இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2010  இதழ் 127  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
ஒரு விபத்து; சில நிகழ்வுகள்

-- சோ.சுப்புராஜ் -


சோ.சுப்புராஜ்மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும், சித்தாள்ப் பெண்கள் ஹோலிப் பாடல்கள் பாடி என்ஜீனியர்களிடமும் ஆபிஸர்களிடமும் காசு கேட்டுக் கலாய்த்துக் கொண்டும் சந்தோஷமாய் அலைந்து கொண்டிருந்த போது, விதி எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசி அழகு பார்த்த கறுப்பு தினமானது அன்றைக்கு. ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் ஒரு பக்கம் உற்சாகமாக அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பால்ராஜும், நரேந்திரனும் மறுநாள் போட வேண்டிய சிலாப் கான்கிரிட்டுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாய் இருந்தார்கள். அப்போது திடீரென்று வேலை ஆட்களின் கூடரங்களிலிருந்து அழுகையும் கூச்சலுமாய் சத்தம் கேட்கத் தொடங்கவும் ஏதோ விபரீதம் என்று புரிந்து இருவரும் கூடாரம் நோக்கி ஓடினார்கள்.

வேலை ஆட்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் இரண்டு சுவர்கள் அப்படியே சரிந்து அப்போது குளித்துக் கொண்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டு மிருந்தவர்களின் மீது விழுந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விழுந்த சுவற்றிற்கு அடியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் நெஞ்சு பதறியது. தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பிய டேங்க்கர் லாரி ஒன்று அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தது.

சூழல் முழுக்க பதட்டமும் அழுகையும் அவசர ஓட்டங்களுமாய் இருந்தது. எல்லோரும் தங்கள் தங்கள் குழந்தை குட்டிகளும், உறவினர்களும் பத்திரமாய் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டார்கள். தைரியமான சிலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை வெளி யில் இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். விழாது நின்று கொண்டிருந்த மற்ற இரண்டு சுவர்களும் எப்போதும் விழுந்து விடலாம் என்பது போல் நிறைய விரிசல்களுடன் பயமுறுத்திக் கொண்டிருந்தன.

“பத்துப் பேர்ருக்கு மேல செத்துட்டாங்க போலருக்கு….”

“இன்னும் கூட இருக்கும்கிறாங்க; குறைஞ்சது இருபது பேர் காலின்னு பேசிக்கிறாங்க”

“அதெல்லாம் சும்மா யாரோ பீதியக் கெளப்பி விடுறாங்க; உயிர்ச் சேதமெல்லாம் ஒண்ணுமில்ல; கொஞ்சப் பேருக்கு அடி பட்டுருக்கு அவ்வளவு தான்….” பலரும் பலவிதமாய்க் கூடிக்கூடிப் பேசினார்கள். உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வில்லை. எல்லாம் அனுமானங்கள், கைகால் முளைத்து கதைகளாகி உலவத் தொடங்கின.

அரசு அலுவலர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி அது. ஹைதராபாத் கம்பெனிக்கு டெண்டர் கிடைத்து அப்போது தான் வேலைகள் தொடங்கி இருந்தன.பெரும்பாலான கட்டிடத் தொழிலாளர்கள் ஹைதராபாத்திலிருருந்தே வரவழைக்கப்பட்டு, அவர்களும் வேலைத்தளத்திலேயே கூடாரங்கள் அமைத்துத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அந்தத் தொழிலாளர்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிதான், டேங்க்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது இடிந்து விழுந்து விட்டது. செய்தி கேள்விப் பட்டதும் கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருந்தவர்கள் எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்கள்.

“ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணுங்க; அடிபட்டவங்கள ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகலாம்…..” யாரோ ஒருத்தர் சத்தம் போடவும், சிலர் ரோட்டை வழிமறித்து அப்போது அந்த வழியாய்ப் போன சரக்குகள் ஏற்றும் மினிவேன் ஒன்றை நிறுத்தினார்கள். கைகால் நசுங்கிய, மண்டையில் அடிபட்ட மற்றும் பயத்திலேயே மயக்கமாகி விட்ட என்று மொத்தம் பதினெட்டு உடல்களை வேனில் வரிசையாகப் படுக்க வைத்தார்கள்.வேனின் டிரைவர் முனகிக் கொண்டிருந்தான். “இதென்ன அக்கிரமமா இருக்கு? வண்டி யெல்லாம் ஒரே இரத்தமா வேற ஆக்குறாங்களே! எங்க ஓனருக்கு யாரு பதில் சொல்றது?”

“கொஞ்சம் உதவி பண்ணுப்பா, உன் வேனுக்கு உண்டான வாடகைய செட்டில் பண்ணீடு றோம்; உன் வண்டியையும் அப்புறம் மேல நாங்களே கழுவிக் கொடுத்துடுறோம்…” என்று அவனை சமாதானப் படுத்தினார் திவாகர் ராவ் – கம்பெனியின் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர். அப்புறம் அவனிடம் “இது விபத்துக் கேஸா இருக்குறதால பிரைவேட் ஆஸ்பத்திரியில எடுத்துக்க மாட்டாங்க….அதால நேரா ஜி.ஹெச்சுக்கே கொண்டு போயிரு….” என்றார்.

“ஏன் செலவாகும்னு பாக்குறீங்களாக்கும்! அவ்வளவு தூரம் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு போனா, போற வழியிலேயே பாதி உயிர் போயிடும்; அதால பக்கத்துல இருக்குற தனியார் ஆஸ்பத்திரிக்கே கொண்டு போகச் சொல்லுங்க…” உண்ர்ச்சி மேலிட உரிமையாய்ச் சொன்னார் அடிபட்டுக் கிடப்பவர்களின் உறவினர் ஒருவர்.

அவர் சொன்னதைக் கேட்டதும் திவாகரின் முகம் சட்டென்று விழுந்து விட்டது. ”பணம் பெரிசில்ல; எத்தனை கோடி செலவானாலும் கம்பெனி மூலம் நான் ஏற்பாடு பண்றேன்; எங்க வேனுமின்னாலும் கொண்டு போங்க , நமக்கு உயிர் பிழைக்குறது தான் முக்கியம்…” என்றார். தேறும் என்று நிச்சயமாய்த் தெரிந்தவர்களை மட்டும் தங்களின் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டு, மற்ற இழுபறி கேஸ்களை தங்களின் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே ஜி.ஹெச். அனுப்பிவைத்தது அருகிலிருந்த தனியார் மருத்துவமனை.

”அதுவும் சரிதான்; எல்லோரையும் ஒரே எடத்துல வச்சு சிகிச்சை குடுத்தா என்னமோ ஏதோன்னு பார்க்குறவங்களுக்கெல்லாம் பதட்ட மாயிடாதா….” என்று தங்களுக்குள்ளாகவே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். விபத்து நடந்த இடத்தில் உடைந்த வளையல் துண்டுகளும், அறுந்த செருப்புகளும், நசுங்கிக் கிடந்த பாத்திரங்களும், சிதறிக் கிடந்த பொம்மைகளும், அங்கங்கே திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்த இரத்தத் துளிகளும் பார்க்கும் யாருக்கும் சிலீரென்ற ஓர் உணர்வை ஊட்டி வாழ்தலின் நிச்சயமின்மையை உணர்த்திக் கொண்டிருந்தன.

போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தது. தீயணைப்புப் படையினர் வந்து விழுந்து கிடந்த சுவர்களுக்கடியில் இன்னும் வேறு யாரேனும் மீட்கப்படாமல் மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். மேலும் விரிசல் விழுந்திருந்த சுவர்களுக்கருகில் பொதுஜனம் யாரும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். “தண்ணித் தொட்டி கட்டியிருக்கிற இலட்சணத்தப் பாருங்க; அஸ்திவாரமே தோண்டாம தரைக்கு மேல அப்படியே ஏனோதானோன்னு கட்டியிருக்குறாங்க…. “

“உடைஞ்சு கிடக்குற சுவர் எதுலயாவது உயிரோட்டமிருக்கா பாருங்க…. காஃபிக்கு சர்க்கரை போடுறது மாதிரி, சிமெண்ட்ட ஸ்பூன்ல அளந்து போட்டுல்ல கட்டிருப்பாங்க போலருக்கு; இப்படிக் கெட்டுனா சுவர் எப்படி ஸ்ட்ராங்கா இருக்கும்? அதான் வாயப் பொழந்துருச்சு….”

“கவர்மெண்ட் என்ஞீனியர்கள் எல்லாம் என்னத்தப் புடுங்குனாங்கன்னே தெரியல….!”

“அதுங்களா, எச்சக்கல நாயிங்க…..கான்ட்ராக்ட்காரன்ட்ட காச வாங்கிக்கிட்டு வாலாட்டிக்கிட்டு எதையும் கண்டுக்காம இருந்துருக்குங்க…..” வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் போகிறபோக்கில் காண்ட்ராக்டரின் வேலைத்தரத்தை விமர்சித்துப் போனது.

மருத்துவமனை வட்டாரத்திலிருந்து சேதாராங்கள் பற்றிய செய்தி கசியத் தொடங்கியது. ஒரு பதினைந்து வயதுப் பெண், ஐம்பது வயது மூதாட்டி, ஆறு மற்றும் எட்டு வயதில் இரண்டு சிறுவர்கள் இறந்து போயிருந்தார்கள். ஐந்து பேர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டிருந்தார்கள்.

“இந்த வேலைக்கு இன்சார்ஸு யாருங்க?” மிடுக்காய் இருந்த இன்ஸ்பெக்டர் லோகநாதன் அதிகாரமாய்க் கேட்டார். நாற்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய தளர்வுடனிருந்த நரேந்திரன் “நான் தாங்க …”என்றபடி இன்ஸ்பெக்டரின் அருகில் போனார்.தன்னைக் கைது பண்ணி, ஜெயிலில் அடைத்து சித்ரவதை பண்ணுவார்களோ என்ற பயமும் கலக்கமும் அவரின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“வாங்க ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்துடலாம்…” தோளில் கை போட்டபடி இன்ஸ்பெக்டர் மிக மரியாதையாகவே அழைத்துப் போனார். ”பயப்படாதீங்க; நீங்க என்ன கொலையா பண்ணீட்டீங்க! எதிபாராம நடந்த விபத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட் மட்டும் குடுத்துட்டு திரும்பிடலாம்…. வில்லங்கமில்லாம எப்படி ஸ்டேட்மெண்ட் கொடுக்குறதுன்னும் நானே சொல்லித் தாறேன்….” நரேந்திரனின் காதுகளுக்குள் கிசுகிசுத்த இன்ஸ்பெக்டரின் கண்களுக்குள் கரன்ஸிகள் படபடத்தன. இது அவருக்கு கொழுத்த வாய்ப்பு!

ரீஜினல் டைரக்டர் சேதுராமன் அவசரமாய் அவர்களுக்கு அருகில் வந்து “நீங்க ஸ்டேஷன்ல போயி இருங்க; ஆனா ஸ்டேட்மெண்ட் எதுவும் கொடுக்க வேண்டாம்…. நான் மினிஸ்ட்டர்ட்டப் பேசிட்டு நம்ம வக்கீலையும் அழைச்சுக்கிட்டு ஸ்டேஷனுக்கு வர்றேன்; அப்புறம் மத்ததப் பார்த்துக்கலாம்…” என்றார். நரேந்திரன் பயம் தெளிந்து இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்தார்.

போலீஸைச் சமாளிப்பது பெரிய விஷயமாய் இருக்கவில்லை. மினிஸ்டரின் போன்காலும் கொஞ்சம் பணமும் போதுமானதாக இருந்தது. ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங் களில் வேலை ஆட்கள் குடித்துவிட்டு தண்ணீர்த் தொட்டியின் மேலேறி ஆட்டம் போட்டதால் தான் சுவர் விழுந்து விட்டதென்று பதிந்து கொண்டார்கள். மினிஸ்டரின் உத்தரவின் பேரில் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. ஆச்சரியமாய் அதிகக் கூட்டமும் ஆரவாரமும் இல்லாமல் வந்தார். துக்கம் வழிகிற முகத்துடன் காரிலிருந்து இறங்கி, வேலைஆட்களிடம் போய் ஆறுதலாய் ஏதோ பேசினார். வேலை ஆட்களுக்கும் மௌனமாய்க் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிப் பார்த்து விட்டு விருட்டென்று கிளம்பிப் போய்விட்டார்.

அவர் கிளம்பிப் போன அடுத்த நிமிடமே, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, அந்தப் பகுதி சுத்தமாய்த் துடைத்தெடுக்கப்பட்டது. விபத்து நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இரத்தம் தோய்ந்த, விரிசல் கண்டிருந்த சுவர்களும் அப்புறப் படுத்தப் பட்டன. ஆஸ்பத்திரியில் அபாயக் கட்டத்திலிருந்தவர்களும் இயல்பு நிலைமைக்குத் திரும்பி விட்டார்களென்ற செய்தி வந்ததும் ரீஜினல் டைரக்டருக்கு மூச்சு சீரானது.

விபத்து பற்றிய செய்தியை பெரிது படுத்தாமலிருக்க, பத்திரிக்கைக் காரர்களிடம் தான் பெரிதும் போராட வேண்டியிருந்தது; பெரும் தொகையும் செலவழிக்க வேண்டியிருந்தது. கடைசியில் செய்தியை இருட்டடிப்ப்பு செய்ய முடியாதென்றும் , முக்கியத்துவ மில்லாமல் மூன்றாம் நான்காம் பக்கங்களில் பொடி எழுத்துக்களில் கம்பெனியின் பெயரின்றி வெளியிடவும் ஒத்துக் கொண்டு அதன் படியே வெளியிட்டார்கள்.பணம் பத்திரிக்கை வரையும் பாயும் என்பது நிரூபணமானது.

அடுத்தநாள் களைப்பும் தூக்கமுமாய் அலுவலக அறையில் திவாகர் ராவும் சேது ராமனும் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, போலீஸின் இன்னொரு பிரிவிலிருந்து தொப்பியும் தொப்பையுமாய் இருவர் வந்து விபத்து பற்றிய விபரங்களை க் கேட்டார்கள். பேச்சில் கறாரான சிடுசிடுப்பு இருந்தது.

“போலீஸுக்குத்தான் ஏற்கெனவே ஸ்டேட்மெண்ட் கொடுத்து பார்மாலிட்டிஸும் பண்ணியாச்சே…..” அலுப்புடன் சொன்னார் திவாகர்ராவ்.

“அது லோக்கல் போலீஸ். நாங்க ….” வந்தவர் முடிப்பதற்குள் சேதுராமன் எழுந்து வந்து அவர்களை பக்கத்து அறைக்குள் அழைத்துப் போனார். கொஞ்ச நேரத்திலேயே சிரித்தபடி அவர்கள் வெளியேறினர். போகிறபோக்கில் “நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க; எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்… ஏதாவது உதவி வேணுமின்னா தயங்காமப் போன் பண்ணுங்க…” என்று அசடு வழிந்து போனார்கள். சேதுராமனும் திவாகரும் இலேசாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.

அவர்கள் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் தும்பைப் பூப்போல வெள்ளை வெளேரென்று வேஷ்டியும் சட்டையும், மிக நிளமான துண்டும் அணிந்திருந்த ஒருவர் தன் பின்னால் ஆறேழுபேர் புடைசூழ புயல் போல வேகமாய் வந்தார். வந்ததுமே ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.“இங்க எவன்டா கான்ட்ராக்டர்?” யாரும் அவருக்கு பதில் சொல்லா திருக்கவும் அவர் பாட்டுக்குப் பேசத் தொடங்கினார்.

“தொழிலாளி உயிருன்னா உங்களுக்கு மயிருக்குச் சமானமாயிடுச்சா… நாலு பேர் தான் செத்துட்டாங்கன்னு ஏன் பொய்த் தகவல் தர்றீங்க? கை, கால் எழந்து நடைப் பிணமா வாழப் போறவங்களுக்கு உங்களோட பதிலு என்ன? கவர்மெண்ட் தந்த சிமெண்ட்ட எல்லாம் வெளிமார்க்கெட்டுல வித்துட்டு சாம்பலக் கலந்து தண்ணித் தொட்டி கட்டுனதால தான் அது சரிஞ்சிடிச்சுன்னு தெரியாதா எங்களுக்கு! இதை நான் சும்மா விடப் போறதில்ல; சாலை மறியல் பண்ணி இந்த விஷயத்தைக் கோட்டை வரைக்கும் கொண்டுபோவேன்….” தாம்தீமென்று குதித்தார்.

அதே வேகத்தில் தன் பரிவாரங்களுடன் போய் வேலை ஆட்களைச் சந்தித்து, “உங்கள எல்லோரும் ஏமாத்தப் பாக்குறாங்க; உங்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன்….” என்றபடி நடுவீதியில் நின்றபடி மீட்டீங் போலப் பேசத் தொடங்கினார். “இதென்ன ஸார் புதுக் குழப்பம்! சாலை மறியல் அது இதுன்னு பயமுறுத்துறார். கூப்புட்டு ஏதாவது குடுத்து அனுப்பலாமா?” திவாகர் பதறினார்.

“இவனெல்லாம் வெத்து வேட்டு… சும்மா ஃபிலிம் காட்டுறான்….போனதடவை வார்டு எலக்சன்ல நின்னு டெபாஸிட் காலி; இவனுக மாதிரி ஆளுக மிரட்டலுக்கெல்லாம் பயந்து குடுக்க ஆரம்பிச்சா, கம்பெனிய வித்தாலும் குடுத்து மாளாது; ஈசல் மாதிரி வந்துக்கிட்டே இருப்பா னுங்க…. அதனால கண்டுக்காம விட்டுடு; அவனே குதுச்சு அடங்கி காணாமப் போயிடுவான்; அப்படியும் போகலைன்னா, நம்ம போலீஸ் ப்ரண்டுக எதுக்கு இருக்குறாங்க! கூப்பிட்டுச் சொன்னா புடிச்சுட்டுப் போயி பொய்கேசப் போட்டு நாலு தட்டுத் தட்டி அனுப்புனா, அப்புறம் இந்தப் பக்கம் தலை வச்சே படுக்க மாட்டாங்க….” என்றார் சேதுராமன். அப்படியே தான் நடந்தது.

“தொழிலாளத் தோழர்களே….” என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசினார். அவருடன் வந்த கைத்தடிகள் மட்டும் அவ்வப்போது கைதட்டினார்கள். வேலை ஆட்கள் யாரும் அவர் பேச்சில் ஆர்வம் காட்டாது ஒதுங்கி நிற்க, இங்கு எதுவும் பெயராது என்று தெரிந்து ஆளுக்கொரு பக்கமாய்ச் சிதறிப் போனார்கள்.

லேபர் ஆபிஸிலிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஏகப்பட்ட கேள்விகள்! இறந்தவர் களின் பெயர்கள் எதுவும் தினசரி ரோல் ரிஜிஸ்ட்டரிலேயே இல்லை. யாருக்கும் எந்த விதமான விபத்துக் காப்பீடும் எடுக்கப் பட்டிருக்கவில்லை. திவாகர்ராவ் முழிமுழி என்று முழித்தார். சேதுராமன் தான் சாமர்த்தியமாய்ப் பேசிச் சமாளித்து, அலுவலகத்தில் வந்து அவர்களைக் கவனிப் பதாய் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து செத்துப் போனவர்களின் உடல்கள் ஜி.ஹெச்.சிலிருந்து வருகிற செய்தி கிடைத்ததும் சேதுராமன் பரபரப்பானார்.

“பாடிய எந்தக் காரணத்துக்காகவும் வேலை ஆட்களின் கூடாரங்களுக்கு கொண்டு வரக் கூடாது.ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சுடுகாட்டிற்கு கொண்டு போய் இறுதிச் சடங்குகள நிறைவேற்றி விடுங்கள்.பாடிய இங்கு கொண்டு வந்தா பலரும் பலவிதமாய் கிளப்பி விடுவார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் வரலாம்….” சேதுராமன் கண்டிப்பாய் சொல்லி விட்டு அவசர அவ சரமாய் கிளம்பிப் போனார்.

வெட்டியானிடம் சொல்லி குழி எல்லாம் வெட்டி தயாராக வைத்திருந்தார்கள். மாலை 5 மணிக்கெல்லாம் நான்கு உடல்களும் அமரர் ஊர்தி மூலம் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. திவாகர் ராவிற்கு அப்பாடா என்று இருந்தது.இன்றைக்காவது சீக்கிரம் வீட்டிற்குப் போய் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று அதற்கப்புறம் நிகழ்ந்தவை உணர்த்தின.

இறுதி சடங்குகள் செய்ய சுடுகாட்டிற்கு வர, வேலை ஆட்கள் மறுத்தார்கள்.தங்களின் பெரிய மேஸ்திரி ஹைதராபாத்திலிருந்து வந்த பின்பு தான் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப் போம் என்று முரண்டு பண்ணினார்கள். சுடுகாட்டிற்கு வெளியே பிணங்களை இறக்கி விட்டு அமரர் ஊர்தி சென்று விட கம்பெனி ஆட்கள் பிணங்களுக்கு காவல் இருந்தனர்.திவாகர் ராவும் மற்றும் சிலரும் வேலை ஆட்களை சமாதானப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

“காலைலருந்து இவங்க எதைப்பத்தியும் பேசாம அமைதியா இருந்துட்டு இப்பப் போயி பெரிய மேஸ்திரி வரணும்னு சொல்றாங்கன்னா அதனோட உள்ளர்த்தம் வேற. செத்துப் போனவங்களுக்கு நஷ்ட ஈடு பத்தி பேசி தீர்மானிக்க, பிணங்களை அப்புறப் படுத்தும் முன்பேயே நினைக்கிறார்கள்.அதை வெளிப்படையா கேட்க கம்பெனி விசுவாசம் தடுக்குறதால பெரிய மேஸ்திரி வரணும்னு ஜால்சாப்பு சொல்றாங்க…..” நரேந்திரன் திவாகர் ராவிடம் சொல்ல அவர் சேதுராமனை அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார்.

“நஷ்ட ஈடு பத்தி எல்லாம் நானோ நீயோ தீர்மானிக்க முடியாது.மேனேஜிங் டைரக்டர் தான் தீர்மானிக்கணும். நான் அங்க இருந்தா அவங்க என்கிட்ட நஷ்ட ஈடு பத்தி கேட்பாங்கன்னு தான் நான் அப்பவே ஆபிஸீக்கு வந்துட்டேன்.எப்படியாவது சமாளித்து சுமுகமாய் பிணங்களை அடக்கம் செய்கிற வழியைப் பார்……” என்று சிடுசிடுத்தார் சேதுராமன். இருட்டிக் கொண்டு வந்தது. குண்டும் குழியும் மனித நரல்களாயும் கிடக்கிற முள் பாதைக்குள் பிணங்களை எப்படி எடுத்துச் செல்வது என்று எல்லோருக்கும் கவலை மேலிட்டது. பிணங்கள் வேறு சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்தன.

இரவு பதினோறு மணியைத் தாண்டியும் வேலை ஆட்கள் மசிவதாய்த் தெரிய வில்லை. பெரிய மேஸ்திரி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இந்தா இருக்கிற ஹைதராபாத் திலிருந்து வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? அவருக்கு தகவல் சொல்லப்பட்டதா? ஒருவேளை கம்பெனி அவரைப் போகக் கூடாதென்று ஹைதராபாத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டதா? ஒன்றும் உறுதியாய்த் தெரியவில்லை. மீண்டும் ரீஜினல் டைரக்டர் சேதுராமனைத் தொடர்பு கொள்ள அவர் ஏகப்பட்ட உஷ்ணத்தில் கத்தினார்.

“இதைக் கூட சமாளிக்க துப்பில்லைனா நீ என்ன அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர்? எம்.டி. கிட்ட நஷ்ட ஈடு பத்தி பேசிட்டேன்.அவர் தலைக்கு பத்தாயிரமோ பதினைஞ்சாயிரமோ கம்பெனி சார்புல கொடுக்கலாம்ங்கிறார். செத்துப் போனவங்க யாருக்கும் இன்ஸீரன்ஸ் கூட நம்ம பண்ணியிருக்கல. இதை எல்லாம் இப்பவே அவங்களுக்குச் சொன்னா என்னை நாற அடிச்சிடு வானுங்க. மெதுமெதுவாத் தான் சொல்லி சம்மதிக்க வைக்கணும்…..” என்று சிடுசிடுத்தவர் கொஞ்சம் கோபம் தணிந்து சொன்னார்.

“எப்படியாச்சும் அவங்களை சுடுகாட்டிற்குக் கொண்டு போயிடுங்க. நான் அங்க வந்து அவங்க கிட்ட பேசிப் பார்க்கிறேன்…” என்று சொல்லி போனை வைத்தார்.

“பிணம் தனியாக இருக்கிறது; பெரிய மேஸ்திரி வரும்வரை பிணங்களுக்கு அருகி லாவது போய் காத்திருக்கலாம்…..” என்று பேசி ஒரு வழியாய் வேலை ஆட்களை எல்லாம் சமாதானப் படுத்தி சுடுகாட்டிற்கு கொண்டு வந்தார் திவாகர்ராவ்.

சேதுராமன் வந்ததும் வேலை ஆட்களிடம் “ஏன் இப்படிப் ப்ண்ணுகிறீர்கள்? எங்களுக்கும் துக்கமாகத்தான் இருக்கிறது. போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக் கொள்வோம். உங்கள் பெரிய மேஸ்திரிக்கு காட்டிக் கொள்ளுங்கள்…” என்று கூறி கையோடு கூட்டி வந்திருந்த போட்டோ கிராபரின் மூலம் போட்டோக்கள் எடுத்துத் தள்ளினார்.அப்புறமும் வேலை ஆட்கள் விரைத்துக் கொண்டு தான் நின்றார்கள்.சேதுராமனின் சமாளிப்புகளை செவிமடுக்கத் தயாரின்றி திரும்பிக் கொண்டார்கள்.அப்புறம் தான் அவர் காரிலிருந்து அந்த பெட்டியை இறக்கினார்.

எல்லோருடைய கண்களிலும் தூக்கத்தையும் துக்கத்தையும் மீறி ஒரு பிரகாசம் ஒளிர்ந்தது. காரிலிருந்து இறங்கிய பெட்டியில் உயர்ரக மதுவகைகள் பாட்டில் பாட்டிலாய் அடுக்கப்பட்டிருந்தன.

“எல்லோருக்கும் குடுங்கப்பா. குடிச்சு மனசை ஆத்திக்கிட்டு பெரிய மேஸ்திரிக்கு காத்திருப்போம்…..”திவாகரைப் பார்த்து கண்சிமிட்டியபடி சொன்னார்.

ஆளுக்கொரு பாட்டிலுடன் ஒதுங்கினார்கள்.குடித்து முடித்து வட்டமாய் உட்கார்ந்து குழறலாய்ப் பேசினார்கள். இதை எல்லாம் நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.

“பிணம் நாத்தமெடுக்கத் தொடங்கியிருச்சு. இன்னும் எதுக்கு இதுங்களை வச்சு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கனும்; குழிக்குள்ள எறக்கி மண்ணத் தள்ளுங்கப்பா….” என்று ஒரு கூட்டம் அபிப்ராயம் சொல்ல, இன்னொரு கூட்டம் அவனுடன் சண்டைக்குப் போனது.

“பெரிய மேஸ்திரி வரணும்; அதுவரைக்கும் எந்தக் காரியமும் பண்ணக் கூடாது…. பேசித் தீர்க்காமப் பிணத்தப் புதைச்சாச்சுன்னா அப்புறம் ஒத்தப் பைசா கூடக் குடுக்காம கம்பெனி நம்மல ஏமாத்திடும்…..”

“பெரிய மேஸ்திரி என்ன பெரிய புடுங்கியா? ஆக்ஸிடெண்ட் நடந்து ரெண்டு நாளாகுது, இன்னும் வந்த பாடில்ல; அவன் வந்து மட்டும் என்ன பண்ணப் போறான்! கம்பெனிக்கு சாதகமாத்தான் பேசப் போறான்……” ஆளாளுக்கு அடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களை விலக்கி விடப் போன அலுவலக ஆட்களை தடுத்து நிறுத்தினார் சேதுராமன்.

“சண்டை போடட்டும்; அப்புறம் தான் பிரச்னை ஒரு முடிவிற்கு வரும்….” என்றார் குரூரமாய்ச் சிரித்தபடி. சண்டை போட்டபடியே ஒரு கூட்டம் பிணங்களை எல்லாம் ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த குழிகளுக்குள் தள்ளி மண் பொட்டு மூடினார்கள். காரியங்கள் எல்லாம் போதையிலேயே மளமளவென்று நடந்தேறின.

“எப்படி சுலபமா முடிச்சுட்டேன் பார்த்தியா?” தன் சாமர்த்தியத்தை தானே ரசித்தபடி திவாகரிடம் சொன்னார் சேதுராமன். திவாகர்ராவிற்குத் தான் தொழிலாளர்களின் மீது பச்சாதாபமும் கோபமும் ஏற்பட்டது. போதை தெளியாதவர்கள் சுடுகாட்டிலேயே விழுந்து கிடக்க மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

Email: engrsubburaj@yahoo.co.in

 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்