விண்வெளியில் பறந்து சாதனை
படைக்கும் பெண்கள்
- மாலினி அரவிந்தன் -

விண்வெளியில் பறந்து, பூமியை வலம்
வந்து கொண்டிருக்கும் நான்கு விண்வெளி வீராங்கனைகளும், பெண்கள்
ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒருதடவை
நிரூபித்திருக்கிறார்கள். வண்ணச்சிறகடித்து வானத்தை தொட்டுவிட
நினைக்கும் பட்டாம் பூச்சிகளாய் எண்ணச் சிறகடித்து, கனவுகளை நிஜமாக்கி
இன்று எல்லோரும் வியக்கும் வண்ணம் அரிய சாதனை படைத்திருக்கிறார்கள்
இந்தப் பெண்கள் என்றால் மிகையாகாது. ஆம், இந்த வாரம் நான்கு பெண்கள்
ஒரே சமயத்தில் விண்வெளியில் பறந்து யாருமே எதிர்பார்க்காத சாதனை ஒன்றை
நிலை நாட்டியிருக்கிறார்கள். இவர்களில் ஸ்ரெவ்னி வில்சன், (Stephanie
Wilson) டொரதி மெக்காவ், ( Dorothy) நாக்கோ ஜமாசாக்கி (Naoko
Yamazakii) ஆகிய மூன்று பெண்களும் விண்வெளிக் கலத்தில் சென்ற
திங்கட்கிழமை விண்வெளி நிலையம் நோக்கிச் சென்றவர்கள். ஏற்கனவே ரேஸி
கோட்வெல்ட் டைஸன் என்ற பெண் சென்றகிழமை, ரஸ்ய நிலையத்தில் இருந்து
விண்வெளி நிலையத்திற்குச் சென்று அங்கே தங்கியிருக்கிறார். ஆக மொத்தம்
நான்கு பெண்கள் இப்பொழுது விண்வெளியில் தங்கியிருக்கிறார்கள். அதிக
பெண்கள் ஒரே நேரத்தில் விண்வெளியில் தங்கியிருந்த சாதனையாக இது
கணிக்கப்படுகிறது.
மண்ணைவிட்டு விண்ணைத் தாண்டும் முயற்சியில் மனிதன் தனது கவனத்தைப் பல
வருடங்களாகவே செலுத்திக் கொண்டிருந்தாலும் 1957ல் தான் அந்த
முயற்சியில் அவனால் வெற்றி பெறமுடிந்தது. அன்றுதான் ஸ்புட்னிக் - 1
என்ற ரஸ்ய விண்கலம் முதன்முதலாக விண்வெளி நோக்கி ஏவப்பட்டது. அந்த
வெற்றியைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் ஸ்புட்னிக் - 2 என்ற
விண்கலத்தில் லைக்கா என்ற நாயைப் பரிட்சார்த்தமாக அனுப்பிப்
பார்த்தார்கள். போதிய முறையில் விண்கலம் வடிவமைக்கப்படாத படியால்
விண்கலம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே லைக்கா இறந்து விட்டது. நான்கு
வருட விடாமுயற்சியைத் தொடர்ந்து, விண்வெளிப் பயணத்தை முதன்முதலாகத்
தொடக்கி வைத்தவர் யூரிககாரின் என்ற ரஸ்ய நாட்டைச் சேர்ந்த விமான
ஓட்டியாவார். இவர்தான்; விண்வெளி நோக்கிப் பயணமானதன் மூலம்
12-04-1961ல் விண்ணைத்தாண்டிச் சாதனை படைத்த முதல் மனிதரானார். அன்று
மாபெரும் சாதனை படைத்த இவர் பின்னாளில் ரஸ்யாவில் நடந்த ஒரு விமான
விபத்தில் பலியாகி இறந்து போனார். தற்சமயம் விண்வெளியில் பதின்மூன்று
பேர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் எட்டு அமெரிக்கர்கள், மூன்று
ரஸ்யர்கள், இரண்டு ஜப்பானியர்கள் அடங்குவர். விண்வெளியில்
தங்கியிருக்கும் பதின் மூன்று பேரில் நான்குபேர் பெண்களாவர்.
தொடக்ககாலத்தில் பெண்களை விண்வெளிப்பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள
யாருமே முன்வரவில்லை. இந்த விண்வெளித் திட்டத்திற்குத் தகுந்தவர்கள்,
இராணுவப் பயிற்சி பெற்ற விமான ஓட்டிகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள்
எதிர்பார்த்தார்கள். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக,
அதாவது 1960ம் ஆண்டுக்குப் பிறகுதான் பெண்களாலும் அவர்களது
விடாமுயற்சியால் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள முடிந்தது. இன்று சுமார்
ஐம்பதிற்கும் மேற்பட்ட பலவேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விண்வெளிப்
பயணத்திட்டத்தில் மிகவும் ஆர்வத்தோடு இணைந்திருக்கிறார்கள். 1963ம்
ஆண்டு விண்வெளியைத் தொட்ட முதல் பெண்மணி என்ற பெருமை ரஸ்யாவைச் சேர்ந்த
வெலன்ரீனா ரெரஸ்கோவா என்ற பெண்மணியையே சேரும். விண்வெளிப் பயணத்
திட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டிய காலம் கனிந்து
வந்ததால், 1978ல் அமெரிக்காவில் ஆறு பெண்கள் நாசா விண்வெளித்
திட்டத்தின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்டு விண்வெளிப் பயிற்சிக்கு
உட்படுத்தப்பட்டனர். 1983ல் விண்வெளி சென்ற முதல் அமெரிக்ப் பெண்மணி
என்ற பெயரை சாலி றைட் என்ற பெண்மணி பெற்றுக் கொண்டார். 1984ம் ஆண்டு
யூலை மாதம் ஸ்வெட்லானா ஸவிற்ஸ்காயா என்ற ரஸ்யப் பெண்மணி விண்வெளியில்
நடந்து காட்டினார். அதே ஆண்டு ஆக்டோபர் மாதம், அமெரிக்கர்கள்
எந்தவிதத்திலும் குறைந்து போய்விடவில்லை என்பது போல அமெரிக்கப் பெண்மணி
கத்தறீன் சுல்வான் விண்வெளியில் நடந்து காட்டினார். 1992ல் முதலாவது
ஆபிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மே ஜேமிசன் விண்வெளிப் பயணத்தை
மேற்கொண்டார். 1995ல் அமெரிக்கப் பெண்மணியான எலீன் கொலின்ஸ் விண்கல
ஓட்டியாக விண்வெளிக்குச் சென்று வந்தார். இவரே மீண்டும் 1999ல்
விண்வெளிப் பயணக் குழுவின் பொறுப்பை ஏற்றுத் தலைமைதாங்கிச் சென்று
வந்தார். 1996ல் நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை
படைத்த பெண்மணி என்ற பெயரை ஷனன் லூசிட் என்ற பெண்மணி பெற்றுக்
கொண்டார். இவர் ஐந்து தடவைகள் விண்வெனிப் பயணத்தை மேற்கொண்டிருந்தது
மட்டுமல்ல, மிர் என்ற ரஸ்ய விண்வெளி நிலையத்திலும் தங்கி இருந்தார்.
இவர் ஏற்படுத்திய சாதனையை 2007ம் ஆண்டு சுனித்தா வில்லியம் என்ற
பெண்மணி விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள்
தங்கியிருந்ததன் மூலம் முறியடித்து சாதனை படைத்தார். சுனித்தா
வில்லியத்தின் தந்தை வழியினர் இந்தியாவில் உள்ள குஜராத்தைச்
சேர்ந்தவர்கள். ரொபோட்டா பொன்டர் என்றவரே விண்வெளிப் பயணத்தில் சென்ற
முதலாவது கனடியப் பெண்மணியாவார்.
என்னதான்
விண்வெளியில் சாதனைகள் படைக்கப் பெண்கள் போட்டி போட்டு முன்வந்தாலும்,
எப்பொழுதுமே சாதனைகள் படைக்க முற்படும்போது எதிர்பாராத தடங்கல்கள்
ஏற்படுவதுண்டு. அந்த வகையில், விண்வெளியில் சாதனை படைக்க
முற்பட்டவர்களில் சிலர் எதிபாராத விண்வெளி விபத்தில் மரணமடைந்தும்
இருக்கிறார்கள். விண்வெளிக்குச் சென்ற பெண்மணிகளில் தம்முயிரைத் துறந்த
பெண்மணிகளும் உண்டு. 1986ம் ஆண்டு சலெஞ்சர் விண்கல விபத்தில் இறந்த
யூடித் ரெஸ்னிக், கிறிஸ்ரா மக்கல்பி, 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கல
விபத்தில் இறந்த கல்பனா சாவெல், லோறல் கிளாக் ஆகிய பெண்களும்
விண்வெளியில் சாதனை படைத்து மறைந்துபோன பெண்களின் பட்டியலில்
அடங்குவர்.
எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிக பெண்கள் விண்வெளியில் தங்கி
இருந்து பல்வேறு துறைகளிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை
அனேகமாக எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல நாடுகளைச்
சேர்ந்த பெண்களும் இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தில்
இணைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இன்னும் என்னென்ன சாதனைகளைச்
செய்யக் காத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் சாதனைகள் படைப்பார்கள்
என்பது மட்டும் நிச்சயம்.
maliniaravinthan@hotmail.com |