இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கவிதைகள்!

தீபச்செல்வன் கவிதைகள்!

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்!

தீபச்செல்வன் கவிதைகள்!

வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.

*******************

கனவில் நிகழுகிற பயங்கர உலகம்!

01.
எனது கனவுகள் ஏன்
பயங்கரமானவையாக
இருக்கின்றன?

முதலில் இரவு
பயங்கரமாக வருகிறது
மிக தாமதமாகவே
தூக்கம் வருகிறது
முழு தூக்கத்தையும்
பயங்கர கனவுகள்
விழுங்கி விடுகின்றன.

02
ஆற்றங்கரை குடிசைகளை
வெள்ளம்
அள்ளிப்போகிறது
எனது அம்மாவையும்
தங்கையையும்
எங்கள்
சமையல் பாத்திரங்களையும்
வெள்ளம்
வழித்தெடுத்துக்கொண்டிருக்கிறது.

03
நான் ஒரு மாட்டு வண்டியில்
எனது நகரத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறேன்
வழிநிறைய கிடந்த
சோதனைசாவடி ஒன்றின்
சுவர்களில் மோதி
நான் பயணித்த வண்டி
சிதைகிறது
இழுத்து வந்த எருதுகள்
செத்து கிடக்கின்றன
வேறு இரண்டு எருதுகள்
தமது கொம்புகளால்
என் வயிற்றை கிழிக்கின்றன.

04
ஆறுகள் சிதைந்து கிடக்க
மரங்கள்
அழிக்கப்பட்டிருக்க
எனதூரில்
எல்லோரும் கூடியிருக்கிறார்கள்
சவப்பெட்டிகளும்
பாடைகளும்
நிறைந்து கிடக்கின்றன
வானத்தை இருள்
சூழ்ந்திருக்க
அவர்கள் கட்டி
அழுதபடியிருக்கிறார்கள்.

05
எனது கால்கள் உடைந்து கிடக்க
பாழடைந்து வரும்
நகரத்தில் உறைந்து விடுகிறேன்
வெளுறிய வீதியில்
செல்ல முற்பட்ட
என் மாட்டு வண்டி
சாம்பலாய் கிடக்கிறது.

06
பகல்களில் தப்பியிருந்தேன்
மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர இரவு வருகிறது
மெல்ல மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர தூக்கமும் வருகிறது.

மிக வேகமாவே
அச்சமூட்டியபடி
பயங்கர கனவுகள் வந்து
தீவிரமாகின்றன
நான் திடுக்கிடுகிறேன்.

எனது கனவுகள்
ஏன் பயங்கரமானவையாகவே
தொடர்கின்றன.. ?

****************************

கிளிநொச்சி!

01

பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.

இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.

02

நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை

இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.

03
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்

04

வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.

வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்

05

கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.

அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.

06

எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.

07

கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தாள்.
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை.
நேரம் சரியில்லை.

08

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.

09

படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.

சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.

10

சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்

11

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.

*********************************

செஞ்சோலை வலி!

இடிந்த கட்டிடங்களுக்குலிருந்து
பள்ளிக்கூடங்கள்
மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
நைந்துபோன
வெள்ளைச்சீருடைகளும்
கிழிந்த புத்தகங்களும்
உடைந்த பேனாக்களும்
வெளியிலெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு அழுகிறது
சூரியன் குருதியில்
மூழ்கி திணறியது
நாம் தூக்கிய
தேனீர்கோப்பைகளினுள்
குருதி தீடீரென கொட்டியது
சிதறிய நம்சதைகள்
மேகங்களுக்கிடையில்
சிக்கிக்கொண்டன.

செஞ்சோலை சிவப்புசோலையானது
மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

அதிகாரவாதிகளிடம் பேசினோம்
கருணையாளர்களிடம் பேசினோம்
நடுநிலையாளர்களிடம் பேசினோம்
யாரும் எதையும் பேசஇயலாது
உதடுகளை சொறுகிக்கொண்டனர்
முல்லைத்தீவு அழுகிறது.

போர் நமக்காகவும் தொடங்கப்படுகிறது
நம்மீதும் தாக்குதல்கள்
இடம்பெறுகின்றன
நமக்காக குண்டுகளும் விமானங்களும்
இறக்குமதி செய்யப்படுகின்றன
நாம் தொடர்ந்து
யுத்தத்துடன் போராடுகிறோம்
வெள்ளைச்சீருடைகளின்
சமாதிகளின் மத்தியில்
நமது புத்தகங்கள்
தொடர்ந்து எரிகின்றன.

மிஞ்சிய ஒருகையில்
பேனாவை எடுக்கிறேன்
மிஞ்சிய ஒருகால்
பள்ளிக்கூடம் நோக்கிபோகிறது
காயப்பட்ட தேகம்மீது
குருதியுறிய வெள்ளைச்சீருடையை
கழுவி உலர்த்;தி
அணிந்திருக்கிறேன்.

கூடு உடைந்ததிற்காகவும்
நிழல் கிழிந்ததிற்காகவும்
முல்லைத்தீவின் அழுகை
அடங்காது எரிந்தது.

பின்குறிப்பு:ஆகஸ்ட் 14 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
வள்ளிபுனம் செஞ்சேலைவளாகத்தில்
இலங்கை வான்படை கீபீர்விமானம் குண்டு வீசி
தாக்கியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.125க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.

******************************

இரவு நட்சத்திரங்கள்!

இந்த இரவு
நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது
ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை
தூக்கி அருந்தமுடிகிறதில்லை
நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன்
எங்களால் எப்படி
இந்த செயற்கை மகிழ்ச்சியோடு
வாழ்ந்துவிட முடிகிறது.

ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது
நாம் பேசுகிறோம்
உன்னைப்பற்றி என்னைப்பற்றி
எங்களைப்பற்றி
எங்களை சூழ்ந்திருப்பவை பற்றி
மனந் திறந்து பேசுகிறோம்.

எங்களோடு கூடியிருந்த நண்பன்
களத்தில் மரணித்ததுபற்றி
நினைவுகொள்கிறோம்
எல்லைகளில் அடிக்கடி
மூளும் போரைப்பற்றி பேசுகிறோம்
துப்பாக்கிகளோடு எந்நேரமும்
எல்லைகளில் விழித்திருக்கும்
போராளிகளைபற்றி பேசுகிறோம.

எங்களால் பாடல்களை இசைக்கமுடிகிறது
சிகரட் விரலிடுக்கில்
புகைந்துகொண்டிருக்கிறது
மதுக்கோப்பபைகள்
சிதறலாக தெரிகின்றன.

எனினும் நாம் எதைப்புரிந்தோம்
நமது தோள்கள்
உதிர்வதைப்போலிருக்கின்றன
நேற்று எங்களோடிருந்த
இந்த மேசையின் நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடிப்போயிருக்கிறான்.

நாம் நிறையவற்றை அறியாதிருக்கிறோம்
மலரவேண்டிய இடத்தில்
மௌனமாயிருந்து உதிருகிறோம்
மதுக்கோப்பைகளின் இருட்டில்
நெருங்கியிருக்கும் நமதன்புகளை
எந்தக்காலையில் உலர்த்தப்போகிறோம்.

நாம் எந்த நிதானத்தை பற்றி
பேசவேண்டும்
எந்த புரிதலும் வார்த்தைளும்
நமக்கு தேவைப்படுகின்றன
பிரகாசமும்
மங்கலும் எங்கிருக்கிறது.

நாம் எந்த பாடல்களை
இசைக்கவேண்டும்
எங்களுக்கு மதுவை
சேவகம் செய்பவனின் வியர்வைத்துளிகள்
பியர்கள்மீது படுகின்றன
அவனிடம் ஒரு நிறைந்த
புன்னகை இருக்கிறது
ஓவ்வொரு காலையிலும்
அவனின் முகம் பிரகாசமடைகிறது.

மதுக்கோப்பைகளிலும்
சிகரட்டுக்களிலும் கலந்துகிடக்கும்
இந்த வெளிச்ச சூழலின்
ஆயுளைப்பற்றி என்ன பேசினேன்?
சிலவேளை நான் தவறாய் பேசலாம்
இந்த மேசையில் நிறைய விடயங்களை
புரியமுடியும்
நெருக்கத்தை பரிமாறமுடியும்
ஆதரவும் பலமும் பிறக்கமுடியம்
வார்த்தைள் கடும் அர்த்தமாயிருக்கும்
நாம் அறியவேண்டியவை
நிறைய இருக்கிறது.

நான் தள்ளாடுகிறேன்
சிகரட்டின் நுனியில் குடிவாழும்
நெருப்பை இழத்தபடி
இரவில் வெளிச்சம் தீர்வதுபோலிருக்கிறது.

பாடல்களை நிறுத்துகிறோம்
வானத்திற்கு காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது
அவதானத்துக்கான நேரம் வருகிறது
வானத்தில் நட்சத்திரங்களை காணவில்லை
சிகரட்டுகள் அணைகின்றன
மதுதீர்ந்த கோப்பைகளை
சேவகன் எடுத்துப்போகிறான்
மேசை வெளிக்கிறது
நாம் இரவின் நடுவிலிருக்கிறோம்।

பதுங்குகுழியை இன்றும் கூட
சுத்தம்செய்ததுபோலிருக்கிறது।

***************************

யாழ்.நகரம்!

ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ்.நகரம்.

01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.

மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.

எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.

வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.

யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.


02

நான் யாரென்பதை
நீங்கள் அறியாதிருப்பீர்கள்
ஆவலற்றிருப்பீர்கள்
நீங்கள் சாப்பிடும்
கொத்துரெட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்.

இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்கமாட்டமடீர்கள்
உங்களால்
தொடர்ந்து அமைதியாய்
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்.


03

கடையில் இருக்கும்
பொருட்களில்
சிலவற்றை முண்டியடித்து
வாங்கிவிட்டு
குறைந்த பொருட்களோடு
கூடிய பாரத்தோடு
வீட்டிற்கு வருவீர்கள்
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி
கூப்பிட்டு
அவதானமாக கதவை திறந்து
உள் நுழைவீர்கள்
கதவுகள ஜன்னல்களை
இறுக சாத்திக்கொள்வீர்கள்.

அவன் என்ன செய்திருப்பான்
என்ற கேள்வி
நீர் தீர்ந்து காற்று வரும்
குழாயை உலுப்புகையிலும்
எழாமலிருக்கும்.

ஒரு பக்கத்துடன் வெளிவரும்
நாளைய தினஇதழ்
அதில் அவன் சாவு
இனங்காணப்பட்டிருக்கும்
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
ஏழு மணியுடன்
கண்னை மூடிக்கொள்கையில்
இரவு பெரிதாக விரிகையில்
எதுவும் நினைவு வராது.

நாளை அந்த கொத்துரொட்டிக்கடை
பூட்டியிருக்கலாம்
வேறு எங்கேனும்
ஒரு கொத்துரொட்டிக்கடை
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.
கொஞ்ச பொருட்களுடன்
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.

04

நான் என்ன செய்தேன்
எதை விரும்பினேன்
யாரை நேசித்தேன்
யாரை எதிர்த்தேன்?

எனது வீடு எந்த
கிராமத்திலிருக்கிறது
எனது பேஸில்
யாருடைய படம் இருந்தது
எந்த பிரதேச வாடையுடைய
உடைகளை
நான் அணிந்திருந்தேன்
எனது தலைமுடி
எப்படி சீவப்பட்டிருந்தது?

யார் என்ன கவனித்தார்கள்
எந்த முகாங்கள்
அமைந்திருக்கும் வீதியால்
நான் பயணிக்காதிருந்தேன்?

எந்த சீருடைகளுக்கு
நான் அச்சமாயிருந்தேன்
ஏன் பொது உடைகளுடன்
வந்தவர்களால்
நான் சுடப்பட்டேன்?

எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?

05

நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரங்களுக்குள்
என்ன இருக்கிறது?
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்
என்ன நடக்கிறது?

05.09.2006.யாழ்.நகரம்.

***************************

பதுங்குகுழியில் பிறந்த குழந்தை!

ஒருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

02

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்

பதுங்குகுழியினுள்
அவர்களின் பள்ளிக்கூடங்கள்
தொலைந்துவிட்டன.
இசையின் நாதம்
செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறக்கின்றன

மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.

நமது வாடிய முலைகளுடன்
மெலிந்த குழந்தைகளை பெற்று
புன்னகைப்பட்ட
நாடு செய்கிறோம்.
இந்தப் பதுங்கு குழியில்
கிடக்கும்
எனது குழந்தையின் தாலாட்டில்
நான் எதை வனைந்து பாடுவது?

03

தாய்மார்களின் வற்றிய
மடிகளின் ஆழத்தில்
குழந்தைகளின் கால்கள்
உடைந்துகிடக்க
பாதணிகள்
உக்கிக்கிடந்தன.

அவர்களின் உதடுகள்
உலர்ந்து கிடக்கின்றன
நாவுகள் வரண்டு
நீள மறுக்கின்றன
நாங்களும்
திறனியற்ற நாவால்
இந்தக் குழந்தைகள்
கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?

04

குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

எதையும் அறியது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்

05

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்;த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்

அது நாளை என்னிடம்
ஜனாதிபதியையும்
இராணுவத் தளபதிகளையும்
விசாரிக்கக்கூடும்
நான் நிறையவற்றை
சேமித்துவைக்க வேண்டும்.

கண்ணாடிகளை உடைத்து
தண்ணீரைக் கிறுக்கி
எங்களை நாங்கள்
காணாமல்
இருட்டில் வாழ்ந்தோம் என்றும்
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின்
தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கருத்திருந்தது என்றும்
நான் கூறவேண்டும்.

06

நான் மலட்டுத் தன்மை அடைவதற்கு
வேண்டியதற்காக
அப்பொழுது வெட்கப்பட வேண்டியிருக்கும்
ஏதாவது பேசுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
என்ற எனது உரையால்கள்
தலைகுனிந்து கிடக்கும்

07

பதுங்குகுழிக்குள்
எனது குழந்தையின் அழுகை
உறைந்துவிடுகிறது

08

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்

**********************

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் , பிரகடனமும்!

தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.

நள்ளிரவு அதிர
கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய
சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.

தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும்
சொற்களை
சூன்யப்பிரதேசத்தில்
திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.

குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட
நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.

திசைகளை விழுங்கும்
இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்
குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.

அதில் குரல் பிடுங்கி
எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும்
நுளம்புகளை
பூனைகள் பிடித்து சாப்பிடுகின்றன.

தலைகளை பிடுங்கி
எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள்
எழும்பி பறக்கின்றன.

முழு யுத்தத்திற்கான
பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.

வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.

குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.

deebachelvan@gmail.com
வலைப்பதிவு: கீறல்பட்ட முகங்கள்
http://keralpaddamukamkal.blogspot.com/


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner