எழுத்தாளரும் பன்முக ஆளுமையாளருமான பவானி சற்குணசெல்வத்துடன் ஒரு நேர்காணல்! - முனைவர். பொ. திராவிடமணி -
இவர் தம்பிராசா மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வி. பதுளையில் பிறந்தவர் தனது ஆரம்பக்கல்வியை பதுளை கன்னியாஸ்திரியர் பாடசாலையில் பெற்று பின் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் கல்விகற்றவர். பின் யாழ்ப்பாணத்தில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டு. இலங்கைக் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தி்ல் விவசாய பீடத்தில் கலைமானிப்பட்டம் பெற்று அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். திருமணத்திற்கு பின்னர் நெதர்லாந்திற்கு புலம்பெயர்ந்து டச்சு மொழியை திறம்பட கற்றார். மேலும் உளவியல் மற்றும் சட்டத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றார். இவர் நெதர்லாந்தில் அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியவர். பின் அகதிகளுக்கான உதவிக்காரியாலயத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும்
பணியாற்றி வருகிறார்.
தமிழில் மட்டுமன்றி டச்சு மொழியிலும் சிறப்பான திறமைகளை கொண்ட பவானி அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் சிறுவர்களின் தமிழ் வளர்ச்சியில் அயராது பாடுபட்டவர். தமிழ் பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி மாணவர்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றவர்.
தமிழ் மாணவர்களுக்கு நாடகம், நாட்டியம், இசை போன்றவற்றை பயிற்றுவித்து அவர்களை முன்னேற்றியவர். புலம்பெயர்ந்த மக்கள் தமிழையும் சமயத்தையும் இரு கண்களை போல பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சேரனின் கவிதைகளை மொழிபெயர்த்து கடலின்கதை எனும் நூலை தமிழ் மற்றும் நெதர்லாந்து ஆகிய இருமொழிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டார். சேரனின் காதல் கவிதைகள் தொகுப்பு அன்பு திகட்டாது எனும் நூலானது நெதர்லாந்து மொழியில்.மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2018 நவம்பரில் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது. சிலகணங்கள் எனும் இளையோர்க்கான கவிதைத் தொகுப்பு 2020 இலங்கையில் வெளியிடப்பட்டது.