சிறுகதை: பொற்கூண்டுக்கிளிகள்! - வ.ந.கிரிதரன் -
- தாயகம் (கனடா) பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதத்தொடங்கினேன். 'கணங்களும், குணங்களும்' என்னும் பெயரில் வெளியான சிறு நாவலே அவ்விதம் எழுதிய முதற் படைப்பு. அதன் பின்னர் சிறுகதைகள் சில (ஒரு விடிவும், ஒரு முடிவும், பொற்கூண்டுக்கிளிகள், ஒட்டகங்கள், மழையில் சில மனிதர்கள், இன்னுமொரு கதை) மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தன. இங்குள்ள 'பொற்கூண்டுக்கிளிகள்' கனடாவில் வசிக்கும் முதியவர்களின் வாழ்வு பற்றியது. இதுவரையில் வெளியான எனது தொகுப்புகள் எவற்றிலும் வெளிவரவில்லை. இச்சிறுகதை தாயகம் பத்திரிகையாக தொடங்கிய காலகட்டத்தில் எண்பதுகளின் இறுதியில் வெளியானது. சில திருத்தங்களுடன் இங்கு மீண்டும் வெளியாகின்றது. -
மகன் ராம்குமார், மருமகள் தமயந்தி, மகள் வதனா எல்லோரும் வேலைக்குப் போய்விட்டார்கள். இனி அவர்கள் மாலையில்தான் வருவார்கள். ராஜதுரையார் அது மட்டும் அப்பார்ட்மெண்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் செல்லம்மா மட்டும் இருப்பாளென்றால் அவருக்குத்தான் எவ்வளவு துணையாக இருக்கும். ம்... மகராசி நேரத்தோடு போய்ச் சேர்ந்து விட்டா..
'இந்தப்பாழாய்ப்போன சிங்கள, தமிழ் பிரச்சினை மட்டும் இல்லையென்றால் .. உவங்கள் ஆமிக்காரன்ற கரைச்சல் மட்டும் இல்லையென்றால் அவர் கனடாவுக்கு விசிட் பண்ணிவிட்டுப் போயிருப்பார். இந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் அங்கென்றால் கந்தையா வாத்தி இருக்கின்றார் அரட்டையடிப்பதற்கு.. இல்லாவிட்டால் அது இதென்று பொழுது போய்விடும்.
என்ன மாதிரி உற்சாகமாக, துடிப்புடன் திரிந்துகொண்டிருந்தார். அந்தத் துடிப்பு, கம்பீரம் , உற்சாகம் எல்லாமே வடிந்து விட்டன. புதிய சூழல் எவ்வளவு தூரம் அவரை மாற்றி விட்டது. அங்கு அவருக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இங்கு....
இங்கு இவருக்கு என்ன குறை?
அன்பான பிள்ளைகள், பண்பான மருமகள், வேளை வேளைக்குச் சாப்பாடு, எல்லாமே இலகுவான வகையில் செய்யும்படியான வசதிகள்..வருத்தமென்றால் 'ஓகிப்' இருக்கிறது. .. டாக்டர் இருக்கிறார்... டி.வி.யைத்திருப்பினால் வகை வகையான நிகழ்ச்சிகள்.. அடிக்கடி உடனுக்குடன் ஊர்ப்புதினங்களை அறியத்தமிழ்ப் பத்திரிகைகள்.. தொலைபேசிச் செய்திகள்....