இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2009 இதழ் 110  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் அறிமுக வரிசை - 4
அறிமுகம்: (மலேசிய) எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு

- ஜெயந்தி சங்கர் -

ஜெயந்தி சங்கர்1952 முதல் எழுதி வரும் மலேசியாவின் முன்னணிச் சிறுகதை/நாவல் எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு, தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலேயாவில்/மலேசியாவில் நிறைய எழுதப்பட்ட காலகட்டத்தில், நகர்சார்/பெருநகர்சார் வாழ்வைப்பதிவு செய்த சிலருள் முக்கியமானவராகிறார். மலேசிய இதழ்களிலும், தமிழ் நாட்டின் தீபம், கணையாழி, கல்கி, இந்தியா டுடே, தீராநதி, காலச்சுவடு, யுகமாயினி, வார்த்தை ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். இணைய இதழ்களான 'திசைகள்' 'திண்ணை' 'பதிவுகள்' ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். தனது 17வது வயதிலேயே நாடு தழுவிய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்றபோது தமிழவேள் கோ.சாரங்கபாணியிடமிருந்து 'சிறுகதை மன்னன்' என்ற பாராட்டைப் பெற்றார்.

உண்மையில் ரெ.கார்த்திகேசு அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் நன்கு அறியப்பெறுபவர். தனது 12வது வயதில் சிறுவர் இதழ்களில் எழுதத் துவங்கி, மூன்று தலைமுறைகளாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வரும் ரெ.கார்த்திகேசு அவர்களின் மகன் 'ஸித்தார்' எனும் ஹிந்துஸ்தானி வாத்திய இசையில் வல்லவர். அவர் இசையாசிரியரும் கூட. ரெ.கார்த்திகேசுவின் மூத்த சகோதரர் ரெ.சண்முகம் மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இசைக் கலைஞர். அறுபத்தெட்டு வயதிலும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மலேசியாவின் பினாங்கில் இருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தொடர்புத் துறைப் பேராசிரியராகவும் 'துணை டீன்' பதவியிலும் இருந்தவர்.

1920ல் மலேயாவுக்கு வந்த இவரது தகப்பனார் திருச்சியைச் சேர்த்தவர். தாயார் மலேயாவில் பிறந்தவர். தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியைக் கற்ற ரெ.கார்த்திகேசு பின்னர் ஆங்கிலத்தில் இடைநிலைக் கல்வி பயின்று, 1968ல் மலாயா பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 1977ல், Columbia வில் இதழியலில் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார். இங்கிலாந்தின் Leicester ரில் 1991ல், பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

உதாரணத்துக்கு ரெ.கார்த்திகேசுவின் ஒரேயொரு சிறுகதையைப் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். தொழிலில் முதலை இழந்து பங்குதாரர்களால் விரட்டப்பட்டு சாகும் விரக்தியில் இருளை நோக்கிச் செல்லும் படித்த பகட்டான பாஸ்கரன் என்ற ஒரு (முன்னாள்) முதலாளிக்கும் சீனனிடம் வேலை செய்யும் நாகராஜ் என்ற ஒரு சாதாரணத் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக 'இன்னொரு தடவை' சிறுகதை ஆரம்பிக்கும். எளியவன் கொண்டு வந்த சாராயத்தை இருவரும் குடிப்பார்கள். பிறகு, அவரவர் வாழ்க்கை மற்றும் பெண்டாட்டி பற்றிய குறைகள் சொல்லிப் பேசிவிட்டு பாஸ்கரன் நாகராஜையும் 'வா சாவோம்' என்றழைப்பான். போதையில் இருவரும் ஒரு பங்களாவுக்குப் பின்னால் இருக்கும் நீச்சல் குளத்தில் போய் விழப்போவார்கள். முதலில் பாஸ்கரன் நாகராஜுக்கு 'சாவுத் தோழ'னாக வந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு நீருக்குள் குதித்துவிடுவான். ஆனால், நாகராஜனோ, 'நாங்குடியை நிறுத்திட்டேன்னா என் பெண்டாட்டி என்னோட வருவான்னு நெனக்கிறேன். கடைசியா இன்னொரு தடவ முயற்சிக்கிறேன். வல்லன்னா அப்புறம் பார்த்துக்குவோம்', என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடி வேலியின் ஓட்டைக்குள் புகுந்து வெளியேறிப் போய்விடுவான்.அதிக விவரணைகளின்றி பெரும்பாலும் உரையாடலாகவே கச்சிதமாக அமைந்திருக்கும் இந்தச் சிறுகதையின் சிறப்பே வாசித்து முடித்ததும் ஏராளமான கேள்விகள் நம் மனதில் முளைப்பது தான்.

இன்னொரு தடவை என்று சொல்லும் நாகராஜுக்கு மட்டும் வாழ்க்கையின் மீது ஒரு துளி நம்பிக்கை எப்படி இன்னமும் மிச்சமிருக்கிறது? வசதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் லௌகீகங்களுக்கும் அவை கொணருமென்று நம்பியிருந்த மகிழ்ச்சியும் வெறும் மாயையா? பொதுவாகவே, மில்லியன் கணக்கிலான 'டர்ன் ஓவர்', கார் பங்களா, வீடு, வாசல் என்றிருப்போருக்கு வாழ்வின் மீது இருக்கவேண்டிய நம்பிக்கை சடாரென்று காணாமல் போவதேன்? கீழ் மட்டத்தில் வாழும் எளிய மக்களை ஒப்பு நோக்க மேல்மட்டத்தில் இருப்போருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைச் சந்திப்பதில் தைரியம் இல்லாமல் போவதேன்? வசதியானவனுக்கு மனைவி, 'சனிய'னாக இருக்க எளியவனுக்கு தன் மனைவியின் மீது அன்பு இருக்கிறது. சுற்றியிருப்போர் மீது தான் குற்றமும் குறையும். 'அந்திம காலம்', 'காதலினால் அல்ல' ஆகிய இரு நாவல்கள் மற்றும் பல சிறுகதைகள் உள்ளிட்ட ரெ.காவின் படைப்புகளில் பலவற்றை இணையத்தில் http://www.tamil.net/projectmadurai/akaram1.html என்னும் முகவரியில் வாசகர்கள் வாசிக்கலாம்.

மலேசிய வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளரான இவர் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். மலேசிய மற்றும் ஆசிய பொதுமக்கள் தொடர்புச் சாதனங்கள் பற்றி அனைத்துலகக் கருத்தரங்குகளில் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கட்டுரைகள் படைத்துள்ளார். 1974ல் பிரசுரமான 'புதிய தொடக்கங்கள்', 1995ல் பிரசுரமான 'மனசுக்குள்', 2001ல்
பிரசுரமான 'இன்னொரு தடவை', 2003ல் பிரசுரமான 'ஊசி இலை மரம்' ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுதிகள். 2004ல் விமர்சன முகம் என்ற கட்டுரை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் முக்கிய இலக்கிய ஆவணம். பெரும்பாலும் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் ஓரளவுக்கு தமிழ்நாடு மற்றும் புலம் பெயர்ந்தோர் எழுத்துக்களின் வளர்ச்சியையும் ஆராயும் பயனுள்ள கட்டுரைகள். இது தவிர, மலாய் மொழியில் 1994ல் 'Sejarah Perkembangan TV di Malaysia' ('மலேசிய தொலைக் காட்சி வரலாறு') என்னும் நூல் வெளியாகியிருக்கிறது.. மலாயாப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், பொள்ளாச்சி NGM கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இவரது படைப்புக்களை ஆராய்ந்து கட்டுரைகளும் ஆய்வேடுகளும் எழுதியுள்ளனர்.

தமிழ் நேசன் பவுன் பரிசு, மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைகள் போட்டி முதலிய போட்டிகளுக்கு நீதிபதியாக இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பினாங்கு இந்து சங்கத்தின் செயலாளராகவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'தனிநாயக அடிகள் விருது' பெற்றதுடன் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளவர் ரெ.கார்த்திகேசு. 'அந்திம காலம்' நாவலும் (1998) 'ஊசி இலை மரம்' சிறுகதைத் தொகுப்பும் (2003) மலேசியாவில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மிகச் சிறந்த நூலுக்கான டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு பெற்றுள்ளன. கணையாழி இதழின் சம்பா நரேந்திரர் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றுள்ளார் (1999). 'கல்கி' வைரவிழாவை ஒட்டிய சிறுகதைப் போட்டியில் (2002) முதல் பரிசு பெற்றார். 'திண்ணை' இணைய இதழ்/மரத்தடி குழுமம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் (2005); 'மனசுக்குள்' நூலுக்கு லில்லி தெய்வசிகாமணி பரிசு கொடுக்கப் பட்டுள்ளது (1996). தமிழ் நாடு இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கதைத் தேர்வில் இவர் கதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (2003). இவருக்கு மலேசிய அரசாங்க விருதான KMNம் வழங்கப்பட்டுள்ளது.

-------------

மஹேஸ்வரியின் பிள்ளை

 - ரெ.கார்த்திகேசு -

இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுத்தது. மஹேஸ்வரியின் மூத்த அக்காளின் மகனுக்குக் கல்யாணம் குறித்து கார்டு வந்தது. "உங்கள் மேலான வருகையை எதிர்பார்க்கும்..." என்ற தலைப்பின் கீழ் அவள் பெயரும் அவள் கணவனாக என் பெயரும் கூடப் போட்டிருந்தார்கள்.

"நான் தூக்கி வளர்ந்த பையங்க....!" என மகேஸ் பெருமூச்சு விட்டாள்.

அந்தப் பெரு மூச்சுக்கு விளக்கம் "எப்படி போறது?" என்பது. இப்படி
எத்தனையோ திருமணங்கள் வந்து போயிருந்தன. அந்தத் தருணத்தில்தான் எனக்குள் அந்த முடிவு உருவாயிற்று.

"போயிட்டு வா மஹேஸ்" என்றேன்.

என்னை உறுத்துப் பார்த்தாள். "என்ன விளையாட்றிங்களா?" என்றாள்.

"இல்ல மஹேஸ்! போயிட்டு வா. ஒரு நாள் போய் மறு நாள் வந்திடலாம். சங்கரிய கூட அழச்சிக்கிட்டுப் போ. நான் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வீட்டில இருந்து பாத்துக்கிறேன்!"

"முடியுமா உங்களால? அள்ளிப்போட, கழுவ, குளிப்பாட்ட?"

"முடியும்" என்றேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதற்கு மேலும் முடியும்.

அன்று அவள் சரியென்று சொல்லவில்லை. ஒரு நாள் முழுதும் யோசித்திருந்தாள். மறு நாள் மாலையில்தான் சொன்னாள்: "நீங்க நிச்சயமா முடியும்னு சொன்னிங்கன்னா நான் போகலான்னுதான் இருக்கேங்க. நானும் எங்க ஜனத்தையெல்லாம் பாத்து எத்தனை நாளாச்சி?" என்றாள்.

"முடியும் மஹேஸ்! நீ போய்ட்டு வா!" என்றேன். அப்போதே அந்த முடிவு என்னுள்
உறுதிப்பட்டது.

*** *** ***

அவள் சொல்லச் சொல்ல அந்த உடலைத் தூக்கி அருகில் இருந்த வாங்கில் கிடத்தினேன். கழுத்துக்குக் கீழும் பிருஷ்டத்துக்குக் கீழும் அப்படித் தாங்கலாகத் தூக்கி மாற்ற வேண்டும் என்றுச் சொல்லிக் கொடுத்தாள். அப்போதுதான் எலும்புகளுக்குச் சேதமில்லாமல் இருக்குமாம். ஒன்றும் சிரமம் இல்லை காற்றுப் போலத்தான் இருந்தான்.

"இந்த பக்கெட்டில சுடுதண்ணி பிடிச்சிக்க வேண்டியது. கைச்சூடா வெது வெதுன்னு இருந்தா போதும். இந்த பேம்பர்ஸ்ஸ கழட்டி வீசிட்டு உடம்பு முடுக்க துடைச்சி விட்டுடுங்க. கீழெல்லாம், முதுகெல்லாம் கழுவணும். சின்னச் சின்ன புண்ணு இருக்கும் பாருங்க. இந்தக் கிரீமத் தடவணும். அப்புறம் கொஞ்சம் பவுடர் பூசிட்டு புது பேம்பர்ஸ் போட்டு, மேல சட்ட போட்டுடுங்க. அப்புறம் அப்படியே தூக்கிப் படுக்க வைக்கணும்."

எல்லாம் அவள் திருப்திக்குச் செய்து காட்டினேன். திரவம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். மருந்துகளுக்கும் மணிக்கணக்கு இருந்தது. இரவில் மூச்சடைத்து இளைக்கலாம். சத்தம் கேட்டால் பார்க்க வேண்டும். இளைப்பது போல் தெரிந்தால் ஆக்ஸிஜன் குப்பியின் மூக்கு மூடியை தலையைச் சுற்றி மாட்டி வால்வைத் திறந்து சுவாசிக்கச் செய்ய வேண்டும். இரவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுவது போல் அலாரம் வைத்துக் கொண்டுதான் படுக்க வேண்டும். திரும்பத் திரும்பச் சொன்னாள்.

எதற்காக இத்தனையும் செய்வது என்று நான் கேட்கவில்லை. என்ன நலனைக் கருதி? என்ன எதிர்காலத்தைக் கருதி? கேட்கவில்லை. "சரி சரி" என்றேன். அனைத்துக்கும் துல்லியமாக நேரம் குறித்து விவரங்கள் எழுதி ஓர் அட்டவணைத் தயார் பண்ணினாள். அதை நான் சுலபமாக எடுத்துப் படிக்கும் வகையில் ·ப்ரிட்ஜின் மேல் காந்தக் கற்கள் வைத்து ஒட்டினாள். அவள் பட்டம் பெற்ற ஆசிரியை. வேலையை விட்டு நான்கு ஆண்டுகள் ஆனாலும் "மெத்தடாலஜி" இன்னும் மறக்கவில்லை.

வீட்டுக்கு டாக்சியைக் கூப்பிட்டு அவர்களை அனுப்பி வைத்தேன். சங்கரி அழகான பேன்ட் சூட் போட்டிருந்தாள். இரட்டைச் சடை போட்டிருந்தாள். கல்யாணத்தன்று போட்டுகொள்ள அவளுக்குப் பட்டிலான பாவாடையும் இடுப்பின் பாதியைக் காட்டும் சட்டையும் வைத்திருக்கிறாள். அவளுக்கென்று வாங்கிய இரட்டை லொக்கெட் சங்கிலியும் அவள் பெட்டியில் இருந்தது. நாளை எல்லாம் அணிந்து அழகாக இருப்பாள்.

"தம்பிய பாத்துக்குங்க அப்பா!' என்று பெரிய மனுஷத் தனத்தோடு எனக்குக் கட்டளை போட்டாள். இவள் இறைவன் எனக்குக் கொடுத்த வரம்.

கடைசியாக அவனைப் படுக்கையில் குனிந்து முத்தமிட்டு "பாத்துக்குங்க. நாளைக்கு ராத்திரிக்குள்ள வந்திட்றேன்" என்று சொல்லிப் போனாள் மஹேஸ். கண்களில் நீர் இருந்திருக்கலாம். நான் கவனிக்கவில்லை. என் கவனம் வேறு திசையில் இருந்தது.

*** *** ***
கருவில் குழந்தை சரியாகப் புரளவில்லை என்னும் போதே எங்கள் கவலைஆரம்பித்திருந்தது. சங்கரி பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து தரித்த கரு அது. எங்கள் உற்பத்திச் செழுமையில் குறை ஏதும் இல்லை. ஆனால் சங்கரியை வளர்த்து பாலர் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பிக்கும் வரை இன்னொரு குழந்தை வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. அப்படி எங்கள் மனதை அவள் ஆக்கிரமித்திருந்தாள். எங்களுக்கு வாழ்வில் முன்னேறும் வெறி இருந்தது. எங்கள் வேலைத் தகுதியை உயர்த்திக் கொள்ள நேரமும் உழைப்பும் தேவையாக இருந்தது.

நான் கட்டிடக் கலைத் துறையில் டிரா·ப்ட்ஸ்மேனாக இருந்து கொண்டு பகுதிநேரமாக கரஸ்பான்டன்சில் பட்டப் படிப்பு படித்து வந்தேன். தேர்ச்சி பெற்ற ஆர்க்கிடெக்ட் ஆவது என் இலட்சியம். மஹேஸ் பட்டதாரி ஆசிரியை. பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியையாக உயர்வதற்கு வாய்ப்பிருந்தது. ஆகவே பல பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருந்தாள். வீட்டில் ஒரு இந்தோனேசியப் பணிப் பெண்ணை வைத்துக் கொண்டிருந்தோம். நல்ல பணிவான பெண்.

அடுத்த குழந்தை விரைவாக வந்துவிடக் கூடாது என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. சங்கரியின் அன்பைப் பங்கு போட விரும்பவில்லை. மேலும் எங்கள் வேலை உயர்வுக்கு இடையூறாகக் கருச் சுமத்தலும் கைப்பிள்ளை வளர்ப்பும் அமைந்து விடக் கூடாது என்றும் நினைத்தோம்.

மஹேஸ்வரிக்கு தடுப்பு மாத்திரைகளை நாள் தோறும் ஞாபகமாகச் சாப்பிட முடியாது. தவறிப் போகும் நாட்கள் பல. ஆணுறை எனக்கு என்றைக்கும் திருப்தியாக இருப்பதில்லை. கையில் இல்லாமல் தீர்ந்து விடும் நாட்களில் காமத்தின் வசப்பட்டால் ஆபத்தை மறந்து ஈடுபடுவதுண்டு. அதன்பின் சில வாரங்கள் பயத்தோடு இருந்து, அப்புறம் மஹேஸ் எல்லாம் சரியாக இருக்கிறது என்று செய்தி கொடுக்க நிம்மதி வரும்.

இந்த நிலையில்தான் மாதம் ஒருமுறை சாப்பிடும் மாத்திரை ஒன்று இருப்பதாக நண்பன் சொன்னான். அது தாய்லந்திலிருந்து வருகிறது. தன் மனைவி இரண்டு ஆண்டுகளாகப் பயன் படுத்துவதாகவும் நம்பிக்கைக்குரியது என்றும் சொன்னான். அது எளிது என அதை வாங்கி மஹேசுக்குக் கொடுத்தேன்.

சங்கரி நர்சரிக்குப் போகிற ஆண்டில் மஹேசுக்கு பதவி உயர்வு கிடைத்தது.வீட்டில் சங்கரிக்கு அளிக்க வேண்டிய கவனிப்புகளைப் பணிப்பெண் மிகத் திறமையாகச் செய்தாள். எங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என்னும் ஆசை துளிர்த்து வளர மாத்திரையை நிறுத்தினோம்.

கருத்தரித்து ஐந்தாம் மாதம் மஹேசுக்குக் கடுமையான வைரஸ் காய்ச்சல் கண்டது. நான்கு நாள் மருத்துவ மனையில் இருந்தாள். இதனால் கருவுக்கு ஆபத்து உண்டா என டாக்டர்களால் சொல்ல முடியவில்லை. நெருங்கிய நண்பரான ஒரு டாக்டர் மட்டும் கருக்கலைப்பு பற்றி எண்ணமிருந்தால் தான் ஏற்பாடு பண்ணுவதாகச் சொன்னார். மஹேஸ் மறுத்துவிட்டாள். நான்காம் ஐந்தாம் மாதங்களில் கருப்பையில் குழந்தையின் புரளல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என மருத்துவர் கூறியபோது எங்கள் வாழ்வில் இலேசாகக் கரு மேகங்கள் சூழ்ந்தன. ஆனால் ஸ்கேனில் குழந்தை ஆண் என்று உறுதியான போது எங்கள் எதிர்பார்ப்பும் ஆசையும் அதிகமாயின.

ஏழாம் மாதம் அவளுக்குத் தன் பள்ளிக்கூட நேரத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. பள்ளிக்கூட ஆசிரியைகள் அவளைக் கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தார்கள். நான் கேள்விப்பட்டு போய்ச் சேர்வதற்குள் நாங்கள் முன்னரே ஆசையாகத் தேர்ந்தெடுத்த "ஜெகதீசன்" என்னும் பெயரை கொண்டவன் பிறப்பில் சபிக்கப் பட்ட ஒரு பிண்டமாக விழுந்திருந்தான். அதன் பிறகுதான் எங்கள் உலகம் தலைகீழாகிப் போனது.

*** *** ***
என்னவெல்லாம் தேவை என மிகக் கவனமாக நான் திட்டமிட்டதில் பிளாஸ்டிக் கையுறைகள் தவிர வேறு ஒரு உபகரணமும் தேவைப் படவில்லை. அதுவும் கைரேகைகள் படியாமல் இருக்க. மிகச் சுலபமாக முடியக் கூடிய வேலைதான். ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும். கை பலம் ஒன்றும் தேவையில்லை. மனத் திடம்தான் தேவை.

அதை மிகவும் சிரமப்பட்டு ஏற்படுத்திக் கொண்டாயிற்று. தத்துவ விசாரணைகள ஏராளமாகச் செய்து விட்டேன். சமய நூல்கள் பலவற்றைப் புரட்டியாயிற்று. ஏதும் முடிவாகப் பிடிபடவில்லை. கொல்லாமை என்ற அறம் உள்ள சமயங்களில் கூட கொலைகளுக்கு ஏராளமான நியாயங்கள் இருந்தன. புனிதப் போர்கள், தத்துவ விவாதங்கள் செய்து தோற்கடித்துக் கழுவேற்றுதல், சாத்தான் எனக் கூறி எரித்தல், கொலை உனக்கு விதிக்கப் பட்ட கருமம் எனல் இப்படிப் பல. ஆனால் நான் எதிர் நோக்கும் இந்தக் குறிப்பிட்ட நிலைமைக்கு எங்கும் விடையில்லை. வாழ்க்கையில் எந்தக் கேள்விக்குத்தான் விடை துல்லியமாகக் கிடைக்கிறது?

இணையத்தைத் திறந்து பார்த்தபோது "கருணைக் கொலை" என்னும் தலைப்பின் கீழ் "கூகல்" தேடு செயலி 250,000 செய்திகள் இருப்பதாகக் கூறியது. முதல் 50-தான் படிக்க வேண்டியிருந்தது. "ஆம்" என்றும் "இல்லை" என்றும் நிதானமான / உணர்ச்சிகரமான / அறிவியல் பூர்வமான / சமய பூர்வமான விவாதங்கள் இருந்தன. "ஆம்" என்போரது நிதர்சன குருவாக டாக்டர் ஜாக் கெவோர்க்கியான் பெயர் இருந்தது. அவரைத் தரிசித்துக் கொண்டேன்.

ஆனால் என் மஹேஸ்வரி மனத்தாலும் உடலாலும் அலைக்கழிக்கப் பட்டு குதறப் பட்டுவிட்டாள் என்பதைத் தவிர வேறு என்ன நியாயங்கள் எனக்கு வேண்டும்?

குழந்தை ஒரு மாதம் இன்க்யுபேட்டரில் இருந்தது. சுவாசம் சீரானவுடன் சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள். மேலும் ஒரு மாதம் பல்வேறு சோதனைகளுக்காகவும் முதுகுத் தண்டு ஸ்கேன், மூளை ஸ்கேன் செய்வதற்கு வைத்திருந்தார்கள்.

முதலில் முதுகுத் தண்டு பிறப்பிலேயே பிறழ்ந்து அமைந்திருந்தது என்று சொன்னார்கள். ஆகவே பல தசைகளின் அசைவுகள் இல்லாமல் இருந்தது. அப்புறம் மூளையின் சில பகுதிகள் சரியாக அமையவில்லை என்றார்கள். ஆகவே இந்திரியங்களின் செயல் பாடுகள் இல்லை என்றார்கள். "ஏன்" என்று கேட்டால் "எப்படிச் சொல்வது?" என்றார்கள். தாய்லந்தில் இருந்து வாங்கிய கருத்தடை மருந்து போலியானதாக இருக்கலாம். மஹேசுக்குக் கண்ட வைரஸ் காய்ச்சல் கருவைப் பாதித்திருக்கலாம். ஒன்றும் துல்லியமாய்ச் சொல்ல முடியாது. கர்மா என்ற ஒன்றையும் பலர் ஞாபகப் படுத்தினார்கள். எங்கள் கர்மாவா, இவனுடைய கர்மாவா என்பதும் துல்லியமான பதில் இல்லாத வாழ்க்கைக் கேள்விகளில் ஒன்றாக அமைந்தது.

"சரியாக்கலாமா" என்றால் "மிகவும் பச்சைக் குழந்தை; இப்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாது; வளரட்டும் பார்க்கலாம்" என்றார்கள். நான்காண்டுகளுக்குப் பின்னும் எங்கள் சேமிப்பின் பெரும் பகுதிச் செலவழிந்த பின்னும் இன்னும் வேளை வரவில்லை என்றே சொல்லுகிறார்கள். "சரியாக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?" என்றால் "மருத்துவம் விரைவாக வளர்ந்து வருகிறது. ஒரு தீர்வு தோன்றக் கூடும்!" என்றார்கள். "எப்போது?" என்றால் "நாங்கள் கடவுள் இல்லையே!" என்றார்கள்.

அவன் இருதயம் துடித்தது ஒன்றுதான் அசைவு. நெஞ்சு ஏறி இறங்குவதைப் பார்க்கலாம். கண்கள் பலவீனமாகத் திறந்து மூடும். வாயில் பால் ஊட்டினால் விழுங்க முடிந்தது. இப்போதும் திரவ உணவு, அளந்து ஊட்ட வேண்டும். தசைகள் மிக மெதுவாக வளர்ந்தன. தலை வீங்கி இருந்தது. தலை மயிர் வளர்ச்சி இல்லை. கபாலத்தினுள் ஒளியிழந்த வெறித்த கண்கள். அழுகையும் சிரிப்பும் இல்லை. மல ஜலக் கழிவுகள் வந்தன. இந்த நான்காம் வயதிலும் பேம்பர்ஸ் போட்டுத்தான் அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும். பேம்பர்ஸ் வாங்கவே என் வருமானத்தில் பாதி போயிற்று.

மஹேஸ்வரி வேலையை விட்டாள். பணிப்பெண்ணை வைத்துக் கொள்ள பொருளாதார நிலைமை இடம் கொடுக்க வில்லை. அவளே முழு நேரப் பணிப் பெண்ணாக ஆகிவிட்டாள். உடல் மெலிந்து முகம் சிரிப்பிழந்து 20 வயது முதுமை கூடினாள். எனது ஆர்க்கிடெக்ட் ஆகும் இலட்சியம் சிதைந்திருந்தது.

உறவினர்கள் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. அவர்கள் வந்து சோகமாக எங்களையும் பிள்ளையையும் பார்ப்பது மஹேசுக்குப் பிடிக்கவில்லை. சங்கரி ஒருத்திதான் எங்கள் வாழ்வின் விளக்காக இருந்தாள். ஆனால் வீட்டின் இறுக்கமான சூழ்நிலை அவளையும் பாதித்து அவளுக்கும் தம்பியைப் பார்த்துக் கொள்வது முதலிய அன்றாடக் கடமைகளைக் கொடுத்து, தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியில் தள்ளியிருந்தது. அவளுடைய பிள்ளைப் பருவம் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

*** *** ***

இரவுக்குக் காத்திருந்தேன். ஏன் இரவுதான் அதற்குத் தகுந்த நேரம் எனத் தோன்றுகிறதோ தெரியவில்லை. பேய்களின் காலம் என்பதாலா? கதவுகளைச் சாத்தினேன். கையுறைகளை மாட்டிக் கொண்டேன். அவனுடைய படுக்கைக்குச் சென்றேன்.

ஒன்றும் பெரிய வேலையில்லை. மூக்கையும் வாயையும் கெட்டியாக மூடிப் பிடித்துக் கொண்டால் போதும். எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு அனுபவம் ஒன்றும் இல்லை. சின்னப் பூச்சிகளைக் கூட நான் அமுக்கிக் கொன்றதில்லை. மன்னித்து விடு ஜெகதீசா! இது உன் அன்புத் தாய்க்காக! உன் தமக்கைக்காக! இது எனக்காகவும்! உனக்காகவும்தான்! நம் எல்லோருக்கும் இது விடுதலை.

கையை அவன் மூக்கின் மேல் வைத்தபோது "ட்ரிங்" என்று ·போன் அடித்தது அலறலாக இருந்தது. ·போனை எடுக்கலாமா அல்லது இதை முடித்து விட்டுப் போகலாமா என்று நினைத்தேன். இதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியாது. கூப்பிடுபவர்கள் யாராக இருந்தாலும் சந்தேகமுண்டாகும். இதற்கு அவசரமில்லை. நீண்ட இரவு இருக்கிறது.

கையுறைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ·போனை எடுத்தேன். "ஹெலோ" என்றேன். "நாந்தாங்க!" என்றாள் மஹேஸ்.

"என்ன மஹேஸ்?" என்றேன். மனதின் படபடப்பை மறைத்து வைத்தேன்.

"ஜெகா எப்படி இருக்கான்?" என்றாள்.

"எப்படி இருக்கானா? எப்போதும் போலத்தான் இருக்கிறான்" என்றேன்.

"உடம்பு தொடைச்சிங்களா?"

"ஆமா, தொடைச்சேன்" என்றேன். பொய்.

"அவன் நெனைப்பாவே இருக்குங்க!" என்றாள்.

"உனக்கு ஏன் அவன் நினைப்பு? நீ பாட்டுக்குப் போன காரியத்தைப் பார். உன் உறவினர்களோட போய்ப் பேசு! சந்தோஷமா இரு. சங்கரி என்ன பண்ணுது?" என்றேன்.

"தோ புள்ளங்களோட ஒரே ஆட்டம்தான். ஜெகா தூங்கிட்டானா?"

"தூங்கிட்டான்!" பொய். அப்போது பார்த்தபோது கண்கள் விழித்திருந்தன.

"அவன் தூங்கும்போது உத்துப் பாத்தா அவன் சிரிக்கிறது மாதிரி தெரியுங்க! பக்கத்தில போய்ப் பாருங்களேன்!"

பேசாமல் இருந்தேன். "நாளைக்கு வந்திட்றேங்க!" ·போனை வைத்தாள்.

அவனைப் போய்ப் பார்த்தேன். தூங்கிக் கொண்டிருந்தான். எனக்கு சிரிப்பு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நான் யார் அதைப் பார்க்க முடிவதற்கு? திடீரென்று இவன் என் பிள்ளை அல்ல, மஹேஸ்வரியின் பிள்ளை என்ற எண்ணம் தோன்றியது.

இன்று முழுவதும் அவனுக்கு பேம்பர்ஸ் மாற்றவில்லை என்பது ஞாபகம் வந்தது. பிள்ளை அழுக்கோடு இருப்பதை மஹேஸ்வரி விரும்ப மாட்டாள். பேம்ப்பர்சை மாற்றத் தூங்குபவனை எழுப்புவதா இல்லையா? யோசித்துக் கொண்டு நின்றேன்.

(முடிந்தது)

பிரசுரம்: 16/3/2003- "மலேசிய நண்பன்"


jeyanthisankar@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner