| அ.ந.க
நினைவு தினக்கட்டுரை 2!
எழுத்துக்காக வாழ்ந்த
அ.ந.கந்தசாமி!
- வ.ந.கிரிதரன்
-
நண்பர்
மயூரன் பேரின்பநாதன் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திலிருந்து அ.ந.க.வின் 'நானா' நாவலின்
பிரதிகளை எடுத்து அனுப்பியிருந்தார். அத்துடன் சுதந்திரனில் வெளிவந்த அ.ந.க.வின் 'பண்டிதர்
திருமலைராயர்' என்னும் பெயரில் வெளிவந்த சிலப்பதிகாரம் சம்பந்தமான கட்டுரைகள் சில, சுதந்திரனின்
'புதுமை
இலக்கியப் பூங்கா' பகுதியில் 'கவீந்திரன்' என்னும் பெயரில் அ.ந.க. எழுதிய இலக்கியக்
கட்டுரைகள் சில, 'கலையரசன்' என்னும் பெயரில் 'நானா' பற்றிய அ.ந.க.வின் கட்டுரை,
சுதந்திரனில் வெளிவந்த 'ஐந்தாவது சந்திப்பு' சிறுகதை, 'நகரம்',
'கைதி',
மற்றும் 'துறவியும் குஷ்ட்டரோகியும்' ஆகிய கவிதைகள், எஸ்.பொ.வின் 'தீ' நாவல் பற்றிய
அ.ந.கந்தசாமியின் நூல் மதிப்புரை, அ.ந.க. மறைந்து ஒரு மாதம் கழித்து தினகரனில் காவலூர்
ராசதுரை எழுதிய 'எழுத்துக்காக வாழ்ந்த கந்தசாமி' கட்டுரை, அதே தினகரனில் வெளிவந்த
கவிஞர் முருகையனின் 'கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)'
என்னும் கவிதை,
1968இல் தினபதியில் அ.ந.க. நினைவு தினக் கட்டுரையாக வெளிவந்த அவரது கவிதை பற்றிய கட்டுரையொன்று
என அ.ந.க.வின் ப்டைப்புகள் சிலவற்றைத் தேடியெடுத்து அனுப்பியுள்ளார். அத்துடன் திருமதி கமலினி
செல்வராசனுடன் தொடர்புகொண்டு Tribuneஇல் வெளிவந்த அ.ந.கந்தசாமியின் ஆங்கிலக் கட்டுரைகள்
நான்கினையும் பெற்று அனுப்பியுள்ளார். இவற்றிலொன்றே
இம்மாத பதிவுகள் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரனில் அ.ந.க.வின் படைப்புகள் 1951/1952
காலகட்டத்தில் வெளிவந்திருக்கின்றன. அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும்
இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. எழுத்தாளர் காவலூர் ராசதுரையையும் பிரமிக்க
வைத்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் 'எழுத்துக்காக வாழ்ந்த கந்தசாமி' என்னும் தினகரன்
கட்டுரையில் (தினகரன்; மார்ச் 14, 1968) பின்வருமாறு கூறுகின்றார்:
'ஈழத்து இலக்கிய வரலாற்றிலே
1967ம் ஆண்டு "கந்தசாமியின் ஆண்டு" என்று சொவது தவறாகாது. 1967இல்
1. சாகித்திய மண்டல ஒழுங்கு
செய்த கருத்தரங்குகளிலே கந்தசாமியின் ஆய்வுரைகள் சிறப்பிடம் பெற்றன. நாடகத்துறை பற்றியும் நாவல்
பற்றியும் அவர் வாசித்த கட்டுரைகள் முற்போக்கு இலக்கியவாதிகளை மட்டுமல்லாமல், கொள்கை அடிப்படையில்
முற்போக்காளர்களைச் சாடியவர்களையும் கவர்ந்தன. தேசிய இலக்கியத்தின் கர்த்தாக்களில் ஒருவரான கந்தசாமி
சிறுகதை, நாவல் முதலிவற்றிலே எத்தகைய வசன நடை கையாளப்பெறல் வேண்டுமென்பதுபற்றி வெளியிட்ட
கருத்து பலருக்கு வியப்புண்டாக்கிய போதிலும், எவராலும் எதிர்க்கப்படவில்லை. அவருடைய கருத்து வெளியானதன்
பின்னர், பிரதேச மொழி வழக்கிலே உரையாடல்களை அமைத்து உருவக்கப்பெற்ர தொடர் நவீனமொன்று,
செந்தமிழ் நடையில் புதுக்கி எழுதப்பெற்றதை இக்கட்டுரையாளர் அறிவார். [இதனால்தான் போலும்
அ.ந.க. தனது நாவலான 'மனக்கண் 'உட்படக் கதைகளிலெல்லாம் துள்ளுதமிழ் நடையொன்றினைக் கையாண்டார்
போலும்.- ஆசிரியர்]
2. சாகித்திய மண்டலத்தின் "பா ஓதல்"
கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. "கடவுள் என் சோர நாயகன்" என்னும் தலைப்பில்
அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. "நாயகனாகவும், நாயகியாகவும்,
குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால்
எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?" என்றார் கந்தசாமி. [இக்கவிதையை யாராவது
வைத்திருந்தால் எமக்கு அனுப்பி வைத்துதவவும். எம்முடன் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலில்
தொடர்புகொள்ளலாம்.- ஆசிரியர்]
3. தினகரனில் 'மனக்கண்'
என்னும் தொடர் நவீனம் சுமார் ஒன்பது காலம் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானோரை பரவசத்தில் ஆழ்த்தியது.
4. "மதமாற்றம்" என்ற நாடகம்
(மூன்றாவதுமுறையாக) அரங்கேற்றப்பட்டதும், "நாடகவிளக்கு" என்று கந்தசாமி வர்ணிக்கப்பட்டதும்
1967ஆம் ஆண்டிலேயாகும்.
5. வானொலியில் "கலைக்கோல"
நிகழ்ச்சியில் மாதந்தோறும் கந்தசாமியின் விமரிசினங்களும், "உலக நாடகாசிரியர்கள்"
பற்றிய அறிமுகவுரைகளும் ஒலித்தன. (மொழிபெயர்ப்பு) நாடகம் (கந்தசாமியின் கடைசிப் படைப்பு)
ஒலிபரப்பாயிற்று.
6. "வெற்றியின் இரகசியங்கள்"
என்ற மனத்தத்துவ நூல் வெளியாயிற்று.
ஆக, நாடகம், கவிதை, நாவல், கட்டுரை
யாவற்றிலும் 1967இல் கந்தசாமி தமது ஆற்றலைக் காட்டினார். இவ்வாறு இலக்கியத்துறையின் சகல கிளைகளையும்
ஆக்கிரமித்தவரைப்போலக் காட்சியளித்த கந்தசாமி வாழ்ந்தது எழுத்துக்காக; எழுதியது
வாழ்க்கைக்காக.'
இவ்விதம் அக்கட்டுரையில் காவலூர் ராசதுரை
குறிப்பிட்டுள்ளார். மேற்படி கட்டுரையில் அ.ந.க எவ்விதம் நோய்களுடன் மல்லுக்கட்டியபடியே எழுதிக் குவித்தாரென்பதையும்,
அவரது எதிர்கால இலக்கிய முயற்சிகள் பற்றியும் மற்றும் அ.ந.க.வின் இறுதிக்கால வாழ்வு பற்றியும்
காவலூர் ராசதுரை விபரித்திருக்கின்றார்.
அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் 'நானா'!
எமிலிசோலாவின்
நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக்
கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின்
மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952
வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு'
என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன.
பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப்
பார்க்கும்போது ' நானா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள்
காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு
செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை
நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப்
பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத்
துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும்,
நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில்
முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார்.
'நானா' பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
'"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய
பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று
பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர்
சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்'
இவ்விதம் தனது கருத்தினை எழுதியிருக்கின்றார் செம்மாதெரு, யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக் ஜீவா.
கொள்ளுப்பிட்டியிலிருந்து எம்.மாதவன்
என்பவர் பின்வருமாறு குமுறியிருக்கின்றார்: 'நானா' கதையைத் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன்.
ஆனால் அந்தப் பிரதிகளைக் கூட அற்பத்தனமாகக் களவெடுத்துவிடும் கயவர்கள் உலகில் இல்லாமலில்லை.
ஒரு நண்பன் 'நானா' பக்கங்களைப் பார்த்தே திருடி எடுத்து விட்டான். என் குறையை வேறு யாரிடம் சொல்லி
அழுவது? இவ்வளவுக்கும் காரணமான உங்களிடமே கூறிவிட வேண்டுமென்று இதை எழுதுகிறேன்.'
சென்னையிலிருந்து 'செங்கோல்' பதிப்பகத்தைச்
சேர்ந்த வே.கணபதி என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: 'எமிலி ஸோலாவின் அற்புதமான கதையை
அழகான தமிழில் தந்து வருகின்றீர்கள். தமிழறிந்தோரிடையே ஸோஸாவின் நூலைத் தங்கள் பத்திரிகைதான்
அறிமுகம் செய்து வைக்கிறது என்று நினைக்கின்றேன். இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.'
'சமுதாயப் பதிப்பகம்', சென்னையிலிருந்து
சம்பந்தன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்: 'சுதந்திரனில் தொடர்ந்து வெளியாகும் 'நானா'
வின் முதற் பகுதியைப் படித்தேன். கதையின் சுவையில் ஆழ்ந்து போனேன். அது ஒரு மொழிபெயர்ப்புக் கதையாகவே
தோன்றவில்லை... நானா ஒரு வெற்றிகரமான மூலத்தின் சுவை குன்றாத அற்புத மொழிபெயர்ப்பு என்பதில்
சந்தேகமில்லை'. இவர்களுடன் இன்னும் பலரின் கடிதங்கள் 'அருமையான கதை- சுவை குன்றாத் தமிழாக்கம்'
என்னும் தலைப்பில் 18-11-51 சுதந்திரன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது போல் 30-12-51 சுதந்திரன்
இதழிலும் 'நானா திசையிலிருந்தும் 'நானா'வுக்குப் பாராட்டு' என்னும் தலைப்பில் பல வாசகர்
கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நானாவை வரவேற்றும், எதிர்த்தும் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
[அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த மேற்படி 'நானா'வுட்பட எமக்குக் கிடைக்கும் அவரது
படைப்புகள் அனைத்தும் பதிவுகளில் வெளியாகும். -ஆசிரியர்]
இதுபோல் பண்டிதர் திருமலைராயர்
என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய 'கண்ணகிப் பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா?
பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்' என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக்
கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
ngiri2704@rogers.com
தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- வ.ந.கிரிதரன்-...உள்ளே |