டிருந்தது. மாநகர் (டொராண்டோ) செயற்கையொளி வெள்ளத்தில் மூழ்கியொருவித அமைதியில் ஆழ்ந்திருந்தது. சுடர்களற்ற இரவுவான் எந்தவித அசைவுகளுமற்று நகருக்குத் துணையாக விரிந்து கிடந்தது. பிரபல ஹொட்டலில் தனது நிறுவனம் சார்பில் நிகழ்ந்த விருந்து வைபவத்தில் கலந்து கொண்டு யூனியன் புகையிரத நிலையத்தை நோக்கி, '·ப்ரொண்ட்' வீதி வழியாக நடந்து வந்துகொண்டிருந்தான் தெற்காசியர்களில் ஒருவனான சஞ்சய். இவன் ஒரு கலாநிதி. இரசாயனவியலில். பிரபல மருந்து தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமைந்து இவனைப் போல் பலர் நல்ல உயர் பதவிகளிலிருந்தாலும் பெரும்பாலான குடிவரவாளர்கள் தகுந்த பதவியினை அடைவதற்கு வருடக்கணக்கில் முயன்று கொண்டிருந்தார்கள். பலர் வங்கிகள் போன்றவற்றில் சாதாரண கோப்புகளை ஒழுங்குபடுத்தும் குமாஸ்தாக்கள், தபால் குமாஸ்த்தா, தரவுகளை உள்ளிடும் (Data Entry) பணியாளர்கள், பாதுகாவலர்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி உதவியாளர்கள் (Production Assistant), சுயமாகத் தொழில் செய்யும் டாக்ஸி சாரதிகள், சிறு வர்த்தக வியாபாரிகள், உணவகங்களில் உதவியாளர்களெனப் பல்வேறு வகைகளில் தமது இருப்பினைத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். கனவுகளுடன் முயன்று கொண்டிருந்தார்கள். தூரத்துப் பச்சைக்காய்ச் சொர்க்கங்களை இழந்தவர்கள் பலர். பலருக்கு இழக்க வேண்டிய நாட்டுச் சூழல். இவர்களில் முதலாவது தலைமுறையினைச் சேர்ந்த குடிவரவாளர்களில் பலரின் நிலை இதுவாகத் தானிருப்பது வழக்கம். ஆனால் இந்நிலை இரண்டாம் தலைமுறையில் வெகுவாக மாறி விடும். இரண்டாம் தலைமுறையினச் சேர்ந்த பலர் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றுப் பணியாற்றத் தொடங்கி விடுவார்கள்.

யூனியன் புகையிரத நிலையத்தின் முன்பாகவும் , ரோயல் யோர்க் ஹொட்டலின் முன்பாகவும் டாக்ஸிகள் சில மீனுக்காக வாடி நிற்கும் கொக்குகளாக அமைதியாக இரைக்காகக் காத்துக் கிடந்தன. ஆப்கானிஸ்த்தானைச் சேர்ந்த 'ஹாட் டாக்' (Hot Dog ) விற்பனையாளர்கள் சிலர் யூனியன் புகையிரத நிலையத்தை அண்மித்த நடைபாதைகளில் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து விழிவைத்துக் காத்திருந்தார்கள். ஒரு சில பிரபலமான உணவகங்களில் சிலவற்றில் இன்னும் சில வெள்ளையினத்தவர்கள் உணவைச் சுவைபார்த்துக் கொண்டிருந்தார்கள். 'லூஸ் மூஸ் (Loose Moose)' என்னும் பிரபல உணவகமொன்றின் முன்னால் காத்திருந்த சோமாலியனான டாக்ஸிச் சாரதியொருவன் "You want taxi Sir" என்று நடந்து கொண்டிருந்த கலாநிதியைப் பார்த்துக் கேட்டு வைத்தான். அவனது முயற்சியையெண்ணி மனதுக்குள் சிரித்தவனாக இவன் தேவையில்லை எனப் பொருள்படும்படியாகத் தலையசைத்தவனாக மேலும் நடந்தான். இவர்களைப் போன்ற பலர் தமது பூர்வீகத்தில் பேராசிரியர்களாக, பொறியியலாளர்களாக, டாக்டர்களாக.. எனப் பல்வேறு விதமான தொழில்களைச் செய்தவர்களாக இருப்பார்கள். மூன்றாம் உலகத்தின் மூளை(ல) வளம்.

இதற்கிடையில் கலாநிதி யோர்க் வீதியை அண்மித்திருந்தான். யோர்க் வீயும் ·ப்ரண்ட் வீதியும் சந்திக்குமிடத்தில், வடகிழக்கிலிருந்த நடைபாதையில், ரோயல் யோர்க் ஹொட்டல் சுவருடன் சாய்ந்திருந்தான் டொராண்டோ மாகநகரின் வீடற்ற வாசிகளிலொருவன். இவனொரு வெள்ளையினத்தைச் சேர்ந்தவன். அடிக்கடி சிறு சிறு குற்றச் செயல்கள் புரிந்து விட்டு மாமியார் வீட்டில் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு வீதிக்கு வந்துவிடுவான். சிறிது காலத்தில் வீதி வாழ்க்கை அலுத்துவிடும். குளிர்காலத்துக்காகக் காத்து நிற்பான். வெப்பநிலை பூச்சியத்துக் கீழே செல்லத் தொடங்கும் வரையில் பொறுமையாகக் காத்திருப்பான் மீண்டுமொரு குற்றச் செயல் புரிவதற்காக. தனியாகச் செல்லும் முதியவர்களிடமிருந்து பணப்பைகளைப் பறிப்பது; குடிவகைகள் விற்பனை செய்யும் மதுபானக் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து உட்புகுந்து மதுபானப் புட்டிகளைத் திருடுவது..போன்ற குற்றச் செயல்களைப் புரிவது இவனது விருப்பமான செயல்கள். நீதிமன்றத்தில் ஒவ்வொருமுறையும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கவும் இவன் தவறுவதில்லை. அவனது கவனத்தை புகையிரத நிலையத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்த தெற்காசியக் கலாநிதி சிறிது ஈர்த்தான். மெல்லத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்தவனாக அவன் கலாநிதியை நோக்கி நடந்தான். அதே சமயம் கலாநிதியின் கவனமும் இவனை நோக்கித் திரும்பியது. அதற்கிடையில் 'நான் ஒரு பட்டினியாயிருக்கும் வீடற்றவன். தயவு செய்து உதவி செய்யவும்" எனப் பொருள்படும் விதமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த சிறியதொரு அடையாள அட்டையினைத் தூக்கிப் பிடித்தவனாக அவன் கலாநிதியை நோக்கி வந்தான்.

அறிமுக அட்டையினத் தூக்கிப் பிடித்தவனாக இவனை நோக்கி வந்த அந்த வீடற்றவன் அருகில் வந்ததும் இவனைப் பார்த்து " நான் பசியாயிருக்கிறேன். உன்னால் முடிந்த உதவியைச் செய்கிறாயா?" என்றான். பெரும்பாலான குடிவரவாளர்கள், குறிப்பாகத் தெற்காசியர்கள், கனடிய டாலரைத் தமது நாட்டு நாணயத்தில் வைத்துச் சிந்திப்பவர்கள். வெகுமதி (Tips), பிச்சைக்காரர்களுக்குத் தானம், இலாப நோக்கற்று நிறுவும் நிறுவனங்களூக்கு உதவி போன்றவற்றுக்கெல்லாம் இலேசில் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். ஆனால் அத்தகைய நிறுவனங்கள் வழங்கும் உதவிகளை ஏற்பதில் எப்பொழுதுமே பின் நிற்காதவர்கள். [அதற்கு வெள்ளையர்களைக் கேட்டுத்தான். ஒரு பிரச்சனையென்றால் கொடுப்பதற்குப் பின்நிற்காதவர்கள்.] ஆனால் பெருமை பேசுவதற்காகவும், ஆலயங்களுக்காகவும் அள்ளி வழங்கத் தயங்காத கொடைவள்ளல்கள். சக பணியாளர்கள், மேலதிகாரிகள் முன்னிலையில் இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடும் சந்தர்ப்பங்களில் மட்டும் கருணை பொங்கி வழிய அள்ளிக் கொடுப்பார்கள். அருகிலிருப்போர் மத்தியில் தம் பெருமையினைப் பதவியினைத் தக்க வைக்க முயன்று விடும் செயலுக்கும் இவர்களைக் கேட்டுத்தான்.

இவனது மறுப்பு அந்த வீடற்றவனுக்குச் சிறிது சினத்தினை ஏற்படுத்தியது. அது முகத்தில் தெரிய அவன் மீண்டுமொருமுறை இவனிடம் இரத்தல் செய்தான். இவன் மீண்டும் கை விரித்து விட்டு நடையினைக் கட்டினான். அண்மையில் சில வீடற்ற வீதி மனிதர்கள் சிலர் இழைத்த குற்றச் செயல்களை இவன் வெகுசன ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தான். எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பதே இவனது நடையின் விரைவுக்குக் காரணமாகவிருக்கக் கூடும். இவனை நோக்கி இவனது இனத்தைக் குறித்த துவேசச் சொற்கள் சிலவற்றை உதிர்த்த அந்த வீதி மனிதன் தொடர்ந்தும் வார்த்தைகளை உதிர்த்தான்: "உங்களால் எங்களுக்கு வேலையில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளையெல்லாம் நீங்கள் களவாடி விடுகிறீர்கள்........".

கலாநிதிக்குச் சிறிது பயம் பிடித்துக் கொண்டது. நடையினைச் சிறிது மேலும் விரைவாக்கினான். அதனைத் தொடர்ந்து அவனை நோக்கி அந்த வீதி மனிதனின் மேலதிக வார்த்தைகள் சில தொடர்ந்து வந்தன:

"Go to your .....g country. Go Home!"

நன்றி: பதிவுகள், திண்ணை.

12. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!
- வ.ந.கிரிதரன் -


இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' ( The unfortunate events ) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்' என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாச் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும். இந்தப் புத்தகங்களென்றால் எனக்கு ரொம்பவும் உயிர். அப்பாவுக்கும் தான். எந்த நேரமும் புத்தகம் புத்தகமாய் வாங்கி வருவார். ஆனால் ஒவ்வொருமுறையும் இந்தத் தொடர் புத்தகங்களை வாங்கித் தருவதற்கு மட்டும் அப்பா எப்பொழுதுமே முதலில் தயங்கத் தான் செய்கிறார். அது தான் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. இப்படித்தான் மேரி பாப் ஆஸ்பார்னின் மந்திர மர வீடு (Magic Tree House) தொடர் நூல்களையும் முதலில் வாங்கித் தர அப்பா தயங்கிக் கொண்டிருந்தார். எனக்கு மிகமிகப் பிடித்த தொடர் இது தான். ஜக்கும் ஆன்னியும் ஒவ்வொரு முறையும் மந்திர மர வீட்டிலுள்ள புத்தகங்களினூடு கடந்த காலம், வருங்காலமென்று அலைந்து திரிந்து வருவதைப் போல் எனக்கும் அலைந்து திரிந்து வர ஆசைதான். நாங்கள் இருப்பதோ நகரத்துத் தொடர்மாடி இல்லமொன்றில். இதற்கெல்லாம் சாத்தியமேயில்லை.அப்பா எப்பொழுதுமே சொல்லிக் கொண்டுதானிருக்கிறார் 'கொஞ்சம் பொறம்மா! இன்னும் இரண்டு வருடங்களிற்குள் வீடு வாங்கி விடுகின்றேன்' என்று. இந்த அப்பாவை ஒரு போதுமே நம்ப முடியாது. ஆனால் அப்பவுக்கு நான் நிறையத் தொந்தரவு தான் செய்கின்றோனோ தெரியவில்லை. பாவம் அப்பா! என்னால் அவருக்கு நிறையச் செலவு. தொலைக் காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கு அப்பாவுக்கு என்னால் நேரமே கிடைப்பதில்லை. பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கப் போகும் மட்டும் எனக்குத் தொலைக்காட்சி பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தமான காட்சிகள் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டி.வி.ஒ.கிட்ஸ்' நிகழ்ச்சியினை நடத்தும் பில், யூலி ஒன்று, யூலி இரண்டு, படி (Patty), சிசெல் எல்லோரும் நன்றாக நடத்துவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தவை 'பெரு வெடிப்பு' (The Big Bang) காட்சி தான். வயலட் பேர்லினும், ஹேரித் ஜோன்ஸ்சும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சி. விளையாட்டுகள், புதிர்கள் எல்லாவற்றையும் எவ்விதம் செய்வதென்று விளக்கம் தருவார்கள். நீல் பஞ்சனானின் ' ஓவியத் தாக்குதலும்' (Art Attack) எனக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் ப'விக்கப் படாமலிருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்விதம் ஓவியங்களை உருவாக்குவதென்று அழகாக நீல் செய்து காட்டுவார். மார்டின் க்ராட், கிறிஸ் கிராட் சகோதரகளின் 'சுபூமொவூ' ( Zoboomofoo) , பொம்மை லீமா எல்லாம் என்னைக் கவர்ந்தவை. இவர்களின் 'கிராட் உயிரினங்கள்' காட்சியும் நல்லதொரு காட்சி. மிருகங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் காட்சிகளிவை.

என்ன இவள் ஓயாமல் தனக்கு விருப்பமானதைப் பற்றியே கூறிக் கொண்டிருக்கிறாளென்று பார்க்கின்றீர்களா? தன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையேயென்று பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள் கூறி விடுகின்றேன் கேளுங்கள். என் பெயர் சாவித்திரி. எனக்கு வயது ஒன்பதுதான் ஆகிறது. நான் ஒரு கனடியப் பிரசை. நான் பிறந்தது டொராண்டோ மாநகரிலுள்ள ஸ்கார்பரோ கிரேஸ் ஆஸ்பத்திரியில் தான். நான் பிறக்கும் பொழுதே அம்மாவை நல்லா வருத்திப் போட்டுத் தான் இவ்வுலகிற்கு வந்துதித்தேனாம். என் அப்பா அம்மா இருவரும் ஸ்ரீலங்காப் பிரசைகளாகவிருந்து கனடியப் பிரசைகளானவர்கள். ஸ்ரீலங்காவில் ஒரே யுத்தமாம். அதனால் தான் இங்கு வந்தவர்களாம். அகதியாக வந்தவர்களாம். அப்பா தான் முதலில் வந்தவராம். அப்பாவிற்கு அவரது ஊரில பெரிய வீடு தோட்டமெல்லம் இருந்ததாம். அவர் ஸ்ரீலங்காவில் சீமெந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்த்து வந்தவராம். அங்கு மட்டும் யுத்தம் ஏற்பட்டிருக்காவிட்டால் அவர் ஒரு போதுமே இங்கு வந்திருக்க மாட்டாராம். அப்பொழுதெல்லாம் நான் கூறுவேன்: "டாடி! அப்போ என்னை நீங்கள் இழந்திருப்பீர்களேயென்று." அதற்கவர் கூறுவார்: "குஞ்சூ! எப்படியம்மா நான் உன்னை இழந்திருக்க முடியும். அப்பொழுது நீ தான் கனடாவை இழந்திருப்பாய். நீ தான் ஸ்ரீலங்காப் பிரசையாக இருந்திருப்பாயே!". அப்பா என்னை அப்படிக் 'குஞ்சூ' என்ற் அழைக்கும் போது எனக்கு எப்பொழுதுமே அப்பாவைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றிருக்கும். அவ்வளவு தூரம் அன்பையெல்லாம் குழைத்துக் கூப்பிடுவார். அப்பா கூறுவார் அம்மா அவரது குடும்பத்தில் ஒரேயொரு பெண்பிள்ளையாம். மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள் தான'ம். எல்லோருக்கும் அவவென்றால் உயிராம். அவ்வளவு செல்லமாக வளர்ந்தவ இங்கு வந்து தொழிற்சாலையில் வேலை செய்வதைப் பார்த்தால் அவருக்குக் கவலையாகவிருக்குமாம். அவ கனடாவிற்கு வந்ததிலிருந்து பலவருடங்களாக அவவை வேலை செய்யவே அவர் விடவில்லையாம். ஆனால் ஒரு வருடமாகத் தானாம் அவ தானாகவே வேலைக்குப் போகவேண்டுமென்று அடம் பிடித்து வேலைக்குப் போகின்றாவாம். அதுவும் ஒரு விதத்திற்கு நல்லதுதானே என்று எனக்குப் பட்டது. அம்மா பகலிலை தொழிற்சாலையில் வேலையென்றால் அப்பா நள்ளிரவிலிருந்து காலை வரை நகரிலுள்ள ஆஸ்பத்திரியொன்றில் பாது காவலனாக வேலை செய்கின்றார். அப்பா சொல்லுவார் தான் கனடா வந்து செய்யாத வேலையில்லையென்று. உணவகங்களில் கோப்பை கழுவியதிலிருந்து, பொருட்களை உணவுகளை விநியே'க்கும் சாரதி, ஆபிஸ் தளங்கள், வங்கிகளைக் கழுவியதிலிருந்து பாதுகாவலன் வேலை வரை எத்தனையோ வேலைகள் செய்து விட்டாராம். அம்மா அடிக்கடி சொல்லுவா 'பாவம் இந்த மனுசன். ஊரில் என்ன மாதிரி இருக்க வேண்டிய மனுசன் இங்கு வந்து இப்படி அனுபவிக்க வேண்டுமென்று விதிதான். ஊரில் மட்டும் பிரச்சினை இல்லையென்றால் அடுத்த கணமே உங்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு நான் அங்கு போய் விடுவேன்.' அப்பொழுதெல்லாம் நான் 'அதெப்படி. நான் இந்நாட்டுப் பிரசை. நான் அங்கெல்லாம் வர மாட்டேன். எனக்குக் கனடா தான் வேண்டும்' என்று அழுது அடம் பிடிப்பேன். இந்த நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டிற்குப் போவதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏன் இதனை அப்பாவும் அம்மாவும் உணர்கின்றார்களில்லை. அவர்களிற்கு எப்படி அவர்களது நாடு முக்கியமோ அப்படி முக்கியம் எனக்கு இந்த நாடும். முன்பெல்லாம் அப்பா அடிக்கடி கூறுவார் 'கொஞ்சக் காசு சேரட்டும். பேசாமல் எல்லோரும் கொடைக்கானல் போய் விடலாம். குழந்தைக்கு எங்களுடைய பண்பாடெல்லாவற்றையும் காட்ட வேண்டுமெ'ன்று. ஆனால் நான் அப்பொழுதெல்லாம் 'அது மட்டும் முடியாது. நான் கனடியன். இங்குதானிருப்பேன்' என்று அடம் பிடித்து அழுவேன். இப்பொழுதோ அந்தக் கொஞ்சக் காசையும் அவர்கள் உழைத்து விட்டார்கள் போல் தெரிகிறது... ஆனால் அப்பா இப்பொழுது முன்போலில்லை. 'யோசித்துப் பார்த்தால் ..என்னுடைய ஆசைக்காக ஏன் எங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட நிலைமை இங்கு பிறந்த எங்களுடைய குஞ்சுக்கும் ஏன் ஏற்படவேண்டும். எங்களுக்குத் தான் எங்களுடைய வெளிநாட்டுக் கல்வித் தகைமைகளிற்குரிய அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை. கிடைப்பதற்கும் எவ்வளவோ போராட வேண்டும். எல்லொருக்கும் போராடுவதற்கும் அவர்களது குடும்ப நிலைமைகள் விடுவதில்லை. எங்களுடைய குஞ்சு இந்தியாவில் படித்து விட்டு ஒருகாலத்தில் இங்கு திரும்பி வந்தால் அவளும் எங்களைப் போல் தானே பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டி வரும்' என்பார். அப்பா இப்பொழுது தனது எதிர்காலத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். 'நான் இன்னும் கொஞ்சம் நல்லாக உழைத்து, முழுதாகப் பணம் செலுத்தி ஒரு வீடு வாங்கிக் கொஞ்சம் காசையும் வங்கியில் உங்களுடைய அன்றாடச் செலவுக்காக வைப்பில் போட்டு வைத்து விட்டு நான் மட்டும் கொஞ்சக் காலம் அங்கும் கொஞ்சக் காலம் இங்குமாகக் காலம் தள்ள வேண்டும்.' என்பார். அப்பொழுதெல்லாம் அம்மா 'இவ்வளவு காலம் உங்களுடன் காலந்தள்ளியது போதும். என்னுடைய கடைசி காலத்திலும் ஒரு போதும் உங்களுடன் இருக்க மாட்டேன்' என்று வேடிக்கையாகக் கூறுவா. ஆனால் அதற்கு அப்பா என்னிடம் 'குஞ்சூ! நீ டாக்டராக வந்து அம்மாவுக்கும் ரிஷப்சனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்து விடு. அது தான் அவவுக்குச் சரி' என்று கூறிச் சிரிப்பார். அதற்கு நான் 'அப்பா! உங்களுக்கும் கூடவேலை போட்டுத் தந்து விடுகிறேன்' என்பேன். அதற்கு அப்பா சிரித்துக் கொண்டே 'நீ பொல்லாத குஞ்சம்மா!' என்பார்.

