இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

நினைவுகளின் தடத்தில் - 15!

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து விட்டது. பின் வருடங்களில் நான் அதே ரயில் வண்டியில் ஓரிருமுறை பயணம் செய்திருப்பதால் அது மாலை நாலரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்து சேர்ந்திருக்கும். அங்கிருந்து உடையாளுருக்குப் போவதென்பது அந்நாட்களில் ஒரு சிரம சாத்தியமான காரியம். கும்ப கோணத்திலிருந்து அரசிலாற்றைத் தாண்டி வயல் வரப்புகளின் வழியே நடந்தால் இன்னம் இரண்டு ஆறுகளை, முடிகொண்டான், குடமுருட்டி என்னும் இரண்டு ஆறுகளைத் தாண்டி சுமார் ஐந்தரை மைல் தூரத்தில் இருந்தது உடையாளூர். குடும்பத்தோடு செல்கிறவர்கள், ஆறு மைல் தூரத்தில் இருக்கும் வலங்கிமான் என்னும் ஒரு சிற்றூருக்குப் போகவேண்டும். அது ரைட் ஆனரபிள் என்று சொல்லப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்த்ரிகளின் பிறந்த ஊர். அவர் பெயரின் வி. என்ற எழுத்து வலங்கிமான் என்ற ஊரைத்தான் குறிக்கும். அங்கு போக இந்நாட்களில் பஸ் வசதி உண்டு. அப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் 1940-களில் பஸ் வசதி இருந்ததா என்பது நினைவில் இல்லை. நாங்கள் கும்பகோணத்திலிருந்து வலங்கிமானுக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்தோமா என்பதும் நினைவில் இன்று பதிந்திருக்கவில்லை. எனக்கு அடுத்து மிகத் தெளிவாக நினைவில் ஓடும் காட்சி, வலங்கிமான் ஊரின் பிரதான சாலையின் மத்தியில் மாட்டு குதிரை வண்டிகள் நிறுத்தியிருக்கும் இடத்தில் என் அப்பா வண்டிக்காரர் சிலருடன் பெரிதாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது தான். அப்பா மிகவும் கோபக்காரர், சுலபத்தில் அவர் பேரம் பேசாது ஒரு காசு கொடுத்துவிட மாட்டார் என்பதை நான் பின்னாட்களில் தெரிந்து கொள்வதற்கான முதல் அனுபவக் காட்சி, அன்று வலங்கிமான் மாட்டு வண்டிக்காரர்களோடு அவர் சண்டையே போடுவதாகத் தோற்றம் தந்த அவரது கடுமையான பேரத்திற்கான சத்தம் தான்.

வலங்கிமான் குதிரை என்பது அந்தப் பக்கத்தில் எல்லோர் வாயும் பேசும் கேலிப் பேச்சு. வலங்கிமான குதிரை நோஞ்சலாகத்தான் இருக்கும். சாதாரணமாக நாம் காணும் குதிரையின் கம்பீரமான தலை நிமிர்ந்த தோற்றத்தில் நான் என்றும் பின்னாட்களில் கூட கண்டதில்லை. வண்டியில் பூட்டப்பட்டு ஓடும் குதிரை கூட நிமிர்ந்த தோற்றத்தில் இராது. கழுதையைப் போல குனிந்த தலையுடன் தான் அது ஓடும். ஓடுமா வண்டியை இழுக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம். "வலங்கிமான் குதிரையாட்டமா, கிழக்கே போகணும்னா மேக்கே பாத்துன்னாடா வண்டியை ஓட்டணும்?" என்ற பேச்சை நான் பின் நாட்களில், உடையாளுரில் இரண்டு வருடங்கள் (ஜூன், 1948 - ஆகஸ்ட், 1949) தங்கி கும்பகோணத்தில் படித்த காலத்தில், எல்லோரும் கேலி பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அன்று நான் அங்கு அந்த புகழ்பெற்ற வலங்கிமான் குதிரை வண்டி எதனையும் பார்த்த தாக நினைவில் இல்லை. வலங்கிமானிலிருந்து உடையாளுருக்கு வண்டி அமர்த்திப் போகும் அவசியமும் எனக்கு இருந்ததில்லை. எல்லாம் நடை தான். கும்பகோணம் ரயில் நிலயத்திலிருந்து ஊடையாளுருக்கும், உடையாளூரிலிருந்து கும்பகோணம் ரயில் நிலயத்திற்கும் வயல் வரப்புகள் வழியே நடந்து சென்று தான் பழக்கம். அது தான் சுலபமும், சீக்கிரம் நிறைவேறும் ஒன்றும், செலவில்லாது நடந்துவிடும் காரியமும் ஆகும். ஒரு முறை என் பாட்டியை கிராமத்திலிருந்து காலை மூன்று மணிக்கு, வரப்புகளின் வழியே நடத்தி அழைத்துச் சென்றேன். அது ஒரு கதை. பின்னால் சொல்வேன். மணி என்ன என்று பார்ப்பதற்கு அன்று கிராமத்தில் யார் வீட்டிலும் கடிகாரம் இல்லை. "வெளுத்துண்டு வரமாதிரி இருக்குடா, நீ பாட்டியை அழைச்சிண்டு கிளம்பு" என்று அப்பா சொல்லி விட்டார். பாட்டியை நிதானமாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நானும் பாட்டியும் போய்ச் சேர்ந்த போது மணி காலை ஐந்து. ஒன்றே கால் மணி நேரம் முன்னதாக. பிறகு அந்த இருட்டில் பாட்டியை அழைத்துக்கொண்டு எப்படி போய்ச் சேர்ந்தேன் என்பதை நினைத்து பயந்து போவேன், அதை நினைத்துப் பார்த்த போதெல்லாம்.

இரண்டு மாட்டு வண்டிகளில் தான் அன்று நாங்கள் ஊருக்குப் பயணமானோம். வண்டி கிளம்பும் போது நன்றாக் இருட்டி விட்டது. வலங்கிமானிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் வந்து பின் தேனாம் படுகை என்று வழிகாட்டி மரம் காட்டும் கப்பி ரோடில் மூன்று மைல் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செல்ல வேண்டும். அது கப்பி ரோடும் இல்லை. வண்டிச் சக்கரம் பதிந்து ஆழமான சுவடிட்ட மண் ரோடில் தான் வண்டி போகும்.

இருட்டி விட்டது. இரண்டு மாட்டு வண்டிகளில் நாங்கள். வண்டிபாதையும் இருட்டில் தான் மூழ்கியிருந்தது. இரண்டு வண்டிகளின் அடியில் மண்ணெணெய் ஹரிகேன் விளக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் தான் வண்டித் தடம் தெரிந்தது. அது தான் வண்டிக்காரனுக்கு வழி காட்டியது. மாடுகளை ஒட்டும் சத்தம். ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் தெரிந்தது. இரவு நேரத்தில் மரம் சூழ்ந்த இடங்களில், வயல் வெளிகளில் கேட்கும் இரவுப் பூச்சிகளின் சப்தம். தவளைகளின் 'க்ரோக், க்ரோக்' 'கொஞ்சம் முன்னாலேயே கிளம்பியிருக்கலாம். இருட்டிடுத்து' என்று மாமா சொல்ல, அப்பா, ' இவன்களோட மன்னாடறதிலேயேன்னா பாதி பொழுது போயிடறது. இவங்களை விட்டா வேறே கதியெல்லேன்னு இவங்களுக்கு நெனப்பு" என்று அலுத்துக் கொள்ள, வண்டிக்காரன், "சாமி, இப்படியே பேசினா எப்படிங்க சாமி நாங்க பொழைக்கறது, கும்பகோணமா, நீடாமங்கலமா நீங்க போறீங்க. திரும்பச்சே சவாரி கிடைக்கும்கிறதுக்கு. உடையாளுருக்கு அதுவும் இந்த இருட்டிலே கூப்பிடறீங்க. குழந்தை குட்டிகளோட குடும்பமா போறிங்க. நீங்களே சொல்லுங்க. வேறே யாராச்சும் வந்தாங்களா? உடையாளுருக்கு போனா, அங்கே என்ன சவாரி கிடைக்கும் எங்களுக்கு. வெத்து வண்டியாத்தானே நாங்க திரும்பணும். நாங்க திரும்பவேண்டாமா? இதெல்லாம் நெனைச்சுப் பாக்க மாட்டறிங்களே. இந்த நேரத்திலே வரதே பெரிசுங்க. சும்மா திரும்பறதுக்கு ரெட்டைச் சத்தம் கொடுக்கணும் நீங்க. என்னமோ மனம் போன போக்கிலே பேசீட் டுப் போறீங்க. உங்களே யாரு கேக்கறத்துக்கு இருக்காங்க?" என்று இரண்டு பேரும் மாறி மாறி பேசிக்கொண்டு வந்தார்கள். அப்பாவால், 'சரி, சரி, நீ பேசீட்டே இன்னம் லேட் பண்ணாதே என்று தான் சொல்ல முடிந்தது.

அந்த இருட்டில் வண்டிச்சக்கரத்தின் உருளல், இரவுப் பூச்சிகள் எழுப்பும் சத்தம், வண்டியினுள் பேச்சுக் குரல் எல்லாம் ஏதோ ஒரு புதிய உலகத்திற்கு, பழக்கப்படாத, உலகத்தில் பயணம் செய்து கொண்டிருப்பதான உணர்வு இப்போது அதை நினைக்கும் போது தோன்றுகிறது. ஒரு முறை, பாபுராஜபுரத்திலிருந்து, இல்லை, உமையாள் புரத்திலிருந்தா? - நினைவில் இல்லை சரியாக, காலையில் நான்கு மணிக்கு இப்படித்தான் மாட்டு வண்டியில் கிளமபி கும்பகோணம் வந்தோம். வழியெல்லாம் இருட்டுத் தான். அப்போது மின் விளக்குகள் சாலையில் இருந்ததில்லை. எங்காவது வழியில் ஒரு பிள்ளையார் கோவிலில் எண்ணைய் விளக்கொன்று மங்கலாகத் தெரியலாம். வண்டியின் அடியில் ஹரிகேன் விளக்கு ஒன்று அசைந்தாடிக்கொண்டு வழி காட்டிக்கொண்டிருந்தது. அது என்ன வழிகாட்டிக்கொண்டிருந்திருக்கும் என்பதை என்னால் இப்போது கற்பனை கூட செய்து கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வண்டி கிளம்பியதிலிருந்து, அது கொஞ்சம் நீளமான இரட்டை மாட்டு வண்டி, குடும்பம் பூராவுமே அதில் நெருங்கி அடைத்திருந்தோம், வண்டி வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்து, காலை நான்கு மணி என்பதையும் ஞாபகப் படுத்திக்கொள்ளவேண்டும், நாங்கள் தங்கியிருந்த வீட்டின் வாசலிலேயே காணப்பட்ட நாயொன்று, அது தெரு நாய் தான், வீட்டு வளர்ப்பு நாயல்ல, அக்கிரகாரங்களில் யாரும் நாய் வளர்க்கமாட்டார்கள். அது எப்போதும் அந்தத் தெருவில் ஏதோ ஒரு வீட்டின் முன் படுத்துக் கிடக்கும், அதன் தெரு அலைச்சல் முடிந்த பின். எந்த வீட்டிலிருந்தாவது யாரவது மிச்சம் மிகுதியை வந்து வெளியே போட்டால் ஒடி வந்து தின்னும். அந்த நாய் தான் விடியும் முன் நாலு மணிக்குக் கிளம்பிய வண்டியின் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பாவமாக இருந்தது. அதற்குக் கூட விஸ்வாசமும், பிரியாமை உணர்வும் இவ்வளவு தூரம் வருத்துவதாக இருக்குமென்று நாங்கள் நினைத்ததில்லை. " அது கொஞ்ச தூரம் வந்துட்டுப் போயிடுமுங்க. இல்லைன்னா, நான் திரும்பிப் போகும்போது என்னோட திரும்பிடும். நீங்க கவலைப் படாதீங்க," என்று வண்டிக்காரன் சொன்னது நினைவிலிருக்கிறது.

தூரத்தில் மஞ்சள் ஒளி ஒன்று சின்னதாக மின்னியது. "ஊரு வந்தாச்சு. அதோ மஞ்சளா தெரியறதே, அது தான் தெரு விளக்கு. தெருக்கோடி பிள்ளையார் கோயிலை ஒட்டி இருக்கும். இந்த இருட்டிலே அது தான் அடையாளம்" என்றார் அப்பா. வண்டி ஊருக்குக் கிட்ட நெருங்கியதும் விளக்குக் கம்பம் தெளிவாகத் தெரிந்தது. ஊர் எல்லையில் இருந்த பிள்ளையார் கோயிலும் விளக்குக் கம்பமும் மேடிட்ட இடத்தில் இருந்தன. அந்த மேட்டில் வண்டி ஏற கொஞசம் கஷ்டப்படத் தான் செய்தது. அந்த ஒரு விளக்கைத் தவிர ஊரில் வேறு தெரு விளக்குகள் இல்லை. ஒவ்வொரு வீட்டின் பிறையிலும் வைக்கப்பட்டிருந்த எண்ணைய் விளக்கை வைத்துத் தான் வீடுகளை அடையாளம் காண முடிந்தது. வீடுகளின் முன் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தவர்கள், ஒவ்வொருவராக விசாரிக்கத் தொடங்கினார்கள். "பிள்ளையாண்டானை அழைச்சிண்டு வந்தாச்சா? ஏன் இத்தனை நாழி?' என்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் ஒவ்வொரு குரலில்.

- 1.1.08 -

நினைவுகளின் தடத்தில் - 16

வெங்கட் சாமிநாதன் -ஊரின் ஆரம்பத்தில் ஒரு கோடியில் ஒரு கம்பத்தின் மேல் எரியும் மண் எண்ணைய் விளக்கைத் தவிர ஊரில் இரவு நடமாட்டத்திற்கு வேறு விளக்கே இல்லையென்றால் எப்படி இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், எப்படி வாழ்க்கை சாத்தியமாகியது என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது. ஆனால் நான் தான் இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமும் திகைப்பும் அடைகிறேனே தவிர வேறு யாரும், நானே கூட அப்போது ஆச்சரியப்படவில்லை. வாழ்க்கையில் சகஜமான ஒன்றாகத்தான், அது பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கும் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அப்படி பார்க்கப் போனால், நிலக்கோட்டையிலேயே கூட அப்போது மின்சாரம் வந்துவிடவில்லை. எங்கள் வீட்டுக்கு வெளியே, உடையாளூரில் கண்ட மாதிரி, ஒரு விளக்குக் கம்பமும் மண்ணெண்ணெய் விளக்கும் தான் இருந்தது. மின்சார இணைப்பு வர நிலக்கோட்டை இன்னும் சில வருஷங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் நிலக்கோட்டையை விட்டுப் போவதற்கு ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன்னரே மின்சார விளக்குகள் தெருவுக்கு வந்து விட்டன. ஆனால் மாமா இருந்த வீட்டுக்கு இன்னமும் மின்சார இணைப்பு தரப்படவில்லை. இன்னமும் எனக்கு ஞாபகமிருக்கிறது. தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பின், சற்று நேரம் கழித்து அந்தி சாய்வதற்கு முன்னதாகவே அன்றாடம் சிம்னி, ஹரிகேன் விளக்குகளின் கண்ணாடிகளைக் கழற்றி எடுத்து அவற்றில் மண்டியிருக்கும் புகைபோக அலம்பித் துடைத்து, மண் எண்ணெயோ, அல்லது அகல் விளக்குகளுக்கு கடலை எண்ணெயோ ஊற்றி, விளக்கேற்ற தயாராக வைப்பது மாமாவின் வேலைகளில் ஒன்று.

உடையாளூரில் அந்நாட்களில் இரவில் தெருவில் நடமாட, வீடுகளை அடையாளம் காண ஒவ்வொரு வீட்டின் முன் திண்ணைப் பிறையில் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கே போதுமானதாக இருந்திருக்கிறது. உடையாளூர் வீட்டில் ஒரே ஒரு ஹரிகேன் விளக்கு தான் இருந்ததாகப் பார்த்த ஞாபகம். அது தான் அவ்வப்போது தேவைக்கேற்ப வீட்டினுள் ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்துச் செல்லப்படும்.

எனக்கு அன்று இரவு அந்த கப்பி ரோடில் செய்த மாட்டு வண்டி பிரயாணம் தான், அந்த சூழலும் தனித்து யாருமற்ற இருண்ட வயல் வெளியின் நடுவே போகும் பாதையில் போகும் உணர்வுடன் கூடிய நினைவில் தங்கி இருக்கிறது. பின் இருளில் அந்த ஊருக்குள் நுழைந்தது. எடுத்த உடன் ஊர் தொடங்கும் மேட்டில் ஒரு சின்ன பிள்ளையார் கோயில், அதைத் தொடர்ந்து ஒரே சாரியில் இருந்த நான்காவது அல்லது ஐந்தாவது வீடு. அவ்வளவே. வீட்டின் முன் கட்டு கூடத்தில், கூடத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் ஹோமம் வளர்த்து அதன் முன் நானும் அப்பாவும் உட்கார்ந்திருந்ததும், வேத மந்திரங்களின் உச்சாடனமே ஒரு கவர்ச்சியாக இருந்ததும் நினைவில் இருக்கிறது. ஒரு கோஷ்டியாக நாலைந்து பேர் சாமவேத மந்திரங்களைச் சொல்லக் கேட்கும் ஆனந்தம் அன்றிலிருந்து தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறார்கள் என்ற அர்த்தம் ஏதும் அன்று புரிந்ததில்லை என்பது ஆச்சரியமில்லை. இன்று வரைக்கும் புரிந்ததுமில்லை. ஆனாலும் கேட்க இனிமையாக இருந்து வருகிறது. அன்று எனக்கு முகம் வீங்கியிருந்ததும், அது பொன்னுக்கு வீங்கி என்று சொன்னார்கள். அம்மா தன் தங்க செயினை என் கழுத்தில் மாட்டிவிட்டாள். அதை ஒரு நாள் பூராவும் போட்டுக்கொண்டிருந்தேன். வேறு ஒன்றும் அந்த உபநயனம் சம்பந்தப்பட்டது நினைவில் இல்லை. நிலக்கோட்டைக்குத் திரும்பியதும் தினம் மூன்று வேளை என்னை சந்தியாவந்தனம், மாத்தியான்னிகம்என்று மாமாவும் உடனிருந்து என்னைச் செய்யவைத்துக் கொண்டிருந்தது இன்னமும் மிகத் தெளிவாகத் திரையோடிக்கொண்டிருக்கிறது.

உடையாளுரில் அப்பா இருந்த வீடு சொந்த வீடு இல்லை. மண் தரை உள்ள வீடு தான். சாணி மெழுகிய தரை. கொஞ்சம் குண்டும் குழியுமாக இருந்தாலும் குளிர்ச்சியான தரை. எல்லா தஞ்சை கிராமத்து வீடுகளைப் போலவே இரண்டு கட்டுக்கள் கொண்ட நாட்டு ஓடு வேய்ந்த வீடு. இதற்கும் முன்னால் நான் இந்த ஊருக்கு, இந்த வீட்டுக்கு வந்திருக்கவேண்டும், ஆனால் எப்போது என்பது தான் நினைவுக்கு வர மறுக்கிறது. ஏனெனில் பல விஷயங்கள் முன்னர் பார்த்ததாக நினைவில் பதிந்திருப்பவை இப்போது இல்லாதிருந்தன. அப்பா வீடு இருந்த சாரியிலேயே நான்கு வீடு தள்ளி இருந்த வீட்டில் சித்தப்பா இருந்தார். சீனு என்று அழைக்கப்பட்ட சீனிவாசன். சித்தப்பாவோடு சித்தியும் பாட்டியும் இருந்தார்கள் அந்த வீட்டில். அந்த வீடு தான் தாத்தா இருந்த வீடு. எங்களுக்குச் சொந்த மான வீடு. எப்போது அப்பா தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வந்தார் என்பது தெரியாது. அப்பாவைப் பெற்ற பாட்டி சித்தப்பா இருந்த வீட்டில் ஒரு ஊஞ்சலில் இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்து இருந்த படியேதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். பாட்டி விதவைப் பாட்டி. அந்த வீடு நன்றாக செங்கல் தளம் பாவிய வீடு. நன்றாக கட்டப்பட்ட வீடு. "கொலு வச்சிருக்காடா, சித்தப்பா வாத்திலே பாட்டி கூப்பிடறா பாக்க வரயா?," என்று அம்மா அழைத்துக்கொண்டு சென்றதும் அங்கு கூடத்தில் ஆறு ஏழு படி அமைத்து கொலுவைத்திருந்ததைப் பார்த்ததும் ஞாபகம் இருக்கிறது. எப்போதோ அந்தப் பாட்டி ஊஞ்சலில் உட்கார்ந்த படியே என்னையும் அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு '"பயப்படாதே" என்று சொல்லி ஊஞ்சலை ஆட்டியதும், "இந்தா இதை எடுத்துக்கோ," என்று என்னவோ பக்ஷணம் தின்னக் கொடுத்ததும், "நீ சாப்பிடு பாட்டி, நான் அப்புறமா சாப்பிடறேன்" என்று நான் சொன்னதாகவும், "அடேயப்பா, பாரேன், இந்த பேரனுக்கு புதுசா பார்த்த பாட்டிகிட்டே எத்தனை கரிசனம்னு! பாட்டி சாப்பிட்டாத்தான் இவனுக்கு உள்ளே இறங்கும் போல இருக்கு! என்னடா சொன்னே "நீ சாப்பிடு பாட்டி" எங்கே இன்னொரு தரம் சொல்லு பாப்பம்!" என்று என்னை எல்லோரும் அடிக்கடி கேலி செய்வது வழக்கமாகியிருந்தது. அந்த பாட்டி இல்லை இப்போது. அந்த வீட்டில் பாட்டியோடு, சீனுவாசன் சித்தப்பா, சித்தியோடு, இருபது இருபத்தைந்து வயதில் இன்னொரு சித்தப்பாவையும் பார்த்த ஞாபகம். அவரை ரங்கண்ணா என்று எல்லோரும் அழைத்ததும் நினைவில் இருக்கிறது. அவரை இப்போது உபநயனத்துக்கு வந்திருந்தபோது பார்க்கவில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் கேட்கவேண்டும் என்று அப்போது எனக்குத் தோன்ற வில்லை. 1947-48-ல் நான் மதுரையில் ஒருவருஷம் படித்துவிட்டு கும்பகோணத்தில் மேலே படிப்பைத் தொடர்வதற்காக உடையாளூர் வந்த போது தான், அம்மா அவ்வப்போது பழைய கதையெல்லாம் எனக்கு ஒழிந்த வேளைகளில் சொல்வாள். அப்போது தான் நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ரங்கண்ணா ஒரு நாள் காணாமல் போய் விட்டதாகவும், எங்கே போனார், ஏன் போனார், இப்போது எங்கே இருக்கிறார்? என்று யாருக்கும் தெரியவில்லை என்றாள். கொஞ்ச கால கவலைக்குப் பிறகு அதுபற்றி யாரும் நினைப்பதில்லை, இனி பிரயோஜனம் இல்லை என்று, என்றாள். ரங்கண்ணாவுக்கு கொஞ்சம் மனப் பிறழ்வு இருந்தது என்றும் சொன்னாள்.

அந்த வீட்டில் கொல்லைக் கட்டில் ஒரு பசு மாடு கட்டியிருந்ததைப் பார்த்த ஞாபகம். அந்த மாடு இல்லை இப்போது. அப்பா ஒரு சிலேட்டு குச்சியோட, ஒரு ஒண்ணாங்கிளாஸ் பாடப்புத்தகமும் வாங்கி வந்து என்னிடம் கொடுத்து இரண்டு வீடு தள்ளி ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்றார். அவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் ஞாபகம் இருக்கிறது. ஆக, ஒரு வேளை எனக்கு அக்ஷராப்பியாசம் செய்து வைக்கத் தான் மாமா என்னை உடையாளுருக்கு அழைத்து வந்திருந்தாரோ என்னவோ. அது என் ஐந்தாவது வயதில் இருக்க வேண்டும். ஆனால், உடையாளுரில் பார்த்த காட்சிகளும் நடந்த சில விஷயங்களும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, இப்போது என் உபநயனத்தை ஒட்டி உடையாளுருக்கு வந்த பயணம் போல அந்த பழைய பயணம் நினைவில் இல்லை.

அப்போதெல்லாம் உடையாளூரில் ஆரம்பப் பள்ளிக்கூடம் கூட இருந்ததில்லை. ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், தபால் ஆபீஸ் என்று எதற்கெடுத்தாலும், மூன்று மைல் தூரத்தில் இருந்த வலங்கைமானுக்குத் தான் போகவேண்டும். அது தான் உடையாளூருக்கு அருகாமையில் இருந்த வசதிகள். ஊர் முழுதும் ஒரு மேடிட்ட நிலத்தில் அமைந்திருந்தது. நாங்கள் இருந்த தெரு ஒரு சாரி மாத்திரமே வீடுகள் கொண்டது. அதன் கிழக்குக் கோடியிலும் மேற்குக் கோடியிலும் இரு சாரிகளிலும் வீடுகள் கொண்ட இரண்டு தெருக்கள். அவற்றை இணைக்கும், எங்கள் தெருவுக்கு இணையான மற்றொரு தெரு. இவ்வளவு தான் உடையாளுர்ர். மொத்தமே 100 வீடுகளுக்குள் தான் இருக்கும். மேடிட்ட ஊரின் கிழக்குக் கோடியில் ஒரு பழங்கால சிவன் கோவில். 11-ம் நூற்றாண்டுக் கோவில். அதன் கல்வெட்டுக்களில் இருந்து ஒரு பகுதி அச்சிடப்பட்டு கண்ணாடியும் சட்டமும் போட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும். அது இப்போது இல்லை. என்னவாயிற்று என்று அர்ச்சகருக்கே தெரியாது. மேற்குக் கோடியில் ஒரு கோயில். செல்வமாகாளி அம்மன் கோயில். செல்வ மாகாளி தான் ஊரில் மிகப் பிரசித்தமான தெய்வம். ஊருக்கே குல தெய்வம். ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் குழந்தைக்காவது அம்மன் பெயர் இடப்பட்டிருக்கும். என் தங்கையின் பெயரே செல்லம் தான். இந்த ஊர் பற்றியும் பிரசித்தி பெற்ற செல்வமாகாளி அம்மன் பற்றியும் உ.வே.சா தன் நினைவு மஞ்சரியிலோ அல்லது எதிலோ எழுதியிருக்கிறார். உடையாளூருக்கு ஒரு பழங்கால பெயர் உண்டு என்று சொல்லி அந்த பெயரையும் அவர் குறித்திருந்தார். அதை நான் தேடித் தேடிப் பார்த்து விட்டேன். எனக்குக் கிடைக்கவில்லை. உடையாளூரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு உ.வே.சா வின் நினைவும் எழும்.

உடையாளுருக்கு அன்று இரவு மாட்டு வண்டியில் ஒரு கப்பி ரோடில் பிரயாணம் செய்ததும், பள்ளியோ, ஆஸ்பத்திரியோ, தபால் வசதியோ எதுவும் அற்று இரவு அரிகேன் விளக்குகளும் அகல் விளக்குகளுமே மஞ்சள் நிற ஓளியை மினுக் மினுக் கென்று வீசிக்கொண்டிருந்ததையும், தங்களுக்கு இந்த வசதி எதுவும் இல்லாதது பற்றி எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாது, தங்களுக்கு அவையெல்லாம் மறுக்கப்பட்டவை என்று கூட நினையாமல் இந்த வசதிகளோடு வாழும் மக்களின் சந்தோஷங்களோடும், துக்கங்களோடும் வாழ்ந்து உடையாளூர் ஜனங்கள். நினைத்துப் பார்க்க எந்த விசேஷ குறையும் இல்லை. இன்று அது பற்றியெல்லாம் நினைவிலிருந்து எடுத்து எழுதும்போது, உ.வே.சாமிநாத அய்யர், சுவடு தேடி கிராமம் கிராமமாக செய்த மாட்டு வண்டிப் பயணங்களும் > ஹரிகேன் விளக்கொளியோ அகல் விளக்கொளியிலோ தான் அந்த பழம் தமிழ்ச்சுவடிகள் அவருக்கு தமிழ் இலக்கியத்தின் மகோன்னதத்தை ஒளி வீசிக் காட்டியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. அந்த பயணங்களும், அந்த உடையாளூர் தினங்களும், ஜனங்களும், என்னை உ.வே.சாவுக்கும் 19-ம் நூற்றாண்டுக்கும் இட்டுச் சென்று அந்த நாள் வாழ்க்கையின் காட்சிகளைக் கோடி காட்டின. 19-ம் நூற்றாண்டு கிராமங்கள், வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைக்கத் தூண்டின.

10.1.08
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner