இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2010 இதழ் 121  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் ..
நினைவுகளின் தடத்தில் (41)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்இந்த சமயத்தில் தான் ராஜாஜியை பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு காலத்தில் காங்கிரஸில் ஒன்றாக செயல்பட்டவர்கள். இன்னமும் நண்பர்கள் தான் என்று வேறு சொல்லப்பட்டது. சொல்லப்பட்டது என்றாலும், ஈ.வே.ரா மேடையேறினால் ராஜாஜி தன் நண்பர் என்ற சிந்தனையே அவருக்கு இராது. அவர் ஒரு பிராம்மணர் என்பதும் காங்கிரஸ் தலைவர் என்பதும் தான் முன் வந்து நிற்கும் அவர் பேச்சின் தோரணையையும் தாக்குதலையும் தீர்மானிக்கும். இருப்பினும், "என் நண்பரே ஆனாலும், ராஜாஜி ஒரு பிராமணர் ஆதலால் பிராமணருக்கு சாதகமாகத்தானே அவர் சிந்திப்பார், நமக்கு சாதகமாகவா அவர் எண்ணங்கள் இருக்கும்?" என்றும் அடிக்கடி சொல்வார் மேடைகளிலும் எழுத்திலும். இருப்பினும் அவர் ராஜாஜியைச் சந்தித்துப் பேசுகிறார், திருவண்ணாமலையில் என்பதும் அதுவும் திடீரென நிகழ்ந்த சந்திப்பு என்பதும் அதுவரையும் அந்த மாதிரியான சந்திப்பிற்கான பிரமேயம் ஏதும் இல்லாமல் அது ரகசியமாகவே நிகழ்ந்தது என்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனேகமாக அனைவருக்குமே அது அதிர்ச்சியைத் தந்தது. எதிரும் புதிருமான இந்த இரு தலைவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சந்திப்பார்கள் என்பதை திராவிட கழகத்தவர் எவரும் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள். எனவே, பின்னர் இதை அடுத்து நடந்த ஒரு மகாநாட்டில், அண்ணாதுரை, பெரியாரிடம், "உங்கள் இருவரிடையே என்ன பேச்சு நடந்தது என்று சொல்லவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பெரியார், "நாங்கள் அரசியல் பேசவில்லை, என் சொந்த விஷயமாகத் தான் பேசிக்கொண்டோம். அதை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை." என்று சொல்லித் தட்டிக் கழித்ததாகவும் செய்திகள் வந்தன. அண்ணாதுரை ஏதோ ஒரு அன்னியரைக் கேட்பது போல பொது மேடையில் கேட்க நேர்ந்ததும், அதற்கு பெரியார் சொன்ன பதிலும், ஒரு கட்சியின் பெரிய தலைவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பேச்சாகத் தோன்றவில்லை. இருவருக்கும் இடையே நெடு நாடகளாக ஏதோ தமக்குள் பேசித் தீர்த்துக்க்கொள்ள முடியாத உரசலும் புகைச்சலும் இருப்பதைத்தான் காட்டுவதாகவும் விமரிசனங்கள் வந்தன. படிப்பகங்களிலும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். இதில் கட்சிபிரிந்து காரசாரமாக வாதங்கள் நடந்ததையும் கழகப் படிப்பகங்களில் கழகப் பத்திரிகைகளிலும் மற்ற செய்தி பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன்.

இவற்றைத் தொடர்ந்து தான் ஈ.வே.ரா - ராஜாஜி சந்திப்பும் அதைத் தொடர்ந்த பரபரப்பான பல சம்பவங்களும். "அது என் சொந்த விஷயம்" என்று சொல்லித் தட்டிக் கழித்த போதிலும், அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே, பெரியார் - மணி அம்மை திருமணம் பற்றிய செய்தி வந்தது. இது ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டது. பெரியாருக்கு அப்போது வயது எழுபதுக்கு மேல். மணியம்மைக்கு வயது 26 என்று சொல்லப்பட்டது. வெகு வருடங்களாக, வயதான தலைவருக்கு மகள் போல, பேத்தி போல உதவ வந்த பெண்ணைக் தாத்தா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கிளம்பினார் என்றால்..... எல்லா கழகப் பத்திரிகைகளிலும், விடுதலை தவிர மற்றவற்றில், இது பெரிய சர்ச்சைக்கான விஷயமாகியிருந்தது. பொருந்தாத் திருமணம் என்றும், இது காறும் பெரியாரும் திராவிட கழகமும் பேசி வந்த கொள்கைகளுக்கு விரோதமான ஒரு செயல் என்றும் அத்தகைய செயலை பெரியாரே செய்துவிட்டு அது தன் சொந்த விஷயம் என்றும் கட்சிக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் சொன்னது கழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. "எனக்கும் என் சொத்துக்களுக்கும் ஒரு வாரிசாக, என்னுடன் கடந்த பல வருடங்களாக என்னுடன் பழகி என் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரை சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாடு இது. என் நலத்திலும் இயக்கத்திலும் உண்மையான பற்றும் கவலையும் நம்பிக்கையும் கொண்டுள்ள பல வருடங்களாக என்னுடன் இருந்து என் நம்பிக்கையைப் பெற்றுள்ள மணி அம்மையை வாரிசாக ஆக்கிக்கொள்வதற்குத் தான் இந்த ஏற்பாடு" என்று இப்படி ஏதோ பெரியார் விளக்கம் தந்து கொண்டிருந்தார். ஆக, அன்று வரை அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த அண்ணாத்துரை மட்டுமல்ல, அவர் கட்சி ஆரம்பத்திலிருந்து அன்று வரை அவருடன் கட்சியில் உழைத்த யாருமே அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரராகவில்லை, அவர் நம்பிக்கை வைத்து கட்சியையும் சொத்தையும் உரிமையாககப் போவது அவருக்கு உதவி செய்ய வந்த 26 வயது மணி அம்மையை என்பது "இது காறும் நம்மை நம்பாத ஒரு தலைவரின் கீழா கட்சிக்காக உழைத்தோம்" என்று அனைவரையும் அதிர வைத்தது.

அண்ணாதுரை தன் திராவிட நாடு இதழில் தம் தலைவரின் திடீர் கொள்கை மாற்றத்தையும், இத்தனை வருடங்கள் தன்னுடன் கட்சியில் இருந்த எவரிடமும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு தலைவர் சொலவதைக் கேட்டு கண்களில் கண்ணீர் மல்குவதாகவும், தலைவர் தம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதாக எழுதினார். உடனே பெரியார் தனக்கு எதிராகக் கிளம்பிய அத்தனை பேரையும் கண்ணீர்த்துளிகள் என்று விடுதலையில் கிண்டலும் வசையுமாக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னோடு பல வருஷங்களாக கட்சிப் பணி புரிந்த அத்தனை பேரையும், பெயர் சொல்லக்கூட விருப்பம் இல்லாத வெறுப்பில், வருஷக் கணக்கில் 'கண்ணீர்த்துளிகள்' என்று சொல் வதையே விடாப்பிடியாகக் கொண்டிருந்தார். அனேகமாக என் நினைவு என்னைக் கைவிடவில்லையெனில் 1949 கோடையில் எப்போதோ கண்ணீர்த்துளிகள் என்ற கேலியுடனும் வெறுப்புடனும் அண்ணாதுரையையும் மற்றோரையும் குறிப்பிடத்தொடங்கியதை, திராவிட முன்னேற்றக் கழகம் 1967 தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்கும் முன் பெரியாரின் ஆசியைப் பெற அண்ணாஅவரிடம் சென்ற கணம் வரை, பெரியார் விடவில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் அண்ணாதுரையோ, பெரியாரின் அவ்வளவு கேலியும் பகைமையும் நிறைந்த 20 வருட தொடர்ந்த பிரசாரத்திற்கும் பதிலாக ஒரு முறைகூட, கோபத்துடனோ, வெறுப்புடனோ பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை. அண்ணாதுரையின் மீது கொண்ட என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. அது வரை அவரது பேச்சையும் எழுத்தையும் கண்ட வியப்பு, இப்போது அவரது குணத்தைக் கண்ட மதிப்பாக வளர்ந்தது.

கடைசியாக கும்பகோண வாழ்க்கையில் இன்னொரு புதிய சேர்க்கையையும் சொல்ல வேண்டும். மணல் வீடு என்ற சிறு கதைத் தொகுப்பு, சி.சு.செல்லப்பா என்பவர் எழுதியது, ஒன்று கிடைத்தது. அது எப்படி, யாரிடமிருந்து கிடைத்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அந்த கால கட்டத்தில் செல்லப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடியவர்கள் என்று யாரையும் எனக்கு நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை. அப்போது படித்து வெகு நாட்களுக்கு நினைவில் பதிந்துவிட்ட அத் தொகுப்பில் இருந்த ஒரு கதை தாசில்தார் குடும்பம் ஒன்று. அவர்களுக்கு வெகு நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. ஒரு ஜோஸ்யர் வழி சொல்கிறார். கன்றோடு ஒரு பசு மாட்டைத் தானம் கொடுத்தால் வழி பிறக்கும் என்று. தாசில்தார் அந்த நினைவிலேயே இருக்கும்போது, தாசில்தாரின் மனைவி, அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையிடம் பசுவும் கன்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பின் தடை ஏது? மாடும் கன்றும் தாசில்தார் வீட்டுக்கு வந்து சேர அதிக நாள் பிடிக்கவில்லை. கோதானம் விமரிசையாக நடந்துவிடுகிறது. மாதங்கள் கழிகின்றன. தாசில்தார் குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விசேஷச் செய்தி ஒன்றும் வருவதாக இல்லை. ஒரு நாள் கணக்கப் பிள்ளை ஒரு தட்டில் பழம் பாக்கு, வெற்றிலை, பணம் சகிதம் தாசில் தார் தம்பதியரை முகத்தில் சந்தோஷம் வழிய நமஸ்காரம் பண்ணி "பெரியவாள் ஆசீர்வாதம் செய்யணும், ரொம்ப நாளாக இல்லாத புத்திர பாக்கியம் கிடைச்சுடுத்து எனக்கு," என்கிறார். இதற்குப் பின் ஒன்றிரண்டு வருடங்களில், புர்லா(ஓரிஸ்ஸா) வில் இருக்கும்போது, கலைமகள் பிரசுரமாக சி.சு.செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு "சரசாவின் பொம்மை" (விலை ரூபாய் இரண்டு) என்று பார்த்த போது, "அட, இவர் அந்த மணல் வீடு செல்லப்பா அல்லவா?" என்ற வியப்புடன் அதிலிருந்து செல்லப்பாவை ஆவலுடன் படிக்கத் தொடங்குகிறேன்

இதற்கெல்லாம் இடையில் பள்ளிக்கூடம், பாடங்கள், பரிட்சை என்றெல்லாம் இருக்கின்றனவே. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, பள்ளிக்கூடம் போவதும் வருவதும் அவ்வளவு தொல்லை தருவதாக இருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. சுந்தரம் பிள்ளை பற்றி முன்னரே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவருடைய சரித்திர வகுப்புகள் தான் எனக்கு மிக சுவாரஸ்யமானவையாக இருந்தன. அடுத்து, ஆறு பெண்களும், என்னையும் சேர்த்து மூன்று பையன்களுமாக இருந்த ஹிந்தி வகுப்புகள். குறைந்த பேர்களைக் கொண்டிருந்ததாலும் ஹிந்தி ஆசிரியர் என்ற தன் ஆளுமையை எங்களுக்கு பூதாகாரமாக ஆக்கிக் காட்டாத காரணத்தாலும், ஹிந்தி வகுப்புகள் வெகு சகஜ பாவத்திலேயே நடந்ததாலும் ஹிந்தி வகுப்புகள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. சுவாரஸ்யத்துக்கு மற்றொரு காரணம், ஆறு பெண்களும் தங்களுக்குள் எப்போதும் அரட்டை அடித்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இருப்பதைப் பொருட்படுத்தியவர்கள் இல்லை. அவர்கள் அரட்டையை ஏதோ அப்பாவிகள் போல நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம். மற்றபடி ஹிந்தியில் அவர்கள் எல்லோருமே மிக தேர்ந்தவர்களாக இருந்தார்கள். மற்றபடி வேறு எந்த வகுப்பும் எனக்கு பிடித்தமாக இருந்ததில்லை. வகுப்பில் நடப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வளவே. ஆனால் இந்த ஒரு மாதிரியான சுவாரஸ்யமின்மை வருஷக் கடைசியில் வந்த இரு பரிட்சைகளின் போது தான் என்னைத் திகிலடைய வைத்தன. வேறு எங்கும் இல்லாதவாறு, பள்ளியின் இறுதி வகுப்பு அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால், தம் பள்ளியின் தேர்ச்சி எண்ணிக்கையை பெரிதாகக் காட்டுவதற்காக, இறுதித் தேர்வில் யாரை அனுமதிப்பது எனபதற்கும் ஒரு தேர்வு இருந்தது. நான் எப்படியோ அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டேன். எப்படி என்பது இப்போது யோசித்துப் பார்க்கும் போது விளங்குவதில்லை.

எனக்கு இப்போது நன்றாக நினைவில் இருப்பது, அன்று ஹிந்தி பரிட்சை. இரண்டு வருஷ படிப்பில், ஹிந்தி படித்துவிடு வேனே தவிர, அந்த வருட பாடப்புத்தகத்தில் பாதி நான் படிக்காததாகவே இருந்தது. பரிட்சை அன்று காலை ஒரு மணிநேரம் முன்னதாகவே பரிட்சை ஹாலுக்குப் போய் புத்தகத்தில் படிக்காத பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஆபத்பாந்தவனாக, வீர ராகவன் வந்தான். அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, நிறைய பக்கங்கள் உள்ள பாடங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று அவனைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். "ஏண்டா, இதையெல்லாம் ஒரு தடவை கூட நீ படிக்கலையா? என்னடா பரிட்சை எழுதப் போறே நீ?" என்று அவன் சத்தம் போட்டான். ஆனால், நான் கேட்ட பாடங்களில் என்ன இருக்கு? என்று சொல்லவும் செய்தான். இப்படித்தான் நான் விரும்பியே எடுத்துக்கொண்ட ஹிந்தியையும் நான் படித்த லக்ஷணமும் இருந்தது.

பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு அரசு நடத்துவது என்றேன். அதை மெட்ரிகுலேஷனுக்கு சமமான எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சை என்பார்கள். இதில் பாஸ் செய்துவிட்டால், காலேஜுக்கு மேல் படிப்புக்குப் போகலாம். அல்லது வேலை தேட ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் முதலில் பாஸ் செய்ய வேண்டும். நிலக்கோட்டையிலிருந்து மாமா வேறு அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இந்த பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால், மதராஸ் பப்ளிக் செர்வீஸ் பரிட்சைக்கு உட்காரலாம். அதில் பாஸ் செய்துவிட்டால் வேலை சுலபமாகக் கிடைத்து விடும் என்று எழுதியிருந்தார். இது எனக்கு புதிதாக ஒரு கவலையைச் சேர்த்தது. ஒரு கண்டம் கழியும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இன்னொன்று எனக்காக வாசலிலேயே நின்று கொண்டு எப்போது உள்ளே நுழைவது என்று பயமுறுத்துவது போலிருந்தது. ஆனால் அது மாமாவின் கார்டு வந்த ஓரிரு நாட்கள் தான். பிறகு அது பற்றிய சிந்தனையே இல்லை.


நினைவுகளின் தடத்தில் - (42)

வெங்கட் சாமிநாதன்பரிட்¨க்ஷ எழுதி முடிந்த பிறகு கிராமத்தில் தான் இருந்தேன். ரிசல்ட் வரக் காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டதால், ஏதும் பொய் சொல்லி கும்பகோணம் போகவும் முடியாது. ஆக வீடு தான், கிராமம் தான் கதி. அதிகம் பொழுது இரண்டு வீடுகள் தள்ளி இருந்த ஒரு காலி வீட்டில் அப்பா பொறுப்பேற்றிருந்த லைப்ரரி(!)யில் கழிந்தது. அது என்ன லைப்ரரி? ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகள், பழைய பத்திரிகைகளிலிருந்து கிழித்து பைண்டு செய்து வைத்திருந்த தொடர் கதைகள், எல்லாம் சேர்த்து ஒரு இருபது புத்தகங்கள் இருக்கும். ஒரிரண்டு மாத பத்திரிகைகள் பழ்சாகும் வரை காத்திருக்கும். இதற்கெல்லாம் கிராமத்தில் நிறைய டிமாண்ட் இருந்தது. இந்தத் தொடர்கதை வேணும், அந்தத் தொடர்கதை வேணும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த பைண்டு செய்யப் பட்ட தொடர்கதைகள் நான் ஏற்கனவே படித்தவை தான். ஆனாலும் பொழுது போகவேண்டுமே. ஓரிரு முறை இரண்டு மைல் தூரத்திலிருக்கும் நாதன் கோயிலுக்குப் போய் அங்கு ஒரு பையனிடமிருந்து புத்தகங்கள் வாங்கி வந்தது நினைவிலிருக்கிறது.

நிலக்கோட்டை மாமாவிடமிருந்து எப்போதாவது கடிதம் வரும். சின்ன மாமா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருப்பதாக தெரிந்தது. மறுபடியும் எஸ். எஸ். எல்.ஸி பரிட்சை எழுதினாரா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் பின்னர் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த செய்தி வந்தது. எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சை எழுதி தேறாவிட்டாலும், லோயர் க்ரேட் ஆசிரியராகலாம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்குத் தடை இல்லை. நான் நிலக்கோட்டையில் இருந்த வரை, "போறும் போறும் ஒருத்தன் வாத்தியாராகி பாழாப் போனது போறும். நீயாவது நன்னா படிச்சு கவன்மெண்ட் வேலை தேடிக்கோ" என்று சின்ன மாமா வைப் பாத்து, பாட்டி அடிக்கடி சொல்லி ஆதங்கப்பட்டுக்கொண்டிருப்பாள். சின்ன மாமா வீட்டில் இல்லாவிட்டாலும், பணத்துக்கு அவதிப் படும் சமயங்களில் எல்லாம் பாட்டி இதையே சொலலிப் புலம்பிக்கொண்டிருப்பாள். ஆனால், சின்ன மாமாவுக்குக் கடைசியில் வாய்த்தது ஆசிரியர் வேலை தான். முதலில் மாமா இருந்த பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியராகச் சேர்ந்தார் என்று தான் நினைக்கிறேன். பின்னர் அலங்காநல்லூர், பாப்புநாயக்கன் பட்டி என்று பெயர்கள் அடிபட்டது நினைவில் இருக்கிறது. ஒரு சமயம் நான் விடுமுறையில் வந்திருந்த போது ஊர் சுற்றக் கிளம்பி, பாப்புநாயக்கன் பட்டிக்குப் போனதும் நினைவில் இருக்கிறது. மதுரையிலிருந்து விருது நகர் போகும் மெயின் ரோடில் வழியில் ஒரு ரோடோரம் இருக்கும் ஒரு மரத்தடி மேடையில் எழுப்பப்பட்டிருக்கும் கோயிலை அடையாளம் வைத்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளே வண்டிப் பாதையில் மூன்றுமைல் நடக்க வேண்டும். "பாப்பு நாயக்கன் பட்டிக்குங்களா? யார் வீட்டுக்குங்க? என்று ஒரு ஆர்வமும் சுவாரஸ்யமும் தொனிக்க, பஸ் கண்டக்டர் கேட்ட போது, கிராமப்புறங்களில் இன்னமும் நம் பழைய இயல்பான , அன்னியோன்ய மனித நேய உணர்வுகளும், பண்பாடும் மறையவில்லை என்று மன நெகிழ்வோடு நினைத்துக் கொண்டேன். பாட்டி தன் இரண்டாவது பிள்ளைக்கும் வாத்தியார் வேலைதான் விதித்திருந்தது என்றால் மிகவும் வேதனைப் பட்டிருப்பாள். அப்போதைய பாட்டியின் வேதனையைக் கேட்க நான் அங்கு இல்லை. பாட்டியின் அந்த சிறிய ஆசை கூட நிறைவேறாதது கொடுமை தான். பாட்டி அதற்குப் பிறகு அதிக வருஷங்கள் உயிரோடு இருக்கவில்லை. சின்ன மாமாவுக்கும் கல்யாணம் ஆகி, மாமியும் ஒரு பள்ளி ஆசிரியை தான், அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து அந்தப் பேத்தியையும் பார்த்துவிட்டுத் தான் கண்மூடினாள்.

அது மட்டுமல்ல. சிறு வயதில் இருந்த சாமாவுக்கும் - (சின்ன மாமாவின் பெயரும் சாமிநாதன் தான். ஸ்வாமி மலையோடு தொடர்பு கொண்ட தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பிள்ளைக்காவது சாமிநாதன் என்று நிச்சயம் பெயர் சூட்டப் பட்டிருக்கும்) - பின்னர் தானே பொறுப்புணர்ந்து எப்படியாவது எந்த வேலைக்காவது தன்னைத் தகுதிப் படுத்திக்கொண்டு குடும்பத்துக்கு உதவியாக இருக்கவேண்டும், குடும்பத்தின் கஷ்டங்களைக் குறைக்கவாவது வேண்டும் என்ற முனைப்பு பிறந்துவிட்ட சாமாவைப் பாட்டி பார்த்திருக்கிறாள். அது அவளுக்கு, தன் கடைசிப் பிள்ளைக்கும் தான் வெறுத்த வாத்தியார் வேலையே தான் விதிக்கப்பட்டிருந்தாலும், சாமாவின் மாற்றமும் பொறுப் புணர்வும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்திருக்கும். பாட்டி பார்த்து மனம் சமாதானமடைந்தது சாமா மாமாவின் மாற்றத்தின் தொடக்கத்தைத் தான். குடும்பப் பொறுப்பில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு தான், தனக்கு மனைவியாக வரப்போகிறவளும் சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும், அவளும் தன்னோடேயே வேலை பார்க்கவேண்டும், அது சாத்தியமாக அவளும் ஆசிரியையாகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தான், அவர் இதை ஒரு நிபந்தனையாகவே வைத்து ஒரு ஆசிரியையே மணந்துகொண்டார் என்று எனக்கு பின்னர் சொல்லப்பட்டது..

அவரிடம் இனி திட்டமிட்டுச் செயல்படவேண்டும் என்ற தீவிர முனைப்பு செயல்படத்தொடங்கியது, மணமான முதல் ஒன்றிரண்டு வருடங்களிலேயே தெரியவந்தது. அப்போது நான் ஒரிஸ்ஸாவில் இருந்தேன். அண்ணா பெயரில் (பெரிய மாமாவின் பெயரில்) இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்சி எடுத்து உபரி வருமானத்திற்கு வழிசெய்து கொண்டிருந்தார் எனத் தெரிந்தது. நான் ஒரிஸ்ஸாவிலிருந்து விடுமுறைக்கு நிலக்கோட்டைக்கும் சென்றிருந்த போது, மாமா என்னையும் ஒரு பாலிஸி எடுத்துக்கொள்ளச் சொன்னார். ரூ. 3000 க்கு 30 வருடத்திற்கு எடுத்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஒழுங்காக ப்ரீமியம் கட்டாது, எனக்கோ மாமாவுக்கோ யாருக்குமே உபயோகமில்லாது ஒரு சில நூறு ரூபாய்கள் வீணானதும் நினைவிருக்கிறது. சின்ன மாமாவும் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ஸியை ஒரு சில வருடங்களுக்குப் பிறகு விட்டு விட்டார் என்று தான் நினைப்பு. எவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் வாழ்க்கையை மனத்திடத்டோடும் முனைப்போடும் எதிர்கொண்டு வெற்றி கொள்வது என்பது பள்ளிப்படிப்புத் தகுதியைச் சார்ந்தது அல்ல, இவ்விரண்டிற்கும் ஒரு சம்பந்த்தமும் இல்லை என்பதை தான் வாழ்ந்து காட்டியே நிரூபித்தவர் சின்ன மாமா சாமிநாதன். நான் தமிழ் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன், வேலை தேடி. சின்ன மாமாவின் ஒவ்வொரு அடியெடுப்பையும் நான் அவ்வப்போது நேரில் கண்டவனில்லை. அவ்வப்போது என் காதுகளுக் கெட்டி அறிந்து கொண்டவன் தான் நான் எங்கிருந்து இவ்வளவு தைரியமும், வாழ்க்கையை எதிர்கொண்டு வெல்லும் மன உறுதியும் திறனும் வந்தது?

இனி அன்ணாவுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே அவர் காரியங்களைத் தீர்மானித்தது. அண்ணாவின் பெரிய பையனின் படிப்பு, பெண்ணின் கல்யாணம் எல்லாம் அவர் உதவியால் தான் சாத்தியமாயிற்று. அத்தோடு அவரது பெருகி வரும் குடும்ப பாரமும் சேர்ந்தது. அவருக்கு ஐந்து மகன்கள், நான்கு பெண்கள். அவ்வளவு பேரையும் அவரவர் படிக்க விரும்பிய அளவுக்கு படிக்க முடிந்த அளவு படிக்கவைத்தவர். நான்கு பெண்களையும் நல்ல இடங்களில் மணம் செய்து கொடுத்தவர். மூத்த பையன் பிலானியில் படித்தான். இப்போது அவன் பாஸ்டனில் மனைவி இரண்டு குழந்தைகளோடு வாசம். இங்கு வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் மதுரையில் ஆஜராகிவிடுவான், அப்பாவுக்கு எல்லாவிதத்திலும் உதவ. பெண் ஒருத்தியும் அமெரிக்காவில் தான். எங்கே என்று இப்போது நினைவில் இல்லை. முதல் பெண் மும்பைக்கார் ஆகிவிட்டாள். அவளுடைய பெண் இப்போது மணமாகி அமெரிக்காவில் வாசம். ஒரு பையன் திருச்சி ரீஜனல் என்ஜினியரிங் காலேஜில் கெமிஸ்ட்ரி ப்ரொ·பஸராக இருந்தான். தன் அண்ணா குடும்பத்துக்கும் உதவியாக இருந்து கொண்டு, தன் பெரிய குடும்பத்தையும் வளர்த்து, படிக்க வைத்து ஒரு சீரான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளச் செய்து, அவ்வளவும் செய்து முடிக்க முடிந்தது, ஒரு எளிய பலமற்ற ஆரம்பபள்ளி ஆசிரியர் என்ற புள்ளியிலிருந்து தொடங்கிய வாழ்க்கையில். பெரிய காரியம் தான். இப்போது அது பற்றி நினைக்கும் போது மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், அவ்வப்போது பையன்கள் வளர்ந்து படித்து பெரியவர்களாகி சம்பாதிக்க ஆரம்பித்ததும் அப்பாவுக்கு உதவியதும் அவர் தன் வாழ்க்கையை பெரிய போராட்டங்கள் இல்லாது சமாளிக்க உதவியது. தொடக்கப் புள்ளியின் தீர்மானமும், சாதிக்கும் மனத்திடமும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டால் போதும் போல. என்னைவிட ஏழு வயது பெரியவர். சமீபத்தில் மதுரையில் நடந்த அவரது பேத்தியின் கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். பி.டி.ராஜன் ஹாலில் கல்யாணம். ஹாலுக்குள் நுழைய படிகளில் ஏற நான் கஷ்டப்படுவதைப் பார்த்து, "என்னாச்சு, ஏன் ஏறக் கஷ்டப்படறே?" என்று கேட்டார். மூட்டு வலி என்று பதில் சொன்னேன்.

"ஒருத்தன் வாத்தியாராகி அல்லல் படறது போறும். நீயாவது நன்னா படிச்சு கவர்ன்மெண்ட் வேலைக்குப் போ," என்று அடிக்கடி பாட்டி சொல்லிக்கொண்டிருந்தாலும், கடைசியில் தான் ஆசைப்பட்டது எதுவும் நடக்காது இரண்டாவது பிள்ளைக்கும் வாத்தியார் வேலைதானா விதித்தது என்று பாட்டி முதலில் ரொம்பவும் துக்கப்பட்டிருப்பாள். பின் சமாதானமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் அங்கு இல்லை. ஆனால் தன் இரண்டாவது பிள்ளை வாத்தியாராக இருந்து கொண்டே சாதித்துள்ளதைப் பாட்டிக்கு பார்த்து மகிழ கொடுத்து வைத்திருக்கவில்லை. அதன் பின் பாட்டி அதிக காலம் வாழவில்லை. எங்கே ஒரு பட்டிக்காட்டில் வாத்தியாரக இருந்து கொண்டே அவளுடைய பெரிய பிள்ளையும் (என் பெரிய மாமா) தன் உத்தியோகத்தின் கடைசி வருடங்களில் ஆசிரியர்களுக்கு ராஷ்டிரபதி தரும் பரிசு பெற்றார். தில்லிக்கு தன் பள்ளி ஆசிரியர் படையுடன் சென்று தில்லியின் விஞ்ஞான் பவனில் நடந்த பெரிய விழாவில், ராஷ்டிரபதி வி.வி.கிரி கரங்களிலிருந்து பரிசு பெற்றதைப் பாட்டி காணமுடிந்திருந்தால் ஒரு ஆறுதல் அவளுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அந்த பரிசு பெற்ற கணத்தின் போட்டோவில் கூட மாமா மலர்ந்த முகத்துடன் காணப்படவில்லை. அந்த கணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லை என்று தான் தோன்றிற்று. அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை அவரை வஞ்சிப்பதாகவே இருந்து விட்டது. அதற்குப் பிறகு அவர் அதிக நாட்கள் வாழவில்லை. ராஷ்டிரபதி பரிசு பெற்றது 1969-ல். அதற்கு அடுத்த வருடம் அவர் ஓய்வு பெற்றிருக்கவேண்டும். அதன் பின் அவர் அதிக நாள் வாழவில்லை. 1அவர் இறந்து விட்டதாக எனக்கு தபால் வந்தது தில்லியில்.

1948-1949 வருடங்களில் அனேகமாக சின்ன மாமா, நான், பின் என் அத்திம்பேர் மூவரும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியிலிருந்து தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். மூவருமே அப்போது தான் வேலை தேடிக்கிளம்பினோம். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்பத் தான் வாழ்க்கை எங்களுக்கு அமைந்தது என்று சொல்ல வேண்டும். இது என்னில் தானே தோன்றிய ஞானோதயம் இல்லை தான். பின்னால், பத்திருபது வருடங்களுக்குப் பின் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது அத்திம்பேர் சொன்னார். "சாமா, உன்னைப் போலத்தானேடா நானும் இருந்தேன். இருக்கறது எல்லாத்தையும் லாகூர்லே தொலைச்சுட்டு வெறுங்கையோட தானேடா வந்தேன். நானும் வேலை தேடி மெட்ராசுக்குப் போனேன். நீ அதுக்கு ஒருவருஷம் கழித்து வேலை தேடிக் கிளம்பினே." அவர் சொல்லாமல் சொன்னது, "நீ இன்னொரு இருபது இருபந்தைந்து ரூபாய் அதிகப்படி சம்பளத்துக்கு அடுத்த ப்ரமோஷன் எப்போ கிடைக்கும்னு காத்திண்டிருக்கே? பாத்துக்கோ" என்று ஒரு இடி அதில் தொக்கி நின்றது. அவர் அப்போது பல லக்ஷங்களுக்கு அதிபதியாக தன் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர். அவர் இடித்துரைத்ததும் உண்மை தான். சின்ன மாமா, அத்திம்பேர், நான் என்று மூவருமே கிட்டத்தட்ட ஒரே கல்வித் தகுதியோடு, ஒரே சமயத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். இந்த மூவரில் சாமர்த்தியமற்றவன் நான் தான். அத்தோடு பெரிய லக்ஷ¢யங்களோ, முனைப்போ, திட மனதோ இல்லாததும் காரணங்கள் என்று சொல்லவேண்டும்.

/22.9.09
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்