ஆனால் கொஞ்ச நாட்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்து விட்டதன் காரணம் தான் சரியாக எனக்கு விளங்கவில்லை. சின்னச்சின்ன விசயங்களிற்கெல்லாம் சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். சாதாரணமாக ஆரம்பிக்கும் சண்டை விரைவிலேயே சூடு பறக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பா கையில் கண்டதையெல்லாம் எடுத்து அம்மாவின் மேல் எறியத் தொடங்கி விடுகிறார். கையில் அம்மா அகப்பட்டு விட்டால் கண்டபடி அடிக்கவும் ஆரம்பித்து விடுகின்றார். ஆரம்பத்தில் சும்மா இருந்த அம்மாவும் பதிலிற்கு கையிலகப்பட்டதையெல்லாம் எடுத்து அப்பாவின் மேல் எறிய ஆரம்பித்து விடுகின்றா. அம்மாவும் அப்பாவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் பழகியவர்களாம். அவர்களிற்கிடையில் என்ன நடந்து விட்டது. அப்பாவின் ஆக்களெல்லோரையும் அப்பா கனடா எடுத்து விட்டாராம். அம்மாவின் ஆக்களெல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவில் தான். அப்பா அடிக்கடி கூறுவார் 'நீ கொஞ்ச நாளைக்காவது ஊருக்குப் போய் உன்னுடைய ஆக்களைப் பார்த்து வா'வென்று. ஆனால் அம்மாவோ அடிக்கடி தேவையில்லாமல் அப்பாவுடன் அப்பாவின் ஆக்களை எடுத்தெறிந்து கதைக்கத் தொடங்குவா. உடனே சண்டை ஆரம்பித்து விடும். அதுவரை அமைதியாகவிருக்கும் அப்பாவுக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வரும். யுத்தம் தொடங்கி விடும். இடையில் அகப்பட்டுக் கொண்டு நான் முழிக்க வேண்டி வரும். எதற்காக இவர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் சண்டை பிடிக்கிறார்கள். ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் 'கனடியர்கள் இவ்விதம் சண்டை பிடிக்க மாட்டார்கள். நீங்கள் ஸ்ரீலங்கர்கள் ஏனிப்படி சண்டை பிடிக்கிறீர்களோ' என்று கேட்டு விட்டேன். அப்பாவுக்கு அது மனதைத் தைத்து விட்டது. 'இங்குள்ள ஏனைய கனடியர்கள் சிலர் கேட்பதைப் போலவே கேட்டு விட்டாயேயம்மா' என்று கவலைப் பட்டார். எனக்கும் வருத்தமாகப் போய் விட்டது. 'எப்படியம்மா இவ்விதம் பிரித்துப் பார்க்க இந்த்ச் சின்ன வயசிலை மனசு வந்தது' என்று சரியாகக் கவலைப் பட்டார். அப்பாவைத் தடவி ஒரு மாதிரி சமாதானம் செய்து விட்டேன்.' ஒரு மாலையில் வழக்கம் போல் இருவரும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

'கனடா வந்த இந்த பத்து வருடங்களில் என்னத்தைச் சாதித்துக் கிழித்துப் போட்டீர்கள். உங்களுடைய ஆட்களென்றால் உங்களுக்குப் பதறிக் கொண்டு வருகின்றது. எங்களைப் பற்றிக் கொஞ்சமாவது உங்களுக்குக் கவலையிருக்கிறதா?' என்று அம்மா கேட்டதும் அப்பாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 'இத்தனை வருசமாய் உங்களை பராமரித்துக் கொண்டு வருகின்றேனே. அது உனக்குத் தெரியவில்லையா?' என்று அப்பா கேட்டதும் அம்மா 'என்ன ஊரில் மற்றவர்கள் செய்யாததைச் செய்து கிழித்துப் போட்டீர்கள். எல்லோரும் தானே குடும்பத்தைப் பார்க்கின்றார்கள். நீங்களில்லையென்றால் சமூக உதவிபணத்திற்கு விண்ணப்பித்திருப்பேன்' என்று கூறியதும் தான் அப்பாவால் தாளமுடியவில்லை. அதன் பிறகு நானும் என்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். அவர்களிருவரின் சண்டையில் இடையில் குறுக்கிடுவதில்லை. ஆனால் சரியாகக் கவலையாகத் தானிருக்கும். ஆனால் இவ்விதம் அடிக்கடி ஆரம்பித்த சண்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி ஒரு நாள் அப்பா வீட்டை வருவதையே நிறுத்திக் கொண்டார். என்னால் அதன் பிறகு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அம்மாவும் எந்த நேரமும் ஒரே அழுதபடி. அப்பா எங்கிருக்கிறாரென்றே யாருக்கும் தெரியவில்லை.ஆனால் அப்பா டொராண்டோவில தான் தன்னுடைய நண்பரொருவருடன் இருப்பதாக அறிந்தோம். அந்த நண்பரூடாக அப்பா என்னுடன் தொடர்பு கொண்டார். 'அப்பா! ஏனப்பா! எங்களை விட்டுப் பிரிந்து போனீர்கள். நீங்களில்லாமல் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. வீட்டு வேலை ( Home work) செய்வதற்கு எனக்கு யாருமே உதவியில்லையே' என்றேன். அதன் பிறகு அப்பா ஒவ்வொரு நாள் மாலையிலும் எனக்காக வந்து எமது தொடர் மாடிக் கட்டடத்தில் வெளியில் அழைப்பு மணியை அழைத்துவிட்டுக் காத்திருப்பார். இருவருமாக அருகிலிருக்கும் நூலகம் செல்வோம். வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்ததும் அப்பா என்னை 'மக்டானல்ட்; கூட்டிச் செல்வார். ஒவ்வொரு நாளும் அப்பா என்னை மறுபடியும் வீடு கொண்டு வந்து விடும்போது 'அப்பா! எப்ப திரும்பவும் எங்களுடன் வந்திருக்கப் போகின்றீர்கள்' என்பேன். அதற்கு அவர் 'குஞ்சூ! உன் அம்மா தனியாக இருந்து வாழ்ந்து பார்த்தால் தான் எல்லாவற்றையும் உணர முடியும். அவ உண்ர்ந்த பின் அழைத்தால் வருவேன். அதன் பிறகு இவ்விதம் தேவையற்ற சண்டைகளைப் போடக் கூடாது.' என்பார். அம்மாவிடம்' அம்மா! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். அப்பா இவ்விதம் கூறுகிறார்களே' என்பேன். அதற்கவர் 'நீ பேசமல் இருக்க மாட்டாய். எப்ப அவர் போய் விட்டாரோ. அப்பவே அவரை நான் கை கழுவி விட்டேன். என்னாலும் தனியாக வாழ முடியும்." என்று ஆத்திரத்துடன் கூறுவா. ஆனால் அதன் பிறகு அவவிற்கு அழுகை வந்து விடும். எதற்காக அம்மாவும் அப்பாவும் இவ்விதம் வீண் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழுகிறார்களோ தெரியவில்லை..

நான் ஒருத்தி இருப்பதை இதனால் எனக்கேற்படும் பாதிப்புகளை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லை.

இவர்களது சண்டைகளெல்லாம் தேவையற்ற விடயங்களிற்காக இருப்பதாக எனக்குப் படுகிறது. இவர்களுக்கேன் அவ்விதம் படுவதில்லை. அப்பா! வேண்டுமானல் எங்களுடன் மீண்டும் வந்து விடுங்கள். அப்படி வந்து விட்டால் நாங்களெல்லோருமாக நீங்கள் கூறியது போல் இந்தியாவோ எங்கோ வரவும் நான் தயாராகவிருக்கிறேன் அப்பா! எனக்கு அது விருப்பமில்லாவிட்டாலும் எனக்கு நீங்களும் அம்மாவும் தான் முக்கியம் அப்பா. மீண்டும் எங்களுடன் வந்து விடுங்களப்பா. வேண்டுமானால் நீங்களிருவரும் ஒருவருக்கொருவர் கதைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாயிருங்கள். அது போதுமெனக்கப்பா! அப்பா! அடிக்கடி நீங்கள் உங்களது பால்ய காலத்து அனுபவங்களைப் பற்றிக் கூறுவீர்களே! எனக்கும் அத்தகைய அனுபவங்களைத் தரவாவது நீங்கள் எங்களுடன் வந்திருக்கத் தான் வேண்டும். அங்கு உங்களது சொந்த ஊரில் யுத்தம்மென்றுதானே இங்கு வந்தீர்கள். அங்கு தான் யுத்தம் எல்லோரையும் பிரித்து வைத்திருக்கிறது. இங்கும் உங்களிற்கிடையிலொரு யுத்தம் தேவைதானா? தேவையில்லாத விசயங்களிற்கெல்லாம் இவ்விதமொரு பிரிவினைத் தரும் யுத்தம் தேவைதானா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள் அம்மா! அப்பா! எப்போ நீங்கள் மீண்டும் வரப் போகின்றீர்கள்? அம்மா! எப்போ உங்களுடைய வீண் பிடிவாதத்தினை விட்டொழிக்கப் போகின்றீர்கள்?

நன்றி: திண்ணை.காம், பதிவுகள்

13. புலம் பெயர்தல்.
வ.ந.கிரிதரன்


நிலத்திற்கு மேல் ஐந்து அடுக்குகளையும் கீழ் ஐந்து அடுக்குகளையும் கொண்ட வாகனத்தரிப்பிடமொன்றின் பாதுகாவலர் ஆசைப்பிள்ளை. ஆசைப்பிள்ளை ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர். ஊரில் அரச திணைக்களமொன்றில் 'கிளாக்க'ராகக் (குமாஸ்தாவாக) காலத்தை ஓட்டியவர் கிளாக்கர் ஆசைப்பிள்ளை. இலங்கையில் அரசபடைகளின் அட்டகாசம் அதிகமாகயிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தலை தப்பினால் புண்ணியமென்று கனடாவுக்கு தலையை மாற்றி ஓடிவந்தவர். ஆரம்பத்தில் கோப்பை கழுவிப்பார்த்தார். தொழிற்சாலையொன்றைக் கூட்டிக் கழுவிப்பார்த்தார். கிளாக்கராக ஊரில் வலம் வந்தவரால் தொடர்ந்தும் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதற்கு எளிதான வழியாகப் பாதுகாவலர் வேலை படவே ஒரு பிரபல பாதுகாவலர் நிறுவனமொன்றில் பாதுகாவலராக வேலைக்கமர்ந்து விட்டார். நள்ளிரவிலிருந்து அதிகாலைவரை வேலை. அன்றும் வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்தார். அப்பொழுது தான் அந்த வெள்ளையினத்தவன் தனது காரினைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான். வந்தவன் ஆசைப்பிள்ளையைப் பார்த்ததும் அவருக்கு முகமன் கூறினான்.

"இனிய காலை! நீ எப்படியிருக்கிறாய்?" என்றவனுக்குப் பதிலாக ஆசைப்பிள்ளை பின்வருமாறு கூறினார்:

"நான் நல்லாகத் தானிருக்கிறேன். நீ எப்படியிருக்கிறாய்?" என்றார்.

"நன்றி நண்பனே! நானும் நலமே" என்ற வெள்ளையினத்தவன் திடீரெனக் குண்டொன்றினைத் தூக்கிப் போட்டான்.

"இரண்டாவது தளத்தில் 'பா'மிருப்பது உனக்குத் தெரியுமா?"

இரண்டாவது தளத்தில் 'பாம்'மா...' ஆசைப்பிள்ளைக்குக் குலை நடுங்கியது. பாதுகாவலர் தனது பயத்தினை வெளிப்படுத்தலாமா? அவமானமில்லையா? எனவே தனது பயத்தினை மறைத்தபடி அவர் கேட்டார்

"எனக்கு அறிவித்ததற்கு உனக்கு பல நன்றிகள் உரித்தாகட்டும். அது சரி இரண்டாவது தளத்திலிருப்பது 'பாம்' தானென்பதை எவ்வளவு உறுதியாகக் கூறுகின்றாய்?"

அவரது இந்தக் கேள்விக்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தான். "எனக்குத் தெரியாதா? 'பாம்'மைக் கண்டுபிடிப்பதிலென்ன சிரமமிருக்கமுடியும்?"

"எனக்கு அறியத் தந்ததற்கு உனக்கு நன்றிகள். கவலையை விடு. நான் கவனித்துக் கொள்கின்றேன்."

அந்த வெள்ளையினத்தவன் அப்பால் நகர்ந்ததும் ஆசைப்பிள்ளையின் 'கிளாக்கர்' மூளை வேலை செய்யத் தொடங்கி விட்டது. எவ்வளவு இலகுவாக இந்த வெள்ளையன் 'பாம்' இருப்பதைக் கூறி விட்டுச் சென்று விட்டான். துணிச்சல்காரன் தான். குண்டென்றதுமே ஆசைப்பிள்ளைக்குக் குலையே நடுங்கி விடுகிறது. ஊரில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் பொழிந்த குண்டு மழை ஞாபகத்தில் வந்து விடுகிறது. அதில் மடிந்த அவரது நண்பர்கள் பலரின் நினைவுகள் தோன்றி விடுகின்றன. இந்த வெள்ளையனுக்கோ இந்தக் குண்டுச் சமாச்சாரமே அற்பமான விடயமாகவிருந்து விடுகிறது. இப்பொழுது ஆசைப்பிள்ளையைப் பல எண்ணங்கள் சூழ்ந்து ஆட்டிவைக்கத் தொடங்கின. முதலில் இந்த 'பாம்'மை அப்புறப்படுத்த வழி பார்க்க வேண்டும். மிகவும் கவனமாக எட்டவிருந்து ஆராய வேண்டும். அதன் பின் காவல் துறையினருக்கு அறிவிக்கலாமா என்று தன்னைத் தானே ஒருமுறை கேட்டுக் கொண்டார். இந்த 'பாம்' ஏற்கனவே ஆயத்தமான நிலையிலுள்ள 'நேரக்குண்டு' (Time bomb) ஆக இருந்து விட்டால்... வெடித்து விட்டால்...அவருக்கு ஊரில் அவரையே நம்பியிருக்கும் மனைவி , குழந்தைகளின் ஞாபகம் வந்தது. 'கதிர்காமக் கந்தா நீதான் என்னை இந்த இக்கட்டிலையிருந்து காப்பாற்ற வேஎண்டும்' என்று மனதில் பலமுறை வேண்டிக் கொண்ட ஆசைப்பிள்ளை இறுதியிலொரு முடிவுக்கு வந்தார். காவல்துறைக்கு அறிவிப்பதற்கு முதலில் அந்த வெள்ளையன் கூறியது உண்மைதானா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வெள்ளைக்காரரையும் நம்ப முடியாது. சில நேரங்களி சரியான வேடிக்கைப் பேர்வழிகளாகயிருந்து விடுகின்றார்கள். ஆராய்ந்து பார்க்காமல் எதற்கும் முடிவெடுக்கக் கூடாது. இவ்விதமானதொரு சூழலில் ஆசைப்பிள்ளை இரண்டாவது தளத்திற்குச் சென்று பார்க்க முடிவு செய்தவராகப் புறப்பட்டார். ஆனால் உள்ளூர அந்தக் குண்டு வெடித்து விட்டாலென்றதொரு பயமும் இருக்கத் தான் செய்தது. அதற்கு முதல் முன்னெச்சரிக்கையாகத் தனது குறிப்புப் புத்தகத்தில் 'பாம்' பற்றிய வெள்ளையனின் தகவல் பற்றிக் குறிப்பிடவும் அவர் தவறவில்லை.

அந்த வாகனத்தரிப்பிடத்திற்கு வடக்கிலும் தெற்கிலுமாக இரு படிக்கட்டுகளிருந்தன. அந்த வெள்ளையினத்தவன் குறிப்பிட்டது தெற்குப் படிக்கட்டினை. ஆசைப்பிள்ளையார் வடக்கிலிருந்த படிக்கட்டினைப் பாவித்து ஐந்தாவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கி வந்தார். ஒவ்வொரு தளத்திற்குமான படிக்கட்டுகளுக்கான தரிப்பிடத்தில் நின்று நிதானமாகச் சோதனை செய்து பார்த்தார். இவ்விதமாக ஒவ்வொரு தளமாகச் சோதனை செய்து கொண்டு வந்தவர் அந்த வெள்ளையன் குறிப்பிட்ட இரண்டாவது தளத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வீடற்ற வாசிகளிலொருவனான ஜோர்ஜ் மூலையில் படுத்திருந்தான். ஜோர்ஜ் முன்பு நல்லதொரு வேலையிலிருந்தவன். மனோநிலைப் பாதிப்பினால் வீடற்றவனாகி இவ்விதம் அலைந்து கொண்டிருந்தான். இவருக்கு அவன்மேல ஒருவிதப் பரிதாபமிருந்த காரணத்தினால் அவனை அவ்விதம் இரவுகளில் துயில்வதற்கு அனுமதித்திருந்தார். பாவம் இவனைப் போன்ற பல வீடற்றவர்களை இந்த டொரோண்டோ மாநகரின் கீழ்நகர்ப் பகுதியில் காண முடியும். நகரிலுள்ள 'மான் ஹோல்' மூடிகளின் கணகணப்பில் இரவுகளை வானமே கூரையாகக் கழிக்கும் இவ்விதமான பல வீடற்றவர்களை ஆங்காங்கே காண்பதென்பது இந்நகரின் அன்றாட இரவுக் காட்சிகளில் சாதாரணமானதொரு நிகழ்வே. இவர்களுக்குப் போர்வைகள் வழங்க, சூடான உணவு வழங்க..எனப் பல இலாப நோக்கற்ற ரீதியில் இயங்கும் சமூக சேவை ஸ்தாபனங்களும் இம்மாநகரில் நிறையவேயிருந்தன.

மனித நடமாட்டம் கண்ணயர்ந்திருந்த அந்த வீடற்றவனை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இலேசாக எழுப்பி விட்டது. வந்தது இவர்தானென அறிந்ததும் இலேசாக இஅவரைப் பார்த்தொரு முறுவலைத் தவள விட்டான். ஆசைப்பிள்ளை வந்த வேலையில் கண்ணும் கருத்துமாகச் சில கணங்களைக் கழித்தார். பாதுகாவலராகச் சுற்றுப் புறத்தை ஒரு கணம் நோட்டமிட்டார். அந்த வெள்ளையன் குறிப்பிட்டது மாதிரி எந்தவொரு 'பாம்' இருந்ததற்கான தடயங்களையும் அவரால் அவதானிக்க முடியவில்லை. இவனிடமே சிறிது விசாரணை செய்து பார்த்தாலென்னவென்று பட்டது.

"என் நண்பனே. எவ்வளவு நேரமாக இங்கிருக்கிறாய்..." என்று அவனை விளித்தார்.

படுத்திருந்தவன் 'நான்..?' என்று சைகையில் தன்னைக் காட்டி ஒரு கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தான்.

"ஆம். உன்னைத்தான் நண்பனே...எவ்வளவு நேரமாக இங்கேயிருக்கிறாய்? வந்து நீண்ட நேரமாகிவிட்டதா?" என்றார்.

'இரண்டு மணித்தியாலங்கள்' என்பதை விளக்கும் வகையில் அவன் கை விரல்களை விரித்துக் காட்டினான்.

"இரண்டு மணித்தியாங்கள்...?"

'ஆம்'என்பதற்கு அடையாளமாக அவன் தலையை அசைத்தான். "நல்லது நண்பனே! உன் தூக்கத்தினைக் கலைத்தடஹ்ற்கு என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபடியே அப்பால் நகர்ந்தார் ஆசைப்பிள்ளை. அந்த நிலையிலும் அந்த வீடற்றவனுக்கு அவரைப் பார்த்து இலேசாகச் சிரிப்பு வந்தது. அவனை அவ்விதம் படுப்பதற்கு அனுமதி கொடுக்காது கலைக்க வேண்டியவர் அவனைப் பார்த்து மன்னிப்புக் கேட்டுச் செல்கின்றாரே என்று எண்ணினானோ?

ஆசைப்பிள்ளைக்கோ அந்த வெள்ளையன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவரை அவன் எவ்வளவு கேலியாக எண்ணி விட்டான். அவர் தான் எவ்வளவு பெரிய கண்டிப்பான பாதுகாவல் அதிகாரி. அவரை எவ்வளவு கீழ்த்தரமாக அவதித்து விட்டான் அந்த வெள்ளையன். அவனை மீண்டுமொருமுரை கண்டால் அவனுக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும். இவ்விதமாகப் பொய்யான வதந்திகளைப் பரப்புவது எவ்வளவு தவறான , சட்டவிரோதமான செயலென்பதை அவனௌக்குப் புரிய வைக்க வேண்டும். இதனைக் காவல் துறையினருக்கு அறிவித்தாலே போதும் ..அவ்வளவுதான் அவன் மேல் வழக்குத் தொடர்ந்து உள்ளே தள்ளி விடுவார்கள். இவ்விதமாகப் பல்வேறு எண்ணங்களில் மூழ்கினார் ஆசைப்பிள்ளை. அந்த வீடற்றவன் அங்கே கடந்த இரு மணித்தியாலங்களாகப் படுத்திருக்கின்றான். அந்த வெள்ளையனோ பத்து நிமிடங்களுக்கு முன்னர் தான் 'பாம்' பற்றி அவருக்கு அறிவித்திருந்தான். எனவே அந்த வெள்ளையன் வேண்டுமென்று தான் அவ்விதம் கூறியிருக்க வேண்டும். அவருடன் அவனுக்கு ஒரு விளையாட்டு. ஊரிலை அவர் எவ்வளவு பெரியதொரு 'கிளாக்கர்'. அதுவும் அரசத் திணைக்களக் கிளாக்கர். அவரைப் போய் எவ்வளவு கிள்ளுக்கீரையாக எண்ணி விட்டான் அந்த வெள்ளையன். ஆனால் புலம் புலம் பெயர்ந்த தமிழரான ஆசைப்பிள்ளையார் ஒன்றை மட்டும் மறந்தே விட்டார். உச்சரிப்பு (Accent) கூடச் சில சமயங்களில் எவ்வளவு தூரம் அர்த்தங்களுடன் விளையாட முடியுமென்பதை அவர் மட்டும் உணர்ந்திருந்தால்.... 'பம்'மிற்கும் (Bum) 'பாமி'ற்கு (bomb)மிடையிலுள்ள உச்சரிப்பினை மட்டும் அவர் சரியாக விளங்கியிருந்தால்...அந்த வெள்ளையன் 'பம்'மென்றது அவருக்கு 'பாம்'மாகப் பட்டிருக்குமா? ஆனால் பேச்சு வழக்கில் ஊரில் 'பாம்' என்று கூடக் கூறுவதில்லை. 'அங்கை பம்ஸ் அடிச்சிட்டான் போலைக் கிடக்கிறது' என்று 'பம்' என்று கூறிக் கூறி ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதைக் கூடக் கிளாக்கர் ஆசைப்பிள்ளையால் அறிய முடியாமல் போய் விட்டதை....அறியாமை எனலாமா? இல்லை புலம் பெயர்தலில் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான அனுபவங்களிலொன்றாகக் குறிப்பிடலாமா? மொழியின் உச்சரிப்புக் கூடப் புலம் பெயர்தலில் பதிவு செய்யப் படவேண்டிய முக்கியமான அனுபவமொன்றினைத தந்து விடுவதற்குக் காரணங்களொன்றாகப் புலன் பெயராத புலம் பெயர்தல் இருந்து விடுகிறதா? குறித்தலில் குறிப்பிடுகளின் அர்த்தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப மாறுபடுவதன் சாட்சியாக கிளாக்கர் ஆசைப்பிள்ளையின் புலம்பெயர்தலின் அவதாரமான 'பாதுகாவலர்' ஆசைப்பிள்ளையின் அனுபவங்கள் இருந்து விடுகின்றனவா?

நன்றி: மானசரோவர்.காம், திண்ணை, பதிவுகள்.

14. 'காங்ரீட்' வனத்துக் குருவிகள்!
- வ.ந.கிரிதரன் -


தற்செயலாகத் தான் அவற்றைக் கவனித்தேன். அதன் பின் தொடர்ந்தும் அவை என் கவனிப்பிற்குள்ளாகின. நான் வேலை செய்யும் உயர்மாடிக் கட்டிடத்தின் அருகாக, இந்தக் காங்ரீட் வனத்தில் தப்பித் தவறி சுவரோரமாக வளர்ந்து நின்ற சிறியதொரு கிளைகளுடன் கூடிய மரம் தான் அவற்றின் வாசஸ்தலம். 'மனிதசாலை'யாக விளங்கும் நகர். எங்கு திரும்பினாலும் காங்ரீட் கூண்டுகள். காங்ரீட் விருட்சங்கள். டொராண்டோ நகரின் மட்டுமல்ல கனடாவின் பொருளாதார மையமே இந்த கிங்யும் பே வீதியும் சங்கமிக்கும் பகுதி தான். இங்கு தான் பிரபல தகவல் தொழில் நுட்பச் சேவை வழங்கும் நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்ப நிபுணர்களிலொருவனாக பணி புரிந்து கொண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் நகரத்துப் பரபரப்பில் நான் அந்த மரத்தையோ அதில் வாசம் செய்து கொண்டிருந்த அந்த உயிரினங்களையோ கவனிக்காமலிருந்து விட்டேன். சிறிது சிறிதாக நகரத்தின் பரபரப்பான வாழ்விற்கு இயல்பூக்கம் அடைந்த பின்னர் என் கவனம் சுற்றாடல் மீது அதில் நிகழும் நிகழ்வுகள் மீது திரும்பியது. இயற்கையிலேயே வான், நதி, மழை, சுடர், மதி, புள்..என இழகிவிடும் இயற்கையினை ஆராதிக்கும் மனது என்னுடையது. இதுவரைகாலமும் தற்காலிகமாக மேற்படி பரபரப்பான வாழ்வின் ஆழத்தில் அடைந்து கிடந்து விட்டது. அதனை அந்தச் சிறிய மரமும் அதில் வாசம் செய்து கொண்டிருந்த அந்த அடைக்கலான் குருவிகளும் தான் மீண்டும் புலப்படுத்த உதவியாக இருந்து விட்டன என்று கூறலாம். அவை என் கவனிப்பிற்கு உள்ளானது முதல் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை அவதானிப்பதை என் அன்றாட அலுவல்களிலொன்றாக ஆக்கி விட்டேன். அவதானிக்க அவதானிக்க நாளுக்கு நாள் எனக்கு அவற்றின் மீதிருந்த அபிமானமும் அனுதாபமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன.

நாள் முழுவதும் அவை நகரெங்கும் பறந்து திரிவதும், அடிக்கடி அங்கு வந்து ஓய்வெடுப்பதும், கூடிக் கலப்பதும் களிப்பதுமாகவிருந்தன. தனித்திருந்த அந்த மரமும் அதனால் ஒருவித பொறுப்பு கலந்த பெருமிதத்துடனிருப்பதாக எனக்குப் பட்டது. அந்தக் குருவிகளுடன் ஒரு சிறிய சுண்டெலியும் அந்த மரத்தைப் பகிர்ந்து வந்ததை அவதானித்தபொழுது அதிசயித்துப் போனேன். மனித நாகரிகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்த நகரொன்றின் கவனத்தை அதிகம் கவராத மரமொன்று. அதில் இருப்பினைக் கழிக்கும் உயிர்கள் சில. முதன் முதலாக இயற்கை விருட்சங்களில்லாத காங்ரீட் வனத்தை உருவாக்கிய எமது மடமையை மனம் உணர்ந்தது. எத்தனை உயிர்களின் இருப்பினை அழித்துக் கேள்விக்குறியாக்கி விட்டது நமது வளர்ச்சி என்றும் பட்டது. ஒவ்வொரு நாளும் எத்தனைவகையான புள்ளினங்கள் உயர்ந்த காங்ரீட் விருட்சங்களின் கண்ணாடிச் சுவர்களுடன் மோதிக் குற்றுயிரும் குலையுயிருமாகவாழ்வை முடித்துக் கொள்கின்றன. எத்தனை அணில்கள் , ரக்கூன்கள் வாகனங்களில் அடிபட்டு அழிந்து போகின்றன. இவை பற்றியெல்லாம் எந்தவித உணர்வுமில்லாது வான் முட்டும் கோபுரங்கள் கட்டி, பெருஞ்சாலைகள், ஆலைகள் அமைத்து..என்னவிதமான வளர்ச்சியிது!

இளவேனில் கழிந்து சுட்டெரிக்கும் கோடைவந்தது. குருவிகளின் கும்மாளத்திற்கும் குறைவேயில்லை. இன்னும் சிறிது காலம் தான். மாநகரைக் குளிர் கவ்வத் தொடங்கி விடும். இலைகளின் இழப்பில் மரங்களை சோகம் கப்பி விடும். ஆனால்..என் மனத்தை அரித்தது கேள்வியொன்று. இந்தக் குருவிகள் அப்பொழுது என்ன செய்யும்? எங்கே போகும்? தொடர்ந்தும் இங்கு தான் இவ்விதமாகக் கூச்சலும் கும்மாளமுமாகக் களித்துக் கிடப்பினமோ? சூழலை எதிர்த்துச் சுற்றிப் பறந்து திரிவினமோ? என் கவனத்தை அண்மையில் தான் இவை ஈர்த்த போதினும் இது போல் பல வருடங்கள் ஏற்கனவே வந்து போயிருக்கின்றன. இனியும் வந்து போக இருக்கின்றன. இந்நிலையில் என் சிந்தனை எனக்கே சிரிப்பையும் தந்தது. உயிர்கள் எவ்விதமும் தம்மிருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வழி கண்டு விடும். இந்நிலையில் என் கவலை அர்த்தமற்றதாகப் பட்டது.ஆயினும் அவதானிப்பைத் தொடர வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன். அதே சமயம் அவற்றின் இருப்பினை, உணர்வினை உணராத மனிதர்கள் மத்தியில் அவை வளையவருவதைப் பார்க்க ஒருவித கவலை கலந்த உணர்வொன்றும் படர்ந்தது. அவற்றின் வாழ்வு எவ்வளவு அற்பமாகவிருக்கின்றது. எம்மைப் போல் அவற்றால் சிந்திக்க முடியாது. நூல்களைப் படிக்க முடியாது. விவாதிக்க முடியாது. இயற்கையை இரசிக்க முடியாது. இருப்பு பற்றிக் கேள்விகளை எழுப்பிட முடியாது. எவ்வளவு அற்பமான அறியாமை மிக்க வாழ்வினை அவை வாழ்கின்றன அவை. இரை தேடச் சுற்றித் திரிவது, வருவது, அம்மரத்தில் கூடிக்களிப்பது, இரவில் தலை கவிழ்த்துத் தூங்குவது..இவை தவிர அவை அறிந்தவைதானெவை? ஒரு கணம் என்னை, என் வாழ்வினை அவற்றின் இருப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தது மனம். வேலைக்குப் போகின்றேன். முடிந்ததும் என் காங்கீரிட் பொந்தில் போயடைகின்றேன். மீண்டும் வருகின்றேன். மீண்டும் போகின்றேன். இது தவிர சில சமயங்களில் வேறு சில செயல்களில் அழிந்து விடுகின்றேன். அவை முடிந்ததும் மீண்டும் பழையபடி வேலை. கூடு. வேலை. கூடு.....பெரிய வித்தியாசம் அதிகம் இல்லை போல் படவே வெட்கித்துப் போனேன் நான். அதே சமயம் எம்மைப் போல் அவை துவம்சம் செய்வதில்லை என்பதையும் உணர்ந்தபொழுது , இந்த விடயத்தில் அவை எம்மை விட உயர்வையானவையாகவும் பட்டது. தம் இருப்பால் இருக்கும் சூழலை எம்மைப் போல் அதிகம் அவை அழிப்பதில்லைதான். இனி இவ்விதம் ஒப்பிட்டு மூக்குடைப்படுவதில்லையென்று முடிவு செய்து கொண்டேன். அதே சமயம் அவையும் நானும் இவ்விடயத்தில் ஓரளவு ஒன்றென்ற தோழமை கலந்ததொரு உணர்வு எழுந்து முன்பை விட இப்பொழுது அவற்றை அதிகமான தோழமை கலந்த அன்புடன் நோக்கத் தொடங்கினேன் நான்.

மெல்ல மெல்ல மாநகரைக் குளிர் கவ்வத் தொடங்கத் தொடங்கியது. இலைகளை விருட்சங்கள் மிக அதிக அளவில் இழக்க ஆரம்பித்தன. அந்தச் சிறிய மரமும் தன் இலைகளை அதிக அளவில் இழந்தது. இலைகளை அது இழக்க இழக்க அதனை நாடி வரும் குருவிகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இலைகளை இழந்த மரம் காய்ந்து மூளியாகக் கிடந்தது. ஆனால் இப்பொழுதும் ஒரு நான்கு சோடிக் குருவிகள் மட்டும் அந்த மரத்தையே நாடி வந்தன. அவ்றை எண்ண எனக்குப் பரிதாபமாகவிருந்தது. பிழைக்கத் தெரியாத அப்பாவிக் குருவிகளாக அவை எனக்குத் தென்பட்டன. ஆனால் அவையோ என் பரிதாபத்தைப் பற்றியோ அல்லது இயற்கையின் சீற்றத்தைப் பற்றியோவெல்லாம் அதிகமாகத் தங்களை அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. முன்பை விட அதிகமாக ஆனந்தமாகவே அவை இருப்பதாகப் பட்டது. முன்போ அவை அதிக எண்ணிகையிலான குருவிகளுடன் தங்களது இருப்பினை பகிர்ந்து கொள்ளவேண்டிய தேவை அவற்றிற்கிருந்தது. இப்பொழுதோ அந்த மரம் முழுவதுமே அவற்றின் இராச்சியத்திலிருந்ததென்ற ஆனந்தம் போலும். இருந்தாலும் முன்பிருந்த அந்தக் கூச்சலும் கும்மாளமும் இப்பொழுது அறவே இல்லாதுதான் போய் விட்டன. ஒருவிதமான சோகம் கப்பிய நிலை அவற்றின் ஆனந்தத்தையும் மீறித் தென்படத்தான் தெரிந்தது. ஒருவேளை அவை ஆனந்தமாக இருப்பதாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விழைகின்றனவோ? சிற்சில சமயங்களில் அவற்றை இலைகளுதிர்ந்த நிலையில் காய்ந்து தென்பட்ட மரத்தின் நிறத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதே சிரமமாகவிருந்தது. இயற்கையின் கடுமை அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் ஆனந்தமும் சிறிது சிறிதாகக் குறைந்து வர ஆரம்பித்தது. அடிக்கடி தலைகளைக் கவிழ்த்துச் சோர்ந்து கிடந்தன. களிப்பின் சாயலை அவற்றின் இருப்பில் தேட வேண்டியிருந்தது.

இப்பொழுதோ மாநகரில் அடிக்கடி பனிமழை பொழியத் தொடங்கி விட்டது. குளிர்க் காற்றின் உக்கிரமும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. போதாதற்கு மழை வேறு. இவையெல்லாம் அந்தக் குருவிகளின் பிடிவாதத்தினை மாற்றி விடுமென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பனிப்புயல் அடிதோய்ந்து மறு நாள் வேலைக்குச் செல்லும் போது அல்லது வேலை முடிந்து வரும்பொழுது வழக்கம் போல் அந்தக் குருவிகள் அங்கேயே மரத்தோடு மரமாக ஒன்றிக் கிடந்தன. இருப்பிட மாற்றத்தினை அவற்றால் சிந்திக்கவே முடியவில்லை போலும். எது வந்த போதினும் இது தான் நம் இருப்பு என்று திடமாக அவை இருப்பதாக உணர்ந்து நான் வியப்புற்றேன். அதே சமயம் பேசாமல் ஏனைய குருவிகளைப் போல் இடம் மாறித் தப்புவதற்குப் பதிலாக இவ்விதம் கிடந்து இவை இவ்விதம் வருந்தத் தான் வேண்டுமாவென்றும் மனம் நொந்தேன். மனம் நோக மட்டும் தான் என்னால் முடிந்தது. அதனை உணரவேண்டிய அவையோ அது பற்றியெல்லாம் எந்தவிதக் கவலையுமில்லாமல் இருப்பதை உண்டு, பறந்து மீண்டும் அங்கு வந்து உறங்கிக் காலத்தைக் கழித்தன. ஐயோ பாவமென்றிருந்தது. இந்தப் பறவைகளால் இருப்பினை மாற்றுவது முடியாததொரு செயலாக இருக்கின்றது. அதனை இலகுவாக இருப்பினை மாற்றிய என்னால் உணரமுடியாமலிருந்ததில் வியப்பென்னவிருக்க முடியும்?

ஓரிரவு நீண்ட நேரமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. 'சாவ்ட்வெயர் அப்டேட்ஸ்' ஒவ்வொரு வெப் சேர்வருக்கும் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு இரவு தான் சரியான நேரம் .அதிக 'இன்ராநெட்' பாவனையாளர்கள் இருக்க மாட்டார்கள். வேலை முடிந்து வந்து கொண்டிருந்தபொழுது வழக்கத்தைவிட மிக அதிகமாக அன்று மாநகரைப் பனிப்புயல் தாக்கிக் கொண்டிருந்தது. காற்றின் உக்கிரமும் மிகவும் அதிகமாக இருந்தது. பனியோடு பனியாக, காற்றோடு காற்றாக அந்த நான்கு குருவிகள் மட்டும் வழக்கம் போல் மரத்தோடு மரமாக ஒன்றிக் கிடந்தன. அடிக்கடி சிறகுகளை உதறிவிட்டுக் கொண்டிருந்தன. காற்றின் உக்கிரம் அதிகரித்த சில சமயங்களில் கொப்புகள் மாறிச் சமாளித்தன. தூங்க வேண்டிய சமயத்தில் அவற்றின் தூக்கமும் கெட்டுப் போனதை எண்ண எனக்குக் கவலை அரித்தது. இப்பொழுதாவது அருகிலிருந்த கட்டிடமொன்றில் ஏனைய குருவிகள் செய்ததைப் போல் போய் அடையவேண்டியது தானே. இன்னுமேனிந்த இறுமாப்பென்று பட்டது. அன்றிரவு முழுவதும் என் தூக்கம் முழுவதும் அந்தக் குருவிகளின் ஞாபகம் தான். இரவு முழுவதும் பனிப்புயல் மாநகரைத் துவம்சம் செய்து விட்டது. இரண்டடிவரையில் பனிமழை பொழிந்து மாநகரை மூடி விட்டதாக அடுத்த நாட்காலையில் தான் அறிந்தேன். பனிப்புயல் காரனமாக அன்று காலை நான் வேலைக்குப் போக விரும்பவில்லை. இருந்தாலும் அந்தக் குருவிகளின் ஞாபகம் வரவே காரியாலயம் நோக்கிக் கிளம்பினேன். காரியாலயத்தை அண்மித்த என்னை அந்த மரத்தின் நிலை அதிர்ச்சியடைய வைத்தது. மாநகரை மூடிய பனிமழை அந்த மரத்தை மட்டும் சும்மா விட்டு விடுமா? அந்த மரத்தை அதன் அயலை எல்லாம் பனிமழை மூடிவிட்டிருந்தது. அந்தப் வெண்பனியையும் மீறி மரத்தோடு மரமாக, சிலையாகச் சில்லிட்டுக் கிடந்த அந்த நான்கு குருவிகளையும் கண்டு மனது ஒருமுறை அதிர்ந்தது. எதற்காக அவை இவ்விதம் தம்மிருப்பினை முடித்துக் கொண்டன? ஏனைய குருவிகளெல்லாம் தப்பிப் பிழைக்க வழி கண்டு ஓடி விட்ட நிலையில் இவை மட்டும் எதற்காக இவ்விதமானதொரு முடிவைத் தேட வேண்டும்? சூழல் மாற்றத்தைத் தாங்கும் மன உறுதி, ஆற்றல் இல்லாத காரணத்தினாலா? அல்லது இதுவரை வாழ்ந்த, களித்த அந்த வீட்டினை இழக்க முடியாத துயராலா?

நன்றி: பதிவுகள், திண்ணை


15. சிறுகதை: Where are you from?
- வ.ந.கிரிதரன் -


"டாக்ஸி கிடைக்குமா?"

வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன்.

"Where are you from?"

நான் கனடா வந்து பத்து வருடங்களைத் தாண்டி விட்டன. நானொரு பூரண உரிமையுள்ள கனடிய குடிமகன். என்னைப் பார்த்துக் கேட்கின்றாள் இந்த வயோதிப வெள்ளையின மாது எங்கேயிருந்து வந்திருக்கின்றேனென்று. நாளைக்கு இங்கு பிறந்து,வளரும் என் குழந்தைகளைப் பார்த்தும் இது போலொரு வயோதிப வெள்ளையின மாது இதே மாதிரியானதொரு கேள்வியினைக் கேட்கக் கூடும். இவளைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்றொரு எண்ணத்தில் " என்னைப் பார்த்தால் நானொரு கனேடியன் மாதிரித் தெரியவில்லையா?" என்றேன். அதற்கு அந்த முதிய வெள்ளையின மாதும் சளைக்காமல் பதிலிறுத்தாள் " அது எனக்குத் தெரிகின்றது. ஆனால் இதற்கு முன் எங்கு வாழ்ந்து வந்தாய்?" என்றாள்.

"அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வரிசைப் படுத்துக் கூறுகின்றேன். கேட்க உனக்குப் பொறுமை இருக்கிறதா?" என்றேன். "தாராளமாக" என்று காதுகளை நீட்டிக் காத்திருந்தாள் அவள். "இங்கு வருவதற்கு முன் நான் அமெரிக்காவில் சிறிது காலம் வசித்திருக்கின்றேன். அதற்கு முன்னர் பாரிஸில் சிலகாலம், ஜேர்மனியில் சில காலம், சுவிஸில் சில காலம்..." நான் வார்த்தைகளை முடிக்கவில்லை அவள் குறுக்கிட்டாள். " நீ கொடுத்து வைத்த பிறவி. உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்திருப்பாய் போலும். உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது." என்றவாறே தொடர்ந்தாள் " நான் கேட்டது நீ பிறந்த இடத்தை".

"இந்தியாவை உனக்குத் தெரியுமல்லவா?"

"ஆம்"

"இந்தியாவின் தெற்கு மூலைக்கு அப்பால் விரிந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ளதொரு அழகான தீவு என் தாய் வீடு" என்றேன்.
சிறிது நேரம் சிந்தித்தவள் "தெரியவில்லையே" என்றாள்.

" இங்கு பார். நான் சிறுவனாகப் பாடசாலையில் இருந்த பொழுதே புவியலில் உலகின் நீண்ட சாலை யங் வீதி என்று படித்திருக்கின்றேன். உனக்கோ என் பிறந்த மண் பற்றித் தெரியவில்லையே" என்றேன். தொடர்ந்து " சிறிலங்கா பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றாயா? அது தான் என் தாய் நாடு" என்றேன். அதற்கு அவள் "ஓ சிறிலங்காவா. நீ சிறி லங்கனா?" என்று வியந்தவள் போல் கேட்டாள். அத்துடன் தொடர்ந்து "ஓ சிலோன். சிலோன் தேநீர் என்றால் எனக்கு நல்ல விருப்பம். அது சரி எப்பொழுது சிலோனை சிறிலங்காவாக மாற்றினார்கள். " என்றாள். "ஸ்ரீலங்காவும் கனடாவைப் போல் தான் முன்பிருந்தது. பொது நலவாய நாடுகளிலொன்றாக. இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் ஸ்ரீமா பண்டாரநாயக்க காலத்தில் தான் , 1972 இல் குடியரசாக மாற்றினார்கள். அன்றிலிருந்து தான் சிலோன் ஸ்ரீலங்காவாக மாற்றம் அடைந்தது"

பேச்சு வேறு திசைக்கு மாறியது. "இங்கு பார். இன்று நீ எனது பதினைந்தாவது பிரயாணி. இந்தப் பதினைந்தில் 'நீ எங்கிருந்து வந்தாய்?' என்று கேட்ட பத்தாவது ஆள் நீ. நீ தவறாக நினைக்க மாட்டாயென்றால் நான் ஒன்று தாராளமாகக் கேட்கலாமா?"

"கேள். நான் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டேன். தாராளமாகக் கேள்"

"எதற்காகச் சொல்லி வைத்தது மாதிரி நீங்கள் எல்லோருமே இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள்? ஒவ்வொருவரின் தோற்றத்தையும் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்குமே. பின்னேன் கேட்கின்றீர்கள்?"

"ஏன் கேட்கக் கூடாதா? நீங்கள் எல்லோரும் வந்தேறு குடிகள். உங்கள் பூர்வீகம் பற்றி அறிய எங்களுக்கு ஆசை இருக்காதா?"

"நீங்களும் தான் வந்தேறு குடிகள். நீங்கள் அன்று வந்தீர்கள். நாங்கள் இன்று வந்திருக்கின்றோம். அவ்வளவு தான் வித்தியாசம்."

" நீ நன்கு பேசப் பழகிக் கொண்டாய்" என்று கூறி அந்த மாது சிரித்தாள்.

" கனேடியக் குடிமகனல்லவா? அது தான்" என்று நானும் சிரித்தேன். அந்த மாதை இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு மீண்டும் வார்டன் பாதாள ரயில் வாகனத் தரிப்பிடத்திற்கு வருவதற்கு முடிவு செய்து வாகனத்தைத் திருப்பினேன். இந்த Where are you from? என்ற கேள்வி இருக்கிறதே. இது மிகவும் சுவாரசியமானது. இங்கு வரும் ஒவ்வொரு குடியேற்றவாசியும் அடிக்கடி எதிர் நோக்கும் கேள்விகளில் ஒன்று. இது கேட்கப் படும் பொழுது, கேட்கும் நபரைப் பொறுத்துப் பல்வேறு அர்த்தங்களில் கேட்கப் படலாம். உண்மையிலேயே அறிய வேண்டுமென்று ஆவலில் கேட்கப் படலாம். அல்லது 'நீ கனடியன் அல்ல' என்னும் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் துவேஷ உணர்வின் வெளிப்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியினை எதிர் கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சல்களை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறைம இதனை எதிர் கொள்ளும் பொழுதும் அவர் அவமானப் படுபவராகவே உணர்ந்து கொள்வதால் அடையும் எரிச்சலினை யாரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு அனுபவங்களிற்கும் என்னைத் தயார் படுத்தி வாழ இயல்பூக்கம் அடைந்து விட்டேன். தொழிலிற்காக முகமூடிகளை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு எந்த விதச் சிரமமோ அல்லது சமூக உளவியற் பிரச்சினைகளோ இருப்பதில்லை. ஆனால் நம்மவர் பலருக்கு ஊரிலை இருந்த 'கொண்மேந்து' (Government) உத்தியோக மோகம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.

அடுத்த சில மணித்தியாலங்கள் வார்டன் பாதாள ரயிலை சுற்றியே கழித்து விட்டு டொராண்டோ உள்நகர் ('Down town') நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வழியில் இன்னுமொரு வெள்ளையின வாலிபன் வழியில் மறித்தான். கஞ்சா சற்று முன்பு தான் புகைத்திருப்பான் போலும். அவ்வளவு நாற்றம்.

"எங்கு போக வேண்டும்?" என்றேன்.

"சேர்போன்- டண்டாஸ்' என்றான்.

உள்ளே ஏறி அமர்ந்தவன் " நான் புகை பிடிக்கலாமா?" என்றான். பெரிதாக புகை பிடிக்கக் கூடாது என்ற குறி கார்க் கண்ணாடியிலிருந்ததை அவன் கவனிக்கவில்லை. "இல்லை நண்பனே. இந்த டாக்ஸியில் புகை பிடித்தல் தடை செய்யப் பட்டுள்ளது" என்றேன்.
அவனுக்கு ஆத்திரம் சிறிது வந்தது. "ஆனால் நான் புகை பிடிக்கத் தான் போகின்றேன். யன்னலைத் திறந்து விடுகின்றேன். என்ன சொல்கின்றாய்?" என்றான். நான் திடமாக "மன்னிக்கவேண்டும். அனுமதிப்பதிற்கில்லை" என்றேன். அவனது ஆத்திரம் சற்றே அதிகரித்தது. ஆத்திரத்தை வேறு வழியில் காட்ட எண்ணினான். "நீ மிகவும் மெதுவாகப் போகின்றாய்." என்று முறையிட்டான். " என்னுடைய வேக எல்லையை உனக்காக நான் தாண்ட முடியாது. இது தான் என்னுடைய எல்லை. இது உனக்குப் பிடிக்காவிட்டால் நீ தாராளமாக வேறு டாக்ஸி பிடிக்கலாம். ஆட்சேபனையில்லை" என்றேன். அவனது ஆத்திரம் மேலும் அதிகரித்தது. சிறிது நேரம் இருக்கையில் நெளிந்தவன் "நிறுத்து" என்றான். நான் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தினேன். இறங்கியவன் கதவை அறைந்து சாத்தினான். அத்துடன் " இது கனடா மனிதா. உன்னுடைய நாட்டுக்கே போய் விடு (Go back to your country)" என்றும் பலமாகச் சத்தத்துடன் கூடிய அறிவுரை கூறி விட்டுச் சென்றான். நானும் பதிலிற்கு "இது என்னுடைய நாடு. எந்த நாட்டிற்குப் போகச் சொல்லுகின்றாய்" என்று கேட்டு ஆத்திரத்தை அடக்கி விட்டு எனது வியாபாரத்தைத் தொடர்ந்தேன். மாதம் ஆயிரம் டொலர்களுக்கு டாக்ஸி 'பிளேட்' (Taxi Plate) குத்தகைக்கு எடுத்து, இருபதினாயிரத்திற்கும் மேல் செலவழித்துப் புதுக்கார் வாங்கி, காப்புறுதி, ரேடியோ என்று மாதாமாதம் செலவழித்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும் எனக்கு இதுவும் வேண்டும் . இன்னமும் வேண்டும். இடையில் ஒரு டிம் கோர்ட்டன் டோனற் கடை தென்பட்டது. கோப்பி குடித்துச் சிறிது ஆறுதல் அடைந்து விட்டு வியாபாரத்தைத் தொடரலாமெனப் பட்டது. டாக்ஸியைப் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தேன். நம்மவர் ஒருவர் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தெரியாதது மாதிரி ஆங்கிலத்தில் ஒரு 'மீடியம் டபுள் டபுள்' என்றேன். ஒருமுறை என்னைக் கூர்ந்து பார்த்தவர் கேட்டார் "நீங்கள் ஸ்ரீலங்காவிலிருந்தா (Are you from Srilanka)?" என்றார். "ஆம்" என்றேன். "அண்ணை தமிழிலையே கதைக்கலாமே" என்றார். "கதைக்கலாம்" என்றேன். அடுத்து அவர் கேட்டார்:

"அண்ணை ஊரிலை எந்த இடம்?"

