சாகாத இலக்கியத்தின்
சரித்திர நாயகன் - 5
அந்தனி ஜீவா
[ 'சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில்
12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ]
சிறுகதைத் துறையில்....
வளர்ந்து
வரும் சிறுகதைத்துறைக்கு வலுவூட்டும் சிறுகதைகளை அ.ந.கந்தசாமி சிருஷ்டித்துள்ளார். 'நாயினும் கடையர்',
'இரத்த உறவு' போன்ற சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார். மலை நாட்டுத் தொழிலாளர்களைப் பின்னணி
வைத்து எழுதப்பட்ட 'நாயினும் கடையர்' அ.ந.க. எழுதிய சிறுகதைகளில் அமர சிருஷ்டியாகத் திகழ்கிறது.
தொழிலாளர்களைக் கருப்பொருளாக வைத்து கதை படைத்தவர்களுக்கு அ.ந.க முன்னோடியாகக் விளங்குகின்றார்.
தமிழ் நாட்டில் தொழிலாளியாக வாழ்ந்து , இலக்கியகர்த்தாவாக மாறிய விந்தன், தொழிலாளர்களின்
இன்பதுன்பங்களை, வர்க்க பேதங்களை, அது தோற்றுவிக்கும் வறுமை நிலையைக் கண்டித்தார். அதன் அடியுண்மையை
எடுத்துக் காட்டி யதார்த்தபூர்வமான கலை வடிவத்தை இலக்கிய வழக்கினுள் மீண்டும் புகுத்தினார். தொழிலாளியாக
வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல்
தொழிற்சங்கவாதியாகச் சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக்
கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால்
அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்.
அ.ந.கந்தசாமியைப் பற்றி இலக்கிய விமர்சகரான கலாநிதி
கா.சிவத்தம்பி குறிப்பிடும்பொழுது 'அ.ந.கந்தசாமியின் கதைகளோ வன்மையாகச் சமூகத்தைத் தாக்குபவை.
சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நன்கு புலப்படுத்துவதில் சமர்த்தர் இவர். 'இரத்த உறவு' முக்கிய
கதைகளில் ஒன்று' [ நூல்: 'தமிழ் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்' ] என்கின்றார்.
சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான அ.ந.கந்தசாமி
தமிழ் நாட்டுச் சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் வைத்துக் கணிக்கப் பெற்றார். அ.ந.க. எழுதிய
சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவைகள் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. மார்க்ஸிய
அரசியல் இலக்கியக் கொள்கைகலைத் தழுவிப் புதிய உலகைப் ப்டைக்க வேண்டும் என்ர நோக்கத்தில் எழுதியிருக்கும்
சிறுகதைகள் என்றும் அழியாத படைப்புகள். அவைகள் அச்சில் வெளிவருமானால் புதிய தலைமுறையினர் அவற்றைப்
புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
நாவல் துறை
"முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாக கந்தசாமி விளங்குகிறார்.
அவர் தமது முழுச் சக்தியையும் ஒருங்கு கூட்டி நாவல் காவியம் இயற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவர் பெயர்
நிலைத்து நிற்கும்" என்று "ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்ற நூலில் கனக செந்திநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியத்தின்
எல்லாத்துறைகளிலும் தன் பெயரை நிலைபெறச் செய்த் அ.ந.கந்தசாமி நாவ்ல் துறையிலும் 'மனக்கண்' நாவ்ல்
மூலம் தன் முத்திரையைப் பதித்து விட்டுத் தான் சென்றுள்ளார். 'மனக்கண்' நாவல் தினகரன் வாரமஞ்சரியில்
தொடராக வெளிவந்தபொழுது ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆவலுடன் விரும்பிப் படித்து வந்தார்கள். இவர்கள்
தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை விரும்பிப் படித்தவர்கள். ஈழத்து எழுத்தாளர்களின்
கதைகளின் பக்கம் கூட தலை வைத்துப் படுக்காதவர்கள் கூட 'மனக்கண்' நாவலைத் தொடர்ந்து விரும்பிப்
படித்து வந்தார்கள்.
'மனக்கண்' என்ற நாவல் தொடர்கதையாக வெளிவந்ததால்
அதன் இலக்கியத்தரத்தை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தொடர்கதை மூலம் வாராவாரம் வாசகர்களைத்
திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் அ.ந.க. 'மனக்கண்' என்ற நாவலை எழுதவில்லை. யதார்த்தமாக
இருக்க வேண்டும் என்ற நோக்குடன் எழுதினார். 'மனக்கண்' நாவல் இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.
தினகரனில் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் தொடர்கதையாக
வெளிவந்து முடிந்த வாரம். அடுத்தவாரம் நாவலாசிரியரின் குறிப்புரை வெளிவரும் என்று குறிப்பிடப்பாடிருந்தது.
என்ன குறிப்புரை எழுதப் போகின்றாரோ என்று எண்ணியவாறு அ.ந.கந்தசாமியைப் பார்க்கப் போயிருந்தேன்.
அப்பொழுது வாராவாரம் அ.ந.க.வைச் சந்தித்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம்.
அ.ந.கந்தசாமி எழுதிக் கொண்டிருந்தார். மேல்நாட்டு நாவலாசிரியர்கலைப்
போலத் தினசரி எழுத வேண்டும் என்ற பழக்கத்தை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அ.ந.க. தாம் எழுதியதை
எனக்கு வாசித்துக் காட்டினார். அது 'மனக்கண்' நாவலின் குறிப்புரை. அந்தக் குறிப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்த
சில ஆங்கில நாவலாசிரியர்களின் கருத்துகளைச் சுட்டிக் காட்டினார். அ.ந.கந்தசாமி நிறையப் படிக்கிறார்.
நிறைய எழுதுகிறார் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் அவரிடம் தெரிவித்தேன்,
"இலக்கியதின் எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுள்ள அ.ந.கந்தசாமி நாவல் துறையில் கவனத்தைச் செலுத்தத்
தவறிவிட்டார் என்று இலக்கிய விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அத்துறையில் 'மனக்கண்' மூலம்
பெரும் சாதனையை நிலை நாட்டி விட்டீர்களே" என்றேன்.
"இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப்
போகின்றேன்" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகலை வைத்து 'களனி
வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 'களனி வெள்ளத்திற்கு' முன்னால்
கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. 'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள்
உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின் பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான
அளவு எழுதியது வியப்புக்குரியது.
அ.ந.க இன்னும் ஓரிரு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் 'மனக்கண்'
நாவலிலும் பார்க்க, சிறந்த நாவல்களை நமக்குத் தந்திருப்பார். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றி
எழுதும் எந்த விமர்சகரும் அ.ந.க.வை மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு ஒரே ஒரு நாவலின் மூலம் தன்
ஆளுமையைக் காட்டிச் சென்றுள்ளார். கம்பனுக்கு ஒரு காவியத்தைப் போல், வள்ளுவனுக்கு ஒரு திருக்குறளைப்
போல, அ.ந.கந்தசாமிக்கு ஒரு 'மனக்கண்' என்றே துணிந்து கூறலாம்.
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்
-1...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -2...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -3...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -4...உள்ளே
[ தொடரும் ]
|