இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
சன்னலொட்டி அமரும் குருவிகள்!

- நாகரத்தினம் கிருஷ்ணா -

இம்மாதச் சிறுகதை.இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான்.  பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை - பாரீஸ் டெல்டா ஏர்லைன்ஸில் முதன்முறையாக அவனைக்கண்டு தமிழில் பேசப்போக அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.  இரண்டாவது முறை. சூப்பர் மார்க்கெட்டொன்றில் வாங்கியப்பொருட்களுக்கானப் பணத்தைச் செலுத்தவென்று வரிசையில் காத்திருந்தபோது பார்த்திருந்தான். வரிசையில் நின்று ஒரு காரியத்தைச் செய்வதென்பது இவனுக்குப் பிடிக்காத விஷயம், அந்த எரிச்சலில் அவனிடத்தில் அக்கறை காட்டவில்லை.

இவனுடைய நிறத்தில் யாரையாவதுப் பார்க்கச் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவர்களிடம் உரையாட மனமும் விழைந்திருக்கிறது. ஆனால் அதனைச் செயல்படுத்த முயன்று இரண்டொருமுறை சூடுபட்டிருக்கிறான். தவிர மொரீஷியர், பாகிஸ்தானியர், பாங்களாதேஷ், இலங்கையர் என எல்லோருமே இவனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.

வரிசையில் இறங்கியிருந்த பிளாஸ்டிக் தம்ளர்களில் ஒன்றை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு கையிலிருந்த ஒற்றை யூரோ நாணயத்தை மஷினில் போட்டுவிட்டு சில நொடிகள் தயக்கம் காட்டினான், பானங்களின் பெயர்கள் வரிசைக்கு ஐந்தென்கிற கணக்கில், மஞ்சள், ஆரஞ்சு, பழுப்பு, ஊதா பின்புலத்தில் அச்சிடபட்டிருக்க, அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்: கறுப்புகாப்பி, பால் கலந்த காப்பி, கப்புச்சினோ, எஸ்பிரஸ்ஸோ, கிரீம் காப்பி, சாக்லேட், பால் கலந்த டீ, பால் கலவாத டீ, சூப்...

பின்னாலிருந்து செருமப்படும் சத்தம், திரும்பினான், இவனைப் பொடியனாக்கிவிட்டு ராட்ஷசன்போல நிற்பவன் வெள்ளைத் தோல் மனிதன் அல்லது இவனுக்குப் புரியாத மொழி பேசும் அந்நியன். சட்டென்று கையில் கிடைத்த ஒரு பொத்தானை அழுத்தினான். பழுப்பு வண்ணத்தில் திரவம் பிளாஸ்டிக் தம்ளரில் இறங்கியது. அதனை எடுத்துக்கொண்டு மீண்டும் நாற்காலியில் வந்து உட்கார்ந்தான்.

இரண்டு வரிசையாக போட்டிருந்த நாற்காலிகளில், இவனிலும் பார்க்க கறுப்பு நிறத்திலிருந்த இரண்டு ஆப்ரிக்கர், ஒரு அல்ஜீரியன், இரண்டு வெள்ளைத்தோல் மனிதர்கள் பிறகு இவனிடத்தில் இதுவரை வாய் திறவாமல் அமர்ந்திருக்கும் அவன். இவன் அமர்ந்ததைத் கவனித்தவன், பார்வையைத் தவிர்ர்க்க விரும்புவன்போல, எதிர்ச் சுவரில் பார்வையை ஓட்டினான். இவனுக்கும் அவனிடத்தில் பேசும் உத்தேசமில்லை, தலையை விசுக்கென்று வலப்புறம் திருப்பியதில், மூடிய கபினேக்கள் தென்பட்டன, சலித்துபோய், இவனது கண்களும் மற்றவன் பார்வைத் திசைக்காய் பயணித்தித்திருந்தன. திறந்திருந்த சன்னலில் ஏப்ரல் மாதத்து ஐரோப்பிய வானம் சாம்பல் நிறத்தில் அடிவானத்தில் நுரைத்துத் தெரிந்தது. இலேசாகத் தூறல் போட்டுக்கொண்டிருக்கிறது, தொடர்ச்சியாய் மீண்டும் வரிசைகளில் மேற் தளங்களற்ற முன்னும் பின்னும் சரிந்த கூரைகளுடனானக் கட்டிடங்கள், விளம்பரப் பலகையில் தண்ணீர் பாட்டிலுக்கென்று நிர்வாணமாகியிருந்த இள நங்கை, அவளைச் சுற்றிலும் மீண்டும் இவனுக்குப் பிடிக்காத வரிசைகளில் தண்ணீர் போத்தல்கள் - பிரபல பிராண்டொன்றின் விளம்பரம். சன்னல் இருக்கும் திசை கிழக்காகத்தான் இருக்கவேண்டும். சூரியனிருந்தால் ஒருவேளை அனுமானிக்கலாம். இங்கே வந்து ஆறுமாதங்கள் கடந்துவிட்டன, இன்னமும் திசைகள் குறித்து தெளிவில்லாமலேயே இருக்கிறான். சன்னலொட்டி நின்றிருக்கும் மரத்தில் கிளைகளை ஒளித்துக்கொண்டு பருத்திக் காய் வெடித்தமாதிரி வெள்ளைவெளேரென அடர்த்தியாய் பூக்கள். மழைத்தூறலுக்குப் பயந்த குருவியொன்று உட்காருவதற்கு இடம்தேடி மரத்தைச் சுற்றி சுற்றி வருகிறது.

பேரு சின்னதுரை. பிறந்தது, வளர்ந்தது, எட்டாம் வகுப்பு வரை படித்தது, கொஞ்சநாள் பெற்ற தகப்பன்கூட கடலுக்குப் போனது, உள்ளூர் டிராவல்ஸ் ஒன்றில் டிரைவர் உத்தியோகம் பார்த்தது, லோக்கல் கட்சிக்காரன் ஒருத்தனுக்கு அடியாளாக இருந்தது எல்லாமே புதுச்சேரிதான்.

சின்னதுரைக்கு பதினான்கு வயதிலேயே பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. அக்டோபர்மாதம். ஒருவாரமாக நிற்காமல் பெய்த மழையும் அடித்த காற்றும் ஊரை சின்னாபின்ன படுத்தியிருந்தன. குப்பத்துவாசிகள், அரசாங்கத்தின் ஆரம்பப்பள்ளிக் கட்டிடத்தில் தற்காலிகமாக அடைக்கபட்டிருந்தனர். அன்றைக்கு மழை ஓய்ந்திருந்தது, கடல் கொந்தளிப்பு மாத்திரம் அடங்காமல் இருந்தது. நெருக்கத்தில் வரவிருந்த தீபாவளிப்பண்டிகையும், பட்டினியில் கிடந்த குடும்பமும் ஒரு சிலரை துணிச்சலோடு கடலில் இறங்கச் செய்தது. அப்படிக் கடலுக்குப் போனவர்களின் வீரப்பனும் ஒருவன், வீரப்பன் - சின்னதுரையின் தகப்பன். ஒரு நாளாயிற்று இரண்டு நாளாயிற்று. கடலுக்குப் போனவர்களின் பிணங்கள் வேதாரண்யத்தில் ஒதுங்கியிருந்ததாக தகவல் வந்தது. போய் பார்த்ததில், வீரப்பன் பிணமாகக் கூட ஒதுங்கி இருக்கவில்லை. சின்னதுரையின் அம்மா திலகம், அன்றைக்குக் கூடை எடுத்தவள்தான். காலையில் குப்பத்தில் கிடைக்கிற மீன்களை அலுமினியக் கூடையிற் போட்டுக்கொண்டு புதுச்சேரி பெரிய மார்க்கெட் சென்றாளென்றால், மாலை நான்குமணிக்குப் பிறகே திரும்புவாள்.

ஒருநாள் அம்மா திலகத்திற்காக இரவு ஏழுமணிவரைக் காத்திருந்த சின்னதுரை வெறும் வயிற்றுடனேயேத் தூங்கிப்போனான். 'சின்னதுரை ஏய் சின்னதுரை எழுந்திருண்ணு, திலகம் போட்டக் கூச்சலில் அலறியடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தவன், திலகத்தின் பின்னால் நிக்கர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றவனைப் பார்க்கிறான். இருட்டில் அவனை யாரென்று அடையாளம் கொள்ளமுடியாமற் போக, பெற்றவளிடம் கேட்டான், "பின்னால யாரு?", 'வெடிஞ்சதும் சொல்றன், இப்போது இதை துண்ணுட்டுப் படு'', என்ற திலகம், ஒரு பொட்டலத்தைப் இவன் கையில் திணித்துவிட்டு அந்நியனோடு உள்ளே நுழைந்து, கதவினை அடைத்துக்கொண்டாள். இவன் பொட்டலத்தைத் தூக்கி அடைத்திருந்த கதவின்மீது எறிந்துவிட்டு, கோபத்தோடு சுருண்டு படுத்தான். விடிந்து பார்த்தபோது, வந்திருந்தவன் பெரிய மார்கெட் முனிசிபாலிடி தண்டல்காரன் என்று புரிந்தது. ஆரம்ப காலத்தில், அம்மா சேர்த்துக்கொண்ட தண்டல்காரன் இவன்மீது பிரியமாகத்தான் இருந்தான். வருடங்கள் கூடக்கூட தண்டல்காரன் புத்திக் கோணலாயிற்று. வேலைக்குப் செல்லாமல் வீட்டிலேயேப் பழியாகக் கிடந்தான். அந்தி சாய்ந்தால் போதும், திலகத்திடம் நைச்சியம் பேசி, அவள் கொடுக்கும் காசை வாங்கிச் சென்று குடித்துவிட்டுவருவான். திலகத்தையும் துவம்சம் செய்ததுபோக சின்னதுரை பக்கமும் கை நீளும், அவள் அழுது ஆர்பாட்டம் செய்வாள், உள்ளே போய் தாழ்ப்பாளிட்டுக்கொள்வாள். தண்டல்காரன் இறங்கிவருவான். அவளைச் சமாதானப்படுத்தி எப்படியாவது கதவினைத் திறக்க வைத்திடுவான்.

குப்பத்தில் இவன் வயது பையன்களில் சிலர் கடலுக்குப் போனார்கள், இவனும் போனான். சிலர் ஆஸ்ரமத்து கம்பெனிகளில் வேலைக்குச் சென்றார்கள், இவனும் சென்றான். தேர்தலின்போது, அரசியல் கட்சியொன்றிற்காக குப்பத்து ஆண்களுக்குச் சாராயப் பாக்கெட் வினியோகம் செய்யப்போக, சமப்ந்தப்பட்டக் கட்சிக்காரன், இவனை எடுபிடியாக வைத்துக்கொண்டான். கட்சிக்காரன் கொடுத்தத் தெம்பில் நிறைய தப்புகள் செய்தான். காவல் நிலையம், நீதிமன்றம் போய்வருவதும் அதே வீதாச்சாரத்தில் அதிகரித்தது. .சின்னதுரைக்கு அலுத்துவிட்டது.

இந்த நரகத்திலிருந்து விடுபட்டாக வேண்டும். 'டிராவல்ஸ்' ஒன்றில் இரண்டு வருஷம் டிரைவராக இருந்தபோது ஏர்போர்ட்டுக்குச் சென்று பிரான்சிலிருந்து திரும்புகிறவர்களை அழைத்து வந்திருக்கிறான். சிநேகிதன் ஒருத்தனை ஆலோசனை செய்ததில், பிரெஞ்சு குடியுரிமைப் பெண்ணைக் கல்யாணம் செய்தால் பிரான்சுக்கு போனதுபோல என்றான். பிரெஞ்சுக் குடியுரிமையுள்ள பெண்ணைத் தேடி உழவர்கரை, உப்பளமென புதுச்சேரியைச் சுற்றிவந்ததில், இரண்டுலட்சம் மூன்றுலட்சமென பேரம்பேச, நம்மால் முடியாதென்று சோர்ந்திருந்த வேளை, தரகன் ஒருத்தன் ஐம்பதாயிரத்திற்கு விதவையொருத்தியைக் கொண்டுவந்தான். ஐம்பதாயிரத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு தேடிச்சென்றபோது அவளுக்கு வயது நாற்பத்தெட்டென்று தெரிய வந்தது, மூன்று பிள்ளைகள் வேறு. இவன் மூர்ச்சையாகாதக் குறை. ஏற்பாடு செய்த தரகன் தைரியம் சொன்னான். "பிரான்சுக்குச் போனவுடன் வேறொருத்தியை கல்யாணம் பண்ணிக்கொண்டு இவளை டிவோர்ஸ் செஞ்சிடு", சம்பந்தப்பட்டப் பெண்மணியிடம் தகவலைச் சொல்ல, எனக்கும் அதுதான் வழக்கமென்றாள்'. அவளுக்கு அப்படி நடப்பது நான்காவது திருமணமாம். தேவாலயத்தில் வைத்து முறைப்படித் திருமணம் செய்துக்கொண்டாயிற்று. இனி பிரெஞ்சு கான்சலேட்டில் திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும். காலை ஆறுமணிக்கே கூட்டம் வரிசையில் முண்டியடித்தது. இவன் முறைவந்தபோது டோக்கன் முடிந்துவிட்டதென்றுசொல்லி மறுநாள்காலை வரச் சொன்னார்கள். மறுநாள் ஐந்துமணிக்கெல்லாம் வரிசையில் நின்றான். இந்தமுறை அதிர்ஷ்டவசமாக டோக்கனும் கொடுத்தார்கள். பிறகு இவன் டோக்கன் எண்ணைக் குறிப்பிட்டு அழைக்க காலை பதினொன்று ஆகியிருந்தது. சம்பந்தபட்ட ஊழியனின் அறைக்குள் நுழைந்தான். ஊழியனும் இவனைபோலவே ஒரு புதுச்சேரி தமிழன். ஆனாலும் சின்னதுரையை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தான். வேண்டுமென்றே பிரெஞ்சில் பேசினான். இவன் விழிப்பதைப்பார்க்க உள்ளுக்குள் திருப்தி. கடைசியில் ஒரு தாளை நீட்டினான். இதிலுள்ளபடி எல்லா தாள்களையும் கொண்டுவரணும்: உன்னோட திருமணத்திற்கான ஆதாரம், உன்னோட பிறந்த பதிவு, அவளோட பிறந்த பதிவு, உனது மனைவியோட பிரெஞ்சு குடியுரிமைக்கான அரசாங்கத்தின் சான்றிதழ், உங்க அப்பாவுக்கும் அம்மாவுவுடைய திருமணப் பதிவு, அவளோட அப்பா அம்மாவுடைய திருமணப் பதிவு எல்லாவற்றையும் கொண்டுவரணும், என்றான். 'நீயெல்லாம் எதற்காகப் பிரான்சுக்குப் போகணுங்கிற மாதிரி''. சின்னதுரை மௌனமாக வெளியேறினான். வரிசை இன்னமும் நின்றிருந்தது.

கட்சிக்காரனிடத்தில்தான் அந்த நபரை முதன் முதலாகச் சந்தித்தான். பிரான்சிலிருந்து வந்திருந்தான். கை நிறைய பிரெஞ்சு பாஸ்போர்ட்டுகள். இரண்டு இலட்சம் வேண்டுமென்றான். பிரான்சுக்குள் நுழைந்ததும், பாஸ்போர்ட்டைத் திருப்பி ஒப்படைக்கக் கோரினான். கூடுதலாக ஐந்தாயிராம் யூரோவை பிரான்சுக்கு வந்ததும் கொடுக்கவேண்டியிருக்கும், என்றான்.

பாரீஸ் ஷார்ல் தெகோல் பன்னாட்டு விமானதளம். அந்நியமண்ணில், பொய்யான அடையாளத்துடன் காலை வைப்பதற்கு அச்சமாகத்தானிருந்தது. நா வறண்டிருந்தது, வயிற்றைக் கலக்கியது, உடன் இறங்கியிருந்தவர்கள் தங்கள் தங்கள் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நின்றார்கள். இவன் கால்கள் சோம்பியிருந்தன. வெளிநாட்டவர், ஐரோப்பிய யூனியன் என வரிசைகள் பிரிக்கபட்டிருக்க, இவனுக்கு எங்கே நிற்கவேண்டுமென்பதில் குழப்பம். பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்திருந்த சில புதுச்சேரி வாசிகள் ஐரோப்பிய யூனியன் வரிசையில் நின்றிருந்தார்கள். இவன் கையிலிருப்பதும் பிரெஞ்சு பாஸ்போர்ட், அவர்கள் பின்னாலேயே போய் இவனும் நின்றுகொண்டான். இவனிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த அதிகாரி, தலைமுதல் கால்வரைப் பார்த்தான். இவனுக்கு வியர்த்திருந்தது. பிரித்த பாஸ்போர்ட்டை கணணியில் சரிபார்த்தவன், ஏதோ கேட்டான், இவன் புரியாமல் நின்றான். அவன் மீண்டும் ஏதோ சொல்ல, 'போகச் சொல்கிறான்' என்பதுமட்டும் புரிந்தது. ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். பிரான்சுக்குள் திருட்டுத் தனமாய் நுழைந்தாயிற்று. பயண ஏற்பாடு செய்திருந்தவன் வெளியில் காத்திருந்தான். பாஸ்போர்ட்டுக்கெனவே காத்திருந்ததுபோல அதனை வாங்கி வைத்துக்கொண்டான். இவன் பெயருக்குப் போலியாகத் தயாரித்திருந்த ஓர் அடையாளை அட்டையைக்கொடுத்தான். அதில் இவனுக்குப் பூர்வீகம் ஸ்ரீலங்கா என்றிருந்தது, வாங்கி வைத்துக்கொண்டான்.

கடந்த இரண்டு மாதமாக பாகிஸ்தானியன் நடத்தும் இந்திய ரெஸ்டாரெண்ட்டொன்றில் உதவி சமையல்காரன் என்கிற அந்தஸ்தில் களவாய் ஒரு வேலை. காலையில் பத்தரை மணிக்கெல்லாம் ரெஸ்டாரெண்டைப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு, காய்கறிகளை நறுக்கி வைக்கவேண்டும், இறைச்சியைக் கழுவிவைக்க வேண்டும்; சர்வர்களுடன் சேர்ந்து நாற்காலிகளையும் மேசைகளையும் ஒழுங்குபடுத்தவேண்டும், சாப்பிட்டுமுடித்து குசினிக்குத் திரும்பும் பிளேட்டுகளிலுள்ள மிச்சம் மீதிகளை வழித்து குப்பைப் பையில் போடவேண்டும், ஒன்றிரண்டு எலும்புகளை, பாகிஸ்தானியனின் தற்காலிக பொண்டாட்டியான பிரெஞ்சுக்காரி வளர்க்கும் நாய்க்கு பத்திரப்படுத்த வேண்டும். இரவு பன்னிரண்டு மணிவரை பிளேட்டுகளையும், அதற்குப் பிறகு ஏனைய பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு, பாகிஸ்தானியன் காரிலேயே அதிகாலை இரண்டு அல்லது மூன்றுமணிக்கு ஜாகைக்குத் திரும்ப வேண்டும்..

ஏப்ரரல் மாதம் 3ம் தேதி, காலை ஒன்பது மணிக்கு தமிழ்க் கடைகள் இருக்கிற கார் துய் நோர் சென்றுவரலாமென்று தீர்மானித்தான். கடந்த ஒரு மாதமாகவே பிரெஞ்சு அரசாங்கத்தின் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து பிரான்சே கொந்தளித்துகிடந்தது. பாரீஸ் நகர பாதாள இரயிலான மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்தான். இரண்டு ஸ்டேஷன் கடந்து மூன்றாவது ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, திபுதிபுவென இளைஞர் கூட்டமொன்று, அனோரக்கை தலைவரை இழுத்துவிட்டுக்கொண்டு, இவனிருந்த கம்பார்ட்மெண்டில் ஏறியது. டி.வி. திரையில் கார்கள் கொளுத்தப்படும்போதும், கடைகள் அடித்து நொறுக்கப்படும்போதும் காட்டப்படும் பையன்களை ஒத்திருந்தனர். வண்டியில் ஏறியவுடனே ரகளை பண்ண ஆரம்பித்தனர். கொண்டுவந்திருந்த பெயிண்ட் டின்களைக் கொண்டு, கம்பார்ட்மெண்டெங்கும் பீய்ச்சி கறுப்பு வண்ணத்தில் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளவேண்டுமென சின்னதுரை தீர்மானித்திருந்தான், அநேகமாக பெரும்பாலான பயணிகளின் முடிவும் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் இவனும் மற்றவர்களும் இறங்குவதற்கு முன்பாகவே ஏறிய போலீஸ், சந்தேகத்திற்குட்பட்ட இளைஞர்கூட்டத்தை இரயிலைவிட்டு இறங்கச் செய்தது. இவனும் இறங்கவேண்டியிருந்தது. அவர்களோடு சேர்த்து இவனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இவனது அடையாள அட்டையைக் கேட்க, கொடுத்தான். பரிசோதித்துப் பார்த்தார்கள். போலி என்றார்கள். விசாரணைக்கென்று கூப்பிட்டுச்சென்றார்கள். கடந்த இருவாரங்களாக காவலில் வைத்திருந்தவர்கள் மறுபடியும் அழைத்து வந்திருக்கிறார்கள். சொந்த நாட்டுக்கு இவனைத் திருப்பி அனுப்பப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கையிலிருந்த பிளாஸ்டிக் தம்ளரில் எஞ்சியிருந்த காப்பியில் தேனீயொன்று விழுந்து கிடக்கிறது. இறக்கைகள் திரவத்தில் நோய்ந்ததில் மெல்ல நகர்ந்து தம்ளரின் திரவப் பரப்பினின்று விடுபட முடியாமற் தவிக்கிறது. எழுந்து சென்று காப்பி மஷினுக்கு அருகிலிருந்த குப்பைக்கூடையில் போட்டுவிட்டுத் திரும்பிவன், அவனை மீண்டும் பார்த்தான், தலையைத் திருப்பிக்கொள்ளும் உத்தேசமேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சரி இந்தமுறை பேசிப்பார்ப்போமே எனத் தீர்மானித்தவன்போல அவன் அருகில் காலியாகக் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

'நீங்கள் இந்தியாவா?', அவனிடம் கேட்டான்.

'இல்லை, இலங்கை. ஆனால் இந்தியக் கடவுசீட்டில்தான் களவாய் வந்தனன். நீங்கள்?,

'நான் இந்தியன், பாண்டிச்சேரி. ஆனால் என்னோட ஐடி. கார்டுபடி, ஸ்ரீ லங்கன்.' சொன்னவன் சட்டென்று சூழ்நிலைமறந்து சிரித்தான். இவனது சிரிப்பிற்கான காரணம் புரிய மற்றவனும் சிரித்தான். சற்று முன் மரத்தைச் சுற்றிவந்த குருவி, சன்னலொட்டி அமர்ந்திருக்கிறது. எந்த நேரமும் துரத்தப்படலாம் என்பதாலோ என்னவோ அச்சத்துடனேயே அமர்ந்திருக்கிறது.

நன்றி: அம்ருத்யா
nakrish2003@yahoo.fr
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner