இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

பங்குனி 23 டானியல் நினைவு தினம்!
டானியல் பாதையும் தலித்தியப் பார்வையும்..

- - வி. ரி. இளங்கோவன் ( பிரான்ஸ் -


எழுத்தாளர் டானியல்கட்டுரையாசிரியர் வி.ரி.இளங்கோவன்ஈழத் தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து, வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து,  கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து, அவர்களைச் சக மனிதர்களுடன் சமானமாக நிலைநிறுத்துவதற்குத் தன் உடல், பொருள், ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றி மறைந்தவர் தோழர் கே. டானியல்.

என் இளமைப் காலத்தில்;, என் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, சரியான சமூகப் பார்வையுடன் பேனா பிடிக்க வழிகாட்டியவர்களில் முக்கியமானவர்; கே. டானியல். சுமார் பதினான்கு ஆண்டுகள் அவரோடு இணைந்து பணியாற்றியதும், அவரது இறுதி மூச்சு பிரியும் வேளையிலும் உடனிருந்து உதவியதும் என்னால் மறக்க முடியாதனவாகும்.

"தலித் இலக்கியம்" என்பது தற்போது தமிழ் இலக்கியப்பரப்பில் எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், நம்மவர் மத்தியில் இது குறித்த சர்ச்சைகள், நோக்குகள் கூர்மையடைந்து விவாதத்திற்குரியனவாகின்றன.

தலித் இலக்கியப் 'பிதாமகர்", 'முன்னோடி" எனத் தமிழக விமர்சகர்களாலும், ஈழத்து இலக்கியக்காரர் பலராலும்; டானியல் விதந்துரைக்கப்படுகிறார்.

இதில் ஒரு விடயம் சுலபமாக மறக்கடிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டானியல் ஒடுக்கப்பட்ட மக்களில், அடிமட்டச் சமூகத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியவர், எழுதியவர் என்பதாக மட்டுமே உணர்த்தப்படுகிறது.

அவரது, பொதுவுடமைக் கட்சிப் பணி நாசூக்காக மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது.

டானியல் இன்று உயிருடன் இருந்தால் நிச்சயமாக இத்தகைய பார்வையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

டானியல் பொதுவுடமைக் கட்சியின் தொடர்பு காரணமாகவே சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியவர்.

பொதுவுடமைக் கட்சியினை வடபகுதிக்கு அறிமுகம்செய்து, மக்கள் மத்தியில் பரவலாக்கி, இறுதிவரை அதற்காகவே தன்னை அர்ப்பபணித்து வாழ்ந்தவர் தோழர் மு. கார்த்திகேசன். அவரது தொடர்பு, டானியலை பொதுவுடமை அரசியல் ரீதியாகவும் எழுத்துத்துறையிலும் வளப்படுத்தியது எனலாம்.

இளமைக் காலத்தில் வறுமையில் துவண்டபோதிலும், திருமணத்தின் பின்பும் வறுமையும் இடர்பாடுகளும் வாட்டிவதைத்தபோதிலும், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும் அவர் கட்சிப் பணிகளிலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டவரல்ல.

பொதுவுடமைக் கட்சியின் வடபிரதேச் கிளையின் முழுநேர ஊழியராகப் பல வருடங்கள் பணியாற்றியவர் டானியல்.

அறுபதுகளின் நடுப்பகுதியில் சர்வதேசரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகச் சோவியத் சார்பு, சீனச் சார்பு எனப் பிளவு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்திலும் ஏற்பட்டது.

பெரும்பாலான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலை இலக்கியவாதிகள் தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு கட்சியினை ஆதரித்தனர். டானியலும் தோழர் சண் பாதையிலேயே இயங்கியவர்.

1971ம் ஆண்டு சித்திரை மாதம் விஜயவீரா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே. வி. பி.) தொடங்கிய காட்டிக் கொடுப்பிலான கிளர்ச்சியின்போது பொதுவுடமைக் கட்சி (சீனச் சார்பு) பல பின்னடைவுகளை, அடக்குமுறைகளை, சீர்குலைவுகளை எதிர்கொண்டது. கட்சி அலுவலகங்கள், சொத்துக்கள் சிதறடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையிடப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர்.

தோழர் சண், காந்தி அபயசேகரா, டானியல் உட்படப் பல தலைமைத் தோழர்கள் சிறையிடப்பட்டனர்.

பின்னர் எழுபதுகளின் பிற்பகுதியிலும் கட்சியில் பிளவு ஏற்பட்டபோதிலும் தோழர் சண்முகதாசனின் சரியான வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவராகவே டானியல் இயங்கியவர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டு மேடையில் (21 - 10 - 1979) தலைமைத் தோழர்கள் கே.  டானியல், கே. கிருணபிள்ளை, எஸ்; ரி. என். நாகரெத்தினம் ஆகியோர் காணப்படுகின்றனர். தோழர் சண்முகதாசனின் வாழ்த்துச் செய்தியை வி. ரி.  இளங்கோவன் வாசிக்கிறார்.