நன்றி: திண்ணை, பதிவுகள்


மேற்படி சிறுகதையான Where are you from? பற்றித் திண்ணை விவாதக் களத்தில் தெரிவிக்கப் பட்ட சில கருத்துகளையே கீழே காண்கின்றீர்கள்.

வ.ந.கிரிதரனின் "நீர் எவடம்?" நல்லதொரு கதை இது ஒரு பெரிய பிரச்சினையாக புலம்பெயந்த தமிழர்கட்கு இருக்கிறது. இதில் வெளச்ளைத்தோலர் கேட்பதன் தாற்பர்யம் வேறு? இதே கேள்வியை சக தமிழன் கேட்பதன் உள்ளார்த்தம் வேறு! இந்த இரண்டின் வேறுபாடுகளை வ.ந.கி. சற்று குறிப்புணர்த்தியிருந்தால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
- வீரமாமுனிவர் -

"ஈயாத புல்ல ரிருந்தென்ன, போயென்ன, வெட்டிமரங்
காயா திருந்தென்ன, காய்த்துப் பலனென்ன?"**படிக்காசுப்புலவர்

I read your latest story 'Where are you from?' It is very well done and ended with an unexpected turn. I especially liked the smooth manner the story unfolded and the choice of words. Congratulations.
Anbudan
Appadurai Muttulingam

வ.ந.கிரிதரனின் where are you from? சிறுகதை புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளில் ஒன்றையும் இலங்கைத் தமிழ் மனோபாவத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறுகதை. பல மாதங்களுக்கு முன்னர் புலம் பெயர் சஞ்சிகைகளில் வெளி வந்த இரு ஆக்கங்களைப் பற்றிச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
ஒன்று:
பரிஸ் சுரங்க ரெயிலில் ஒரு தமிழனைச் சந்திக்கும் பிரெஞ்சுக்காரன் இதே கேள்வியைக் கேட்க இருவருக்குமான உரையாடலாகத் தொடரும் கதை தேசங்களின் எல்லைகள் பற்றியும் இது தொடர்பான பல விடை இல்லாத கேள்விகளூடாகவும் நகர்ந்து இறுதியில் அந்தப் பிரெஞ்சுக்காரன் இனிமேல் இப்படியான கேள்விகளை யாரிடமும் கேட்கமாட்டேன் என சொல்வதுடன் முடிகின்றது. இது மிகவும் சிறப்பான ஆக்கம். சொல்லவந்ததை தெளஞ்வாகவும் சிறப்பாகவும் சொல்லி இருந்தது. தற்பொழுது என்னிடம் சஞ்சிகை இல்லாதபடியினால் மேலும் தெளஞ்வான விபரங்களைத்தர முடியவில்லை.
இரண்டு:
யாழ்ப்பாணத்திலை எவடம்' என்னும் கட்டுரை. இதுவும் புலம் பெயர்நாடொன்றில் சக தமிழர்களால் கேட்கப்படும் கேள்வி பற்றி விவாதிக்கும் சிறப்பான கட்டுரை. மரம் கொத்தி, எக்ஸில் மே, ஜீன் 1998. (கட்டுரையில் வ.ந.கி யைக் கேட்டது போல், ஒருவர் தேனீர் கடையிலும் இதே கேள்வியைக் கேட்கின்றார்.) - மேற்கூறிய இரண்டின் தொகுப்பாகவும், அவற்றின் அளவுக்கு ஆழமில்லாமலும் வ.ந.கி யின் சிறுகதை அமைந்துள்ளது. வ.ந.கி யும் அ.முத்து வும் நான் மேற்கூறியவற்றை படித்தார்களோ தெரியாது. கிரிதரன் படித்திருப்பார் என்று நம்புகிறேன். நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே! - மதி (நண்பன்)

நண்பன் எனப்படுகின்ற மதியின் கருத்துகள் பற்றிப் படித்தேன். மதி என்ன இங்கே கூற வருகின்றார்? மேற்படி இரு கட்டுரைகள்/கதைகளின் பாதிப்பாக எழுதிய கதை என கூற வருகின்றாரா? நண்பர் கூறிய இதழ்களை நான் இது வரையில் படிக்கவில்லை. ஆனால் where are you from?, 'ஊரில் எவ்வடம்' போன்றவற்றை அன்றாடம் நாம் எதிர் நோக்குகின்றோம். இதற்கு இவ்வளவு ஆழமாக நன்பர் மதி ஆய்வு செய்திருக்கத் தேவையில்லை. தேநீர் கடைச் சம்பவம் உண்மையிலேயே இங்கு நடந்த சம்பவம் உண்மைச் சம்பவத்தில் கேள்வி கேட்டவருக்குப் பதில் கேள்வியாக 'நீங்களெல்லாம் திருந்தவே போரதில்லையா?' என எதிர்க் கேள்வி கேட்க, இதனை எதிர்பாராத கேட்டவர் ஒரு கணம் திகைத்துப் போனார். மதி தேவையில்லாமல் இவ்வளவு தூரம் ஆய்விற்கு தனது பொன்னான நேரத்தினைச் செலவழித்திருக்கத் தேவையில்லை. புலம் பெயர்ந்த சூழலில் வாழும் ஒருவருக்கு இவையெல்லாம் சாதாரண அன்றாட நிகழ்வுகளென்பது தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அது தெரியாமலேயே இல்லாத நெற்றிக் கண்ணைக் காட்டிக் குற்றம் பிடிப்பதென்பது மிகவும் வேடிக்கை. இது எப்படி இருக்கு? - வ.ந.கிரிதரன் -

உங்கள் திண்ணைக் கதை அற்புதம் நட்புடன் - மைக்கல்

Hi Giri, How are you doing? I live in Southern California and I read your short story at thinnai.com. Wonderful one. I really enjoyed the story. I guess every one of us will face the same question. I don't know why, as soon as I finished the reading, I thought to write. Please continue your writings. Good luck.- Sudhahar

திருவாளர். "நண்பன்", வ.ந.கிரிதரனின் கதையைப் போல முன்பும், இனியும் எழுதப்படக்கூடுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மனிச அனுபவங்களின் தாக்கங்கள்தானே இலக்கியப் படைப்பாகின்றன. இலக்கிய வரலாற்றில் ஒரே கருப்பொருளைக் கொண்ட பலபடைப்புகள் வெவ்வேறு படைப்பாளிகளால் எழுதப்பட்டது உண்டு. ஒப்பியல் பார்வையின் வழியாக இவற்றின் தாரதம்மியங்களை அறிந்துகொள்ளலாம். "நண்பன்" குறிப்பிடும் எக்.¢ல் கட்டுரையும்(மரங்கொத்தி) நான் படித்திருக்கிறேன். ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் வாசந்?¤ அனுபவ அடியாகத்தான் விளக்கம் கொள்கிறது. ஆகவேதான் வ.ந.கிரியின் இக்கதையை புலம்பெயர்ந்திருக்கும் வாசகர்கள்தான்
சிறப்பாக உள்வாங்கி அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை மேற்படி கருத்துத்தளத்திலேயே நாம் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். திரு. எம்.ஏ.
நு<மான் அவர்கள் தி.f¡னகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலையும், மாப்பசானின் நாவலொன்றையும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இரண்டு நாவலும் சம்பவக்கோவைகளில் ஒத்ததாக இருக்கிறது. ஆகவே உங்களைப்போல தி.f¡வும் மாப்பசானிடம் சுட்டிருக்கிறார் என விவாதிக்க முடியுமா "நண்பனே"? வ.ந..கிரி இத்திண்ணைக் கதையில் குறிப்புணர்த்தவேண்டிய கூறுகள் இருந்தும்
தவறியிருக்கிறார். என்பதை முன்பும் நான் எழுதியிருக்கிறேன். - வீரமாமுனிவர் -

"ஈயாத புல்ல ரிருந்தென்ன, போயென்ன, வெட்டிமரங்
காயா திருந்தென்ன, காய்த்துப் பலனென்ன?"**படிக்காசுப்புலவர்

I'm Ashraf from pondicherry.. I red your story from thinnai.com.. It was excellent story. It encomposses full of your feelings... I like
it.... I would like to express my feelings over that...that's all.. -Ashraf

எழுத்தாளர் பாவண்ணன் கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கய்யாவின் சுயசரிதையை மொழிபெயர்த்திருக்கிறார்.தலைப்பு ஊரும் சேரியும். ஊர் என்றால் அதில் சேரி சேர்த்தி இல்லை. ஊரில் எங்கே என்ற கேள்வி தலித்துக்கு ஒரு பெரும் inquisition போல. தமிழகத்தில் ஊரா காலனியா என்று கேட்பதுண்டு என சொ.தருமன் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல கதை அது. சென்னையில் பெசண்ட் நகர் பகுதியில்நான் வீடு பிடிக்க முயன்றபோது நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா என்று பலர் கேட்டார்கள் . இல்லை
என்றேன்.ஆனால் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்தபிறகு சிந்தாரிப்ப்பேட்டைக்கு மாறிவிட்டேன் தமிழ்நாட்டில் ஈழத்தவர்களின் நிறம் எப்படிபார்க்கப்படுகிறது என்று நான் ஒரு காவியமே எழுதுவேன். ஆக இது ஒரு புது வி"யமேயல்ல. யாழ்ப்பாணமும் சென்னையும் பாரீ.¤ம் டொரொண்டோவும் ஒன்றுதான். "நீங்கள் மலையா நதிக்கரையா?" என்று கேட்கப்படுவதன் இழிவு பற்றி பிமல் மித்ரா ஒரு நல்ல கதை எழுதியுள்ளார். வ ந கிரி எழுதுயதுபோல இதே கதையை இன்னும் பலபேர் எழுதுவார்கள். எழுதிக் கொண்டே இருப்பார்கள். - சிவம் கந்தராஜா

வ ந கிரிதரனின் சிறுகதை நன்றாகவும் உண்மை கலந்ததுமாக இருந்தது. புலம் பெயர்ந்த மற்றும் என்போல் வேலைக்காகா(உண்மையில் பிழைப்புக்காக) வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின்/மனிதர்களின் வாழ்வில் தினசரி நடக்கும் சம்பவங்களில் ஒன்றே இதன் அடிப்படை. அதை மிகவும் அழகாக
எழுதியுள்ளார் வ.ந.கி. இதில் அவர் ஒரு முடிவான கருத்தை கூறவில்லை என்ற சிலரது வாதம் , அப்ப்டி யேன் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது. பாராட்டுக்கள் வ.ந.கி. - நாயேன்_பேயேன்

Where are you from? It was a story many Immigrant people experience in new country. It was told very well .
NNadesan (Australia)


16. ஒரு மகோன்னதப் படைப்பாளி எழுதும் சிறுகதை!
- வ.ந.கிரிதரன் -


'நான் எதற்காக எழுதுகின்றேன்?" மாபெரும் படைப்பாளி, ஆழ்ந்து படிக்கும் அறிவாளி, தர்க்கிப்பதில் சூரன் போன்ற அடைமொழிகள் பலவற்றால் விபரிக்கப் படும் ஓராத்மாவான எழுத்தாளன் உதயச்சந்திரன் ஒருமுறையல்ல பலமுறை தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்விகளில் பிரதானமான கேள்வியான இவ்வினாவினை மீண்டுமொருமுறை தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். நான் எதற்காக எழுதுகின்றேன்?" "நான் எனக்காக எழுதுகின்றேனா? படிக்கும் வாசகர்களுக்காக எழுதுகின்றேனா? பெயர், புகழுக்காக எழுதுகின்றேனா?எதற்காக? என் எழுத்து இந்த மண்ணில் புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வருமென்றதொரு கனவில் எழுதுகின்றேனா?எதற்காக?"

இருப்பின் அர்த்தம் தேடி ஒரு காலத்தில் அலைந்தவனை, இருப்பின் அர்த்தமற்ற தன்மையினை நன்கு விளங்கிவனாக ஒரு காலத்தில் தன்னைக் கருதியவனைக் காலம் எந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தி விட்டுள்ளது? பிரபஞ்சத்தின் படைப்பில் அர்த்தமில்லையென்றால் அர்த்தமற்ற படைப்புகளிலொன்றான அவன் படைப்பதில் மட்டுமென்ன அர்த்தம் இருந்து விடப் போகின்றது? இருப்பின் அர்த்தம் தேடி அலைந்தவன் தன் இருப்பிற்கொரு அர்த்தம் பதிக்க வேண்டுமென்றொரு அவாவில் சொற்களைப் படைக்க ஆரம்பித்து விட்ட விந்தையினை எண்ணிச் சிரிப்பதா?

"எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்தக் கனவு.." எதிரில் அவனது சகதர்மிணி பத்மாவதி. கட்டறுத்து ஓட விழைந்தவனைக் கால்கட்டுப் போட்டு இழுத்து நிறுத்திய புண்ணியவதி. புடைத்து நிற்கும் வனப்புகளின் சொந்தக்காரி. ஆரம்பத்தில் நாடோடியாக அலைந்தவனைத் தன் பிடிக்குள் அகப்படுத்துவதில் வெற்றி கொண்ட ஜெயமோகினி. படைப்பாளிக்கு அப்பொழுது தான் பிரபல சஞ்சிகையொன்றின் ஆசிரியர் தீபாவளி மலருக்காக அவனது ஆக்கமொன்றினைக் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்படும் சஞ்சிகையொன்றின் ஆசிரியர் அவரை அழைத்துக் கெளரவிக்க முடிவு செய்தது பற்றி அறிவித்திருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் அது சம்பந்தமாக வெளியிடப்படவிருக்கும் மலரொன்றிற்கு ஆக்கம் கேட்டிருந்ததும் ஞாபகத்துக்கு வந்தது. மறைந்திருந்த ஞாபகங்களெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பிக்கவே ஆடிப்போய் விட்டான் எழுத்தாளன்.

'என்ன நான் கேட்பது காதில் விழவில்லையா? விழாமல் அப்படியென்ன யோசனை?" மீண்டும் ஒருவிதக் கேலியுடன் வினா தொடுத்த பத்மாவதியை வாரியிழுத்து மார்புற அணைத்தான் உதயச்சந்திரன். அந்தக் கூடலின் தண்மையில் சிறிது நேரம் சிந்தையிழந்தான். "என் சிந்தையைக் கவர்ந்த சிறுக்கி உன்னை விட்டால் இங்கு வேறு யாரடி?" என்றான். அவனது அப்பதில் கேட்டு அவள் வதனம் நாணிச் சிவந்தது. "எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவரல்லவா! பேசவா கற்றுக் கொடுக்க வேண்டும்?" என்றவளை மேலும் வாரியிழுத்தணைத்தான் படைப்பாளி. சிறிது நேரக் கூடலின் பின் பிற வேலைகள் ஞாபகம் வரவே பத்மாவதி "ஐயய்யோ! உங்களுடனிருந்தால் எல்லாமே மறந்து போய் விடுகிறது" என்று ஞாபகம் வந்தவளாக அகன்ற பின் மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனான் உதயசந்திரன்.

"எதை எழுதலாம்?" என்ற வினா இப்பொழுது "நான் ஏன் எழுதுகின்றேன்?" என்ற வினாவினை மாற்றீடு செய்தது. பல்வேறு கோணங்களில் சிந்தித்துப் பார்த்தான். ஒரு பிரபலமான மகோன்னதமான படைப்பாளியென்றிருப்பதில் பல அனுகூலங்களிருந்தன. எழுதும் எதையும் பிரசுரிப்பதற்கு, அதில் அர்த்தம் கண்டு விவாதிப்பதற்கொரு கூட்டமொன்று எப்பொழுதுமே இருக்கும்? உதயச்சந்திரன் இதழ்களில் அந்த நிலையிலும் சிறிதானதொரு புன்னகை கோடு கிழித்தது. ஆழ்ந்து படிப்பதும் பல சமயங்களில் கை கொடுத்து உதவிக்கு வர ஆர்வத்துடனிருக்கும். ஒரு முறை நிகழ்ந்த சம்பவமொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது படைப்பொன்றினை சபையில் சிலர் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்கள். எல்லோரும் அவனது பதிலையே ஆர்வத்துடன் எதிர்பார்த்து நின்றார்கள். நவீனத்துவம்/பின்நவீனத்தும், அமைப்பியல்/பின்னமைப்பியல் என்று ஆழ்ந்து கற்றதெல்லாம் அவனுக்கு அன்று தோள் கொடுக்க வந்து விட்டன. "ஒரு படைப்புப் படைக்கப் பட்டதுமே ஆசிரியன் இறந்து விடுகின்றான். பிரதியை வாசகர்கள் தத்தமது அறிவு, சூழல், இலக்கியங்களுடனான பரிச்சயம் போன்ற அடிப்படையில் புரிந்து கொள்கின்றார்கள். அவற்றில் தலையிட இறந்த ஆசிரியனால் முடியாது. ஏனெனில் அவன் தான் பிரதியைத் தந்து விட்டு இறந்து விட்டானே" அவனது பதிலில், அதிலிருந்த தர்க்கச் சிறப்பில் சபை சொக்கி விட்டது. அந்தச் சொக்கல் தான் அவனைப் பொறுத்த வரையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் அருமருந்து. அதனை அவன் நன்கு புரிந்தேயிருந்தான். ஆனால் அதே சமயம் அவன் எப்பொழுதுமே இவ்விதமே இருந்து விடுவதில்லை. தன் படைப்புகளைப் படைத்த பின்னும் அவை பற்றிய வாசகப் புரிதல்களுக்காக அவன் பலமாக வாதிப்பதுண்டு. அச்சமயங்களில் ஒரு பிரதியினைப் படிப்பதிலுள்ள வாசக சுதந்திரம் பற்றி அதிகமாக அவன் அலட்டிக் கொள்வதில்லை. ஒன்றினை உருவாக்கி விட்டுப் பின் அவற்றிற்கு அர்ததங்கள் காண்பதில் அவன் மகா வல்லமை பொருந்தியவன்.

"எதை எழுதலாம்" எழுத்தாளனின் சிந்தை அலை பாயத் தொடங்கியது. "அப்பா" பிஞ்சுக் குரலொன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. எதிரில் அவன் செல்லக் குஞ்சு குந்தவி நகத்தைக் கடித்தபடி நின்றிருந்தாள். குழந்தையைத் தூக்கி அணைத்தான் எழுத்தாளன்." எத்தனை தரம் சொல்வதம்மா நகத்தைக் கடிக்கக் கூடாதென்று" என்று செல்லமாகக் கடிந்து கொண்டான். "நகக்கண்ணிலுள்ள கண்ணுக்குத் தென்படாத அழுக்குகள், கிருமிகள் எல்லாம் உள்ளே போய் வருத்தம் தருமம்மா. இனிமேல் குஞ்சு நகம் கடிக்கக் கூடாதாம்" என்று குழந்தையைக் கொஞ்சினான். சிறிது நேரத்தில் அவனுடன் கொஞ்சிக் கொண்டிருந்த குழந்தை அப்படியே தோளின் இதமான சூட்டில் தூங்கி விட்டது. 'எதை எழுதலாம்' என்று சிந்தையை உடைத்துக் கொண்டிருந்த எழுத்தாளனுக்கு நல்லதொரு தீர்வு தற்காலிகத் தீர்வு கிடைத்து விட்டது. குழந்தையைப் படுக்க வைத்து விட்டு எழுத்தாளன் உதயச் சந்திரன் தீபாவளி மலருக்கான அடுத்த சிறுகதையினை 'நகம்' என்னும் தலைப்பில் எழுத ஆரம்பித்தான். "ஏன் எழுதுகின்றேன்" என்று தேடிக் கொண்டிருந்தவனை இருப்பு எதையும் எழுதி மகோன்னதமான படைப்பாளி
யாக உருவாக்கிய விந்தையை என்னவென்பது?

நன்றி: பதிவுகள், திண்ணை


17. சொந்தக்காரன்!

வ.ந.கிரிதரன்


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'

வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்...நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.

"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.

தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான்.

"ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.

ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிர்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.." அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.

நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.

"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."

கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.

"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.

அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.

"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.

போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.

"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.

"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.

"பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.

"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."

ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.

சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.

"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?".

"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.

"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.


- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-), பதிவுகள், திண்ணை.


18. தப்பிப் பிழைத்தல்!
- வ.ந.கிரிதரன் -


அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால் அவைக்கப் பட்டிருந்தது. இவ்விதமான குப்பை சேகரிக்கும் பெட்டிகளை மேற்கு நாடுகள் பலவற்ற்¢ல் ஆங்காங்கே வைத்திருப்பார்கள். மூன்றாம் உலகத்து நாடுகள் பலவற்றில் இவற்றைக் காண்பதே அரிது. இத்தகைய பெட்டிக்குள் குப்பைகளைக் கழிவுப் பொருட்களைப் போடவேண்டுமென்றால் போடுவதற்கு வசதியாக கைகளால் உட்புறமாகத் தள்ளக் கூடியமூடியுடன் கூடியதொரு துவாரம் வைக்கப் பட்டிருக்கும். மனிதர்களால் மட்டும் தான் குப்பைகளைல் இதற்குள் போட முடியும். ஏனெனில் கைகளைப் பாவித்து மூடியை உட்புறமாகத் தள்ளுவதற்குரிய திறமையுள்ள உயிரினத்தால் தான் இது முடியும். ஒருவேளை நன்கு பழக்கப் பட்ட மனிதக் குரங்கான சிம்பான்ஸி அல்லது கொரில்லாக் குரங்குகளால் முடியக் கூடும்.

இந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டிக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்க வருகின்றீர்களா? அவசரப் படாதீர்கள். சிறிது பொறுமையாகத் தான் இருங்களேன். முக்கியத்துவம் இருப்பதால் தானே அது பற்றி இவ்வளவு தூரம் விபரிக்கின்றேன். இந்தப் பெட்டிக்கும் உயிர்களின் முக்கிய்மானதொரு இயல்புக்கும் மிகவும் தொடர்பிருக்கிறது என்பதை நான் கூறினால் ஒருவேளை நீங்கள் சிரிக்கக் கூடும். ஆனால் அவசரப்பட்டுச் சிரித்து விடாதீர்கள். பின்னால் நீங்களே உங்களது அவசரத்துடன் கூடிய அறியாமைக்காக வெட்கித்துக் கொள்ளவேண்டியேற்படலாம். ஜாக்கிரதை.

இந்தத் தொடர்மாடிக் கட்டடத்திற்கு நான் அண்மையில் தான் குடிவந்திருந்தேன். இருள் விலகா அதிகாலைப் பொழுதுகளில், இருள் கவியும் அந்திகளில் என் பெண் குழந்தையுடன் உலாவி விட்டு வருவதற்காக நான் புறப்படுவதுண்டு. அத்தகையதொரு சமயத்தில் தான் என் குழந்தை அந்தப் பெட்டியிலுள்ள அந்த விடயத்தை அவதானித்தாள். அவள் கூறித்தான் நானும் அவதானித்தேன். அவளது அவதானம் எனக்கு வியப்பினையும், பெருமிதத்தினையும் அதிகமாகவே அளித்தது. விளையும் பயிர் முளையில் தெரியுமல்லவா? அவ்விதமானதொரு பெருமை.

விடயம் இதுதான்... கழிவுகளைப் போடுவதற்காக அப்பெட்டியிலிருந்த துவாரத்தின் அருகில் ஒரு ஒழுங்கற்ற வட்டத்தில் இன்னுமொரு துவாரம் காணப்பட்டது. எதற்காக அப்பெட்டியில் அந்தத் துவாரம்? யார் போட்டார்கள்? இவை தான் என் மகளின் வினாக்கள். என்னால் உடனடியாகவே விடை கூறமுடியாமல் போன வினாக்களை என் மகள் கேட்டிருந்தாள். யார் அத்துவாரத்தினை உருவாக்கியிருப்பார்கள்? என்று என் மண்டையினை அதிகமாகவே போட்டுக் குடைந்தேன். உருப்படியான பதில் தெரியவில்லை. அச்சமயம் எனக்குச் சிறுவயதில் படித்த சே.ஐசாக். நியூட்டனின் வாழ்க்கைச் சரிதக் கதையொன்றின் ஞாபகம் வந்தது. நியூட்டன் வீட்டில் ஒரு பூனை இருத்ததாம். அது அவர் அறைக்குள் வருவதற்காக ஒரு துவாரம் சுவரிலிடப்பட்டிருந்ததாம். ஒரு நாள் அந்தப் பெண் பூனை குட்டியொன்றினைப் போட்டு விட்டதாம். அந்தக் குட்டி அவர் அறைக்குள் வரவேண்டுமே. பார்த்தார் நியூட்டன்.உடனடியாக பெரிய பூனை வரும் துளைக்கு அருகிலேயே சிறியதொரு துளையினையும் சுவரில் உருவாக்கி விட்டாராம் சிறிய பூனை வருவதற்காக. இவ்விதமானதொரு அறிஞனொருவரின் அற்புதமானதொரு ஏற்பாடோ இந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டியிலிருந்த கோணலான வட்ட வடிவத் துவாரமும். கைகளின் வலு குறைந்த குழந்தைகள் குப்பைகளைப் போடுவதற்கானதொரு ஏற்பாடோ?

அதிகாலைகளில், அந்திகளில் இவ்விதமாக உலா வரும் பொழுது நானும் குழந்தையும் ஒவ்வொரு நாளும் அந்தப் பெட்டியினை அவதானித்துக் கொண்டு வரலானோம். யாராவது அந்தத் துவாரத்தினைப் பாவிக்கின்றார்களாவென்று. ஒருவரும் பாவிப்பதாகத் தெரியவில்லை. யாராவது குறும்புக்காரச் சிறார்கள் அதனையிட்டு விட்டு மறந்து விட்டார்கள் போலும் என்றொரு முடிவுக்கு நானும் என் குழந்தையும் வரலானோம்.

இவ்விதமானதொரு பொழுதில் தான், எமது உலாவினை முடித்துக் கொண்டு சிறிது தாமதமாக நாம், நானும், எனது குழந்தையும், இருப்பிடம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த பொழுதுதான் மாநகரசபைத் தொழிலாளியொருவன், ஒரு போர்த்துகேயன், அந்தக் கழிவைச் சேகரிக்கும் பெட்டியிலிருந்த குப்பைகளை கழிவகற்றும் தனது வாகனத்தின் தாங்கியினுள் கொட்டிக் கொண்டிருந்தான்.

"அப்பா! அந்த மாமாவிடம் கேட்டாலென்ன?" என்று என் குழந்தை அந்தத் துவாரம் பற்றி ஞாபகமூட்டவே கேட்டாலென்னவென்று எனக்கு படவே நான் அந்தத் தொழிலாளியிடம் கேட்டேன்.

"ஹாய்! நண்பனே! உன்னிடம் கேட்டால் சிலவேளை இதற்கு விடை கிடைக்கலாம்//"

அதற்கவன் சிறிது வியப்புடன் "எதைப் பற்றிக் கூறுகின்றாய்?" என்று கேட்டான். நான் அந்தத் துவாரத்தினைக் காட்டி "இதுதான். இந்தத் துவாரத்தினை யார் போட்டது என்று உனக்குத் தெரியுமா? என் மகள் என்னைப் போட்டு நச்சரிக்கின்றாள். அவளுக்கு விடை தெரிய வேண்டுமாம்" என்றேன்.

அவன் என் மகளைப் பார்த்து "நல்ல அறிவுள்ள குழந்தை. இந்த வயதிலேயே அதிகமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்து விட்டதே" என்று பாராட்டினான். அத்துடன் "உனக்கு இதற்குரிய விடை தெரிய வேண்டுமானால் பகல் முழுவதும் ஒரு நாள் இதனை அவதானித்து வந்தாயானால் புரிந்து விடும். நான் இப்பொழுதே இதற்குரிய விடையினைக் கூறி விட்டால் இதற்குரிய உன் சுவாரசியம் குறைந்து விடலாம். மாறாக நீயே காத்திருந்து அவதானித்து அறிந்து கொண்டால் அது உனக்கொரு மறக்க முடியாத நல்லதொரு அனுபவமாகவிருக்கலாம்." என்று கூறி விட்டுச் சென்று விட்டான். எனக்கு அவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வினாவுக்குரிய விடை தெரிந்தால் அதனைக் கூறவேண்டியது தானே. அடங்கிக் கிடந்த எனதும் என் மகளினதும் ஆவலினை இவ்விதம் பெரிதாக அதிகரிக்கச் செய்து விட்டுச் சென்று விட்ட அந்த மனிதன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் ஆத்திரப் பட்டு என்ன செய்வது... இந்த விடயத்தில் என் குழந்தை தான் எனக்கு ஆறுதல் கூறினாள்: "அப்பா! நாளை சனிக்கிழமை உனக்கு விடுமுறைதானே. நாம் அந்த மனிதன் கூறியது போல் அவதானித்தாலென்ன?" அவள் கூறியதும் சரியாகப் பட்டது. வேறு வழி?

மறு நாள் காலையிலிருந்து எம் 'பலகணி'யிலிருந்து அந்த பெட்டியினையே நானும் குழந்தையும் அவதானித்துக் கொண்டிருந்தோம். நண்பகல் வரையில் எந்த வித புதிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. சரியாக பொழுது நண்பகலை அண்மித்த பொழுது தான் அந்த அற்புதம் அங்கே நிகழ்ந்தது. ஓர் அழகான, புஸ¤புஸ¤வென்று அடர்த்தியான கறுத்த உரோமத்துடன் கூடிய அணிலொன்று (எம் ஊர் மர அணிலின் அளவிலிருந்த அணில். இவ்விதமான கறுத்த உரோமத்துடன் கூடிய அணில்களைத் தாரளமாகவே டொராண்டோ மாநகரில் அதிகமாகக் காணலாம்.) மிகவும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து வந்தது. ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அந்தப் பெட்டியில் காணப்பட்ட அந்தத் துவாரத்தின் வழியாக உள்ளே சென்று மறைந்தது. மிக நீண்ட நேரமாக அந்த அணில் உள்ளேயேயிருந்து ஆனந்தமாக உள்ளே மனிதர்களால் எறியப்பட்ட உணவுக் கழிவுகளை உண்டு தீர்த்தது. அதன் பின் ஆறுதலாக வெளியே வந்து துள்ளிக் குதித்துச் சென்று மறைந்தது. "ஓ! இதுவா விசயம்" என்று என் மகள் ஆச்சரியப் பட்டாள். நானும் தான். அதன் பின் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த அணிலினை அவதானித்து வந்தோம். அந்த அணிலுக்கோ அந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டி ஒரு காமதேனு. ஒவ்வொரு நாளும் தனியாகவே வந்து, யாரும் சந்தேகப் படாத விதத்தில், ஆனந்தமாக உண்டு விட்டுச் சென்று வந்தது. யார் கவலைப் ப்படப் போகின்றார்கள். எம்மைப் போன்ற வேலையற்ற முட்டாள்கள் சிலர்தான் கவனித்திருக்கக் கூடும்? ஆனால் முக்கியமாக எம்மைக் கவர்ந்த அம்சம் என்னவென்றால்.. அந்த அணில் இரகசியமாகவே அந்தக் கண்டு பிடிப்பினை வைத்திருந்தது. சக அணில்களுக்குக் கூட அது அந்த இருப்பிடத்தைத் தெரியப்படுத்தவில்லை. ஏனெனில் அது ஒவ்வொரு முறையும் தனியாகவே வந்து சென்று கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட மிக ஆச்சர்யமான விடயத்தை என் மகளே ஞாபகப் படுத்தினாள்.

"அப்பா! மிருகங்கள் சிந்திக்குமா?" என்று அவள் கேட்டதற்கு "நம்மைப் போல் அவை சிந்திப்பதில்லை?" என்றேன். அதற்கு அவள் பதில்க் கேள்வி கேட்டாள்:

"அப்படியென்றால்..எப்படி இந்த அணிலுக்கு இதற்குள் உணவு இருக்கிற விடயம் தெரிந்தது?"

"அதுதான் எனக்கும் தெரியவில்லை" என்றேன்.

"அப்படி உள்ளே உணவிருக்கிற விடயம் தெரிந்ததும் எவ்விதம் அதற்கு இவ்விதம் துவாரமொன்றினை ஏற்படுத்தி உள்ளே செல்லவேண்டுமென்ற விடயம் தெரிந்தது? அப்படியென்றால் அது சிந்தித்திருக்கிறது தானே?"
என்று கேட்ட என் மகளுக்கு என்னால் இவ்விதம் தான் பதிலினைக் கூற முடிந்தது:

"மகளே! அற்புதமானவிந்தப் பிரபஞ்சத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விடயங்கள் எவ்வளவோயுள்ளன. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது உயிரினம் எத்தகைய சிரமமான சூழல்களிலும் தப்பிப் பிழைக்க வழியொன்றினைக் கண்டு பிடித்து விடும் என்பது தான் அது மகளே!"

அதற்கவள் சிரித்துக் கொண்டே "உன்னைப் போல அப்பா" என்றாள். என் மகள் எவ்வளவு சூட்டிகையான குழந்தையென்று தூக்கி அணைத்துக் கொண்டேன்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.


19. வீடற்றவன்...
- வ.ந.கிரிதரன் -


சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. 'ஹாட் டாக்' நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் வீடற்றவர்கள் 'மான் ஹால்' மூடிகளைக் கணப்பாக்கி உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். நான் இரவு வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்தபடி சென்று கொண்டிருந்தேன். மனிதரை, சூழலை அவதானித்தல் எனக்குப் பிடித்தொரு பிரியமான பொழுது போக்கு. வீதியில் 'சிக்னல்' விளக்கு மாறுவதற்காகக் காத்து நின்ற பொழுது 'சில்லறை ஏதாவது தரமுடியுமா நண்பனே' என்ற குரல் கேட்கத் திரும்பினேன். அருகில் அந்தக் கறுப்பின நடுத்தர வயது மனிதன் நின்றிருந்தான். இலேசான நரையுடன் கூடிய தாடி. அடர்த்தியான மீசை. ஆனந்தமான இளநகையுடன் கூடிய முகம். கையில் ஒரு பிளாஸ்திக்காலுருவாக்கப்பட்ட கொள்கலனொன்று வைத்திருந்தான். அதில் Clarke for Toronto Mayor' என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. இதற்கும் மேலாக எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தவிடயமென்னவென்றால்..அவன் 'கோர்ட்டும் சூட்டும் டையு'மாக ஒரு கனவானைப் போன்றதொரு தோற்றத்திலிருந்தது தான். அவன் நீட்டிய பிளாஸ்திக் கொள்கலனில் இரண்டு ரூபாக் குத்தியொன்றினைப் போட்டு வைத்தேன். அதற்கவன் "நன்றி" என்று நன்றி தெரிவித்தான். இந்த மாநகர் ஒவ்வொரு நாளும் இத்தனை வருடங்கள் கழிந்த நிலையிலும் எனக்குப் புதுப் புது அனுபவங்களைத் தர மறந்ததேயில்லை. இதனை அறிதலென்பது முடியாத செயல் போன்று பட்டது. கடலின் ஆழத்தை விட இதன் ஆழம் அதிகமாகவிருக்கலாமென்று புதியதொரு பழமொழியினை உருவாக்கும் அளவுக்கு ஆழமானதாக எனக்குப் பட்டது.

அந்த மனிதனே தொடர்ந்தான். என் கைகளைப் பிடித்துக் குலுக்கியவன் 'நண்பனே! என் பெயர் கிளார்க். டொரோண்டோ மேயர் பதவிக்காகப் போட்டியிட இருப்பவன். நானொரு வீடற்றவன்' என்ற அவனது கூற்று எனக்கு ஆச்சர்யத்தை அதிகம் விளைவித்தது. விரைவில் நடைபெறவிருந்த டொரோண்டோ மாநகர மேயர் பதவுக்கான தேர்தலில் பலர் போட்டியிடவிருப்பது நான் ஏற்கனவே அறிந்ததொன்று தான். ஆனால் இவ்விதம் ஒரு வீடற்ற நடைபாதை மனிதனும் போட்டியிடவிருப்பதாக நான் அறிந்திருக்காததால் சிறிது வியப்புற்றேன். அந்த வியப்புடன் 'நான் அறியாத செய்தி' என்றேன். அதற்கவன் 'அதிலேதும் ஆச்சர்யமெதுவுமில்லை. இங்குள்ள பத்திரிகைகள் ஏன் என்னைப் போன்ற ஒருவனைப் பற்றித் தமது நேரத்தை விரயமாக்கவேண்டுமென்று நினைத்திருக்கலாம்' என்றான். எனக்கு சிறுவயதில் கேட்டதொரு கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு முறை அங்கொடைக்கு சிறிலங்காவின் அனறைய ஜனாதிபதியான ஜே.ஆர். விஜயம் செய்திருந்தார். அங்கொடை இலங்கையின் புகழ் பெற்ற மனோவியாதிக்காரருக்கான ஆஸ்பத்திரி. அவ்விதம் விஜயம் செய்தவரை அங்கு சிகிச்சைக்காகத் தங்கியிருந்த நோயாளிகளிலொருவர் பின்வருமாறு வரவேற்றார்.

'வணக்கம். ஐயா யாரோ?'

அதற்கு ஜே.ஆர் ஒரு புன்சிரிப்புடன் 'நான் தான் இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய தார்மீக ஜனாதிபதி' என்றார். இதனைக் கேட்டதும் கேள்வி கேட்ட நோயாளி பலமாகச் சிரித்து விட்டு ஜே.ஆருக்குப் பினவருமாறு அறிவுரை கூறினான்: 'ஐயா. நானும் இப்படிச் சொல்லித் தான் இங்கு வந்து மாட்டிக் கொண்டேன். என்னிடம் கூறிய மாதிரி வேறு யாரிடமும் இவ்விதம் கூறாதீர்கள். அப்புறம் உங்கள் பாடும் என் பாடு தான்.' எனக்கொரு யோசனை. இவனும் தான் மேயர் தேர்தலுக்கு நிற்பதாகக் கூறுகின்றானே. வீடற்றவனாகவிருக்கின்றான். கோர்ட்டும் சூட்டும் டையுமாக ஒரு கனவானைப் போல் விளங்குகின்றான். ஒரு வேளை இவனும் அந்த ஜே.ஆரை வரவேற்ற நோயாளியைப் போன்றவனோ? இல்லாவிட்டால் தானொரு வீடற்றவனென்றும், மேயர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் இவ்வளவு தீவிரமாகக் கூறுவானா? அவனது குரலில் எந்தவிதத் தயக்கமும், கலக்கமும் தெரியவில்லை. அக்குரலிலிருந்து ஒருவரும் அவனது மனநிலையினைச் சிறிதளவாவது சந்தேகிக்கமாட்டார்கள். அவ்வளவுக்குத் தெளிவாக அறிவு பூர்வமாக உரையாடினான்.

"நண்பனே! உன்னிடம் ஒன்று கேட்கலாமா?" என்றேன். "நிச்சயமாக" என்று என் கேள்விகளுக்காகக் காத்திருந்தான். [ இங்கு ஒருவரையொருவர் 'ஹாய் மான்' (Hey Man!), "எனது நண்பனே" (My Friend) என்று அழைப்பதென்பது சர்வசாதாரணமானது.]
"உன்னைப் பார்த்தால் ஒரு கனவானைப் போல் தென்படுகிறாய். அதே சமயம் வீடற்றவனென்றும் கூறுகின்றாய். இந்த உடைகளையெல்லாம் உனக்கு யார் தந்தது?" ஆச்சர்யம் தழும்பும் குரலில் கேட்டேன். அதற்கு அவன் கூறினான்: "நண்பனே! உண்மையைக் கூறினால்.. இவையெல்லாம் தானாகவே என் நலனில் அக்கறையுள்ளவர்களால் கொண்டு வந்து தரப்பட்டது...'அடிலயிற்று'ம் , 'பே'யும் சந்திக்குமிடத்திலுள்ள நடைபாதை தான் என் விலாசம். எப்பொழுதாவது உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமென்றால் அங்கு வந்து பார்." இலேசானதொரு புன்சிரிப்புடன் "நீயொரு புதிரான மனிதன்" என்றேன். அதற்கு அவனும் இலேசாகச் சிரித்தான். மேலும் தொடர்ந்தேன்:"உனக்கு இவ்விதம் மேயர் தேர்தலில் நிற்க வேண்டுமென்று எவ்விதம் ஆர்வம் வந்தது? ஆட்சேபனயேதுமில்லையென்றால் கூறலாம்..". சிறிது மெளனத்தின் பின் அவன் கூறினான்: "உனக்குத் தெரியாது என் கடந்த கால வாழ்க்கை பற்றி. தெரிந்தால் அதிர்ந்து போவாய்?".என் ஆர்வம் அதிகரித்தது. "நீ உன் கடந்த கால வாழ்வு பற்றிக் கூறாவிட்டால் என் மண்டை உடைந்து விடும் சுக்கு நூறாகி..வேதாளம் விக்கிரமன் கதையில் வருவதைப் போல்" என்றேன். அதற்கு அவன் "வேதாளம்..யாரது..?" என்றான். "அதொன்றும் அவ்வளவு முக்கியமான விடயமில்லை. நீ உன் கதையினைக் கூறத் தொடங்கலாம்." என்றேன். அதற்கு அவன் பின்வருமாறு தொடர்ந்தான்:" நான் ஒரு காலத்தில் மில்லியன் டாலர்கள் வரையில் உழைத்தேன். போதை வஸ்து விநியோகித்தேன்.....பெண்களை வைத்து 'பிம்பாக' (Pimp) இருந்து உழைத்தேன்....அதன் பின் தான் உணர்ந்தேன்..காசு தான் வாழ்க்கை அல்லவென்று..தற்போது என்னுடைய நோக்கமெல்லாம் மக்கள் அனைவரையும் நேசிப்பது தான்..உண்மையாக நேசிப்பது தான்.....உனக்குத் தெரியாது....மேலும்..." என்று நிறுத்தினான். "என்ன நிறுத்தி விட்டாய்...?" ஆர்வம் ததும்பக் கேட்டேன். "நான் இந்த சிக்னலில் பிழையாகக் கடந்தால் நிறுத்தப் படுவேன். அறிவுரைகள் கூறப்படுவேன். காவல் துறையினர் கண்டால் என்னை விடமாட்டார்கள். உன்னையும் தான்..ஆனால் ஒரு வெள்ளையினத்தவருக்கு இவ்விதமானதொரு நிலை ஏற்படுமென்று நீ நினைக்கின்றாயா? வந்தேறு குடிகள், சிறுபான்மையினர் அனைவரும் நன்கு பாதிக்கப் படுகின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் உதவ வேண்டும். அதற்காகத் தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்...." என்று அதற்கவன் பதிலிறுத்தான். இறுதியில் கதை வேறு வழிக்குத் திரும்பியது.." நண்பனே! நான் ஒரு எழுத்தாளன்..ஒரு மாதாந்த சஞ்சிகை நடத்துபவன்..அதற்காக உன்னைப் பேட்டி காண்பதென்றால்ல் என்ன செய்யலாம்..?" என்றேன். அதற்கவன் " தாராளமாக நீ என்னை என்னுடைய இருப்பிடத்தில், அது தான் அடிலையிற்/பே சந்திப்பில் சந்திக்கலாம்...." என்றவன் "உனக்குக் குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா?' என்றான்."ஆம். இரு அழகான நல்ல குணமான பெண் குழந்தைகள்" என்றேன். அதைக் கேட்டதும் அவன் இரு இருபத்து ஐந்து சத நாணயங்களை எடுத்துத் தந்தான்..அத்துடன் பின்வருமாறு அறிவுரையொன்றினையும் தந்தான். "எப்பொழுதாவது உன் குழந்தைகள் வெளியே சென்றால்..அவர்களிடம் இந்த நாணயங்களைக் கொடு..எங்கிருந்தாலும் உனக்கு அழைத்துத் தெரிவிக்கக் கூறு.." அதன் பிறகு விடைபெற்றுச் சென்று விட்டான். அவன் செல்வதையே , கண்ணிலிருந்து மறையும் வரையில், சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த புதிரான மாநகரைப் போலவே புதிரான மனிதனிவனெனப் பட்டது.


நன்றி: திண்ணை, பதிவுகள்.


20. 'ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'

- வ.ந.கிரிதரன் -


தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நு¡லகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நு¡லகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நு¡லகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்கும் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன து¡க்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

"என்ன அடிக்கடி இங்கு நு¡ல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.

அதற்கவன் "இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்.." என்றான்.

"என்ன ஆனால்..?" என்றேன்.

"ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்" என்றான்.

"என்ன நீ கலிபோரினியாவிலிருந்தவனா?"

" ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?"

"நான்..நான் ஒரு கனேடியன்.."

"அது சரி. னால் எந்த நாட்டிலிருந்து வந்தவன். பாகிஸ்தானா..அல்லது இந்தியாவா"

"இரண்டுமில்லை..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட நாடொன்றிலிருந்து வந்தவன்.."

"அது எந்த நாடு..?"

"சிறிலங்காவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றாயா?"

"ஓ..நீ சிறிலங்கனா?"

"ம் நண்பனே! ஆனால் நாங்கள் எல்லோருமே ஓரினம். உங்களைப் போல். ஆபிரிக்கர்களைப் போல்" என்றேன்.

"ஓ.."

"அது சரி.. நீயென்ன நைஜ"ரியனா"

"நான் நைஜ"ரியன் தான். ஆனால் நைஜ"ரியாவிலிருந்து வந்தவனல்ல"

"புதிரா..?"

"ஒரு புதிருமில்லை. நான் கலிபோரினியாவிலிருந்து கனடா வந்தவன். இதென்ன நாடு? சொன்னால் நம்பமாட்டாய். நான் இங்கு வந்தே முப்பது நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் இருந்து பார் நான் மே முடிவதற்குள் கலிபோரினியா திரும்பி விடுவேன்.."

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய். உனக்குக் கனடா பிடிக்கவில்லையா..பின் ஏன் இங்கு வந்தாய்?"

"ஏ! மனிதனே! நான் உன்னைப் போல் கனடா வந்தவனல்ல. நீ சிறிலங்காவிலிருந்து வந்தவன். உனக்கு வேண்டுமானால் கனடா பெரிதாகவிருக்கலாம். ஆனால் நான் அவ்விதம் வந்தவனல்ல. கலிபோர்னியாவிலிருந்து வந்தவன். கலிபோர்னியாவிலிருந்து வந்து பார்த்தாயென்றால் தெரியும் கனடாவின் நிலைமை."

"கலிபோர்னியாவில் வீட்டு வாடகை மிக அதிகமென்று கேள்விப்பட்டிருக்கின்றேன்"

"அது சரி..ஆனால் அங்கு வாழ்க்கைத் தரம் சரியான குறைவு..ஐம்பது சதத்துடன் நாள் முழுக்க பஸ்ஸில் மாறி மாறிப் பயணம் செய்யலாம். இங்கு அப்படிச் செய்ய முடியுமா?. எனக்கு ஏன் வந்தேனென்று §ருக்கின்றது. வேண்டுமானால் பார். யூன் வருவதற்குள் நான் போய் விடத்தான் போகின்றேன். கலிபோரினியா போய் விடத் தான் போகின்றேன்.நான் ஜெனிபரிடம் கூடக் கூறி விட்டேன். அவளுக்காகத் தான் என் அருமைக் கலிபோர்னியாவை விட்டு இந்தப் பாழாய்ப் போன கனடாவிற்கு வந்தேன். ஆனால் இம்முறை அவள் வருகின்றாளோ இல்லையோ நான் போகத் தான் போகின்றேன்."

எனக்கு அவன் கதை மிகவும் ச்சர்யத்தைத் தந்தது. தற்செயலாக எனது குழந்தை பங்கு பற்றும் நிகழ்வொன்றிற்காக நு¡லகம் வந்த இடத்தில் தான் இந்த கலிபோர்னியா நைஜ"ரியனைச் சந்தித்திருந்தேன். அதுவும் சந்தித்துச் சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. அதற்குள் அவன் எவ்வளவு விரைவாகத் தனது மனக் குறைகளை அள்ளிக் கொட்டி விட்டான். உண்மையில் அவன் கனடா வந்து முப்பது நாட்கள் தானா அல்லது முந்நூறு நாட்கள் தானா ஆகி விட்டிருந்தன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குள் அவன் ஏன் என்னிடம் இவ்விதம் தன்னைத் திறந்து காட்டினான். அவன் கதைத்தது கூட மிகப் பலமான குரலில் தான். அவன் கூறுவதைக் கேட்ட அருகில் நு¡ல்களைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சில வெள்ளையின முதியவர்கள் கூட இலேசாகத் தலைகளை நிமிர்த்தி அவதானிக்கத் தான் செய்தார்கள். ஆனால் அந்த ஆபிரிக்க அமெரிக்கப் பாதுகாவலன் அது பற்றியெல்லாம் அதிகமாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவனுடன் நட்பாக உரையாடத் தொடங்கிய எனது செயல் இன்னுமொரு மண்ணில் வேரூன்றுவதில் முயன்று தோல்வி கண்டிருந்த இவனுக்கு ஒருவித ஆறுதலையும் தன் மனப்பாரத்தை இறக்க வேண்டிய தேவையினையும் ஏற்படுத்தி விட்டிருக்குமோ என்றும் பட்டது. இதற்கிடையில் என் மகள் தன் நிகழ்ச்சி முடிந்து "டாடி" என்றவண்ணம் வந்து விட்டாள்.

"யார் உன் குழந்தையா? " என்றான்.

"ஆம் நண்பனே! நீ போவதற்குள் முடிந்தால் வந்து சந்திக்க முயல்கின்றேன்" என்றேன்.

"அதற்குச் சாத்தியமில்லை. இன்று மட்டும் தான் தற்காலிகமாக இங்கு எனக்கு வேலை. நாளைக்கு வழமையான இடத்தில் தான். உன்னைப் போன்றவர்களை இங்கு பார்ப்பதே அரிது. கலிபோர்னியாவில் எல்லோருமே நட்புணர்வு மிக்கவர்கள். ஒருமுறை வந்து பார். பின்னர் நீயே புரிந்து கொள்வாய்" என்றபடியே விடை கொடுத்தான். அத்துடன் எனக்கும் அவனுக்குமிடையிலான தற்காலிக உறவில் நிரந்தரப் பிரிவேற்பட்டது. ஆனால் வழக்கம் போல் இந்த உறவின் பிரிவும் இலேசாக மனதை நெருடத் தான் செய்தது போல் பட்டது.

நன்றி: திண்ணை, பதிவுகள்.


21. மனைவி!

வ.ந.கிரிதரன்


இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

'அப்பா! சரியான புத்தகப் பூச்சி. அப்பா! ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிரிப்பு. நானறிய பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியெ போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கிரகாம் கிறீன், டால்ஸ்டாய், வூட் ஹவுஸ், கொன்ராட்,... ஆனந்த விகடன், கல்கி, கலைமகள்,...இதைத் தவிர வேறென்ன செய்தார்? அப்பாவிற்குக் கவலைகள் இருந்ததுண்டா? குடும்பம், குட்டியென்று...எல்லாமே அம்மாதான்.அதிகாலையெழும்பி, அடுக்களை அலுவல் முடித்து, பாடசாலை செல்லும் அம்மா போய்ப் பொழுதுபட வந்தால்.. அம்மா மீண்டும் அடுக்களைதான். அம்மா வரும்வரை அப்பா குட்டி போட்ட நாயாய் அலைவார். அப்பா ஏனப்படியிருந்தார்? அம்மா அதுபற்றி அலட்டிக் கொண்டது கிடையாது. ஏன் அப்பாவும் தான்.

தூங்க மாட்டேனென்று மனம் இன்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நினைவுகள் அவள் நெஞ்சில் ஒருவித ஏக்கத்தினைப் பால்யகாலம் பற்றியதொரு ஏக்கத்தினை ஏற்படுத்தின. கவலைகளற்ற சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துக் கொண்டிருந்த அந்த நாட்கள். எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சினை இளக்கி விடும் அந்த நாட்கள். அப்படியே அப்பா, அம்மாவின் அரவணைப்பில் இருந்த்கு விட்டிருக்கக் கூடாதா? வாழ்வு அமைதியாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பால்ய காலத்துக் கணங்களின் இனிமை எங்கே? தொலைபேசி கணகணத்தது. சோபாவில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரொன்றை பார்த்தபடி பழைய நினைவுகளில் நனவிடை தோய்ந்தபடியிருந்த மனோரஞ்சிதம் 'யாராகவிருக்கும் இந்த நேரத்தில்' என எண்ணியவாளாக எழுந்து சென்று தொலைபேசியினை எடுத்து "ஹலோ" என்றாள்.

"ஹலோ ரஞ்சிதமா? நான் சந்திரன் கதைக்கிறேன்"

மனோரஞ்சிதத்திற்கு சிறிது திகைப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது. ராமச்சந்திரன். அவளது முன்னாள் கணவன்.

"என்ன சந்திரன் இந்த நேரத்திலை.."

"ரஞ்சிதம், எனக்கு நாளக்கு வேலையில்லை. நீரும் நாளைக்கு வேலைக்குப் போகவில்லையென்று கூறியிருந்தனீர். எங்காவது ரெஸ்றாண்டிற்குப் போய் ஆறுதலாகக் கதைக்கலாமென்று பட்டது. என்ன சொல்லுகிறீர்?"

மனோரஞ்சிதத்திற்கும் போனாலென்னவென்று பட்டது.

"அதுசரி சந்திரன், இந்த நேரத்தில் எந்த ரெஸ்ராண்டிற்குப் போகலாம்..எல்லாரும் கடையைப் பூட்டுகிற நேரத்திலை.."

"அந்தக் கவலையை விடும். எனக்குத் தெரிந்த சீனனுடைய ரெஸ்ராண்டொன்று டவுண் டவுனிலையிருக்கு...சைனா டவுனிலை தான். அவன் விடிய விடிய திறந்திருப்பான்...அங்கு போகலாம்...என்ன சொல்லுறீர்?"

"எனக்கென்றால் சரி.. நீங்கள் இங்கு வந்து போக இன்னும் நேரம் சென்று விடுமே.."

"நான் உமது இடத்திற்குக் கிட்டத் தானிருந்து கதைக்கிறேன். இன்னும் பத்தே பத்து நிமிடங்களில் அங்கு வந்து விடுவேன். ரெடியாய் நில்லும்"

மனோரஞ்சிதம் அவன் வருவதற்குள் முகம் கழுவி தன்னைத் தயார் படுத்தத் தொடங்கினாள். 'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காலந் தள்ளுவது. இன்னும் இழுத்துக் கொண்டே போகாமல் இன்றைக்கே பேசி இதற்கொரு முடிவு கட்டினாலென்ன?' என்றொரு எண்ணமும் கூடவே எழுந்தது. அதே சமயம் ராமச்சந்திரனின் தன்னையே முதன்மைப் படுத்தி அவளை அடிக்கடி வருத்திய பழைய சம்பவங்களெல்லாம் ஞாபகத்திலெழுந்தன. எவ்வளவு தூரம் அவளை வார்த்தைகளாலேயே குற்றியிருப்பான். எதற்கெடுத்தாலும் அவள் மேல் சந்தேகம். அவள் நேரம் கழித்து வரும் சமயங்களெல்லாம் அவளை வார்த்தைகளால் எவ்வளவு தரம் வாட்டியிருப்பான்? சில சமயங்களில் 'தேவடியா' என்று கூடத் திட்டியிருக்கிறான். அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இவ்விதம் பிரிந்து சந்தித்து வாழ்வது கூட ஒரு விதத்தில் நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருந்து விட்டாலென்ன?' பலவிதமான எண்ணங்கள் வளையமிடத் தன்னை அலங்கரிப்பதில் மனோரஞ்சிதம் ஈடுபட்டாள். ராமச்சந்திரன் கூறியமாதிரியே பத்து நிமிடங்களில் வந்து விட்டான். இருவரும் அவனது காரிலேயே டொராண்டோ நகரின் மத்தியிலமைந்திருந்த 'சீனநகர்' நோக்கிப் பயணமானார்கள். அவன் கூறிய படியே அந்தச் சீன உணவகத்தினுணவு வகைகள் சுவையாகவேயிருந்தன. அவன் 'பியர்' எடுத்து அருந்தத் தொடங்கினான்.

"என்ன சந்திரன்! பியர் குடித்தாலெப்படி கார் ஓடுவதாம்" என்று மனோரஞ்சிதம் கேட்டாள்.

"ரஞ்சிதம்! இன்று நீர் தான் டிரைவர். இப்படியொரு சந்தர்ப்பம் இனி எப்பொழுது வருமோ?"

நீண்ட நேரமாக உரையாடியபடி உணவினைச் சுவைக்கத் தொடங்கினார்கள்.

"ரஞ்சிதம், எனக்கென்றால் ஒரு யோசனை.."

"என்ன சந்திரன்.."

"நடந்தது நடந்து விட்டது. அவற்றைப் பழங்கனவாக மறந்து விட்டு ஏன் புது வாழ்க்கையை நாம் தொடங்கக் கூடாது?"

"அப்படியென்றால் ஏற்கனவே விட்ட பிழைகளை நாங்கள் இனியும் விடக் கூடாது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து மதித்து எந்தவிதச் சந்தேகமுமில்லாமல் வாழ்வதாகவிருந்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. எதற்கும் இன்னுமொரு நாள் அவகாசம் தாருங்கள். நான் உங்களிற்கு எனது முடிவைச் சொல்லுகிறேன். என்ன சொல்லுகிறீர்கள் சந்திரன்?"

அவனுக்கும் அது சரியென்று பட்டது. 'ஆறப் பொறுத்தவன் ஆக்கப் பொறுக்கக் கூடாதா?' அன்றிரவு அவர்கள் அவ்வுணவகத்திலிருந்து புறப்பட்ட பொழுது ராமச்சந்திரன் தன் நினைவிலேயே இல்லை. அளவிற்கதிகமான மகிழ்ச்சியில் அளவிற்கதிகமாக பியர் அருந்தி விட்டிருந்தான்.

"சந்திரன், இந்த நிலையில் உங்களைத் தனியே விட எனக்கு விருப்பமில்லை.. பேசாமல் என் அபார்ட்மென்றிலேயே இரவு தங்கி விடுங்கள்" என்று மனோரஞ்சிதமே கேட்ட பொழுது ராமச்சந்திரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். ராமச்சந்திரன் சோபா பெட்டில் படுத்துக் கொள்ள மனோரஞ்சிதம் தனது அறையில் படுத்துக் கொண்டாள். மறு நாள் ராமச்சந்திரனிற்கு முடிவு கூறுவதாகக் கூறியதை எண்ணியள், அது பற்றிய எண்ணங்களில் மூழ்கியவளாகவளாக நெடுநேரம் தூக்கம் வராமல் விழித்திருந்த மனோரஞ்சிதத்தை இறுதியில் தூக்கம் தழுவிக் கொண்டது. அதிகாலை மூன்று மணியிருக்கும். இன்னும் விடிந்திருக்கவில்லை. மனோரஞ்சிதத்திற்குத் தன் மேல யாரோ படுத்திருப்பது போலொரு உணர்வு.மூச்சு முட்டியது. கனவேதாவதுதான் காண்கின்றோமோ என எண்ணியவளாக விழித்துக் கொண்டவளிற்குத் தூக்கி வாரிப் போட்டது. ராமச்சந்திரன் அவள் மேல் பரவியவனாக அவளைத் தழுவ முயன்று கொண்டிருந்தான்.

"என்ன சந்திரன்..உங்களிற்கென்ன பைத்தியமா..." என்று கத்தியவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவன் இன்னும் வெறியில் தானிருந்தான். "என்னடி பத்தினி வேசமாய் போடுறாய்? நானென்ன வேறு ஆளா? உன் புருசன்டீ"

இவ்விதம் அவன் கூறவும் அவள் ஆத்திரம் அதிகரித்தது. இதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. எவ்வளவு இலகுவாக இயல்பாக ஆணவத்துடன் கூறினான் அவன்? இவன் திருந்தவே மாட்டானா? இவளுக்கும் அவனுக்குமிடையிலுள்ள தொடர்பென்ன? ஒரு காலத்தில் அவனுக்கு அவள் மனைவியாகவிருந்தாள். அவன் அவளுக்குக் கணவனாகவிருந்தான். ஆனால் அது ஒரு காலத்தில். தற்காலத்திலல்ல. அந்த ஒரு காலத்துறவைக் காரணமாக வைத்து இன்னும் இவன் இவளை அடக்கலாமென்று இயல்பாகவே இவன் எண்ணிக் கொண்டிருக்கின்றான். வெளியில் இவன் எவ்வளவு கதைத்தாலும் இவனது ஆழ்மனதிலுள்ள எண்ணம் தான் இப்பொழுது இந்தப் போதையில் வெளிப்படுகிறது. என்ன மனுசனிவன்?

"சந்திரன்! நாங்கள் ஒரு காலத்தில் புருசன் மனைவியாக இருந்தவர்கள் தான். அது பழைய கதை. இப்பொழுது எங்களுக்கிடையில் உள்ள தொடர்பு வெறும் நண்பர்களிற்கிடையிலான தொடர்பு மட்டும் தான். நல்ல காலம் இப்பொழுதாவது உங்களுடைய சுயரூபம் தெரிந்ததே. நீர் மாறியிருப்பீரென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நீர் மாறவேயில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? " மனோரஞ்சிதம் இவ்விதம் கத்தவும் ராமச்சந்திரன் சுயநிலைக்கு வந்தான். மனோரஞ்சிததை அவன் நன்கறிவான். இத்தகைய சமயங்களில் அவன் என்ன செய்ய வேண்டுமென்பதையும் உணர்வான்.

"ரஞ்சிதம்! என்னை மன்னிச்சுக் கொள்ளும். நான் செய்தது பிழைதான். அதுக்காக நீர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள நான் தயார் தான். ஆண் பெண் உறவென்பது உடற் பசிக்கொரு தீனிதான். என்னுடைய நிலையை நினைச்சுப் பாரும். நான் நினைச்சிருந்தால் என் உடல் தேவைகளுக்காக இங்கு மிகவும் இலகுவாக இன்னொரு பெண்ணின் துணையை நாடியிருக்க முடியும். ஆனால் நான் செய்தேனா? நான் இங்கு என்னை நியாயப் படுத்த முனையவில்லை. நான் செய்தது சரியென்று கூறவில்லை. ஆனால் அதற்காக என் சுயரூபம் அது இதென்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நான் நிச்சயமாக நீர் உணர்வீரென்று நினைக்கின்றேன். ஆனால் நாளைக்கு நீர் கூறப்போகின்ற பதிலுக்கு இந்தச் சம்பவமொரு காரணமாகவிருக்காதென்று நம்புகிறேன்" இவ்விதம் கூறிய சந்திரன் படுக்கையிலிருந்தும் எழுந்து சட்டையை மாற்றியவனாகப் புறப்பட்டான். அவன் செல்வதையே பார்த்தபடி அமைதியாக மனோரஞ்சிதம் நின்றாள்.

நன்றி: திண்ணை, பதிவுகள்


22. யன்னல்!
வ.ந.கிரிதரன்


யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாகை நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?

'பேப்' வீதியின் தெற்குப் பக்கமாக நோக்கி அவன் வந்து கொண்டிருந்தான். அவன் நிறத்தை வைத்துப் பார்த்தால் அவன் ஒரு கறுப்பு மனிதன். 'யமேய்க்க' நாட்டவனாக இருக்கலாம் போல் பட்டது. ஆனால் அதனையும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. பலரை , நைஜீரியாப் பக்கம் இருந்து வந்த பலரை 'யமேய்க்க'ர்களாக எண்ணி ஏமாந்த அனுபவம் பல உண்டு. அவர்களது உரையாடும் பாங்கினை வைத்துப் பிடித்துக் கொள்ளலாம். நம்மவரிற்கு அவனைக் 'கறுவல்' என்று சொல்வதிலொரு அலாதிப் பிரியம். ஏதோ 'வறுவல்' என்று சொல்வதைப் போல் ஆசையாகக் 'கறுவல்' என்று கூறுவார்கள். 'கறுவல்' என்று சொல்வதில் பெரிய தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல்லினை சொல்லும் போது அவர்களையறியாமலேயே தென்படுகின்றதே அந்த இளக்காரத் தொனி.. அது அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது....ஊரிலை கூறுவார்களே....'வடக்கத்தையான் வருகின்றான்' என்று....அதுமாதிரி இங்கு இந்தக் 'கறுவல்'...

அந்தக் கறுப்பு மனிதன் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். பார்ப்பதற்கு
'ரப்' இசை வழங்குமொரு பாட்டுக் காரன் போலொரு தோற்றம்...ஒருவிதமான ஆட்டம் அவன் நடையில் தென்பட்டது. கூடவே ஒரு நாய் வந்து கொண்டிருந்தது. கறுப்பு நாய். எந்த வகையான நாய் என்று சொல்வதற்கில்லை. நான் ஒரு நாய் ஆராய்ச்சியாளனல்ல. எனக்குத் தெரிந்த ஒருசில நாய் வகைகளில் அடங்கிய நாயல்ல அது. சாதாரண ஊர் நாய் வகைகளைப் போன்ற தோற்றம். வாலைக் குழைத்துக் கொண்டு நன்றியுடன் அந்தக் கறுப்பு மனிதனைத் தொடர்ந்து கொண்டிருந்தது அந்த வாயில்லா ஜீவன். நாயென்ன வாயில்லா ஜீவனா? அதெப்படி அதற்கு வாய்தானே இருக்கிறதென்று குதர்க்கமாகக் கேட்டு வைத்து விடாதீர்கள். 'வாய் வங்காளம் மட்டும் போகின்றதே'யென்று நான் உங்களிற்குப் பதிலிறுக்க வேண்டி வந்து விடும். ஏதோ ஒரு பாடலை அவனது வாய் முணுமுணுத்தபடியிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இதற்கிடையில் எதிர்த் திசையில் , 'பேப்' வீதியில் வடக்கு நோக்கி இன்னுமொரு மனிதன் வந்து கொண்டிருந்தான். நிறத்தில் இவன் முன்னவனிற்கு முற்றிலும் எதிரானவன். பார்ப்பதற்கு கிரேக்கனைப் போல் தென்பட்டான். இவனைப் போல் அவனுடன் கூடவே ஒரு நாய்.. அதுவும் அவனைப் போலவே ஒரு வெள்ளை நாய்.. இவனுடைய நாயைப் போலவே சாதாரண ஊர் நாயென்றினைப் போன்றதொரு தோற்றம். அவனது கவனம் எதிர்த்திசையில் சென்று கொண்டிந்த மதமதர்த்த மார்புகளுடன் சென்று கொண்டிருந்த பெண்ணொருத்தியின் மேல் திரும்பியிருந்தது. அதே சமயம் நடந்து கொண்டுமிருந்தான். எதிராகச் சென்று கொண்டிருந்த கறுப்பின மனிதனுடன் மோதி விடுவான் போல் பட்டது. கறுப்பு மனிதனும் எதிரே வருபவன் கவனம் திசைமாறி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் முணுமுணுத்தபடியிருந்த பாட்டிலேயே ஒன்றியிருந்ததாகப் பட்டது. அவனை எச்சரிக்கலாமாயென்று எண்ணி முடிப்பதற்குள்ளேயே மோதல் நிகழ்ந்து விட்டது. 'சே.. கொஞ்சம் முந்தியிருக்கலாமே' என்று பட்டது. மோதல் நிகழ்விற்கு இருவரிலும் தவறிருந்தது. ஆனால் அவர்கள் அதனையுணரவில்லையென்பதையே தொடர்ந்த சம்பவம் காட்டியது.

வெள்ளைக்காரன் என்ன கூறினான் என்பது தெரியவில்லை. ஆனால் அவனது வாய் அசைப்பிலிருந்தும், அவன் முகத்தில் வெடித்துக் கொண்டிருந்த ஒருவித அசூயை கலந்த சினத்திலிருந்தும் அவன் தன் தவறினை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று பட்டது. கறுப்பு மனிதனின் ஆத்திரமும் அதிகரித்து விட்டது. இவனிலும் தவறிருந்தது. மோதலைத் தவிர்ப்பதற்கு இவனுக்கும் ஒரு சந்தர்ப்பமிருந்தது. ஆனால் இவனும் அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பதிலிற்கு இவனும் பலமாகத் தலையினை அசைத்துக் கத்துவதைப் பார்க்க முடிந்தது. இவர்கள் இருவரிற்குமிடையில் ஏற்பட்ட மோதல் பாதசாரிகள் பலரது கவனத்தினை இழுத்து விட்டது. இவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். 'உப்புச் சப்பில்'லாததொன்றிற்காக இவர்கள் மோதுவதாக யன்னலிற்கப்பாலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னால் உணர முடிந்தது. ஒருவேளை யன்னலிற்கப்பால் இருந்திருந்தால் நானும் அவர்களைப் போல்தான் மோதியிருப்பேனோ? யன்னலிற்கிப்பாலிருப்பதால் தான் இவ்விதம் எண்ணுகின்றேனோ? இங்கிருந்து பார்க்கும் போது ஏன் தான் அங்கு இவ்விதம் அடிபட்டுச் சாகின்றார்களோ என்று படுவதில்லையா? மிகவும் இலகுவான தீர்விற்கான வழிகள் இருக்கும் போது அவர்கள் ஏன் தான் இவ்விதம் மோதுகின்றார்களோவென்று படுவதில்லையா? அதுபோல் தான் இதுவுமோ?

யன்னலிற்கிப்பாலிருந்து பார்க்கும் போது எல்லாமே தெரிகின்றது. யன்னலிற்கப்பால் ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? கறுப்பு மனிதனும் வெள்ளை மனிதனும் முறுகிக் கொண்டிருந்த நிலையில் பெரிதாக மாற்றமேதுமில்லை. அடிபடாத குறைதான். யாரோ ஒருவர் மோதலைத் தவிர்ப்பதற்கு முன்வந்து முயன்று கொண்டிருந்தார். எனக்குச் சற்றே சுவாரசியம் குறைந்தது. கவனம் நாய்களின் மேல் திரும்பியது. அந்தக் கறுப்பு நாயினதும் வெள்ளை நாயினதும் முகங்களில் தான் எவ்வளவு மகிழ்ச்சி ரேகைகள்! வாலை வாலை ஆட்டியபடி ஒன்றினை ஒன்று முகர்ந்தபடி எவ்வளவு சந்தோசம்! யன்னலிற்கப்பால் சந்தோசப்படுவதற்கும் உயிரினங்கள் இருப்பதை யன்னலிற்கிப்பாலிருந்து பார்க்கையில் ஆனந்தமாகத்தானிருக்கின்றது.

- நன்றி: உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 -
பதிவுகள், திண்ணை

23. சுண்டெலிகள்!
-வ.ந.கிரிதரன் -



"...இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்..."


கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணிற்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.

சுண்டெலிகளின்பால் என் கவனம் திரும்பியதற்கு என் தர்மபத்தினியின் ஓயாத கரைச்சலும் புறுபுறுப்பும் இன்னுமொரு காரணம். குழந்தை வேறு ஆங்காங்கே ஓடித்திரியும் பூச்சிகளையும் சுண்டெலிகளையும் வியப்புத் ததும்பப் பார்ப்பதைக் கண்டதும் என்னவளிற்கு நெஞ்சைக் கலக்கத் தொடங்கி விட்டது. 'இஞ்சாருங்கோ.. உந்த சுண்டெலிகளை அடிச்சுத் துரத்தாட்டி ஒரு நிமிஷங் கூட என்னாலை இங்கேயிருக்கேலாது.. தவளுற குழந்தை இருக்கிற வீட்டிலை..' கனடா வந்து ஆறு மாதங்களிலேயே பலரிற்குத் தமிழ் மறந்து போய்விடுகின்றது. என் மனைவியோ கனடா வந்து ஆறு வருடங்கள் ஓடியும் இன்னும் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில்தான் கதைத்து வருகின்றாள். தமிழ் மறந்தவர்களைப் பற்றிக் கூறினால் 'இதெல்லாம் சுத்தப் புலுடா;பம்மாத்து;சுத்துமாத்து' என்பாள். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். இவளூடைய நச்சரிப்பையும் பொச்சரிப்பையும் தாங்க மட்டும் என்னால் முடியாது. சுண்டெலிகளிற்கு ஒரு முடிவு கட்டாமல் இவளும் விடமாட்டாள். முடிவாகச் சுண்டெலிகளை ஒரு கை பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.

சுண்டெலிகளை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கு முதல் படி சுண்டெலிகளைப் பற்றி அறிவது. சுண்டெலிகளின் பழக்க வழக்கங்கள் , நடமாட்டம் பற்றிய தகவல்களைப் பற்றிப் போதுமான தகவல்களை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகப் பெற முடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு அவற்றை அடக்குவதும் இழகுவானதாக அமையக் கூடும். சுண்டெலிகளைப் பற்றி ஆரம்பத்தில் நாம் பெரிதாகக் கவனம் எடுக்கவில்லை. ஆனால் அரிசி, மாப் பைகளைப் பதம் பார்க்கத் தொடங்கிய போதுதான் விழித்துக் கொண்டோம். இப்படியே விட்டல் நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம். மனையின் நச்சரிப்பிலும் பொச்சரிப்பிலும் நியாயமிருப்பதை உணரக் கூடியதாகவிருந்தது.

ஓரிரவு என் சகதர்மிணியும் குழந்தையும் படுக்கையில் விழுந்த பிறகு சுண்டெலிகளைப் பற்றி உளவு பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.புதிதாக வாங்கிய எலிப் பொறிகளை வைப்பதற்குப் பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்வதற்கு இந்த உளவு நடவடிக்கை உதவக் கூடும். அரிசி, மாப்பைகளைக் கொண்டுவந்து சாப்பாட்டு மேசையில் வைத்து விட்டு வந்து 'சோபா'வில் சாய்ந்தபடி, தொலைக்காட்சிப் பெட்டியைத் தட்டி விட்டேன். சுண்டெலிகளின் வரவை எதிர் பார்த்தபடி, ஆவலும் காவலுமாகக் காத்திருந்தேன். இடையிடையே 'டேவிட் லெட்டர்மா'னின் அறுவைகளையும் ரசித்தபடியிருந்தேன். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. சுவர் மூலையில் மெல்லதொரு சத்தம். காதுகளையும் கண்களையும் கூர்மையாக்கிக் கொண்டேன். சாப்பாட்டு மேசைக்கருகாமையில் போடப்பட்டிருந்த சோபாவின் அருகாகச் சிறியதொரு 'குறுணி' என்போமே அப்படியொரு தலை மெல்ல எட்டிப்பார்த்தது. சிறிய கருமணிக் கண்கள். குட்டி சுளகுக் காதுகள். ஒருகணம் எந்த அசைவையும் காணோம். அந்த நேரம் பார்த்துத்தானஇந்தப் பொல்லாத தும்மல் வந்து தொலைக்க வேண்டும். அடக்க முயன்றும் என்னையும் மீறி வெடித்து விட்டது. சுண்டெலியின் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! கடுகிப் பறந்தது. மறைந்தது என்று வேண்டுமானால் கூறலாம்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பழையபடி அதே குட்டித்தலை. கருமணிக் கண்கள்.சுளகுக் காதுகள். இம்முறை வெகு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமையலறைப் பகுதியில் வழக்கமானவிடத்தில் அரிசி, மாப்பைகளைத் தேடிப்பார்த்து விட்டுத்தான் அவற்றின் மணம் பிடித்துச் சாப்பாட்டு மேசைப்பக்கம் வந்து விட்டது போலும். எனக்குள் வினோதமானதொரு ஆசை உருவானது. மேசைக்குக் கதிரைகள் மூலம் ஏறாத வண்ணம் கதிரைகளைச் சற்றுத் தள்ளி ஏற்கனவே இழுத்து வைத்து விட்டிருந்தேன். எப்படி அந்தச் சுண்டெலி மேசையில் ஏற முயல்கிறதோ? இயலுமானவரையில் என் அசைவுகளைக் குறைத்துக் கொண்டு அதன் அசைவுகளையே அவதானித்துக் கொண்டிருந்தேன். சிறு அசைவு கூட அதனை உசார் படுத்தி விடுவதை ஏற்கனவே அவதானித்து விட்டிருந்தேன். சிறிது நேரம் அங்குமிங்குமாக அலைந்துதிரிந்து விட்டு மோப்பம் பிடித்தபடி மேசைக்குக் கீழ் வந்து விட்டது அந்தச் சுண்டெலி. சிறிது நேரம் அமைதியாகச் செவிகளை உசார் நிலையில் வைத்தபடி நின்றிருந்தது. பின்னர் அண்ணாந்து ஒருமுறை பார்த்தது. உணவு இருக்குமிடத்தை ஊகித்து விட்டது போலும். அறையினுள் சிணுங்கிய குழந்தையைத் தட்டிச் சீராட்டியபடி என் இல்லத்தரசி மெல்லப் புரண்டு படுப்பதின் அசைவை என்னால் உணரக் கூடியதாகவிருந்தது.

இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்.

இந்தச்சுண்டெலி இப்பொழுது மேசையின் வழவழப்பான உருக்குக் காலொன்றில் ஏறுவதற்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தது. எப்படியும் மேசையின் மேலிருக்கின்ற உணவைஅடைந்துவிட வேண்டுமென்ற அவா பேரார்வம் அதனிடம் தொனிப்பது போல் தென்பட்டது. ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதுமாக அந்தச் சுண்டெலி முயன்று கொண்டிருந்தது. சிலவேளை அது தன் முயற்சியில் வெற்றியடையலாம். அடையாமற் போகலாம். அதற்காக அது தன் முயற்சியைக் கைவிடும் வகையைச் சேர்ந்தது போல் தென்படவில்லை. இறுதி வெற்றி கிடைக்கும்வரை அல்லது களைத்துச் சோரும்வரை அது தன் முயற்சியைத் தொடரத்தான் போகின்றது. இந்தச் சின்னஞ்சிறு உயிரிற்குள்தான் எத்தனை நூதனமான வைராக்கியம்! முயற்சி! சுண்டெலிகளிற்கு ஒருவழி காணவேண்டுமென்று என்மனைவி நச்சரித்தது இலேசாக நினைவிற்கு வருகின்றது. எடீ விசரி! நம்மைப்போல்தானே இந்தச் சுண்டெலிக்கும் ஒரு குடும்பம் குழந்தையென்று சொந்த பந்தங்கள். இதை நம்பி எத்தனை உயிர்களோ? 'இது ஒரு எப்பன் சாப்பாட்டைத் தின்னுறதாலை எங்களிற்கென்ன குறையவாப் போகுது..?' நித்திரை கண்களைச் சுழற்றுகின்றது. அந்தச் சுண்டெலிமட்டும் தன் முயற்சியைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. அரைத் தூக்கத்திலும் அதன் சிறு அசைவுகள் கேட்கத்தான் செய்கின்றன.

நன்றி: தாயகம், திண்ணை, பதிவுகள்.

24. இடையில் ஒரு குட்டிக் கதை! ஆனந்தவிகடன் பவளவிழாப் போட்டிக்குத் தெரிவான ரூபா 3000 பரிசு பெற்ற முத்திரைக் குட்டிக்கதை. 7!

'பல்லி'க்கூடம்!

- வ.ந. கிரிதரன் -


பல்லி'க்கூடம்!வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. யமுனாவுக்குத் தூக்கமே வரவில்லை. சற்றுத் தள்ளி கிழவி படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறாள். பேத்தியின் மனநிலை மட்டும் அவளுக்குத் தெரிந்திருக்குமானால், துடித்திருப்பாள்.

இந்தத் தள்ளாத வயதிலும் அவள் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்வதே பேத்திக்காகத்தானே! பஸ் விபத்தொன்றில் மகளையும் மருமகனையும் இழந்ததிலிருந்து இவ்வளவு காலமாக அந்தக் கிழவிதானே யமுனாவைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள்!

கிழவியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. தான் செய்வது சரியா என்று யமுனா தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

அவளது நெஞ்சில் இவ்வளவு போராட்டங்களுக்கும் காரணமாக இருப்பவன் மாதவன். படித்துவிட்டு வேலையற்று ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன்.. மணந்தால் மாதவன்தானென்று இவளும், இவள்தானென்று அவனும் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், வசதிமிக்க சண்முகத்தை மணந்தால் யமுனாவின் வாழ்க்கை சீராக இருக்குமென்று கணக்கிட்டு, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாள் கிழவி. இதற்கு முடிவு.. மாதவனும் யமுனாவும் ஊரைவிட்டே ஓடிப்போவதுதான்..

நள்ளிரவு மாதவன் வருவான்.. தன்மேல் உயிரையே வைத்திருக்கும் கிழவியிடம்கூடச் சொல்லாமல் மாதவனுடன் ஓடுவது யமுனாவுக்கு கஷ்டமாக இருந்தது. தவிர, மாதவனுக்கோ வேலை வெட்டியென்று எதுவுமே கிடையாது. இந்நிலையில் ஓடிப்போவது சரியான முடிவுதானா?

யமுனாவின் பார்வை, சுவரின்மேல் இரைக்காகக் காத்துக்கொண்டிருந்த பல்லியின்மேல் திரும்பியது.. இந்த நேரம் பார்த்து அங்கே இன்னொரு பல்லி பிரவேசித்தது. ஆண்பல்லியாக இருக்க வேண்டும். மெதுவே, பின்புறமாக வந்து இரைக்காகக் காத்திருந்த இந்தப் பெண்பல்லியைத் தழுவ அது முற்பட்டது.... சட்டென்று இந்தப் பெண் பல்லி அதனிடமிருந்து தப்பித்து நழுவி ஓடத் தொடங்கியது. சற்று நேரம் இப்படி ஆணை அலைக்கழிய வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்பல்லி, ஆண்பல்லியின் மேல் பரிதாபம் கொண்டதோ என்னவோ... இம்முறை ஓடாமல் ஆண் பல்லியை எதிர்பார்த்து அசையாமல் நின்றது. ஆணும் அதுவரை நிகழ்ந்த ஊடலையெல்லாம் மறந்து கூடலை நாடி பெண்பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து எங்கிருந்தோ பூச்சியன்று பெண்பல்லிக்கு முன்பாக வந்து அமர்ந்தது.

அதுவரை காதல் மயக்கத்தில் மூழ்கிக் கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த அந்தப் பெண் பல்லி தன் உணர்வுகளை எல்லாம் கணப்பொழுதில் மாற்றிக் கொண்டு தன் முன்னால் வந்தமர்ந்த பூச்சியின் மீது பாய்ந்தது, 'லபக்‘கென்று பிடித் துச் சுவைக்கத் தொடங்கியது. ஆண்பல்லி ஏமாற்றத்துடன் நின்றது. பசி உணர்வு அவ்வளவு வலிமையானதா? காதலை விட, காமத்தைவிட பசி அத்தனை வலிமையானதா..?

அவள் மாதவனுடன் ஓடிப் போவதால் தற்காலிகத்தீர்வு கிடைக்கலாம். ஆனால்.. எத்தனை நாளைக்குத்தான் அவளை வைத்து அவனால் பராமரிக்க முடியும்? அவனுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை எப்படியாவது அவள் காத் திருக்க வேண்டும். கிழவியிடமும் அழுது கதறி அவள் சம்மதத்தை வாங்கிவிடலாம். அதுவரை, என்ன ஆனாலும் சரி... ஓடிப்போக மட்டும் கூடாது...

யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக விட்டத்தைப் பார்த்தாள். பல்லிகளைக் காணோம்!

நன்றி: ஆனந்தவிகடன் 27-05-2001.

25.கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள்
வ.ந.கிரிதரன்


நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தான் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?

நண்பன் இன்னுமொரு பிரமச்சாரி. வழக்கமாக ஒவ்வொரு முறை அவனது இருப்பிடம் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு மாற்றத்தை அவனது உறைவிடத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இம்முறையும் அவ்வகையிலொரு மாற்றம். நண்பன் ஒரு கூட்டினுள் இரு முயல்கள் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.

"என்னவிது புதுப் பழக்கம். எத்தனை நாட்களாக இது.."வென்றேன்.

"இரண்டு மாதங்களாகத் தான்" என்றான்.

"இவற்றை எங்கு போய் பிடித்தாய்?"

"நான் வேலை செய்கிற 'ரெஸ்ட்டோரண்ட்' மானேஜரின் முயல்களிவை?"

"உனக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டானா?"

"அப்படியொன்றுமில்லை. அவனிற்கு இவை அலுத்துப் போய் விட்டன. கறியாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். நான் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.. விலை கொடுத்துத் தான்.."

"நல்லதொரு ஜ"வகாருண்யவாதி"

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பார்க்கப் பாவமாகவிருந்தது. அவ்வளவுதான். வீணான அர்த்தங்களைப் போய்த் தேடாதே"

அப்பொழுதுதான் ஒன்றினை அவதானித்தேன். அந்தச் சிறு முயற் கூட்டினுள் இடையில் ஒரு கார்ட்போர்ட் மட்டையினால் தடுப்புப் போட்டு அம்முயல்களிரண்டினையும் அவன் பிரித்து வைத்திருந்தான். அதிசயமாகவிருந்தது.

"எதற்காக இப்படிச் செய்திருக்கிறாய்? முயல்கள் பாவமில்லையா?" என்றேன்.

"பாவம் தான். ஆனால் அவை செய்கிற அநியாயத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அதனால் தான் அப்படிச் செய்து விட்டேன்."

'என்ன பெரிய அநியாயத்தை அவை செய்திருக்க முடியும்?'

"நீ சொல்வது புரியவில்லையே?" யென்றேன்.

"புரியாமலிருப்பதே நல்லது" என்றான்.

"பார்க்கப் பாவமாயிருக்குதடா" வென்றேன்.

"அப்படித் தானிருக்கும். அந்தத் தடுப்பினை எடுத்து விடுகிறேன் என்று வையேன். மறு நிமிடமே அவை ஒன்றையொன்று தழுவிக் கும்மாளமடிக்கத் தொடங்கி விடும்." என்றான்.

அவை கும்மாளமடித்தால் இவனிற்கென்ன? நண்பனிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை முயல்களின் காமக் களியாட்டங்கள் இவனிற்கு வெறுப்பினைத் தருகின்றதோ?

"அவை கும்மாளமடித்தால் நல்லது தானே?"யென்றேன்.

"உனக்கு விசயம் தெரிந்தால் நீயும் நான் செய்வது தான் சரியென்று கூறுவாய்"

"அப்படியென்ன விசயம். சொல்லித் தொலையடா."

"டேய் மச்சான். இவையிரண்டும் ஆண் முயல்களடா"

இப்பொழுது விசயம் முழுவதும் விளங்கியது. நண்பன் ஆண் முயல்களிரண்டினையும் கூட்டினுள் போட்டு அடைத்து வைத்திருக்கின்றான். அவையோ இயற்கையின் தேவையினை இருப்பதைக் கொண்டு பூர்த்தி செய்ய முயற்சி செய்திருக்கின்றன. நண்பன் பிரித்து வைத்து விட்டான். எப்பொழுதோ வாசித்திருந்த 'டெஸ்ட்மண்ட் மொரிஸ்'இன் நூலொன்றில் நகரத்து மனிதரைப் பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. கூட்டில் அடைத்து வைக்கப் பட்ட மிருகங்கள் எவ்விதம் இயற்கைக்கு மாறாகத் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனவோ அவ்விதமே காங்கிரீட் கூடுகளிற்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள நகரத்து மனிதரும் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர் என்று வாசித்ததாக ஞாபகம். கூட்டினுள் இருந்த முயல்களைப் பார்த்தேன். பரிதாபத்திற்குரிய ஜ"வன்கள். அவையிரண்டும் ஒன்றையொன்று பார்ப்பதும் தடுப்பினைச் சுரண்டுவதுமாகவிருந்தன.

"நீ வேண்டுமானால் ஒன்று செய்திருக்கலாம்"

"என்ன?" நண்பன் என்னை நோக்கினான்.

"பேசாமல் உன்னுடைய 'ரெஸ்ட்டோரண்ட்' மானேஜரையே இவற்றைக் கறியாக்க விட்டிருக்கலாம். இல்லையென்றால் 'ஹியூமேன் சொசைட்டி'யிடம் கொண்டு போய் விட்டிருக்கலாம். பார்க்கச் சகிக்கவில்லை"யென்றேன்.

"நீ சொல்வதும் ஒரு விதத்தில், சரிதான். ஆனால் அவற்றின் மீதான பாசம் என்னைக் கட்டிப் போட்டு விட்டன."

"உன்னுடைய பாசத்திற்காக அவற்றை வருத்துவதிலென்ன நியாயம்?"

நண்பன் மெளனமாகவிருந்தான்.

"குறைந்தது நாள் முழுக்க அசையக் கூட முடியாதவாறுள்ள இடத்தில் இவற்றை இப்படியே வைத்திருக்காமல் பேசாமல் திறந்து விட்டு விடு. அப்பாற்மெண்ட்டிற்குள்ளாவது அவை ஓடித் திரியலாமல்லவா?"

"நீ சொல்லுவதும் சரிதான்" என்றான்.

நீண்ட நேரமாக நண்பனுடன் உரையாடி, நண்பன் தயாரித்துத் தந்த உணவினையும் உண்டு விட்டு எனது இருப்பிடம் திரும்பிய போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. "இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். கொஞ்சமாவது குடும்பம் பிள்ளைகளென்று கவனமேதாவதுண்டா? பொறுப்பென்பது உங்களிற்குக் கொஞ்சம் கூட இல்லை" இவ்விதம் எனது சகதர்மிணியிடம் திட்டு வாங்கிக் கொண்டு படுக்கையில் சாய்ந்த போது தொலைபேசி அலறியது.

'இந்த நேரத்தில் யாராகவிருக்கும்'

அழைத்தது நண்பன் தான்.

"என்னடா மச்சான். இந்த நேரத்திலை"

"நீ சொன்னமாதிரியே கூட்டைத் திறந்து விட்டேன்."

"நல்ல விசயமொன்று செய்திருக்கிறாய்"

"ஆனால்...முயல்களிரண்டும் பல்கணியிலிருந்து பாய்ந்து விட்டன மச்சான்."

நண்பனின் குரலில் ஒருவித விம்மலுடன் கூடிய கவலை தொனித்தது.

நன்றி: திண்ணை, பதிவுகள்.


26. சிறுகதை: ஆசிரியரும் மாணவனும்!
வ.ந.கிரிதரன்



யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.

ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு...பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. 'திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்' போடுமந்த மழையிருக்கிறதே...'வெட்டியிடிக்கும் மின்னலும்' 'கொட்டியிடிக்கும் மேகமும்' 'விண்ணைக் குடையும் காற்றும்'...வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நாலு

சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. 'திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்' வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.

மகன் ஊரில் ஒரு பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். இங்கோ ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். இங்கு வரும் குடிவரவாளர்கள் பலரும் இப்படித்தான் தமது படிப்பிற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு காலத்தினை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த புத்தியீவிகள் பலர் டாக்ஸி ஓட்டுவதோ, 'பிட்சா' 'டெலிவரி' செய்வதோ அல்லது உணவகங்களில் கோப்பை கழுவதோ அப்படியொன்றும் புதிதானதொன்றல்ல. இவ்விதம் அந்தந்த நாடுகளிற்கு உரமாக விளங்க வேண்டிய அந்நாடுகளின் மூளை வளங்களெல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன.அந்த நாள் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. எவ்வளவு தூரம் சிரமப் பட்டு மகன் படித்துப் பட்டம் வாங்கியிருந்தான்.பல்கலைக் கழகப் புகு முக வகுப்பில் மகன் அதி விசேட சித்திகள் பெற்ற போது ஊரே எவ்விதம் பெருமைப் பட்டுக் கொண்டது. இப்பொழுது நினைக்கும் பொழுது கூடப் பெருமிதமாகவிருந்தது. மனைவி பார்வதி எவ்வளவு தூரம் சந்தோசப் பட்டாள். மனைவியை நினைத்ததும் மாஸ்ட்டரின் கண்கள் இலேசாகப் பனிக்கத் தான் செய்கின்றன.'மகராசி இருந்து இதையெல்லாம் பார்க்காமல் நேரத்தோடு போய்ச் சேர்ந்திட்டா'. ஊரில் மட்டும் பிரச்னையேதுமில்லையென்றால் எவ்வளவு நல்லாயிருக்கும்....ஆனந்தமாக வயலை, வெளியை, விண்ணைக், காற்றை இரசித்தபடி ...'ம்..அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..'

மகனும் மருமகளும் நேரத்துடனேயே வேலைக்குப் போய் விட்டார்கள். மகன் பகல் வேலை முடிந்து அப்படியே இன்னுமோரிடத்தில் பகுதி நேரமாகச் செய்யும் 'பாதுகாவலன்' வேலை செய்து முடிந்து வீடு வர இரவு பத்தாகி விடும். மருமகளும் அப்படித்தான். பகலில் ஒரு வங்கியொன்றில் 'டேட்டா என்றி ஒபரேட்ட'ராகக் கடமையாற்றுகின்றாள். மாலை நேரங்களில் புத்தகக் கடையொன்றில் பகுதி நேரக் காசாளராகக் கடமையாற்றுகின்றாள். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் சமையலெல்லாம். ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு வகைகளைத் தயார் செய்து 'ப்ரிட்ஜ்'ஜில் வைத்து விடுவார்கள். தேவையான போது எடுத்தி 'மைக்ரோவேவ்'இல் சூடு காட்டிச் சாப்பிட வேண்டியதுதான். அவ்வப்போது வேலை முடிந்து வரும் போது தமிழ் உணவகங்களிலிருந்து இடியப்பம் வாங்கி வருவார்கள். அவரிற்கு வந்த புதிதில் ஏன் இவர்கள் இப்படி உடம்பை வருத்தி உழைக்கிறார்கலென்பது விளங்கவில்லை. பிறகு தான் விளங்கியது. வீடு அவர்களிற்குத் தான் சொந்தம். ஆனால் அதற்கு 'மோட்கேஜ்' மாதாமாதம் கட்ட வேண்டும். அது தவிர வீட்டு வரி, 'யுடிலிட்டி' பில் அது இதென்று பல வகையான செலவுகள். ஈடு கட்டத்தான் இவ்வளவு உழைப்பும் களைப்பும். தேவைதானாவென்று பட்டது....வீடு வாங்குவதென்பது இங்கு பலரிற்குத் தன்மானப் பிரச்னையாகி விட்டது. தங்களால் மாதாமாதம் 'மோட்கேஜ்; ஒழுங்காகக் கட்ட முடியுமாவென்றெல்லாம் பார்ப்பதில்லை. போட்டி போட்டு வீடு வாங்குவதும், வாங்கிய வீட்டிற்கு 'மோட்கேஜ்' கட்டுவதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒடாகிப் போவதுமே வாழ்க்கையாகிப் போயிற்றோ என்று பட்டது.

சுப்ரமணியம் மாஸ்ட்டர் டொராண்டோ வந்து ஒரு வருடமாகி விட்டது. இங்கு நேரம் விரைவாகச் செல்வதாகப் பட்டது.அவர்களிருந்த பகுதியில் அதிகமாகச் சீனர்களே இருந்தார்கள். சீனர்களைப் பொறுத்த வரையில் முதியவர்கள் கூட வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழிப்பதாகப் பட்டது. அதிகாலைகளில் அருகிலிருந்த பூங்காவில் பல சீன முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக தேகப்பயிற்சி செய்து கொண்டிருப்பதை இவர் அவதானித்திருக்கின்றார்.பார்ப்பதற்கு 'பாலே' நடனமாடுவதைப் போன்றிருக்கும். அடுத்த வீட்டுக்கார முதியவரான டோனி பொங் சில வேளைகளில் இவருடன் கதைப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் இவரையும் அதிகாலையில் தேகப் பயிற்சி செய்ய அழைத்திருக்கின்றார். இவரிற்கு வெட்கமாகவிருக்கும். மறுத்து விடுவார். அதே சமயம் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் கஷ்ட்டமாகவிருந்தது.'போர'டித்தது. ஏதாவது பிரயோசனமாகச் செய்தாலென்னவென்றும் பட்டது.அண்மைக் காலமாகவே அவரிற்கு இந்த யோசனை பலமாகவே ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஏதாவது தொழிற்சாலையொன்றில் வேலை தேடிப் பார்த்தாலென்னவென்று பட்டது. மகனிற்குத் தெரிந்தால் விட மாட்டான். துடித்துப் போய் விடுவான். வேலை செய்தால் அவரும் தன்னால் முடிந்த உதவி செய்யலாமேயென்றும் தோன்றியது. மகனும் மருமகளும் சுமக்கும் பாரத்தில் சிறிதளவாவது அவரும் சுமக்கலாமே.

இன்று எப்படியும் வேலை தேடிப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தவராகப் படுக்கையை விட்டெழுந்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். காலைக் கடன்களை முடித்து புறப்பட்ட பொழுது மணி பத்தை நெருங்கி விட்டது. அவர்களிருந்த பகுதிக்கண்மையிலேயே தொழிற்சாலைகளடங்கிய பகுதியொன்றிருந்தது. அப்பகுதியில் பல தொழிற்சாலைகளிருந்தன. ஒவ்வொரு தொழிற்சாலையாகச் சென்று விண்ணப்பித்துப் பார்க்க முடிவு செய்தார். என்ன வேலையென்றாலும் செய்து பார்ப்பதாக முடிவு செய்தார். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்களைப் பிரயோசனமாகவும் அதே சமயம் நான்கு சுவர்களிற்குள் வளைய வரும் தனிமையிலிருந்து விடுதலை பெற்றதாகவும் கழிக்க முடியும். நினைவே அவரிற்கு ஒரு வித மகிழ்ச்சியினையும் தென்பினையுமூட்டின.வேலையொன்று எடுத்த பின் தான் மகனிடம் கூற வேண்டும். ஆரம்பத்தில் அவன் எதிர்க்கத்தான் செய்வான். ஆனால் அதன் பின் அவனை எப்படியும் சம்மதிக்க வைக்கலாமென்றும் பட்டது.

நகர் காலைக்குரிய பரபரப்பில் மூழ்கி விட்டிருந்தது. பல வேறு பட்ட மனிதர்கள்..பல்வேறு பட்ட பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது டொராண்டோ நகரம். ஒரு சில மொழிகளேயுள்ள நாடுகளே பல்வேறு பட்ட பிரிவுகளால் இரத்தக் களரிகளாகக் காட்சியளிக்கும் போது இது எவ்விதம் சாத்தியமாயிற்று? வியப்பாகவிருந்தது. இங்கும் பல்வேறு பட்ட பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அதற்காக ஆளையாள் வெட்டிச் சாய்த்து இரத்த ஆறுகள் ஓடவில்லையே? நிறவெறி இன்னும் அடியோடு அழிந்து விடவில்லை தான். ஆனால் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய வசதியிருக்கிறதே....இவர்களது சமுதாயம் சிறிது முன்னேறி விட்டது போல் பட்டது. ஆனால் பொதுவாக இந்த மேற்கு நாட்டுச் சமுதாயங்கள் தத்தமது நலன்களிற்காக எதுவும் செய்யத் தயங்காதவர்களென்பதும் உண்மைதான்...

நடந்து கொண்டிருந்தவர் தொழிற்சாலைகள் அடங்கிய பகுதிக்கு வந்து வந்து விட்டிருந்ததை உணர்ந்தார். முதலாவது தொழிற்சாலைக்குச் சென்று விண்ணப்பிக்கலாமாவென்று நினைத்தார். அவரிற்குச் சிறிது தயக்கமாகவும் வெட்கமாகவுமிருந்தது. அவ்விதமே சில தொழிற்சாலைகளைத் தாண்டி நடந்தார்.இவ்விதமாக மனது போராடிக்கொண்டிருந்தது. வேலை செய்யவும் விருப்பமாகவிருந்தது. என்ன வேலையென்றாலும் செய்யத் தயாராகவுமிருந்தார்.அதே சமயம் அவ்விதம் சிறிய வேலைகளிற்கு விண்ணப்பிக்க மனது கூசவும் செய்தது. ஆசிரியராகவிருந்து பல பொறியியலாளர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய சுப்ரமணிய மாஸ்ட்டரல்லவா! வயது போன் நேரத்தில் சந்தோஷமாகப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய சமயத்தில் இவ்விதம் அன்னிய நாடொன்றில் தொழிற்சாலை தொழிற்சாலையாக வேலை தேடிச் செல்ல வேண்டுமேயென்று மனம் கூசுகின்றதோ? சிறு வயதில் படித்த கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. 'சாகப் போனவன் வழியிலெதிர்பட்ட பாம்பைக் கண்டு பயந்த கதை மாதிரியல்லவாயிருக்கிறது' என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது. எந்த வேலையும் செய்யத் துணிந்து புறப்பட்ட பிறகு இப்படித் தயங்கலாமா? வெட்கப் படலாமா?

"யாரது... மாஸ்ட்டரா..."

குரல் கேட்கவே எதிரே நோக்குகின்றார். தமிழ்க் குரல்...யாராகவிருக்கும்? ஆச்சர்யமாகவிருக்கின்றது..

"யாரது..." கண்களைச் சுருக்கியவராக எதிரே பார்க்கின்றார் சுப்ரமணிய மாஸ்ட்டர். வர வர இப்பொழுதெல்லாம் கண் வேறு அவ்வளவாகத் தெரிவதில்லை. டாக்டரிடம் காட்டத்தான் வேண்டும்...

"நான் தான் மாஸ்ட்டர்...ரகுநாதன்....ஞாபகமிருக்குதோ.."

"ரகுநாதன்....ம்.." சிந்தனையில் மூழ்கினார்.

"கார்க்காரச் சண்முகத்தின்ற மகன் ரகுநாதன்..."

"ஓ சண்முகத்தின்ற மோனே"

இப்பொழுது அவரிற்கு நினைவிற்கு வருகின்றது. கார்க்காரச் சண்முகத்தின் மகன் ரகுநாதன். இவரது அபிமானத்திற்குரிய மாணவன். சண்முகம் குடியும் அடியுமென்று காலத்தைக் ஓட்டிக் கொண்டிருந்தான். குடும்பச் சூழல் காரணமாக அவனது மகன் ரகுநாதனால் மேலே படிக்க முடியாமலிருந்தது. படிப்பை நிறுதத இருந்தவனை மாஸ்ட்டர்தான் தன் செலவிலேயே படிக்க வைத்தார். நல்லதொரு திறமைசாலியின் திறமை வீணாகக் கூடாதென்று விரும்பினார். ரகுநாதன் படிப்பில் எப்பொழுதுமே முதல் தான். அதன் பின் அவன் பல்கலைக் கழகம் சென்று பொறியியலாளனாகத் திரும்பி திரும்பியபோது அவர் எவ்வளவு தூரம் பெருமைப் பட்டார். அந்த ரகுநாதனா இவன்?

நாடிருந்த நிலையில் நீண்ட காலம் அவனுடன் தொடர்பேதுமிருக்கவில்லை. கடைசியாக அவன் மகாவலித் திட்டத்தில் பொறியியலாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் ஊரிற்கு வரும் சமயங்களிலெல்லாம் மாஸ்ட்டரிற்கேதாவது வாங்கி வருவான். இப்பொழுது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாகவிருக்கிறது.. 'அது சரி இவன் எப்பொழுது கனடா வந்தான்?'

"மாஸ்ட்டர் எப்ப நீங்கள் கனடா வந்தனீங்கள்? "

"நான் வந்து ஒரு வருஷமாச்சு. நீயெப்ப வந்தனீ ரகுநாதா"

"மாஸ்ட்டர் நான் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருசமாவதிருக்கும்..என்ன இந்தப் பக்கம்...மாஸ்ட்டர்.."

மாஸ்ட்டரிற்குத் திகைப்பாகவிருந்தது. இவனிடம் போய் எப்படிச் சொல்வது? மாஸ்டர் மாஸ்டரென்று வாய்க்கு வாய் அழைத்து எவ்விதம் இவன் பெருமைப் படுகின்றான். மேலே படிக்க முடியாமல் அவனிருந்த பொழுது எவ்வளவு தூரம் புத்திமதிகள் கூறி அவனை உற்சாகப் படுத்திருத்தியிருப்பார்? எத்தனையோ வெற்றிகரமான மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார் அவர். எத்தனையோ மாணவர்களின் இலட்சிய ஆசிரியர் அவர்.அவனிடம் போய்த் தான் தொழிற்சாலை வேலை தேடுவதை எவ்விதம் கூறுவது? அவனது மனம் வருந்தி விடாதா?

"அதோ பார்.. அந்தப் பக்கத்திலை தான் மகனின்ற வீடிருக்கு.. மகனோடைதான் இருக்கிறன்.. . எந்த நேரமும் வீட்டிலை அடைந்து கிடந்தாலும் அலுத்து விடும்...அதுதான் சும்மா காலாற நடக்கலாமேயென்றுதான். நடந்தாலென்றாலாவது உடம்பிற்கு நல்லதாகயிருக்கும் தானே."

"அதுவும் சரிதான் மாஸ்ட்டர்.. நீங்கள் இப்பவும் அப்ப மாதிரியே 'பாசிட்டிவ்'வாகத் தான் இருக்கிறீங்கள். மாஸ்ட்டர் நீங்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு எங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும். நான் ஸ்காபரோவிலையிருக்கிறன்..."

"கட்டாயம் வருவேன். போன் நம்பர் தாறன். ஒரு நாளைக்கு 'கோல்' பண்ணேன். அது சரி நீயென்ன இந்தப் பக்கம்.."

"மாஸ்ட்டர். என்னுடைய நண்பனொருவன் அண்மையில் தானிருக்கிறான். அவனைச் சந்திப்பதற்காகத் தான் வந்தனான். வந்த வழியிலை கடவுள் அருளாலை உங்களையும் சந்திக்க முடிந்தது.. கன நாளைக்குப் பிறகு சந்தித்திருக்கிறம்... வாங்கோவென் மாஸ்ட்டர் 'கோப்பி' குடித்துக் கொண்டே கதைப்போம்..."

அருகிலிருந்த 'டிம் கோர்ட்டன் டோனட்' கடைக்குச் சென்றார்கள். ஊரில் மூலைக்கு மூலை தேநீர்க் கடைகளிருப்பது போல் இங்கு இந்த 'டோனட்' கடைகள். அங்கு தேநீர் அருந்தியபடியே வடை சாப்பிடுவது போல் இங்கு தேநீர் அல்லது கோப்பி அருந்தியபடியே 'டோண்ட்' கடிக்கலாம். மாஸ்ட்டரிற்கு நீண்ட நாட்களின் பின்னால் சந்தோஷமாகவிருந்தது. அவரால் உருவாக்கப் பட்ட பல மாணவர்களில் முதன்மையானவன் இந்த ரகுநாதன். இவனது வளர்ச்சியில் அவர் பெரிதும் பங்கெடுத்திருந்தார். அவன் பொறியியலாளனாக வெளி வந்த போது ஊரே திரண்டு அவனை வரவேற்றதோடு அதற்குக் காரணமான அவரையும் கெளரவித்தது. இப்பொழுது நினைக்கும் போது கூட எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.

வேலை தேடும் படலத்தை அத்துடன் நிறுத்தி விட்டு 'இன்னொரு நாள் பார்க்கலாமே'யென்று வீடு திரும்பினார். மாஸ்ட்டரின் மனது மகிழ்ச்சியில் மிதந்தது. ரகுநாதனையெண்ணப் பெருமையாகவிருந்தது. அதே சமயம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரகுநாதனோ வேறு வகையான எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தான். அப்பகுதியிலிருந்த தொழிற்சாலையொன்றில் தான் அவன் தொழிற்சாலையைக் கூட்டிக் கழுவும் ஒரு தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். அவன் பொறியியலாளனாக வருவதற்காக எவ்வளவு உதவிகளை மாஸ்ட்டர் செய்திருப்பார்? அவன் படிக்க முடியாது பாதியிலேயே படிப்பை நிறுத்த எண்ணியிருந்த சமயத்தில் அவர் எவ்வளவு தூரம் அவனிற்குக் கல்வியின் பயன்களைக் கூறி ஊக்குவித்திருப்பார். பொறியியலாளனாக அவனைப் பார்த்து ஆனந்தப் பட்ட மாஸ்ட்டர் இவ்விதம் இவன் வேலை பார்ப்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்? யுத்தம் எவ்வளவு கொடியதாக இருந்து விடுகிறது. மனித உறவுகளை எவ்விதம் சின்னபின்னப் படுத்தி விட்டது. இவ்விதமாக எண்ண அலைகளில் மூழ்கியவனாக ரகுநாதன் சென்று கொண்டிருந்தான். அதே சமயம் நீண்ட நாட்களின் பின்னால் சந்தித்திருந்த ஆசிரியருடனான சந்திப்பும் அந்த மாணவனின் நெஞ்சில் இன்ப அலைகளை எழுப்பாமலுமில்லை.

நன்றி: பதிவுகள், திண்ணை.


27. உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'

- வ.ந.கிரிதரன் -


அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.

அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பாணத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.

இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....

'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"

எதிரே கனேடிய பூர்வீக இந்தியணைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.

"தாராளமாக நண்பனே!" என்றேன்.

வெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.

"நன்றி நண்பனே!" என்று அருகில் அமர்ந்தான்.

"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Brokenleg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.

"என் பெயர் ஆனந்தன். எனக்கும் உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான் நண்பனே!" என்று அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினேன்.

ஜோ உடைந்த கால் உண்மையிலேயே வித்தியாசமானவன் தான். அவனுடன் கதைத்த பொழுதுதான் தெரிந்தது அவன் உடைந்த கால் மட்டுமல்ல உடைந்த மனிதன் என்பதும். எல்லாவற்றையும் தன்னுள் போட்டு மூடி வைத்திருக்கின்றானென்பதும்.

"என்னைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?" என்றான்.

"நீ மிகவும் நல்லவனைப் போல் தென்படுகின்றாய்" என்றேன்.

அதற்கவன் இதழ்களில் புன்னகை கோடு கிழித்தது.

"உண்மைதான். எல்லோரும் அவ்விதம் தான் கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்து விட்டது. லிசா விண்டகர் கூட அவ்விதம் தான் கூறினாள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்தே போய் விட்டது. கெட்டவனாக மாறலாமா என்று கூட யோசிக்கின்றேன்."

எனக்கு அவன் கூறியது வித்தியாசமாகவிருந்தது. இதற்கிடையில் வெயிட்டர் 'சிக்கன் விங்ஸ்'சையும் 'பட்வைசர்'உம் கொண்டு வந்து வைத்தகன்றான். சிக்கனைச் சுவைத்தபடி பியரை அருந்தியபடி உரையாடலைத் தொடர்ந்தோம்.

"நீ ஒரு புதிர் போல் படுகின்றாய். யாரது லிசா விண்டகர். அவள் பெயரைக் கூறும் பொழுதே கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகின்றாயே? உன் காதலியா?" என்றேன். அவளது பெயரைக் கேட்டதுமே அவன் முகத்தில் மகிழ்சி படர்ந்தது.

"நண்பனே. நீ கூறுவது சரிதான். அவள் என் காதலிதான். அவள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று தானிருந்தேன். ஆனால்..."

"ஆனால்..என்ன நண்பனே!:"

அவன் தொடர்ந்தான். "அவள் இப்பொழுது இந்த உலகிலேயே இல்லை. ஆனால் நான் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்"

அவன் குரலில் கவலையின் தொனி.

"என்னை மன்னித்துக் கொள். தேவையில்லாமல் உன் மனதை வருத்தி விட்டேனோ"

"பரவாயில்லை. அவளைப் பற்றிப் பேசாமல் யாரைப் பற்றிப் பேசப் போகின்றேன். இந்த உலைல் இருக்கும் வரையில் அவளைப் பற்றி நினைத்து, பேசியே என் வாழ்வு போகட்டும். அதனைத் தான் நானும் விரும்புகின்றேன். பாவம். பரிதாபத்திற்குரிய பெண். கடவுள் அவளை நன்கு வருத்தி விட்டார். அவள் ஆன்மா சாந்தியடையட்டும்"

அவனே தொடர்ந்தான். "நண்பனே. அவளுக்காக நான் எதனையுமே கொடுப்பேன். உனக்குத் தெரியாது அவளுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவின் ஆழம்"

"உன்னைப் பார்த்தாலே தெரிகிறதே" என்றேன்.

"ஐந்து வயதிலிருந்து நாங்கள் இருவரும் இணை பிரியாத பறவைகள் போல் தான் வாழ்ந்து வந்தோம். அந்தச் சிறுவயதில் அவள் அடைந்த துன்பத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் குலை நடுங்குகின்றது."

எனக்கு அவனது உரையாடலில் சுவாரசியம் ஏற்பட்டது.

"அவளை அவளது வளர்ப்புத் தந்தை படாதபாடு படுத்தி விட்டான். அந்தச் சிறுவயதில் அவளது பன்னிரண்டாம் வயது வரையில் அவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான். அவள் வயதின் அறியாமையாலும் பயத்தினாலும் அதனை வெளியில் கூறாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்தாள். எனக்கே அவள் பன்னிரண்டு வயதான போது தான் கூறினாள். கடவுள் அந்தச் சிறுவயதிலேயே என் லிசாவை மிகவும் கொடுமைப் படுத்தி விட்டார்."

அவனது குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்தது.

"அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அவள் அதனை எனக்குக் கூறிய பொழுது என்னால் தாளவே முடியவில்லை. அவளை எவ்விதமாவது அந்தக் கொடியவனிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஓரிரவு அவன் குடி மயக்கத்தில் படுக்கையில் புரண்டு கிடந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டேன். இளம் குற்றவாளியென்னும் அடிப்படையிலும் , லிசாவிற்கேற்பட்ட நிலைமையின் அடிப்படையிலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. லிசா எனக்காகவே காத்திருந்தாள். ஆனால் இன்று அவளில்லை."

அவனது கதை எனக்குப் பெரிதும் ஆச்சர்யத்தையும், வியப்பினையும், மதிப்பினையும் கூடவே அநுதாபத்தினையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடந்ததை அறியும் ஆவலில் "அவளுக்கு என்ன நடந்தது?" என்றேன்.

"அதன் பிறகு சுமார் பதினைந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம். கடந்த வருடம் தான் அவளைப் புற்று நோயில்,இழந்தேன். லிசா நன்கு புகை பிடிப்பாள். ஆரம்பத்த்லேயே அவளைப் பலமுறை தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இறுதியில் அதுவே அவள் உயிரைக் குடித்து விட்டது. இறுதி வரை அவள் நினைவுடனேயே வாழ்ந்து விட வேண்டும். அது தான் என் எண்ணம். நண்பனே! தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா? இப்பொழுது சொல். நான் நல்லவனா?" என்றான்.

"அதிலென்ன சந்தேகம். நீ நல்லவன் தான். நிரம்பவும் நல்லவன் தான். உன் காதலிக்காக காதலுக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கின்றாய். உன்னை நினைக்க எவ்வளவு பெருமையாகவிருக்கிறது"

அன்று நேரங்கழித்து வீடு திரும்பியபொழுது நல்லதொரு நண்பனை அடைந்த திருப்தி. அதே சமயம் ஜோ உடைந்த காலை நினைக்க நினைக்க அவன் மேல் என் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்டிருந்த தன் லிசாவைக் காப்பதற்காகச் சிறை சென்று, மீண்டு, அவளுடன் வாழ்ந்து இன்று அவள் நினைவுகளே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் முன்னால் நான் எம்மாத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப் பட்ட என் வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றேன்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

ngiri2704@rogers.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner