இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
 மார்ச் 2008 இதழ் 99 மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
தொடர்நாவல்!
காதலன் - 10 & 11!
- மார்கெரித் த்யூரா -
தமிழில் -  நாகரத்தினம் கிருஷ்ணா -

மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா...எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புக் கோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html

அத்தியாயம் - 18 - இறுதிப் பகுதி.

சைகோனிலிருந்து வந்திருந்த தந்தியில் சொல்லப்பட்ட வாசகம் சரியாக நினைவிலில்லை, எனது இளைய சகோதரன் இறந்து விட்டானென்றோ அல்லது கடவுள் அழைத்துக்கொண்டாரென்றோ இருந்ததாக ஞாபகம். யோசித்துப்பார்க்கையில் கடவுள் அழைத்துக்கொண்டார் என்றே தந்தியில் படித்த நினைவு. நிலமையைப் பரிசீலித்ததில், தந்தியை அவள் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. இளையசகோதரன். இறந்துவிட்டான். தொடக்கத்தில் என்னவோபோலிருக்கிறது, பார்த்துக்கொண்டிருக்க மடமடவென்று உயர்ந்து, எங்கும்பரவி, பூமிக்கடியியிலிருந்து வெளிப்பட்டுச் சட்டென்று என்னைச்சுற்றிக்கொண்ட துயரம், எங்கோ என்னைத் தூக்கிச் செல்கிறது. எனக்கு என்ன நடந்ததென்று நினைவில்லை, நான் இல்லையென்றாகி, என்னிருப்பை வேதனைகள் கபளீகரம் செய்துவிட்டன. ஒரு சிலமாதங்களுக்கு முன்பு எனது குழந்தையொன்றை இழந்ததால் இப்படித்தான் தாங்கவொண்ணா வேதனையிற் துடித்தேன், அவ்வேதனைதான் திரும்பவும் என்னைத் தேடிக்கொண்டி வந்திருக்கிறதா அல்லது இதுவேறா? ஆம் இது வேறு, புதியது. தவிர அக்குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது, எனக்கும் அக்குழந்தைக்குமான அறிமுகத்தைக் குறித்துப் பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை, இளையசகோதரனின் மரணச்செய்தி எனது உயிர் வாழ்க்கையையே அர்த்தமற்றதாக மாற்றிவிட்டது, இதுபோன்ற அனுபவத்தினை எனது குழந்தையின் மரணம் தந்ததில்லையே.

தவறிழைத்துவிட்டோம். செய்தத் தவறு அடுத்த சில நொடிகளிள், உலகெங்கும் என்றாகிவிட்டது. இமாலயத் தவறு. எனது இளைய சகோதரன் இறப்பற்றவனாகத்தான் இருந்திருக்கிறான், நாங்கள் அவதானிக்கவில்லை, உண்மை அதுதான். எங்கள் குடும்பத்திலொருவனாக அவன் உயிர் வாழ்ந்தபோது இறவாமை(immortality) அவனது உடலில் ஒளிந்திருந்திருக்கிறது, அதனை அதாவது அவனது சரீரத்திற்றான் இறவாமைத் தங்கியிருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கிறோம். எனது சகோதரினின் உடல் மரணித்துவிட்டது, இறவாமையும் அவ்வுடலுடன் சேர்ந்து உயிர்நீத்திருக்கிறது. விருந்தினர் பிரவேசித்த உடலுமில்லை, விருந்தினருமில்லை, இன்றைக்கு உலகமெங்கும் இதுதான் நிலைமை. இதுதான் நடக்கிறது, நாங்கள் செய்தது முழுக்க முழுக்கத் தவறு, அத்தவறு உலகமெங்கும் இழைக்கப்பட்டது, அநியாயம்!

அவன்- எனது இளைய சகோதரன் - இறந்தபோது, அவனைத் தொடர்ந்து அனைத்துமே இறந்தாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப்போலத்தான் நான் உணர்ந்தேன், குழந்தை அவனுடைய இறப்புக்குபின்னே என்னைச் சுற்றியுள்ள அனைத்துமே ஒன்றன்பின்னொன்றாக மரணத்தைத் தழுவின.

இதுபோன்ற விளைவுகளுக்குத் தனது மரணம் காரணமாக இருக்கிறதென்கிற உண்மையை அப்பிஞ்சு உடல் அறியவில்லை. தனது இருபத்தேழு ஆண்டுகால உயிர்வாழ்க்கையில் இன்னாரென்று தெரிந்துகொள்ளாமலேயே இறவாமைக்குத் தங்க இடம்கொடுத்திருக்கிறான்.

என்னைத் தவிர வேறொருவர் இவ்வுண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களில்லை. உண்மையைப் உணர்ந்த மறுகணமே, எனது சிறிய சகோதரனின் உடலும் எனதுடலும் வேறுவேறல்ல என்ற ஞானமும் எளிதாய்ப் பிறந்தது, அவன் இறந்தவுடன் நானும் மரணிக்கவேண்டும். மரணித்தேன், இன்றைக்கு நான் பிணம். இளையசகோதரன் என்னை அழைத்துக்கொண்டான், அவனுடன் கலந்துவிட்டேன், நான் இறந்திருக்கிறேன்.

மக்களுக்கு இவ்வுண்மையை எடுத்துச் சொல்லவேண்டும், இறவாத்தன்மைகொண்டதென்று எதுவுமில்லை, இறவாமையும் அழிவுறும், மரணிக்கக்கூடும், அதுதான் நடந்தது, இனியும் தொடரும். தன்னை இன்னாரென்று வெளிப்படையாக அடையாளப் படுத்திக்கொள்ளும் வழக்கம் இறவாமைக்கில்லை, அது பிறரை ஏமாற்றவல்ல கபடவேடதாரி. தன்னை விவரணைக்கு உட்படுத்திக்கொள்ளும் வழக்கம் அதற்கில்லை, மூலக்கோட்பாடாகவேயிருந்துப் பழகிக்கொண்டது. தம்மிடத்திலுள்ள இறவாமையை பிறர் அறியக்கூடாதென ஒருசிலர் கவனமாய் இருப்பர், வேறுசிலர் அவ்விருப்பை வெளிச்சமிட்டுக் காண்பிக்க விழைவர், இரண்டையுமே அவர்கள் சுயநினைவுடன் செய்வதில்லை என்பதை நாம் அறியவேண்டும். இறவாமையென்பது உயிர்வாழ்க்கையால் உணரப்படுவது, கூடுதல் அல்லது குறைவென்ற கால அளவீடு சார்ந்தது அல்ல, அது இறவாமைத் தொடர்பானதுமல்ல, இதுவரை நம் கவனத்திற்கொள்ளத்தவறிய ஒருபொருள். இறவாமைக்கு தொடக்கமுமில்லை, முடிவுமில்லை என்பதும், தற்காலிக நிலைபாட்டுடன் பொருளற்ற காரியங்களில் ஈடுபடும் ஆத்மாவுடன் பிறந்து, ஆத்மாவுடனே முடிந்துவிடும் தன்மையதென்றும் இறவாமையை விமர்சிப்பதும், இரண்டுமே தவறு. சவமாய் பாலையிற்கிடக்கும் மணலும் சரி, குழந்தைகளின் இறந்த சரீரங்களும் சரி, இறவாமைக்கு இரண்டுமே ஒன்றுதான், அது அவைகளைத் தாண்டிச் செல்வதில்லை, ஒதுங்கியேச் செல்கிறது.

எனது இளைய சகோதரனுக்கு நேர்ந்த இறவாமையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை, கட்டுக்கதையின் சாயலுமில்லை, விபத்தாகவும் அமையவில்லை, அப்பழுக்கற்று சுருக்க முடிந்தது. அவன் பாலைநிலத்தில் நின்றுகொண்டு புலம்பவில்லை, புலம்ப அவனுக்கு என்ன இருந்தது, பாலைநிலமென்றில்லை, வேறெங்குங்கும், சொல்லப்போனால் இங்கேயுங்கூட, புலம்புவதற்கு அவனுக்கென்று எதுவுமில்லை. ஞானமற்றிருந்தவன், எதையும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களும் அவனுக்கில்லை. அவன் அதிகம் பேசியதில்லை, வாசிப்பவனுமல்ல, எழுத உட்காருபவனுமல்ல, அனைத்திலும் சுமாரென்றே சொல்லவேண்டும், சில நேரங்களில், வருந்துவதற்குக்கூடக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலிருந்தான், ஞான சூன்யம், பயந்தாங்கொள்ளி.

என் இளைய சகோதரன்மீது நான் கொண்டிருந்த பைத்தியக்காரத்தனமான அன்பிற்கான காரணம் ஒரு புரியாத புதிர். அவன் இறந்தவுடன், எதற்காக எனது உயிரையும் மாய்த்துக்கொள்ளவேண்டுமென்ற அளவிற்குப் போனேன்?தெரியாது. சம்பவம் நடந்தபோது, எனக்கு அவனுக்குமான இடைவெளி பத்து ஆண்டுகள், அதாவது பத்து ஆண்டுகள் பிரிந்திருந்தேன். அவனை அதிகம் நேசித்ததைப்போலத்தான் உணர்ந்தேன், அவன் மீதான எனது அன்பினை வேறொன்றினால் ஈடு செய்யவியலாதென்றே தோன்றியது, எனது நினைவிலிருந்து அவனது மரணம் தப்பியது.

நாங்கள் எங்களுக்குள் உரையாடியது குறைவு. அப்படியே நடந்தாலும் அவ்வுரையாடலில், எங்கள் மூத்த சகோதரனும், எங்கள் தரித்திர வாழ்க்கையும் அரிதாகவே இடம்பெறும், அதுபோலவே அம்மாவுடைய தரித்திர வாழ்க்கையை மட்டுமல்ல, நாங்கள் குடியிருந்த பிரதேசத்தின் சோகங்குறித்துப் பேசுவதுகூட மிக அரிதாக இருந்தது. மாறாக வேட்டை, துப்பாக்கிகள் அவை இயங்கும்விதம், மோட்டார் வாகனங்கள் என்று பேசுவோம். அவனுடைய பொம்மை மோட்டார்வாகனங்கள் உடைபடுகிற நேரங்களில் கோபப்படுவான். எதிர்காலத்தில், எம்மாதிரியான வாகனங்கள் தம்வசமிருக்கும் என்றெல்லாம் பேசியிருக்கிறான். அதுபோன்ற உரையாடல்களால் வேட்டைக்கு உபயோகப்படுகிற துப்பாக்கிகளின் வகைகளையும், விதவிதமான மோட்டார் வாகனங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தேன். கவனமாக இல்லாதுபோன புலிகளுக்கு இரையாகக்கூடும், ஓடும் நீரில் தொடர்ந்து நீந்திப்போனால், மூழ்கி இறக்கக்கூடுமென்றும் நாங்கள் பேசிக்கொண்டதுண்டு. என்னைவிட இரண்டு வயது மூத்தவன் என் இளைய சகோதரன்.

காற்று வீசுவது நின்றது, மழையைத் தொடர்ந்து, மரங்களுக்குக்குக் கீழே அசாதாரண ஒளி, தொண்டைகிழிய பறவைகள் போடும் சத்தம், ஒரு வித எதிர்ப்புக்குரல், குளிர்காரணமாக தமது அலகுகளை உரசிக்கொண்டு, வெளியெங்கும் அவ்வோசையைப் பறவைகள் ஒலிக்கச் செய்கின்றன பயணிகளின் கப்பல்கள் சைகோன் ஆற்றை நெருங்க அவற்றின் எஞ்சின்கள் நிறுத்தப்பட்டன, இனி அவற்றை இழுவைகள் மூலம், மீகாங் துறைமுகத்து வளைவுகளில், சைகோனுக்கு அருகே கொண்டுபோய் நிறுத்துவார்கள், மீகாங் நதியின் கிளைபோன்று பிரியும் அவ்வாற்றுக்கு சைகோன் ஆறென்று பெயர். அங்கே எட்டு நாட்கள் கப்பல்கள் தங்கும். கப்பல்கள் சைகோன் துறைக்கு வரும் நாட்களில் பிரான்சே அங்கு திரண்டதுபோல இருக்கும், அங்கே டின்னர் சாப்பிடமுடியும், நடனமாடமுடியும்.. அதிற் கலந்துகொள்ள கட்டணம் பொதுவாக அதிகம், அம்மாவுக்கு அக்கட்டணம் மேலும் அதிகமென்பதால் எதற்காக அநாவசியச்செலவென்று நுழைவதில்லை, ஆனால் கொலென் பிரதேசத்துக் காதலன் விரும்பினால் உள்ளே நுழைந்திருக்கமுடியும், அவன் அவ்வாறு செய்வதில்லை, வெள்ளைக்காரச்சிறுமியோடு தான் சுற்றுவதைப் பிறர் பார்க்கக்கூடும் என்று நினைத்தான், வெளிப்படையாக அதை அவன் சொல்வதில்லையென்ற போதிலும் அவள் அறிவாள். அப்போதெல்லாம், அதிக வருடங்களில்லை, ஐம்பது வருடங்களுக்கு முன்பு உலகின் எப் பகுதிக்குப் போவதென்றாலுல் கப்பல்களிற் பயணித்தாக வேண்டும், சாலைப்போக்குவரத்தும் இரயில் போக்குவரத்துமின்றியே பெரும் பாலான நாடுகளிருந்தன. அவைகளில் நூறு நாடுகளிலாவது, பல்லாயிரக்கணகான கி.மீ இருப்புப்பாதைகள் வரலாற்றுக்கு முந்தையகாலத்தைச் சார்ந்தவை என்று சொல்லும்படியிருந்தன. அந்த நேரம் பயணக்கப்பல்களாக சைகோனுக்கு வந்தவை அனைத்துமே மெசாழெரி கப்பல்போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்தவை, அவற்றுள் குறிப்பாக மூன்று மஸ்கட்டீயர் என்றழைக்கபட்ட -பொர்த்தோஸ், டர்த்தாஞ்ன்னான், அராமி- கப்பல்கள் பிரசித்தமானவை, அவைகள்தான் அப்போது பிரான்சுக்கும் இந்தோசீனாவுக்கும் போக வரயிருந்தன.

பயணத்திற்கு இருபத்து நான்கு நாட்கள் பிடிக்கும். பயணக்கப்பல்களில் எல்லாமுண்டு:, வீதிகளோடு கூடிய நகரங்கள், மதுச்சாலைகள், காப்பி பார்கள், நூலகங்கள், ஓய்வுக்கூடங்கள், சந்திப்புகள், காதலர்கள், திருமணங்கள், மரணமென்று அத்தனையும் அங்குண்டு. எதிர்பாராமல் ஒரு சில அணிகள் உருவாகும், சிறு குழுக்களாக சேர்ந்துகொள்வார்கள், தவிர்க்க முடியாதது, உருவாகியேத் தீரும், அறிந்தஒன்று, மறக்க முடியாதது. ஒரு சில நாட்களில், அக்குழுவினரின் நடவடிக்கைகள் உயிரோட்டமிக்கதாக மாறிவிடுமென்பதால், பயணம் நினைவில் நிறுத்தக்கூடியவகையில் இனிமையாக அமையும். பெண்களைப் பொருத்தவரை, பயணமென்று சொன்னால் அதுதான். பெரும்பாலானப் பெண்களுக்கும், சில நேரங்களில் ஆண்களுக்குங்க்கூட காலனீய நாடுகளுக்கான பயணங்களென்பது துணிச்சலான அனுபவம். அம்மாவுக்கு ஓவ்வொருமுறையும், தனது இளம் வயது பிள்ளைகளுடன் செய்யும் பயணங்கள் அவ்வாறுதானிருந்தன. அவள் மொழியில் சொல்வதென்றால், "எனது வாழ்வின் உன்னதமான தருணங்கள்".

புறப்பாடுகள். இவைகளில் மாறுதல்களில்லை, பெரும்பாலும் அவை ஒரேமாதிரியிருந்தன. ஒவ்வொரு முறையும் முதன் முதலாக கடற்பயணம் மேற்கொள்வதுபோலத்தான் அவைகளிருக்கும். மண்ணைப் பிரிவதென்பது மிகுந்த வேதனைகளுடனும், திரும்பவும் வருவோமென்ற நம்பிக்கையின்றியும் நடைபெறுகிறது எனினும், பயனத்தை மேற்கொள்வதற்கு ஆண்களோ, யூதர்களோ, சிந்தனைவாதிகளோ, அல்லது விரும்பி கடற்பயணத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்பவர்களோ தயங்கியதில்லை, அவர்கள் வீட்டுப்பெண்களும் அதை அனுமதித்தார்களேயன்றி அவர்களைத் தடுத்ததில்லை. பெண்கள் பயணிப்பதில்லை, பிறந்த இடத்தை, தங்கள் இனத்தை, உடமைகளை அவர்கள் காவல் காக்கவேண்டும், போனவர்கள் திரும்பிவர ஒரு காரணம் வேண்டுமல்லவா எனவே அவர்கள் காத்திருப்பார்கள். வெகு காலமாக கப்பல் பயணமென்பது அதிக நாட்கள் பிடிக்கக்கூடியதாகவும், இப்போதைய பயனங்களைக் காட்டிலும் ஆபத்தானதாகவுமிருந்தது. பயனகாலமென்பது, பயணதூரத்தைப் பொருத்து அமைந்தது, அந்நாட்களில் எல்லோருமே எல்லாவற்றுக்குமே பழகிக்கொண்டிருந்தார்கள், நிலத்திலும் நீரிலும் குறைவான வேகத்திலும் குறைந்த வேகத்தில் மேற்கொள்ளும் பயணம், கால தாமதங்கள், காற்றுக்கான காத்திருப்பு, மின்னல்கள், சூறாவளி, சூரியன், மரணமென்று அப்பட்டியல் நீளமானது. வெள்ளைக்காரப் பெண்ணறிந்த கப்பல்கள் அந்த வகையில் கடைசியென்று சொல்லவேண்டும், அவள் சிறுமியாயிருக்கும்போதுதான், விமானப்போக்குவரத்துகள் தொடங்கின, பின்னர் மனிதகுலத்தைக் கடற்பயணத்திலிருந்து பிரித்தவையும் அவைதானென்று சொல்லவேண்டும்.

கொலெனிலிருந்த அவனுடைய அறைக்கு ஒவ்வொரு நாளும் போய்வந்தோம். வழக்கத்தைப்போலவே அவன் நடந்துகொண்டான். அங்கிருந்த நேரங்களிலெல்லாம் அவனுடைய நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமுமில்லை. ஜாடியில் தண்ணீரெடுத்து என்னைக் குளிப்பாட்டினான், கட்டிலிற் கிடத்தினான், அருகில் வந்தான், படுக்கவும் செய்தான், பலத்தைப் பிரயோகிக்கவோ, வலிமையைக் காட்டவேண்டுமென்றோ முயற்சிகளில்லை. நாங்கள் புறப்படுவதற்கு நிறைய நாட்களிருந்தன. முடிவான பிறகு எனது உடலுடன் செய்யஒன்றுமில்லை. அவன் எதிர்பார்க்கவில்லை, திடீரென்று அந்நாளும் வந்தது. இனி அவனுடைய உடலுக்கு, நாட்டைவிட்டுப்போகவிருக்கிற பெண்ணினுடல் தேவைக்குரியதல்ல. "இனி எனக்கு நீ வேண்டாம், நீ புறப்பட இன்னும் நாட்களிருக்கின்றன, அதுவரை சேர்ந்திருக்கலாமென்று நினைத்தேன். என்னால் முடியாது", சொன்னான். செய்திகேட்டதுமுதல் தான் இறந்துபோனதாக உணர்கிறானாம், மெல்ல புன்னகைத்தான், இனி தன் வாழ்க்கையில் சிரிப்புக்கு இடமில்லை யென்றான், விரும்பியே புன்னகைத்தாயாவென்று கேட்கிறேன். ஏறக்குறைய அப்படித்தான், மீண்டும் சிரித்தான். "தெரியாது, இதோ இப்போது சிரித்தேனில்லையா, அதை வேண்டுமானால் விரும்பிச் சிரித்ததாகக்கொள்ளலாம்", என்றான். அவ்வளவு வேதனைகளுக்கிடையிலும் அவனிடத்தில் ஒருவித மென்மை, பரிவு. அப்போதைய மனவேதனைகளைக்குறித்து அவன் பேசியவனில்லை, குறைந்த பட்சம் ஒரே ஒரு சொல்லாவது, ம்.. இல்லை. சில சமயங்களில் அவன் முகம் நடுங்குவதுண்டு, பற்களைக் கடித்தபடி, விழிகளை மூடியபடியிருந்தான், ஆனால் மூடிய கண்களில் தெரிந்த காட்சிகளோடு ஒன்றியவனாக இருந்தான். பார்க்கிறவர்களுக்கு, அப்படியான வேதனையை அவன் விரும்புவதுபோலவொரு தோற்றம், என்னை நேசித்ததுபோலவே மனவேதனைகளையும், அதற்காகத் தனது உயிரையும் கொடுக்கத் தயார் என்பதுபோலக் கடுமையாக நேசித்தான். அவன் என்னை வருடவேண்டுமென்று விரும்பினான், ஏனென்று கேட்டபோது, அதற்கு, எனக்கும் அவ்வாறானா அவா இருப்பதாகக் கூறினான். புணர்ச்சியின் உச்சத்தில் எனது முகத்தைப் பார்க்கவேண்டுமாம், புணர்ந்தான், என்னைப்பார்க்கவும் செய்தான், என்னைத் தன் குழந்தைபோல நடத்தினான். இனி இருவரும் சந்திப்பதில்லையெனத் தீர்மானித்தோம், ஆனால் அது இயலாததாகயிருந்தது, முடியவும் முடியாது. ஒவ்வொரு நாளும் மாலையில், அவனது கறுப்பு நிற வாகனத்தில், கௌரவக்குறைவென்று தலைகுனிந்தபடி எனது பள்ளியின் முன்பு எனக்காகக் காத்திருந்தான்.

புறப்படும் நாளன்று, கப்பல் மூன்றுமுறை சத்தமிட்டது, ஒவ்வொருமுறையும் நீண்டு, கர்ணகடூரமாய் முழங்கியது, நகரமெங்கும் கேட்க முடிந்தது. சைரன் முழங்கிய அதே நேரத்தில் துறைமுகப்பகுதியில் வானமெங்கும் கரியபுகை. இழுவைகள் கப்பலை நெருங்கி ஆழமான பகுதிக்கு அதனை இழுத்துச்சென்று விட்டுவிட்டு, மீண்டும் அவை தங்கள் துறைக்குத் திரும்பின. மறுபடியும் கப்பல் புறப்படுவதற்கென்று தனது சைரனை முழக்கியது, அதன் முழக்கத்தில் இன்னதென்று விளங்கிக்கொள்ளவியலாத சோகம், அச்சோகம் அங்கிருந்த பலரையும் அதாவது பயணிப்பவர்கள், அவர்களை வழியனுப்பவந்தவர்கள், பார்வையாளர்கள், யாரையும் நினைத்து வருந்தவேண்டிய அவசியமின்றி வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களென பலரையும் அழவைத்தது. அதன்பிறகு கப்பல் தனது சொந்த சக்தியை உபயோகித்து மெல்ல ஆற்றினை நோக்கி ஊர்ந்தது. வெகுநேரம் கடலை நோக்கிச் செல்லும் அதன் மிகப்பெரிய உருவத்தை அவதானிக்க முடிந்தது. பெரும்பாலான மனிதர்கள் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள், அவர்கள் கைகளிலிருந்த கழுத்துக்குட்டைகளும், கைக்குட்டைகளும் அசையும் வேகத்தில் தொய்வு, முகத்தில் நம்பிக்கையின்மை.. இறுதியாக பூமி கப்பலைத் தனது விளிம்புக்குள் ஒளித்துக்கொள்வதுபோல காட்சி. கால நிலை நன்றாகவிருக்கும் காலங்களில், கப்பல் மெல்லமெல்ல நிழலாக மறைவதைப் பார்க்கமுடிவதுண்டு

கப்பல் தனது முதல் விடைபெறலை சைரன் மூலம் அறிவித்தபோதும், கப்பலுக்கும் கரைக்குமான நடைபாலத்தை உயர்த்தியபோதும், இழுவைகள் கப்பலைத் துறையிலிருந்து ஆழமானப் பகுதிக்கு இழுத்துச் சென்றபோதும் அவளும் அழுதாள். ஆனால் சாமர்த்தியமாக கண்ணீரைச் சிந்தாமல் அழுவதற்குத் தெரிந்துவைத்திருந்தாள். அவன் சீனன். அவனைப்போன்ற காதலர்களுக்கெல்லாம் கண்ணீர் சிந்தி அழக்கூடாது. தனது மனதிலிருந்த வேதனைகளை தாயிடத்திலும், தனது சிறிய சகோதரனிடத்திலும், வழக்கம்போல ஒளித்து எதுவுமே நடக்கவில்லையென்பதுபோலக் காட்டிக்கொண்டாள். அவனது மிகப்பெரிய நீண்ட கறுப்பு நிறவாகனம் அங்கே நின்றிருந்தது, முன்னிருக்கையில் வெள்ளை சீருடையணிந்திருந்த காரோட்டி. அவ் வாகனம் மாத்திரம் மெசாழெரி கப்பற் போக்குவரத்து நிறுவனத்திற்கென்று ஒதுக்கியிருந்த நிறுத்தத்தில் மற்ற வாகனங்களுடன் நிற்காமல் தனித்திருந்தது. காரின் பின்னிருக்கையில் அசைவின்றி, பிறர்கண்ணிற்படக்கூடாதென்பதுபோல அமர்ந்திருந்தான். அவள் கப்பற் தளத்தின் கைப்பிடியைப் பிடித்தபடி ஆரம்பத்தில் நின்றதுபோல இருந்தாள். அவன் தன்னைப் பார்க்கிரானென்று அவள் அறிந்திருந்தாள், அவளும் அவனைப் பார்த்தாள், சற்றுமுன்னர் போல இல்லாவிடினும் கறுப்பு மோட்டார் வாகன வடிவில் அவனைப் பார்க்கமுடிந்தது., கடைசியாக அக்காட்சியே தொலைந்துபோனது. துறைமுகமாத்திரமல்ல, பூமியும் கண்ணிலிருந்து மறைந்தது.

தென் சீனக் கடல், செங்கடல், இந்தியப்பெருங்கடல், சூயஸ் கால்வாயென்று எல்லாவற்றையும் கடந்தாக வேண்டும், காலையில் விழித்துக்கொள்வது வழக்கம், விழித்துக்கொண்டோம், கப்பல் அதிக ஆட்டங்காணாமல் முன்னேறிக்கொண்டிருப்பதைவைத்து, ஆழ்கடல் மணற்படுகையால் மூடப்பட்டிருக்கிறதென்பது தெளிவு. பயணத்தில் இந்தியப்பெருங்கடல் முக்கியமானது, தென் துருவம் வரை விரிந்து பரந்திருக்கும் நீர்ப்பகுதி, ஒரு நிறுத்தத்திற்கும் மற்றொரு நிறுத்தத்திற்குமிடையே( குறிப்பாக இலங்கைக்கும் சோமாலிக்குமுள்ள இடைபட்டதூரத்தைக் கடக்க) நீண்ட நேரம் பயணிக்க வேண்டும், சிலநேரங்களில் அதிர்ஷ்டவசமாக அப்பயணம், வேறுகடல்களில் பயணிப்பதைப்போல, மிகவும் அமைதியாக, அதிக ஆரவாரமற்று, பிரச்சினைகள் எதுவுமின்றி அமைந்துவிடும். அந்நேரங்களில் கப்பலில் கொண்டாட்டந்தான், விடுதிகள், நடைபாதைகள், ஜன்னல்களென்று எல்லாவற்றையும் பயணிகளுக்குச் சௌகரியமாக திறந்துவைத்திருப்பார்கள். காற்றோட்டமின்றி தவித்துக்கொண்டிருந்த பயணிகள் தங்கள் கேபின்களிலிருந்து தப்பித்தால் போதுமென்று வெளியேறி உலாத்துவதைப் பார்க்கலாம், ஒருசிலர் கப்பல் தளங்களிலேயே உறங்கிப்போவதுமுண்டு. இவ்வாறான ஒரு பயணத்தின்போது, இந்தியப்பெருங்கடலை கடக்கிறபோதுதான் அச்சம்பவம் நடந்தது, பின்னிரவொன்றில் ஒருவன் இறந்துபோனான். அச்சம்பவம் எப்பொழுது நிகழ்ந்ததென்று நினைவிலில்லை, கடைசியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேனே அப்பயனத்தின்போதா அல்லது வேறொரு பயனத்தின்போதா, சொல்வதற்கில்லை. முதல் வகுப்புப் பயணிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பார் என்று நினைக்கிறேன். ஒரு சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் இளைஞனொருவனும் இருந்திருக்கிறான். விளையாடிக்கொண்டிருக்கிறபோதே, வார்த்தைகளேதுமின்றி எழுந்து நின்றவன், கையிலிருந்தச் சீட்டுகளை மேசைமீது எறிந்திருக்கிறான், பின்னர் தளத்தினைக் வேகமாக ஓடிக் கடந்தவன், தண்ணீரில் குதித்து விட்டான். வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தக் கப்பலை நிறுத்தியபோது, உடற் கூட கிடைக்கவில்லை.

எழுதுகிறபோது அக்கப்பல் கண்களுக்குப் புலப்படவில்லை, மாறாக சாடெக்கும் அங்கே கேட்டக் கதைகளும் நினைவுக்கு வருகின்றன. சாடெக் நகர நிர்வாகியின் மகன் அவன், சைகோன் பள்ளியில் இவளுடன் ஒன்றாகப் படித்தவனென்பதால் அவனை அறிவாள். நல்ல உயரம், சாதுவான முகம், மாநிறம், கண்களிற் கண்ணாடி. அது பற்றிய வேறு தகவல்களோ, அல்லது ஒரேயொரு கடிதாமவது கேபினில் கிடைத்திருக்குமா, இல்லை. வயது மாத்திரம் நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, நினைத்துப்பார்க்க்கையில் உடல் நடுங்குகிறது, பதினேழு வயதென்று நினக்கையிலும் அதுதான் அனுபவம். விடிந்தபோது கப்பல் இல்லை அது புறப்பட்டுவிட்டது, இதில் மிகவும் வேத்னைக்குறியக் காட்சி, சூரியன் உதித்தபொழுது கடல் வெறிசோடிக்கிடந்தது.

பிறகு மற்றொரு சம்பவம், இதுபோன்றதொரு பயணத்தைமுன்னிட்டு இந்தியப் பெருங்கடலைக் கடந்தபோதுதான் அது நிகழ்ந்தது. இரவுதொடங்கி வெகுநேரமாகியிருந்தது. முக்கிய தளத்தில் வால்ஸ் நடனத்திற்கான ஷோப்பென் இசையை பியானோவில் வாசிக்கிறார்கள், மாதக்கணக்கில் அந்த இசையைக் கற்றுக்கொள்ளமுயன்று கடைசிவரை அதை ஒழுங்காக வாசித்தவளல்ல, பியானோ வாசிப்புச் சரிவராது நிறுத்திக்கொள்ளலாம் என நினத்தபோது, தாயும் அதற்கு உடன்பட்டாள், அவளுக்குப் பிடிபடாத அந்த இசையைத்தான் வாசித்துக்கொண்டிருந்தார்கள். எத்தனையோ இரவுகளில் அதுவும் ஒன்றுதான், ஆனால் அந்த இரவு முக்கியமானது, மேலே வானம் ஜொலித்துக்கொண்டிருக்க ஷொப்பென் இசை பொங்கிப் பிரவாகமாகப் பாய்ந்த அந்த இரவு கப்பலிற்றான் பயணம் செய்துகொண்டிருந்தாள். காற்றின் சுவடற்ற இரவு, இருளில் மூழ்கிக்கிடந்த கப்பலெங்கும் இசைவெள்ளம், ஏதோ விண்ணுலகத்தின் ஆணையை நிறைவேற்றுவதுபோல. ஷொப்பென் இசையுடன் அவளை இணைத்தது எது, கடவுளால் தீர்மானிக்கபட்டதா, அவ்வாறாயின் அதன் ஆற்றால்தானென்ன? சொல்லவியலாது. கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள இம்முறை அவள் விரும்பியதைப்போல எழுந்து நின்றாள், கொலென் மனிதனை நினைத்து அழுதாள். அவனை உண்மையிலேயே நேசித்திருப்பாளா என்ற சந்தேகம், ஏனெனில் மணலிற் கலந்த நீர்போல அவளுடைய காதல் நிகழ்ந்ததால், அதன் தன்மையை உணர்வதற்கான வாய்ப்பு அவளுக்கு அமையவில்லை. பியானோ இசை மெல்ல மிதந்து கடலிற்கலக்கிறநேரத்திற்றான் அவனிடத்தில் தான் கொண்டிருந்த காதலின் வலிமையை அவள் உணர்ந்தாள். அதாவது பிற்காலத்தில், மரணத்தினூடாக, இளையசகோதரனின், அமரத்துவத்தை உணர்ந்ததைப்போல.

அவளைச் சுற்றிலும் பயணிகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இசையில் மூழ்கியிருந்தார்கள் நல்லவேளை அவள் அதற்கு இடையூறாகயில்லை. அமைதி. இந்தியப்பெருங்கடலில் இதுபோன்ற மிக அமைதியான இரவொன்றைப் பார்ப்பது இதுதான் முதற்தடவையென்று அவள் நினைத்தாள். அன்றைய இரவின்போதுதான், அவளுடைய இளைய சகோதரன் பெண்மணியொருத்தியோடு கப்பலின் தளத்திற்கு வரும்போது பார்த்ததாக நினைவு. அவன் தளத்திலிருந்தப் பாதுகாப்பு வளைவை பிடித்தபடி நின்றிருந்தான். அவனை அவள் கட்டிப்பிடித்தாள், இருவரும் தழுவிக்கொண்டனர். அக்காட்சியைத் தவறவிடக்கூடாது என்பதைப்போல இளம்பெண் தன்னை ஒளித்துக்கொண்டுப் பார்த்தாள். அப்பெண்மணியை அடையாளப்படுத்த முடிந்தது. அவளுடைய இளைய சகோதரனோடு பலமுறைப் பார்த்திருந்தாள், அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள், அவள் திருமணமானவள். தம்பதிகள் இருவரும் ஆளுக்கொரு திசைக்காய் இருந்தனர். கணவன் மனைவியின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமலிருந்தான். பயணத்தின் இறுதி நாட்களில், இளைய சகோதரனும் பெண்மணியும் பகலில் அவரவர் கேபின்களிற் கழிப்பதும், இரவுவேளைகளில் சந்திப்பதுமாக இருந்தார்கள். அந்நாட்களில் தனது தாயையும் தனது சகோதரியையும் பார்க்கிறபோதெல்லாம் பாராமுகமாக இருந்தான். தாய்க்குக் கடுமையானக் கோபம் அதை அடக்கிக்கொண்டு அமைதியாகயிருந்தாள், ஒருவகையிற் பொறாமையும் அவளுக்கிருந்தது. ஆனால் அந்த இளம்பெண் அழுதாள். பெண்மணி சந்தோஷமாக இருப்பதாக நம்பினாள், தனது இளைய சகோதரனுக்குப் பிற்காலத்தில் என்ன நேருமோவென்று அஞ்சினாள். தங்களைவிட்டுச் இளையசகோதரன் பிரிந்து அப்பெண்மணியுடன் செல்லக்கூடுமென்று நினைத்தாள். அப்படியேதும் நடக்கவில்லை, பிரான்சை அடைந்ததும், இளைய சகோதரன் அவர்களைத் தேடித்தான் வந்தான்.

வெள்ளைக்காரபெண் புறப்பட்டுப்போனபிறகு, தனது தந்தைக்குக் கீழ்ப்படிய அவனுக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்குமென்று அவளுக்குத் தெரியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவனுடைய குடும்பம் பார்த்துவைத்திருந்த பெண்ணையே - உடல் முழுக்க தங்கம் வைரம், வைடூரியமென்று பூட்டிவைத்திருந்த பெண்- அவன் மணம் செய்துகொள்ளவேண்டுமென்று, அவனது திருமணத்தின்போது கட்டளைப்பிறப்பிக்கபட்டது. சீனப்பெண், அவளுக்கும் பூர்வீகம் வடதிசை, ·பூ-ஷ¥வென் நகரம்.

அப்பெண்ணோடு இணைத்துக்கொள்ள அவனுக்கு அதிகக் காலம்பிடித்திருக்கும், அவ்வாறே அவனது சொத்துக்களையும் உடனடியாக உரிமைகொண்டாடியிருக்கமாட்டான். வெள்ளைகார பெண்ணைச் சுலபத்தில் மறந்திருக்கமாட்டான்., அவள் உடல், கட்டில், அதில் அவள் குறுக்காக படுத்திருந்ததென்று ஒவ்வொன்றும் நினைவிலிருக்கும்., அவனது இச்சைகளின் மகுடமாக, அவனது தாபத்தின் சாட்சியாக, அவனது காதல் அனுபவங்களுக்கு எல்லைகளற்ற வெளியாக, புலன் நுகர்ச்சியின் இருட்தன்மைகொண்ட பாதாளமாக அவள் இருந்திருக்கிறாள். பிறகு அதற்கான நாளும் வந்திருக்கும், வெள்ளைகாரச் சிறுமியிடம் கண்ட காதல் அனுபவம் கட்டுக்குள் அடங்காதது, கடுமையான காய்ச்சலையொத்த அத்தாபத்தை வேறொருத்தியின் உடலில் இறக்கியாகவேண்டும், தனது கடந்த கால காதல்வாழ்க்கையை அப்பெண்ணிடத்தில் பொய்களைக்கொண்டு மீள் உருவாக்கம் செய்திருப்பான், தங்கள் குலப்பெருமையை நிலைநாட்டும் வகையில், அவனுடைய செயற்பாடுகள் பொய்த்தன்மைகொண்டதாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தே உறவும், மேலுலகமும், வடதிசையிலுள்ள அவனது முன்னோர்களும் இருந்தார்கள்.

வெள்ளைக்காரப் பெண்ணைப்பற்றிய விவகாரங்கள் அவளுக்குத் தெரிந்திருக்குமா? சாடேக்கைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் அவள் வீட்டில் வேலைசெய்தார்கள், அவர்களுக்கு இக்கதைகளெல்லாம், தெரியும், அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். அவளுக்கும் மனவேதனைகளுண்டு, அதை அலட்சியம் செய்ய அவளால் முடியாது. இருவருமே ஒத்தவயதினராக இருக்கவேண்டும் - பதினாறுவயது. அந்த இரவு அவளுடைய கணவன் அவளிடம் அழுதிருப்பானா? அவள் சமாதானம் செய்திருப்பாளா. அவளுக்கோ பதினாறுவயது, அவளுக்குக் கணவனாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சீனனுக்கு முப்பது வயது, தனக்கேற்படும் விளவுகள் குறித்த கவலையின்றி இதுபோன்ற கள்ளக் காதல் விவகாரங்களில், கூச்சமின்றி சமாதானபடுத்திக்கொண்டிருக்க அவள் முனைவாளா? யாருக்குத் தெரியும், ஒரு வேளை அவளுக்கும் கள்ள உறவுகளிருக்குமோ என்னவோ? யார் கண்டது? இரவுமுழுக்க வார்த்தைகளேதுமின்றி இருவரும் சேர்ந்தே அழுதிருக்கக்கூடும். அழுதுமுடித்து, புணர்ச்சியில் இறங்கியிருக்கலாம். அவளுக்கு (வெள்ளைக்காரப் பெண்ணிற்கு) சீனனுக்கும் அவனுடைய புதுமனைவிக்குமிடையில் என்னதான் நடந்ததென்று உண்மையில் தெரியாது.

போருக்குப்பிறகு பல வருடங்கள் கடந்திருந்தன திருமணங்கள், பிள்ளைகள், மனவிலக்குகள், புத்தகங்களென்று என்னென்னவோ இடைப்பட்டகாலத்தில் வந்துபோயின. தனது மனைவியுடன் பாரீஸ¤க்கு வந்திருந்தான். அவளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்: "நாந்தான் பேசறேன்", அவனது குரலென்று புரிந்தது. "உன்னுடைய குரலைக் கேட்கவேண்டும் போலிருந்தது", என்றான். "வணக்கம், நாந்தான் பேசறேன்", அவள். அவன் சங்கடப்பட்டான், எப்போதும் அவனுடனிருக்கும் அச்சம், அவனது குரலில் திடீரென்று பதட்டம், அவன் குரலிலிருந்த நடுக்கங் காரணமாக, அவனது உச்சரிப்பு சட்டென்று சீனருக்கு உரியதாக மாறியதைக் கவனித்தாள். அவள் புத்தகங்கள் எழுதுகிறாளென்று தெரிந்து வைத்திருந்தான். சைகோனில் அம்மாவை மறுபடியும் பார்க்க நேர்ந்தபோது, அவள் சொல்லியிருக்கிறாள். இளைய ச்கோதரன் விவகாரமும் கேள்விப்பட்டிருக்கிறான். அம்மாவுடைய நிலைமைகண்டு வருந்துவதாகச் சொன்னான். அதன்பிறகு அவளிடம் அவனுக்குச் சொல்ல எதுவுமில்லை என்பதுபோல நடந்துகொண்டான், பிறகு மீண்டும், வழக்கமான தனது வசனத்தை ஒப்புவிப்பவன்போல, இன்னமும் அவளைக் காதலிப்பதாகவும், அவளை மறக்கும் எண்னமில்லையென்றும், அவன் மரணிக்கும்வரை அவளைக் காதலிப்பானென்றும் கூறினான்.

-முற்றும்-

 

nakrish2003@yahoo.fr


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner