இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2010  இதழ் 129  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கவிதைகள்!
அத்தனைக்கு மத்தியிலும் “I am fine"

-- மன்னார் அமுதன்


நட்சத்திரம் மின்னாத என் இல்லற இரவுகள் எப்போதும் விடிந்தே கிடக்கின்றன.

நட்சத்திரம் மின்னாத
என் இல்லற இரவுகள்
எப்போதும் விடிந்தே கிடக்கின்றன.

விலைக்குப் பெற்ற
சுதந்திரம் போலவே
கடமையாய்க் கழிகிறது
காதல்

ஆர்வமாய் எதையோ
நாற்பத்திரண்டிலும் தேடுமவர்
இருட்டில் என்னைத் தொலைத்துக்
கொண்டிருக்கிறார்

எத்தனை கதறியும்
எதிரொலிக்காத வயிறு
ஆண்டுகள் இரண்டு
காத்திரு என்கிறது

ஏலவே கடந்துவிட்ட
முப்பத்தியெட்டில்
திக்கித் திக்கி
தள்ளிப்போகிறது மாதம்

அத்தனைக்கு மத்தியிலும்
அவல் கேட்கும்
வெறும் வாய்களுக்கெல்லாம்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
“I am fine”

amujo1984@gmail.com


இரண்டு கவிதைகள்

- சோ.சுப்புராஜ் -

சோ.சுப்புராஜ் கவிதைகள்

1 .குழல் இனிது; மிஸ் இனிது

செல்ல மகள் சில்வியா
மெல்லத் தான்
பேசத் தொடங்கினாள்.....

அம்மா, அப்பா, மாமா
தாத்தா, பாட்டி என்று
உறவுகளின் பெயர்களை
அவளின்
உதடுகளுக்குள் ஏற்றி
உச்சரிக்கச் செய்வதற்குள்
உயிர் போய்விட்ட்து எங்களுக்கு....

ஆயினும்......
இரண்டரை வயதில்
பள்ளிக்குப் போய் விட்டு
வீடு திரும்பிய
முதல் நாளிலிருந்து
எல்லோரையும்
அழைக்கத் தொடங்கினாள்
மிஸ் மிஸ் என்று.....

2 .தூக்கமிழந்த பொம்மைகள்

இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!

பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்....!

பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;
ஆசிரியையாக

பாடம் சொல்லித் சொல்வாள்;
பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;
தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்......!

விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்.....

இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி.......!

engrsubburaj@yahoo.co.in


சிந்தனைத் துளிகள்.

- வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
-

வேதா. இலங்காதிலகம்.

கற்பனை, அனுபவம் தேடல் அறிவாய்
உற்பவச் சிந்தனைகள் முக்கூட்டுப் பரிமாணம்.
மூளையுள் சிக்கலான ஊற்றாகி
மூளும் திறமையான சுய வெளிப்பாடு,
மொழியுரு ஏறி இனம் காட்டும்.
அனுபவித்துச் சொல்லும் சிந்தனை வரிகள்
மனுக்குல இருளகற்றும் ஒளித் திரிகள்.
மானுடம் சிந்திப்பதால் பூரணமடைகிறது.

சிந்தனை மொழியோடு புணர்ந்தால்
வந்து எழிலாகும் செயலுருவம்,
இசை, நாடகம், ஓவிய மொழியில்
சுந்தரக் கலை அனுபவம் சொர்க்கம்.
அந்தரித்துக் கெந்தும் நொந்த மனதுக்குச்
சாந்தியளித்துச் சஞ்சலம் அகற்றும்.
வந்தனைக்குரிய சிந்தனை நந்தவனமாகும்.
விந்தையாய் உலகை நடத்திச் செல்லும்.

மலையைப் பிடித்துக் கடலை அகழ்வதே
தலையில் எழும் சிந்தனையை அளத்தல்.
தொலை நோக்குச் சிந்தனை வளர்ச்சிகளாய்
தொழில் நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம்
தாவர-விலங்கியல், வானியல், பௌதிகம்.
தாவிய அறிவுவெளி ஆய்வு
தூவிய உன்னதமே மின்சாரம், கணனி,
வந்த வசதிகள் நவீன வாழ்வுகள்.

நாக சர்ப்ப விசமாய் ஏறும்
வேக வன்முறைப் புரட்சியும் சிந்தனையே.
தாகச் சிந்தனைத் துளிகளின் திரண்ட
யாகமே கதை, கவிதை, கட்டுரை.
தேகசுகம், ஆரோக்கியம் மகிழ்வு
வாகுடன் அமைந்தால் சிந்தனை தெளிவாகும்.
பகுத்தறிவுடன் பசிய நடையிடுமிது
பங்கமானால் தலைகீழாய் மாறிவிடும்.

அருவியோட்ட வாழ்வில் அனவரதமும்
குருவிச் சிறகடிக்கும் சிந்தனைத் துளிகள்
கருவியாகி வாழ்வுப் பாதையைச் சீராக்க
உருவிக் கொள்! உணர்ந்;து கொள்!
நல்லவை எங்கிருந்து வந்தாலும்
மெல்லென அவைகளைப் பற்றலாம்
சொல்ல இவர் யாரென உன்னுள்
வில்லெடுக்கும் திமிரினைக் கொல்! வெல்!.

2-3-2008

ராமப்ரசாத் (சென்னை)  கவிதைகள்!

ராமப்ரசாத்

வேரை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம்

பூவொன்றின் காம்பை
ஊடுறுவி வேரை நோக்கி
பயணிக்கும் வாய்ப்பு
கிட்டியது...

பாலின சமத்துவத்தின் ஈரத்தில்
அது மண்ணை முட்டிக்
கொண்டிருந்தது...

மண்ணோ முட்டும்
வேரைச் சுற்றி
இறுகிக்கொண்டிருந்தது...

நான் இளகிய சேற்று நீரில்
என் தின்மையை
சோதித்துக்கொண்டிருந்தேன்...

ஒரு முனகல்...

அடர்ந்த கானகத்தில்
வழக்கமாய்க் கேட்கும்
பழக்கப்பட்ட ஒலிகளைப்
புறந்தள்ளிவிட்டு தூரத்தில் வீழ்வதான‌
ஒரு நீர்வீழ்ச்சியின்
சன்னமான முனகலை ஒத்த
ஒரு முனகல் என் வீட்டு
சமையலறையிலும் கேட்டுக்கொண்டிருந்தது...

அது திருகலில் மிச்சம் வைக்கப்பட்ட‌
தண்ணீர்க் குழாயாக இருக்கலாமென்பதில்
முளைத்துவிடுகிறது ஒரு ஆயாசம்...

அந்த முனகலின் மேலொரு ரசனைக்குப்
பின்னால் ஒளிந்து கொள்கிறது
திருட்டுத்தனமாய் கொஞ்சம் சோம்பல்...

சோம்பலை மிச்சம் வைத்து
திருகலை முழுமைசெய்ய‌
எத்தனிக்கையில் நின்றே விடுகிறது
அந்த முனகல்...

பிச்சைக்காரி

கடந்து போகும் மனிதர்களின்
தன்னலக் கூச்சல்களில்
கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
அவளின் விசும்பல்கள்...

பாத்திரம் நெளிந்திருப்பதால்
தானும் நெளிந்திருப்பதாய்
காரணம் சொல்லிக்கொண்டிருந்தன‌
வழக்கொழிந்த காசுகள்...

ப‌ழுப்பேறி நிறம் மாறிய‌
தலைமுடி, பிச்சைக்காரிகளுள்
அழகானவளாய் அவ‌ளைக்
காட்டுவ‌த‌ற்காய் இருந்திருக்க‌லாம்...

இவைகூட‌ என‌க்குச் சொந்த‌மில்லை
என்ப‌தாய்த்தானோ அவ‌ள்
த‌லைக‌விழ்ந்து கிட‌ந்திருந்தாள்?...

விசும்பல்கள் விட்டுச்சென்ற‌
அவளின் உப்பு நீர்த்துளிகள்
அவளுக்கு இரண்டு பிரம்படிகளைப்
பெற்றுத்தரலாம்...

என் நெஞ்சுக்கூட்டிற்குள்

என் மனவெளியில்
உன் இதழ்கள்
எட்டாத தூரத்தை
நொடிகளில் எட்டிவிட்டது
உன் கண்ணீர்...

இனி வியாச‌னிட‌ம்
வ‌ர‌ம் பெற்றும்கூட‌
உன் இத‌ழ்க‌ளால்
க‌ட‌க்க‌ இய‌லாது
அந்த‌ தூர‌த்தை...

சிறையெடுப்பதில் கூட‌
அஹிம்சை வழிதானா உன்னுடையது...

உன் இதழ்களுக்குக்
கட்டுப்பட விரும்பவில்லை...
உன் கண்ணீருக்குக்
கட்டுப்படாமல் இருக்கமுடியவில்லை...

இது சத்தியமாய்க்
காமமல்ல என்பதில்
தளும்பி வழிகிறது காதல்
என் நெஞ்சுக்கூட்டிற்குள்...

ramprasath.ram@googlemail.com


கவிஞர் பொத்துவில் அஸ்மின் கவிதைகள்!

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இறந்து போவது மேலாகும்

சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்
சோகம் எமக்கு காலாகும்!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்
பாலும் கூட பாழாகும்!

துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு
துயரம் யாவும் தூளாகும்!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்
இறந்து போவது மேலாகும்''

உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம் மறந்து வீழ்ந்து கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்

''பயந்து வாயை பொத்தியிருந்தால்
பழைய சோறும் கிடைக்காது!''
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை
தோட்டாக் கூட துளைக்காது!

நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்
நாளை உனக்கு விடியாது!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்
உயர்வை தடுக்க முடியாது.!

சருகல்ல இவனென்று சாற்று

''தேமாங்காய்'' ''பூமாங்காய்'' ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-ஆமையா.!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்று.

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்'
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்'-விலகாமல்
பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வீர் உணர்ந்து.

கானக் குயில்களை காகமென்போம்

கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்'

கதைத்து பேசியே
'கழுத்தறுப்போம்'
அடுத்தவனின் வளர்ச்சிக்கு
'ஆப்படிப்போம்'

மற்றவர் சிரித்தால்
மனமுடைவோம்
நண்பணின் அழுகையில்
நாம் மகிழ்வோம்

கட்டிப்பிடித்து
கலங்கிடுவோம்
எட்டி நடக்கையில்
ஏசிடுவோம்

தட்டிப்பறித்தே
தளைத்திடுவொம்
மட்டி மடையரை
'மஹான்' என்போம்

எமக்கென்று சொன்னால்
எதுவும் செய்வோம்
'எருமையின் மூத்திரம்
தீர்த்தமென்போம்'

வடிவான அன்னத்தை
'வாத்து' என்போம்
பூக்களை அழகிய
புற்களென்போம்

கானக்குயிலினை
காகமென்போம்
பேசும் மனிதனை
ஊமையென்போம்

'எம்மவர் அமுதினை
எச்சிலென்போம்...
அடுத்தவர் எச்சிலை
அமுதமென்போம்'

'நாய்களை கூப்பிட்டு
பாடு என்போம்
நாட்டுக் குயில்களை
ஓடு என்போம்'

உணவல்ல இதுநல்ல
ஊத்தையென்போம்
உணவிருக்கும் ஆனோலோ
ஊத்தை உண்போம்...

காசுக்காய் குதிரையை
கழுதையென்போம்
கடவுளை கூட
கூவி விற்போம்...

காகித கத்தியால்
போர் தொடுப்போம்-பின்னர்
கவட்டுக்கள் கைவைத்து
தூங்கிடுவோம்.""

இருக்கின்ற போதும்
இல்லையென்போம்
நறுக்கி நறுக்கியே
நாம் உயர்வோம்

கொஞ்சிப்பேசியே
கொள்ளிவைப்போம்..
கொஞ்சும் தமிழையும்
கொன்றுவைப்போம்

தூண்டிவிட்டு நாங்கள்
தூர நிற்போம்.
துவேஷம் வளர்ந்திட
தோள்கொடுப்போம்.

வகை வகையாக
வலை பின்னுவோம்
வயிற்றினில் அடித்தே
வளர்ந்திடுவோம்

எடுத்தெதற்கெல்லாம்
பிழைபிடிப்போம்
எங்கள் பிழைகளை
மறைத்திடுவோம்

குறைகள் சொல்லியே
குழப்பம் செய்வோம்
குழப்பங்கள் செய்தே
குதூகலிப்போம்

'மரங்களின் கரங்களை
முறித்திடுவோம்
பின்னர் மழையிடம் நாங்களே
பிச்சை கேட்போம்'

சிந்திக்க சொன்னால்
'சீ' என்னுவோம்
சீர்கெட்டு போவதே
சிறப்பு என்னுவோம்

'பாவங்கள் செய்தே
பழகிவிட்டோம்
மரணம் இருப்பதை
மறந்திட்டோம்'

வாழ்வில் எதுக்கும் நாம்
வருந்தமாட்டோம்
''சுனாமி'' வந்தாலும்
திருந்தமாட்டோம்.

அத்தனையும் உன்குற்றம்....

இதழோரப் புன்னகையோ
இதயத்தைக் கைப்பற்றும்
உன்னோரப் பார்வைகளால்
உள்நெஞ்சில் தீப்பற்றும்

பார்வைகளால் பலபாடம்
பலதடவை நான்கற்றும்
உணர்வெல்லாம் உன்னோடு
உணர்விழந்து ஊர்சுற்றும்

நட்பிடத்தில் காதல்வந்து
நட்பென்று பூச்சுற்றும்
நட்பொருநாள் கர்ப்பமுற்ற
நடுக்கத்தில் தலைசுற்றும்....

காதலிக்கும் வேளையிலே
கனவினிலும் தேன்கொட்டும்
அத்தனையும் கனவானால்
அடிநெஞ்சில் தேள்கொட்டும்

மயங்கவைத்து மறைவதுவா
மல்லிகையே உன்திட்டம்
ஆசையெலாம் அரைநொடியில்
ஆயிடுமா தரைமட்டம்...?

உன்னுயிரை நீ வெறுத்தால்
உனக்கும்தான் பெறும்நஷ்டம்
ஆழ்மனதைச் சொல்லிவிட்டேன்
அதற்குப்பின் உன்னிஷ்டம்

கன்னியுனை தேடியது
கண்களது குற்றமன்று
கவிதைகளைப் பாடியது.
கவிஞனது குற்றமன்று

அழகை படைத்தளித்து
அதைரசிக்க விழிபடைத்து
ஆட்டிவைக்கும் ஆண்டவனே
அத்தனையும் உன்குற்றம்...

vtvasmin@gmail.com


 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்