1979ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிரமாண்டமான முழுநாள் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளால் மண்டபம் நிரம்பி வழிந்தது.

இம் மாநாட்டின் வெற்றிக்காகப் பல மாதங்களாக இரவுபகலாக டானியல் இயங்கியதை யான் நன்கறிவேன்; அவருடன் கூடவே யானும் செயற்பட்டேன்.

தோழர் சண் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார்.

டானியல், எஸ். ரி. என். நாகரத்தினம், கே. கிருஸ்ணபிள்ளை ஆகிய தலைமைத் தோழர்களின் சிறப்புரைகள் குறிப்பிடத்தக்கன. பேராசிரியர் நந்தி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், கலைஞர் சிசு. நாகேந்திரா, கலைஞர் குத்துவிளக்கு பேரம்பலம் உட்படப் பல கலை இலக்கியவாதிகள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

'எனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு. அதற்கு உந்துசக்தியாகவே எனது படைப்புகளைத் தருகிறேன்" என டானியல் சொல்வதுண்டு.

டானியல் அரசியல் செயற்பாட்டாளர், சமூக விடுதலைப் போராளி, எழுத்தாளர், பேச்சாளர்.

ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும், அந்த வடிவத்தை அடையாளம் கண்டு எதிர்க்கின்ற பக்குவமும், துணிவும், ஆற்றலும் டானியலுக்கு இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் எந்தக் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் தனக்குச் சாதியின் பெயரால் அல்லது ஏதாவது வகையில் ஒடுக்குதல், நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்தேடி, ஆலோசனைபெற, ஆதரவுபெற டானியலைத்தேடி வருவதை யான் பல வருடங்களாகப்
பார்த்திருக்கிறேன்.

அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிறைந்த ஒரு மனிதனாக டானியல் விளங்கினார்.

அவரது செயற்பாடுகளுக்குப் பேருதவியாகக் கட்சித் தோழர்கள் இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சாதியம் குறித்து நோக்கும்போது இந்திய நாட்டின் நிலைமைகளையும், இலங்கையின் வடபகுதி நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

இந்திய சாதியம் பிராமணியத்தால் கட்டமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது. அதற்கெதிராக தலித் மக்கள் கிளர்ந்தெழுந்து பல்வேறு வழிவகையில் போராடி வருகிறார்கள்.

இலங்கையில் பிராமணியம் இல்லை.

உயர் சைவ - கிறிஸ்தவ வேளாளர் எனச் சொல்லிக்கொள்வோரின் ஆதிக்கமே வழிவழியாக வளர்ச்சிபெற்று வந்திருக்கிறது. 'வேளாளர்" என்ற கருத்தியலை பொருளாதார ரீதியில் உயர்வுகண்ட ஏனைய சாதியினரும் முன்னெடுப்பதுண்டு. சாதியத்திற்கு எதிராகத் தமிழ் பாராளுமன்றவாதிகள் உணர்வுபூர்வமாக எத்தகைய நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லவில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் தேவையின் பொருட்டு 'சமபந்தி போசனம்" போன்ற ஒரு சில விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு சாகஸங்காட்டி வந்தனர்.

இக்காலகட்டத்தில் தான் 'சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை" அமுல்படுத்தக்கோரி 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி
சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரலாற்றுப் புகழ்மிக்க அந்த ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சகல மக்களும், முஸ்லீம் மக்களுட்படக் கலந்துகொண்டனர். தோழர் சண் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி; முழு ஆதரவு வழங்கியது.

பொலிசாரின் குண்டாந்தடி தாக்குதலுள்ளாகியும் நிலைகுலையாத ஊர்வலம் எழுச்சியுடன் யாழ்நகரை நோக்கி முன்னேறிச் சென்றது.

இந்த ஊர்வலத்திற்குத் தலைமைகொடுத்துச் சென்றவர்களில் டானியலும் ஒருவர்.

இதன் பின்னரே 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்" உதயமானது.

இது ஒரு சாதிச் சங்கம் அல்ல.

சாதியத்தiயும், தீண்டாமையையும் எதிர்த்துநின்ற சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த ஒரு பரந்த இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களின் மூலம் பல வெற்றிகளைக் கண்டது.

தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போராட்டங்கள் யாவற்றுக்கும் உறுதுணையாக நின்று உதவியது.

தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது.

இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசப்பட்டன. குடாநாட்டின் இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்தப் போராட்டங்களின் அத்தனை செயற்பாடுகளிலும் டானியலின் பங்களிப்பு முக்கியமானது.

சிந்தனை தெளிவுமிக்க, தியாகங்கள் நிறைந்த, வெற்றிகளைக் கண்ட இந்தப் போராட்டப் பாதையே, தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதைக்கும் முன்மாதிரியாக அமைந்தது என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளமை மிகையாகாது.

தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்காகப் போராட வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல.

வடபகுதியில் நடந்த, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் அத்தகை கருத்தைக் கொடுக்கவில்லை.

அது தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் பூரண ஆதரவுடன், சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து
நடைபெற்றது. வெற்றிகளைக் கண்டது. பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் இதற்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள்.

பேராசிரியர் கைலாசபதி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், முருகையன், இளங்கீரன், அம்பலத்தாடிகள் குழுவினர் மற்றும்
இளந்தலைமுறையைச் சேர்ந்த பல கலை இலக்கியப் படைப்பாளிகள் தலித்துகள் அல்ல. ஆனால் அவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு உறுதுணையாக நின்ற மார்க்சிசவாதிகள்.

இன்றைய சர்வதேச சூழ்நிலைகளையும் எம் நாட்டின் உண்மை நிலைமைகளையும் கவனத்திலெடுக்காது, தேசிய விடுதலை, பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தனித் தலித்திய பார்வை கொண்டு நோக்குவதும், அதற்கேற்ப டானியலைக் காட்ட முற்படுவதும் பொருத்தமற்றதாகும். இத்தகைய பார்வையை இன்று டானியல் உயிருடன் இருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார். ஏனெனில் மார்க்சிச லெனினிசப் போராட்டப் பாதையை அரசியல் பாதையாக ஏற்றுக்கொண்டு அதற்கெனத் தன்னை அர்ப்பணித்து இறுதிவரை செயற்பட்டவர் டானியல்.

டானியல் வாழ்வின் பிற்பகுதியில் பல வருடங்களாக அவரோடு சேர்ந்து பணியாற்றியவன் என்ற வகையில் அவரது எண்ணங்கள், செயற்பாடுகள் எந்தவழியில் இருந்தன என்பதனை என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

'அவரது மார்க்சிசப் பார்வையும், சாதியப் பார்வையும் முரண்படுவதாகத் தெரியவில்லை. மார்க்சிசத்திற்குள் சாதியப் பார்வை ஒத்து இயங்குகிறது." என்கிறார் டானியலின் படைப்புகளைப் புரிந்துகொண்ட கோவை ஞானி.

டானியலின் படைப்புகளில் குடாநாட்டின் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட பகுதியின் வரலாற்று ஓட்டத்தை, சமூக நகர்வைக் கவனிக்கலாம்.

குடாநாட்டின், யாரும் காட்டியிராத இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் டானியல்.

இதனால் தானோ சிலருக்கு அவர் வேண்டாதவராக, ஒதுக்கப்பட வேண்டியவராகத் தென்பட்டார் போலும்..!

அவரை ஒழித்துக்கட்டவும் பல முயற்சிகள் நடந்ததுண்டு. அவரோடு பல இடங்களுக்கும் சென்றுவந்தபோது இத்தகைய ஒருசில நடவடிக்கைகளை என்னாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மக்கள் பணிகளில் அயராது ஈடுபட்டதால் சிலரது பார்வைக்கு மட்டுமல்ல அரசு இயந்திரத்தின் காவல்காரருக்கும் அவர் குறிவைக்கப்பட வேண்டியராகவே இருந்தார். சந்தர்ப்பம் பார்த்து அவரை ஒழித்துவிட முயற்சித்ததுண்டு. பல மாதங்கள் அவர் சிறை வைக்கப்பட்டார். நீரிழிவு நோயின் தீவிரத் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் பல வேதனைகளை அவர் சிறையில் அனுபவித்தார்.

பல மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார்.

இறுதிக் காலத்தில் கண்பார்வை குன்றிவந்த நிலையில், நீரிழிவு நோய்க்கு வைத்திய சிகிச்சை பெறும்பொருட்டும், கானல், பஞ்சகோணங்கள் நாவல்களை அச்சேற்றும் பொருட்டும், பேராசிரியர் அ. மார்க்ஸ், மற்றும் தோழமை பதிப்பகத் தோழர்களின் அழைப்பின்பேரில் தமிழகம் செல்ல முடிவுசெய்தார்.

தமிழகம் செல்ல முன்னர் கொழும்பில் தோழர் சண் வீட்டில் தங்கியிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடினார். பஞ்சகோணங்கள் நாவல் குறித்து சண் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திலெடுத்துக்கொண்டார்.

உடல்நலம் குன்றிய நிலையிலிருந்த அவரை 30 - 01 - 1986 ல் தமிழகம் அழைத்துச் சென்றேன்.

நீரிழிவு நோயின் முதிர்நிலையின் சகல பாதிப்புகளும் அவரை வாட்டின.

தோழர்களின் ஏற்பாட்டின்படி சிகிச்சைகள் நடந்தன. உடனிருந்து கவனித்து வந்தேன்.

உடல்நிலையைப் பாராது பல்வேறு இடங்களுக்கும் சென்று தோழர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார். தஞ்சை, சென்னை, பாண்டிச்சேரி, கும்பகோணம் ஆதியாம் இடங்களுக்குச் சென்றோம். கூட்டங்களில் உரையாற்றினார்.

சென்னை 'சி. எல். எஸ்" இலக்கியக் கருத்தரங்கில் (ஜனவரி 1981) கே. டானியல், பேராசிரியர் கா. சிவத்தம்பி, வி. ரி. இளங்கோவன் ஆகியோர்...

1981ம் ஆண்டு டானியலோடு தமிழகம் வந்தபோது, 'சி. எல். எஸ்" இலக்கியக் கருத்தரங்கில் உரையாற்றியபின் தஞ்சை பிரகாஷின் அழைப்பின்பேரில் தஞ்சை சென்றதும் அவர் பார்க்க விரும்பியது உயர்ந்த கோவில்களோ, அரண்மனைகளோ, பெரிய மனிதர்களென இருந்தவர்களையோ அல்ல.

கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்தப்பட்ட ஏழைமக்களின் நினைவிடத்தைத் தான் பார்க்க விரும்பினார்.

தஞ்சைப் பிரகா~;, எழுத்தாளர் சி. எம். முத்து ஆகியோருடன் அங்கு சென்று பார்த்தோம். பல மணி நேரம் அங்குள்ள நசுக்கி ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களைச் சந்தித்து அவர் பேசியமை இன்றும் எனக்கு ஞாபகம்.

தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டானியலுக்கு 23 - 03 - 86 காலை 8. 30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். டாக்டர்களும், தாதிமாரும் உடனின்று சிகிச்சையளித்தனர்.

எனது கையைப் பற்றிப்பிடித்தவாறு 'தம்பி... தம்பி.." என ஏதோ சொல்லவிழைந்து முடியாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

இந்நிகழ்வு என்மனதில் என்றும் மறக்கமுடியாத பதிவாகிவிட்டது.

படைப்பாளிகளை மிகவும் நேசித்தவர் டானியல்.

இளம் எழுத்தாளர்களை அரவணைத்து வழிப்படுத்தியவர். பலருக்கு விளம்பரமின்றி நல்ல உதவிகள் செய்துள்ளதை என்னால் அறிய முடிந்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் படைப்பாளிகளை வரவேற்று உபசரித்தவர். இதனை எழுத்தாளர்கள் வ. அ. இராசரத்தினம், லெ. முருகபூபதி, அந்தனிஜீவா ஆகியோருட்படப் பலர், டானியல் காலமாகியதை அறிந்ததும் கண்ணீர்சிந்த எழுதியுள்ள பதிவுகளில் காணலாம்.

இறுதிவரை இலட்சியம் குன்றாத, எந்தவித விட்டுக்கொடுப்புகளுமற்ற, நம்பிக்கையான போராளியாக, படைப்பாளியாகத் திகழ்ந்த டானியல் மறைவு குறித்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் நா. சண்முகதாசன் எழுதியுள்ள வரிகள் குறிப்பிடத்தக்கன.

'இளமைக் காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்.." என்றவாறு தோழர் சண்
வேதனையோடு எழுதியுள்ளார்.

தஞ்சாவூரிலுள்ள டானியல் சமாதி.

அந்த மானிட நேசனின், மக்கள் விடுதலைப் போராளியின், கூர்ந்த சமூகப் பார்வையுள்ள படைப்பாளியின் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.

படம்:
1. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டு மேடையில் (21 - 10 - 1979) தலைமைத் தோழர்கள் கே.  டானியல், கே. கிருணபிள்ளை, எஸ்; ரி. என். நாகரெத்தினம் ஆகியோர் காணப்படுகின்றனர். தோழர் சண்முகதாசனின் வாழ்த்துச் செய்தியை வி. ரி.  இளங்கோவன் வாசிக்கிறார்.

2. சென்னை 'சி. எல். எஸ்" இலக்கியக் கருத்தரங்கில் (ஜனவரி 1981) கே. டானியல், பேராசிரியர் கா. சிவத்தம்பி, வி. ரி. இளங்கோவன் ஆகியோர்...

3. தஞ்சாவூரிலுள்ள டானியல் சமாதி.

vtelangovan@yahoo.fr


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner