இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2010  இதழ் 130  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சூழலைப் பாதுகாப்போம்!

மீள்பிரசுரம்: 'வாசகர் அனுபவம்' வலைப்பதிவு
நூல் அறிமுகம்: சு. தியடோர் பாஸ்கரனின் 'தாமரை பூத்த தடாகம்' ('உயிர்மை பதிப்பக' வெளியீடு)

- சண்முகம் -


சு. தியடோர் பாஸ்கரனின் 'தாமரை பூத்த தடாகம்' ('உயிர்மை பதிப்பக' வெளியீடு)சு. தியடோர் பாஸ்கரன்'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல். தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெகுஜன ஊடகங்களில் சாதாரண மக்களை சென்றடையும் விதம் எழுதுவோர் இன்னும் குறைவு. தியடோர் பாஸ்கரன் இந்த அரிய செயலைத் திறம்படச் செய்கிறார். தி. பாஸ்கரனின் ஆழ்ந்த தமிழறிவு இந்தக் கட்டுரைகளைத் தரமான இலக்கியமாக மாற்றுகிறது. இயற்கைச் சூழலைப் பற்றிய எழுத்துக்கள் (நான் பார்த்த வரையில், எந்த மொழியிலுமே) பெரும்பாலும் வறட்சியான நடையிலான பூரண அறிவியல் எழுத்துக்களாய்த் தான் இருக்கின்றன. தி. பாஸ்கரனின் எழுத்து இந்த நடைமுறைக்கு விதிக்கு ஒரு நல்ல விதிவிலக்கு. சூழியல் குறித்த கட்டுரைத் தொகுப்பு என்றாலும் இந்த நூல் நல்லதொரு இலக்கியத்தை வாசித்த அனுபவத்தையும் வழங்கியது!

உதாரணமாக, தியடோர் பாஸ்கரன், பூநாரையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும்போது, புறநானூற்றிலிருந்து பூ நாரை பற்றிய குறிப்பைச் சுட்டிக்காட்டுகிறார். ஒட்டகத்தைப் பற்றிய கட்டுரையில், தொல்காப்பியம் மற்றும் அகநானூற்றிலிருந்து ஒட்டகம் பற்றிய குறிப்புகளைக் காட்டுகிறார். தெருநாய் பற்றி எழுதுகையில், அவைகளால் ஏற்படும் பிரச்சனை பற்றி காந்தி எடுத்த நிலைபாட்டை விவரிக்கிறார். குற்றாலத்தைப் பற்றி எழுதும்போது, பொருத்தமாய் தேவாரத்திலிருந்தும், தேனருவியைப் பற்றி விவரிக்கும்போது 'குற்றாலக் குறவஞ்சியையும் சுவைபடக் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில், குற்றாலத்தில் தற்போது விளையும் மங்கூஸ்தான் பழத்தைப் பற்றிய வரலாற்றை விவரிக்கிறார். தேவைக்கேற்ப பொருத்தமான அழகிய தமிழ் வார்த்தைகளை பிரயோகிக்கிறார். சில உதாரணங்கள்: சூழியலாளர்கள் (Environmentalist), பல்லூழிகாலம் (பல தலைமுறைக்காலம்), மற்றும் அறிவியல் கருதுகோள்கள் (Scientific Concepts). பொருளடக்கமே (Table of Contents) இல்லாத (இந்தக் காலத்திலும் !) தமிழ் நூல்களுக்கு விதிவிலக்காய், பொருளடக்கம் மட்டுமல்லாது பொருளடைவும் (Index) கொண்டது இந்நூல்.

காட்டுயிர் குறித்து தியடோர் பாஸ்கரன் சென்ற சரணாலயங்கள் மற்றும் இயற்கை ஸ்தலங்கள் தமிழ்நாடு, இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல இடங்களும், அவர் சென்று பார்த்த அனுபவங்களும் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் பற்றிய அறிவியல் கோட்பாடுகளை எளிமையாகவும் அதே சமயம் தகவல் குறைவு படாமலும் இந்தியச் சூழலின் தனித்தன்மையை உணர்ந்து விளக்குகிறார் தியடோர் பாஸ்கரன். நாம் இலக்கியம் படிப்பவராய் இருந்தாலும் சரி குத்துப் பாட்டை ரசிப்பவராய் இருந்தாலும் சரி, சூழியல் குறித்த உண்மைகளை - அது எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இயற்கை, பருவநிலை, மழை, நாம் சுவாசிக்கும் காற்று, உட்கொள்ளூம் நீர், உண்ணும் உணவு, அழிந்துவரும் உயிரினங்கள், பெருகிவரும் வெப்பநிலை, நாம் செய்யும் வேலை - இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, உதாசீனம் செய்ய இயலாத ஒரு மாபெரும் இயக்கமே. இப்பிணைப்பைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், மெத்தப்படித்தவர் மட்டுமின்றி, சாமானிய மக்களும் தமது அன்றாட வாழ்க்கை வளத்திற்கு கேடு வராதபடி அறிந்து செயல்பட முடியும் என்பதே தியடோரின் நியாயமான நிலைப்பாடு.

பொருளாதார காரணங்கள் மட்டுமின்றி இயற்கைச் சூழல் பற்றிய விழிப்புணர்வு வராததற்கான சமுதாயக் காரணங்களை காட்டுகிறார். நம் மக்களில் பலருக்கு காடுகளில், சரணாலயங்களில், வரலாற்றுச் சின்னங்களில், தொல்பொருள் ஆய்வு செய்யும் இடங்களில் இன்னும் எப்படி நடந்து கொள்வது என்பது இன்னும் தெரியவில்லை. அவர்களுக்கு இன்னும் அதற்கான கல்வி முறைப்படி கற்பிக்கப்படவில்லை. சரணாலயங்களில் சிறுவர்கள் கத்தினால் இந்தியப் பெற்றோர்கள் அதை கண்டு கொள்வதில்லை என்று குறிப்பிடுகிறார்.

சூழல் சுற்றுலா (Ecotourism) என்பது எளிதில் அழியக்கூடிய, தொன்மைப் புனிதமான, பெரும்பாலும் பாதுகாக்கப் பட்ட இடங்களுக்கு, சிறிய அளவில், மனிதர்களின் காலடி தடம் இல்லாமல் சென்று வருவது. தமிழ்நாட்டில் Eco-Tourism என்ற பெயரில் கூத்து தான் நடத்துகிறார்கள் என்கிறார்: மே மாதத்தில் முதுமலைக்குப் போனால் 'அது பூந்தமல்லி நெடுஞ்சாலையோ என்று சந்தேகம் வலுக்கின்றது' என்கிறார். பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை, "ஒரு முக்கிய சமூகச்சடங்கை நிறைவேற்றுவது போல செய்கிறார்கள்" என கேலி செய்கிறார்.

இந்தியாவில் இயற்கைச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. எல்லா வளரும் நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் சூழலைக் காப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் போராட்டம், கடுமையான உச்சத்தில் இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கமும், மிகக் குறுகிய காலத்தில் நேர்ந்த நகர்புற வளர்ச்சியும், சுற்றுப் புறச் சூழல் மீது பெரும் பாரத்தை சுமத்தியுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை என்ன என்பதை இன்னும் நாம் அறியாமல் இருக்கிறோம். இந்திய வானிலைப் பிரிவின் அறிக்கை, கடந்த 110 வருடங்களில் அதிக வெப்பம் 2009 இல் தான் எனக் கூறுகிறது.

வெப்ப நிலையின் போக்கைக் கவனியுங்கள். வரும் வருடங்களில், வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. நம் மக்களும் அரசாங்கமும் சுற்றுச் சூழல் பற்றியோ, வெப்பமாகி வரும் சீதோஷ்ணநிலை பற்றியோ, வற்றிவரும், வற்றிப்போன ஆறுகள் பற்றியோ அக்கறை கொள்ளாமல் அவதிப் படுவதைப் பார்த்து, பாரதியின் வார்த்தைகளை நினைவு கொண்டு ஆதங்கப் படுகிறார்: "கஞ்சி குடிபதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும்
அறிவுமிலார் ..."

1978-ஆம் ஆண்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்த வேங்கைப்புலி ஒன்று சுட்டுகொல்லப்பட்டது (இதை நான் சிறுவனாய் இருந்தபோது, சேலம் கால்நடை மருத்துவமனையில் கிடத்தியிருந்த இந்தப் பெரிய புலியின் சடலத்தை, என் பள்ளியில் கூட்டிச்சென்று காண்பித்தார்கள்). முப்பதே வருடங்களில், இன்றைக்கெல்லாம் ஏற்காட்டில் ஒரு காட்டுக் கோழியைக் காண்பது கூட அரிதாகி விட்டது! இதே மலைத்தொடரில் தான் மிகவும் அரியதுமான மூங்கணத்தான் என்னும் உயிரினம் இன்று அழியும் தருவாயில் உள்ளது. மூங்கணத்தனை விளிம்பு நிலைக்கு விரட்டிய அதே சூழியல் பிரச்னைகளைத் தான் இன்று மனிதனையும் எதிர்கொண்டிருக்கிறன. முடிவாய் இப்படி எச்சரிக்கிறார்: "மூங்கணத்தனுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு ?".

இயற்கை குறித்து மனிதனுக்கு இருக்கவேண்டிய ரசனையும், கரிசனத்தையும், தலைசிறந்த விலங்கியலாளர் ஒருவரின் கூற்றை, இப்படி வெகு சிறப்பாகச் சொல்கிறார்: 'நல்ல மனநலமுடைய ஒருவரின் அடையாளம் அவர் இயற்கையுலகில் ஈடுபாடு கொண்டிருப்பது என்று பல உளவியலாளர்கள் கூறியிருக்கின்றனர். தங்களைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் அங்குள்ள உயிர்களைப் பற்றியும் ஒரு கரிசனம் அவர்களுக்கு இருக்கும்.... இளமையில் இயற்கையினின்று விலகி வாழ்ந்தவர்கள் வாழ்வில் விழுமியங்கள் அற்றவர்களாக உருவாகின்றனர். காடுகளில் நடந்து திரிந்தவர், நீருக்கடியில் பவளத்திட்டுகளின் வசீகரத்தைக் கண்டவர், பணத்திற்கும் அந்தஸ்திற்கும் அடிமையாக மாட்டார் என்பது அவரது சித்தாந்தம். அவர்களிடம் இயற்கையைப் பற்றி மட்டுமல்ல, வாழ்வின் மற்றைய பரிமாணங்கள் சார்ந்த ஒரு நுண்ணுணர்வு உருவாகின்றது.' ஆனால், இந்தியாவில் இயற்கையை ரசிப்பவர்கள் சிறுபாண்மையினரே. இயற்கையை ரசிப்பவர்களை ஏதோ விளிம்புநிலை மனிதர்களைப் போல் மற்றவர்கள் பார்ப்பது, ஒரு வேடிக்கையான முரண். இயற்கை மீது மனிதன் கொள்ளும் ரசனை மரபணு சார்ந்ததா அல்லது வளர்ப்பு முறையால் போஷிக்கப்படுவதா அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா ?

சுற்றுச்சூழல் அக்கறையின் ஒரு முக்கியப் பரிமாணம் மொழி. அதுமட்டுமல்ல, எந்தவொரு புதிய நடப்புகால அக்கறையைப்பற்றிப் பேசுவதற்கும் மொழி தயாராகவேண்டும் என்கிறார் தியடோர். உதாரணமாக, நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தை ''Depression' என்னும் வார்த்தையைத் தமிழில் "குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்" என்கிறோம். இத்தகைய பல்லை உடைக்கும் சொல்லாடல் உதவாது என்கிறார். இது ஒரு 'தாலுக்கா ஆபீஸ் மொழிபெயர்ப்பு'.

கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறையில் காட்டுயிரியல் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைபபெற்றிருக்கிறது. இது நல்ல விஷயமே. ஆனால் இதில் ஒரு பிரச்சனையும் உண்டு என்கிறார் தியடோர். பன்னாட்டளவில் நல்ல வேலையில் அமரும் வாய்ப்புகள் இருப்பதால், இயற்கை, காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவரெல்லாம் இதில் சேருகின்றனர். விவசாயக்கல்லூரி பட்டதாரிகள் பலருக்கு நெல் எந்த மரத்தில் விளைகிறது என்று தெரியாதது போன்றது இது. காட்டுயிர்க்குக் கெடுதல் என்றால் அவர்கள் அதை எதிர்க்கும் திராணியோ தன்முனைப்பும் இல்லாதவர்கள். பொருளாதார உலகமயமாக்கலால் வசதியடைந்து வரும் வர்க்கத்தின் சந்ததியினர் ஒரு சிலராவது, "மனதிற்குப் பிடித்திருக்கிறது, அதனால் செய்கிறேன்" என்னும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பார்களா என்று பார்க்கலாம்?

ஒவ்வொரு தேசத்திலும் கல்வி கற்றவர்களுக்கு, அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களோ இல்லையோ, ஒரு பொறுப்பு இருக்கிறது. சமுதாயத்திற்கு வரக் கூடிய பொதுக் கேடுகளை மற்றவர்களுக்கு விளக்கி கூறும் பொறுப்பு. தி. பாஸ்கரன், இந்தப் பொறுப்பை அற்புதமாய் ஏற்றுச் செய்கிறார். இந்தப் புத்தகத்தை, இது போன்ற புத்தகங்களை வாங்கிப் படிப்பது, படித்த பின் அதை நம் குழந்தைகளுக்காவது விளக்கிச் சொல்லும் பொறுப்பு நம்முடையது. இந்தக் கட்டுரைத் தொகுப்பு உங்களைச் சுற்றியுள்ள மரங்களைப் பற்றியும், சுவாசிக்கும் காற்றைப் பற்றியும், அருந்தும் நீரைப் பற்றியும், அந்தச் சூழலோடு உங்களுக்கு இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பையும் குறித்த விழிப்பை ஏற்படுத்தும்.

இந்நூலில், 'தாமரை பூத்த தடாகம்' என்று ஒரு அழகிய உவமையை உதிர்க்கிறார். அது எதைக் குறிக்கிறது என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

'தாமரை பூத்த தடாகங்களே...
உமைத்தந்த அக்காலத்திலே...
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!'
என்ற பாரதிதாசனின் அற்புதமான வரிகள் தொழிலாளர்கள் நிலையை எண்ணி வருந்தியது. இப்போது தூர்ந்து மறைந்தவை, மறைபவை எண்ணிலாத் தடாகங்களும் நம் சந்ததியினரின் எதிர்காலமும்தான்.

நன்றி: http://baski-reviews.blogspot.com/2010/06/blog-post.html


மீள்பிரசுரம்: காலச்சுவடு மதிப்புரை
பின்வரும் தலைமுறைகளுக்கான மழை

- செல்லப்பா -


வானிற் பறக்கின்ற புள்ளெலா நான்
மண்ணிற் றிரியும் விலங்கெலா நான்
கானிழல் வளரு மரமெலா நான்
காற்றும் புனலுங் கடலுமே நான்
- பாரதியார் -


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
சு. தியடோர் பாஸ்கரன்இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் நம் முன்னோர். நாகரிக வளர்ச்சி என்னும் பெயரால் இயற்கையுடனான நமது தொப்புள்கொடி உறவு மெல்ல மெல்ல அறுபட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும்விதமான எச்சரிக்கைக் குரல்களை அலட்சியப்படுத்தினால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். “உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்களே தவிர உங்களிலிருந்து பிறக்கவில்லை” என்றார் கலீல் ஜீப்ரான். குழந்தைகள் பெற்றோருடைய சொற்களிலிருந்து கற்றுக்கொள்வதைவிடச் செய்கைகளிலிருந்துதான் அதிகமாகக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வுக்குத் தேவையான சுய அறிவுடனேயே பிறக்கின்றனர். எனவே இன்னும் பிறக்காத தலைமுறையைச் சென்றுசேர வேண்டிய செய்திகளை இந்தத் தலைமுறை உணர்வது அவசியம் என்ற அக்கறையோடு சிதறிக்கிடக்கும் தானியங்களைத் திரட்டித் தருவதுபோல் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

இதில் தியடோர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் குறித்த அக்கறை மேட்டுக் குடியினருக்கானது என்ற கருத்தாக்கம் மாற்றப்பட வேண்டியதையும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் வறுமையின் காரணமாகச் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதென்பது அடிப்படையில் தவறானதென்றும் ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளியே சூழலை அதிக அளவில் மாசுபடுத்துவதாகவும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். இவற்றால் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழைகள் என்பதால் அது குறித்த விவாதங்களைச் சாமானியர்களும் அறிந்துகொள்ளத் தேவையான சொல்லாடல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டுமென்பதை முன்வைத்து, சுற்றுச்சூழல், காட்டுயிர், புள்ளினம், பல்லுயிரியம் சார்ந்த அரிய தகவல்களைத் தெளிவான தமிழில் செறிவாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

ஊடகங்களும் காட்டுயிர்களும் கட்டுரையில் ஊடகங்கள் வெளியிடும் புள்ளினங்கள், விலங்கினங்கள் குறித்த செய்திகளில் அவை பற்றிய அடிப்படைப் புரிதலே தென்படவில்லை என்னும் வருத்தம் பரவியுள்ளது. வெளி நாட்டுப் பறவைகள் இரை தேட மட்டுமே இந்தியாவிற்கு வருவதாகவும் இங்கே இனப்பெருக்கம் செய்வதில்லை என்றும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார் இவர். ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு நாளிதழில்கூட வேடந்தாங்கலுக்கு வலசை வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் படிக்கும்போது அவரது வருத்தத்திற்குக் காரணம் இருப்பதாகவே தோன்றியது.

வனத்தில் திருட்டு வேட்டைக்காரராகச் சுற்றித்திரிந்த இருட்டுகுட்டி மனம் மாறி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றுவதை, சாந்தாராம் என்பவர் சிஏ படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதை எல்லாம் கடந்து போகையில் மனித வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்கள் மிக இயல்பாக வெளிப்படுவதை உள்வாங்கி அதனுள்ளே ஆழமாக இறங்குகிறது மனம்.

தேசியப் பறவையாக மயில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள தகவல் சுவையானது, அறியப்படாதது. சிங்கங்கள் திரள்திரளாகவே வரும் என்ற வரியை வாசிக்கும்பொழுது வெகுஜன வரவேற்புப் பெற்ற திரைப்படமொன்றில் இடம்பெற்ற ஒற்றைவரி வசனத்தின் முட்டாள்தனம் உறைக்கிறது. காட்டில் வாழும் பழங்குடியினரைச் சித்திரவதைக்காரர்களாகவோ ஹார்மோன் சுரக்கச்செய்பவர்களாகவோ பெரும்பாலான நம் வணிகத் திரைப்படங்கள் சித்தரித்துள்ள சூழலில் ஆஸ்திரேலியப் பழங்குடியினரான அபாராஜினர் தங்கள் சொந்த மண்ணிலேயே வந்தேறிகளால் வதைக்கப்பட்டு அழிவை நோக்கித் தள்ளப்படுவதை என்னவென்று சொல்வது.
காட்டுக்கும் நாட்டுக்கும் உள்ள நுட்பமான உறவு பேணப்படாததின் காரணமாகவே வறட்சி, வெள்ளம் போன்ற பல சூழியல் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடுவதையும் நதிகள் இணைப்பு என்னும் திட்டம் எதிர்மறைப் பயனையே தரும் என்பதையும் ஆதாரங்களோடு அலசியுள்ளார். ஒரு கோடி அறிவித்தவர் படிக்க வேண்டிய கட்டுரை இது. நீராதாரங்களின் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் நீராதாரங்களின் ஆன்மாவைக் குறிவைத்தே அவற்றோடு கலப்பதை உணர்த்தி இயற்கைக்கு எதிரான எந்தச் செயலுமே தோல்வியில்தான் முடியும், என்கிறார் தியடோர். பெரிய நீர்த்தேக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்காட்டி நமது நீர்த்தேவைகளைச் சமாளிக்க சிறுசிறு ஏரிகளே உதவும் என்பதை ‘நம்மிடமுள்ள ஏரிகளை ஐந்தாறு அடிகள் தூர்வாரினாலே நமது பாசன நீர்த் தேவை பூர்த்தியாகு’ மென்ற சூழியலாளர் ஜே.சி.குமரப்பாவின் கருத்துகொண்டு நிறுவுகிறார்.

சிவிங்கிப்புலி, குள்ள நரி போன்ற விலங்கினங்கள் மறைந்துவிட்டதையும் அலையாத்திக் காடுகள் என்னும் தாவர இனம் அழிந்துவருவதையும் வேதனையுடன் சொல்வதோடு பல்லி விழுந்த உணவை உண்டால் மரணமே என்ற நம்பிக்கை மருத்துவ ஆதாரமற்றது உண்மையில் பல்லி நஞ்சற்றது போன்ற செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார்.

புலி செயல் திட்டம், டால்பினின் தமிழ்ப்பெயர் ஓங்கில், தென்னிந்தியாவில் காட்டெருமை கிடையாது, மானல்ல இரலை என்னும் வெளிமான், அலங்கு எனும் விலங்கைத் தவறுதலாக எறும்பு தின்னி என அழைப்பது, சோலைபாடி எனும் புள்ளினம் போன்ற தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இன்முகம் காட்டுகின்றன. நதிகள் பூமியின் மேனியில் தழும்பாகிவிட்டன என்ற உவமையே நதி எங்கே போகிறது? கட்டுரையிலும் (பக்.98இல்) நதிகள் இணைப்பு: ஒரு மாயமான் வேட்டை கட்டுரையிலும் (பக்.151இல்) கையாளப்பட்டுள்ளது. பிரச்சினை என்ற சொல் பிரச்சினை, பிரச்னை, பிரச்சனை எனப் பலவிதமாக அச்சாகியுள்ளது. ஒரு முகத்துவாரத்தின் மகத்துவம் என்னும் கட்டுரையில் (பக்.83இல்) ஆழ்வார்ப் பேட்டை அடைப்புக்குறிக்குள் ஃபோர்ஷோர் எஸ்டேட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பட்டினப்பாக்கம் தான் ஃபோர்ஷோர் எஸ்டேட்.

முன்னுரையில் இத்தகைய கட்டுரைகளுக்கான வாசக வரவேற்பு பற்றிய ஆசிரியரின் தயக்கத்தை வாசிக்கையில் இந்தத் தலைமுறைக்காவது இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் புரிகிறது. வேதாகமம் ‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்கிறது. அடுத்த தலைமுறைக்கான மழை இப்போதும் பெய்கிறது. பாதுகாப்பதும் பரிதவிப்பதும் அவரவர் விருப்பம்.

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
சு. தியடோர் பாஸ்கரன்

பக். : 200 விலை: ரூ. 120
முதற்பதிப்பு: டிசம்பர் 2006
வெளியீடு
உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம், சென்னை 600 018

www.kalachuvadu.com/issue-109/page117.asp


 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்