இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2009 இதழ் 118  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம் / அரசியல் / சமூகம்!
ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவில் உணர்தலும்!  (Enlightenment through meditation and Telepathy)

ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் - தமிழாக்கம் : தமிழநம்பி

பேராசிரியர் எல். சி. எவாசி, "பாணத்துறைச் சொற்போரும் புத்த குமுகாயமும்" என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள் சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன்.

ஓக ஊழ்கம் (யோக தியானம்) , ஆதனிக ஊழ்கம் அல்லது அறிவு கடந்த ஊழ்கம் என்னும் பெருங் கேடான ஆர்வப் பித்து பற்றி அவர் புகழ்ந்துரைத்து விளக்கியிருந்தார். அறிவு பெறவும், தெளிவுறவும், அறிவாற்றல் பெருகவும், தன்னுணர்வு பெறவும், முழுமையான மனவளம் பெறவும், இயல்பு கடந்த மன ஆற்றல் பெறவும், உடல் ஒளி வீசிச் சுடரவும் இன்னும் பலவற்றிற்கும் அறிவெல்லை கடந்த ஊழ்கமே வழி என அக்கட்டுரையில் கூறியிருந்தார்.

ஒரு பல்கலைக்கழகத் தனித் திறலாரின் தூவலிலிருந்து வருவதால், இச்செய்தி, பொதுமக்களுக்குத் தவறான வழிகாட்டக் காரணமா யிருக்கின்றது.

இயல்புணர்ச்சியாகிய சில நடத்தைப் பாங்குகளைத் தவிர, மற்ற எல்லா அறிவுகளையும், மாந்தன் அவனுடைய பிறப்பிற்குப் பின்னால், ஐம்பொறிகளின் புலனுணர்வினால்தான் அடைய வேண்டும்; ஊழ்கத்தினால் அடைய முடியாது.

பிறப்பிலிருந்தே ஐம்புலனுணர்வு சிறிதுமில்லாத ஒருவர், எதனைப்பற்றியும் எந்த ஒரு அறிவுமில்லாத புதல் (தாவரம்) போலவே வாழ்வார்.

பேரா. எவாசி சொல்வதைப் போல் ஊழ்கத்தின் மூலம் அறிவைப்பெற முடியு

மானால், நாட்டிலுள்ள கல்வி நிலையங்களை யெல்லாம் மூடிவிட்டு அந்த இடங்களில் ஊழ்க நிலையங்களை நிறுவி விடலாமே! கல்விக்காகப் பெருந்
தொகைகளை ஏன் செலவிட வேண்டும்?

நேரடியாகப் புலன்களால் உணரும் 'பொருள் புலக்காட்சி' (objective perception ) போல இல்லாமல் ஒருவரின் அகவுணர்வுப் புலக்காட்சி ( subjective perception )கள் உண்மை அல்லாதவையாகவும் தவறானவையாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு மன நோயாளியின் இல்பொருள் காட்சிகள் (hallucination)

அவருடைய அக உணர்வுக் காட்சிகளின் நுகர்ச்சிகளே அன்றி அவற்றின் பின்னே எந்த உண்மையும் இல்லை.

வேதியல், பூதியல், உயிரியல் மற்றும் உளத்தியல் காரணங்களால் ஒருவரிடம் இல்பொருள் காட்சி நிலைகளைத் தூண்ட முடியும்.

மயக்க மருந்துகள், வெறியூட்டும் குடிவகைகள், தாளம் தவறாத (சீரான) பறை முழக்கம், கைதட்டல், மந்திரம் ஓதல், பாடுதல், நாட்டியம் ஆடுதல், உடலில் இயக்குநீர்(harmone ) உயிரச்சாரம் மற்றும் நொதிமங்கள் சமனின்மை; அச்சம், அதிர்ச்சி, வேறுபட்ட அறிதுயில், தன்னறிதுயில்(auto hypnosis) முதலியவற்றால் மனவலிமை குறைவானவர்களிடம் இல்பொருள் காட்சி நிலையைத் தூண்ட முடியும்.

'ஏரி இல்ல'த்தில் அச்சுத்துறையில் வேலை செய்யும் ஒரு தமிழரை - அறிவு திறம்பிய நிலையில் அறிதுயில் மருத்துவத்திற்காக அவருடைய சிங்கள மனைவி என்னிடம் அழைத்து வந்தார். அவருடைய அறிவு திறம்பிய நிலைக்கு ஓக ஊழ்கம் தான் காரணம் என்பது அலசி ஆராய்ந்த போது தெரிந்தது.

அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார். "ஒருவர் தாமரையமர்கையில் (பத்மாசனத்தில்) அமர்ந்து, ஓம் ரீம் செயமனா சக்தீ... என்ற மந்திரத்தை 108 முறை ஓதினால் ஞானக்கண் திறக்கப்பட்டு புலன் மீறிய காட்சித் திறனையும், முன்னுணருங் காட்சித் திறனையும் அடையலாம்" என்று அப்புத்தகத்தில் படித்திருக்கின்றார்.

அவ்வாறு நடந்து பார்க்க அவர் முடிவு செய்தார். ஒருநாள் இரவு படுக்கையில் குறுக்குகாலிட்டு அமர்ந்து "ஓம் ரீம் செயமனா சக்தீ... ஓம் ரீம் செயமனா சக்தீ..." என்று சொல்லத் தொடங்கினார்.

அம்மந்திரத்தை முழுமையாக 108 முறை சொல்லி முடிக்குமுன் (ஐம்பது அல்லது அறுபது முறை சொல்லியதும்), "முருகா... முருகா..." எனக் கூவிக் கொண்டே வீடெங்கிலும் ஓடத் தொடங்கினார் என்று விளக்கினார் அவர் மனைவி.

அன்றிரவிலிருந்து பித்தர் (பைத்தியக்காரர்) போல நடக்கத் தொடங்கிய அவருக்குப் பல மந்திரக் காரர்களிடம் மருத்துவம் பார்த்தனர்.

மனநோய் மருத்துவ நூல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய காணப் படுகின்றன.

கோயில் வழிபாடுகளில் பத்தர்களின் இயல்பு கடந்த நடத்தைகள், பேய் ஆட்டங்கள், மறுமலர்ச்சிக் கூட்டங்கள், பொதுவிருப்ப இசை நிகழ்ச்சிகள், திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முதலியவை - கருவி முழக்கம், மந்திர வழிபாடுகள், திரும்பத் திரும்ப ஓதுதல்கள், ஆட்ட பாட்டங்கள், ஒலி முழக்கங்கள் முதலியவற்றின் தூண்டுதலால் உண்டாகும் சிறிது நேர அறிவுதிறம்பிய நிலைகளே ஆகும்.

ஊழ்கம் எனப்படும் மதப்பித்து படிப்படியாகத் தானே தூண்டிக்கொள்ளும் தன்னறிதுயில் முறையாகும்.

ஊழ்கத்தி லுள்ளோரின் இல்பொருள் காட்சிப் புலனுணர்வுகள் பெரும்பாலும் அவர்களின் மதஞ்சார்ந்த உண்மையல்லா நம்பிக்கைகளின் பாற்பட்டவையே!

ஊழ்கத்திலுள்ள ஒரு கிறித்தவர், வானுலகில் பொன் அரியணையில் அமர்ந்திருக்கும் செகோவா(யூதக்கடவுள்)-வையும், அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் ஏசுவையும், இறக்கை உள்ள எண்ணற்ற தூதர்கள் மகிழ்ச்சிப் பா இசைத்துக் கொண்டே சூழ்ந்திருப்பதையும் காண்பதாக மயங்குகிறார். (இல்பொருள் காட்சியாகக் காண்கிறார்).

இந்து, புத்த மதத்தவர் அவரவருடைய முன்பிறவி, அடுத்த பிறவிகளை இல்பொருள் காட்சியாகக் காண்கிறார்.

பலவேறு மயக்க மருந்துகளும் வெறியூட்டும் பொருள்களும் இத்தகைய இல்பொருள் காட்சிகளைத் தூண்டும்.

சிலர், கற்பனைத் திறமிக்க ஊழ்கத்தில் ஆழ்ந்து இயற்கை மீறிய உளத்தியல் ஆற்றல்கள் மாயமந்திரங்கள் பெற்றிருப்பதாக முட்டாள் தனமாகக் கருதிக்
கொண்டு அலைக்கழிக்கப் பட்டு நரம்பு நோய்க்குப் பலியாகிறார்கள்.

எழுதப் படிக்கத் தெரியாத அறியாமையாளரான ஆள்கள் மன மாறாட்டங்களால் தொல்லைப் பட்டால், அவர்களைப் பித்துப் பிடித்தவர்கள் என்று சொல்கின்றனர். அவர்களின் பேச்சுக்கு ஒருவரும் மதிப்புத் தருவதில்லை.

அதே போழ்து, மன மாறாட்டத்திற்கு ஆளானவர் ஒரு திறமையான அறிவாற்ற லுடையவராய் இருந்து விட்டால், அவர் மீமிசை உணர்வு நிலை பெற்றவர், முடிவான மெய்ம்மை நிலையைக் கண்டவர், தெளிவு பெற்று விட்டவர், கடவுளுடன் ஒன்றியவர், தன்னுணர்வு பெற்றவர் என்றவா றெல்லாம் கூறி, கேட்போரையும் படிப்போரையும் நம்ப வைக்க முடிகிறது. அவருக்கு எண்ணற்ற பத்தர்களும் மாணவர்களும் கூட வந்து சேருகின்றனர்.

அளப்பரிய திறமை அறிவு பெற்றவர்கள், அறிவு திறம்பிய நிலையில் பெரும்பாலும் மத நிறுவனர்களாகவும் பரப்புநர்களாகவும் ஆகின்றனர்.

மயக்க மருந்துகளைப் போன்றே ஊழ்கத்தையும் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவித்துத் தடைசெய்ய வேண்டும். ஏனென்றால், மயக்க மருந்துகளும் ஊழ்கமும் மாந்த மனத்தை ஒரே வகையாகவே தாக்குகின்றன.

பேரா.எவாசி ஊழ்கத்திலுள்ளவரின் உடலிலிருந்து ஒளிச்சுடர் வெளிப்படுகின்றதெனவும் அதை மற்றவர்கள் காணாவிட்டாலும் ஊழ்கத்திலுள்ளவரே மனத்தால் உணர முடிகின்றதெனவும் கூறுகின்றார்.

மேலும் சொல்லும்போது, "எதையும் நம்பாத சில படித்த பகுத்தறிவாளர்கள், இவர்களின்(ஊழ்கிகளின்) உடலிலிருது ஒளிச்சுடர் வெளிப் படுவதைப் பார்க்காததால், 'இவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல' என்று கூறிச் செல்வார்கள்" என்கிறார்.

எவ்வளவு மடத்தனமான கூற்று இது!

அகச் சிவப்புக் கதிர்களையும், புற செந்நீலக் கதிர்களையும், அணுவையும், மூலக்கூறுகளையும், உயிரகத்தையும், நீரகத்தையும் தம் கண்களால் பார்க்க முடியாதென்றாலும், அவை இருப்பதை பகுத்தறிவாளர்கள் மறுப்பதில்லை. ஏனென்றால் அப்பொருள்கள் இருப்பதை அறிவியலால் மெய்ப்பிக்க முடியும்
என்பதை அவர்கள் அறிவர்.

'தூய்மைப் பாதையில் ஐந்தாம் நிலையை அடைந்த' ஒருவரிடமிருந்து ஒளிச்சுடர் வெளிப்பட்டுப் பரவுகின்றதெனக் கூறுவது எவ்வளவு நகைப்பிற் கிடமானது? மயக்க மில்லாதவர்கள் அவ்வாறு எதையும் காணாத போது, ஊழ்கிகள் கொடுமையான மூளைக் கோளாறு உடையவர்கள் எனபதற்குச் சான்றாக இவ்வாறு கூறுகின்றனர்.

இது, மனநல மருத்துவ மனையிலுள்ள ஒரு நோயாளி, உயர்ந்த கல்வித்தகுதி உடையவர் என்பதற்காக அவர் சொல்வதை உண்மை என ஏற்பதும், அத்தகைய கல்வித்தகுதி பெறாதவர் என்பதற்காக அவரைக் கவனித்துக் கொள்ளும் செவிலிப் பணியாளர் சொல்வதைப் புறக்கணிப்பதும் எத்தகைய இகழ்ச்சிக் குரியதோ அதைப் போன்றதே ஆகும்.

ஊழ்கத்திலுள்ளோரின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகின்ற தென்பதற்குக் கூடுதல் சான்றாக, பேரா.எவாசி, இரண்டு அமெரிக்கப் பெண்கள் எழுதிய "இரும்புத் திரைக்குப் பின்னால் இயல்பிகந்த ஆற்றல் கண்டுபிடிப்புகள்" என்ற நூலில் எழுதப் பட்டுள்ள வற்றையும் படங்களையும் தம் வாசகர்களுக்குத் தருகிறார்.

அதே புத்தகத்தில், இலைகள் மொட்டுகளின் படங்களைச் சுற்றிலும் அதே மாதிரியான ஒளிவட்டம் காணப் படுவதை அப்பேராசிரியர் காணத் தவறியது வியப்பிற் குரியதாகும்.

புதல்களும் (தாவரங்க்ளும்) கூட 'தூய்மைப் பாதையின் ஐந்தாம் நிலையை அடைய' ஊழ்கம் செய்கின்றனவா? அதனால்தான் இலைகளிலும் மொட்டுகளிலும் ஒளிச்சுடர் வெளிப்படுகின்றதா?

அறிவியலர், உயிருள்ள விலங்குகள் புதல்களின் நார்மத்தினுடைய அகச்சிவப்பு நிழற்படங்களைச் சுற்றிலும் உள்ள ஒளி வட்டத்தில் எந்த புரியாப் புதிரையும் காணவில்லை. அத்தகைய ஒளி வட்டங்கள் வெதண வேறுபாடுகளால் ஏற்படுகின்றனவே அன்றி ஒளி வெளிப்பாட்டினால் அன்று.

தொலைவிலுணர்தலை (telepathy) உறுதிப்படுத்தும் பேரா.எவாசி, "தொலைவி லுணர்தலின் மூலமாகச் சொற்கள் ஒருமனத்திலிருந்து நானூறு கற்கள் இடைவெளியிலுள்ள இன்னொரு மனத்திற்குச் செலுத்தப் படுகின்றன" என்று கூறுகின்றார்.

விண்வெளியில் பறந்து செல்லும் போதும், நீர்மூழ்கிக் கப்பலில் செல்லும் போதும் முகமையான செய்திகளைத் தெரிவிக்க தொலைவி லுணர்தல் கலையைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் அவர் கூறுகிறார்.

தொலைவி லுணர்தல் கலையை ஊழ்கத்தின் வழி வளர்த்தெடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

தொலைவி லுணர்தலை எவரும் ஆய்வு செய்து மெய்ப்பித்துக் கொள்ளலாம் என்றால், புத்தகங்களிலும் செய்தித் தாள்களிலும் வரும் ஐயத்திற்குரிய செய்தித் துணுக்குகளை ஏன் நம்பவேண்டும்? சார்ந்திருக்க வேண்டும்?

தொலைவி லுணர்தல், இயல்பு கடந்த நுண்ணோக் காற்றல் ஆகியவற்றிற்கு உரிமை கோருபவர்களைத் தேர்வாய்வு செய்த்தில், இதுவரையிலும் எனக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்திருக்கின்றன.

விண்வெளியிலோ நீர்மூழ்கிக் கப்பலிலோ அல்ல, பக்கத்து அறையில் உள்ள ஒருவரின் உள்ளத்தை அறிந்து கொள்ளக் கூடிய ஒருவரை உலகத்தின் எந்த மூலையிலேனும், இரும்புத் திரைக்குப் பின்னால் இருப்பவரா யிருந்தாலும் சரி, பேரா.எவாசி காட்ட முடியுமா?

முதன்முதலில், இயல்பு கடந்த உளத்தியல் (para psychology) புகழ் பேரா. செ.பி.இரைன் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற, வட கரோலினாவி லுள்ள தியூக் பல்கலைக் கழகத்தி லிருந்து 1200 கற்களுக்கு அப்பால், கடலில் 100 அடி ஆழத்தில் இருந்த 'நாட்டிலசு' என்னும் நீர்மூழ்கிக் கப்ப்லுக்குத் தொலைவி லுணர்தலின் மூலம் செய்திகளை அனுப்பிய, வெற்றி மிக்க ஆய்வுக்கதை 1959இல் வெளியிடப் பட்டது.

அந்நிகழ்ச்சி 1963வரை உலகெங்கிலும் பல செய்தித் தாள்களில் தொடர்ந்து வெளியிடப் பட்டது. 'இந்தக் கிழமை' (this week) என்ற அமெரிக்க இதழ் இது குறித்துத் தனிமுறையில் சிறிது அலசி ஆராயும் வரையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.

அவ்விதழின் ஆசிரியரிடம், 'நாட்டிலசு' கப்பலின் தலைவர் ஆர். ஆன்டர்சன் கீழ் உள்ளவாறு கூறினார்:

"நாட்டிலசு, பாரிய பலவகைச் செயற் பாடுகளில் ஈடுபட்ட தென்றாலும், தொலைவி லுணர்தலில் அது ஈடுபடவில்லை என்பதுறுதி. தொலைவி லுணர்தல் ஆய்வு பற்றி திருவாளர்கள் போவல்சு, பெர்கியர் அளித்துள்ள அறிக்கை முற்றிலும் பொய்யாகும். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாட்டிலசு 'போர்ட்சுமவுத்து' துறைமுகத்தில் கரையேறி முதல் செப்பனீடாய்வின் (overhaul) கீழ் இருந்தது."

அமெரிக்க வான்படையின் படைமுதல்வர் வில்லியம் போவர்சு, இந் நீர்மூழ்கி தொலைவி லுணர்தலில் பங்கு பெற்றதாகக் கூறப்பட்டதைப் பற்றிக் கீழுள்ளவாறு அறிவித்தார்:

"நான் பங்கு கொண்டதாகக் கூறப்பட்ட அந்த ஆய்வு ஒருபோதும் நடைபெற வில்லை. வெசுடிங்கவுசு ஆய்வகத்தில் நடைபெற்றதாகக் கூறப் பட்டுள்ள தொலைவி லுணர்தல் ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்கும் நுண்ணாய்வுப் பணி ஏதும் எனக்குத் தரப்பட வில்லை. உண்மையில், 1959 சூலை 25இல் அலபாமாவில் உள்ள வான் பல்கலைக் கழகத்தில் எனக்குப் பணி அளிக்கப் பட்டிருந்தது. அப்பணி எவ்வகையிலும் மிகை உணர்வு நுண்ணாய்வுகளுடன்
தொடர்பு உடையதன்று."

சுருங்கச் சொன்னால் 'இந்தக் கிழமை' இதழ் போற்றத்தக்க வகையில், இந்த நீர்மூழ்கி தொலைவி லுணர்தல் கதை ஒரு பெரிய ஏமாற்று என்பதைத் தெளிவாக்கி விட்டது.

பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கற்பனைக் கதை எழுதுவாரைப் போல எழுதாமல், உண்மையான வற்றையே எழுத முயற்சி செய்ய வேண்டும்.

thamizhanambi44@gmail.com

 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்